வயிற்று கோளாறுகளை போக்கும் செண்பகப்பூ
 

மக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், செண்பகப்பூவின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது செண்பகப்பூ. இதன் இலைகளை தேனீராக்கி குடிக்கும்போது வயிற்று கோளாறுகள் சரியாகிறது. பசியின்மையை போக்கி பசியை தூண்டுகிறது. செண்பக பூக்கள் தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டது. காய்ச்சலை தணிக்கிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று கோளாறுகளை போக்குகிறது. வாயுவை அகற்றுகிறது.

செண்பக இலைகளை பயன்படுத்தி பசியின்மை, வயிற்றுவலி, முறையற்ற மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செண்பக இலைகள், லவங்கப்பட்டை, தேன்.செண்பக இலைகளை நீர்விட்டு அரைக்கவும். இந்த சாறில் இருந்து
2 ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் ஒரு துண்டு லவங்கப்பட்டை சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி தேன் சேர்த்து குடிக்கும் போது மாதவிலக்கை தூண்டும். வயிற்று புண்கள், வயிற்று வலியை குணப்படுத்தும்.
கோடைகாலத்தில் நமக்கு எளிதாக கிடைக்க கூடிய மலர் செண்பக பூ.

இதை பயன்படுத்தி தூக்கத்தை வரவழைக்கும் மற்றும் மன உளைச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செண்பக பூ, கசகசா, பனங்கற்கண்டு, பால்.
2 செண்கப்பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூஸ் கசகசா, அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் பால் சேர்த்து வடிக்கட்டி இரவு தூங்கப்போகும் முன்பு குடித்துவர உயர் ரத்த அழுத்தம் குறையும். தூக்கம் நன்றாக வரும். மன அழுத்தம் குறையும். வயிற்று புண், குடல் புண்களை ஆறும். புண்கள் வராமல் தடுக்கும். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. அற்புதமான மருந்தாக விளங்கும் செண்பக மலர்கள், பூஞ்சை காளான்கள், நோய்கிருமிகளை போக்க கூடியதாக விளங்குகிறது. நோயை தணிக்கும் தன்மை உடையது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

செண்பக பூவை பயன்படுத்தி வலி நிவாரணி தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செண்பக பூ, நல்லெண்ணெய். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் எடுக்கவும். செண்பக பூக்களை அரைத்து பசையாக எடுத்து இதனுடன் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இந்த தைலத்தை பூசிவர எவ்வித வலி, வீக்கமும் குறையும். கைகால் எரிச்சல், உடல் எரிச்சல, முழங்கால் வலி, மூட்டுவலி, தலைவலிக்கு இந்த தைலத்தை மேல்பூச்சாக பயன்படுத்தலாம். நறுமணம் தருகின்ற செண்பகப்பூ பல்வேறு நன்மைகளை கொண்டது. இதை பயன்படுத்தி நலம் பெறலாம்.

உடல் சோர்வு, பலகீனத்துக்கான மருத்துவத்தை பார்க்கலாம். வெயில் காலத்தில் உடலில் சோர்வு ஏற்படும். சத்தான உணவு சாப்பிடாதது, நீர்ச்சத்து குறைவது போன்றவற்றாலும் சோர்வு ஏற்படும். இப்பிரச்னைக்கு துளசி மருந்தாகிறது. ஒரு செப்பு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் எடுக்கவும். இதில்,
10 துளசி இதழ்களை இரவு நேரத்தில் போட்டு ஊறவைக்கவும். இதை காலை வேளையில் குடித்துவர சோர்வு நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.




 நன்றி: தினகரன்

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்