முழுவிலக்கு

 

கணேசானந்தனுக்கு தன்னுடைய பெயரைப் பிடித்திருந்தது; ஆனால் அது ஆபிரிக்காவுக்கு வரும் வரைக்கும்தான். இங்கே அவனுடைய பெயர் செய்தகூத்தை விவரிக்க முடியாது. போகிற இடமெல்லாம் முழுப் பெயரையும் எழுதும்படி கேட்பார்கள். 'தாமோதிரம்பிள்ளை கணேசானந்தன்' என்று விஸ்தாரமாக இவன் எழுதி முடிப்பதற்கிடையில் அவர்கள் தங்கள் சுருண்ட தலைமுடியை பிய்த்துக் கொண்டு நிற்பார்கள். குடும்பப் பெயர், நடுப்பெயர், கிறிஸ்டியன் பெயர், முதற்பெயர் என்று மாறி மாறி சில வேலைகளில் 'தலையா, பூவா' போட்டு ஒரு பேரை எழுதி வைப்பான். சில சமயங்களில் சண்டை போட்டும் பார்ப்பான். "நான் இந்து; எனக்கு கிறிஸ்டியன் பெயர் கிடையாது" என்று கெஞ்சினாலும் விடமாட்டார்கள். ஏதாவது ஒன்றை எழுதச்சொல்லி நிர்ப்பந்திப்பார்கள்.

ஒருமுறை உச்சக்கோபத்தில் தன்னுடைய முழுப் பெயரையும் இரண்டு வரிகளில் எழுதி "ஐயோ, என்னுடைய எல்லாப் பெயர்களும் இதற்குள்ளே அடக்கம்; உங்களுக்கு எந்தெந்தப் பெயர் தேவையோ அவற்றை இதிலிருந்து பிய்த்து எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டான். கடைசியில், வந்து பல வருடங்களுக்கு பிறகுதான் இதற்கான ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடித்தான். 'கணேசானந்தன்' என்ற பெயரை மூன்று பகுதிகளாக பிரித்து 'கணே சா நந்தன்' என்று அமைத்துக் கொண்டான். அவர்கள் விருப்பப்படியே எல்லாப் பெயர்களும் அதனுள் அடக்கம். இவனுக்கும் தொல்லை விட்டது.

ஆபிரிக்காவிலுள்ள அந்த குடிவரவு அலுவலகத்துக்கு இத்துடன் பலமுறை அவன் வந்து விட்டான். கொடுத்த பாரங்களையெல்லாம் வெகு நேர்த்தியாக பூர்த்தி செய்தான். பெயர்கள் இப்போது தொல்லை கொடுப்பதில்லை. பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து ஆபிரிக்காவிலேயே தங்கி விட்டதால் நிரந்தரக் குடியுரிமை விரைவிலேயே கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தான். மேலதிகாரியைப் பார்ப்பதற்காக அவன் காத்திருந்தான்.

அலுவலகம் இப்போது கொஞ்சம் சுறுசுறுப்பு அடையத் தொடங்கியிருந்தது. ஒவ்வொருவராக வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்து பைல்களை இழுத்து தூசு தட்டத் தொடங்கினார்கள். தோடம் பழக் கூடைக்காரி ஒருத்தி உள்ளே வந்து மேசை மேசையாகப் போய் விலைபேசி விற்றடிபயே வந்துகொண்டிருந்தாள். எல்லாமே தோல் žவி வைத்த நேர்த்தியான பழங்கள். தடிமாடு போன்ற ஒருத்தன் வந்து இலவசமாக ஒரு பழத்தை கைவிட்டு எடுத்துவிட்டான். கையை நீட்டி அடித்து அதைப் பறித்து விட்டு இடுப்பிலே கையை வைத்து 'ஆர்த்த குரலெடுத்து' அவளுடைய குலதர்மம் பிசகாமல் அவனைவையத் தொடங்கினாள் அவள். நல்ல நல்ல அசிங்கமான வார்த்தைகளை பொறுக்கியெடுத்து திட்டினாள். ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. எல்லாரும் தங்கள் தங்கள் தோடம்பழங்களில் கருமமே கண்ணாயிருந்தனர். பழத்தில் சிறு ஓட்டை துளைத்து, ஒரே உறிஞ்சிலே முழுச்சாற்றையும் உளிளிழுத்து, கொட்டைகளை 'தூதூ' என்று காலடியில் துப்பி, நிமிடத்தில் மூன்று நான்கு பழங்களை கணக்குத் தீர்க்கும் கலையில் அவர்கள் சூரர்கள்.

சங்கீதா ஆபிரிக்காவுக்கு வந்து கணேசானந்தனை பதிவுத் திருமணம் செய்து இரண்டு வருடங்களாகிவிட்டன. ஆனால் இவனுடைய சங்கடம் இன்னும் தீர்ந்தபாடில்லை. நிச்சயமாக குடியுரிமை கிடைக்கும் வரை பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை என்று சங்கீதா பிரதிக்ஞை செய்திருந்தாள். எத்தனையோ பேர் எத்தனையோ விதமான பிரதிக்ஞை எடுக்கிறார்கள். ஆனால் இவள் மங்கம்மா செய்தது போல் அவசரப்பட்டு இப்படி ஒரு சபதம் செய்து விட்டாளே! இவனும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். காலை முடக்கி முரண்டு செய்யும் மாடுபோல மறுத்து விட்டாள்.

இவர்களுடைய காதல் யாழ்ப்பாணத்தில் வேம்படியில் அரும்பியது. கணேசானந்தன் அப்பொழுது சென்ட்ரல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய பள்ளி விட்டதோ இல்லையோ வேம்படி பள்ளி விடும் நேரமாகப் பார்த்து துடித்துக் கொண்டு சைக்கிளிலே பாய்ந்து போய்விடுவான். மணிக்கூட்டு வீதி வழியாக அவன் வேகமாக மிதிக்கவும் அவள் வரவும் நேரம் சரியாக இருக்கும். வெள்ளை மலரை அள்ளி வீசியதுபோல வெள்ளைச் žருடை தேவதையர்கள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களிலே இவள்தான் உயரம். வாழைத்தார் போல திரண்டிருக்கும் கூந்தலை இரட்டைச் சடையாகப் போட்டிருப்பாள். அவளுடைய விசேஷம் கண்கள்தான். சஞ்சலப்படும் கண்கள் என்று சொல்வார்களே, அப்படி ஒரு நிலையில் நில்லாத கண்கள். நிமர்ந்து ஒருமுறை கண்ணை வீசிவிட்டு போய்விடுவாள். அந்தக் காலத்திலேயே விடாமுயற்சிக்கு பேர் போனவன் கணேசானந்தன். ஒரு வருட காலம் இப்படித்தான் கண்ணிலேயே செலவழிந்தது.

புட்டுக்கு தேங்காய் போட்டதுபோல விட்டுவிட்டு தொடர்ந்த பெருமை கொண்டது இவர்கள் காதல். பல்கலைக் கழகத்தில் இவன் படிக்கப் போன பின்பு காதல் தொடர வழியின்றி தேங்கிவிட்டது. படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சமயம்தான் மறுபடி அவளுடைய தரிசனம் கிடைத்தது. கிடுகிடுவென்று வளர்ந்து விட்டாள். கண்கள் முகத்தில் சரிபாதியை அடைத்துக் கொண்டு கிடந்தன. முதல்முறையாக அவளுடன் பேசினான். இரண்டு முறை பல்கலைக் கழக தேர்வு எழுதியும் சரிவரவில்லையாம். பெற்றோருக்கு மாத்தறைக்கு வேலை மாற்றம் கிடைத்தபடியால் கொழும்பு விடுதி ஒன்றில் தங்கி கம்புயூட்டர் படிக்கிறாளாம். கம்புயூட்டர் ஒரு பாஷனாக இருந்த காலம் அது.

அந்த நாலு வருடங்கள் கணேசானந்தனுக்கு நிரந்தரமான வேலையில்லை. தொட்டு தொட்டு தற்காலிகமாக நிறைய வேலைகள் பார்த்தன். சங்கீதா ஒரு வங்கியிலே வேலைக்கு சேர்ந்து விட்டாள். அந்த சமயம்தான் அவனுக்கு ஒரு நண்பனின் உதவியால் ஆபிரிக்காவில் ஒரு வாத்தியார் உத்தியோகம் கிடைத்தது. மூன்று வருட ஒப்பந்தம். நல்ல சம்பளம். சங்கீதாவிடம் தன் காதலை வெளியிடமுன் நிலையான ஒரு வேலை கிடைக்கவேண்டும் என்ற அவன் பிரார்த்தனை நிறைவேறி விட்டது.

புறப்படுமுன் இவன் போய் சங்கீதாவிடம் விடை பெற்றது. ஒரு சுவையான சம்பவம். அதை எத்தனையோ தடவை தனிமையில் நினைத்து நினைத்து அனுபவித்திருக்கிறான். விடுதியிலே இவன் போய் கீழே அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். மேல் வீட்டிலிருந்து படிகளிலே குதித்து குதித்து அவள் சுபாவப்படி இறங்கி வந்தாள், தேவதை ஒன்று வானுலகில் இருந்து இறங்குவது போல. இவன் இருப்பதை அவள் காணவில்லை. கீழே இருந்த ஒரு நிலைக் கண்ணாடியின் முன் இளைக்க இளைக்க ஒரு செகண்ட் நின்று தலைமுடியை சரி செய்து கொண்டாள்; இமையை நீவி விட்டாள். திரும்பியவள் இவைனைக் கண்டு வெட்கித்துப் போனாள்.

ஒரு பெண் ஒருவனுக்காக தன்னை செம்மைப் படுத்துகிறாள் என்ற நினைவு அவனுக்கு எவ்வளவு களிப்பூட்டும்! அன்று தனிமையில் இருவரும் நெடுநேரம் கதைத்துக் கொண்டு இருந்தார்கள். அடுத்த நாள் அவன் வெளிநாடு போவதாக இருந்தான். அன்று எப்படியும் தன் காதல் மாளிகையின் மேல் கதவைத் தட்டுவது என்ற தீர்மானத்தோடுதான் அவன் வந்திருந்தான். மனத்தில் துணிவு இருந்த அளவுக்கு கையில் பலமில்லை. கடைசியில் பிரியும் சமயத்தில், மைமலான அந்த மழை நாளில் ஒரு மூலையில் அவளை தள்ளிக் கொண்டு போய் வைத்து, உத்தேசமாக அவள் இதழ்களை தேடி ஒரு முத்தம் பதித்துவிட்டான். பெட்டைக்கோழி செட்டைகளைப் படபடவென்று அடிப்பதுபோல் அவள் இரண்டுகைகளாலும் அவன் கழுத்தைக் கட்டி உதறினாள். அவள் தள்ளினாளா அல்லது அணைத்தாளா என்பது கடைசிவரை அவனுக்கு தெரியவில்லை.

பிளேனில் பறக்கும்போது அவளுடைய சிந்தனையாகவே இருந்தான். விமானத்தில் யோசித்து வைத்து பதில் எழுதும்படி அவள் ஒரு விடுகதையும் சொல்லியிருந்தாள். அவர்களடைய காதலுக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கிறதாம்.

'ஒரு மரம், ஆனால் இரண்டு பூ அந்த மரம் என்ன? பூ என்ன?'

இவனும் யோசித்து, யோசித்து பார்த்தான்; புரிபடவில்லை. பன்னிரெண்டு வருடம் அவனைக் காக்க வைத்துவிட்டுத்தான் விடையைக் கூறினாள்.

'மரம்: தென்னை மரம். பூ: தென்னம்பூ, தேங்காய்பூ'

அவன் ஆபிரிக்கா போன பிறகு அவர்கள் காதல் வலுப்பெற்றது கடிதங்கள் மூலமாகத்தான். துணிந்து இவன் தன் காதலை பிரகடனப்படுத்தினான். மூன்று வருட ஒப்பந்தக் காலம் முடிந்து இரண்டு மாத விடுப்பில் வந்தபோது எப்படியும் அவளை மணமுடித்து தன்னுடன் அழைத்துப்போவது என்றுதான் வந்திருந்தான். அந்தச் சமயத்திலேதான் அவன் தன் வாழ்நாளிலேயே மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய தவறு செய்ய நேரிட்டது.

 

இவனுக்கென்று கலியாணம் பேச பெரிசாய் ஒருவரும் அங்கே இல்லை. சங்கீதாவின் தகப்பனார் சபாபதி நல்ல மனுஷன். தாயும், தகப்பனும் பரிபூரண சம்மதத்தை தந்துவிட்டனர். ஒரே மகளை பிரிந்திருப்பது கஷ்டம்தான்; ஆனால் அவர்கள் அதைத் தாங்குவதற்கும் சித்தமாக இருந்தனர். மடைத்தனமாக காலை இழுத்தது கணேசானந்தன்தான்.

பத்து மணியளவில் இவனை உள்ளே கூப்பிட்டார் அதிகாரி. ஜன்னல்கள் கண்டுபிடிக்கமுன் கட்டிய கட்டிடம் அது. அதைக் கட்டிய கொத்தனாருக்கும் சூரியனுக்கும் ஜென்மப் பகை. கன்னங்கரேலென்று கதிரையை நிறைத்து இருந்த அதிகாரியைப் பார்ப்பதற்கு கண்களைப் பழக்கப்படுத்த சிறிது நேரம் எடுத்தது. முரசு தெரிய பளிச்சென்று பற்களைக் காட்டி சிரித்தார். முகம் சிநேகமாக இருந்தாலும் கண்கள் தீர்க்கமாக கணக்குப் போட்டபடியே இருந்தன.

இந்த அதிகாரியை இதற்கு முன்பும் பல தடவை பார்த்திருக்கிறான்; இருவரும் தங்கள் சேம நலன்களை 'ஹவ்தி பொடி, பொடி பைன், குஸே, குஸே', 'ஹவ்தி பொடி, பொடி பைன், குஸே, குஸே' என்று திருப்பித் திருப்பி சொல்லி விசாரித்துக் கொண்டார்கள். இந்த சேம விசாரிப்பு ஐந்து நிமிடங்கள் வரை தொடர்ந்தது. 'உங்களுடைய நலம் எப்படி?', 'பெற்றோர் நலம் எப்படி?', 'மனைவி நலம் எப்படி?', 'பிள்ளைகள் நலம் எப்படி?', 'பக்கத்து வீட்டுக்காரர் எப்படி?' என்ற இந்த நலன் விசாரிப்புகள் எட்டு முழ வேட்டிபோல முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும்.

அதிகாரி கோப்பிலே ஒரு சிறிய சிக்கல் இருக்கிறது என்றும் அதற்கு தான் விரைவிலேயே சட்டவிலக்கு அளிப்பதாகவும் நிரந்தர குடியுரிமை இரண்டே மாதத்தில் கிடைத்துவிடும் என்றும் உறுதி கூறினார்.

கணேசானந்தன் வீட்டுக்கு வந்து நடந்த விபரத்தை மனைவியிடம் கூறினான். அவளுக்கும் சப்பென்று ஆகிவிட்டது. இந்த முறை கட்டாயம் கிடைக்கும் என்று அவள் மிக்க எதிர்பார்போடு இருந்தாள்.

அன்றிரவு சங்கீதா' வ்வூவ்வூவும், ஓக்ரா சூப்பும்' செய்திருந்தாள். இந்த இரண்டு வருடத்திலே அவள் ஆபிரிக்கச் சாப்பாட்டு முறைகளை ஒரு ஆவேசத்துடன் கற்றுத் தேர்ந்து விட்டாள். அவள் ஒரு காரணம் வைத்திருந்தாள். ஆபிரிக்காவிலேயே நிரந்தர பிரஜையாக தங்கிவிடுவது என்று முடிவெடுத்த பிறகு எவ்வளவு žக்கிரம் முடியுமோ அவ்வளவு žக்கிரம் அவளுடைய பழக்கவழக்கங்கள், சாப்பாடு, கலாச்சாரத்துடன் ஒன்றிவிட வேண்டும் என்பது அவள் வாதம். 'உங்களுடைய தேசத்து பழக்கவழக்கங்கள் அவ்வளவு உயர்ந்ததென்றால் ஏன் நாடு விட்டு நாடு வந்தீர்கள்?' என்பதுதான் அவளுடைய கேள்வி.

 

'வ்வூவ்வூ' என்பது யாழ்ப்பாணத்து களிமாதிரி. ஆனால் பத்து மடங்கு பவர் கூட, விஷயம் தெரியாதவர்கள் அவசரப்பட்டு ஒரு விள்ளல் எடுத்து வாயிலே போட்டால் அது தொண்டைக் குழியிலே போய் அங்கேயே தங்கிவிடும். கீழுக்கும் இறங்காது, மேலுக்கும் போகாது. அது வயிற்றில் போய் சேர்வதற்கிடையில் உயிர் பிரிந்து விடும். இதற்கென்று பிரத்தியேகமான ஒரு சூப். அதுதான் ஓக்ரா சூப்; வழுவழுவென்று இருக்கும். வ்வூவ்வை எடுத்து இந்த சூப்பில் தோய்த்து வாயில் போட்டால் அது அப்படியே நழுவிக் கொண்டு போய் வயிற்றிலே விழுந்துவிடும்.

தொடக்கத்தில் இது நல்லாகத்தான் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் சாப்பிட முடியுமா? தேவாமிர்தமென்றாலும் ஒரு நாளைக்கு அலுக்கத்தானே செய்யும். ஒரு நாள் இவன் நாக்கிலே சனி. "மெய்யே, ஒரு நாளைக்கு புட்டு செய்யுமென்; கனநாள் சாப்பிட்டு" என்று சொல்லி விட்டான். அவளுக்கு அது பிடிக்கவில்லை. வெஞ்சினம் கொண்ட வேங்கைபோல žறினாள். "உங்களுக்கு புட்டும் முசுட்டை இலை வறையும், விளைமீனும், பலாப்பழமும் வேணுமெண்டால் என்னத்துக்கு சிலோனை விட்டு வெளிக்கிட்ட நீங்கள். அங்கைபோய் அடிவாங்கிக் கொண்டு குசாலாய் இருக்க வேண்டியதுதானே? இது எங்களுக்கு தஞ்சம் கொடுத்த நாடு. இவர்களுடைய சாப்பாடுதான் இனிமேல் எங்களுடைய சாப்பாடு" என்று அடித்துக் கூறிவிட்டாள். 'அந்தச் சிவபிரானே கேவலம் உதிர்ந்த புட்டுக்காக மண் சுமந்து அரிமர்த்தன பாண்டியனிடம் பொற்பிரம்படி வாங்கினானே! இங்கே நான் கேவலம் சொற் பிரம்படி தானே பெற்றேன்? என்று மல்லாக்காக படுத்துக் மனதை தேற்றிக்கொண்டான். அதற்குப் பிறகு கணேசானந்தனுக்கு புட்டு சாப்பிடும் ஆசையே வேரோடு போய் விட்டது.

புட்டும், தேங்காய்ப்பூவும் போன்ற அவனுடைய காதல் வாழ்க்கை இப்படித்தான் எட்டு வருடங்கள் தேங்காய்ப்பூவாக தேய்ந்து போயிற்று. இரண்டாவது ஒப்பந்தத்தை ஏற்றுவிட்டு கணேசானந்தன் பயணச்žட்டும், விசாவும் ஒழுங்கு பண்ணிய பிறகு தான் அந்த இடி வந்து விழுந்தது. இவள் தன்னை மறந்து விடும்படியும் தனக்கு கலியாணமே வேண்டாமென்றும் எழுதி விட்டாள். எண்பத்திமூன்று கலவரத்தில் சபாபதி அநியாயமாக மனைவியைப் பறிகொடுத்து விட்டார். அதிலிருந்து புத்தி பேதலித்தவர் போல புசத்திக் கொண்டு திரிந்தார். சங்கீதாவால் அவரை அந்த நிலையில் தனித்து விட்டு விட்டு வரமுடியவில்லை. எந்தப் பெண்தான் அப்படி பெற்ற தகப்பனை நிர்க்கதியாக விட்டு வர சம்மதிப்பாள்?

சங்கீதா நக்கீரர் பரம்பரையைச் சேர்ந்தவள் என்பதை முதல் தடவையாக கணேசானந்தன் உணர்ந்தது அப்போதுதான். அவளில் அவன் உயிரையே வைத்திருந்தான். அவளும் அப்படித்தான். ஆனால் அவளுடைய பிடிவாத குணம்தான் அவனால் நம்பமுடியாததாக இருந்தது. அந்த எட்டு வருடங்களும் அவளை அசைக்க முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவளுடைய தகப்பனார் இறந்தபோதுதான் கண்­ரில் தோய்த்து ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அப்பொழுதுதான் முதன்முறையாக அவனுக்கு அவளுடைய காதலின் ஆழம் தெரிந்தது.

 

குடியுரிமைக்கும், பிள்ளை பெற்றுக்கொள்வதற்கும் என்ன சம்பந்தம்? இப்படி பிடிவாதமாக இருக்கிறாளே? குழந்தைகள் என்றால் அவளுக்கு உயிர். நேரம் போவது தெரியாமல் விளையாடிக்கொண்டிருப்பாள். ஆனால் குடியுரிமை கிடைப்பதற்கிடையில் கருத்தரிக்காமல் இருக்கவேண்டும் என்பதில் எதற்காக இவ்வளவு எச்சரிக்கை? 'பன்னிரெண்டு வருடங்கள் பாழாகிவிட்டதே' என்ற யோசனைகூட இல்லையா அவளுக்கு? என்ன பிடிவாதம்?

மீன்காரி ஒருத்தி அவர்கள் வீட்டுக்கு வாடிக்கையாக வந்துபோவாள். தொடை சைஸ் 'கூட்டா' மீன்களை கூடையிலே வைத்து தூக்கிக்கொண்டு ஒயிலாக நடந்து வருவாள். தலையிலே வைத்த கூடையை கையாலேயே பிடித்துக்கொண்டு வரும் பழக்கமெல்லாம் அங்கே கிடையாது. கரகாட்டக்காரனுடைய கரகம்போல கூடை தலையிலே ஒட்டிவைத்தது போல இருக்கும். இப்படி மீன்காரிகள், நாப்பது கிலோ எடையை தலையில் சுமந்தபடி, மடித்த வில்லுக்கத்தியை நிமித்தியது போன்ற முதுகிலே ஒரு குழந்தையையும் கட்டிக்கொண்டு, 'கை வீசம்மா கை வீசு' என்று இரண்டு கைகளையும் வீசிக் கொண்டு, ஆபிரிக்காவின் சிவப்பு மண் புழுதியை கிளப்பியபடி, பரந்து விரிந்த 'டம்பளா' மரங்களின் நிழலை ஆற அமர அநுபவித்தபடி வரும் இந்த அதிசயத்தை உலகத்திலேயே ஆபிரிக்காவில் மட்டும் தான் பார்க்கலாம்.

கூட்டா மீன் குழம்பு நல்ல ருசியாக இருக்கும். பெரிய பெரிய துண்டங்களாக வெட்டித்தான் அதை குழம்பு வைப்பார்கள். ஆபிரிக்காவில் ஒரு மிளகாய் இருக்கிறது. பெயர் 'ஸ்மோல்பெப்பே'. உருண்டையாக, சிவப்பாக பார்த்தால் வெக சாதுவாக இருக்கும். காரம் நாலரைக்கட்டைக்கு தூக்கும். 'பாம்' எண்ணெயோ ரத்தச் சிவப்பாக இருக்கும். பதமாக வெட்டிய மரவள்ளி இலையையும மீன் துண்டங்களையும் இந்த என்ணெயில் மிதக்கவிட்டு, மிளகாயையும் வதக்கிப்போட்டு, கொறுக்காப்புளியும் சேர்த்து, ஒரு குழம்பு வைத்தால் அந்த வாசனையே ஊரைக் கூட்டிவிடும்.

சங்கீதாவுக்கு மீன் என்றால் பிடிக்கும்; அதிலும் மீன்காரியுடன் பேரம் பேசுவது இன்னொரு சுவையான விஷயம். பேரம் என்றால் சங்கீதத்தில் வரும் நிரவல் போல் சூடுபிடித்துக் கொண்டே போகும். அடிமட்ட விலை தரைதட்டியவுடன் மீன்காரி ஆத்தாமல் "யூ லவ்மீ" என்று ஓலமிடுவாள். அவளுடைய பாஷையில் " நீ என்னைக் காதலிக்கிறாயல்லவா! இப்படி என்னை படுத்தலாமா?" என்று பொருள். அப்படி அவள் சரணாகதி அடைந்த பிறகுதான் பேரம் முடிவுபெறும்.

சங்கீதா மீன்காரிக்கு 'யூலவ்மீ' என்றே பெயர் வைத்துவிட்டாள். இவர்களுடைய மீன் பேரச் சண்டையை ஆர்வத்தோடு அவதானித்தபடி இருக்கும் அவள் முகத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் குழந்தை. அது சிணுங்கி சங்கிதா கண்டதில்லை. இரண்டு கண்களும் இரண்டு வெள்ளி மணிகள்போல மினுங்கும். சங்கீதா அந்தக் குழந்தைகைக்ம் ஒரு பெயர் வைத்திருந்தாள். கரிக்குருவி.

 

கணேசானந்தன் பள்ளியில் இருந்து வந்ததும் சங்கீதா படபடவென்று வாய்ப்பாடு ஒப்பிப்பது போல அன்றையச் சங்கதிகளைச் சொல்லுவாள். அதிலே கரிக்குருவியைப் பற்றியும் ஒரு அத்தியாயம் கட்டாயம் இருக்கும். அப்பொழுதெல்லாம் கணேசானந்தன், 'இப்படி குழந்தைமேலே ஆசையுள்ளவள் எப்படித்தான் இந்த விஷயத்தில் மட்டும் இவ்வளவு உஷாராக இருக்கிறாளோ!' என்று நினைத்துக் கொள்வான்.

கரிக்குருவி உண்மையிலேயே யூலவ்மீயின் குழந்தையல்ல; அவளுடைய தங்கை ஓனைஸாவின் பிள்ளை. ஓனைஸாவுக்கு வயது பதினைந்துதான்; ஓட்டு மாங்கன்று போல இருப்பாள்; இன்னும் பள்ளியிலே படிக்கிறாள். பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் 'மன்ஸாரே' என்ற மன்மதனின் மோகத்தில் விழுந்து அவனுடன் சரசமாடி செய்து கொண்டே கந்தர்வ திருமணத்தின் பெறுபேறுதான் கரிக்குருவி. கரிக்குருவி பிறந்தபோது ஓனைஸாவின் பெற்றோர்களுக்க அளவற்ற சந்தோசமாம்.

களவாய்ப் போட்ட žட்டுக்காசைத் தைலாப் பெட்டியில் வைத்து காப்பதுபோல விரதம் காக்கும் கற்புக்கரசிகளை ஆபிரிக்காவில் காணமுடியாது. ஒரு பெண் பருவமடைந்ததும் எவ்வளவு žக்கிரம் முடியுமோ அவ்வளவு žக்கிரம் அவள் தன் கருவளத்தை உலகுக்கு காட்டிவிட வேண்டும். ஒருபிள்ளை பெற்றுவிட்டால் அவள் அந்தஸ்து உயர்ந்துவிடும். அவளை முடிப்பதற்கு ஆடர்கள் போட்டி போடுவார்கள். ஒரு பெண்ணின் உண்மையான விலைமதிப்பு அவளுடைய பிள்ளை பெறம் தகுதியை வைத்துத்தான் அங்கே நிர்ணயிக்கப்படுகிறது.

அது ஒரு பெண்வழிச் சமுதாயமானபடியால் அங்கேயெல்லாம் ஒரு ஆணைப்பார்த்து 'உனக்கு எத்தனை பிள்ளைகள்?' என்று மறந்து போயும் கேட்கக்கூடாது. அடிக்க வந்து விடுவார்கள். அவர்களுக்கே அது தெரியாது. கணேசானந்தன் படிப்பிக்கும் பள்ளியிலே இப்படித்தான் அடிக்கடி பெண் பிள்ளைகள் மூன்று, நான்கு மாசங்களுக்கு மறைந்து விடுவார்கள். கேட்டால் 'பிரசவம்' என்று வெகு சாதாரணமாக சொல்லிவிட்டு இவன் தலையை குனிவதைப் பார்த்து சிரிப்பார்கள்.

ஆனால் யூலவ்மீக்கு ஏற்கனவே ஏழு பிள்ளைகள். அவளுக்கு கரிக்குருவியும் வந்து சேர்ந்ததில் கொஞ்சம் கஷ்டம்தான் 'யாராவது இந்தப் பிள்ளையை கேட்டால் கொடுத்துவிடுவேன்' என்று பயமுறுத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய தங்கை படிப்பை முடிக்கும்வரை கரிக்குருவியை யூலவ்மீதான் வளர்த்தெடுக்க வேண்டுமாம்.

கணேசானந்தன் தன் மனைவிக்கும் ஆசிரியையாக ஒரு சிறிய பள்ளியிலே வேலை பிடித்துக்கொடுத்திருந்தான். வங்கியிலே வேலை செய்தவள் இப்படி வந்து ஒரு ஓட்டைப் பள்ளியிலே வேலை பார்க்கவேண்டி வந்துவிட்டதே என்று இவனுக்கு ஆதங்கம்தான். ஆனால் சங்கீதா மிகவும் மகிழ்ச்சியுடனேதான் அந்த வேலையை ஏற்றுக்கொண்டாள். இவளுடைய பாடங்கள் சுகாதாரமும், ஆங்கிலமும். அந்தச் சின்னச் சின்ன முகங்களை பார்த்துக்கொண்டே பாடம் சொல்லிக் கொடுப்பதில் தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்துவிடுவாள். பள்ளி முடிந்ததும் இந்தப் பாலர்களெல்லாம் தங்கள் தங்கள் கதிரைகளைத்தூக்கி தலைமேல் வைத்துக்கொண்டு, புத்தகங்களையும் முதுகில் கட்டியபடி, சிட்டுக்கள் போல கூவிக்கொண்டு வீட்டுக்கு பறந்து போகும்போது இவள் வயிற்றை என்னவோ செய்யும்.

கணேசானந்தன் திருநீலகண்ட நாயனாருடைய திண்டாட்டத்தில் இருந்தான். பரத்தையிடம் இவர் போய் வந்தது தெரிந்ததும் 'எம்மைத் தொடாதீர்; திருநீலகண்டம்மீது ஆணை' என்று சாபம் இட்டுவிட்டாள் மனைவி. கணேசானந்தன் என்ன நாயனாரா தொடாமல் இருக்க? பன்னிரெண்டு வருடம் காத்திருந்து அடைந்த மனைவியை பக்கத்திலே வைத்துக் கொண்டு பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பது எவ்வளவு கொடூரம்?

குடிவரவு அலுவலகத்து பதிகம் அதிகாரி கூறியது போல இரண்டு மாதத்திலேயே குடியுரிமை பத்திரம் கிடைத்து விட்டது. திருவானைக்காவில் பாடியவுடன் கோயில் கதவு திறந்து கொண்டது அல்லவா? குடியுரிமைச் žட்டு இவன் கையிலே இருந்தது. இனிமேல் எந்தக் கதவுகள் அவனுக்கு சாத்தியிருக்கும்? இரண்டு வருடங்கள் இப்படியாக அநியாயமாகப் பலிபோய் விட்டதே! அவை எப்படிப்பட்ட மகத்தான இரண்டு வருடங்கள் என்பதை பின்னாலேதான் கணேசானந்தன் உணர்ந்து கொள்வான்.

திருவானைக்காவுக்கு டிக்கெட் கிடைத்ததும் கணேசானந்தன் முற்றிலும் மாறிவிட்டான். 'அடையா நெடுங்கதவையே' ஜபித்துக் கொண்டிருந்தான். ஒரே நினைப்புதான் மற்ற-ல்லாம் மறந்துவிட்டான். பள்ளிக்கூடத்தை மறந்தான்; பிள்ளைகளை மறந்தான்; ஸ்டரி பாடத்தை மறந்தான். இராவணனுடைய நிலைதான் அவனுக்கும்.

'கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான் உரனையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்; வெற்றி அரனையும் கொண்ட காமன் அம்பினால், முன்னைப்பெற்ற வரனையும் மறந்தான்; கேட்ட மங்கையை மறந்திலாதான்'

கம்பரைப் படிக்காத ஆபிரிக்கப் பிரின்ஸபாலுக்கு இது எல்லாம் எங்கே விளங்கப் போகிறது? பள்ளிக் கூடம் விட்டதும். கணேசானந்தன் கோடடித்ததுபோல நேராக வீட்டுக்கு ஓடியதன் மர்மம் அவருக்கு புரியவில்லை. ஒருமுறை அவசரமாக நேர அட்டவணை போட வேண்டியிருந்தது. இவன் கவலைப்படாமல் வீட்டுக்கு ஓடிவிட்டான். நேர அட்டவனை போடுவதில் கணேசானந்தன் அடிக்க ஆளில்லை. இந்த திறமையை வைத்துத்தான் அவன் கடகடவென்று ஆபிரிக்காவில் முன்னுக்கு வந்தவன். இவனுடைய பிரின்ஸபாலுக்கு இந்த ஒரு விஷயம் மாத்திரம் ஓடாது. India man has magic என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். ஒருமுறை அவர் அட்டவணை போட்ட விண்ணாணத்தை இப்பவும் சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள். அந்த அட்டவணையின்படி ஒரு கிளாஸல் மூன்று வாத்திமார்கள் ஒரே சமயத்தில் படிப்பிக்க வந்துவிட்டார்களாம். அதை கணேசானந்தன்தான் பிறகு ஒருமாதிரி சரிக் கட்டினானாம்.

கணேசானந்தனின் பிரயாசை கடைசியில் ஒருநாள் பலித்தது. ஆறே மாத காலத்தில் சங்கீதாவிடம் அவன் ஆவலுடன் எதிர்பார்த்த மாற்றம் தெரியத் தொடங்கியது. முன்பு விரும்பிச் சாப்பிட்டதெல்லாவற்றையும் இப்ப தூக்கி எறிந்தாள். மீன்குழம்பு என்றால் பிடிப்பதில்லை; யூலவ்மீயை தூரத்தில் பார்த்தாலே ஒடி ஒழிந்து கொள்வாள்.

ஒரு நல்ல நாளில் தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு நர்ஸங்ஹோமுக்கு 'செக்கப்பிற்கு' போனான் கணேசானந்தன். பிரசவத்தை அங்கேயே வைப்பதென்று நினைத்திருந்தான். ஆபிரிக்காவில் வசதிகள் அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. வெளிநாடுகளில் படித்த டாக்டர்களும், நர்ஸ்மார்களும்தான் அங்கே வேலை செய்தார்கள். ஆனாலும், 'போதிய உபகரணங்களும், மருந்துகளும் இல்லாவிட்டால்?' என்ற கவலை அவனுக்கிருந்தது.

சங்கீதா இவன் பக்கத்தில் இருந்து நெளிந்தாள். இவன் திரும்பிப் பார்த்தான். இவனுக்காகப் பன்னிரெண்டு வருடங்கள் தவம் செய்தவளல்லவா? எந்தப் பெண்தான் இப்படியான தியாகத்தை செய்ய முன்வருவாள்? நினைக்கும்போதெல்லாம் இவனுக்கு அவள்மேல் அன்பு சுரந்தது.

மெய்கண்டான் கலண்டர் பொய் சொல்லாது. இப்ப அவளுக்கு மூன்று மாதம் தள்ளிப்போய்விட்டது. அடிக்கடி வாந்தி வேறு வருகிறது என்கிறாள். மாங்காய் பிஞ்சையும், 'கோலா நட்டையும்' ஆர்வத்தோடு சப்பியபடியே இருக்கிறாள். நடக்க அவளுக்குத் தெரியாது. துள்ளித்தான் திரிவாள்; இப்போது அடிக்கடி சோர்ந்துபோய் காணப்படுகிறாள்; 'தூக்கம் வருவதில்லை; தலை சுற்றி மயக்கம் வருகிறது' என்று சொல்கிறாள். பாடசாலைக்கு கூட இரண்டு நாளாக போகவில்லை.

அவளுடைய வயிற்றை பார்த்தான். அது ஆலிலை அளவுக்கு சிறுத்து வழுவழென்று இருந்தது. இந்தச் சிறிய வயிற்றிலிருந்து எப்படி இன்னொரு உயிர் வரும்? சடையைப் பார்த்தான். அது எப்போதும் போல் இப்பவும் கருநாகமாக கைப்பிடிக்குள் அடங்காமல் இருந்தது. காதோர மயிர் கற்றைகளை ஆபிரிக்கர்கள் செய்வதுபோல எலிவாலாகப் பின்னி நுனியில் நீளமாக மணிகள் கோத்து கட்டியிருந்தாள். அதுவும் பார்க்க ஒரு அழகாகத்தான் இருந்தது. குனிந்து அவள் காதருகே "உம்மைப் பார்க்க ஒரு சின்னப் பெட்டைபோல இருக்கு" என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு சொன்னான். அவள் கீழ் கண்ணால் பார்த்தபடி தலையை வெடுக்கென்று திருப்ப அந்த மணிகள் கிணுகிணுவென்று ஆடின.

 

அந்த நேரம் பார்த்து டாக்டர் கையிலே கனரிப்போர்டுகளுடன் அவசரமாக வந்தார். கணேசானந்தன் எதிர்பார்த்ததுபோல 'கன்கிராட்ஜுலேசன்ஸ்' என்று அவர் கூறவில்லை. சிறிது நேரம் இவர்களையே பார்த்தபடி இருந்தார். பிறக மடிபடியும் ரிப்போர்டுகளை சரிபார்த்துக் கொண்டார். இன்னொரு முறை இவர்கள் முகத்தை நோக்கி யோசித்தபடியே மெதுவாக "நீங்கள் எதிர்பார்ப்பதுபோல இல்லை" என்றார். கணேசானந்தன் அதிர்ச்சியடைந்தவனாக "என்ன? கர்ப்பம் இல்லை என்றால் வேறு ஏதாவது வருத்தமா?" என்றான்.

அவர் சிறிது மௌனம் சாதித்துவிட்டு "இல்லை, இல்லை உங்கள் மனைவிக்கு மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்டது, அதாவது menopause" என்றார்.

விக்கித்துப்போய் இவர்கள் ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். "என்ன டாக்டர், உண்மையாகவா? என் மனைவிக்கு 39 வயதுதான் ஆகிறது" என்றான்.

"ஆசியப் பெண்களுக்கு பொதுவாக 40-45 வயதிலேயே முழுவிலக்கு வந்து விடுகிறது. அவர்கள் பூப்பெய்திய காலத்திலிருந்து அநேகமாக முப்பது வருடங்கள் கருவளம் தொடரும். உங்கள் மனைவி எத்தனையாவது வயதில் பருவமடைந்தார்?" என்றார்.

கணேசானந்தன் தன் மனைவியைப பார்த்தான். அவள் கண்களிலே இப்போது நீர் கட்டிவிட்டது. சன்னமான குரலில் "பத்து" என்றாள்.

"அதுதான் சொன்னேன், முப்பது வருடங்கள் உங்கள் மனைவி கருவளம் உள்ளவராக இருந்திருக்கிறார். இனிமேல் கருத்தரிக்கும் சாத்தியக் கூறு இல்லை" என்றார் டாக்டர்.

முதல் முறையாக அவன் மனைவி டாக்டரிடம் வேசினாள். "இதற்கு மருந்துகள் ஒன்றும் இல்லையா, டாக்டர்? நாங்கள் மணம்முடித்து இரண்டே வருடங்கள்தான் ஆகின்றன."

அப்பொழுது டாக்டர் சொன்னார்: "இதற்கு மருந்துகளே இல்லை. அம்மா. ஒரு பெண் பிறக்கும் போதே அவளுக்கு எத்தனை கருமுட்டைகள் என்று அவளுடைய கர்ப்பப் பையில் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. என்னதான் தலைகீழாக நின்றாலும் அதை மாற்ற முடியாது."

அவனால் தன் மனைவியின் முகத்தை பார்க்கவே முடியவில்லை. திரும்பி வரும்போது வழிநெடுக விம்மிக்கொண்டே வந்தாள். திடீரென்று அவள் அரற்றினாள்: "ஐயோ! பிரம்மா எல்லாருக்கும் தலையிலே எழுதுவான்; எனக்கு மட்டும் கர்ப்பப் பையில் எழுதிவிட்டானே!" என்று இரண்டு கைகளையும் தலையிலே வைத்துக் கோவென்று கதறினாள்.

 

ஒரு நாள் கணேசானந்தன் நித்திரையாய் இருந்தபோது இவள் அவனை உலுக்கி எழுப்பினாள். அவன் எழும்பி பார்த்தபோது இவள் தலைவிரி கோலமாக அழுதபடி இருந்தாள். "பன்னிரெண்டு வருடங்களாக படித்தேன்; பரீட்சை எழுதவில்லையே! பன்னிரெண்டு வருடங்களாக சமைத்தேன்; சாப்பிடவில்லையே! நான் என்ன செய்ய?" என்று தலையிலே அடிக்கத் தொடங்கி விட்டாள்.

இப்படி அடிக்கடி இவர் தலையிலே அடிக்கத் தொடங்கியதும் கணேசானந்தனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 'திடீர், திடீர் என்று சன்னதம் வந்ததுபோல இவள் நடக்கிறாளே!இது படுத்தலாமா? இப்படியே கட்டுக்கடங்காமல் போனால் டாக்டரிடம் போய் யோசனை கேட்க வேண்டியதுதான்' என்று முடிவு செய்துகொண்டான்.

சில காலம் இப்படியோ போய்விட்டது. அவள் பேருக்கு மறுபடியும் பள்ளிக்கூடம் போய் வரத் தொடங்கினாள். ஆனால் சிற்சில வேளைகளில் அவளுடைய நிலைகுத்திய பார்வையும், அசாதாரணமான செய்கையும் இவனைக்கூட அச்சப்பட வைத்தன.

ஒரு நாள் அதிகாலை மூன்று மணியிருக்கும். கணேசானந்தன் திடீர் என்று விழிப்பு வந்து எழுந்தான். பக்கத்திலே தடவிப் பார்த்தான். இவளைக் காணவில்லை. தேடிப்போன இவன் கண்ட காட்சி அதிர்ச்சி தருவதாக இருந்தது. சமையலறைக்கும், வரவேற்பறைக்கும் இடையில் உள்ள ஓடையில் இவள் சுவரிலே தலையைச் சாய்த்து உட்கார்ந்திருந்தாள். இவள் உடல் எல்லாம் வேர்த்து தெப்பமாகியிருந்தது.

இவன் ஒன்றுமே பேசவில்லை. பக்கத்திலேபோய் அமர்ந்து கொண்டான். அவள் தலையை வருடினான். சடுதியாக திரும்பி அவனைப் பார்த்து நெஞ்சு சட்டையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்; "நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்? பன்னிரெண்டு வருடங்கள் எனக்காக காத்திருந்தீர்களே? இதற்காகத்தானா? உங்கள் பிள்ளையை என் வயிற்றில் சுமக்கவேண்டும் என்று தவம் செய்தேனே!என் அசட்டுப் பிடிவாதத்தினால் எல்லாத்தையும் இழந்து விட்டேனே!"

"ச்ž, கண்ணைத் துடையும். ஏதோ உலகம் கவிழ்ந்ததுபோல? இது என்ன?"

"குதிரை போனபின் லாயத்தைப் பூட்டி என்ன பயன்? நான் இப்பொழுது என்ன? பெண்ணா? இல்லை, ஆணா? அல்லது பேடியா? பெண்மை இல்லாத ஒரு பெண்ணை எப்படி அழைப்பது? இனி நான் ஒரு எண்ணிக்கைக்கு மாத்திரமே; என்னால் ஒரு பிரயோசனமும் கிடையாது."

"இது என்ன விசர்க் கதை? எல்லாருக்கும் வருகிறதுதானே! சங்ககாலக் கணக்கின்படி இது ஏழாவது வாசல்; அதாவது 'பேரிளம்பெண்'. இனிமேல்தான் வாழ்க்கையின் ருசியே தெரியப் போகிறது" என்றான் அவன், முகத்தில் வலுக்கட்டாயமாக வரவழைத்த புன்சிரிப்புடன்.

 

"உங்களுக்கு எங்கே விளங்கப் போகுது? நீங்களும் ஒரு ஆண்தானே! இது கடவுள் எனக்குக் கொடுத்த தண்டனை. எனக்கு வேணும். கடவுளுடைய வரப்பிரசாதத்தை என் ஆணவத்தினால் வேண்டமென்றே இரண்டு வருடங்கள் தள்ளி வைத்தேன். கருவளம் இருந்தபோது நான் அதை மதிக்கவில்லை. ஆபிரிக்கர்கள் அதை எப்படி போற்றுகிறார்கள்! இல்லாவிட்டால் எங்கள் நாட்டு சிறுமைகள் தாங்க முடியாமல் புகலிடம் ஓடி கேட்டு வந்த இந்த நாட்டில் எங்களுக்கு பிறக்கும் பிள்ளை முழு ஆபிரிக்கனாக இருக்க வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தேன். ஆனால் ஒன்றை மறந்து விட்டேனே?"

"என்ன?"

"பிள்ளை பிறந்து ஆண் என்றால் 'அரவிந்தன்' என்றும் பெண் என்றால் 'அபிராமி' என்றும் அகரவரிசையில் பேர் வைப்பதாக தீர்மானம் பண்ணினோமே? அது எவ்வளவு பிழை? நாங்கள் மனத்தளவில் மாறவில்லையென்றுதானே அர்த்தம்."

கணேசானந்தனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவள் சொல்வதில் ஞாயம் இருப்பதாகப்பட்டது.

"பெண் எவ்வளவு கேவலமாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். முதலில் பருவம் அடையும் தொல்லை; பிறகு மாதா மாதம் வரும் உபத்திரவம். கர்ப்பம் அடையும்போது ஒன்பது மாதம் அவள் பிள்ளையை சுமக்கிறாள். அதைத் தொடர்ந்து அவள் படும் பிரசவ வேதனை. ஆனால் இது எல்லாவற்றிலும் கேவலமானது அவளுக்கு ஏற்படும் பெண்மை நீக்கம் தான். இந்த அவஸ்தையெல்லாம் ஆணுக்கில்லையே!"

இப்படியான நேரங்களில் கணேசானந்தன் ஆறுதல் கூற முயற்சிப்பதில்லை. அது வியர்த்தம். ஆற்றோட்டத்துடன்தான் போய் அடுத்த கரையை அடைய வேண்டும் என்பது அவன் சித்தாந்தம். ஆனால் அவனுடைய மனைவி கூறியது முற்றிலும் உண்மைதான் என்று அவனுக்குப்பட்டது. ஒரு பசுஞ்சோலை கருகி அவன் கண் முன்னே பாலைவனமாகிக் கொண்டிருந்தது; பருவத் தோப்பொன்று மூப்பை நோக்கி அடியெடுத்து வைத்தது. ஓளவையார் ஒரு பெண் புலவரல்லவா? அவருக்குக் கூடவா இந்தக் கொடுமை புலவரல்லவா? அவருக்குக் கூடவா இந்தக் கொடுமை தென்படவில்லை? 'கொடிது, கொடிது வறுமை கொடிது' என்று தானே அவர் பாடினார்.

ஒரு பிராயத்திலே பெண்ணுக்கு ஏற்படும் இந்த அநீதி பற்றியல்லவா அவர் பாடியிருக்க வேண்டும்?

உள்ளிழுத்த தலையை ஆமை மெள்ள மெள்ள வெளியே விடுவதுபோல் சங்கீதாவும் மெதுவாக வெளியே வரலானாள். பள்ளிக்கு புதுத் தென்புடன் வந்து போனாள். தன் உடைகளிலும் ஒப்பனைகளிலும் முன்புபோல் கவனம் செலுத்தினாள். இடைக்கிடை அந்த வீட்டில் அவளுடைய குபீர் சிரிப்பு மறுபடியும் ஒலிக்கத் தொடங்கியது.

கோப்பி என்றால் ஐரிஷ் கோப்பி, துருக்கி கோப்பி, இந்தியா கோப்பி என்று இப்படி பலவகை உண்டு. ஆனால் 'முட்டை கோப்பி' என்பது இந்த உலகத்திலேயே யாழ்ப்பாணத்தில்தான் அகப்படும். இந்த அதிகாலை வேளையில் கடந்த ஐந்து நிமிடங்களாக சங்கீதா அதைத்தான் போட்டு 'இந்த அடி' அடித்துக் கொண்டிருந்தாள். தாய்மார்கள், சாமத்தியப்பட்ட பெண்களுக்கும், புதுமணப் பெண்கள் தங்கள் கணவன்மாருக்கும் தவறாமல் கொடுத்துவந்த பாரம்பரியமான காயகல்பம் இது. சங்கீதா இவ்வளவு கர்மசிரத்தையாக முட்டைக்கோப்பி போடுவது அவனுக்கு அதிசயமாயிருந்தது.

ஆனால் இதைவிட அதிசயம் அன்று பள்ளியிலிருந்து திரும்பி வந்தபோது அவனுக்கு அங்கே காத்திருந்தது. அவன் வீட்டிலிருந்து ஓர் ஆபிரிககப்பாடல் மெல்லிய குரலில் ஒலித்தது.

ராலம் தாங் கீ

ரா லம்

ரெல் பாபா கோட் தாங் கீ

வட் டு பாஃர் மீ

ஐகோ ரெல்

தாங் கீ

 

'கடவுளே நன்றி, என்னை மீட்டதற்கு நன்றி' என்ற 'கிறியோல்' பாடலை முணுமுணுத்தபடி சங்கீதா சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். அதிலே இன்னொரு விசேஷம், இவள் முதுகிலே ஒட்டிக் கொண்டு லப்பாத் துணியினால் விரிந்து கட்டப்பட்டிருந்தது ஒரு ஆபிரிக்கக் குழந்தை. அது வேறு யாருமில்லை, கரிக்குருவிதான். கறுத்த உருண்டையான கண்கள் அதற்கு. அற்தக் கண்களை மலர்த்தி தலையை இரண்டு பக்கமும் ஆட்டி அசைந்து கொண்டிருந்தது.

சங்கீதா கால்களை தரையில் தேய்த்து தேய்த்து உடம்பை அசைத்து பாட்டிற்கேற்ப ஆடிக்கொண்டிருந்தாள். பரத நாட்டியத்திற்கு பரம சத்துரு ஆபிரிக்க நடனம். பரத முனிவர் பரதநாட்டிய சாஸ்திரம் எழுதும்போது இடையின் கீழ்ப்பகுதி அசையாமல் நேராக நிற்க வேண்டும் என்பதை 'அண்டர்லைன்' பண்ணி எழுதி இருந்தார். ஆபிரிக்க நடனம் அப்படியல்ல. இடைக்குமேல் உடம்பு நேராக நிமிர்ந்து நிற்கும்; வேலையெல்லாம் பிருஷ்டத்துக்குத்தான் பெண்டுலம் போல அது இடமும் வலமும் அசைந்து மனசை அலங்கோலப்படுத்தும்.

 

சங்கீதா அப்படித்தான் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தாள். இந்த மாதிரி குதூகலத்தை கணேசானந்தன் அவளிடம் கண்டு பல மாதங்களாகிவிட்டன. அன்றிரவு அவர்கள் படுக்கைக்கு சென்றபோது 'கரிக்குருவியை' படுக்கையின் நடுவே அவள் கிடத்தியிருந்தாள், "அப்ப, என்ன பேர் வைத்திருக்கிறீர்? அபிராமியா?" என்றான் அவன், கண்களைச் சிமிட்டிக்கொண்டே. "ச்ž, இல்லை; 'அய்சாத்து', என்ன இனிமை பாருங்கோ! அசல் ஆபிரிக்க பேர்."

"ஆஹா" இதுவும் அகர வரிசைதான்; அப்ப இன்னும் பதினொரு பேருக்க இடமிருக்கு."

"ஏன், மெய்யெழுத்தையும் சேர்ப்பதுதானே! 'அய்சாத்து' என்றால் ஆபிரிக்க பாஷையில் என்ன பொருள் தெரியுமா?" என்றாள் சங்கீதா. அவள் கண்கள் என்றுமில்லாதபடி வெட்டிக் கொண்டு இருந்தன.

"நீயே சொல்" என்றான் அவன், அவள் கண்களை அள்ளியபடியே.

"நம்பிக்கை" என்றாள் சங்கிதா, மந்தகாசமாக சிரித்தபடி.

சிறிது நேர மௌனத்திற்க பிறக அவன் சொன்னான்: "கடவுள் பெண்மைக்குத்தான் ஒர் எல்லை வைக்கமுடியும்; ஆனால் தாய்மையை எடுக்க முடியாதல்லவா?"

இப்படிச் சொல்லிக்கொண்டே அவளை மெல்ல தன் பக்கம் இழுத்தான். அவள் சிணுங்கிக்கொண்டே நெருங்கினாள்.

அவள் முகத்திலே பெண்மை வந்து கவிழ்ந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)