உலகை அச்சுறுத்தும் வைரஸ் நோய்கள்

கலாநிதி பால. சிவகடாட்சம்

தாம் உருவாக்கிய மைக்ரோஸ்கோப்பின் உதவியுடன் அன்ரன் வான் லியூவென்ஹோக் என்னும் விஞ்ஞானி எமது கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய உயிரினங்களும் உலகில் வாழுகின்றன என்னும் உண்மையைக் கண்டறிந்தார். இற்றைக்கு 324 ஆண்டுகளுக்கு முன்னர், 1696 ஆம் ஆண்டு செப்டெம்பெர் மாதம் 17ஆம் தியதி பக்ரீரியா (Bacteria) என்று அறியப்படும் நுண்ணுயிர்கள் பற்றி இந்த விஞ்ஞானிதான் உலகுக்கு முதன்முதலாக அறிவித்தார்.

 

பக்ரீரியாக்கிருமியைக் கண்டறிந்து உலகுக்கு அறிவித்த  அன்ரன் வான் லியூவென்ஹோக்கும் அவர் பயன்படுத்திய மைக்றொஸ்கோப்பும்

இவ்வறிவித்தலைத் தொடர்ந்து சாதாரண மைக்ரோஸ்கோப்பின் மூலம் பார்க்கக்கூடிய பக்ரீரியாக்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான நுண்ணுயிர்கள் கண்டறியப்பட்டன. கி.பி. 1860ஆம் ஆன்டளவில் லூயி பாஸ்ரர் என்னும் விஞ்ஞானி பக்ரீரியாக் கிருமிகள் மனிதருக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடியன என்பதைத் தனது பரிசோதனைகள் மூலம் எடுத்துக்காட்டினார்.  எனினும் பக்ரீரியாவிலும் மிகச்சிறிய கிருமிகளும் உள்ளன என்னும் உண்மையை அறிந்துகொள்ள மேலும் பல ஆண்டுகள் எடுத்தன. இந்த மிகநுண்ணிய கிருமிகள்தான் இன்று வைரசுக்கள் (Virus) என்று அறியப்படுபவை.

 

வைரஸ் ஒப்பீட்டளவு

வைரஸ் நோய் முதன் முதலாக ஒரு தாவரத்தில் தான் கண்டறியப்பட்டது. புகையிலைக்கு சித்திரவடிவு என்னும் நோய் ஏற்படுவதுண்டு. இது பக்ரீரியாக் கிருமியொன்றினால் ஏற்படுவதாகத்தான் முதலில் நினைத்தார்கள். ஆனால் பக்ரீரியாவையும் வடித்தெடுக்கக்கூடிய அரிதட்டு ஒன்றில் நோய்பிடித்த புகையிலையின் சாற்றை வடித்தெடுத்த பின்னரும் அந்த இலைச்சாறு புதிய புகையிலைக்கன்றுகளுக்கு அதே நோயைப் பரப்புவதைக் கண்டறிந்தார் டிமித்ரி ஐவனோஸ்கி (Dmitry Ivanovsky) என்னும் ஒரு ஆய்வாளர். இதன் பின்னரேயே ஒப்பீட்டளவில் பக்ரீரியாவிலும் மிகச்சிறிய கிருமிகளும் உள்ளன என்ற உண்மை உணரப்பட்டது. இக்கண்டு பிடிப்பு 1892இல் நிகழ்ந்தது. இவ்வாறு முதன்முதலாகக் கண்டறியப்பட்ட வைரஸ் நோய்தான் புகையிலைக்கு ஏற்படும் ‘ருபாக்கோ மொசேய்க் வைரஸ் (Tobacco Mosaic Virus = TMV) என்பதாகும். தாவரங்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் மனிதருக்கும் வைரசுக்களினால் நோய்கள் தோற்றுவிக்கப்படுகின்றன என்பது பற்றிய விபரங்கள் படிப்படியாக வெளிவந்தன.

 

‘ருபாக்கோ மொசேய்க் வைரஸ்’ (TMV)   தொற்றிய புகையிலை

பெரியம்மை தாக்கிய ஒருவர் (smallpox)

தனது சந்ததியைத் தானாகவே பெருப்பித்துக்கொள்வது உயிர்வாழ் உயிரினங்களுக்கே உரிய ஒரு தனி அடையாளம்.  இதன் அடைப்படையில் வைரசுக்கள் எனப்படும் நுண்ணுயிர்களும் உயிர் வாழ்வனாகக் கணிக்கப்படலாம். எனினும் இந்த வைரசுக்கள் பிற உயிரினங்களுள் ஏதாவது ஒன்றினுள் அடைக்கலமான பின்னரேயே தமது சந்ததியைப் பெருப்பித்துக் கொள்ளமுடியும். வைரசுக்கள் வாழ்வதற்கு வேறு ஏதாவது ஓர் உயிரினம் தேவைப்படுகின்றது. அந்த உயிரினம் பக்ரீரியாவாக இருக்கலாம், மரமாக இருக்கலாம், விலங்காக இருக்கலாம், மனிதனாகவும் இருக்கலாம். நிரந்தர ஒட்டுண்ணியாக வாழ்ந்துகொண்டு தனது சந்ததியைப் பெருக்கும் வைரஸ் இந்தவிடயத்தில் மற்றைய உயிரினங்களினின்றும் வேறுபட்டு நிற்கின்றது. எப்போதும் ஒட்டுண்ணியாக வாழ்வதால் வைரசுக்கள் மற்றைய உயிரினங்களுக்கு நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்பும் அதிகமாகும்.

கண்ணுக்குத் தெரியாத கிருமிகளான வைரசுக்களின் இருப்பு அறியப்படாமல் இருந்த காலப்பகுதியில் இனந்தெரியாத காரணிகளால் தொற்று நோய்கள் ஏற்பட்டு அவை வேகமாகப் பரவி உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டபோது இந்தத் தொற்று நோய்கள் தெய்வங்களின் கோபத்தினால் ஏற்படுவதாக மக்கள் நம்பினர். தெய்வத்தைச் சாந்தப்படுத்தப் பல்வேறு சடங்குகளும் நிகழ்த்தப்பெற்றன. பழந்தமிழர் மத்தியில் வேகமாகப் பரவும் தொற்றுநோய்கள் பலவும் அம்மன் கோபத்தினால் ஏற்படுவதாக நம்பப்பட்டன. இவற்றுட்சில அம்மன் பெயராலேயே  குறிப்பிடப்பட்டன. உதாரணமாகப் பெரியம்மை, சின்னம்மை, செங்கமாரி போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.

வைரஸ் நோய்கள் மிக நீண்ட கால வரலாற்றை உடையன. கிறீஸ்துவுக்கு முன்னர் 1150 ஆம் ஆண்டளவில் எகிப்தை ஆட்சிபுரிந்த ஐந்தாம் ராம்ஸெஸ் மன்னரின் (Ramses V) பாதுகாக்கப்பட்ட உடலில் அவர் பெரியம்மை நோயினால் தாக்கப்படிருந்தமைக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. புராதன எகிப்திய உருவஎழுத்துப் படிமங்களில் போலியோ என்னும் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உருவம் காணப்படுகின்றது.

 

போலியோ நோயாளியைச் சித்தரிக்கும் ஓர் எகிப்தியப்படிமம்

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய தொற்றுநோய்கள் பற்றியும் அவற்றின் குறிகுணங்கள் பற்றியும் எமது மூதாதையர்  அறிந்திருந்தபோதிலும் அவை எக்காரணிகளால் தோற்றுவிக்கப் படுகின்றன என்பதை அறியமுடியாத காரணத்தால் அவற்றுக்கான நோய்த்தடுப்பு முறைகளை அவர்கள் பின்பற்றவில்லை.

ஒரு சில வைரஸ் தொற்றுக்களின் தாக்கம் கடுமையானதாகவும் மரணத்தை விளைவிக்கூடியதாகவும் இருக்கும். மற்றும் சில எந்தவிதமான தாக்கத்தையும் வெளிப்படுத்தாது வந்து போய்விடும் சாதாரண தடுமல் தொடக்கம் பலருக்கும் வரக்கூடிய இன்புளுவென்சா (புளூக் காய்ச்சல்) வரை சில வைரஸ் நோய்கள் நமக்கு நன்கு அறிமுகமானவை. பொக்குளிப்பானும் (chickenpox) அதன் மறு அவதாரமான ஷிங்கிள்ஸும் (shingles) எம்மில் பலரையும் பாதித்திருக்கக்கூடிய வைரஸ் நோய்கள். போலியோ (polio) எனப்படும் இளம்பிள்ளைவாதம், சின்னமுத்து (measles), கூவைக்கட்டு,  ஹெப்பற்றைறிஸ் (Hepatitis A, B, C), எபோலா, எய்ட்ஸ், ஸார்ஸ் ஆகிய மற்றும்பல நோய்கள் வைரசுக்களால் தோற்றுவிக்கப்படுகின்றன.

மலேரியாக் காய்ச்சல் நுளம்புக்கடியால் பரவுகின்றது என்பதை நாம் அறிவோம். எனினும் மலேரியாவை ஏற்படுத்தும் கிருமி ஒரு வைரஸ் அல்ல. பிளஸ்மோடியம் (Plasmodium) என்னும் பிறிதொரு வகையான நுண்கிருமி நுளம்புக்கடி மூலம் எமது இரத்தத்துள் சென்றுவிடுவதால் மலேரியாக்காய்ச்சல் ஏற்படுகின்றது. இந்தக்கிருமியை நுளம்பு தன் உடலில் காவித் திரிகின்றது. இதுபோன்று வைரசுக்களைக் காவிச் சென்று மனிதருக்குப் பரப்பிவிடும் நுளம்புகளும் உள்ளன.

சிக்குன்குனியா (chikungunya), டெங்குக் காய்ச்சல் (dengue fever) ஆகிய வைரஸ் நோய்கள் நுளம்புகளினாலேயே பரப்பப்படுகின்றன. மலேரியாக் காய்ச்சலைப் பரப்பும் நுளம்பு வேறு; டெங்குக் காய்ச்சலையும் சிக்குன்குன்யாவையும் பரப்பும் நுளம்புகள் வேறு. இந்த வகை நுளம்புகள் சூரியன் உதிக்கும் காலை நேரத்தில் அல்லது சூரியன் மறையும் மாலை நேரத்தில் மாத்திரமே கடிக்கக் கூடியன.

ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் பிறிதொன்றுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது விடலாம். உதாரணமாகப் பன்றிக்காய்ச்சல் (Swine flu) எனப்படும் நோய்க்குக் காரணமான வைரஸ் பன்றிகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் இந்த வைரசால் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

அதேசமயம் பல்வேறு விலங்குகளையும் தாக்ககூடியதும், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தொற்றக்கூடியதுமான வைரசுக்களும் உண்டு. இவற்றுக்கு ஒரு சிறந்த உதாரணம் விசர்நாய்க்கடியால் மனிதருக்கு ஏற்படக்கூடிய, மரணத்தை விளைவிக்கும் நீர்வெறுப்பு நோய் (hydrophobia) ஆகும். இதைத் தோற்றுவிக்கும் ரேபீஸ் (Rabies) வைரஸ் எச்சில் மூலம் பரவக்கூடியது. எனவேதான் ரேபீஸ் தாக்குதலுக்கு உள்ளான ஒரு மிருகம் மற்றொன்றைக் கடிப்பதால் இந்த நோய் தொற்றுகின்றது. ரேபீஸ் வைரஸ் நாய், பூனை. ஆடு, குதிரை, போன்ற வீட்டுவிலங்குகளில் இருந்தும் வௌவால், நரி, குரங்கு, ரக்கூன் உள்ளிட்ட காட்டுவிலங்குகளில் இருந்தும் ஒன்றிடமிருந்து மற்றொன்றுக்குத் தொற்றிவிடுகின்றது. இந்த விலங்குகளில் ஏதாவது ஒன்றினால் கடிபடும் மனிதருக்கும் இந்நோய் தொற்றிவிடுகின்றது. அதிர்ஷ்டவசமாக விசர்நாய்க்கடி என்று பொதுவாக அறியப்படும் இந்த வைரஸ் நோய்க்கு இன்று தடுப்பூசி இருப்பதால் பலரும் காப்பாற்றப்பட்டு விடுகின்றார்கள்.

வௌவாலில் இருந்து புனுகுபூனைக்கும் புனுகுப்பூனையில் இருந்து மனிதருக்கும் தொற்றியதாகக் கருதப்படும் ஸார்ஸ் வைரஸ் (SARS-CoV)  2003இல் முதன்முதலாகச் சீனாவில் கண்டறிப்பட்டது. வௌவாலில் இருந்து ஒட்டகத்துக்குத் தொற்றியிருக்கலாம் என நம்பப்படும் மேர்ஸ் வைரஸ் (MERS-CoV) பின்னர் ஒட்டகத்தில் இருந்து மனிதருக்குத் தொற்றியது. இந்த வைரஸ் முதன்முதலில் சவுதி அரேபியாவில் கண்டறியப்பட்டது.

சமீபத்தில் சீனாவில் கண்டறியப்பட்டு இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயாக உருவெடுத்துள்ள கோவிட்-19 (COVID-19) என உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. கொரோனா வைரஸ் நோய் 2019 என்னும் பொருள் கொண்ட Corona Virus Disease 2019 என்னும் ஆங்கிலச் சொற்தொடரின் சுருக்கமே COVID-19 (கோவிட்-19). சாதாரண தடுமல் மட்டுமல்லாது அபாயகரமான சார்ஸ் மற்றும் மேர்ஸ் வைரஸ் நோய்கள் கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரசுக்களால் தோற்றுவிக்கப்படுகின்றன. இதனால் தற்போது தலைதூக்கியுள்ள கோவைட்-19 வைரஸ், நவீன கொரோனா வைரஸ் (novel corona virus) என்று குறிப்பிடப்படுகின்றது.

முடிசூடுதல் என்பதன் ஆங்கிலப்பதமான கொரொனேஷன் (coronation) என்பது மணிமுடியைக் குறிக்கும் கொரோனா (corona) என்னும் இலத்தீன் மொழிச்சொல்லில் இருந்து தோன்றியதாகும். அதிசக்தி வாய்ந்த நுணுக்குக்காட்டியின் மூலம் கண்டறியப்பட்ட இந்த வைரசின் வடிவம் மணிமகுடத்தை ஒத்திருப்பதால் இதற்குக் கொரோனா வைரஸ் என்னும் பெயர் தரப்பட்டது.

 

 

COVID 19 (கொரோனா வைரஸ்)     
 

சமீபத்தைய கோவிட்-19 கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் (Wuhan) மாகாணத்தில் கடலுணவு மற்றும் உயிருள்ள விலங்குகள் விற்பனை செய்யப்படும் சந்தையில் வேலை செய்த சிலரிடமே முதலில் கண்டறியப்பட்டது. இது எந்த விலங்கிடமிருந்து எப்படி மனிதருக்குத் தொற்றியது என்னும் விபரம் இதுவரை அறியப்படவில்லை. எனினும் இந்த வைரசும் வௌவாலில் வாழ்கின்றமை அறியப்பட்டுள்ளது. வௌவாலில் இருந்து பங்கொலின் (pangolin) என்னும் ஒரு வகை எறும்புதின்னி விலங்குக்கும் பங்கொலினில் இருந்து மனிதருக்கும் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்பது ஓர் ஊகமேயாகும். சீனமருத்துவத்தில் பங்கொலினின் செதில்கள் மருந்தாகப் பயன்படுகின்றது.

நோயாளி ஒருவரின் இருமல், தும்மல் மூலமாக மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் நவீன கொரோனா வைரஸ் தொற்றமுடியும். சில வைரசுக்கள் தளபாடங்களில் சொற்ப நேரத்துக்கு உயிர்வாழக்கூடியன எனினும் கோவிட்-19 சில மேற்பரப்புகளில் பல நாட்களுக்கு உயிர்வாழமுடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். நோயாளி தம் கைகளால் தொட்ட இடத்தை மற்றொருவர் தொட்டால் அவருக்கு வைரஸ் தொற்றிவிடும் சாத்தியம் உண்டு. நவீன கொரோனா வைரஸ் குறைந்தது அரை மணி நேரம் காற்றில் உயிர்வாழும் சாத்தியக்கூறு இருப்பதும் எளிதில் தொற்றக்கூடிய இந்த வைரஸ், கிட்டத்தட்ட 15 அடி தூரம் வரை பயணிக்கக்கூடியது என்பதும் ஒரு புதிய ஆய்வின்மூலம் அறியப்பட்டுள்ளது.

பல்வேறு வயதுடையோர் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைவான எழுபது, எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களுகு இந்த நோயினால் ஆபத்து அதிகம். அதேசமயம் சிறுவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றாது என்று நம்புவதும் தவறு.  நீரிழிவு, இருதயநோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், போன்ற உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கோவிட்-19 கொறோனா வைரசினால் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிகின்றது.

பலருக்குக் கடுமையான நோய்க் குறிகுணங்கள் எதுவும் காணப்படுவதில்லை. இதனால் இவர்கள் தமக்கு இந்நோய் தொற்றியிருப்பதை உணராமலேயே மற்றவர்களுக்குப் பரப்பிவிடும் சாத்தியமும் உண்டு.

தற்போதைக்குக் கோவிட்-19 கொரோனா வைரசிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகப் பின்வரும் அறிவுறுத்தல்களை மருத்துவர்கள் வழங்கியுள்ளார்கள்.

இயன்றவரை சமூக ஒன்றுகூடல்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்., உங்களை நீங்களே இப்போதைக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன்மூலம் நடவடிக்கைகள் இந்தத் தொற்றுநோய் கட்டுக்கடங்காமல் பரவுதலைத் தடுக்க உதவும்.

புளூக்காய்ச்சலுக்கான அறிகுறி காணப்படுபவர்களிடமிருந்து ஆறு அடி விலகி நில்லுங்கள். கைகளை அடிக்கடி சோப் போட்டுக்  கழுவிக்கொள்ளுங்கள். முடிந்தால் 60%அல்கஹோல் கொண்ட தொற்று நீக்கியால் கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள்.

சத்துள்ள ஆரோக்கியமான உணவை அருந்துதல், நீரிழிவு நோயாளராய் இருந்தால் சீனியைக் குறைத்துக்கொள்ளல், உடற்பயிற்சி, போதிய ஓய்வு, உறக்கம் என்பவற்றின்மூலம் உங்களது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்ளுங்கள். வீட்டில் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு இருமல், தடுமல். காய்ச்சலுடன் மூச்சுவிடுதலில் சிரமம் போன்ற புளூக் குறிகுணங்கள் காணப்பddaal உடனடியாக உங்கள் குடும்பவைத்தியரிடம் தொடர்புகொண்டு விடயத்தைக் கூறுங்கள். அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்கள் டாக்டர் உங்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவார்.

தடுப்பூசி (vaccine)

வைரஸ் நோய்களைக் குணப்படுத்தமுடியாது. ஒரு சில மருந்துகள் வைரஸ் நோயின் தாக்கத்தை ஓரளவு குறைக்க உதவமுடியும். பக்ரீரியாக் கிருமிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய அன்ரிபயோற்றிக் (antibiotics) மருந்துகள் வைரசுக்களைக் கட்டுப்படுத்தமாட்டா.

தடுப்பூசி ஒன்றே வைரஸ் நோயிடமிருந்து ஒருவரைக் காப்பாற்ற உதவுவது. கடந்த நூற்றாண்டுகளில் கோடிக்கணக்கான மனிதரின் இறப்புக்குக் காரணமான பெரியம்மை அல்லது வைசூரி (smallpox) என்றழைக்கப்படும் வைரஸ் நோய் இன்று உலகில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இதற்கு 1796 இல் ஏட்வர்ட் ஜென்னெர் (Edward Jenner) கண்டுபிடித்த அம்மைத் தடுப்பூசியே காரணம்.

ஏட்வர்ட் ஜென்னெரின் காலப்பகுதியில் வைரசுக்கள் கண்டறியப் பட்டிருக்கவில்லை. எனினும் பசுக்களுக்கு வரும் பசுவம்மை (cowpox) தொற்றியவர்களுக்குப் பெரியம்மை நோய் வருவதில்லை என்ற உண்மையை ஜென்னெர் கண்டறிந்தார். பெரியம்மையிலும் வீரியம் குறைந்தது பசுவம்மை. பசுவம்மை வந்தவர்களின் புண்ணில் இருந்து பெற்ற சிதளைச் சுகதேகிகளின் தோலில் செலுத்தி அவர்களுக்கு இலேசான பசுவம்மை வரச்செய்தார் ஜென்னெர். இவ்வாறு பசுவம்மை வரப்பெற்றோர் கொடியநோயான பெரியம்மை வராமல் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறுதான் தடுப்பூசி முதன்முறையாக அறிமுகப்படுத்தப் பெற்றது.

 
உலகில் முதன்முறையாக ஜேம்ஸ் பிப்ப்ஸ் (James Phipps) என்னும் பெயருடைய எட்டுவயதுச் சிறுவனுக்கு எட்வர்ட் ஜென்னெர் தடுப்பூசி போடுவதைச் சித்தரிக்கும் ஓவியம் (1796)

இன்று ஒரு குறிப்பிட்ட நோய் ஏற்படுவதற்குக் காரணமான வைரசைப் பிரித்தெடுத்து அந்த வைரஸைப் பலவீனப்படுத்தும் செய்முறைகள் கையாளப்படுகின்றன. அவ்வாறு பலமிழக்கச் செய்யப்பட்ட வைரஸ் பிரதியை உடலினுள் செலுத்தும்போது அந்தக் குறிப்பிட்ட வைரசை முறியடிப்பதற்கான எதிர்ப்புச் சக்திகள் உடலில் தோற்றுவிக்கப் படுகின்றன. வீரியம் குறைக்கப்பட்ட வைரசின் இலேசான தாக்கம் உடலில் உணரப்படலாம். எனினும் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. பின்னர் நிஜ வைரஸ் தாக்க வரும்போது குறிப்பட்ட வைரசை எதிர்கொள்ளத் தோற்றுவிக்கப்பட எதிர்ப்புச் சக்திகள் தயாராக உள்ள நிலையில் உள்நுழையும் வைரஸை அவை எதிர்கொண்டு அழித்துவிடுகின்றன. இதுவே தடுப்பூசி செயல்படுவதன் அறிவியல் பின்னணி. ஒருமுறை சின்னமுத்தோ, பொக்குளிப்பானோ வந்த ஒருவருக்கு அவை மீண்டும் வருவதில்லை என்கிறோம் அல்லவா? அதற்கும் இதுதான் விளக்கம்.

போலியோத் தடுப்பூசியின் உதவியினால் இன்று இளம்பிள்ளைவாதமும் பல்வேறு நாடுகளில் ஒழிக்கப்பட்டுவிட்டது. பலவகையான புளூக்காய்ச்சல்கள், சின்னமுத்து, பொக்குளிப்பான், ஷிங்கிள்ஸ், ஹெப்பற்றைறிஸ் A, B உள்ளிட்ட நோய்களுக்கு இப்போது தடுப்பூசி உள்ளதால் இவற்றினால் பாதிப்புள்ளாகும் மக்களின் தொகை குறைந்து கொண்டு வருகின்றது. கருப்பப்பை வாய்ப்புற்று (cervical cancer) ஏற்படுவதற்கான காரணிகளுள் வைரசும் ஒன்று. இந்த வைரஸ் ஹியூமன் பபில்லொமா வைரஸ் (Human papillomavirus (HPV) என்று அறியப்படுகின்றது. இதற்கும் தடுப்பூசி உண்டு. பெண்கள் தக்கவயதில் (11-12) இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதால் கருப்பப்பை வாய்ப்புற்று ஏற்படும் சாத்தியக்கூறு குறைகின்றது.

எயிட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி (HIV) வைரஸ் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியில் குறைபாட்டை ஏற்படுத்துகின்றது. எயிட்ஸ் நோய்க்குத் தடுப்பூசி ஒன்றைக் கண்டறியும் முயற்சிகள் இன்னமும் முழுமையாக வெற்றி அடையாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

கோவிட்-19 எனப்படும் நவீன கொறோனா வைரசுக்கு எப்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது எப்போது நடைமுறைக்குவரும் என்பது பற்றியெல்லாம் இப்போதைக்கு எதுவும் கூறமுடியாதுள்ளது.

கோவிட்-19 ஒருமுறை வந்து மாறியவருக்கு அது மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சீனாவிலும் ஜப்பானிலும் கிடைக்கப்பெற்ற ஓரிரு அவதானிப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது உறுதிசெய்யப்பட்டால் இந்த மீள்தொற்று என்பது எமக்கு அச்சத்தைத் தரும் விடயமாகும்.

 

 

கலாநிதி பால. சிவகடாட்சம்






 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்