பிரபஞ்சன் அவர்களுடன் நேர்காணல்: (2010)

அகில

(பிரபஞ்சன் புதுச்சேரி தந்த புகழ்பெற்ற படைப்பாளர். சிறந்த சிறுகதை, நாவல் எழுத்தாளர். ஆரம்ப காலங்களில் கவிதைகள் எழுதியவர். பழகுவதற்கும் பேசுவதற்கும் இனிமையானவர். பிரெஞ்சு ஆட்சிக்காலத்துப் புதுச்சேரியை 'மானுடம் வெல்லும்', 'வானம் வசப்படும்', 'கண்ணீரால் காப்போம்' நாவல்கள் மூலம் உலகம் அறியச் செய்தவர். இவருடைய 'வானம் வசப்படும்' நாவல் 1995 இல் சாஹித்திய அகாடமி விருது பெற்றது. 'ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்' என்ற சிறகதைத் தொகுப்பும், 'ஆண்களும் பெண்களும்' என்ற குறுநாவல் தொகுதியும் தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றன. இது தவிர இலக்கியச் சிந்தனை விருது, கஸ்தூரி சீனிவாசன் பரிசு, பாரதீய பாஷாபரிசத் விருது, ஆதித்தனார் விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். பெண்ணியம் சார்ந்த காகித மனிதர்கள், கண்ணீரால் காப்போம், வானம் வசப்படும், நேற்று மனிதர்கள், பெண்மை வெல்க, பதவி, சந்தியா போன்ற இவரது படைப்புக்கள் பரபரப்பாக பேசப்பட்டவை. அனைத்து இந்திய மொழிகள், மற்றும் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜேர்மன், ஸ்பானிஷ் மொழிகளில் இவரது படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.)

1)  உங்களுடைய எழுத்துலகப் பிரவேசம் பற்றிக் குறிப்பிடுங்களேன்?

என்னுடைய முதல் படைப்பு என்னும்போது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 1961 ஆம் ஆண்டு என்னுடைய ஒரு கதை, ஒரு கவிதை, ஒரு கட்டுரை இந்த மூன்றும் ஒரே சமயம் வெளியாகின. அவற்றில் ஒன்று சென்னையில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றிலும், மற்றைய இரண்டும் புதுச்சேரியில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றிலும் வெளிவந்தன. என்னுடைய பிரவேசம் இதுதான்.

என்னுடைய எழுத்துலகப் பிரவேசத்திற்குக் காரணம் என்று பார்த்தால், என்னுடைய தந்தை என்னை தெருப்பையன்களுடன் சேர்ந்து விளையாட அனுமதிப்பதில்லை. அவர்களுடன் சேர்ந்தால் நான் கெட்டு விடுவேன் என்று அவர் கருதினார். எனவே அவர் என்னை சிறுவயதிலேயே கிட்டத்தட்ட ஆறாம் வகுப்பு படிக்கின்றபோதே எங்கள் ஊரில் உள்ள நூலகத்தில் ஒரு உறுப்பினராக சேர்த்துவிட்டார். அந்த நூலகம் புதுச்சேரி ரோமன்டோலன் என்று அப்போது அழைக்கப்பட்டது. இப்போது புதுச்சேரி அரச நூலகமாக அது விளங்குகிறது. பாடசாலை மாலையில் முடிந்ததும் வீட்டுக்குச் செல்வதற்குப் பதிலாக நூலகத்திற்குச் செல்லும்படியான ஒரு சூழ்நிலை எனக்கு. புத்தகங்களை இரவல் வாங்கிக்கொண்டு வந்து வீட்டில்  படிப்பேன். இப்படி படிக்கப் படிக்க அதன் உணர்வுகளும் கருத்துக்களும் சேர்ந்து என்னை எழுத வைத்தன. எழுத்து மட்டும்தான் எனக்கு ஒரு வடிகாலாக, ஊடகமாக அமைந்தது. என்னுடைய 14, 15 ஆவது வயதிலேயே முதல் படைப்பு வெளிவந்துவிட்டது. இப்படியாகத்தான் என்னுடைய இலக்கியப் பிரவேசம் நிகழ்ந்தது.

2)  சிறுகதை, நாவல் போல கவிதையும் தங்களுக்கு பரிச்சயமான ஒன்றாக இருந்தும் அந்தத் துறையில் நீங்கள் ஆர்வம் செலுத்தாமைக்கு காரணம் என்ன?

நான் தொடக்கத்திலே வானம்பாடிக் குழுவில் இணைந்து பல கவிதைகள் எழுதியிருக்கிறேன். வானம்பாடிக் குழுவில் இருக்கும்போதுதான் என் பெயரையும் பிரபஞ்சன் என்று வைத்துக்கொண்டேன். 60 களின் கடைசியிலும், 70 களின் தொடக்கத்திலும் நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன். பிரபஞ்சன் என்ற பெயரிலே ஒரு புத்தகம் போடுகிற அளவுக்கு எனது கவிதைகள் வெளிவந்தன. ஆனால் கவிதை மொழியை நான் நன்கு கண்டடைந்தேன் என்று சொல்வதற்கில்லை. காரணம், எந்த மொழியில், தமிழ்மொழியில் நாம் கவிதை எழுதினாலும் கூட, கவிதை என்பது தனிமொழி. அந்த மொழி கைவரப்பெற்றால்தான் கவிதை கைவரப் பெற்றதாக அர்த்தம். நான் எழுதிய கவிதைகள் எல்லாம் ஏற்கனவே நான் வாசித்த கவிதைகளின் நிழலாக அல்லது அதனுடைய பாதிப்பில் எழுந்தவையாக எனக்குத் தோன்றின.

இப்படி சுயம் அற்ற அல்லது இயல்பான ஊற்றாக இல்லாத கவிதைப் போக்கை நான் எழுதுகிறேனோ என்ற சந்தேகம் எனக்கு தொடக்கத்திலேயே நல்லபடியாகத் தோன்றிவிட்டது. இல்லையென்றால் பல புத்தகங்களை நான் எழுதவேண்டி இருந்திருக்கும்ஆனால் நான் எழுதிய அளவில் இப்போது பல பேர் அப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. அந்தக் காலத்திலே நல்ல பல கவிஞர்கள் எனக்கு பரிச்சயமாக இருந்தார்கள். உதாரணத்திற்கு தருமுசிவராமு. இப்படி பல நல்ல கவிஞர்களுடைய தொடர்பு எனக்கு இருந்தது. அவர்களுடன் ஒப்புநோக்கும்போது என்னுடைய கவிதைகளில் ஒன்றுமில்லை என்று ஆரம்பத்திலேயே நான் முடிவெடுத்து விட்டேன். ஆகவே கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

3) பிரபஞ்சன் என்ற உங்கள் புனைபெயர் பற்றி....

60 களின் கடைசியில் அதாவது 65, 66 காலகட்டத்தில் கோயம்புத்தூரில் - கோவையை மையமாகக் கொண்டு ஒரு இலக்கிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக்குப் பெயர் வானம்பாடிகள் இயக்கம் என்பதாகும். இடதுசாரிக் கவிஞர்கள் அதாவது சமூகத்திலே ஒரு மாற்றம், புரட்சி ஏற்பட வேண்டும் என்று கருதுகிற மாக்சியத்தை அடிப்படையில் தனது தத்துவமாகக் கொண்ட எழுத்தாளர்களும், கவிஞர்களும் ஒன்று திரண்டு தங்களுடைய அமைப்புக்கு வானம்பாடிகள் இயக்கம் என்று பெயர் வைத்துக்கொண்டார்கள். அவர்கள் நடத்திய ஒரு பத்திரிகைக்குப் பெயர் வானம்பாடி. இவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர்கள் அல்லது உதாரண புருஷர்களாக இருந்தவர்கள் திகம்பரக் கவிஞர்கள் என்று சொல்லப்பட்ட கவிஞர்கள். இந்த திகம்பர கவிஞர்கள் இடதுசாரியில் இருந்தவர்கள். தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த கவிஞர்கள். அவர்களுக்குள் ஒரு தத்துவம் இருந்தது. அதாவது ஜாதி மதம் தெரியாத பெயர்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது. எனவே நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து அவரவர் பெயர்களை மாற்றிக்கொண்டோம். உதாரணமாக பாலசுப்பிரமணியம் தன் பெயரை சிற்பி என்று வைத்துக்கொண்டார். உலகநாதன் தனது பெயரை குடியரசு என்று வைத்துக்கொண்டார். ரெங்கராஜன் அக்கினிபுத்திரன் என்று வைத்துக்கொண்டார். முகமது மேத்தா மு.மேத்தா என்று ஆனார். அந்த வரிசையில் நானும் வைத்திலிங்கம் என்ற எனது பெயரை பிரபஞ்சன் என்று மாற்றி வைத்துக்கொண்டேன். வைத்திலிங்கம் என்பது இந்துசமயம் சார்ந்த என் தந்தையார் சார்ந்த ஒரு மதத்தின் பெயர். எனக்கு இந்த மதம், ஜாதி இதிலெல்லாம் ஈடுபாடில்லை. இப்படித்தான் என் பெயர் மாற்றம் ஏற்பட்டது.

4) தங்களுடைய படைப்புகளில் அதிகமாக மனிதநேயக் கருத்துக்களை காணக்கூடியதாக இருக்கிறது. மனித நேயக்கருத்துக்களை சொல்லவேண்டும் என்பதில் உங்கள் கவனம் செல்லக் காரணம் என்ன?

நான் கீழ் மத்தியதர வகுப்பில் இருந்து வந்தவன். என்னுடைய பதின்ம வயதுகளில் அதாவது என் 12 வயது தொடக்கம் 25 வயது காலகட்டத்தில் மிகவும் வறுமையான, ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உண்ணுகிற குடும்பமாக எங்கள் குடும்பம் இருந்தது. இப்படிப்பட்டவர்களுடன்தான் நாங்கள் உறவு வைத்துக்கொள்வது. ஏனென்றால் பணக்காரர்களுடன் வாழ முடியாது. இப்படியான சூழல் வாழ்க்கை குறித்தும், பசி குறித்தும் எனக்கு நிறைய அனுபவங்களைத் தந்தது. வறுமை வருகிறபோது நம்மைவிட்டுப் பிரிகிற மனிதர்கள், நேற்றுவரை நண்பர்களாக இருந்தவர்கள் அல்லது பராமுகமாகப் போய்க்கொண்டிருக்கிற மனிதர்கள் சமுதாயத்தைப் பார்க்கின்றபோது எனக்கு வருத்தமும், வேதனையும் ஏற்பட்டது. இந்த தொடக்க கால அனுபவங்கள் தான் எனக்கு பின்னாள்களில் காலம் முழுக்க என்னை இழுத்துக்கொண்டு வருகிற பேரூணர்ச்சியாக இருக்கிறது.

சகமனிதனைப் புரிந்து கொள்வதும், சகமனிதனுடைய துன்பங்களிலே பங்குகொள்வதும், சகமனிதனுக்கு முடிந்தவரை ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்க, இருக்கிற உணர்வை உருவாக்குவதற்குத்தான் இலக்கியம் வேண்டும். அவ்வாறே என்னுடைய கதைகள் இருக்கவேண்டும் என்று கருதினேன்.

நான் எழுத ஆரம்பித்த காலத்தில் ரஷ்ய இலக்கியங்கள் ஒரு எழுச்சிமிக்க மிகப்பெரிய பாதிப்பை உலக அளவில் ஏற்படுத்திக்கொண்டிருந்தன. தமிழ் நாட்டிலும் அந்த உணர்வலைகள்தான் வீசிக்கொண்டிருந்தன. மாக்சிய, யதார்த்த விசயங்கள் அப்பொழுது இவைதான் இருந்தன. செகாவ், டால்ஸ்டாய், மாப்பசான், கார்க்கி போன்ற பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் அடிப்படையில் மனிதங்களைப் பேசுகின்றவர்களாக இருந்தார்கள். இன்றுவரை எனக்கு மனிதம் எழுதித் தீரவில்லை என்றுதான் தோன்றுகிறது. உலகின் மாபெரும் இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற எந்த இலக்கியமும் இரண்டு வகை போக்குகளில்தான் இயங்கிக்கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்.

ஒன்று, டால்ஸ்டாய் ஏற்படுத்திய போக்கு அல்லது பாணி. இரண்டாவது, தஸ்தேயேவ்ஸ்கி ஏற்படுத்திய ஒருவிதப் போக்கு அல்லது பாணி. இந்த இரண்டுவிதமான போக்குகளும்தான் இன்று உலகம் முழுக்க கதைகளாகவோ, நாவல்களாகவோ உரைநடையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டுபேருமே ஒருபக்கம் மனிதனுடைய வெளிச்சமான பக்கங்களை டால்ஸ்டாய் கூற, மற்றவர் மனிதனுடைய இருண்ட பக்கங்கள் என்று குறிப்பிடத்தக்க சிலவற்றை பேசுவதாக இருந்தார்கள். ஆக, மனிதனை ஒரு நாணயம் என்று கொண்டால் அதன் ஒரு பக்கம் டால்ஸ்டாயின் கொள்கைகள் என்றால் அந்த நாணயத்தின் மறுபக்கம் தஸ்தேயேவ்ஸ்கி  இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆக மனிதனை புறக்கணித்துவிட்டு எழுதுவது எழுத்தாக இருக்கமுடியாது.

ஒரு விளம்பரக் கம்பனியைச் சேர்ந்த ஒருவர் அவர் தன்னை சம்பாதிப்பதற்கு தகுதியற்றவனாக ஆக்கிக்கொண்ட பொழுது அவன் மனிதன் என்ற நிலையில் இருந்து ஒரு கரப்பான்பூச்சியாக அந்த குடும்பத்தாரினால் மதிக்கப்படுகின்ற காப்கா(Kafka) எழுதிய 'உருமாற்றம்' என்ற கதையை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். அந்தக் கதையில் என்ன சொல்கிறது என்று பார்த்தால் இந்த மனிதம் பற்றித்தான் சொல்கிறது. பணத்தினை உருவாக்கத் தகுதியுள்ள ஒருவனாக மனிதன் உள்ளபோதுதான் அவனை சமூகம் மனிதன் என்று ஏற்றுக்கொள்கிறது. அதற்கு அப்பால் அவன் ஒன்றுமில்லை என்பதான கருதுகோளை வைத்துத்தான் உலகம் சென்றுகொண்டிருக்கிறது. அதை மாற்றுவதுதான் காப்காவின் நோக்கமாக இருக்கிறது. இப்படி மனிதன் இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய அவலத்திற்கு உள்ளாகி எந்த பொருட்படுத்தலும் இல்லாமல் விலைமதிப்பற்றவனாக இருக்கிறான். ஒரு செங்கல்லுக்கு கூட மதிப்பு உண்டு. ஆனால் ஒரு மனிதனுக்கு மதிப்பு இருக்கிறதா என்றால் இல்லை.

ஒரு மனிதன் பொருள் சம்பாதிப்பவனாக இருக்கின்ற நிலமை மட்டுமல்ல அதற்கும் மேலானவனாக மனிதனால் இருக்க முடியும் என்பதை காப்கா கூறுவதாக எனக்குத் தெரிகிறது. உலக இலக்கியப் பயணம் எல்லாம் மனிதனை தேடுவதாகவும், மனிதனைக் கண்டறிவதாகவும் தான் இருக்கிறது என்பதாக நான் கருதுகிறேன். ஆகவேதான் என்னுடைய கதைகள் அதிகமாக மானுடம் பற்றிப் பேசுகின்றன.

5) 'ஈழத்து எழுத்தாளர்களுக்கு இந்திய எழுத்தாளர்கள் ஒன்றுமே செய்யவில்லை' என்று மனுஷ்யபுத்திரன் கூறியதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அது உண்மைதான். ஈழத்திலிருந்து குறிப்பாக கவிதைகள், உரைநடைகள் என்று மிகச்சிறந்த படைப்புக்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும் நான் அவற்றைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் அவர்களைப் பற்றி தமிழ் இலக்கியப் போக்கு என்று சொன்னால் அதற்குள் ஈழம் உட்படுத்தப்படுவதில்லை. அத்தோடு தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் எனும்போது தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் பெயர் சொல்லப்படுகிறார்களே தவிர ஈழத்து எழுத்தாளர்கள் வருவதில்லை. பெரும்பாலும் இவ்வாறே இருக்கிறது.

ஈழத்திலிருந்து கணிசமானளவு இலக்கிய பங்களிப்பு நிகழ்ந்தபோதிலும் கூட தமிழக எழுத்தாளர்கள் அதை கண்டு கொள்வதாக இல்லை என்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. அந்த வருத்தத்தில்தான் மனுஷ்யபுத்திரன் அப்படிக் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன். நானும் அந்தக் கருத்தை ஆதரிக்கிறேன். இன்னும்கூட ஆதரிக்கத்தகுந்தவர்களாகவும், வரவேற்கத் தகுந்தவர்களாகவும், எடுத்துக் கூறத்தகுந்தவர்களாகவும் ஈழத்து எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பது என் கருத்து.

6) தமிழில் இன்றைய சிறுகதை, நாவல் போக்கைப் பற்றி.....?

சிறுகதைப் போக்கு எனும்போது பலவிதமான தாக்கங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதாவது தொடக்ககால கதைகள் புதுமைப்பித்தன் என்று ஆரம்பித்தோமானால் முதல் பத்து ஆண்டுகள் வாழ்க்கையை எழுதுவது, வாழ்க்கையை விமர்சன பூர்வமாக எழுதுவது என்பதாக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில், அந்த சிறுகதை பிறந்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு பிற்பாடு நாம் இப்போது திரும்பிப் பார்க்கிறோம். எந்த நிலையில் நாம் இருக்கிறோம் என்றால் சிறுகதைகளைப் பொறுத்தவரை உலகத்தில் எந்த சிறுகதைப் போக்குக்கும் அல்லது சிறுகதை எழுத்தாளர்களுக்கும் குறைவுபடாத எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் தமிழ் புழங்குகிற ஈழம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் இருக்கிறார்கள் என்பது என் அசைக்க முடியாத கருத்து.

தற்போது பின்னவீனத்துவத்தின் பிற்பாடு அதிலும் பெயர் சொல்லத்தக்க சில எழுத்தாளர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஜே.பி. சாணக்கியா, ஜென்மன், ஸ்ரீராம் என்று இப்படி நிறைய இளந்தலைமுறை எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். ஈழத்து பெண் எழுத்தாளர் தமிழ்நதி இங்கிருந்து மிகச்சிறந்த கவிதைகள் படைக்கிறார். கதைகள் எழுதுகிறார். இப்படி பரவலாக குறிப்பிடத்தக்க சிறுகதை ஆக்கங்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. மொழி மிகவும் அடர்த்தியாகவும், நெருக்கமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது இவர்கள் கைகளில். தமிழ் இலகுவான மொழி என்று சொல்லப்படுவதும் உண்டு. ஆனால் அண்மைக் காலத்திலே மனித வாழ்க்கை சிக்கலாக சிக்கலாக, மனித வாழ்க்கை புதிர்களாக, சந்தேகங்களாக ஆக ஆக இந்த உரைநடையிலும் ஒருவகையான புதிர்த்தன்மை ஏற்பட்டுவிடுகிறது. இது இயல்புதான். அவை எல்லா மொழிகளுக்கும் உரிய இயல்புதான். தமிழுக்கும் அது இப்பொழுது நேர்ந்துவிட்டது. முன்பு வெகுஜன இலக்கியம் என்பது ஒருவகையான இலக்கியமாக வளர்ந்துகொண்டிருந்தாலும் கூட அவற்றுக்கு எதிரான சிறுகதை இலக்கியம் ஒருவகையான ஆக்கபூர்வமான இலக்கியம், படைப்பிலக்கியம் என்ற பெயரிலே மிகவும் காத்திரமான படைப்புக்கள் தமிழிலே உருவாகிக்கொண்டு இருக்கின்றன. நாவலில் அப்படி சொல்வதற்கு இல்லை என்றாலும், சிறுகதையைப் பொருத்தவரை உலகத் தரத்திற்கு அல்லது உலகத்திற்கு கொடுப்பதற்கு தமிழிலே ஏராளம் உண்டு என்பதுதான் என்னுடைய கருத்து.

 7) உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகள் கிழக்கு பதிப்பகத்தால் இறுவெட்டு வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்து வடிவத்தில் இருக்கும் சிறுகதைகளைப் படிப்பதற்கும் ஒலிவடிவத்தில் கேட்பதற்கும் - இரண்டும் ஒரே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா?

இருக்கமுடியாது. அச்சிலே பதித்து புத்தகமாகக் கொடுக்கிறபொழுது வாசகனுக்கும், அந்தக் கதைக்கும் இடையிலான அன்னியோன்யம் காதால் கேட்கும்போது இருக்காது. ஆனால் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கதை இலக்கியம் எப்போதுமே சொல்லப்பட்டுவந்த இலக்கியம்தான். செவிவழியாக வளர்ந்து வந்த இலக்கியம்தான். மொழியில் எழுத்துரு உருவாவதற்குமுன் பேசுவதன் மூலமாக, சங்கேதங்களின் மூலமாக, ஒலியின் மூலமாக கதைகளை ஆரம்ப காலத்தில் நமது நாட்டார் மரபிலே பேணிக்கொண்டு வந்தார்கள். பிறகு எழுத்துரு கண்டுபிடிக்கப்பட்ட பிற்பாடு கதை எழுத்துக்கு வந்தது. இரண்டுக்கும் அடிப்படையான நுணுக்கமான வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.

ஒருவர் தனிமையாக அமர்ந்துகொண்டு புத்தகத்தை படித்து ஒரு பந்தியை படித்து, மறுபடி அந்த பந்தியை படித்து என்று அதனை உள்வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்பு செவிவழியாக பெறப்படும் கதைகளுக்கு இல்லைதான். அதேசமயம் இது ஒருவகையான மகிழ்ச்சியைத் தரும்.

பழங்காலத்தில் பாட்டியிடம் அமர்ந்து கதை கேட்கும் வழக்கம் இருந்தது. சொல்லச் சொல்ல கேட்கின்ற இந்த பழைய முறையை நாம் மீண்டும் கொண்டுவந்திருக்கிறோம். அது எந்தளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதை கொஞ்சக்காலம் கழித்துத்தான் பார்க்க முடியும். ஏனெனில் இந்த ஊடகம் புதியது. கதைகளை இறுவெட்டில் பதிவுசெய்து அதை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள்.

காட்சி ரூபமாக கொடுப்பது என்பது ஏற்கனவே வெற்றிபெற்று விட்டது. சினிமா மூலமாகவும், சின்னத்திரைகள் மூலமாகவும் அது நடந்து கொண்டிருக்கிறது. கவர்ச்சி ஊடக பைத்தியங்களாக தமிழகம் மாறிக்கொண்டு வருகிறது. ஆனால் இந்த இறுவெட்டு மூலமாகக் கதைகளை கேட்பது என்பது அண்மைக்காலமாகத்தான் அறிமுகமாகியிருக்கிறது. அதனுடைய வெற்றி, தோல்வியை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ஒன்றை நாம் முடிவாகச் சொல்லலாம். அச்சிட்ட கதைகளில் கிடைக்கின்ற நெருக்கம் இறுவெட்டு வழியாக கிடைக்குமா என்றால் அது கொஞ்சம் குறைவுதான். ஆனாலும்  அந்த ஊடகத்திலும் இந்த இலக்கியங்கள் போகவேண்டும் என்பதனால் தான் அதை நான் அனுமதித்தேன்.

அத்தோடு வாசிப்புத்திறன் அற்றவர்களுக்கும், மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கும் இது பயனுடையதாக இருக்கும்

8) ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்ற அனுபவத்தைச் சொல்லுங்கள்?

1964 இல் பள்ளி இறுதி படிப்பை முடித்துவிட்டு தந்தைக்கு என்னை டாக்டராக ஆக்கிப் பார்க்க ஆசை. அதற்கான தகுதி எங்களுக்கு இருந்தது. ஆனால் தமிழ்தான் படிக்க வேண்டும் என்று குடும்பத்தவர்கள் எல்லோரையும் வருத்தப்படுத்திவிட்டு, புதுச்சேரிக்கு அருகில் இருந்த மயிலம் தமிழ் கல்லூரியில் எனது கல்வியைத் தொடர்ந்தேன். 1964 ஆம் ஆண்டு இறுதியில் 65 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மூன்றாம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. மிகப்பெரிய போராட்டம் அது. அதுதான் காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி ஆட்சியில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றேன். உத்தரபட்டியிலே சிலநாட்களும், வானூர் சிறையில் சிலநாட்களும் மொத்தம் 20 நாட்கள் சிறை இருந்தேன். சிறைத் துன்பம் ஒன்றும் பெரிதாக இருக்கவில்லை. ஏனென்றால் முப்பது அல்லது நாற்பது மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து சிறை வைக்கப்பட்டிருந்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

சிறையிலே ஒரு நல்ல அம்சம் இருந்தது. வானூர் சிறையில் நல்ல நூலகம் இருந்தது. நிறைய மாக்சிய நூல்கள், காந்தியையும் கால்மாக்ஸ்சையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட சில நூல்கள் இருந்தன. இவற்றையெல்லாம் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அது எனக்குள் ஒரு திறவுகோலாக இருந்தது. அதுவரை எனக்கு கடவுள் சார்ந்த சர்ச்சைகள் தான் இருந்தது. மாக்சியம் ஒரு புரிய வேண்டிய, படிக்க வேண்டிய, பயிலவேண்டிய ஒரு மக்கள் சார்ந்த தத்துவம் என்பதைப் புரிந்துகொண்டேன். எனக்கு வானூர் சிறைதான் அந்த அனுபவத்தைத் தந்தது. அந்த வகையிலே மிகவும் முக்கியமான சிறை அனுபவம் அது எனக்கு.

9) தி.ஜானகிராமன் எழுத்துக்கள் உங்களுக்குப் பிடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அதில் ஒரு காரணம்?

ஆம். இந்த சிறைவாசத்திற்கு பின்னர் நான் மயிலங்காடு தமிழ் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டு விட்டேன். பின்னர் இவ்வாறு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு என்று கரந்தை தமிழ்ச் சங்கம் அதாவது தஞ்சை தமிழ் சங்கம் இடம்கொடுத்தது. 1936 ஆம் ஆண்டு தமிழ் உணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட தமிழ்ச் சங்கம் அது. அப்பொழுதுதான் தஞ்சாவூர் எழுத்தாளர் பிரகாஷ் அவர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. பிரகாஷ் என்னுடைய சமகாலத்தில் மிக முக்கியமான எழுத்தாளர். தஞ்சையில் பிறந்தவர். தஞ்சாவூரை அங்குலம் அங்குலமாக அறிந்தவர். தஞ்சாவூர் எனும்போது அது இசைபூமி, கலாபூமி. மகத்தான கலைஞர்கள் எல்லாம் உருவாகிய பூமி. அந்த பூமியிலே இசையும், எழுத்தும், இலக்கியமும் ஒரு காவிரியைப் போல ஓடிக்கொண்ருந்தது. அந்த காலகட்டத்தில்தான் எனக்கு தஞ்சை எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். குறிப்பாக கரிச்சான்குஞ்சு, ஜானகிராமன் ஆகியோர்கள் அறிமுகமானார்கள்.

என் இலக்கிய உலக சகா. அவரை நேரடியாகச் சந்தித்து உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது. அவருடைய கதை கையில் இருக்கும். அவர் முன்னால் உட்கார்ந்துகொண்டு இருப்பார். தஞ்சாவூரில் பிரகாஷ்  நடத்திய பல அமைப்புகளிலே அவர் அடிக்கடி வந்து கலந்து கொள்ளுவார். அப்படி எனக்கு ஜானகிராமனுடன் பரிச்சயம் ஏற்பட்டது. ஒருவகையான கனவுகளைத் தூவிச்செல்கிற எழுத்து ஜானகிராமனுடைய எழுத்து. மிகுந்த எழுத்துப் பாங்கும், மிகுந்த இசையறிவும், அழகான எழுத்துமொழியும்  அவருக்கு வாய்த்தது. எனக்கு அது மிகவும் பிடித்தது. மனிதனுடைய இன்னொருபகுதி என்று சொல்வார்களே அதாவது இன்பத்தை தேடி அல்லது தனக்கு எது சந்தோசத்தைத்  தருகிறது என்பதை நாடிச் செல்கின்ற மனிதனுடைய போக்கு குறிப்பாக பெண்கள், இசை, சங்கீதம், நல்ல உணவு, நல்ல ஆற்றங்கரை உலாவல்கள், காவிரி நீர், அது தருகின்ற சிலிர்ப்பு, காவிரி நீர் படிதல், காவிரி நீரிலே குளித்தல் இதுபோன்ற மனிதனுடைய சந்தோசம் தருகின்ற பகுதிகள் இருக்கின்றனவே அந்தப் பகுதிகளை மிக அழகாக மிக நுட்பமாக தஞ்சாவூர் மண்ணை நமக்கு கண்முன்னே கொண்டுவந்து தந்தவர் ஜானகிராமன். மற்றொன்று ஜானகிராமன் அழகான பெண்களை எழுதினார், சங்கீதத்தை எழுதினார், அழகியலை எழுதினார் என்பதற்கு மேலாக பசியைக் குறித்து மிகவும் உக்கிரமாக எழுதியவர் அவர். அது பலருக்கும் புரியாமல் போயிற்று. பசி என்னும்போது வயிற்றுப்பசி, ஆன்மப்பசி அல்லது ஒருவகையான தேடல்பசி. அவை குறித்து மிகவும் உக்கிரமாக எழுதியவர்.

10)  உங்களுடைய பெரும்பாலான கதைகளில் பெண்களை நட்பண்பும் உயர்ந்த குணங்களும் உள்ளவர்களாக சித்தரிக்க ஏதாவது சிறப்பான காரணங்கள் இருக்கிறதா?

வரலாற்று பூர்வமாக நான் பெண்களுடைய வளர்ச்சியைப் பார்க்கிறேன். அதாவது சங்ககாலத்தில் கூட நூற்றுக்கணக்கான ஆண் கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் பெண் கவிஞர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருந்திருக்கிறார்கள். இப்போதும் கூட இந்தியாவில் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க ஆண் பாராளுமன்றம் அனுமதி கொடுக்கவில்லை. இது ஆண் பாராளுமன்றம். ஆண் சட்டம். ஆண் நீதிமன்றம். ஆண்களுடைய காவல்துறை. இந்த அரசாங்கமே ஆண்களுடைய அரசாங்கம். இப்படியாகத்தான் இந்த காலம் முழுவதும் இருக்கிறது. இந்த நூற்றாண்டில் தான் பெண்கள் வெளியே வந்தார்கள். படிப்பதற்காக வெளியே வந்தார்கள். வீட்டுக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதை 20 ஆம் நூற்றாண்டில்தான் நாம் பெண்களுக்குக் காட்டியிருக்கிறோம். படிக்கத் தொடங்கி, அலுவலகத்திற்கு போகத் தொடங்கி இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய உலகம் விரிந்துகொண்டிருக்கிறது. இந்த பூமிப்பந்தில் அவர்களுக்குரிய பங்கை அவர்கள் எடுத்துக்கொள்வதில் இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு இப்பொழுதுதான் கிடைத்திருக்கிறது.

பெண்களின் நிலையை வரலாற்றுப் பூர்வமாகப் பார்க்கின்றபோது முத்துலெட்சுமி 1905 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதல்முதல் கல்லூரிக்குப் போகின்ற பொழுது இரண்டு பக்கங்களிலும் இருந்த பெண்கள் காறித்துப்பினார்கள். என்ன காரணம் என்றால், 16 வயதில் ஒரு பெண் கலியாணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ளாமல் கல்லூரியில் படிக்கப்போகிறாளே என்பதற்காகத்தான். அதுமட்டுமல்ல வகுப்பிலே ஒரு திரைச்சீலை போடப்பட்டு அப்பெண் உட்கார வைக்கப்பட்டாள். அப்பொழுதெல்லாம் பெண்களுக்கென்று கழிப்பறை, உணவு அறை இல்லை. காலையில் இருந்து மாலை வீடு வருகிறவரை அந்தப் பெண் தண்ணீர் கூட குடிப்பது இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் முத்துலெட்சுமி படித்தார். அந்த முத்துலெட்சுமிதான் வைத்தியராகி, சென்னையிலே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை நிறுவினார். அவர் ஆரம்பித்து வைத்த அவ்வை இல்லம் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. அரசியல் ரீதியாக உலகின் முதல் சட்டமன்ற பெண் துணைத்தலைவரும்  இவர்தான்.

இப்படியாக பெண்களின் ஒவ்வொரு படியும் மிகப்பெரிய போராட்டத்தோடும், மிகப்பெரிய துன்பத்தோடும் தான் நிகழ்ந்திருக்கிறது. பெண்கள் அவர்களுக்குரிய இடத்தில் வைப்பதற்கு ஆண் சமுதாயம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. நான் எனது தந்தையாரால் எனது தாயார் எப்படி நடத்தப்பட்டார் என்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். என்னுடைய தாயாருக்கு ஒரு வார்த்தை பேசுவதற்கு கூட அங்கு இடமில்லை. அப்பா சொன்னார் என்றால் அதைத்தான் அம்மா செயல்ப்படுத்துவார். இந்தச் சூழல் என்னை மிகவும் துன்புறுத்துகிறது. எந்தச் சமூகம் பெண்களுக்கு அதற்குரிய இடத்தை அளிக்கவில்லையோ, அந்தச் சமூகம் முன்னேறாது, உருப்படாது, விளங்காது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதனால்தான் பெண்கள் சார்பாக இருந்து எழுதுவது என்று முடிவெடுத்தேன். எனது 'சந்தியா' நாவல் அதைப்பற்றியது தான். சந்தியாவுக்கு கணவன் இல்லை. தோழன் இருப்பான். காதலன் இருப்பான். ஆனால் அவளுடைய வாழ்க்கை திருமணத்தில் முடியவில்லை. பெண்களுடைய  சிறகுகள் திருமணத்தில் அரியப்படுகின்றன அல்லது நீக்கப்படுகின்றன என்பது எனது கருத்து. திருமணமற்ற, இருவரும் இணைந்து வாழ்கின்ற வாழ்க்கையை நான் அடுத்த தலைமுறையினுடைய வாழ்க்கையாக ஏற்றுக்கொள்கிறேன். அப்படித்தான் நடக்கும். இப்போது நாம் குடும்பத்தில் இருந்தாலும் இன்னுமொரு 20, 30 ஆண்டுகளுக்குப் பிற்பாடு குடும்பம் என்ற அமைப்பு தகரும். தகர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குடும்பம் என்கிற அமைப்பு தகரும்போதுதான் பெண் பெண்ணாக இருக்க முடியும். ஒரு உயிரியாக இந்த சமூகத்தில் நிலைபெற முடியும் என்று நான் நம்புகிறேன். அதைத்தான் நான் என்னுடைய எழுத்துக்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

பெண்களிலே மோசமானவர்கள் இல்லையா என்று கேட்டால் இருக்கிறார்கள். பெண்களிலே ஆண்களைப் போல சில தவறான காரியங்கள்  செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்களா என்றால் இருக்கிறார்கள் தான். ஆனால் அது மிகவும் குறைவு. நூற்றுக்கு ஐந்து அல்லது பத்து வீதம் தான். பெரும்பாலான தவறுகளை சமூகத்தில் ஆண்கள் தான் செய்கிறார்கள். ஆகவேதான் பெண்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக அவர்களுக்கு எதிரான கருத்துக்களை சொல்லிவிடக் கூடாது என்பதில் நான் மிகவும் விளிப்பாக இருக்கிறேன். இப்போதுதான் அவர்கள் அவர்களுடைய இடத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் அவர்களை தடைசெய்து விடக்கூடாது என்பதில் நான் விளிப்பாக இருக்கிறேன்.

11) உங்கள் எழுத்துக்களுக்கு என்று ஏதாவது கொள்கைகள் இருக்கிறதா?

எழுத்து ஒரு கொள்கைதான். எழுத்துக்கு தனியாக ஒரு கொள்கை இருக்க வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. பொதுவாக ஏதேனும் ஒன்றை முன் நிறுத்தவோ, அல்லது ஏதேனும் ஒரு கருத்தை பிரச்சாரம் செய்யவோ தான் இந்த கவிதையோ அல்லது கதைகளோ பிறக்கின்றன. ஆக கொள்கை இல்லாமல் எழுத்து இருப்பதற்கு சாத்தியமே இல்லை. கொள்கை இல்லாதது என்பது கூட ஒரு கொள்கைதானே. எனது எழுத்துக்கள் கொள்கையோடுதான் இருக்கின்றன. அந்தக் கொள்கை பொதுவாக மனிதம் சார்ந்தவை. பெண்ணியம் சார்ந்தவை. ஒடுக்கப்பட்ட மக்கள் சாந்தவையாகத்தான் இருக்கின்றன. அவர்கள் சார்ந்த விடயமாக எனது எழுத்துக்கள் இருக்கின்றன.

12) புதுவை எழுத்தாளர்களுடைய படைப்புக்களைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருந்தீர்கள். அம்முயற்சி பற்றி.....

என்னுடைய பிரதேசம் சார்ந்த கதைகளைத் தொகுக்க வேண்டும் என்று ஒரு சந்தர்ப்பத்திலே எனக்கு ஒரு ஆசை பிறந்தது. ஏனென்றால் தமிழில் முதலில் சிறுகதை பிறந்த இடம் புதுச்சேரிதான். தமிழில் முதல் சிறுகதை எழுதியவர் என்றவகையில் இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. இரண்டுபேரைச் சொல்லுவார்கள். பாரதியாருடைய கதைதான் முதல் சிறுகதை என்று சொல்கிற ஒரு சிந்தனைப்போக்கு உண்டு. அல்லது .வே.சு.ஐயருடைய குளத்தங்கரை அரசமரம் தான் தமிழில் முதல் சிறுகதை என்று சொல்கிற ஒரு கருத்துப் போக்கும் உண்டு. எதுவாக இருந்தாலும் அது இரண்டுமே புதுச்சேரியில் இருந்துதான் எழுதப்பட்டது. பாரதியாரும், .வே.சு.ஐயரும் நாடு கடத்தப்பட்டு புதுச்சேரியில் தலைமறைவாக வாழ்ந்த அந்த காலப்பகுதியில்தான் இந்த சிறுகதைகளை எழுதினார்கள். என் ஊரைப் பற்றிய இந்த விடயம் எனக்கு ஒரு சிறப்பான விசயமாகத் தோன்றியது. ஆகவேதான் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர்களுடைய சிறுகதைகளைத் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டு வந்தேன்.

13) உங்களுடைய இந்த தொகுப்பு முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறீர்களா?

இல்லை. பெரும்பாலும் புதுச்சேரியைச் சேர்ந்த எல்லோருடைய சிறுகதைகளையும் சேர்த்துக்கொண்டு விட்டேன். அவை எத்தனை தூரம் சிறுகதைகளாக இருக்கின்றன என்பது பற்றி நான் இப்போது யோசிக்கவேண்டிய விடயமாக மீண்டும் எனக்குத் தோன்றுகிறது. இப்போதைக்கு அப்பணியைத் தொடர்வதாக இல்லை. தற்சமயம் புதுச்சேரியின் வரலாறு குறித்து எழுதவேண்டும் என்ற சிந்தனையில் இருக்கிறேன். அதுதவிர ஒரு நாவல் ஒன்றை எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். இப்படியான நிறைய திருப்பங்களும், தடைகளும் ஏற்பட்டிருக்கிறது. தற்போது நிறைய நல்ல புத்தகங்களும், விமர்சன நூல்களும் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் படிக்க வேண்டும். அவற்றையெல்லாம் எப்போது படித்து முடிப்பேன் என்று மலைப்பாக இருக்கிறது. நல்ல புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. அதற்கெல்லாம் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் யாராவது அந்த தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டால் அது நல்லது. அவர்கள் யாராவது அதை முயற்சி செய்வார்கள் என்று நம்புகிறேன்.

14) பாலியல் சார்ந்த சில விடயங்களையும், தமது உணர்வுகளையும் எதுவித தயக்கமும் இன்றி தமது படைப்புக்களில் வெளிப்படுத்துகின்ற சில பெண் எழுத்தாளர்கள் இந்தியாவில் பல எழுத்தாளர்களாலும், ஊடகங்களாலும் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிறார்கள். இது குறித்து.....

அப்படி எழுதுகின்ற பெண்களை தாக்குபவர்கள் முதலாம் நம்பர் மூடர்கள் என்றே நான் கருதுகிறேன். அவர்கள் அயோக்கியர்களும் கூட. ஒரு கையைப் பற்றி எழுதுகின்ற போது கையை கை என்றுதான் கூறமுடியும். கண்ணைப் பற்றிச் சொல்லுகின்றபோது கண் என்றுதான் சொல்ல வேண்டும். உடம்பைப் பற்றி எழுதுகிறபோது உடம்பு என்றுதான் சொல்ல வேண்டும். உடைகளைப் பற்றியும், யோனிகளைப் பற்றியும் எழுதுகிறபோது அதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். எந்த வார்த்தைகளைக் கொண்டு ஆண் சமூகம் அவர்களை இழிவு செய்ததோ, எந்த உறுப்பைக் கொண்டு அந்த ஆண்சமூகம் அவர்களை இழிவு செய்ததோ அதைக் கொண்டுதான் அவர்கள் மேலேறி வருகிறார்கள். எப்படி ஜாதியின் காரணமாக, ஜாதியின் பெயரைச் சொல்லி புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு அந்த ஜாதியின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறதோ அதைப்போலவே எதன் காரணமாக பெண்கள் இழிவுபடுத்தப்பட்டார்களோ அதைக் காரணமாகக் கொண்டே, அதையே ஆயுதமாக மாற்றுகிறார்கள் பெண்கள்.

இன்னும் கேட்டால் ஒருபடி மேலே சென்று நான் சொல்கிறேன், தமிழ் நாட்டு இலக்கியத்தில் ஒரு தேக்கம் ஏற்பட்ட காலகட்டத்தில் அதாவது 80, 90களில் அந்த தேக்கத்தை உடைத்து கவிதையை முன்னெடுத்துச் சென்றவர்கள் தமிழ் கவிஞர்கள் தான். அதிலும் குறிப்பாக குட்டிரேவதி, மாலதிமைத்ரி, சுகிர்தராணி என்று இப்படி ஏழெட்டுப் பெண்கவிஞர்கள் உருவானார்கள். அவர்கள் தமிழ் கவிதைக்கு செய்த தொண்டு மிகப் பெரியது. மிகப்பாரியது. ஆகவே அவர்களை இழிவு செய்கின்ற ஒரு மூடத்தனமான கொள்கை, போக்கு இன்றும் நமது தமிழ்நாட்டில் இருக்கிறது. இதெல்லாம் எழுத்துத் துறையில் நாம் சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. எனக்கு இதில் உடன்பாடில்லை. ஒரு மூடுமந்திரம்போல இந்த வார்த்தை எழுதக்கூடாது. இந்த வார்த்தை எல்லாம் எழுத வேண்டும் என்று சொல்வதெல்லாம் தட்டாம்பிள்ளைத்தனம். இந்த தட்டாம்பிள்ளைத்தனத்தை நான் ஒருபோதும் ஏற்பதில்லை. இலக்கியத்தில் அதிகாரம் செலுத்துவது என்பது யாருக்கும் வழமையில்லை. எந்த அதிகாரத்திற்கும் பெண்கள் அடிபணிய வேண்டும் என்று அவசியமும் இல்லை.

அவர்கள் தங்களுடைய கவிதைகள் மூலமாக அவர்களுக்கான உலகத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான மனவெளியை உருவாக்குகிறார்கள். அண்மைக்காலமாகவே நிறைய கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். தமிழ்நதி அதில் முக்கியமான ஒரு கவிஞர். தழிழச்சி தங்கபாண்டியன் எழுதுகிறார். இப்படி புதிதுபுதிதாக நல்ல கவிஞர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் அப்படி எழுதுகிறார்கள் என்று சொல்லி அவர்களை புறக்கணிப்பதும், இழிவு செய்வதும் என்பது திரும்பவும் ஒரு ஆணாதிக்கப் போக்கு இலக்கியத்தில் உருவாவதற்குதான் சமம். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

15)  இப்பொழுது என்ன எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்?

ஒரு நாவல் எழுதிக்கொண்டு இருக்கிறேன். நீண்டகாலமாக நாவல் எதையும் நான் எழுதவில்லை. நீண்டகாலமாக என் மனதில் உள்ள ஒரு விடயத்தை இப்பொழுது எழுதிக்கொண்டு இருக்கிறேன். அது மிகவும் சிறப்பாக வரும் என்று நம்புகிறேன். அதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஒரு சாபம் காரணமாக ஒரு ஆண் பெண்ணாக மாறிவிடுகிறான். பெண்ணாக மாறிய நிலையில் இன்னொருவனுடன் சென்று வாழும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே அவன் ஆணாக இருக்கும்போது அவனை திருமணம் செய்த மனைவி அவனைத் தேடிக்கொண்டு வருகிறாள். இப்பொழுது அவளுடைய கணவன் பெண்ணாக இருக்கிறான். இப்பொழுது அவனுக்கு ஒருவரால் தீர்வு கொடுக்கப்படுகிறது. 'இது கௌரியின் சாபம். அதை மாற்றுவதற்கான சக்தி எனக்கில்லை. ஆகவே நான் அதற்கு ஒரு மாற்றுவழி சொல்கிறேன். நீ ஒரு மாதம் ஆணாகவும், ஒரு மாதம் பெண்ணாகவும் இருந்துகொள். ஆணாக இருக்கும்போது இந்தப் பெண்ணுடன் வாழ்ந்துகொள். பெண்ணாக இருக்கும்போது இந்த ஆணுடன் வாழ்ந்துகொள்' என்று தீர்வு கூறப்படுகிறது. அப்படி வாழ நேர்ந்த ஒரு இளைஞனின் மனமும், உடலும் எவ்வாறு இருக்கும்இதுதான் நாவலின் அடிப்படையான அம்சம். கடைசியாக கதையின் இறுதியில் சாபவிமோசனம் என்று ஒன்று வருகிறது. அப்போது அந்த இளைஞனிடம் கேட்கப்படுகிறது 'நீ ஆணாக இருக்க விரும்புகிறாயா? அல்லது பெண்ணாக இருக்க விரும்புகிறாயா? என்று. அதற்கு அவன் 'நான் பெண்ணாகவே இருந்துவிடுகிறேன்' என்று சொல்லுவான்.

இதுதான் நாவலினுடைய கதை. இதற்கு பின்னணியாக இன்னொரு கதையும் உண்டு. அதையும் சேர்த்துத்தான் நாவலாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

16) உங்களுடைய கதை, என்னை இன்னொரு கேள்வியை கேட்கத் தூண்டுகிறது. அதாவது அமானுஷ்யக் கதைகள் எழுதுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆமாம். என்னுடைய முதல் முயற்சி இது. நான் இதுமாதிரியான பரிசோதனை முயற்சிகள் செய்வது மிகவும் குறைவு. வாழ்க்கையில் இருக்கிற யதார்த்தம்தான் என்னுடைய இலக்கியத்தினுடைய அடிப்படையான அம்சமாக இருக்கிறது. 'போர்ஷே' யினுடைய கருத்தும் இதுதான். உலகம் முழுவதும் மாந்திரீக யதார்த்தம் எழுதுகிற பல எழுத்தாளர்கள் அதைப்பற்றி சொல்லியிருக்கிறார்கள். அதாவது யதார்த்தத்தை வேறு கோணத்தில் இருந்தும், வேறு பகைப்புலத்தில் இருந்தும் பார்ப்பது. அப்படிப் பார்க்கிறபொழுது உதாரணத்திற்கு மாந்திரீகக் கதைகள், இதுபோன்ற அமானுஷ்யக் கதைகள் மூலமாக மனிதனை நெருங்கிப் புரிந்துகொள்ள முடியும் என்பது இலக்கிய ரீதியாக கண்டுபிடித்திருக்கிறார்கள். 'போர்ஷே', மாப்பசான் போன்றவர்கள் அப்படித்தான் முயற்சிகள் செய்திருக்கிறார்கள். ஆக உலகம் முழுவதும் இப்படியான முயற்சிகள் தான் நடந்திருக்கிறது. எப்பொழுதுமே இலக்கியத்தில் இதுபோன்ற பரிசோதனை முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கும். அப்படி நடந்தால்தான் இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். இலக்கியம் தேங்கிய குட்டையாக ஆகிவிடக்கூடாது. அதை வளர்த்தெடுக்க வேண்டுமானால் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் தேவை. அந்தவகையில் தான் இதுபோன்ற அமானுஷ்ய கதைகள் தேவைப்படுகின்றன. அமானுஷ்யம் என்பது அமானுஷ்யத்திற்காக மட்டுமல்ல. யதார்த்தத்தை மேலும் நெருங்கி தெரிந்து கொள்வதற்கும் துணை செய்யும்.

17) நவீன இலக்கியக் கொள்கைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

முற்றிலுமாக ஆதரிக்கிறேன். எழுத்துக் கொள்கைகள் என்பது காலந்தோறும் புதிது புதுதாக வந்துகொண்டிருக்கிற விசயம் தான். தமிழில் 19 ஆம் நூற்றாண்டுக்கு முன் சிறுகதை என்ற வடிவமே இல்லை. புதுக்கவிதை என்ற வடிவமும் இல்லை. நாவல் என்கிற புதினம் கூட இல்லை. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் மேலைநாடுகளில் இருந்துதான் இந்த புதிய வடிவங்களைப் பெற்றோம். அவ்வாறுதான் இந்த இலக்கியச் சிந்தனைகளும், கொள்கைகளும் மேல்நாடுகளில் இருந்துதான் வந்துகொண்டிருக்கின்றன. மாக்சிசம், நவீனத்துவம், பின்னவீனத்துவம் என்று வருகிறது. இப்படிப் பல்வேறு வகையான சிந்தனைகள், கொள்கைகள், இசங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

அவையெல்லாவற்றையும் நாம் காதுகொடுத்துக் கவனிக்க வேண்டும். உலகம் முழுவதுமே மனித குலத்தை மேலும் நெருங்கி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் இந்த தத்துவங்கள். மனிதர்களை மென்மேலும் புரிந்துகொள்ளவும், மனிதர்களுடைய சிக்கல்களையும், மனிதர்களுடைய இருண்ட பக்கங்களையும் அதே சமயம் அவர்களுடைய நல்ல தன்மைகளையும் சேர்த்துத் தெரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாகத்தான் இவை இருக்கின்றன. இந்தக் கொள்கைகள் உலகம் முழுக்க பல நல்ல சிந்தனையாளர்களால் உருவாக்கப்படுகின்றன. அந்த சிந்தனைப் போக்குகளை நாம் உடனடியாகப் பிடித்துக்கொண்டு தமிழ் நிலத்திற்கேற்ப, தமிழ் சூழலுக்கு தகுந்தாற்போல வடிவமைத்து இலக்கியம் செய்தாக வேண்டும். அப்படிச் செய்தால்தான் நாம் உலகத்தோடு உலாவ முடியும். இல்லையென்றால் நாம் பின்தங்கி விடுவோம். ஆகவே உலகத்தினுடைய  நவீன சிந்தனைப் போக்குகளை நாம் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைப்பற்றி நிறைய படிக்க வேண்டும். ஆராய்ச்சி செய்யவேண்டும். இவையெல்லாம் சேர்ந்துதான் இலக்கிய முயற்சி என்பது.

18) தரமான படைப்பிலக்கியங்களை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கருதுகிறீர்களா?

இல்லை. அப்படி எனக்குத் தோன்றவில்லை. 10, 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த  வாசிப்பு பரப்பு இப்போது இன்னும் விரிவடைந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எல்லாக் காலத்திலும் ஆரோக்கியமான அடர்த்தியான அல்லது நல்ல இலக்கியத்திற்கான ஆதரவு என்பது மிகப்பெரிய அளவிலே இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. எப்பொழுதுமே மிகச் சிறந்த நாவல், மிகச் சிறந்த சிறுகதைத்தொகுப்பு, மிகச் சிறந்த கவிதைத்தொகுப்பு என்பது ஐநூறு  பிரதிகளுக்கு மேல் விற்றதாக வரலாறு இல்லை. ஒரு காலத்திலே இருநூறு, இருநூற்றைம்பதாக இருந்தது இப்போது ஐநூறாக உயர்ந்திருக்கிறதாக வைத்துக்கொள்ளலாம். நவீன நாடகத்துக்கான பார்வையாளர்களும் இந்த ஐநூறு பேர்தான். ஆக எந்த முற்போக்கான அல்லது நவீனமான விசயமாக இருந்தாலும் அதற்கான ஆதரவு என்பது பெருத்த அளவில் இந்த நாட்டிலே இருந்ததில்லை.

நல்ல ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு, இலக்கியம் சார்ந்த கூட்டத்திற்கு கூட இருநூறு, முந்னூறு பேர் வருவது என்பது பெரிய அளவாகத்தான் இருக்கிறது. இருநூறு பேர் வந்தாலே அது பெரிய மாநாடுதான். ஆக சூழல் அவ்வாறுதான் இருக்கிறது. ஆகவே வளர்ச்சி பின்தங்கிவிட்டது என்று கூறமுடியாது. வளர்ச்சி மேலோங்கவில்லை என்றுதான் சொல்லலாம். அதாவது ஐநூறு ஆயிரமாகவும், இரண்டாயிரமாகவும் பெருகினால் நல்ல விசயமாக இருக்கும். கேரளாவிலும், அல்லது வங்காளத்திலும் கூட படிப்பு என்பதில் எப்போதுமே வளர்ந்த மாநிலமாகவே இருக்கிறது. நல்ல தரமான விசயங்களை, தரமான சினிமாக்களை, கலை இலக்கிய ஆக்கங்களை வளர்க்கின்ற இனமாக அவர்கள் இருக்கிறார்கள். அந்தளவுக்கு தமிழ் தமிழ்நாட்டில் வளரவில்லை என்றாலும் கூட வருத்தப்படும் அளவுக்கோ அல்லது அவநம்பிக்கை கொள்ளும் அளவுக்கோ குறைந்துவிடவில்லை என்பதே ஆறுதலாகக் கொள்ளலாம்.

 


 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.