நூல் : தியாகம் (சிறுகதைத் தொகுதி )
நூல் ஆசிரியர் : வெலிப்பன்னை அத்தாஸ்
நூல் அறிமுகம்:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

வெலிப்பன்னை அத்தாஸின் ஐந்தாவது நூலே தியாகம் என்ற சிறுகதைத் தொகுதியாகும். மொடர்ன் ஸ்டடி ஸென்றர் மூலமாக 76 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் 12 சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன. தியாகம், அலிமா விமானத்தில் பறக்கிறாள், பெட்டிஷன் பிறந்தது, காய்த்த மரம், கணித பாடம், வாழ்க்கை, குழந்தை மனம் பேசுகிறது, தாய்க்காக, அழகு இல்லாதவள் வாழ்வு, ஐம்பது ரூபா, கண் திறந்த பின், பெருநாள் பரிசு ஆகிய தலைப்புக்களிலேயே அந்த 12 சிறுகதைகளும் அமைந்துள்ளன. இந்தக் கதைகள் யாவும் ஏற்கனவே நவமணி, மல்லிகை, செங்கதிர், படிகள், பூங்காவனம், முஸ்லிம் குரல், முஸ்லிம் முரசு, வார உரைகல் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன

வெலிப்பன்னை அத்தாஸ் அவர்கள் ஓர் ஆசிரியராக அதிபராக (முதலாம் தர அதிபர்) கடமை புரிந்தவர். அந்த அனுபவங்களை வைத்தும் தனது ஒரு சில சிறுகதைகளை எழுதியுள்ளார். முதலாந் தர அதிபராக சிறப்பாக பணிபுரிந்த இவருக்கு மேல் மாகாண கல்வித் திணைக்களம் ஷவித்யா நிகேதாலங்கார| என்ற கௌரவப் பட்டத்தினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இவர் ஒரு சமாதான நீதவானும் கூட.

 

1961 இல் முதன் முதலில் தாரகை என்ற வாராந்தப் பத்திரிகையிலேயே இவரது முதலாவது ஆக்கமான ஷமுஸ்லிம்களுக்கு மதக்கல்வி புகுத்துதலில் மாற்றம் வேண்டும்| என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்றுவரை தேசிய பத்திரிகைளிலும், சஞ்சிகைகளிலும் கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் போன்றவற்றை பெரும்பாலும் வெலிப்பன்னை அத்தாஸ் என்ற பெயரிலும், இளங்கலைஞன், வெலிப்பன்னை அமுதன், .எச்.எம். அத்தாஸ் ஆகிய பெயர்களிலும் எழுதிவருகின்றார். அகில இலங்கை கவிஞர்களின் சம்மேளனம் இவருக்கு காவிய பிரதீப (கவிச் சுடர்) பட்டத்தையும், இலங்கை கலாசார அமைச்சு கலாபூஷணம் பட்டத்தையும், விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது. 1968 இல் உணர்வூட்டும் இஸ்லாமிய கீதங்கள், 1985 இல் அதிபர் மர்கூம் எம்.எம்.எம். யூசுப் நினைவு மலர் (தொகுப்பு நூல்), 2003 இல் சிந்தனைப் பார்வைகள், 2013 இல் பூவும் கனியும் ஆகிய நான்கு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

 

தியாகம் என்ற இந்த சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தின் மூத்த உறுப்பினர், தலைவர் திரு நீர்வைப் பொன்னையன் அவர்கள் சிறந்ததொரு முன்னுரையை வழங்கியுள்ளார். அதில் அவர் பின்வரும் கருத்தை முன்வைத்துள்ளார். 'கதைகள் பலவிதம். நாட்டார் கதைகள், பாட்டிக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், திகிலூட்டும் பேய்க் கதைகள், தேவதைக் கதைகள், விகடக் கதைகள், தென்னாலிராமன் கதைகள், மொக்காஷியோவின் கதைகள், முன்ஷி கதைகள், அந்திரேக் கதைகள், ஈசாப் கதைகள், சிறுகதைகள், அதி நவீன சிறுகதைகள் போன்ற பல வகையான கதைகள் உண்டு. ஆனால் சிறுகதைகள் ஏனைய கதைகளைவிட உருவம், உள்ளடக்கம், கதை கூறும் பாங்கு, கதை ஓட்டம், கதை ஆரம்பம், கதை முடிவு ஆகியன முற்றிலும் வேறுபட்டனவாக உள்ளன. சிறுகதை ஒரு நவீன வடிவமாகும். இலக்கியத்தில் முதலில் உதித்தது கவிதை. மனிதன் தனது உணர்வுகளை கவிதைகள் மூலம்தான் வெளிப்படுத்தினான். அடுத்தது நாவல். கடைக்குட்டிதான் சிறுகதை. கடைக்குட்டி எப்பொழுதும் காரமானதாகத்தான் இருக்கும். கடுகு சிறிதானாலும் காரம் பெரிது''

 

மூத்த எழுத்தாளர், ஆசிரியர் . ஆப்தீன் அவர்கள் இந்த நூலுக்கு வழங்கியுள்ள அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''வெலிப்பன்னை அத்தாஸ் அவர்களின் கதைகள் காத்திரமானவை. கதைக் கருவைத் தழுவிய இலாவகமான மொழிநடை மூலம் செய்திகளை வாசகர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறார். கதைக் கருவுக்கு அப்பால் அனாவசிய விடய வர்ணிப்புக்கள் இல்லை. நீண்டகால ஆசிரிய அனுபவம் பளிச்சிடுகிறது.''

 

வெலிப்பன்னை அத்தாஸ் அவர்கள் ஷஷமனித வாழ்வின் அம்சங்களின் தொனிப்பொருளாகச் சிறுகதைகள் அமைய வேண்டும் என்பதனை எல்லோரும் ஏற்றுக்கொள்வர். மனித வாழ்வின் கூறுகள், பிரச்சினைகள், தேவைகள் போன்ற வாழ்வம்சங்களையே தான் சிறுகதையாக்கியுள்ளதாக|| தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்

 

தியாகம் (பக்கம் 01) என்ற மகுடத் தலைப்பில் அமைந்த கதையானது ஹஸீனா என்ற பெண்ணின் ஏழ்மையை எடுத்துக்காட்டுகின்றது. குடும்ப கஷ்டத்துக்காக வெளிநாடு சென்று உழைக்கும் பெண்கள், தம் வறுமையைப் போக்குவதற்காக தமது வாழ்க்கைiயே அர்ப்ப்பணிக்கின்றார்கள். அதில் ஒரு சிலர்தான் கொஞ்சமாவது முன்னேறி நாடுகளுக்கு திரும்புகின்றார்கள். பெரும்பாலான பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு பல்தரப்பட்ட கொடுமைகளுக்கு ஆளாகி வெளிநாடு செல்வதற்கு கட்டிய காசும் இல்லாமல், வெளிநாட்டில் உழைத்த காசும் இல்லாமல் கண்ணீரை மட்டும் சம்பாதித்துக்கொண்டு வருகின்றார்கள். இந்த கதையில் வருகின்ற ஹஸீனாவும் வெளிநாட்டுக்குச் சென்றதில் ஒரு சிறிய காணித்துண்டும் அதில் ஒரு சிறிய வீடும் அவளது குடும்பத்துக்கு என்று மிஞ்சியிருக்கின்றது. கணவன் அஸ்ஹார் மற்றும் அவனது குடும்பத்தினர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள். சிறிய சிறிய கூலித் தொழில்களை செய்பவன். ஒருநாள் கூலி வேலைக்காக சென்றபோது தவறி கீழே விழுந்து கால் உடைந்தது. அதன் பின்னர் பழையபடி அவனால் கூலி வேலைகளைச் செய்ய முடியவில்லை. இறுதியில் 'குவைத் நட்ட ஈடு' கிடைத்தில் ஹஸீனாவுக்கும் பணம் கிடைக்கின்றது. பல்வேறு கஷ்டங்கள் இருந்தேபாதும் தனது கணவனின் தங்கையின் திருமணத்துக்காக அவளுக்குக் கிடைத்த பணத்தில் பாதியையே கொடுத்துவிடுகின்றாள். அவர்களுக்கு உதிவியதில் அவளது உள்ளம் மிகவும் சந்தோசப்படுகின்றது. ஹஜ் பெருநாளைக்கு முதல்நாள் அவளும் தியாகத்தை செய்த திருப்தியில் இருப்பதாக கதை நிறைவடைகின்றது.

 

கணித பாடம் (பக்கம் 30) என்ற கதையானது மாணவர்களின் மனதை அப்படியே பிரதிபலிக்கின்றது. அதாவது கணிதபாடம் என்றால் பொதுவாக எல்லோருடைய அபிப்பிராயம் அது கடினமான பாடம் என்பதாகும். தமது நிம்மதியையே கொன்று போடும் பாடமாக மாணவர்கள் கருதுவதற்குக் காரணம் அவர்கள் அதில் நாட்டம் கொள்ளாமையாகும். ஒருசில மாணவர்களே கணக்கில் புலியாக இருந்தபோதும் பெரும்பாலானவர்கள் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையத் தவறிவிடுகின்றார்கள். நன்றாக படிக்கின்ற மாணவர்கள் கணித பாடத்தில் கோட்டை விடுவதால் உயர்தரம் செய்ய முடியாமல் திண்டாடும் நிலையும் கண்கூடு. ஆனபோதும்; ஷஎண்ணும்; எழுத்தும் கண்ணெனத் தகும்| என்பதற்கொப்ப கணிதம் பயில வேண்டியது அவசியமாகும். இந்தக் கதையில் கூட கணிதத்தின் அவசியமே எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. கற்பிக்கின்ற ஆசிரியர்கள் மாணவர்களின் மனதையறிந்து அதற்கு ஏற்றாற்போல படிப்பிக்க வேண்டும். மாறாக தனக்குத் தெரிந்தவை எல்லாம் மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது. மாணவர்கள் கசப்பாக கருதுவது கணித பாடத்தைத்தான் என்றிருக்கும் போது, அதை கற்பிக்கின்ற ஆசிரியர்களும் கடுமையாக நடந்துகொண்டால் மாணவர் மனதளவில் பாதிக்கப்படுவது இயல்பாகும் என்பது பொதுவான கருத்தாகும்

 

குழந்தை மனம் பேசுகிறது (பக்கம் 42) என்ற கதை சுமார் மூன்று, நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தையின் மன உணர்வை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. அற்புதமான கற்பனைக் கதை. குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு தொழிலுக்கு செல்கின்ற பெற்றோர் கட்டாயம் படிக்க வேண்டிய கதை இது. தனது உம்மும்மாவடன் நேரத்தை கழிக்கும் குழந்தையிடம் இயல்பாகக் காணப்படும் ஏக்கங்கள் தத்ரூபமாக இக்கதையில் பதியப்பட்டுள்ளது. இவர்கள் சிறுபிள்ளைகள் தானே என்று சிலர் கண்டபடியெல்லாம் நடந்துகொள்வார்கள். ஆனால் பெரியவர்களைவிட சிறுவர்களுக்குத்தான் மனதில் பதியும் திறன் அதிகம் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றார்கள். எனவே சிறுவர்கள் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்களுடன் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் இக்கதை வலியுறுத்துகின்றது.

 

அழகு இல்லாதவள் வாழ்வு (பக்கம் 50) என்ற கதை சமூகத்தில் நிலவுகின்ற கல்யாணப் பிரச்சனை பற்றி பேசியிருக்கின்றது. இதில் பரீனா என்ற பாத்திரம் கருமை நிறம் கொண்டவள். அவளுக்குத்தான் திருமணம் நிச்சயமாகியிருக்கின்றது. தனது கருமை நிறமும், அவலட்சனமாக அவளே கருத்திக் கொள்ளும் அங்க அமைப்புக்களும் அவள் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தையே இல்லாமல் செய்கின்றது. அதனால் திருமணத்தன்று அவளது கணவனிடம் நிமிர்ந்து பார்த்து பேசாமல் அழுதுகொண்டிருக்கின்றாள். அவளை அறிந்த மணமகன் ரஸ்ஸாக் அவளது மனக்குறைகளைக் களைந்து தான் அவள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துகின்றான். கறுப்பாக பிறந்தவள், மிக உயரமாக, அல்லது பருமானகாக இருப்பவள், பல்வரிசை முன்தள்ளி இருப்பவள் என்ற அங்க இலட்சணங்கள் ஒரு பெண்ணை அசிங்கமானவளாக காட்டுவது பொதுவியல்பாக பார்க்கப்படுகின்றது. ஆனால் அதில் இல்லாத அழகு ஒரு பெண்ணின் நடத்தையிலும், ஒழுக்கத்திலும், குடும்பப் பின்னணியிலும் இருக்கின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை என்பதை இக்கதை உணர்த்துகின்றது..

 

பெருநாள் பரிசு (பக்கம் 67) என்ற கதை நவாஸ் என்ற பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பி.கொம் பட்டதாரியான நவாஸ் தற்போது காமெண்டஸ் ஒன்றை நடத்துகின்றான். அத்துடன் மார்க்கத்தில் அதிக பேணுதலை உடையவன். அவன் தனக்கான இலட்சிய மனைவியே வேண்டுமென்ற கொள்கைப் பற்றுடையவன். இதை அறிந்த நவாஸின் தந்தையான ஹுஸைன் ஹாஜியார் தள்ளுவண்டி வியாபாரியான ஜௌபர் நானாவின் பட்டதாரி மகளைப் பற்றி அறிகின்றார். அவர் முஅத்தினுடன் ஜௌபர் நானாவின் வீட்டுக்கு சென்று தனது மகனுக்கு ஜௌபரின் மகளை கல்யாணம் பேசுகிறார். நவாஸுக்கு முப்பது வயது. ஜௌபரின் பட்டதாரி மகளுக்கு இருபத்தியெட்டு வயது. வயதுப் பொருத்தம் உட்பட தனது மகனின் விருப்பத்துக்கு ஏற்ற மருமகள் கிடைத்தில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. நோன்புப் பெருநாளைக்கு முதல்நாள் காரில் வரும் ஹுஸைன் நானா, மருமகள் உட்பட அவள் குடும்பத்தினருக்கும் பெருநாள் பரிசாக ஆடைகள், தீன் பண்டங்கள் முதலியவற்றைக் கொண்டுவந்து கொடுத்து தமது சம்மதத்தை தெரிவிப்பதாக கதை நிறைவடைகின்றது.

 

சமூக விடயங்கள் உட்பட தான் ஒரு அதிபராக இருந்ததால் மாணவர்களின் நிலைப்பாடுகளையும் அறிந்து சிறுகதைகளை எழுதியிருக்கின்றார் நூலாசிரியர். இன்னும் பல காத்திரமான நூல்களை வெளியிடுமாறு வெலிப்பன்னை அத்தாஸைக் கேட்டுக்கொள்வதுடன் அவரது இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!!!

 

நூல் - தியாகம்

நூல் வகை - சிறுகதை

நூலாசிரியர் - வெலிப்பன்னை அத்தாஸ்

வெளியீடு - மொடர்ன் ஸ்டடி ஸென்றர்

விலை - 225 ரூபாய் 

 

   

                         www.tamilauthors.com