நூல் : கூடுகள் சிதைந்தபோது
நூல் ஆசிரியர் :அகில்
நூல் ஆய்வு: ஜோதிர்லதா கிரிஜா

'கூடுகள் சிதைந்தபோது.....' படித்து முடித்துவிட்டேன். ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமாயின்> அத்தனை கதைகளும் அற்புதம்! வெறும் புகழ்ச்சிக்காக நான் இவ்வாறு கூறவில்லை> நான் எழுதுவேனேயன்றி> விமர்சிப்பதில் தேர்ச்சியற்றவள். எனினும்> எனக்குத் தெரிந்த வரையில் விமர்சிக்கிறேன். விமர்சனம் விலாவாரியாக இல்லாதவை அன்பு கூர்ந்து மன்னிக்கவும்.

'வலி' - மரக்கறி உணவுக்கு ஆதரவு தந்து உயிர்வதையைத் தவறெனச் சுட்டுகிறது. நல்ல கருத்துள்ள கதை. பன்றிகளுடன் நாமே பயணிக்கும் அருவருப்பான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தன் எழுத்தால் தாக்கத்தை ஓர் எழுத்தாளன் விளைவிக்க இயலுவதே அவ்வெழுத்தின் வெற்றியாகும்.

'அம்மா எங்கே போகிறாய்?' - இந்தியாவிலும் முதியோர் நிலை இரங்கத்தக்க முறையில்தான் உள்ளது. என்பதை நினைவூட்டுகிறது. அம்மாவையும் அப்பாவையும் மக்கள் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளார்கள். நெஞ்சு கனக்கிறது. நல்ல உணர்வு பூர்வமான கதை.

'பதவி உயர்வு' - போர் விரும்பாமையை உள்ளடக்கிய உன்னதக்கதை. தன் மகன் அநியாயமாகச் சாகவில்லை> அவன் ஓர் உயிரைக் காப்பாற்றத் தன் உயிரை இழந்துள்ளான் என்பதில் பெருமை கொள்ளும் ஒரு ராணுவ அதிகாரி> தாமோ தமது நோக்கத்துக்காகப் பல உயிர்களைக் கொன்று குவித்துள்ளதை எண்ணி வருந்தி> சேவை நீடிப்புச் கோரி வந்திருந்த கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டு உடல் குலுங்க அழுவதைச் சொல்லும் கதை மிகச் சிறந்த ஒன்றாகும்.

'ரேடியோப் பெட்டி' - தன் கணவர் உயிருடன் இருந்த போது வாங்கிக்கொடுத்த ரேடியோவை அது அறவே பழுதடைந்துவிட்ட நிலையிலும் எப்படியாவது உயிர்ப்பித்துவிடத் துடிக்கும் பூரணம் மாமியின் ஏக்கம் பற்றிய கதை - அது சரியானால் அவரது குரலையே கேட்பது போல் இருக்கும் என்பதாய் அவர் கொள்ளும் பிரமை - இறுதியில் ஒக்கிடப்படாத அந்த ரேடியோப் பெட்டியைத் தலைமாட்டில் வைத்துக்கொண்டே அவர் உயிர் விடுவது பற்றிய கதையும் நெஞ்சைத் தொடுகிறது.

'பெரிய கல்வீடு' - இதுவும் நெஞ்சைக் கனக்கச் செய்கின்ற 'சாதியம்' பற்றிய கதை, சாதி, மதம், இனம்> நிறம் சார்ந்த வேறுபாடுகள் எங்கணும் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டும் கதை. எனினும் இறுதியில் மருமகன் ரவி செய்த முடிவு - சாதியின் காரணத்தால் விலக்கிவைக்கப்பட்ட தங்கத்துக்கு அந்தக் கல்வீட்டை வழங்கியது - பாராட்டுக்குரியது.

'கண்ணீர் அஞ்சலி' - உண்மையான மருத்துவர் - காயப்பட்டவரோ> நோயாளியோ அவர் சார்ந்துள்ள இயக்கம்> சாதி போன்றவற்றைப் பார்ப்பதில்லை என்பதையும்  பாதிக்கப்பட்டவரது உடல் நிலையை மேம்;படுத்துவது ஒன்று மட்டுமே அவரது குறி என்பதையும் டாக்டர் பார்த்தீபன் கொல்லப்பட்ட போது நினைவு கூர்கிறார்> அந்நிகழ்ச்சியைக் கதையாக்கியவர். ஒரு நல்ல டாக்டர் எத்ததைய கோட்பாடு கொண்டவராக இருப்பார் என்பதை இக்கதை எடுத்துக்காட்டுகிறது. இதுவும் உன்னதக் கருத்தை உள்ளடக்கிய கதைதான்.

'இது இவர்களின் காலம்' - இது மாறிக்கொண்டிருக்கும் மதிப்புகளைப் பற்றிக் கூறுகிறது. 'சேர்ந்து வாழ்தல்' என்பது இந்தியாவிலும் நடந்துகொண்டிருக்கிறது. பெற்றோர் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். காலம் மாறிக்கொண்டிருக்கிறது. தாய்-தகப்பனின் சொல் கேட்டு நடக்க இளைஞர்கள் தயாராக இல்லை! இந்தப் போக்கினால் தன் மகள் எத்ததைய தீங்குக்கு உட்படுவாளோ என்கிற தாயின் கவலையுடன் கதை முடிகிறது> யதார்த்தத்தைச் சொல்லும் கதை.

'கூடுகள் சிதைந்தபோது.....' - சிறுகதைத் தொகுப்பின் தலைப்பாக இதைத் தேர்ந்து எடுத்துள்ளதில் அகில் அவர்களின் வலி புரிகிறது. புலம் பெயரும் தமிழ்ச் சகோதரர்களின் வலி அது. மனைவியையும் அவள் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த குழந்தையையும் ஒருசேர இழந்துவிட்டு வலியால் வதைபடும் இளைஞனை நினைத்தால் மனம் அளவுகடந்து வேதனைப் படுகிறது. தாக்கத்தை ஏற்படுத்தும் குடும்பக் கதை. உயிருக்கு அஞ்சி ஓடும்போது ஏற்படும் இழப்புகள் எவ்வளவு கோரமானவை என்பதைச் சொல்லுகிறது.

'ஓர் இதயத்திலே' - கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிணக்கும் அது தீர்வதையும் - வீட்டுக்கு வீடு வாசற்படி என்கிற ரீதியில் - சொல்லுகிற குடும்பக்கதை, ரசனையுடன் எழுதப்பட்டுள்ளது.

'உறுத்தல்' - இதுவும் முதியோர் இல்லத்தில் பெற்றோர்களைச் சேர்ப்பது பற்றிய கதை. குழந்தையின், 'அப்பம்மா> அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உங்களை மாதிரிவயதான பிறகு நானும் அவையள இங்குதான் கொண்டுவந்து சேர்க்க வேணும்> என்ன? என்னும் கேள்வியால் பொட்டில் அடிவாங்கிய உணர்வுக்கு ஆளாகும் மகன் தாயை முதியோர் இல்லத்தில் விடும் எண்ணத்தைக் கைவிடுகிறான். இதுவும் இன்றைய காலகட்டத்தில் யதார்த்தம் நிறைந்த குடும்பக் கதை.

'அண்ணாநகரில் கடவுள்' - இது வேடிக்கையான கதை, இதுவும் ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது.

'தேடல்' - இது நெடிய பிரிவுக்குப் பின் சந்தித்து மறுபடியும் அந்த நண்பனை ஒருவன் இழக்க நோந்தது பற்றிய உள்ளம் தொடும் கதை.

மொத்தத்தில் கதைகள் எல்லாமே ரசிக்கத் தகுந்தவாறும்> பெரும்பாலானவை சிந்தனையைத் தூண்டும் வண்ணமாகவும் அமைந்திருக்கின்றன.

அகில் அவர்களின் தமிழ் நடை குழப்பம் இல்லாமல் தெளிந்த நீரோடையாய் ஓடுகிறது.

இத்தொகுப்பைப் படித்த போது இலங்கையில் புழக்கத்தில் உள்ள பல தமிழ்ச் சொற்களைச் குறித்து வைத்துக்கொண்டேன். இனிமேல்தான் தமிழ் அகராதியில் அவற்றைத் தேடி அவற்றின் பொருளையும் அறிய வேண்டும். (பொருள் புரியத்தான் செய்கிறது. இருப்பினும் அவை அகராதியிலும் உள்ளனவா என்று தெரிந்து கொள்ள ஆவல். அவ்வளவுதான்.) வாழ்த்துக்கள்.

 

வெளியீடு வம்சி திருவண்ணாமலை விலை ரூபாய் 120