நினைவாற்றலை வளர்ப்போம்

திருமதி செ.யோகரத்தினம். M.A

மறதி நோய் என்னும் அல்சைமர் / டிமென்சியா நோய்
மிழர்கள் நினைவாற்றல் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது தொன்மைத் தமிழை ஆராயும் போது தெளிவாக விளங்குகிறது. அகப்பொருள் பற்றிய இலக்கண நூல்களில் தொலகாப்பியத்திற்குப் பின்னர் தோன்றிய சிறப்பு மிக்க நூல் இறையனார் அகப்பொருள். அதுவே இறையனார் களவியல் என்னும் நூல், தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் இலக்கண நூல். இதற்கு நக்கீரர் என்பவர் உரை எழுதியுள்ளார். இதனை இறையனார் களவியல் உரை என்கிறோம். இந்தநூலுக்கு உரைகண்ட சங்கப் புலவர்கள் பலர் என்று இந்த உரை நூலே குறிப்பிடுகிறது. இவரது உரையில் காதல் வாழ்க்கை பற்றிய விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இந்நூலின் உரையாசிரியர் தமிழை வளர்க்கும் உயர்ந்த நோக்கோடு பண்டைக் காலத்துப் பாண்டிய மன்னர்கள், தமிழ்ப் புலவர்கள் பலரையும் ஒன்று கூட்டி தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழைப் போற்றிய செய்தியைத் தெரிவிக்கிறார். மேலும் தமிழ்ச் சங்கங்களின் அமைப்பு, செயல்பாடு ஆகியவைபற்றிய விரிவான செய்திகளையும் தெரிவிக்கிறார். அக்காலத்தில் எழுந்த நூல்களுக்கு இலக்கணமாக இருந்தது அகத்தியம். நக்கீரர் உரைகண்ட பின், இந்த உரை, ஒன்பது தலை முறை வரை வாய்மொழியாகவே வழங்கி வந்துள்ளது. அதனால் அக்காலத்தவர்களின் நினைவாற்றலை நாம் போற்றாது இருக்க முடியாது. அந்த ஒன்பது தலை முறையையும் தெரிந்து கொள்வது அவசியம்.

  • 1 மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
     

  • 2. அவர்தம் மகனார் கீரங்கொற்றனார்க்கு உரைத்தார்.
     

  • 3. அவர் பாடியங்கொற்றனார்க்கு உரைத்தார்.
     

  • 4. அவர் செல்வதாசிரியர் பெருஞ்சுவனாற்கு உரைத்தார்.
     

  • 5 அவர் மணலூர் ஆசிரியர் பளியங்காய்ப் பெருஞ் சேந்தனாற்கு உரைத்தார்.
     

  • 6 அவர் செல்லூர் ஆசிரியர் ஆண்டை பெரங்குமரனாற்கு உரைத்தார்.
     

  • 7. அவர் திருக்குன்றதாசிரியற்கு உரைத்தார்.
     

  • 8. அவர் மாதவளனார் இளனாகனார்க்கு உரைத்தார்.
     

  • 9. அவர் முசிறி ஆசிரியர் நீலகண்டனாற்கு உரைத்தார்.

இவ்வாறு நக்கீரர் உரை ஒன்பது தலைமுறை வரை வாய்மொழியாகவே வழங்கி வந்துள்ளது. அதனால் காலந்தோறும் பல கருத்துக்கள் உரையில் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு என்று சிலர் கூறினாலும், நாம் அதைப் பொருட்படுத்தாது அந்த ஒன்பது தலைமுறையினரின் நினைவாற்றலைப் போற்ற வேண்டும். அதனைக்கண்டு நாமும் எங்கள் தலைமுறையினரை எண்ணிப் பெருமைப்படுவதுடன், நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முயல்வோம்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரிகன் பதவியிலிருந்து ஓய்வு பெற்று லாஸ் ஏஞ்சல்சில் வசித்து வந்த வேளையில் புற்று நோயால் தாக்கப் பட்டதுடன் அல்சைமர் நோயினாலும் பீடிக்கப்பட்டார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக நரம்பு மண்டலமும், மூளை செல்களும் பாதிக்கப்பட்டு நினைவு இழந்த நிலையில் படுக்கையில் இருந்தார். இவருக்கு அல்சைமர் நோய் தாக்கிய போது இவருடைய மனைவி இவரிடம் தனக்கு அவரிடம் இருந்த அன்பை வெளிக்காட்டினார். இவருடைய கணவர் இறந்த பின் அந்த நோய் குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த உலகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தவர் நான்சி ரிகன். அல்சைமர் நோய்க்கு எதிராக அவர் ஆற்றிவந்த பிரச்சாரமும் போராட்டமும் பல்வேறு நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும் பலரது உயிர்களை பாதுகாப்பதிலும் உறு துணையாக இருந்துள்ளது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது, இந்த நோய் யாருக்கும் வரலாம், எப்பவும், வராமல் பாதுகாப்பாகவும் இருக்கலாம் என்பதாகும்.

ஞாபக மறதி என்பதை டிமென்சியா என்கிறார்கள். மூளையின் செயல்த்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும். நினைவாற்றல் பாதிக்கப்படுவதுடன் எண்ணும் ஆற்றல், சிந்தனை செய்யும் ஆற்றல், மொழித் திறன், தீர்மானம் எடுக்கும் சக்தி ஆகியவை பாதிக்கப்படும். வயது ஆக ஆக மறதிநோய் ஒருவரைப் பாதிக்கும். குறைந்த வயதினர்க்கு வருவது அபூர்வம். ஆனால் நினைவாற்றல் திறன் போதாமையால் பள்ளி மாணவர்கள் பரீட்சையில் பின்தங்குவது அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மூளைக்கு இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் மறதி, மூளைப் பாதிப்பு. மூளைக் காயம், மூளை அளர்ச்சி, மூளைக்கட்டிகள், மது அருந்துதல், இரத்த சர்க்கரை, உப்பு, கல்சியம், ஆகியவற்றால் ஏற்படும் மாறுதல்கள், வைட்டமின் பி12 குறைபாடு, மூளையில் நீர்த் தேக்கம் ஏற்படுதல், சில வகை மருந்துகள் ஆகிறவற்றால் மறதி ஏற்படலாம்.

மறதி ஏற்படுவதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஞாபக சக்தி என்பது தாம் அனுபவித்த, கற்றறிந்த விடயங்களைத் தேவைப்படும் போது மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவரும் ஒரு செயற்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் அறிவாற்றல் மிக்கவனாக எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்துவான். மறைந்த கலைஞர் மு.கருணாநிதி பல சாதனைகள் புரிவதற்கு அவருடைய கூர்மையான நினைவாற்றல் அவருக்கு உறதுணையாக நின்றுள்ளது என்பது நிதர்சன உண்மை. நினைவாற்றல் குன்றுவதால் பல சந்தர்ப்பங்களில் தோல்விகள் ஏற்பட்டுப் பின்தங்கிவிட நேரிடும். குறிப்பாகப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில், நேர்முகத் தேர்வில் நினைவாற்றல் கை கொடுக்கும். பொதுவாக நினைவாற்றல் என்றால் மூளையைக் குறிக்கும். ஒரு விஷயத்தை மறக்காமல் இருப்பது மட்டுமல்ல நினைவாற்றல், மனதில் பதியப்பெற்று இருக்கின்ற அறிவிலிருந்து சரியான விபரத்தைத் தேவைப்படும் நேரத்தில் வெளிப்படுத்தும் திறமைதான் நினைவாற்றல் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒரு மாணவனை எடுத்துக் கொண்டால், பாடங்களை நன்றாகப் படித்துவிட்டு தேர்வுக்குச் செல்கிறான். அவன்படித்ததிலிருந்து கேள்விகள் வருகின்றன. ஆனால் தேர்வறையில் இருக்கும் போது பதில்கள் நினைவுக்கு வரவில்லை. இதே போலப் பலருக்கும் பல விஷயங்கள் நினைவிலிருக்கும், ஆனால் தேவையான நேரத்தில் குறிப்பிட்ட விஷயத்தை நினைவிற்குக் கொண்டுவர முடியாமல்த் தவிப்பார்கள். தேவையான நேரத்தில் தேவையான செய்தி உடனடியாக நினைவுக்குக் கொண்டு வரமுடியாது போதலே ஞாபக மறதி. சிலர் சிலவிஷயங்கள் தமக்குத் தேவையற்றதெனக் கருதித் தலையிலே போட்டுக் கொள்வதேயில்லை. இதனை ஞாபக மறதி என்று சொல்லிவிட முடியாது. சில விஷயங்கள் மறப்போம் மன்னிப்போம் என்று விட்டுத்தள்ளுவதும் உண்டு. இது தேவை கருதி மறப்பதாகும். இந்த நிலையில் மறதி ஒரு வரப்பிரசாதம்.

மனிதனின் நினைவாற்றலுக்கும் மனதை ஒருநிலைப் படுத்துதலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனதை எந்த அளவுக்கு ஒருமுகப்படுத்தி ஒரு விடயத்தில் கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு அது மனதிலே பதிகின்றது. நாம் ஒன்றிற்கு மேலான வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் போது கவனம் சிதறடிக்கப்படுகிறது. அதனால் அவற்றை தேவைப்படும் போது நினைவுக்குக் கொண்டு வர முடிவதில்லை. பாடசாலை மாணவர்கள் தேர்வு எழுதும் போது, பதில் உடனுக்கு வராத வினாவைப் பின் தள்ளிவிட்டு முதலிலே நினைவுக்கு வந்த பதிலை எழுதுகிறார்கள். நேரப் பிரச்சனை அவர்களுக்கு. பின்பு நினைவைப் புதிப்பித்து நினைவு படுத்தி எழுதுகிறார்கள்.

மூளையின் சக்தியை அளவிட முடியாது. உலகிலே மிக மிக நுட்பமானதும் அதிசயமானதும், மனித மூளையின் அமைப்பும் அதன் செயற்பாடுமே. நமது வாழ்நாளில் பட்ட அனுபவங்களை மூளை சேகரித்து வைத்துக் கொண்டேதான் இருக்கும். அவ்வப்போது வேண்டியதைப் பயன்படுத்தும். அத்தனை திறன் கொண்டது மூளை. ஆசிரியர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாமல் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கும் மாணவனைத் தோப்புக்கரணம் போட வைக்கிறார் ஆசிரியர். பாடசாலைக்குப் போகும் போது வழியில் விநாயகரைத் தரிசித்து தலையிலே மூன்று முறை குட்டி தோப்புக்கரணம் போட்டுவிட்டுப் போகும்படி அம்மா சொல்லுவார். இவையெல்லாம் காரணமாகத்தான். வகுப்பிலே தூங்காமல் இருப்பதற்கும் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்குமே. மறதிக்குச் செய்யப்படும் அப்பியாசங்கள். தலையைச் சொறியும்போது மூளை நரம்புகள் புத்துயிர் பெறுகின்றன. தோப்புக்கரணம் நரம்புத் தொகுதியைப் புத்துயிர் ஊட்ட நல்ல யோகாசனம். அப்பியாசங்களுடன் சத்தான உணவும் மூளையை துரிதமாக வேலை செய்யத் தூண்டும்.

'ஞாபக மறதி ' எனும் பலவீனம். இல்லாத மனிதன் உலகில் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியோர் வரை மறதி இல்லாத மனிதர் இல்லை. ஆனால் அது மனிதனுக்கு மனிதன் மறதியின் அளவுகளும். தன்மைகளும், பாதிப்புக்களும் மாறுபடும். மறதிகள் பலவிதம். சிலர் பழகிய மனிதர்களின் பெயர்கள், முகங்கள் அடிக்கடி மறந்து விடுகின்றனர். சிலர் தமது உடைமைகள் பொருட்கள் எங்கே வைத்தோம் என்பதை மறந்துவிடுகின்றனர். சிலர் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளைக் கூட மறந்து விடுகின்றனர். சிலர் படித்த நூல்கள், நூலிலுள்ள முக்கிய கருத்துக்கள் போன்றவற்றை மறந்துவிடுகின்றனர். சிலர் கடந்த கால நிகழ்வுகளை மறந்துவிடுகின்றனர். சிலர் நிகழ்காலத்தில் சிறிது நேரத்திற்கு முன் நடந்தவைகளைக் கூட மறந்து விடுகின்றனர்.

நம்முடைய சிந்தனை, நினைவுகள், நாம் நினைத்துச் செயற்படக்கூடிய அனைத்திற்கும் பெரு மூளையே காரணமாக இருந்து செயற்படுகிறது. மனித மூளையின் செயல்களில் தாக்கங்களை உண்டு பண்ணும் காரணிகளை நாம் இனங்கண்டு கொண்டால் ஞாபக மறதி, சிந்திக்கும் திறன் குன்றிய நிலை, சோம்பேறித்தனம் என்பவற்றை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவற்றின் முக்கிய காரணிகளாக கருதப்படுபவை தகுந்த போசாக்கின்மை, மூளை நரம்புகளில் ஏற்படும் சிதைவு, உற்சாகமின்மை, உடல் அப்பியாசமின்மை, என்பனவாம். இவற்றிற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்கான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் ஞாபக சக்தியையும், சிந்திக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும். இவற்றுடன் ஆர்வமின்மை, முயற்சியின்மை, தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணம், பயம், அதிர்ச்சி, மனச்சோர்வு, துக்கம், வெறுப்பு, போன்ற உணர்ச்சிகள் மற்றும் மனப்பாதிப்புக்கள், மன ஒருமையின்மை, கவனக்குறைவு, கடந்த காலச் சிந்தனைகள் அல்லது எதிர்காலக் கனவுகளில் மூழ்குதல், புகை, மது, போதைப் பொருள் பழக்கங்கள், உடல் நலக் குறைபாடுகள், உடல் நோய்கள், என்பன மனிதனின் சிந்திக்கும் திறனை அதிகம் பாதிக்கின்றன.

நாம் சேகரிக்கும் தகவல்களை முறைப்படி தொகுக்காவிட்டால் தேவைப்படும் போது வெளிக்கொணர்வது கடினம். பள்ளி மாணவன் பாடங்களை எப்படிக் கிரகித்துத் தொகுத்து வைத்திருக்கிறானோ அப்படியே நாமும் கவனமாக இருக்க வேண்டும். இது நமக்குத் தேவையற்றது என்று கவனக் குறைவாக இருந்தால் நினைவில் நிற்காது. மனிதனுக்கு நினைவாற்றல் குறைவதற்கு பிரதான காரணம் கவலைகளே. இரத்த ஓட்டம் குறைவால் மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்கப் பெறாமையும் ஒரு முக்கிய காரணம். மூளை சோர்ந்து விடாது கவனித்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும். மனதை எந்த அளவுக்கு ஒருமுகப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும்.

சாதாரணமாக மறதி என்பதை சாதாரணம் என்று தான் நாம் எடுத்துக் கொள்வது. சிலர் இயற்கையாகவே மறதியைக் கொண்டுள்ளனர். அதேபோல் சிலருக்கு கூர்மையான ஞாபகசக்தி இருக்கும். அனைவருக்குமே நல்ல ஞாபக சக்தி இருக்காது என்பது உண்மையே. இருப்பினும் பெரியவர்களுக்கு ஏற்படும் மறதிக்கான காரணத்தை லேசாக விடக்கூடாது. நாள்பட நாள்பட மறதியின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றால் மறதிக்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். வயதாகும் போது அதற்கேற்ப மூளையும் தேயும். குழந்தைகளின் மூளை ஸ்பாஞ்சைப் போன்றது. தங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் அவர்களால் ஈர்த்துக்கொள்ள முடியும். வயது ஏற ஏற அவர்கள் மூளையில் பல விஷயங்கள் குடியேறும். இதனால் மறதியும் வந்துவிடும். மன அழுத்தம், தூக்கமின்மை போதைப் பொருட்கள் போன்றவை மூளையின் கூர்மையை இழக்கச் செய்யும்.

உடலிலுள்ள பாகங்கள் அனைத்துக்கும் வேலை செய்யக் கட்டளை இடுவது மூளை என்னும் நரம்பு மண்டலமே. உடல் உறுப்புக்கள் அனைத்தையும் பாதுகாக்க இந்த உறுப்பு இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று அவசரக் கட்டளையிடும் தன்மை மூளைக்கு உண்டு. தன்னியல்புச் செய்கை
(reflex action)  மூளையின் செயற்பாடே. கண்ணில் தூசிவிழும் என்ற சூழலில் இமைகளை மூடவைத்துக் கண்ணைப் பாதுகாக்கக் கட்டளை இடுவது மூளையே. இவ்வாறு தலைமைப் பொறுப்பைக் கச்சிதமாக, மிகுந்த கவனத்துடன் அழகாக செய்துவருவது மூளையே. ஆகவே மூளையை கவனமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும். மூளையை பாதிக்கக் கூடிய காரணிகள் பல. காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. மிக அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. புகை பிடிக்கக்கூடாது. புகைபிடித்தல் அல்ஸைமர் நோய் வருவதற்குக் காரணமாகிறது. அதிக அளவு சர்க்கரை உணவில் சேர்க்கக் கூடாது. இது மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். சுத்தமான காற்றையே சுவாசிக்க வேண்டும். மூளைக்குப் போதுமான பிராணவாயு கிடைக்கவேண்டும். மூளைக்கு ஓய்வு கொடுக்க நல்ல தூக்கம் அவசியம். தூங்கும்போது தலையை மூடிக்கொண்டு தூங்கக்கூடாது. போர்வைக்குள் தங்கும் கரியமலவாயு மூளையைப் பாதிக்கும். உடல் நோயுற்றுப் பாதிப்படைந்த நிலையில் மூளைக்கு அதிகம் வேலை கெடுக்கக்கூடாது. சிந்தனைகள் மூளைக்கு வேலை கொடுப்பதாக இருந்தால் மூளை வலிமை பெறும். அறிவ பூர்வமான சிந்தனைகளில் ஈடுபடுவதால் மூளை வலுவடையும்.

முதுமை மறதி என்பது ஒரு குறிப்பிடத்தக்க நோய்க்குறியீடு எதையும் கொண்டிருக்காத குறைபாடாகும். இதில் ஞாபகத் திறன், கவனம், மொழி, சிக்கல் தீர்த்தல் போன்ற உளவியல் குறைபாடு ஏற்படக்கூடும். குறைந்தது ஆறுமாத கால அளவுக்கு இந்தக் குறைபாடுகள் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று நோயைக் கண்டறிதல் வேண்டும். உளத்தடுமாற்றம், எல்லாவிதமான பொதுக் கவனிப்புத் திறன் குறைதல், வாரத்தின் எந்த நாள், எந்த ஆண்டு, இருக்கும் இடத்தை அறியாத நிலை, சுற்றியுள்ளவர்களை அறியாத நிலை போன்ற பல நிலைகளில் குழப்பமடைந்திருப்பார்கள். முதுமை மறதி என்பது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நிலை வரையிலும் சிகிச்சை அளிக்கப்படக் கூடியது. ஆனால் பொதுவாக பல் வேறுபட்ட காரணிகளால் தீர்க்க முடியாத நோயாக உள்ளது.

இந்நோயின் பொதுவான அறிகுறிகளாவன, தெரிந்த ஆட்களின் பெயர், வாழ்விடம் மறந்த போதல். ஆரம்பநிலையில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும். தன்னுடைய வயது மறந்து போகும். மொழித் திறன் அற்றுப் போகும். புதிய மனிதர்களைச் சந்திக்கும் போதும். புதிய சூழலைச் சந்திக்கும் போதும் குழப்பம் எற்படும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சுகாதாரப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க மாட்டாது தடுமாறுதல், புதிய விஷயங்களை அறிந்து கொள்ளச் சிரமப்படல் போன்ற அறிகுறிகள் தென்படும். இடைநிலை அறிகுறிகள்: நோய் தீவிரமடையும் போது பிரச்சனைகளும் அதிகமாகும். அதனால் நாளாந்த நடவடிக்கைகளில் சிரமம் ஏற்படும். மறதி அதிகமாகும். துணையின்றி வாழச் சிரமமாக இருக்கும். தன்னையும் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும். கடைத் தெருவுக்கு சென்று திரும்ப முடியாது இருக்கும். குளிக்க, கழிவறை செல்லத் தனித்து இயங்க முடியாத நிலை ஏற்படும். தான் யார், எங்குள்ளோம் என்புதும் புரியாது. இறுதி நிலை அறிகுறிகள்: இந்த நிலையில் நோயாளி முற்றிலுமாகக் குடும்பத்தினரைச் சார்ந்திருப்பர். மறதி அதிகமாகவும் உடல் நலக் குறைவும் காணப்படும். சுயமாக இயங்க முடியாதும் இருப்பர். தானாக உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும். உறவினர் நண்பர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும். தன்னுடைய பிள்ளைகளையே அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும். குழப்பமான மன நிலையில் இருப்பார், தானாக நடக்கமுடியாத நிலை ஏற்படும். பொருட்களை அடையாளம் கண்டு சொல்ல முடியாத நிலை உண்டாகும். எது செய்கிறோம் ஏது செய்கி றோம் என்பது தெரியாது. ஒன்றுக்கு இரண்டிற்குப் போவதில் கட்டுப்பாடு இருக்காது. தான் யார் என்பது தெரியாது. தன்னையே மறந்த நிலையில் இருப்பது தான் அல்சைமர் என்னும் கொடிய நோய்.

பழைய காலத்தில் மறதியை தடுக்கும் சிறந்த மருந்தாக நெய் இருந்தது. வல்லாரை, அதிமதுரம், மண்டூகபரணி, சங்குபூ, கொட்டம், திப்பிலி, வெண்தாமரை, கல்யாணப் பூசணிச் சாறு, சிற்றமிர்து, பால், தயிர், தியானம், மந்திரம், தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் போன்றவை ஆயுர்வேதத்தில் நினைவாற்றலைப் பெருக்கும் மருந்துகளாக இருந்தவற்றில் சில. பிற்காலத்தில் ஆங்கில மருத்துவ முறைகள் பிரபல்யமடைந்து வர ஆயுர்வேதமுறைகள் கைவிடப்பட்டு விடப்பட்டன. இருந்தும் தற்காலத்தில் ஆயுர்வேத முறைகள் சிறிது சிறிதாக உயிர்ப்பிக்கப் பட்டு வருகின்றன. உணவு முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பலனும் கிடைக்கிறது. ஆனால் ஊட்டில் சில கற்றுக் குட்டிகள் குட்டையைக் குளப்பி விடுகிறார்கள். நம்பிக்கையும் கெட்டுவிடுகிறது.

நினைவாற்றல் அதிகரிக்கப் பாட்டி வைத்தியம் போன்று சில கைமருந்துகள் உண்டு.

  • 1) 10 பாதாம் பருப்பை ஊறவைத்து இரவில் சாப்பிடுதல்.
     

  • 2) உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல். பிஞ்சு வெண்டைக்காயை பச்சையாகவே சாப்பிடுதல்.
     

  • 3) ஒரு கப் எலுமிச்சைச் சாற்றில் மூன்று கிராம் வால்மிளகு சேர்த்துச் சாப்பிடுதல்.
     

  • 4) வல்லாரை இலையை நெய்யில் வதக்கி மிளகு சேர்த்து சாப்பிடுதல்.
     

  • 5) தினமும் ஐந்து துளசி இலை சாப்பிடுதல்.
     

  • 6) தினம் கல்யாணப் பூசணிச் சாறு 100 மி.லி, 1சிட்டிகை ஏலக்காய் பொடிசேர்த்து ஒரு கப் சாப்பிடுதல்.
     

  • 7) 5 கிராம் அதிமதுரச் சூரணம் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிடுதல்.
     

  • 8) சீந்தில்கொடி பால்கஷhயம் 100 மிலி குடித்தல்.
     

  • 9) உணவில் நெய் சேர்த்துச் சாப்பிடுதல்.
     

  • 10) புதினா கீரை சாப்பிடுதல்.

நினைவாற்றலில் இரண்டு வகைகள் உண்டு.

  • 1. குறகிய கால நினைவாற்றல்: எமது மூளையில் அத்தனை தகவல்களும் தொடர்ந்து சேமித்து          வைக்கப்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே சேமித்து வைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்தத் தகவல்கள் மறக்கப்பட்டுவிடுகின்றன. இது குறுகிய கால நினைவாற்றலாகும்.
     

  • 2. நீண்ட கால நினைவாற்றல்: எமது மனதிற்கு மிகவும் பிடித்தவைஅல்லது மனதை மிகவும் பாதித்தவை, நமது தொழிலுக்கு தேவையானவை போன்றவை நீண்டகால நினைவுகளாகப் பதிந்து விடுகின்றன.

நினைவாற்றலைப் பலப்படுத்துவதற்கு நாம் செய்யவேண்டியவை:

  • 1. தன்னம்பிக்கையை பயற்சியாலும் முயற்சியாலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
     

  • 2. எந்த ஒரு அலுவலிலும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
     

  • 3. ஊக்கமாக இருத்தல் வேண்டும்.
     

  • 4. விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். யோகாசனம், சமயவழிபாடு கைகொடுக்கும்.
     

  • 5. எந்த ஒரு விடயத்தையும் இலகுவாக மனத்தில் பதியும்படி நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
     

  • 6. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
     

  • 7. அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வருதல் வேண்டும்.
     

  • 8. வயதாக ஆக நினைவாற்றல் குறையத்தான் செய்யும். பணியில் ஈடுபட்டிருப்பவர் ஓய்வு பெற்ற பின் விரைவில் நோய்களுக்கு ஆளாவது இயற்கை. தொடர்ந்து வேறு ஏதாவது ஒரு பணியில் ஈடுபட்டால் மூளைக்கு வெலை கிடைக்கும், நினைவாற்றலும் ஆரொக்கியமும் மேன்மை அடையும். இவர்கள் எண் விளையாட்டு, குறுக்கெழுத்துப் புதிர் போன்ற விளையாட்டுக்கள் மூலம் நினைவாற்றலை மீட்டெடுக்க முடியும் என நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் உண்ணவேண்டிய ஊட்டச்சத்துணவுகளையும் பரிந்துரைத்துள்ளனர். மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. ஒரு நாளைக்கு பத்து இலட்சம் தடவைகளுக்கு மேல் நமது சிந்தனைகளை வகைப்படுத்தும் வேலையை நமது மூளை செய்து கொண்டிருக்கிறது. தினசரி நமது உணவில் கிடைக்கும் மொத்தக் கலோரியில் முப்பது சத விகிதத்தை மூளை பயன்படுத்துகிறது. எனவே மூளை நன்கு செயல்பட வேண்டும் எனின் மாச்சத்துப் பொருட்களில் உள்ள குளுக்கோசிலிருந்துதான் தேவையான சக்தி தொடர்ந்து கிடைக்க வேண்டும். இந்த சத்துணவில் குறைவு ஏற்படும் போது ஞாபக சக்தியில் சிக்கல் வந்துவிடும். இதமட்டுமல்ல இரத்த ஓட்டம் தேவையான ஆக்சிசனை மூளைக்கு விநியோகித்து புத்துணர்ச்சி ஏற்படுத்துவதும் முக்கியமானது. தேவையான சத்துணவு கிடைக்காத போதும், மூளைக்கு அக்சிசன்; கிடைப்பது குறைந்த போதும் ஞாபக சக்தியில் குறைபாடு ஏற்படுகிறது. இதைத் தடுக்கச் சிறந்த உணவு முறையை மருந்தைப் போல்ப் பயன்படுத்தினால் புத்திக்கூர்மையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

    'மனத மூளைக்கு மிக அபார திறமை இருக்கிறது' என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மனித மூளையில் இரண்டு 'குயிண்டிலியன்'
    (Quintilion) அளவுக்கு சின்ன சின்ன செய்திகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க முடியும் என்றும் கூறுகிறார்கள். அதாவது 'ஒன்று' என்ற எண்ணிற்குப் பின் பதினெட்டுப் பூஜ்யங்களைச் சேர்த்தால் எவ்வளவு மதிப்போ அத்தனை மதிப்பு. அதாவது மனித மூளையின் சக்தி 40 விதமான மொழிகளை நினைவில் கொள்கின்ற அபார சக்தி கொண்டது. நம் மூளையில் பதிய வைக்கும் விடயங்களை எளிதில் நினைவிற்குக் கொண்டவர நாம் நன்கு பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பிட்ட செய்திகளை குறிப்பிட்ட நேரத்தில் நினைவில் கொண்டுவரும் நினைவாற்றலை ஒரு கலையாக வளர்த்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் ஒரு பொருள் சிறப்பான பயனை அளிக்கும். அப்படியே விட்டுவிட்டால் அது துருப்பிடித்துவிடும்.

    அவதானம் எனப்படும் நினைவாற்றல்க் கலை தமிழர்தம் பாரம்பரிய சொத்து. தமிழ் இலக்கிய இலக்கணங்களும் வரலாறும் இவ்வரிய கலையினாலேயே பன்னெடும் காலம் காப்பாற்றப்பட்டு வந்துள்ளன. இவ்வரிய கலை தமிழர்தம் அலட்சியத்தால் அழிவின் விளிம்பில் உள்ளது. எட்டு வகையான நினைவாற்றல் செய்பவர்களை அஸ்டவதானி என்பர். பத்து வகை செய்வோர் தசாவதானி. ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி நடக்கக்கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி முடிவில் தொகுத்துக் கூறுவதாகிய இக்கவனக்கலை நினைவாற்றலின் ஓர் உயர்ந்த வடிவமாகும்.

    தமிழர்தம் நினைவாற்றல் பற்றி இறையனார் அகப்பொருளுரை ஒன்பது தலைமுறைவரை பேணிக் காக்கப்பட்டமை நாம் அறிவோம். அதனை மனதில்க் கொண்டு நாமும் தமிழர்களாக நமது பாரம்பரிய சொத்தான நினைவாற்றலைப் பேணிக் காப்போமாக.

     


திருமதி செ.யோகரத்தினம். M.A





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்