நூல் : அச்சம் தவிர்
நூல் ஆசிரியர் :கவிஞர் திருவை பாபு .
நூல் ஆய்வு: கவிஞர் இரா .இரவி


நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு அவர்கள் "பாவேந்தர் பணிச்செல்வர் விருது பெற்றவர் .நங்க நல்லூரில்  பாரதி ,பாரதிதாசன் கவிதை அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் பாரதி விழா நடத்தி வருபவர். இலக்கிய ஆர்வம் மிக்கவர் .சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் கலந்து கொள்வதில் முன்னணியில்  இருப்பவர் .எல்லோருடனும் அன்பாக  பழகிடும் நல்லவர் . சென்னையில் நடந்த விழாக்களில் சந்தித்து  உரையாடி உள்ளேன் .மின்னல் கலைக்  கூடத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது. பாராட்டுக்கள் ."எளிமையின் சின்னம்" திரு .நல்லகண்ணு அவர்களின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது .

மகாகவி பாரதியின்  வைரச் சொல்லான   " அச்சம் தவிர் " நூலின் தலைப்பு மிக நன்று .நூலில் பல்வேறு தலைப்புகளில் உரத்த சிந்தனையுடன் கவிதை எழுதி நூல் படிக்கும் வாசகர்களை உரக்க சிந்திக்க வைத்துள்ளார் .உள்ளத்தில்  உள்ளது கவிதை என்பது போல மனதில் பட்டதை துணிவுடன் கவிதையாக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .

பெண் உரிமை !

பாய்ந்து  வரும் நதியைப் போல்
பறந்து திரியும் பறவை போல்
பெண்ணியமும் பூத்துக் குலுங்கிட
புது உலகைப் படைத்திட
புரட்சி மலர்கள் எழுந்திட
பூமியெங்கும் மகிழ்ச்சி பொங்கிட
பெண்ணுரிமை ஆகா !
பெண்ணுரிமை ஆகா
!

நதி போல பறவை போல பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் ,ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் வழக்கத்திற்கு  முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .ஆணிற்கு பெண் எதிலும் சளைத்தவள் அல்ல என்பதை எல்லா ஆண்களும் உணர வேண்டும் .பெண்களின் உணர்விற்கு மதிப்பு அளிக்க வேண்டும் .என்பதை உணர்த்தும் கவிதை நன்று .

உலகம் ஒரு நாள் உணரும் !

மதங்களைப் படைத்தோம்
மனிதர்களைப் பிரித்தோம்
சாதிகளை வளர்த்தோம்
சமத்துவத்தை அழித்தோம்
யாகங்கள் வளர்த்தோம்
தியாகங்கள் மறந்தோம்
ஆன்மிகம்   வளர்த்தோம் அதில்
அமைதியை இழந்தோம்
துறவிக்குத் துணை போனோம்
துன்பங்களைப்  பெற்றோம்
!

இன்று சாதியின் பெயரால் மதத்தின்  பெயரால் நடக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டி  உள்ளார் கவிதையில் .உலகின் அமைதி அழியக் காரணம் மதம் .மனிதன் மதத்தை மறந்தால் நிம்மதியாக வாழலாம். இன்று சகல வசதிகளுடன் சாமியார்கள் வாழ்கிறார்கள் .இன்று நாட்டில் கொசு தொல்லையை விட சாமியார்கள் தொல்லை அதிகமாகி விட்டது .எனவே இவர்களுக்கு துறவி என்ற சொல் பொருந்தாது முற்றும் துறந்தவர் துறவி .இவர்கள் எதையும் துறக்காத சுகவாசிகள் . சாமியார்களை நம்பி இனியும் மோசம் போகாதார்கள் என்று அறிவுறுத்தும் விதமாக எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .

பாரதி உள்ளம் ,வாய்ச் சொல் வீரரடி ,சங்கக்கிழவி  இப்படி  பல்வேறு தலைப்புகளில் சிந்தனை விதைக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார் .நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . தமிழ் இன உணர்வுடன் பல கவிதைகள் வடித்துள்ளார் .மனித நேயத்தோடு பல கவிதைகள் வடித்துள்ளார் .துங்கும் தமிழர்களை தட்டி எழுப்பும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .

உனக்கென ஓரிடம் !

இனப்பகை வேரறுக்கும் இலக்கியம் செய்தால் தமிழா
உன்னதமாய் உனக்கென ஓரிடம் உலகில் உண்டு
இல்லையேல் தங்கும் தமிழ்நாடு தமிழனுக்கில்லையே
தமிழா மொழியால் விழித்தெழு !முகவரி பெற்றிடு
!

தொண்டு  என்றவுடன் நம் நினைவிற்கு வரும் அன்னை தெரசா புகைப்படத்துடன் தொண்டு கவிதை வந்துள்ளது .

தொண்டு செய் மனமே !

தொண்டு செய் மனமே தொண்டு செய் !
சமுதாயத்தின் துயர் துடைக்கத் தொண்டு செய் !
வள்ளுவரின் தொண்டு திருக்குறளைத்   தந்தது !
வள்ளலாரின் தொண்டு சன்மார்க்கத்தை அருளியது
!

இப்படி தொண்டு கவிதை நீள்கின்றது .பதச் சோறாக சில வரிகள் மட்டுமே எழுதி உள்ளேன் .நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு அவர்கள் தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள்


வெளியீடு: மின்னல் கலைக்  கூடம் .எல்டாம்ஸ் சாலை ,சென்னை .18  செல் 9841436213.
 



eraeravik@gmail.com