கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்

அகில்

அகில்: தமிழ் இலக்கிய உலகில் 'ஏர்வாடி ராதாகிருஷ்ணன்' என்று அறியப்படுகின்ற கவிஞர், எழுத்தாளர் நீங்கள். கிட்டத்தட்ட 80 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளீர்கள். உங்களது ஆரம்ப கால எழுத்து முயற்சி பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஏர்வாடிஎஸ்.இராதாகிருஷ்ணன்:
இயல்பாகவே
மனிதர்களுக்குத்தான் அறிந்ததை, அனுபவித்ததை, உணர்ந்ததை உள்ளூறும் எண்ணத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும் அதைப் பேசிப் பகிர்ந்து கொள்வார்கள் அல்லது எழுதிப் பரிமாறிக் கொள்வார்கள் எந்த பேச்சுக்கும் எழுத்துக்கும் ஏதோ ஒன்று இந்த சமூகத்திலிருந்து மனிதர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும் சாதாரணர்கள் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள் அல்லது  எதிலும் அவர்கள் பெற்றுக்கொள்வதுமில்லை, கற்றுத்தருவதுமில்லை ஆனால் அசாதாரணர்கள் அற்புதமாக அதைப் பேசித் தெரிவிக்கிறார்கள் அல்லது   எழுதிப் பதிவு செய்கிறார்கள் அப்படித்தான் நான் பார்த்ததை என்னைப் பாதித்ததை என்னில் பதிந்ததை எழுதிக் கொண்டிருக்கிறேன் பேசுகிறேன் ஏர்வாடி என்ற என் சொந்த ஊர் ஒரு சிற்றூர் சிறு கிராமம் வயதும் சின்ன வயது பள்ளிப் பருவம் எழுதி எங்கே அனுப்புவது எப்படி வெளிவரக் காண்பது என்றறியாத போது நான் புகுந்த கல்லூரி ஆண்டு மலர்களே எனக்குப் புகலிடமாயின  தொடக்கததிலேயே எதிர்ப்பு எங்கள் குடும்பத்தில் நான் தான் முதலில் கல்லூரிக்குப் போகிறேன் படிப்பைத் தவிர வேறு சிந்தனைகள் வரக்கூடாதென்பதில் என் தந்தை (இராணுவ அதிகாரி) கவனமாகவும், கண்டிப்பாகவும் இருந்தார் எனவே கல்லூரி மலர்களைத் தவிர வெளியே நான் வர வழியில்லாமற் போய்விட்டது படித்து முடித்து வேலைக்கு வந்த பின் (பாரத ஸ்டேட்பாங்க் அலுவலராக) கண்ணதாசன், கவிதை, முல்லைச்சரம், தமிழ்ப்பணி, கோமகள் போன்ற இதழ்களில் கவிதைகளும் அகில இந்திய வானொலியில் நாடகங்களும், அமுதசுரபி, கலைமகள் போன்ற இதழ்களில் சிறு கட்டுரைகளும், நேர்காணல்களும், சிறுகதைகளும் எழுதத் தெடங்கினேன் இந்த நேரத்தில் எனக்கு இரண்டு வில்லன்கள் முதலாமவர் மீண்டும் என் தந்தையார் நல்ல உத்யோகம் கிடைத்திருக்கிறது பணியில் கவனமாக இருந்து வங்கியில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்பது அவருடைய ஆதங்கம் அவர் ஒருபுறம் என்றால் என் எழுத்துக்குத் தடைபோட வங்கி நிர்வாகம் மறுபுறம் என்று என் அதிகாரிகள் எழுத்தை இரண்டாவது தொழிலாகக் கருதி  'ஒன்று வங்கியில் இரு அல்லது அகில இந்திய வானொலிக்கே போய்விடு' என மிரட்ட யாரைப்போலவும் புனைபெயர்களில் ஒளிந்து கொள்ளாமலேயே தந்தைத் திருப்திப்படுத்தியதோடு, வங்கியில் அப்போது என் அதிகாரிகளுக்கே தெரியாத வங்கிச் சுற்றறிக்கை ஒன்றை தேடித் தூசுதட்டிக் காட்டி, கலை இலக்கியம் தொடர்பான பணிகளில் வங்கிப்பணிக்கு இடையூறின்றி ஈடுபடலாம் என்பதை உணர்த்தி வங்கி மிரட்டலிலிருந்து தப்பித்து எழுத்தாளனாகவே, மிக அதிகமாக வெளியில் தெரிந்த ராதாகிருஷ்ணன் ஆனேன் மிக்க கவனமாக நான் செய்த இந்த இரட்டைக் குதிரை சவாரியை என் பெற்றோர்களும், வங்கியும் மகிழ்ச்சியோடு ரசித்தது. எழுத்து எனக்குக் கொடுத்த மக்கள் தொடர்பு வங்கிப் பணிகளையும் நான் சிறப்பாகச் செய்ய உதவிற்று என்னுடைய முதல் சிறுகதையே எனக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது அதைப் பிரபலமான வார இதழ் ஒன்றுக்கு அனுப்பினேன் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்தித் திருப்பி அனுப்பிவிட்டார்கள் அதை அமுதசுரபி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு அனுப்பியதில் முதற்பரிசு கிடைத்தது அந்த உற்சாகத்தில் எழுதிக் கட்டி வைத்திருந்த கதைகளையெல்லாம் திருத்திச் சரிசெய்து இதழ்களுக்கு அனுப்பிப் பிரசுரமானவற்றையும் வானொலியில் வாசிப்பதையும் தொகுத்து நூலாக்கியதில் 'திருணமங்கள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல' என்ற அச்சிறுகதைத் தொகுதி தமிழ் வளர்ச்சித் துறையின் அவ்வாண்டு வெளியான சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான முதற்பரிசைப் பெற்றது முதல் அங்கீகாரம் அது தமிழ்நாடு அரசு வழங்கிய அந்த முதற்பரிசை மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து பெற்றேன் இப்படித்தான் கவிஞனாக, சிறுகதையாசிரியராக நாடக ஆசிரியராக கட்டுரையாளராக எழுத்தின் எல்லாத் தளங்களிலும் என் தொடக்க கால எழுத்து வாழ்க்கை தொடங்கியது.

அகில்: உங்கள் பெயருக்கு முன்னால் 'ஏர்வாடி' என்ற அடைமொழியை பயன்படுத்துகிறீர்கள். அதுபற்றி....?

ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்: 'ஏர்வாடி' என்பது வேறொன்றுமல்ல நெல்லை மாவட்டத்தில் இருக்கிற ஒரு அழகிய சிறுகிராமம் இஸ்லாமியர்கள் நிறைந்த ஊர் இராதாகிருஷ்ணன் என்று ஆயிரம் பேர் இருக்கலாம் தனியாக உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள பெயருடன் ஊரைச் சேத்துக் கொள்ளுங்கள் என்று அகில இந்திய வானொலி அதிகாரி நண்பர் திரு. டி.வி.ஆர். சாரி அவர்கள் தான் அந்தப் பெயரை வானொலியில் அறிவித்து அறிமுகம் செய்தார் தமிழகத்தில் 4 ஏர்வாடிகள் உள்ளனவாம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில்தான் மனநலக் காப்பகங்கள் அவ்வூர் பள்ளிவாசலைச் சுற்றி நிரம்ப இருக்கின்றன நெல்லை எர்வாடிதான் நான் பிறந்த ஏர்வாடி புகழ்வாய்ந்த பல பெருமக்களால் ஊர் பெருமை பெற்ற வரிசையில் குன்னக்குடி, குன்றக்குடி, வலையப்பட்டி, நாமகிரிப்பேட்டை, பட்டுக்கோட்டை, நாமக்கல், ஏர்வாடி என்று புகழ்பெற்ற ஊர்களின் வரிசையில் என்னாலும் ஏர்வாடி பெருமை பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி.

அகில்: கவிதை உறவு என்ற சஞ்சிகையை கடந்த 41 வருடங்களாக நடத்திவருகிறீர்கள். சஞ்சிகையொன்றை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்குள் உருவானது?

ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்: 1972ஆம் ஆண்டு, என் வாழ்க்கையில் பல திருப்பங்களை ஏற்படுத்திய ஆண்டு எனலாம் திருவல்லிக்கேணியில் பிரம்மச்சாரியாக நான் தங்கியிருந்த நேரம் எப்போதும் நண்பர்களால் நிரம்பி வழியும் என் தனியறைக்கு ஒருநாள் கவிஞர் பெரியவர் வி.மு. உலகநாதன், கவிப்பேரரசு அருமைநாதன் ஆகிய இருவரும் வந்திருந்தார்கள் மே மாதம் 18 என் பிறந்தநாள்.  'கவிஞர்கள் சேர்ந்து எங்காவது விருந்துண்டு மகிழலாமே' என்ற போது விருந்துதான் வழக்கமானதாயிற்றே! புதுமையாக ஏதாவது...? என்றார்கள் ஒரு இலக்கிய அமைப்பைத் தொடங்கலாம் அதுவும் வழக்கமான இலக்குகளோடு என்றில்லாமல் இலக்கிய நட்பியக்கமாக அமைத்துக் கொண்டாலென்ன என்று பேசிக் கொண்டிருக்கும்போது 'கவிதை உறவு' என்ற பெயர் எப்படி? என்று நான் கேட்டேன் அற்புதமான கருத்தென்று ஆமோதிக்கப்பட்டது திராவிட இயக்கங்கள் பாவேந்தரைத் தூக்கிக் கொண்டாடுகிற அளவுக்கு பாரதியைக் கொண்டாடுவதில்லை பாவம் பாரதி பார்ப்பனர் வேறு பாரதிக்கென்று சில அமைப்புகளும் பாவேந்தருக்கென்று சில அமைப்புகளும் இயங்கிக் கொண்டிருந்த நேரம் அது... அவர்களுடைய நிக்ழச்சிக்கு இவர்கள் போகமாட்டார்கள் இவர்களுடைய நிகழ்ச்சிக்கு அவர்கள் வரமாட்டார்கள் என்ற நிலைமை வேறு எனக்கு இரு சாராருமே நண்பர்கள் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறவன் நான் எனவே கவிதை உறவு இவ்விரு திருக்கூட்டத்தினரையும் சேர்க்கும் அதற்குத் தகுதியானவர் நீங்கள்தான் என்று அவர்கள் எனக்கு அளித்த உற்சாகத்தில் மே 18 அன்று வில்லிசை வேந்தர் கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்கள் விளக்கேற்றித் தொடங்கிவைத்த மிக எளிமையாக ஏற்றப்பட்ட அந்த நட்புத் தீபம் இன்னமும் அணையாமல் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது கவிதை உறவினர்க்குள் அரசியல் இல்லை, நிறமில்லை, பேதமில்லை பாரதி சுராஜ், கலைமாமணி விக்கிரமன், பாரதி காவலர் ராமமூர்த்தி, பெருங்கவிக்கோ வா.முசேதுராமன், பொன்னடியார், கோவேந்தன், போன்ற பெருமக்களின் பேராதரவு அவரவணைப்பு ஆகிய பலத்தோடும்  மனித நேயம் மாண்புமிகு வாழ்க்கை மண்ணில் எவர்க்கும் அஞ்சாமை என்கிற இலக்கோடும் பயணித்துக் கொண்டிருக்கிறோம் இன்றளவும் எங்கள் அமைப்பு ஆர்வத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறது கவிதை உறவு இதழ் தொடக்க காலத்தில் தனிச்சுற்றேடாக வெளிவந்தது1987ல் முறைப்படி அதைப் பதிவு செய்து இன்றுவரை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம் இதில் தமிழகத்தின் முன்னணிக் கவிஞர்களும் முளைவிடும் கவிஞர்களுமாய் கவிதை மணம் பரப்பி வருகிறார்கள் ஆண்டுதோறும் தவறாமல் சென்னை வாணிமகாலில் ஒரு கவிதைத் திருவிழாவாக அரங்கம் நிறைந்து எமது ஆண்டு விழாக்கள் நடைபெற்றுவருவதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும் கவிதை, எழுத்து என்ற இலக்கிய வரலாற்றில் எழுத்து, மணிக்கொடி, கவிதாமண்டலம், வானம்பாடி போன்ற இயக்கங்களோடு வைத்து எண்ணத்தக்க வகையில் கவிதை உறவும் அமைந்துள்ளது இதனைக் 'கவிதை உறவுக் காலம்' என்றும் தமிழ் இலக்கிய வரலாறு பதிவு செய்து கொண்டும் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக ஒரு கவிதைச் சிற்றிதழ் வெளிவருவது சாதனை மட்டுமல்ல் சத்தியமாக ஒரு சோதனையும்கூட.

அகில்: தமது ஆக்கங்களை, பதிவுகளை உடனுக்குடன் முகநூல்கள், இணையத்தளங்கள் வாயிலாக வெளியிடக்கூடிய வசதி வாய்ப்புக்கள் நிறைந்த இன்றைய கணனியுகத்தில் சஞ்சிகை ஒன்றை தொடர்ந்து வெளிக்கொண்டுவருவதில் உள்ள சாத்தியப்பாடு எத்தகையது?

ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்: காகிதத்தின் இடத்தை எந்தக் காலமாற்றமும் களவு கொண்டுவிட முடியாது வலைத்தளங்கள், வலைப்பூக்கள், இணையம் என்று எத்துணைப் புதிய கனபரிமாணங்கள் வந்தாலும் அமர்ந்து வாசிக்க, படுத்துக் கொண்டே படிக்க பயணத்தில் பொழுதுபோக்க, பூங்காவில் பார்க்க என்ற புத்தகங்கள் தமக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன ஆண்டுக்கு ஆண்டு உலகெங்கும் புத்தக வெளியீடுகளும் புத்தக விற்பனையும் பெருகிக் கொண்டேதான் இருக்கிறது இதழ்களை இணையங்களில் படித்தாலும் கையிலெடுத்துப் படிப்பதைப் போன்ற நிறைவுக்கு நிகரில்லை காகிதங்களில் வெளியாகும் இதழ்களின் வரத்து குறையவே குறையாது மேலும் சிற்றிதழ்கள் என்ற செல்லமாக அழைக்கப்படுகிற சீரிதழ்கள் சுயமாகச் சிந்திக்கின்றன விளம்பரங்களுக்காகச் சோரம் போவதில்லை விற்பனையைப் பெருக்கிக்கொள்ள சினிமா, அரசியல் என்று மலினமாவதில்லை துணிச்சலாக எழுதுகிறார்கள் தெளிவாக இருக்கிறார்கள் புதியவர்களுக்கும் பாதையமைத்துத் தருகிறார்கள் இன்றைக்குத் திரைப்பாடலாசிரியர்கள் என்கிற திறனும், புகழும் பெற்றுள்ள சில இளைஞர்கள் கவிதை உறவு வளர்த்த கவிஞர்கள் என்கிற நிறைவு எனக்குண்டு வெற்றிப்படங்களை இயக்கிய பிரபலமான இயக்குநர் ஒருவர் கூட்டத்தில் நான் அமர்ந்திருப்பதை அறியாமலேயே தன் முதல் எழுத்து ஒரு கவிதை அது கவிதை உறவில்தான் வெளியானது, அதுதான் தனக்கு முதல் நம்பிக்கையை வார்த்தது என்று ஒரு கூட்டத்தில் பேசியபோது ஒரு தாயின் மகிழ்வே என் மனம் முழுதும் வியாபித்தது எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் ஒரு கவிதை உறவு நிகழ்ச்சியில் 'தாயுள்ளம் மிக்கவர் ஏர்வாடி தட்டிக்கொடுத்து பலரை வளர்த்து வருவதால் பலர் வளர்ந்துள்ளனர்' என வாழ்த்தியுள்ளார்.  'சக கலைஞர்களை வளர்ப்பதில் கலைவாணர் என்.எஸ்.கே. காட்டிய அதே ஆர்வத்தை புதிய கவிஞர்களை வளர்ப்பதில் காடுகிறவர்கள் கவிஞர் பொன்னடியாரும், ஏர்வாடியாரும் தான்' என்று காப்பியக் கவிஞர் வாலி அவர்கள் கவிதை உறவு ஆண்டு விழாவில் பாராட்டியிருக்கிறார் மூத்த கவிஞர் கண்ணதாசன் முதல் நா. முத்துக்குமார் வரை கவிதை உறவு அமைப்பின் விழாக்களில் கலந்து கொண்டும் பாராட்டியுமுள்ளனர் மாமேருவாக மேலோங்கியிருந்தபோதும் மற்றெல்லாக் கவிஞர்களையும் மதிக்கிற மாண்பு அன்று கவியரசு கண்ணதாசன் அவர்களிடம் இருந்தது அவர் நடத்திய கண்ணதாசன் இதழில் இன்றைய பிரபலங்கள் பலர் எழுதி வளர்ந்தோம் என்பது எத்துணை பேருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ எனக்கிருக்கிறது கண்ணதாசன் மறைவுக்குப் பிறகு அவருடன் அவருடைய இதழும் நினைவில் மட்டுமே தங்கியிருக்க அவரைப்போலவே அந்த இதழ்ப்பணியை இம்மியளவேனும் தொடரலாமே என்பதுதான் கவிதை உறவு இதழின் கனவு கவிதை உறவு இதழில் தம் கவிதைகள் வெளிவருவதை இன்றைய கவிஞர்கள் பலரும் விரும்புகின்றனர் கவிதை உறவு மரபுக்கும் புதிதுக்கும் பாலமாகவும் விளங்குகிறது கவிதை என்பது கவிதையாக இருந்தால் போதும்.

அகில்: 'கவிதை உறவு' என்ற இலக்கிய அமைப்பின் செயற்பாடுகள் எத்தகையன?

ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்: 'கவிதை உறவு' பெயரளவில் பெயர் கொண்ட அமைப்பன்று விளம்பரம் விரும்பாமலேயே அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி, யாருடைய ஆட்படுத்தலுக்கும் உள்ளாகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது தொடர்ந்து இதழ் வெளியாகிக் கொண்டிருக்கிறது இரண்'டுமாதமாக நான் கனடாவில் இருக்கிறேன் இரு மாத இதழ்களும் வழக்கமான பொலிவோடும், பகுதிகளோடும் வெளிவந்து கொண்டிருக்கிறது எங்களுடைய கவிதை வட்டம் மிகுந்த ஈடுபாடு கொண்ட வட்டம் கவிஞர்கள் தமிழ்இயலன், பாளை மாணிக்கம், தொலைபேசி மீரான், கணபதி சுப்பிரமணியம், இளந்திரையன், டாக்டர் சிதம்பர நடராசன், கருமலைத் தமிழாழன், வேலூர் . நாராயணன், பேராசிரியர் இரா. மோகன், ஜனனி ரமேமஷ் போன்ற நண்பர்கள் எதையும் எதிர்பார்க்காமல் தமிழுக்கு எதையும் செய்யும் நண்பர்களாக உடனிருக்கிறார்கள் ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு வகைக்கு 3 பரிசுகள் ரூ.5000, 3000, 2000 என்று பத்து வகைகளில் ரூ.1 லட்சம் பரிசாக வழங்குகிறோம் கனடாவிலிருந்து எழுத்தாளர் அகில், கவிஞர் புகாரி போன்றவர்கள் இப்பரிசுகளைப் பெற்றுள்ளார்கள் இப்பரிசுகளை திருவாளர் மாஃபா பாண்டியராஜன் ஊர்வசி சோப் நிறுவனம், திரிசக்தி சுந்தர்ராமன், ஆலிம் முகமது சாலிஹ் டிரஸ்ட் சார்பில் சேகு ஜமாலுதீன் மற்றும் என் துணைவியார் திருமதி சிதம்பரம்மாள் இராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்குகிறார்கள் சிறந்த கவிஞர் ஒருவருக்கு விக்கிரமன் விருதும், பொது வாழ்க்கையில் சிறந்த இருவருக்கு மனிதநேய மாமணி விருதும் வளரும் சிறந்த கவிஞர் இருவருக்கு கவிதைச் செல்வர் விருதும் வழங்குகிறோம் மாதந்தோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கவிதை இரவு நிகழ்ச்சியில் முன்னரே வழங்கப்படும் தலைப்புகளில் கவிஞர்கள் கவிதை பாடுவார்கள் சிறந்த கவிதைகள் கவிதை உறவு இதழில் வெளியிடப்பெறும் தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருதுடன் எனக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.1லட்சத்துட்ன் தொடங்கப்பட்ட கவிதை உறவு சாரிடபிள் டிரஸ்ட் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குகிறது தொண்டுள்ளம் வாய்க்கப்பெற்ற சென்னை மருத்துவர்கள் உதவியோடு கிராமங்களில் மருத்துவ முகாம்கள், கிராமம்தோறும் பாரதி, கிராமக் கவியரங்குகள் நடத்துகிறோம் கவிஞர்கள் பாட்டும் எழுதவேண்டும், சமூகத்துக்காகப் பாடும்படவேண்டும் இதுதான் கவிதை உறவின் நோக்கம்.

அகில்:  நீங்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களது முதலாவது இலக்கிய பயணம்... அதன் அநுபவம் பற்றி எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?

ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்: வெளிநாட்டுப் பயணமென்பது 1982வரை எனக்கு வெறும் கனவாகவே இருந்தது அலுவலகத்தில் விடுப்பு கிடைப்பதிருக்கட்டும், அனுமதியும் கிடைக்க வேண்டும் போதாக்குறைக்கு சினிமா, அரசியல் என்கிற பெயரில் வெளிச்சம் வேண்டும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பெரிய 'நெட்வொர்க்கிங்' வேண்டும் இவையெல்லாம் இல்லாத, விரும்பாத, ஆர்வமில்லாத நான் எங்கு போவது? இருந்தாலும், ஒரு அழைப்பு வந்தது சான்பிரான்சிஸ்கோவில் நடந்த 5ஆவது உலகக் கவிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள கவியரசு கண்ணதாசன், டாக்டர் கிருஷ்ண சீனிவாசன், நீதியரசர் டாக்டர் மோகன், டாக்டர் ஒளவை நடராசன், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், டாக்டர் செய்யது அமிருதீன் ஆகிய பெருங்கவிஞர்களோடும,; அறிஞர்களோடும் எனக்கும் ஒரு அழைப்பு வந்தது உலகக் கவிஞர்கள் அமைப்பும், ஐக்கிய நாடுகள் சபையின் கலாச் சாரப் பிரிவும் இணைந்து நடத்திய மாபெரும் நிகழ்ச்சி அது அழைப்பே எனக்கு ஆயிரமாயிரம் பொன்னாடைகளைப் போர்த்தி மகுடம் சூட்டியது போலிருந்தது அழைக்கப்பட்டவர்களை தமிழ்நாடு அரசும் அவரவர்கள் பணியாற்றும் அமைப்புகளும் விமானச் செலவு தந்து அனுப்ப ஏற்பாடு செய்திருந்தது கல்லெறிந்து பார்ப்போம் மாங்காய் விழுந்தால் மகிழ்ச்சிதானே என்று வங்கிக்கு அந்த அழைப்பின் படியை இணைத்து ஒரு கடிதம் எழுதினேன்.  'விளயாட்டு வீரர்கள் ஒருநிறுவனத்துக்காக விளையாடிப் புகழ் கொணர்வதைப் போல ஒரு இலக்கியவாணர்கூட தாம் பணியாற்றும் நிறுவனத்துக்கும் பெருமை சேர்க்க முடியும் கவிஞர் ஏர்வாடி என்றால் ஸ்டேட் பாங்குக்கு பெருமைதானே!' என்று எழுத, அதைத் தம்முடைய கூடுதல் அழுத்தத்தோடு கூடிய பரிந்துரையுடன் என்மீது மாறாத அன்பு கொண்ட எங்கள் வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் திரு கே.எஸ்.டி. பாணி அவர்கள் மைய அலுவலகத்திற்கு அனுப்ப நேரம் கூடியிருந்தது போலும் வங்கித் தலைவர் அதை  அனுமதித்ததோடு, இது இராதாகிருஷ்ணனுக்காக வழங்கப்படுகிற சிறப்புச் சலுகை, வரும் காலங்களில் இதை முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடாது என்று கவனமாகக் குறிப்பிட்டிருந்தது இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒரு இலக்கியவாணர் பெற்ற சிறப்பென்றால் அது எனக்காக மட்டுமே என்ற பெருமை எனக்குண்டு அதேபோல தமிழ்நாடு அரசு எனக்கு கலைமாமணி விருது அளித்தபோது இந்து பத்திரிகையில் என் படத்தோடு ஒரு விளம்பரம் போட்டுப் பாராட்டியது ஸ்டேட் வங்கி இதற்கெல்லாம் நல்ல கவிஞராக இருப்பது மட்டும் முக்கியமல்ல கவிஞர் நல்லவராக இருக்க வேண்டும் என்பதுதான் ரகசியம் உலகக் கவியரங்கில் ஆங்கிலத்தில் ஒரு அற்புதமான கவிதைபாடி "My Heaven" என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டு (வெளியிட்டவர் டாக்டர் ஒளவை நடராசன்) மகிழ்ச்சி மழையில் நனைந்து ஈரம்சொட்டச் சொட்ட சென்னை திரும்பியதும் பத்திரிகைகளிலெல்லாம் பேட்டிகள் வெளியாகின இப்பயணம் என்னுடைய முதல் வெளிநாட்டுப் பயணம் மட்டுமல்ல முதல் விமானப் பயணமும்கூட ஒரே ஒரு வருத்தம் மிச்சிகனிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டிய கவியரசர் உடல் நலக்குறைவால் வரவில்லை தமிழ்நாட்டுக்குத் திரும்பி வரவுமில்லை சொர்க்கத்திற்கு அவர் அங்கிருந்தே சென்றுவிட்டார் அடுத்து அதே மாதத்தில் இலங்கையில் நடந்த இந்து மாநாட்டில் கலந்து கொள்ள அழைத்திருந்தார்கள் சென்று வந்தேன் அதற்குப் பிறகு அடிக்கடி எனக்குச் சிறகு முளைக்கும், பறந்து கொண்டிருக்கிறேன்.

அகில்: நாடகங்கள் பல எழுதியுள்ளீர்கள். இயக்கி, நடித்த அனுபவம் உண்டா?

ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்: கவிஞனாகத் தொடங்கினாலும் என் எழுத்து முயற்சியில் எனக்கு எல்லா வகைகளும் வரும் வானொலி நாடகம் எழுதுவதில் மிகுந்த ஆர்வமுண்டு காரணம் வானொலி நிலையம் அதற்கான சன்மானத்தை வளமாக வழங்கும் அப்போது நாடகத்துறைக்கு பொறுப்பதிகாரியாக இருந்த திரு. சுகி சுப்பிரமணியம் அவர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும் வானொலி நாடகக் கலையை நுட்பத்தையும் அவரும் கலைமாமணி பட்டுக்கோட்டை குமாரவேலு அவர்களும் மிகுந்த ஈடுபாட்டோடு கற்றுத் தருவார்கள் அவர்கள் உருவாக்கிய நாடக ஆசிரியர்களில் மிகச் சிறந்த 10 பேர்களில் நானும் ஒருவன் அதெப்படி சிறந்த 10 பேர் என்று நீங்கள் கேட்கக்கூடும் சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கியபோது எமது சிறந்த 10 நாடகாசிரியர்கள் என்று ஒரு பட்டியலை வானொலி நிலையம் அனுப்பியது அதற்குச் சான்று சென்னை வானொலியிலும் தொலைக்காட்சியிலும், விளம்பரதாரர்களுக்கான நாடகங்கள், நிகழ்ச்சிக்கெனவும் இதுவரை 500 நாடகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறன் மேடை நாகடங்கள் 3. மெரிடைம் பைன் ஆர்ட்ஸ் என்ற நாடகக்குழு முக்கியமான பாத்திரங்களுக்கு புகழ்வாய்ந்த திரைப்பட, நாடக நடிகர்களை அழைப்பேன் மற்றவர்கள் என்னுடன் பணியாற்றுகிற நண்பர்கள் ஹெரான் ராமசாமி, மாஸ்டர் சேகர், மாஸ்டர் ஸ்ரீதர், கே.ஆர். அனுராதா, ஸ்ரீலதா, கிரேஸி ரமேஷ் (இவர் என்னுடன் பணியாற்றிய அதிகாரியும் கூட) ஆகியோர் அந்தப் புகழ்வாய்ந்த நடிகர்கள் வருகிறாள் உன்னைத் தேடி, நல்ல மனம் வாழ்க, மஸ்தானைப் பாத்தீங்களா? என்ற இந்த 3 மேடை நாடகங்களும்  எனக்குப் புகழ் வாங்கித் தந்தவை பலமுறை மேடையேறியுள்ளன சென்னை வானொலியில் தொடராகவும் ஒலிபரப்பாகியுள்ளன

நாடகத்தில் நடித்த அனுபவம் சுவையானது ஒருமுறை 'வேஷங்கள்' என்ற என் தொலைக்காட்சி நாடகம் நண்பர் கோபாலி அவர்கள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இரண்டு மூன்று ஒத்திகைகளுக்குச் சரியாக வந்த ஒரு நடிகர் நண்பர் படப்பிடிப்பு அன்றைக்கு வரவில்லை.  'ஏர்வாடிசார் நீங்க எழுதின நாடகம் உங்களுக்கு வசனங்கள் நினைவிருக்கும் போய் மேக்கப் போட்டுக்கொண்டு வாருங்கள்' என்று ஒப்பனைக் கலைஞர் காயத்ரியிடம் ஒப்படைத்துவிட்டார் அன்று பிரமாதமாக நடித்துவிட்டேன் அப்பாவி வேடம் நான் நடிக்கவே வேண்டியதில்லை. வந்து போனாலேயே போதும் இது நடிப்பில் என் முதல் அனுபவம் வானொலி நாடகங்கள் சிலவற்றிலும் நான் நடித்திருக்கிறேன் மலையாளத் திரைப்பட இயக்குநர் என் மதிப்பிற்குரிய நண்பர் திரு. கே.எஸ். கோபாலகிருஷ்ணன் தன்னுடைய படங்களில் அப்பா, அண்ணன் வேடங்களில் நடிக்கலாமே என்றார்.  'சார் நான் கவிஞன், பாடல்கள் எழுத வாய்ப்பு தாருங்கள்' என்றேன் அவருடைய 'தாகம் தீராத மேகம'; என்ற திரைப்படத்திற்கு முழுப் பாடல்களும் (4 பாடல்கள்) வெங்கடேஷ் (சங்கீதராஜன்) இசையில் பிரமாதமாக அமைந்தது படம்தான் வெளிவரவில்லை எனினும் கோபாலகிருஷ்ணனின் டப்பிங் படங்கள் ஒன்றிரண்டிற்கு பாடல்கள் எழுதியிருக்கிறேன் நடிக்க அத்துணை ஆர்வமில்லை படத்திலும் நிஜ வாழ்க்கையிலும்.

கில்: தற்பொழுது தமிழகத்தில் ஈழத்து படைப்புகளுக்கான வாசகர் வட்டம் விரிவடைந்திருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் நிறைய ஈழத்து படைப்பாளிகள், புலம்பெயர் படைப்பாளிகள் இலக்கியம் படைத்து வருகின்றார்கள். விருதுகள் பெறுகிறார்கள். இந்த பரிமானத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீகள்?

ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்: தமிழ்ப் படைப்பாளர்களை நான் படைப்பாளர்கள் என்ற தளத்திலும் தட்டிலும் வைத்து மதிக்கிரவன் படைப்பாளர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் எழுதுவது, படிப்பது என்பது குறைந்து பேசுவது கேட்பது என்பதில் பொழுது அதிகமாகக் கழிகிற இன்று புதிய 'படைப்புகள்' குறைந்துவிட்ட குறையைக் களையும் இவர்களைக் கைகூப்பித் தொழவேண்டும் தலித் எழுத்து, முற்போக்கு எழுத்து, பெண்ணிய எழுத்து, மார்க்சீய எழுத்து, ஈழ எழுத்து என்று நாம் எழுத்தைப் பகுத்துக் கொண்டாலும் வரப்புகளுக்குள் விளைகிற விளைச்சலைப் போன்றதுதான் எல்லா எழுத்துமே எல்லா எழுத்திலுமே நச்சு இலக்கியங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சமூகத்துக்குப் பயன் உள்ளவைதான் ஈழத்துப் படைப்பாளர்கள் சிலருடன் எனக்குப் பரிச்சயமுண்டு இதுபலராக வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன் நானே வலிந்து போய் கைகுலுக்கி மகிழ்வேன் நானே ஒரு படைப்பாளி என்றாலும் சகபடைப்பாளர்களின் நல்ல ரசிகனாகவே இருப்பேன் படைப்பாளர்களில் சிறிய பெரிய என்ற பேதங்கள் துரதிர்ஸ்டமானவை புதிதாக எழுத வருகிறவர்களை நான் 'பெரிய எழுத்தாளர்களிடம் முதலிலேயே போய்விடாதீர்கள் முனை முறிந்து போவீர்கள்' என்பேன் நெருப்பில் குஞ்சென்றும் மூப்பென்றும் பேதம் எதற்காக? அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த நாட்களில் தலைவர்கள் வாசவன், விக்கிரமன் ஆகியோருடன் மிக அதிகமாக படைப்பாளர்களின் சுமுக உறவைத்தான் பேசியிருக்கிறோம், வளர்த்திருக்கிறோம் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் உலகெங்கிலும் அவர்கள் வாழ்கிற நாடெங்குமிருந்து கிளர்ந்தெழுதல் பெருகியுள்ளது வரவேற்பிற்குரியது நண்பர் ரவி தமிழ்வாணன் ஈழத் தமிழ்ப் படைப்பாளர்களின் படைப்புகளை படிக்கத் தரும்போதெல்லாம் நான் பெருமகிழ்வோடு படித்துப் பெருமையுறுகிறேன்.  தமிழுக்குப் புதிய நம்பிக்கையைத் தருகிற ஈழத் தமிழ் எழுத்தாளர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

அகில்: ஒரு கவிஞர் என்றவகையில் நவீன கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்: 'கவிதை என்பது எல்லோரும் சொல்கிற விஷயத்தை யாரும் சொல்லாததுபோலச் சொல்வதுதான்'.  கவிதைக்கான கருப்பொருள் இனி எதுவுமில்லை எல்லாவற்றையும் கவிஞர்கள் பாடி முடித்துவிட்டனர் ஆனால் பாடுவதை நிறுத்தவில்லை காரணம் பாடுபொருள் ஒன்றாக இருந்தாலும் பார்வைகள் வேறுபடுவதால் புதிய பாடல்கள் பொலிவோடு பிறந்து கொண்டிருக்கின்றன.  'பார்த்ததை மீண்டும் பார்ப்பவன் பாமரன், பார்ப்பதைப் புதிதாய்ப் பார்ப்பவன் பாவலன்' என்று என் கவிதையொன்றில் இக்கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன் புதிய தளங்கள் இருப்பதுபோலப் புதிய களங்களிலும் கவிதை தன்கோபத்தைக் கனலாகச் சிந்த வேண்டியிருக்கிறது புதிதாய் அநீதிகள், அக்கிரமங்கள், பூசல்கள், வக்கிரங்கள் பூதாகாரமாய் வெடிக்கிறபோது பாடலும் பீறிட்டெழும் இப்போதிருக்கிற கவிஞர்கள் புதிதாய்ப் பார்க்கிறார்கள், புதுமையாகச் சிந்திக்கிறார்கள்.  'பெருங்கவிஞர்கள் தோன்றுகிறபோது பழைய இலக்கியங்கள் புதிய வெளிச்சங்களைப் பெறும்' என்பான் டி.எஸ். எலியட் எல்லாக் கவிஞர்களும் இப்போது புதிய வெளிச்சங்களைப் பழைய இலக்கியங்களுக்கு மட்டுமல்ல புதிய இலக்கியங்களுக்கும் பாய்ய முன்வருகிறார்கள் என்றாலும் ஒரு பெரிய அகன்ற சாலை அவர்களை கோடம்பாக்கத்துக்கே அதிகமாய் இட்டுச் செல்கிறது சினிமாப் பாடல்கள் தருகிற புகழ் வெளிச்சத்திற்காக, பல கவிஞர்கள் வார்த்தை வியாபாரிகளாக மாறிக்கொண்டிருக்கிறபோது காப்பியக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, கவியரசர் மு. மேத்தா போற் திரையிசைக் கவிஞர்கள் சிறந்த இலக்கியங்களையும் தமிழுக்குத் தருவது சற்று ஆறுதலான நிகழ்ச்சி.

அகில்: சமகாலத்தில் கவிஞர்கள், கதைஞர்களை ஈர்க்கின்ற ஒரு ஊடகமாக திரைத்துறை விளங்குகிறது. அந்தவகையில் சினிமாத்துறைக்குள் உங்கள் பங்கு எத்தகையது?

ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்:  திரைத்துறையில் நான் அதிகமாக என்றல்ல் சாதிக்கவே முடியவில்லை காரணம் சாதிக்க நினைக்கவில்லை முயலவுமில்லை எனினும் திரைப்பாடலாசிரியர்கள் பட்டியலில் எனக்கும் ஒரு இடமுண்டு என்னுடைய முதல் நூல் 'உனக்காக ஒரு பாடல்'.  இது வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பான என் இசைப்பாடல்கள் அடங்கிய தொகுப்பு புகழ்வாய்ந்த இசைக்கலைஞர்கள் பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம். சௌந்திரராஜன், .எல். ராகவன், சசிரேகா, ஜெயச்சந்திரன், டி.எல்.மகராஜன் போன்றோரெல்லாம் பாடியவை நூலை வெளியிட்டு வாழ்த்தி கவியரசர் கண்ணதாசன் அவர்கள் 'இராதாகிருஷ்ணனின் எளிமையான இயல்பான இனியைமான கவிதை வரிகள் அவரைத் திரைப்படத் துறையில் பாடலாசிரியராகத் துலங்கவைக்கும், திறன்மிக்கவர் எழுதலாம் புகழ்பெறலாம் முழுநேரக் கவிஞனாக மாற வேண்டும்' என்று வாழ்தியதோடு 'ஆனந்த பைரவி' என்ற திரைப்படத்தில் அவரோடு ஒருபாடல் எழுதும் வாய்ப்பை இயக்குநர் திரு. மோகன் காந்திராமன் அவர்கள் தர உதவினார் திருமதி எஸ். வரலட்சுமி பாடிய அந்த இனிமையான பாடல் இசைக்கு (மெட்டுக்கு) எழுதப்பட்ட பாடல் மேலும் இரு டப்பிங் பாடல்களும் நேரிடையாக ஒரு படத்துக்கு 4 பாடல்களும் எழுதியிருக்கிறேன் கே.ஜே. ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், சித்ரா, பி. சுசிலா ஆகியோர் தனித் தனியே பாடிய இனிமையான பாடல்கள் பதிலாகியும் படம் வெளிவர வாய்ப்பில்லை மேலும் வங்கி அலுவலரான எனக்கு வங்கிப் பணிகள் காரணமாய் திரைப்பாடல்களில் அதிகமாக ஈடுபாடு காட்ட முடியவில்லை மிக அண்மையில் தமிழ்நாடு அரசுக்காக ஒரு பாடலை இசையமைப்பாளர் தேவா அவர்களின் இசைக்கு எழுதினேன்.  'இத்துணை விரைவாகவும், நல்ல வரிகளாகவும் தருகிற திறன் மிகுந்த நீங்கள் எப்படித் திரைப்படத்தை விட்டுவிட்டீர்கள்' என்று கேட்டதோடு கவிதை உறவு ஆண்டுவிழாவிலும் என்னிப் பாராட்டி மகிழ்ந்தார் சிலர் எழுத முடியும் வாய்ப்புகள் வந்தால்...

என்றாலும் என் வெற்றிகள் குறித்து நண்பர்கள் பாராட்டினாலும் சிறந்த நூல்களுக்கான பரிசுகள், தமிழ்நாடு அரசின் கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்ளிட்ட பல சிறப்புகள் வந்தென்னைச் சேர்ந்தாலும் எழுதத் தொடங்கியபோது இருந்த அதே உற்சாகம் இன்னமும் இருக்கிறது.  'கவிஞர்களுக்கான வழக்கமான அடையாளங்களை உடைத்தெறிந்துவிட்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களில் கவிஞர் வைரமுத்து, ஏர்வாடியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்' என்ற ஞானபாரதி வலம்புரிஜான் கூறியது நினைவுக்கு வருகிறது.

எது எப்படி இருந்தாலும் குடும்பம், எழுத்து, பொதுவாழ்க்கை, சமூக அக்கறை என்கிற நிலையில் என்னை நான் நிறைவாக உணர்ந்திருக்கிறேன் ஏர்வாடி நல்ல எழுத்தாளன் என்பதிலும் மேலாய் ஏர்வாடி எனும் எழுத்தாளன் நல்லவன் என்பதே எனக்குப் பெருமை நீடித்த நிலையான புகழ் என்று நம்புகிறேன் என் திறனும் பண்புகளும் என்றும் சிதையாமல் பெருகிப் பிரவாகித்துத் தொடரும் தொடர வேண்டும் அதுவே இலக்கு, இலட்சியம், இறைவேண்டல் யாவும்.

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved. (தமிழ் ஆதர்ஸ்)