சுமார் சுப்பையா

  

"மணி என்ன இருக்கும். நீ புறப்பட்டபோது?"

"சுமார் 11 மணி இருக்கும்ங்க ..... "

எவ்வளவு தூரம் ஐயா, நீ போன இடம்."

"இருக்குமுங்களே, மூணு மைல் சுமாருக்கு."

" இப்ப என்ன மணி?"

"சுமார் 1 மணின்னு நினைக்கிறேனுங்க."

முதலாளிக்குக் கோபத்தை அதற்குமேல் அடக்கிக்கொள்ள முடியவில்லை. யார்யா சுத்த மண்டூகமா இருக்கறே. எதுக்குக் கேட்டாலும், என்ன கேட்டாலும் சுமார்! சுமார்! சுமார்! இதுதானா பதில். ஒரு திட்டவட்டமான பதில், பட்டு வெட்டின்படி, கரக்டான பதில் வருதா உன் வாயிலே இருந்து. தலை நரைச் சுட்டுது. பார்த்தா பரிதாபமாவும் இருக்குது. ஆனா, உன்னோட போக்கு கொஞ்சம்கூட சரியா, திருப்தியா, தரமா இல்லையே!"

என்ன வயசாகுதய்யா உனக்கு?"

"சுமார் ஐம்பத்திரண்டுங்க."

"அதுக்கும் அந்தப் பாழாப்போன சுமார்தானா! பெரிய சனியனாப் போச்சு. எத்தனை கை எத்தனை காலுன்னு கேட்டாக்கூட, சுமார் இரண்டுன்னு சொல்லுவேபோல இருக்குது. உன்னோடே மாரடிக்க முடியல்லையா . நெஜமாத் தான் சொல்றேன், நீ என்னோட பொறுமையை ரொம்பத் தான் சோதிக்கறே. போய்யா , இந்தச் சுமாரு சுமாருன்னு அழுகறதை நிறுத்திக்க. ஆமா! கரெக்டா இருக்கோணும் பதில். தெரியுதா? போ! போ! இந்த மாதிரி கோணமாலு களை நான் கட்டி மேய்க்கறதுக்குள்ளே பாதிப் பிராணன் போயிடுது."

நிலபுலம், தோட்டம் துரவு, துணிக்கடை இவ்வளவுக் கும் மேலாக கோயில் தர்மகர்த்தா வேலை எல்லாம் உருண்டு திரண்டு ஒரு உருவமாகி, வேலாயுதம் பிள்ளை என்ற பெயரு டன் அந்த ஊரில் ஒரு பெரிய புள்ளியாக ஒருவர் இருந்து வருவது. விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக வேண்டும் என்று நாய் படாத பாடு' படுவதாகச் சொல்லிக் கொண்டு, வேலை பார்க்கும் முதியவர்தான், சுமார் சுப்பையா; அப்படி ஒரு சிறப்புப் பட்டமே கட்டிவிட்டார்கள் ஊரார், சுப்பையா எதற் கெடுத்தாலும், சுமாராக - சுமாராக என்று பேசி வந்த கார ணத்தால் . அப்படி ஒரு பழக்கம் என்பது அல்ல, அப்படி ஒரு பயிற்சி சுப்பையாவுக்கு. வேலாயுதத்திடம் வேலைக்கு வரும் வதற்கு முன்பு, சுப்பையா வேலை பார்த்த இடத்திலே ஏற் பட்ட பழக்கம், பயிற்சி. அந்த முதலாளியின் பெயர் முத்துச் சாமி. அவர் ஒருமுறை பசு மாடு வாங்கும் வேலையாக, சுப் பையாவை அனுப்பி வைத்திருந்தார். வேளைக்கு 1 1/4 படி பால் கறக்கும் என்று மாட்டுத் தரகன் சொன்னதை நம்பி சுப்பையா, தன் முதலாளியிடம் கூறியபோது, முதலாளி, ஒரு தடவைக்கு நாலு தடவை கேட்டார். 'சரியாச் சொல்லு 1 1/4 படி! வேளைக்கு? அப்படித்தானே!' என்று. ஆமாங்க! வேளைக்கு 18 படி கறக்கும்ங்க. நான்தான் சொல்றனே; தெரிஞ்சிதானுங்க சொல்றேன்' என்று விளக்கம் கொடுத் தார், சுப்பையா. பசு வேளைக்கு 1 1/4 படி கறப்பதே 'உன் னைப்பிடி என்னைப்பிடி' என்று ஆகி விட்டது. முதலாளிக் குக் கோபம் தாங்கமுடியவில்லை. 'ஏய்! சுப்பா! இங்கே வா!' என்று மிரட்டும் குரலில் அழைத்து அருகே வந்ததும், காதைத் திருகியபடி, வேளைக்கு 1 1/4 படி, 1 1/4 படி! அளந்து பார்த் தவர் போலச் சொன்னாயே! போய்ப்பாரு, பசுவோட இலட் சணத்தையும் உன் பேச்சோட அர்த்தத்தையும். சுமார் 1 படி கறக்கும்னு கூடச் சொல்லலியே! 1 1/4 படி. அளந்து பார்த்த ஆசாமி போல அல்லவா சொல்லி என்னை ஏமாத் தினே...' என்று ஏசினார். அதிலிருந்து சுப்பையா, முத லாளியிடம் பேசும்போது பயந்து, எதற்கும் 'சுமாராக' என்று சேர்த்துப் பேச ஆரம்பித்து, பழக்கமும் பயிற்சியுமாகி விட்டது. அந்த வாடிக்கை, வேலாயுதத்திடம் வேலைக்கு வந்த பிறகு எப்படிப் போய்விடும்? எதற்கும், சுமார்! சுமார்!' என்ற இணைப்பு வைத்தே பேசி, முதலாளியின் கோபத்தை அதிகப்படுத்திவிடும் நிலை ஏற்பட்டு விட்டது.

"உனக்குத் திட்டவட்டமா, சரியாத் தெரிஞ்சா சொல்ல ணும்; இல்லே, சுமாரா இப்படி இருக்கும்னு சொல்லணும். தெரியுதா?" என்று முன்னாள் முதலாளி பாடம் சொல்லி வைத்தார்; அது பழக அதிலே தேர்ச்சி பெற நாளாயிற்று: ஆனால் அதிலே நல்ல தேர்ச்சி பெற்று அப்படிப் பேசுவது இயல்பிலேயே ஒரு பகுதி என்று ஆகிவிட்ட பிறகு, 'அதை. விட்டுத் தொலை. எதையும் திட்டவட்டமாக கரெக்டா சொல்லு?' என்கிறார் புதிய முதலாளி - பத்து ரூபாய் சம்பளம் அதிகம் கூடக் கொடுத்திருக்கிறார் - உறவினர்கூட. ஆனால் அந்த 'சுமார்' என்ற பதத்துடன் சுப்பையா ஏற்படுத்திக் கொண்ட தொடர்பு இலேசிலே போக மறுத்தது.

இவ்வளவு சொல்லியும் கூட, அன்று மாலை, முதலாளி சுப்பைய்யாவைக் கூப்பிட்டுத் தன்னோடு பேசிக்கொண்டு இருந்த ஒருவரிடம் காட்டி, நான் சொன்ன சுப்பைய்யா இவருதான். எனக்குப் பெரியப்பா முறை. சொந்தம்தான். எல்லாம் சோளிங்கபுரத்து வழிதான்." என்று அவரிடம் கூறிவிட்டு, 'ஏன்யா, பையன், உன் மகன், நல்ல அழகு இல்லையா?' என்று கேட்டார். சுப்பையா, 'சுமாரா இருப்பானுங்க' என்றுதானே பதில் சொல்ல முடிந்தது? வந்திருந்தவர் பத்து ஏக்கர் பூமிக்கு உடையவர் - அவர் பெண்ணைத்தர ஏற்ற இடம் தேடி வந்திருக்கும் நேரம்: அப்போதும் அந்தப் பாழாய்ப்போன 'சுமார்!' 'போய் வேலையைக் கவனி..." என்று முதலாளி, சிறிது பதட்டமா கவே கூறி அனுப்பிவிட்டார். அவர், பாவம் சுப்பைய்யா மகனுக்கு, நல்ல இடத்துச் சம்பந்தம் கிடைக்கட்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டுதான் பேசிக்கொண்டு இருந்தார். 'சுமார்' வந்ததே, அவர் திட்டத்தைக் கெடுக்க!!

சுப்பைய்யாவுக்கு, இந்த சுமார்' என்ற பதம் பழக்க மாகி விட்டதற்கு வேறோர் காரணமும் உண்டு. உண்மையே பேச வேண்டும். எதையும் சரியாகத் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்பதிலே, மிகுந்த அக்கரை சுப்பைய்யாவுக்கு. நமக்கென்ன தெரியும் - நமக்கெங்கே தெரியப் போகுது - என்ற எண்ணம் வேறு. அந்தப் பாவி, மாட்டுத்தரகன் 14. படி என்று சொன்னான். சரியா என்று பார்க்காமல், அளந்து காட்டு என்று கேட்காமல், எல்லாம் தெரிந்த மேதாவி போல், எஜமானரிடம் உளறியதாலேதானே அவ ருக்கும் நஷ்டம், நமக்கும் கஷ்டம் என்று நினைத்து நினைத்து எதையும் திட்டவட்டமாகச் சொல்லக் கூடாது என்ற முடி வுக்கு வந்ததன் விளைவு இந்த 'சுமார் .

வந்தவர் போன பிறகு, வேலாயுதம், சுப்பைய்யா வைக் கூப்பிட்டு, அய்யோவ்! நீ உருப்பட மாட்டே. ஆமாம். உன் பிள்ளைக்குப் பெண் தர, பாதிச்சம்மதம் சொன் னான், சோளிங்கபுரத்தான் - கெட்டதே; உன்னோட சுமார் வந்து கெடுத்துதே,' என்று கூறினார். சுப்பைய்யாவுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் மகன் அழகுதான் என்று எப்படிச் சொல்ல முடியும்? நம்முடைய கண்ணுக்கு அவன் அழகாகத்தான் இருக்கிறான்! முதலாளியோட எண்ணம் எப்படியோ? அதைத் தெரிந்து கொள்ளாமல், நாம் எப்படி திட்டவட்டமாகச் சொல்லமுடியும்? அதனாலேதான், சுமாரா இருப்பான் என்று சொல்லி வைத்தேன் ; கோபிக்கிறார். நான் என்ன செய்ய! என்று முணுமுணுத்தபடி வீடு சென்று சோகமாகப் படுத்துவிட்டார். தன்னைவிட வயதிலே குறைந்தவன் தான் குப்புசாமி, துணிக்கடையில் எவ்வளவு சாமர்த்தியமாக நடந்துகொள்கிறான். அதையுந்தான் அவர் பார்க்கிறார்; பார்த்து? என்ன முயற்சி செய்தாலும் அந்தப் புத்தி கூர்மை வர மறுக்கிறதே. என்ன செய்வார். நாணய மானவர். அடக்கமானவர். இருந்து? அதோ குப்புசாமியைப் பாருங்கள்.

"ஏம்பா ! சாயம் எப்படி?"

"நம்ம கூடையிலே வந்து நீங்க இந்தக் கேள்வி கேட்க லாமா?"

- அதிர்வேட்டுச் சிரிப்புடன் புடவையைக் காகித உறைக்குள்ளே போட்டு, வந்தவரிடம் கொடுத்துவிட்டு காதின் இடுக்கிலே உள்ள பென்சிலெடுத்து. 17-30 என்று பில் போட்டுக் கொடுத்துவிட்டு மற்றவர்களைக் கவனிக்கி றான்.

"ஏம்பா! சாயம் போகுதே உங்க கடை சேலை!"

"எங்க கடை சேலையிலே குத்தம் கிடையாதுங்க. நீங்க வெளுக்கப் போட்ட இடம் அப்படி இருக்குது. நாங் களா பொறுப்பு அதுக்கு?"

 

"வெளுக்க எங்கேயும் போலியே, நாங்களே வீட்டில் லேயேதான் தோய்த்துப் பார்த்தோம்."

"என்ன சோப்பு போட்டிங்க? "

"மல்லிமார்க் சோப்புதான்....."

"அப்படிச் சொல்லுங்க. நான் திகைச்சிப் போனேன். கெட்டிக் சாயமாச்சே அது எப்படிப் போகும்னு. அம்மா! புடவை விலை போட்டு வாங்குவது மட்டும் போதாது. சோப்பு தரமானதா இருக்கணும். இருங்க .... டேய், பையா! டேய், கிட்டு! அம்மாவுக்கு அல்லிமார்க் சோப் ஒரு பெட்டி வாங்கி வந்து கொடு . மூணு ரூபா கொடுங்கம்மா. இதைப் போட்டுப் பாருங்க, சாயம் கக்குதான்னு."

வந்தவர்கள் திருப்தியாகப் போகிறார்கள். அல்லி மார்க் சோப்புக்கு, குப்புசாமிதான் அந்த ஊர் முழுதுக்கும் ஏஜண்ட்! ஒரே கல் ; இரண்டு மாங்காய்!!

இதையெல்லாம் பார்க்கிறார் சுப்பைய்யா. ஆச்சரியத் தால் வாய் பிளந்து நிற்கிறாரே தவிர, எப்படி குப்புசாமி இத்தனை வித்தைகளைக் கற்றுக் கொண்டான் என்பதே புரியவில்லை. தனக்கு அந்த வித்தை வராது என்று எண்ணு கிறார். அதுமட்டுமல்ல, அந்த வித்தை தனக்கு வேண்டாம், அது பாபம், கேவலம் என்றும் எண்ணுகிறார்.

சுப்பைய்யாவின் சுபாவம், அவருக்கு வாழ்க்கையிலே பல கட்டங்களில் தொல்லை கொடுத்தது. ஆனால் ஒரு முறை அவருக்கு ஆபத்தையே உண்டாக்கி விட்டது. அந்தச் சுபாவம்.

ஊரிலே பெரிய வம்புக்காரன் சிகப்பான். அவன் ஒரு நாள், கடையில் கலகம் செய்து, முதலாளியைத் தாக்கி விட் டான் - அங்கு இருந்த கத்திரி கொண்டு குத்தவும் முயற்சித் தான். வழக்கு நடந்தது. சிகப்பனுக்கு வக்கீலாக வந்தவர், சாட்சிகளை மிரட்டித் திணற அடிப்பதில் வல்லவர்; எப்போதும் அடிதடி , கத்திக்குத்து, தீ வைத்தல் போன்ற வழக்கு களில் அவர்தான் முன்னால் நிற்பார், குற்றவாளிக்குவாதாட. வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ! வழக்கு மன்றத்திலே, அவருடைய 'வாண வேடிக்கையைப் பார்க்கப் பலர் கூடுவார்கள். சிகப்பன் தாக்கியதற்குச் சாட்சி கூற குப்புசாமி மட்டும் போதும். அவன் சமாளிப்பான்; ஆனால் கலகம் நடந்த தினத்தில், குப்புசாமி குல தெய்வத் துக்குக் கும்பாபிஷேகம் என்று கோடியூர் போய்விட்டிருந் தான். அன்று கடையில் இருந்தவர்களில் முக்கியமானவர் சுப்பைய்யா . முதலாளி தன் வக்கீலிடம், இந்த ஆளை மட்டும் சாட்சிக் கூண்டிலே போடாதிங்க. உளறிக்கொட்டி, வழக் கைக் கெடுத்துவிடுவான் என்று சொல்லி வைத்திருந்தார். சுப்பைய்யாவுக்குக்கூட நிம்மதியாகவே அந்த ஏற்பாடு தென் யட்டது. ஆனால் வழக்கைப் பதிவு செய்த போலீசார், சுப் பைய்யா கடையில் இருந்ததைக் குறிப்பிட்டு இருந்தார்கள். சிகப்பனுடைய வக்கீல் கழுகாசலம், இதை 'மோப்பம்' பிடித்து சுப்பைய்யாவைச் சாட்சிக் கூண்டுக்குக் கொண்டு வந்து விட்டார். நடுக்கம் சுப்பைய்யாவுக்கு .

"உம்மோட பேர், சுப்பைய்யாவா?"

"ஆமாம்!"

"எவ்வளவு வருஷமாக வேலை பார்க்கிறீர்?"

"சுமார் ஏழெட்டு ஆகுதுங்க..."

"எஜமானர் நல்லவர் - இல்லையா?"

"தங்கம் தங்கமானவரு..."

"உரக்கச் சொல்லாதய்யா. இது தங்கக் கட்டுப்பாடு காலம்! நல்லவர்."

"ஆமாங்க."

"சம்பளம் போதுமான அளவு கிடைக்குதா."

"சுமாரா..."

"உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது பாவமில்லையா?"

"பாவந்தானுங்களே."

"உப்பிட்டவர்களை உள்ளளவும் நினைக்க வேணுமில் லையா?"

"அதுதானுங்களே நியாயம், தர்மம்."

"ஆகையினாலே நீ உன் எஜமானருக்குத் துரோகம் செய்யமாட்டே ..."

"மனசு வருங்களா..."

"எஜமானருடைய நன்மை எதுவோ அதுக்கு அக்கரை காட்டுவே!"

"உள்ளதுதானுங்க..."

"அதனாலேதான், இப்ப, உன்னோட எஜமானர் கொடுக்கிற சம்பளத்துக்காக, அவர் சார்பிலே, பொய் சாட்சி சொல்ல வந்திருக்கிறேன்னு நான் சொல்றேன்."

"அப்படிச் சொல்லாதிங்க .... நான் பொய் பேச மாட்டேனுங்க... தெரியாதுங்க.... பழக்கமே கிடையாதுங்க..."

"தெரியப்போகுது பார் உன்னோட சொரூபம். சரி, கடையிலே கலகம் நடந்ததாச் சொல்றிங்களே, அப்ப மணி என்ன ?"

"மணி வந்துங்க .... பனிரெண்டு இருக்கலாம்ங்க .... சுமாரா!"

"இதோ பாரய்யா இது கோர்ட். நிஜம் தான் பேச ணும். இழுத்துப் பேசறது, மழுப்பறது கூடாது. மணி என்ன?"

 

"சுமார் பன்னெண்டு."

"சுமார் பன்னெண்டுன்னு ஒரு கணக்கு இருக்குதா? சரியாச் சொல்லுமய்யா. மணி பன்னிரண்டு அடிச்சுதா, அடிக்க கால் மணி நேரம் இருந்ததா , அடிச்சி அரை மணி நேரமாச்சா ....."

"எப்படிங்க அப்படிச் சொல்ல முடியும். சுமாரா பன் னெண்டு இருக்கும்."

"கடிகாரத்தைப் பார்த்தீரா?"

"இல்லிங்க..."

"கடியாரத்தைக் கூடப் பார்க்காம மணி தெரியுதா உமக்கு ."

"இலேசா பசி எடுத்து துங்க; அதிலே இருந்துதாங்கச் சொல்றேன், சுமார் 12 இருக்கும்னு."

"ஓஹோ! உன் கடிகாரம் வயத்திலே இருக்குதா? இருக்கட்டும், இருக்கட்டும். கடியாரத்தைப் பார்த்து மணி சொல்லலே?"

"ஆமாங்க..."

"ஆகையாலே , கலகம் நடந்த நேரம், மணி, உனக்கு திட்டவட்டமாத் தெரியாது."

"ஆமாங்க."

"உனக்கு திட்டவட்டமாகத் தெரியாத ஒரு விஷயத் தைக் கோர்ட்டிலே சத்தியம் செய்து கொடுத்துவிட்டுப் போக றியே, பேசலாமா! போகட்டும். அடிதடி நடந்தது. அப்படித் தானே?"

"வந்துங்க , சிகப்பன், சிகப்பன்..."

"கதாகாலட்சேபம் கூடாது; கேள்விக்குப் பதில் அடிதடி நடந்துதா?"

"நடந்துதுங்க."

"யார், யாரை அடிச்சது?"

"சிகப்பன் எஜமானரைத் தாக்கினாரு!"

"இரண்டு கையாலேயா, ஓரே கையாலேயா?

"அதைக் கவனிக்கலிங்க . பளார் பளார்னு சத்தம் கேட்டுது."

"கேட்டதும், உமக்குப் பயம் ஏற்படலியா?"

"பயந்தாங்க .... உடலே நடுங்கிப் போச்சுங்க.... கைகால் ஓடலிங்க . கண்ணை கெட்டியா மூடிக்கொண்டேனுங்க!"

 

"கண்ணை மூடிக் கொண்ட நீ சிகப்பன்தான் எஜ மானரை அடிச்சான் என்று எப்படிச் சொல்லலாம்?

"சத்தம் கேட்டுது."

"நீ கண்ணாலே பார்த்தாயா? "

"இல்லிங்க."

"சிகப்பன் கத்திரியாலே குத்த வந்தான்னு சொல்றாங்களே !'

"ஆமாங்க... எஜமானரு பதறிக் கூவினாருங்க, கத்திரி! கத்திரி'ன்னு!"

"கத்திரி! கத்திரின்னு கூவினாரே தவிர சிகப்பன் என் னைக் கத்திரியாலே குத்த வர்ரான்னு சொன்னாரா?"

"அப்படிச் சொல்லலிங்க."

"அந்தக் கடையிலே மூட்டை தூக்கிப் போடற பையன் ஒருத்தன் உண்டா ?"

"மூணு பேருங்க." 'அதிலே ஒருத்தன் பேர், கத்திரி. இல்லையா.."

"ஆமாங்க."

"நான் சொல்றேன், உன் எஜமானரு சிகப்பனை அடிக்க கத்திரி என்ற வேலையாளை கூப்பிட்ட குரல்தான் உன் காதிலே கேட்டதுன்னு, என்ன சொல்றே!"

"நான் என்னங்க சொல்ல முடியும். என் காதிலே, எஜமானர் கூவினது கேட்டது."

"உன் கண் மூடி இருக்குது - மணி தெரியாது - காதிலே சத்தம் விழுது - இது போதும்னு நினைச்சு சாட்சி சொல்ல வந்துவிட்டயா."

"நான் மாட்டேன்! மாட்டேன்னு! தலைப்பாடா அடிச் சுக்கிட்டேனுங்க."

வழக்கு சிகப்பன் பக்கம் வெற்றியாகி விட்டது. சுப்பைய்யாவுக்கு வேலை போய் விட்டது. வீட்டிலே மனைவி மெத்த வருத்தத்துடன், 'எதையும் தெளிவாப் புரிந்துகொள் ளணும், திட்டவட்டமாச் சொல்லணும். இப்படி இருந்தா லொழிய, யாருங்க உங்களை வேலைக்கு வைத்துக்கொள்ளு வாங்க?' என்று கூறினாள்.

"உண்மைதான் கண்ணாத்தா! புரியுது; பழக்கமாக ணுமே. இனி எதையும் திட்டவட்டமாத் தெரிந்து கொண்டு தான் பேசணும். இனிமேல்பட அதே வேலைதான் எனக்கு. பாரேன்' என்று தைரியம் கூறினார். அன்று முதல் அதே நினைப்பு. அந்த முறையைப் பயில ஆரம்பித்தார். ஆறு மாதத்துக்குப் பிறகு, கார்மேகம் என்பவரிடம் வேலைக்கு அமர்ந்தார்.

'சுப்பையா! போயி பொன்னியம்மன் கோயில் தெரு விலே இருக்கிற கன்னியப்பன் தரவேண்டிய பாக்கியை வாங்கி கிட்டு, வா." - என்று கார்மேகம் கூறுவார். உடனே, ஒரு சிறு குறிப்புப் புத்தகத்தை எடுப்பார் சுப்பையா! கடிகாரத் தைப் பார்த்து 10.25 என்று குறித்துக் கொள்வார். கடையை விட்டு இறங்குவார்; திரும்பி வருவார். 'பாக்கி எவ்வளவுங்க!' என்று கேட்பார். கடைக் கணக்குப்பிள்ளை,

இங்கே, வாய்யா! நீ போன உடனே அவன் கொடுத்துவிடற வன் போல 'கரெக்டா கணக்கு கேட்கறியே! போய்யா! போய் பாக்கி பணம் கொடுன்னு கேள்!" என்பார். சுப்பையா விடமாட்டார். 'இல்லிங்களே! கரெக்டா கணக்கு தெரியணும். பாருங்க! ஏன்னா, என்ன பணம் சேரணும்னு கேட்டா, நான் சொல்லணும், இல்லே." என்பார். கணக்கப் பிள்ளை ஏட்டைப் பார்த்து 80 ரூபா 60 பைசா என்பார். அதைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டு கிளம்புவார். பாதி வழி போகும் போதே யோசனை வந்துவிடும். 'பொன்னி யம்மன் கோவில் என்று மட்டும் தானே சொன்னார்கள்! வீட்டு எண் கேட்க மறந்துவிட்டோமே' என்று. பலரை விசாரித்து வீடு கண்டு பிடிப்பார். முதல் வேலையாக குறிப்பு புத்தகத்தை எடுத்து, வீட்டு நம்பர் இன்னது என்று குறித்துக் கொள்வார். உள்ளே உடனே போய்விடமாட்டார். தான் அங்கு வந்ததையும் கன்னியப்பன் வீட்டுக்குள் போனதையும் நாளைக்குத் தேவைப்பட்டால் மெய்ப்பிக்கக் கூடிய முறையில் தனக்குத் தெரிந்தவர் யாராவது வருகிறாரா என்று காத் திருந்து, அப்படி ஒருவர் வந்ததும், அவருடைய பெயரை எழுதிக் கொள்வார். அது முடிந்ததும் யாரையாவது கேட்டு மணி என்ன என்று குறித்துக்கொண்டு பிறகுதான் உள்ளே போய், கன்னியப்பனைப் பார்த்துப் பேசுவார்.

"நீ கார்மேகத்தோட கடையா?"

"ஆமாம்."

"கணக்கப்பிள்ளையா?"

"ஆமாம்."

"பாக்கி வசூல் பார்க்க வந்தாயா?"

"ஆமாம்."

"நீ கார்மேகம் கடைஆள்தான் என்று எப்படி எனக்குத் தெரியும்? எழுதியிருக்கா உன் நெத்தியிலே' - இதற்குப் பதில் சொல்ல, குப்புசாமி அல்லவா வேண்டும். சரி, இனி, பாக்கி வசூல் செய்யப் புறப்பட்டால் எஜமானரிடம் இருந்து ஒரு அடையாளச் சீட்டு வாங்கிக் கொண்டுதான் வரவேண்டும் என்ற முடிவுடன் கடை திரும்புவார்.

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மிக முன்னேற்பாட் டுடன் நடக்க ஆரம்பித்து, அந்தப் பயிற்சி முற்றி அது - சுப்பை யாவின் சுபாவமாக வளர்ந்துவிட்டது. அதன் பலனாக எந்தக் காரியமும் கால் தாமதம் இன்றி நடப்பதில்லை.

மத்தவன் சிட்டா பறந்து போய் காரியத்தை முடிக்க றான். நீயும் இருக்கறயே ஒரு மனுஷன், ஆமை மாதிரி. எதுக்கெடுத்தாலும் விவரம் தெரியணும். ஒரு நோட்டுப் புத்த கத்திலே குறிக்கணும். செச்சேச்சே நீ உருப்பட மாட்டய்யா! ஆமாம்" என்று கூறி, கார்மேகமும் சுப்பையாவை வேலையை விட்டு நீக்கிவிட்டார்.

 

----

'காஞ்சி' பொங்கல் மலர் 1965

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)