நூல் : முத்துக்களைத் தருவாயா ?
நூல் ஆசிரியர் கவிஞர் மகா .ராசா
நூல் ஆய்வு:
கவிஞர் இரா .இரவி
 

கீற்று வெளியீட்டகம் 142.வடக்கு வெளி வீதி .யானைக்கல் ,மதுரை .1
விலை
ரூபாய் 60

ழகிய குழந்தை கண்களை கைகளால் முடிய அட்டைப்படம் மிக நன்று .இந்த நூலை மிக வித்தியாசமாக காணிக்கை ஆக்கி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் மகா .ராசா  ."சமர்ப்பணம் .சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தை முத்துக்களுக்கும் ,கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கருகிய குழந்தை மலர்களுக்கும் ...இதனை படித்தவுடனேயே நூலை படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கின்றது .கவிஞர் நா .காமராசன் அணிந்துரை மிக நன்று .முனைவர் சு .விஜயன் ஆய்வுரை நூலுக்கு தோரணம் .

உள்ளத்தில் உள்ளது கவிதை! உள்ளத்து உணர்வு கவிதை ! கவிஞனின் கண்ணில் பட்ட காட்சி கவிதை ! கண்ணில் பட்ட மனிதர்கள் கவிதை ! கவிதைக்கண் கொண்டு கண்டால் கவிதை பிறக்கும் .சுரக்கும்

பெரிய மனிதர்கள் பலர் நல்ல குணம் இன்றி , பரந்த மனம் இன்றி சின்னப் புத்தியுடன் இருப்பதைக் கொண்டு வடித்த நுட்பமான கவிதை ஒன்று .

இதயம் சுருங்கி விரிவது உண்மையென்றால் !
பலரின்
இதயமென் விரிவதேயில்லை !

ஆழிப்பேரலை பலரின் வாழ்க்கையை சூறாவளியாக சுழற்றிப் போட்டது .பெற்றோரை இழந்த குழந்தைகள் உண்டு .குழந்தைகளை இழந்த பெற்றோரும் உண்டு .ஆழிப்பேரலை நிகழ்த்திய சோகத்தை கவிதை வடித்துள்ளார் .

சுனாமி பற்றி வித்தியாசமாக சிந்தித்து எழுதி உள்ளார் .

ஆழிப்பேரலை ( சுனாமி )

கடலில் முத்தெடுத்துப்  பார்த்திருக்கிறேன் !
கடல்
  முத்தெடுத்த அதிசயம்
இதுவே
முதல் முறை ! ஆம் !
நாம்
பறி கொடுத்த ஒவ்வொரு குழந்தையும்
ஒவ்வொரு
முத்துதானே !
கடல்
அன்னையே !
உன்னிடமிருந்து
நாங்களெடுத்த
முத்துக்களைத்
  தந்து விட்டால்
திருப்பி
நீ எங்கள் முத்துக்களைத்
தருவாயா
?

கவிஞனுக்கு கற்பனை அழகு ! கவிஞன் கற்பனை மட்டுமே பாடாமல் நிஜத்தையும் பாட வேண்டும். .கவிஞன் காதலையும் பாட வேண்டும் சமூகத்தையும் பாட வேண்டும் .ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போலே ஒரே கவிதையில் காதலையும், சமூகத்தையும் பாடி உள்ளார் .பாராட்டுக்கள் .

பெண்ணே !
உனக்கு
உன் உடம்பில் மட்டுமா
ஏற்றத்தாழ்வுகள்
சமூகத்திலும்தான்
!

வண்டிச் சக்கரத்து அச்சாணியோடு நாட்டின் அச்சாணி விவசாயியை  ஒப்பிட்டு எழுதிய கவிதை நன்று !

நமது நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகி வருவது பெருமை அல்ல இழுக்கு .பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின்  கன்னத்தில் அறைவதுப்  போல ஒரு கவிதை.

பெற்றோர்களைப் புறகணிக்க
முடிந்தவர்களால்
புறகணிக்க
முடியாததாய்
பெற்றோர்களின்
முதலெழுத்துக்கள் !

மனிதன் பிணமானதும்  வீட்டில் நடக்கும் மூட நம்பிக்கை சடங்குகள்  பற்றி பெரிய புத்தகமே எழுதலாம் .அவ்வளவு சடங்குகள் நடக்கும் .

அதில் ஒன்று ஊதுபத்தி .அது பற்றி ஒரு கவிதை எள்ளல் சுவையுடன் !

ஊதுபத்தி !
மனிதர்களே
நாங்கள் உண்மையான தியாகிகள்
உங்களில்
யார் இறந்தாலும் '
நாங்கள்தானே
முதலில் தீக்குளிக்கிறோம் !

பக்கம் 73 இல் வந்த கவிதையே பக்கம் 87 லிலும் வந்துள்ளது .அடுத்த பதிப்பில் தவிர்த்திடுங்கள் .

கர்ம வீரர் காமராசர் பற்றி சொற்ச்சிக்கனத்துடன் மிகக் குறைந்த வரியில் மிகப் பெரிய கருத்தை விதைத்துள்ளார் .

காமராசர் மறைவு !

மண்ணிலிருந்துதான் புதையல் எடுப்பார்கள் !
கிடைத்த
புதையலை மண்ணில் புதைத
சோகச்
சம்பவமிது !

காதலைப் பாடாத கவிஞர் இல்லை காதலைப் பாடி உள்ளார் .

மின்சாரத்தைத் தொட்டுக் கொண்டே செல்லும்
மின்சார
ரயிலைப் போல்
உன்
நினைவுகளைத் தொட்டுக் கொண்டே
வாழும்
நான் !

இந்தக் கவிதை படிக்கும் வாசகர்களுக்கு, தங்கள் காதலியின் நினைவு வரவழைத்து கவிஞர் மகா .ராசாவெற்றி பெற்றுள்ளார் .

இப்படி பல்வேறு பொருள்களில் பொருள் படை கவிதை வடித்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் மகா .ராசா  அவர்களுக்கு பாராட்டுக்கள்.

 

eraeravik@gmail.com