ஆட்டிசம் என்றால் என்ன?

திருமதி செல்லையா யோகரத்தினம் MA

சர்வதேச ஆட்டிசம் விழிப்பணர்வு தினம் எப்பிரல் 2

ட்டிசம் என்பது ஒரு நோயல்ல, அது ஒரு குறைபாடே. இது மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடாகும். மூளையின் முக்கிய செயற்பாடுகளாகிய பேச்சுத்திறன், சமுதாயத் தொடர்பு, மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றைப் பாதிக்கும் நோய். மருத்துவத்துறையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புதுப் பெயர்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அப்படி இந்தத் தலைமுறையில் உண்டாக்கப்பட்ட வார்த்தையே ஆட்டிசம். பெரும்பாலும் இதனை ஒரு நோயாகவே கருதுகின்றனர். இதனைக்குணப்படுத்த சிகிச்சை ஏதும் இல்லை. உலகில் அதிகம் காணப்படும் வளர்ச்சிக் குறைபாடுகளில் இது மூன்றாவது இடத்தில் உள்ளது. சுமார் 250 குழந்தைகளில் ஒருவருக்கு இந்தக் குறைபாடு உள்ளது.

குழந்தை பிறந்தபின் காது கேட்காமை, பேசமுடியாத தன்மை, பார்வைக் குறைபாடு, உடல் உறுப்புக்களின் வளர்ச்சிக் குறைபாடு போன்றவற்றை எளிமையாகக் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் ஆட்டிசம் அப்படியல்ல. இது இப்படித்தான் இருக்கும் என்று வரைமுறை கொண்ட இலக்கணத்தை இதற்குச் சொல்ல முடியாது. குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படக்கூடிய குறைபாடுகள், மூளையின் செயல்பாட்டில் எற்படக்கூடிய மாற்றங்கள் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. குழந்தைக்குக் குழந்தை மாறுபடும். இதனால்க் குழந்தைகளின் அடிப்படைத் திறமைகள் வெளிப்படுவதற்குக் காலதாமதம் ஏற்படும். குறிப்பாகச் சமூகத்துடன் இணைந்திருத்தல், மற்றக் குழந்தைகளுடன் நட்பு ஏற்படுத்துதல், தன் தேவைகளை வெளிப்படுத்துதல், போன்ற செயற்பாடுகளில் சிரமம் தோன்றலாம். அதே போல அறிவு சார்ந்த விடயங்களிலும் அவர்களுடைய நடத்தையிலும் கூடக் குறைபாடு வெளிப்படும். ஆனால் ஆட்டிசம் அப்படி எளிமையாக வகைப்படுத்த முடியாதது.

மற்றக் குழந்தைகளைப் போல் பேச முடியாது, நடக்க முடியாது, நாம் யார், எங்கு இருக்கிறோம் என்ற விபரங்கள் தெரியாது. இதனால் அவர்களால் மற்றவர்கள் போல் இயல்பு வாழ்க்கை வாழ மடியாது. ஆட்டிசம் பிறவிக் குறைபாடாக இருந்தாலும் பிறந்த உடனே கண்டுபிடிக்க முடியாது. 6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டைக் கண்டுபிடிக்க முடியும். இது குறித்து விழிப்புணர்வு இல்லாததால் பலர் 3 வயதுக்குள் கண்டுபிடிக்கத் தவறி விடுகின்றனர். 3 வயதுக்குள் கண்டுபிடித்தால் உரிய பயிற்சி அளித்து குறைபாட்டை ஓரளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

இதன் அறிகுறிகள் பல திறப்பட்டவை.

1. குழந்தை யார் முகத்தையும் பார்க்காது இருத்தல்.
2. தனிமையை விரும்புதல்
3. காது கேளாதது போல் இருத்தல்.
4. மற்றவர்களைத் தாக்குதல்.
5. வலியைத் தாங்கிக் கொள்ளல்.
6. கை கால்களை வேகமாக அசைத்தல்.
7. வித்தியாசமாகச் சத்தமிடுதல்.
8. தன்னைத் தானே காயப்படுத்துதல்.
9. பேச்சுத் திறன் இன்மை.
10. விரல் சூப்புதல், நகம் கடித்தல்.
11. புதட்டமாக இருத்தல். அடம் பிடித்தல்.
12. மற்றக் குழந்தைகள் போலல்லாமல் பார்வை கூரையையே பார்த்தல்,
13. பார்வை ஒரே இடத்திலேயே நிலைத்து இருத்தல்.
14. நேராகக் கண்ணைப் பார்க்க மாட்டாமை.
15. கைகள் எப்பொழுதும் உதறிக் கொண்டே இருப்பது.
16. கட்டி அணைத்தால் கோபம் வருதல்.
17. மூர்க்கமாக நடந்து கொள்வது.
18. தெளிவாக பேச முடியாது இருத்தல்.
19. சொன்னதைத் திரும்பத் திரும்ப சொல்லுதல்.
20. ஓ வென்று அலறுதல்.

இவர்களுக்குப் பயிற்சி அளிக்க திறமை மிக்க விசேடமாகப் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். அன்றாடப் பழக்க வழக்கங்களைப் பயிற்றுவிப்பதே இவர்களுக்குக் கொடுக்கப்படும் முதலாவது சிகிச்சை. அடுத்து

1. நடத்தை சீராக்கல் பயிற்சி
2. வளர்ச்சிக்கான பயிற்சி
3. கல்விக்கான பயிற்சி
4. பேச்சுப் பயிற்சி போன்றவை இடம் பெறும். இவைதான் இவர்களுக்குக் கொடுக்கப்படும் சிகிச்சைகளாகும். எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள். எனவே சிகிச்சை முறையும் வேறுபடும். ஒவ்வொரு குழந்தையையும் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்பப் பொறுமையாக ஆசிரியர் பயிற்சி கொடுப்பார். குழந்தையை மிரட்டவோ அடிக்கவோ கட்டாயப் படுத்தவோ செய்யமாட்டார். ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்கும் போது அதனைப் புரிந்து கொண்டு குழந்தை அதன்படி நடக்கப் பழகிக் கொள்ளும். அதனால்த்தான் இவர்களுக்கு என்றே சிறப்புப் பள்ளிகள் உண்டு. ஆசிரியர் குழந்தையுடன் நட்பு முறையிலேயே பழகுவர்.
5. இக்குழந்தைகளில் சிலர் அற்புதத் திறமைகள் கொண்டவர்களாக இருப்பர்.

ஆசிரியர்கள் அதனைக் கண்டறிந்து விசேட பயிற்சி கொடுப்பர். மனதை ஒரு முகப்படுத்துவற்கான பயிற்சி அளிக்கப்படும். ஆட்டிசம் எப்படித் துல்லிதமாக வரையறுத்துக் கூற முடியாதது போலவே சிகிச்சை முறையும் அறுதியிட்டுக் கூற முடியாது. ஒரு குழந்தைக்கு பலனளித்த சிகிச்சை முறை இன்னொரு குழந்தைக்குப் பயன் தரும் என்று சொல்ல முடியாது. எப்படியும் சிகிச்சை முறையைத் தேர்வு செய்யும் போது பெற்றோரைத் துணைக்கொண்டே செய்வர்.

இந்தக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் இதற்கான மருந்தும் கண்டுபிடிக்க முடியாமலே இருக்கிறது. அமெரிக்காவில் 68 பேருக்கு ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறார். உலகளவில் ஆண் குழந்தைகளே இதில் அதிக அளவில் பாதிக்கப்பபடுகின்றனர். ஆட்டிசக் குழந்தைகளில் நால்வர் ஆணாகவும் ஒருவர் பெண்ணாகவும் இருக்கின்றனர். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் சில பல கெட்டித்தனங்கள் உள்ளன. கணிதத்தில் வல்லுநர்களாக இருக்கலாம், ஆனால் நடப்புலகில் அதைப் பயன்படுத்த அவர்களுக்குத் தெரியாது. ஒருவர் எதனையும் கற்றுக்கொள்வதன் அடிப்படைக் காரணம், கற்பதைப் புரிந்து கொண்டு அந்தத் தகவலைப் பொதுமைப்படுத்தி நமக்குத் தேவையான பொழுது பயன்படுத்தவதற்குத்தான். ஆனால் தான் கற்பதையும் புரிந்து கொள்வதையும் பொதுமைப்படுத்திப் பயன் படுத்தும் தன்மை ஆட்டிசம் குறைபாடுடையவர்களிடம் இருக்காது. தாம் வாழும் வாழ்க்கைக்கும் தாம் கற்கும் கல்வியையும் தொடர்பு படுத்தித் தகவல்களைப் பயன்படுத்தும் திறன் அவர்களிடம் இருக்காது, ஆனாலும் பல அறிவாளிகளையும் மிஞ்சும் வகையில்த் தகவல்கள் அவர்களிடம் இருக்கலாம். இவ்வாறு கற்பதிலும் அதனைப் பயன்படுத்துவதிலும் சிரமங்கள்; இருப்பது போல, ஆட்டிசம் குறைபாடு உடையவர்களுக்கு கற்பிப்பதிலும் சிரமங்கள் உண்டு. அனைவருக்கும் பயன்படுத்தும் முறையைப் பயன்படுத்த முடியாது.

பொதுவாகத் தகவல் பரிமாற்றம் செய்வது, சமுதாயத்தில் மற்றவரிடம் பழகுவது, பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை ஆகியவற்றில் குறைபாடுகளும் மாறுபட்ட சிந்தனையும், ஆர்வம், எண்ணங்கள், நடத்தைகள் என்பன ஆட்டிசத்தின் எத்தகைய நிலைச் செயற்பாட்டைக் கொண்டவர்களிடமும் இருக்கும். உயர்நிலைச் செயற்பாட்டைக் கொண்ட ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையானோர் வளர்ந்தாலும் தனித்துவாழும் திறனோ வல்லமையோ இல்லாதவர்களாகவே இருப்பர். வாழ்க்கை முழுவதும் அவர்களைக் கையாளத் தெரிந்தவர் பராமரிப்பில் வாழ்வதுதான் அவர்கள் எதிர்காலம். ஆட்டிசத்தைப் பொறுத்தவரையில் சிகிச்சை என்பது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வது மட்டுமல்ல மிக விரிவான பயிற்சிகளைச் செய்வதன் மூலமே இக்குழந்தைகளை மீட்க இயலும். மேலும் ஒவ்வொரு குழந்தையின் பிரச்சனையும் மிகவும் நுண்ணியதான வேறுபாடுகள் கொண்டது என்பதால் முழுக்க முழுக்க அக்குழந்தையை அறிந்த ஒருவரின் துணையுடனேதான் அதற்கான சிகிச்சை முறைகள் வடிவமைக்கப்பட வேண்டும். மேலும் கொடுக்கப்படும் பயிற்சிகள் அக்குழந்தையால் எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது, அதனால் எந்தளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது போன்றவற்றை உடனுக்குடன் பயிற்சியாளர் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் குழந்தைக்குக் கொடுக்கப்படும் பயிற்சியில் தேவையெனில் மாற்றங்களைச் செயற்படுத்த இலகுவாக இருக்கும். ஆகவே பயிற்சியாளரும் பெற்றோரும் இணைந்து செயலாற்ற வேண்டும். மருந்துகளின் பரிந்துரையோடு குழந்தையின் சமூக பழக்க வழக்கங்களில் மற்றும் நடத்தையில் மாற்றத்திற்கான பயிற்சியினை மேற்கொள்வார்கள். தொடர் பயிற்சியின் மூலமாக குழந்தைகளின் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் கொண்டுவர முடியும்.

ஆட்டிசம் வருவதற்குக் காரணம் இதுதான் என்று கணக்கிட்டுச் சொல்வதற்கு எதுவுமில்லை, ஆனால் பல்வேறு ஆராச்சிகளின் முடிவுப்படி பாரம்பரியம், நரம்பியல் மாற்றம், சிலவகையான தொற்று நோய்கள், பிறப்பின்போது ஏற்படக்கூடிய கோளாறுகள் எனப்பல்வேறு காரணிகளை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதே போலச் சுற்றுப்புறச் சூழல் காரணிகள்கூடக் காரணமாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். மூளையின் செல்களுக்கிடையே ஏற்படக்கூடிய ஒழுங்கற்ற தொடர்பு காரணமாகக்கூட இந்தக் குறைபாடு ஏற்படலாம் என்றும் கருதுகின்றனர். இக்குறைபாட்டின் காரணம் இதுவரை உறுதியாகக் கண்டறியப்படாத நிலையில், மரபணுக் குறைபாடு முதற்கொண்டு. சுற்றுச் சூழல் கேட்டினால் பாதிப்பு எனப்பல காரணங்களும் ஆராயப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இக்குறைபாட்டைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், குறைபாடுடைய பலரும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக இக்குறைபாடு குழந்தையின் இரண்டு அல்லது மூன்று வயதில் கண்டறியப்படுகிறது. இன்றுவரை குழந்தையிடம் வயதிற்கேற்ற வளர்ச்சியும் நடவடிக்கைகளும் இல்லாமல் போகும் பொழுது மட்டும்தான் இக்குறைபாட்டைக் கண்டறியும் நிலை இருந்துள்ளது. வேறுவகையில் மருத்துவப் பரிசோதனைகள், ஆய்வுகூடச் சோதனைகள் மூலம் கண்டறிய வாய்ப்பில்லை. குழந்தையின் வயதிற்கேற்ப நடவடிக்கை இல்லாததைக் கண்டு பெற்றோர் வளர்ப்பையும், குறிப்பாகத் தாயின் பொறுப்பற்ற தன்மையால்த்தான் இந்த நிலை என்றும் குறை சொல்வது உலக வழக்கம்.

தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் என்று கண்டறிந்த உடனே பெற்றோருக்கு ஒரு மலைப்பும், ஒருவித வெறுமையும் ஏற்படுவது இயற்கை. அப்படி இருப்பதனால் எவ்வித மாற்றங்களையும் கொண்டுவருவது கடினம். வேண்டுதல்களால் ஆகக்கூடிய காரியமுமல்ல. திருப்பதிக்குப் போய் மொட்டை அடித்துவிட்டால் சரியாகிவிடாது. எப்படியோ இப்படி ஒரு நிலை வந்து விட்டது என்று உடனடியாகத் தங்களைத் தேற்றிக் கொள்ள வேண்டியதும், மனம் தளராது முழுமூச்சுடன் செயல்ப்பட ஆரம்பிக்க வேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். பெற்றோர்கள் ஆட்டிசம் பற்றிப்புரிந்து கொள்ள வேண்டும். அதன் தன்மைகள், கிடைக்கும் சிகிச்சைகள் போன்றவற்றைப்பற்றித் தேடி ஆராய்ந்து கண்டுபிடித்துக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். சிகிச்சை அளிக்கும் டாக்டர், தெரப்பிஸ்ட் போன்றோரிடம் தமக்கு எற்படும் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து, தங்கள் கருத்தையும் கூறி ஆலோசித்துக் கொள்ள வேண்டும்.

பெற்றோர் எப்பொழுதும் தங்கள் குழந்தையைப் புரிந்த கொள்ள வேண்டும். ஆட்டிசப் பாதிப்பின் அளவு, அக்குழந்தையின் தனித் திறமை, என்னென்ன வகையான சென்சரி பிரச்சனைகள் இருக்கிறது, அவர்களின் விருப்பு வெறுப்புக்கள் போன்றவற்றை நன்கு தெரிந்திருத்தல் அவர்கள் சிகிச்சையை எளிதாக்கும். மேலும் யதார்த்தத்தைப் புரிந்து உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் அவமானம் எதுவுமில்லை. எனவே உண்மையை மறைக்க வேண்டியதில்லை. உறவினார்களிடமும் நண்பர்களிடமும் குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லிவிட்டால் தேவையற்ற தடுமாற்றங்களைக் களைய முடியும். நம்குழந்தையை ஏனைய சாதாரண குழந்தைகளுடன் ஒப்பிட்டு மனம் சோர்வுற வேண்டியதில்லை. நம் குழந்தை எதை எதையெல்லாம் செய்யவில்லை என்று எண்ணிச் சோர்வுறுவதிலும் அவனுடைய சின்னச்சின்னச் செயற்பாடுகளை கொண்டாடப் பழகவேண்டும். மனம் தளராது செயற்படவேண்டும். ஆட்டிசப்பாதிப்பு என்பது வரையறுக்கப்பட முடியாதது. எந்தக்கட்டத்திலும் இதற்குமேல் நம் குழந்தைக்கு வளர்ச்சி இல்லை என்ற முடிவுக்கு வந்த விடக்கூடாது. வாழ்நாளில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அக்குழந்தையால் எதையேனும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் மனம் தளராது அவனைக் கற்க ஊககுவிக்க வேண்டும். பல்வேறு வாய்ப்புக்களைக் குழந்தைக்கு அளிக்கவேண்டும். இசை, நடனம், ஓவியம், புதிர்கள், ஸ்கேட்டிங் போன்ற எல்லாவிதப் பயிற்சிகளுக்கும் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்த வேண்டும். அக்குழந்தையுள் ஒளிந்திருக்கும் ஏதேனும் ஒரு திறமை வெளிக்கொணரப்படலாம். அதுவே அக்குழந்தையின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்துவிடும். எனவே சலிப்புறாமல் திட்டமிட்டுப் பயிற்றுவிக்க வேண்டும். குழந்தையின் விருப்பு வெறுப்பு, மன ஆழுத்தம் போன்றவற்றை வெளிப்படுத்தும் விதத்தை உற்று நோக்கிப் புரிந்து கொள்ள முயல வேண்டும். சமூக ஊடாட்டத்திற்கான எல்லா செயல்களையும் எளிய விதிகளாக மாற்றிக் குழந்தைக்குக் கற்பிக்க வேண்டும். கோவிலுக்குப் போனால் எப்படி நடந்து கொள்ள வேண்டும், விருந்தினர் வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வணக்கம் சொல்வது எப்படி என்பன போன்றவற்றை முறையாக குழந்தை மனதில் பதிய வைக்க வேண்டும். பதிய வைப்பதுடன் அடிக்கடி நினைவுபடுத்த வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சொல்லாது துண்டு துண்டாகப் பிரித்துச் சொல்ல வேண்டும். மேலும் சக பெற்றோர்களுடன் தொடர்பிலிருப்பது தகவல்களைப் பரிமாறிக்கொள்வது மிகவும் விரும்பதக்கதும் முக்கியமானதும் கூட. இன்னொரு பெற்றாரின் அனுபவம் சிலசமயம் பேருதவியாகக் கூட அமையலாம். புதிய புதிய தகவல்களும் கிடைக்கலாம்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உலகின் கவனத்தைத் தம் பக்கம் இழுத்திருக்கிறார்கள். இவர்களைப்பற்றித் தெரிந்து கொள்வது உற்சாகம் தருவதாக இருக்கும். ஸ்டீபன் வில்ட்ஷயர் என்பவர் ஏரியல்வியூவில் பார்க்கும் ஒரு நகரத்தை 15 நிமிடத்தில் ஓவியமாக வரைவார். டெம்பிள் கிராண்டின் என்பவர் கொலராடோ பல்கலைக்கழகத்தில் விலங்கியல்த் துறைப் பேராசிரியராகவும் எழுத்தாளராகவும் இருக்கிறார். அமெரிக்காவில் இந்தியப் பெற்றொருக்குப் பிறந்த கிருஷ;ணன் நாராயணன் ஒரு எழுத்தாளராக இருக்கிறார். டார்வின், ஹிட்லர், மைக்கல் எஞ்சலோ, சீனிவாச ராமானுஜன், ஜார்ஜ் ஆர்வெல் போன்றோர்கள் ஆட்டிசம் குழந்தைகளாக இருந்திருப்பார்கள் என்று யூகிக்கப்படுகிறது.

ஆட்டிசம் பாதிப்புக் குழந்தைகளுக்காக ஐ.நா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. ஆட்டிசம் பாதிப்புடன் குழந்தைகள் பிறப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அதைத் தடுக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியதுடன் ஏப்ரல் 2ந் தேதியை ஆட்டிசம் விழிப்பணர்வு தினமாகவும் அறிவித்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் 2 ந் தேதி அன்று ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக அனைத்து நாடுகளும் அனுசரிக்கின்றன.

மூலிகைச் சிகிச்சையில் குணமாகும் ஆட்டிசம்
மருத்துவர் திரு.க.திருத்தணிகாசலம் என்பவர் மூலிகை மருந்துகள் மூலம் ஆட்டிசத்திற்கு மருத்துவம் பார்க்கலாம் என்று ஒரு முழுமையான புத்தகத்தினை எழுதியுள்ளார். அதன்படி ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை முழுக்க முழுக்க பாதிப்பு எல்லாம் நீங்கி இயல்பான நிலைக்கு வந்துவிடும் என்றும் விசேட பள்ளி தேவையில்லை என்றும் கூறுகிறார். ரத்தினா சித்த மருத்துவமனையில்த்தான் உலகிலேயே முதன்முறையாக ஆட்டிசத்தை குணப்படுத்தியதாகக் கூறுகிறார். யார் குத்தியும் அரிசி ஆகட்டும்.
 








 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்