சர்வதேச தாய்மொழி தினம்

அகில்

 

லக மக்களால் கொண்டாடுகின்ற தினங்களில் முக்கியமான தினமாக விளங்குவது தாய்மொழித் தினமாகும். ஒரு மனிதன் தனது உணர்வை சகமனிதனிடம் வெளிப்படுத்துவதற்கு அவனுக்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. தாயின் கருவறையில் இருக்கும்போதே ஒருவன் கற்றுக்கொள்கின்ற முதல்மொழியாக தாய்மொழி விளங்குகிறது. இதனால் தான் அது தாய்மொழியென்று அழைக்கப்படுகிறது. ஒருவன் திடீரென்று அடிபட்டதும், எந்தமொழியில் வலிதாங்க முடியாமல் கத்துகிறானோ அந்த மொழியே அவனது தாய்மொழி.

தாய்மொழி தினம் உருவான விதம்:

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அதே தினத்தில் பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்தது. பாகிஸ்தானில் முக்கியமாக இருண்டு மொழிகள் பேசுகின்ற மக்கள் இருந்தார்கள். அவைமுறையே மேற்கு பாகிஸ்தானில் வாழுகின்ற மக்கள் உருது மொழிபேசுகிறவர்களாகவும், கிழக்கு பாகிஸ்தானில் வாழுகின்ற மக்கள் வங்கமொழி பேசுகின்றவர்களாகவும் இருந்தார்கள். அப்பொழுது பாகிஸ்தானின் கவர்னராக இருந்த முகமது அலி ஜன்னா பாகிஸ்தானின் அதிகாரமொழி 'உருது' என பிரகடனம் செய்தார். அவர் அவ்விதம் பிரகடனம் செய்தபோது கிழக்கு பாகிஸ்தானில் வாழ்ந்த மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பாகிஸ்தானின் அதிகாரமொழிக்காக தமது மொழியான வங்கமொழியை அறிவிக்கவேண்டும் என்று போராட்டத்தில் குதித்தார்கள்.

கோரிக்கை போராட்டமாக வெடித்த நிலையில் 1952, பெப்பிரவரி 21 அன்று டாக்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊடரங்கு உத்திரவை மீறி டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டார்கள். மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தை முடக்க பாகிஸ்தான் இராணுவம் மிகவும் மூர்க்கத்தனமாக அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியது. இராணுவத்தின் துப்பாக்கப் பிரயோகத்தில் நான்கு மாணவர்கள் உயிர் நீத்தார்கள். இந்த தினமே உலகளாவிய ரீதியில் தாய்மொழித் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

1999ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் நடைபெற்ற யுனெஸ்கோவின் 30வது அமர்வில் பெப்பிரவரி மாதம் 21ம் திகதியை அனைத்துலக தாய்மொழி தினமாக அறிவித்தது.

பல்வேறு மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பேணுவதையும் மற்றும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதையும் கொள்கையாகக் கொண்டு இவ்வறிப்பு யுனெஸ்கோவால் வெளியிடப்பட்டது.

2000ம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு ஆண்டும் பெப்பிரவரி 21ம் திகதி சர்வதேச தாய்மொழி தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

• உலகமொழிகளின் மூத்தமொழி, செம்மொழி தமிழ்மொழி.

• காந்தி தனது சுயரிதையான சத்திய சோதனையை தனது தாய்மொழியில் எழுதியுள்ளார்.

• 'எங்கே தன் தாய்மொழி மதிக்கபடவில்லையோ அங்கே உன் குரல்வளை நெரிக்கப்படுகிறது' – பிரான்ஸ் பழமொழி.
 



 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்