கம்புயூட்டர்
அதனுடைய பார்வை எனக்கு துண்டாய் பிடிக்கவில்லை. அது இருந்த விதமும்,
தோற்றமும் வெறுப்பைக் கூட்டியது. மேசைமேல் சவடாலாகப் பரப்பிக்கொண்டு
கல்லுளிமங்கன்போல சப்பளிந்துபோய் இருந்தது.
'ஆணா? பொண்ணா? என்றுகூட சரியாகத் தெரியவில்லை. கம்புயூட்டர்களில் ஆண்,
பெண் பேதம் இருப்பது எனக்கு கன நாளாகத்தெரியாது. அதைக்கண்டு பிடிப்பதற்கு
என்ன குறுக்குவழி என்பதையும் அப்போது யாரும் சொல்லித் தந்திருக்கவில்லை.
சில நிபுணர்கள் பார்த்த வாக்கிலேயே சொல்லிவிடுவார்களாம். பெண்ணென்றால்
வழிக்குக்கொண்டுவர கனநாள் ஆகும். பிகு செய்துகொண்டே இருக்குமாம். ஆனால்
அணைந்துவிட்டால் உயிர் உள்ளவரை விசுவாசமாக செயல்படும். ஆண்
அப்படியில்லையாம். ஆரம்பத்தில் அளவுக்கதிகமாக ஒத்துழைக்கும்; நாள்
போகப்போக காலை வாரி விட்டுவிடுமாம்.
முன்பின் தெரியாத விவகாரத்தில் இப்படிவந்து மாட்டிக்கொண்டோமே என்று
நொந்துகொண்டேன். ஒரு திடீர் உந்துதலால்தான் கம்புயூட்டர் ஒன்று
வாங்குவதாக முதல்நாள் இரவு எங்கள் வீட்டில் முடிவாகியது. என் ஒன்பது வயது
மகன் அரவிந்தன் தன்னடைய சிநேகிதர்கள் எல்லாரிடமும் கம்புயூட்டர்
இருப்பதாக அளந்தான். என் ஆசை மனைவியோ ஆர்மோனியப்பெட்டிபோல இதையும்
வளைத்துவிடலாம் என்று ஆர்வமான கனவுகளுடன் காத்திருந்தாள்.
இது என்ன வெண்டைக்காயா, நுனியை முறித்துப்பார்த்து வாங்க? கம்புயூட்டர்
முந்திப்பிந்தி வாங்கியும் அனுபவமில்லை. கடைக்காரனடைய முகலாவண்யம்
கதைப்பதற்கு ஆசையூட்டுவதாகவும் இல்லை. வீர்யம் நிறைந்தவன்போல
காணப்பட்டான். அவன் தலையில் இருக்கவேண்டிய முடியெல்லாம் மூக்கு
வழியாகவும் காது வழியாகவும் வந்து கொண்டிருந்தது. எனக்கு அவன் சொன்ன
விளக்கங்களும், கேட்ட கேள்விகளும் தலைகால் புரியவில்லை. நான்
நியூயோர்க்கில் பட்டபாடு இங்கேயும் படவேண்டி வந்துவிட்டதே என்று
யோசித்தேன்.
அமெரிக்காவுக்கு நான் முதன்முதலாகப் போனபோது வாய்விட்டு கேளாத நண்பர்
ஒருத்தர் தூண்டில் ஒன்று வாங்கி வரும்படி கூறியிருந்தார். தூண்டிலில்
மீனைப்பிடிப்பது தலையிலா, வாலிலா என்பது போன்ற அடிப்படை விஷயம்கூட
எனக்குத்தெரியாது. நண்பருக்க 'சரி' என்று வாக்குக் கொடுத்துவிட்டேன்.
அமெரிக்காவில் தூண்டில் வாங்குவதற்காக ஒரு கடைக்குப் போனபோதுதான் எனக்கு
பிரச்சனையின் பிரம்மாண்டம் வெளிச்சமானது.
கடையென்றால் அது சாதாரண கடையல்ல. ஒரு கிரிக்கட் மைதானம் அளவில்
மிகப்பெரிய சமாச்சாரம். இதிலே விசேஷம் என்னவென்றால் இந்தக்கடையிலே
தூண்டில் மட்டும்தான் விற்பனை செய்தார்கள். மீன்பிடி சாதனங்களுக்கென்றே
ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேகமான நிலையம். எத்தனையோ விதமான உபகரணங்க;
முன்பின் பார்த்திராத வினோதமான தூண்டில்கள் சிறிதும் பெரிதுமாக கடையை
நிறைத்துக்கிடந்தன. நான் அங்குமிங்கும் அண்ணாந்து பார்த்துக்கொண்டு
அநாதையாகத் திரிந்தபோது, ஏங்க வைக்கும் வனப்புள்ள பணிப்பென் ஒருத்தி
தென்பட்டாள். குதி உணர் காலணியில் நறுக்கென்று அவள் கத்தரிக்கோல்
வெட்டுவதுபோல நடந்து வந்து 'உங்களுக்கு ஏதும் உதவி தேவையா?' என்று
மழலையில் கேட்டாள். நான் வந்த விஷயத்தை விளக்கினேன்.
அவளுடைய முதல் கேள்வி 'உங்களுக்கு எப்படி வேண்டும்? வலது கை தூண்டிலா?
அல்லது இடது கையா? என்றாள். 'ஆஹா! அப்படியா சங்கதி?' என்று நான் 'வலது
கை' என்று பதில் சொன்னதும், இரண்டாவது கேள்வி எழுந்தது. 'ஆற்றிலேயா?
கடலிலேயா?' என்றாள். 'இது என்னடா வில்லங்கம்?' என்று நான்
யோசிப்பதற்கிடையில் அடுத்த கேள்வி வந்து விழுந்தது. 'ஆழ்கடலா? கரை
ஓரத்திலா?' என்றாள். 'தூண்டிலிலே இத்தனை விசயங்கள் இருக்கா?' என்று நான்
தியானத்தில் இருந்தபோது மிகவும் முக்கியமான ஒரு கேள்விக்கணையை வீசினாள்.
'சிறுவனா? இளைஞனா? அல்லது முழு மனிதனா?' என்றாள். நான் என்னுடைய
நண்பருடைய உடல்வாகை மனத்தினால் அளவெடுக்க முயற்சிசெய்து கொண்டிருந்தேன்.
இப்படியாக அவள் கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்டாள். 'நின்று கொண்டு
பிடிப்பதற்கா? இருந்து பிடிப்பதற்கா? படகில் போய் பிடிப்பதற்கா?
படுத்திருந்து பிடிப்பதற்கா?' என்றாள் (மரியாதை கருதி 'சிறுநீர் பெய்து
கொண்டு பிடிப்பதற்கா?' என்பதைக்கேட்கவில்லை என்று நினைக்கிறேன்.) 'சிறிய
மீனா? பெரிய மீனா? என்ன எடை தாங்கும் தூண்டில் தேவை?' இதுமாதிரியாக
'இம்மென்னும் முன்னே எழுநாறும் எண்ணூறும், அம்மென்றால் ஆயிரம்' கேள்விகள்
வந்து விழுந்தன. தலை சுற்றிவிட்டது. 'டிக்கட் வேண்டாம் கையை விடு' என்று
ஆகிவிட்டது. (யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டரில் கவுண்டர் ஒட்டைக்குள்
கையை நீட்டினால் டிக்கட் கொடுப்பவர் கையைக்கெட்டியாகப் பிடித்துக்
கொள்வார். பின்னுக்கு சனம் நெருக்கியபடியே இருக்கும். டிக்கட்
கேட்டவருடைய கையோ முறிந்துபோகும் நிலை. அப்போது இவர் 'டிக்கட் வேண்டாம்
கையைவிடு' என்று கத்துவது வழக்கம்). கட்டுச்சோறு கட்டிக்கொண்டு
வந்திருக்கவேண்டும் என்று பட்டது எனக்கு. அடுத்த முறை வரும்போது இவளுடைய
கேள்விகளுக்கெல்லாம் பதிலை ஒரு புத்தகமாக அடித்துக்கொண்டு வருவது என்று
மனத்திற்குள் தீர்மானித்துக்கொண்டேன்.
இப்படியாக சந்தி பிரிக்காத பாடல்போல தலை சுற்றியது விவகாரம். மறுபடியும்
நான் அந்தக்கடைக்கு கம்புயூட்டரை கொத்துக்கொத்தாக ஆராய்ச்சி செய்து
வித்துவான் பட்டம்பெற்ற ஒரு நண்பரோடு படையெடுத்தேன். நண்பர்
கம்புயூட்டருக்கு தலபுராணம் எழுதியவர். விடுவாரா? இப்போது வட்டியும்
முதலுமாக அவர்களைப்போட்டு குடை குடையென்ற குடைந்தார். அவர்களுடைய
சம்பாஷணை முற்றிலும் ஒரு புதிய பாஷையில் நடைபெற்றது. எனக்கு ஒன்றுமே
புரியவில்லை. இரண்டு பேருடைய வாயையும் மாறி மாறிப்பார்த்தேன். 'ஹார்ட்
ட்ரைவ், ப்ளொப்பி, மெகா பைட், சொப்ட்வேர், இண்டர்பேஸ், யூபிஎஸ் என்ற
வார்த்தைகள் எல்லாம் எனக்கு சிதம்பர சக்கரமாக இருந்தது.
ஒருமுறை கவி காளமேகம் பெயர் தெரியாத ஓர் ஊரில், பாஷை தெரியாத திம்மி
என்கிற தாசியுடன் இரவைக் கழிக்கவேண்டி வந்ததாம். இரவு முழுக்க தாசி
'ஏமிரோ வோரி', 'எந்துண்டி வஸ்தி' என்றெல்லாம் இவரிடம் சரசம் செய்தாள்.
அவள் சொன்னது இவருக்கு புரியவில்லை. 'எமன் கையில் பட்டபாடு பட்டேன்'
என்கிறார் காளமேகம்.
'எமிரோ வோரி' என்பாள் எந்துண்டி வஸ்தி' என்பாள்
தாம் இராச் சொன்ன வெல்லாம் தலைகடை தெரிந்ததில்லை
போம் இராச் சூழும் சோலைப் பொருகொண்டைத் திம்மி கையில்
நாம் இராப் பட்ட பாடு நமன் கையில் பாடுதானே.
அந்தக் கஷ்டம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. அவர்களுடைய கதையில்
அடிக்கம் 'ராம், ராம்' என்ற வார்த்தை அடிப்பட்டது. நான் மேலே இருப்பது
'ராம்' என்றும் கீழே இருப்பது 'லட்சுமணன்' என்றும் எனக்கே உரிய
சாதுர்யத்துடன் ஊகித்துக்கொண்டேன்.
இவர்கள் இந்தச் சந்தடியில் இருக்கும்போதே நான் எனக்காகத் தோதாக ஒருவரைக்
கண்டுபிடித்தேன். அவருடைய கெமிஸ்ரி எனக்கு சரிவரும்போல் தோன்றியது.
விஷயம் தெரிந்தவர்போலக் காணப்பட்டார். அவரிடம் போய் மெல்ப்பேச்சுக்
கொடுத்தேன்.
'கம்புயூட்டர் வாங்கும்போது நாங்கள் என்ன பாவிப்புக்கு அதை வாங்குகிறோம்
என்பதை நிச்சயிக்கவேண்டும்' என்றார். 'ஒரு நெல்லு மூட்டை மாத்திரம்
கொண்டு போவதற்கு ஒரு திருக்கல் வண்டி போதும்; நூறு மூட்டை என்றால் ஒரு
லொறி தேவைப்படும். குடும்பத்தோடு சுகமாகப் பயணம் செய்ய கார் வசதியாக
இருக்கும். இல்லை, விசையாகப் போவதுதான் நோக்கம் என்றால் ரேஸ'ங்கார்தான்
வாங்கவேண்டும்' என்றார். இது என்னை யோசிக்க வைத்ததோடு குட்டையை மேலும்
குழப்பிவிட்டது.
இதுதவிர ராட்சச கம்புயூட்டர்களும், தனித்தியங்கும் கம்புயூட்டர்களும்
இருந்தன. மேசையில் வைப்பது மடியில் வைப்பது (இது பெண்ணாகத்தான் இருக்க
வேண்டும்), கக்கத்தில் வைப்பது இப்படியாகப்பல. தலையில் வைப்பது இன்னமும்
வரவில்லை என்றே நினைக்கிறேன். அது வந்துவிட்டால், பெண்கள் தலையில்
மல்லிகைப்பூ வைப்பதற்கு பதிலாக இதை வைத்துக்கொண்டு போனாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை.
கடைசியில் நண்பருடைய ஆக்ஞைப்படி '486'
கம்புயூட்டர் வாங்குவதென்று தீர்மானமாகியது. கம்புயூட்டர் என்றால் அதை
மாத்திரம் தூக்கிக்கொண்டு வர முடியுமா? அதற்கென்று சில உபகரணங்கள்
இருக்கின்றன. நான் கணக்குப்போடும்போது அதை மனதில் எடுக்கவில்லை. மௌஸ்,
மௌஸ் பாட், டிஸ்குகள், பேப்பர், ரிப்பன் என்று ஊரிப்பட்ட சாமான்கள். பில்
போடும்போது கணக்கு எக்கச்சக்கமாகிவிட்டது. பொங்கல் பானை வாங்கும்போது
அதற்கென்று திருகணி, இஞ்சி இலை, கரும்பு என்று வாங்குவதில்லையா?
அப்படித்தான் இதுவும் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன்.
நாங்கள் எல்லாவற்றையும் காரிலே ஏற்றி திரும்பி வரும்போது நண்பர்
'486 கம்புயூட்டர்,
486 கம்புயூட்டர்' என்று உச்சாடனம்
செய்தவாறே அதன் வீரப்பிரதாபங்களைப் பற்றி ஒரு பரணி பாடினார். எங்கள் ஊர்
சிவக்கொழுந்து 1008 வேட்டி வாங்க
வண்டில் கட்டி பெரியகடைக்கு போனதைப்போல் நானும் 'எனக்கு
486 கம்புயூட்டர்கள் கிடைக்கப்போகிறது'
என்று மடைத்தனமாக ஒரு கணம் கணக்குப்போட்டதை எண்ணி வெட்கினேன்.
ஆலத்தி எடுக்க நிற்பதுபோல ஆவலோடு வாசலில் காத்திருந்தாள் என் மனைவி,
மேகலா. அவளுக்கு பக்கத்தில் என் மகன். நிறை பொங்கல் பானையை இறக்குவதுபோல
மெத்த மெதுவாக கம்புயூட்டரை இறக்கி உள்ளே கொண்டுபோய் ராகுகாலம் தவிர்த்த
நல்ல வேளையில் ஒரு மேசையில் இருத்தினோம். முதல் வேலையாக சாமிக்கு தீபம்
காட்டிவிட்டு வந்து கணிப்பொறியின் நெற்றியில் ஒரு குங்குமப்பொட்டு
வைத்தாள் என் மனைவி. கைவியளத்துக்கு அரவிந்தன் அதில் 'ஓம் ஸ்ரீராம்'
எழுதினான். இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு பரபரப்புடன் கம்புயூட்டரை இயக்கிப்
பார்த்தோம்; தட்டிப்பார்த்தோம்; தடவிப்பார்த்தோம். அதன் புது மணத்தை
நுகர்ந்தோம். அது 'கிர்ர், கிர்ர்' என்று உயிர் பெறும் அதிசயத்தை வாய்
திறந்து பார்த்து ரசித்தோம். அன்றுமுதல் அந்த கம்புயூட்டர் எங்கள்
குடும்பத்தில் ஒன்றாகிவிட்டது.
முதல் நாளே நான் ஒரு பெரிய உண்மையைக் கண்டுபிடித்தேன். கணிப்பொறி என்பது
ஒரு ராட்சச வேலைக்காரன். சொல்லும் வேலைகளை எல்லாம் கச்சிதமாகச்செய்யும்,
ஆனால் தவறான கட்டளைகள் பிறப்பித்து விட்டாலோ தானே எஜமானன் ஆகிவிடும்.
பிறகு நீங்கள் அதற்கு அடிமைதான். இன்னொன்று. பயந்து பயந்து இதை அணுகினால்
அது எட்ட எட்டப்போய்விடும். எனது ஒன்பது வயது மகன் மீன் குஞ்சு
நீந்துவதுபோல உற்சாகமாக அதனோடு ஒட்டிப்பழகிவிட்டான். கணிப்பொறியை
அவனுக்கு நிரம்பவும் பிடித்துக்கொண்டது. அதுவும் தன்னுடைய ரகஸ்யக்கதவுகளை
அவனுக்கு தங்கு தடையின்றி திறந்துவிடத் தயாராகிவிட்டது.
எல்லோருக்கும் அவசரமாகச் செய்வதற்கு அதில் கனவேலை இருந்தது. என்
மனைவிக்கு வீட்டுக் கணக்குகளும், சீட்டுக்கணக்குகளும் காத்திருந்தன.
அரவிந்தனுக்கு பள்ளிக்கூடத்தில் கொஞ்சம் பயிற்சி ஏற்கனவே இருந்தது.
பட்டங்கள் கீறவும், கேம்ஸ் விளையாடுவதற்கும் அவன் பறந்தான்.
அரவிந்தனுடைய நண்பர்கள் இப்பவெல்லாம் அடிக்கடி வந்து
போகத்தொடங்கினார்கள். கம்புயூட்டருடன் அவர்கள் பொழுது முக்காலும்
கழிந்தது. புது கேம்ஸ்களை பண்டமாற்று செய்து பாவித்தார்கள். கைதேர்ந்த
நிபுணர்கள்போல் புதிய தலைமுறை கணிப்பொறி பற்றி நீண்ட விவாதங்களும்,
பட்டிமன்றமும் நடத்தினார்கள்.
என் மனைவியின் பொழுதுபோக்கு திசை மாறிவிட்டது. சீட்டுக்கணக்கு விவரங்களை
எல்லாம் கணிப்பொறியில் நுணுக்கமாக பதித்துவந்தாள். அடிக்கடி அவளுக்கு
தொலைபேசி வரும். ஒருமுறை சிநேகிதி ஒருத்தி என்னவோ கேட்க 'கொஞ்சம் இரு
எனக்கு ஞாபகத்தில் இல்லை. கம்புயூட்டரைப் பார்த்து சொல்லுறன்' என்று இவள்
பெருமையாகச் சொன்னாள்.
புதிசாய் பிறந்த குழந்தை வீட்டை அடியோடு மாற்றுவதுபோல இந்தக் கணிப்பொறி
எங்கள் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை கொண்டுவந்தது. நாங்கள் ஒருவருடன்
ஒருவர் கம்புயூட்டர் பாரிபாஷையிலேயே பேசப் பழகிக்கொண்டோம். பள்ளிக்கு
எடுத்துப்போக மகனுக்குச் சாப்பாடு தரும்போது அவன் 'அம்மா
give me a Mega Byte'
என்று கத்துவான்.
மனைவியிடம் இது வேறுவிதமாக வெளிப்படும் 'மேகலா' என்ற பெயரை அவள்
இப்போதெல்லாம் `Megaலா'
என்றே எழுதுகிறாள். காரணம் தெரியாமல் இதயத்தில் சந்தோசம் பொங்கும் அந்த
நேரங்களில் என் விரல்கள் சில்லென்று குளிர்ந்திருக்கும் அவள் இடையைப்
போய் தொட்டுவிடும். நளிப்பு காட்டிக்கொண்டே மெல்ல விலகிவிடுவாள்.
எட்டத்தில் நின்று 'Press any key to Enter'
என்று சொல்விட்டு ஓடுவதற்கு தயாராக நிற்பாள். நான் எட்டிப்பிடித்து
`If you want to Escape. Press here'
என்று என் உதட்டைத் தொட்டுக்காட்டுவேன். இந்த நேரங்களில் எல்லாம் ஒரு புதிய
அன்னியோன்னியம் எங்கள் குடும்பத்துள் வந்து பரவியதுபோல எனக்குப்பட்டது.
சமயங்களில் 'அரவிந்தா! அரவிந்தா! இஞ்ச வா!' என்று யானை ஆதிமூலத்தை
கூப்பிட்டது போல ஓலமிடுவாள் என் மனைவி. 'கம்புயூட்டர் இந்தக் கூட்டலை
தப்பு தப்பாய் போட்டிருக்கு. இதை ஒருக்கா பார்' என்பாள். என்னுடைய மகனும்
'என்னம்மா, நீங்கள் சும்மா, சும்மா கூப்பிட்டு ட்ரபிள் கொடுக்கிறீங்கள்'
என்று நடப்பு விட்டுக்கொண்டே போய் அந்தச் சில்லரை தகராறை சரிசெய்துவிட்டு
வருவான். இப்படியாக அந்தக்கணிப்பொறியின் வருகைக்குப் பிறகு எங்கள் வீடு
ஒரு விஞ்ஞானத் துள்ளல் துள்ளி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தது.
கன நாளாக ஒரு சிறுகதை என் மனதிலே ஊறப்போட்டுக்கிடந்தது. இப்போது
முட்டியில் கள்ளுப்பொங்குவது போல அது பொங்கிக்கொண்டு வந்தது. இனியும்
எழுதாமல் தாவரிக்க ஏலாது என்ற நிலமை.
இரண்டு காதலர்களைப் பற்றியது அந்தக்கதை. காதலிக்கு மாற்றல் கிடைத்து
இன்னொரு ஊருக்கு போய் விடுகிறாள். தொலை தூரத்துக்கு போனாலும் அவளுடைய
காதல் கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் சூடு குறையாமல் வளருகிறது. புது
ஊரில் காதலிக்கு இன்னொருவனிடத்தில் மையல் ஏற்படுகிறது. பழைய காதலன் அவளை
நம்பி, தபால் நிலையத்துக்கம், தொலைபேசி அலுவலகத்துக்குமாக காசை
விரயம்செய்து கொண்டு இருக்கிறான். அவர்களுடைய தொலைதூரக்காதல்
தொலைந்துவீடும் அபாயத்தில் இருந்தது. கதைக்கும் நான் 'தொலை' என்றே
தலைப்பு கொடுத்திருந்தேன்.
சிறுகதையாகத் தொடங்கி நெடுங்கதையாக அது வளர்ந்துவிட்டது. ஆறாயிரம்
வார்த்தைகளுக்கிடையில் அதை மடக்கி வைத்திருந்தேன். நான் நினைத்ததிலும்
பார்க்க கதை நல்லாக வந்திருந்தது. காதல் வர்ணனை ஒரு புதுப்புயலை
கிளப்பிவிடும் என்று எதிர்பார்த்தேன்.
இதிலே ஒரு வசதி என்னவென்றால் கணிப்பொறியில் காகிதம் மிச்சப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கும் எவ்வளவோ நன்மை. கையினால் எழுதுவதுபோல அடித்து
அடித்து எழுதி, திருத்தங்கள் செய்து காகிதத்தை விரயமாக்கத்தேவையில்லை.
எல்லா திருத்தங்களையும் கம்புயூட்டரில் ஒரேயடியாகச் செய்துவிடலாம்.
எத்தனை மரங்கள் நிம்மதிப்பெருமூச்சுவிடும்!
ஒருநாள் ஒரே மூச்சில் எட்டு பக்கங்களை அடித்து முடித்திருந்தேன். வேண்டிய
திருத்தங்களை கணிப்பொறியிலேயே செய்துகொண்டேன். எழுதி, எழுதி, அடித்து
அடித்து கை முறியும் அவசியம் இப்போதெல்லாம் இல்லை. வேலையை முடித்து
கைகளைத்தூக்கி, நாரியை நிமிர்த்தியபோது மின்சாரம் நின்றுவிட்டது. அடித்த
அவ்வளவும் பாழாகி என்னுடைய ஆர்வம் கசங்கிப்போனது. முதலில் இருந்து
திரும்பவும் இன்னொரு முறை அடிக்கவேண்டும்.
அடுத்த நாள் நண்பர் வந்தபோது இதைச்சொல்லி அழுதேன். எனக்கு சாதகத்தில்
நம்பிக்கை இல்லை. கும்பராசிக்காரர் எல்லாம் அப்படித்தான். இருந்தும்
என்னுடைய சாதகத்தில் 'கம்புயூட்டர் தத்து' இருப்பதாக சுதுமலை
சாத்திரியார் சொன்னது என்னைக்கொஞ்சம் கவலைப்பட வைத்தது. அப்போது நண்பர்
எனக்கு இரண்டு புத்திமதிகள் சொன்னார்.
ஒன்று, தலைபோகிற காரியம் என்றாலும் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் டைப்செய்ததை
சேமித்து வைக்கவேண்டும். இரண்டு, எங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு
டைரக்டரி உண்டாக்கி அதிலே எங்கள் வேலைகளை சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும்
என்றார். இதை எப்படிச்செய்ய வேண்டுமென்பதையும் விபரமாக விளக்கினார்.
அன்றிலிருந்து பொயிலைக் கன்றுக்கு பாத்திகட்டுவதுபோல கணிப்பொறி தளத்தை
மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் நானும், இன்னொரு பகுதியில்
மனைவியும், மீதியில் அரவிந்தனுமாகப் பயிர் செய்தோம். எங்கள் படைப்புகளை
இந்த வரப்புக்குள் வைத்துக்கொண்டோம். இதற்குப் பிறகு ஒரு ஒழுங்கு முறை
வந்தது. ஆரம்பத்தில் எனக்கு கம்புயூட்டருடன் ஏற்பட்ட பிணக்கு நீங்கி ஓர்
இணக்கம் ஏற்பட்டது.
அது தன்னிடமுள்ள சூட்சுமத்தை எல்லாம் மெள்ள மெள்ள அவிழ்த்து
விடத்தொடங்கியது. என்னுடைய வேலையை வெகுசுலபமாக்கியது. அந்த மாயா
விநோதங்களில் நான் என்னுடைய மனதைப்பறிகொடுத்தேன்.
உருக்கி எடுத்த இருப்பினால் செய்த 'ரெமிங்டன்' தட்டெழுத்து பொறியில் நான்
ஆரம்பகாலத் தீட்சை பெற்றவன். அதைத் தூக்க இரண்டுபேரும், வைக்க நாலு
பேரும் வேணும். நகல் எடுக்கும் மெசின்கள் வருவதற்கு முன்னரான ஒரு காலம்
அது. ஏழு கார்பன் தாள் வைத்து, கைகளை தலை உயரத்துக்கு தூக்கி,
மூச்சைப்பிடித்து 'தேடி குத்தி' டைப் செய்வதில் நான் ஒரு விண்ணன் என்று
பேர் வாங்கியவன். இப்படி ஓர் ஆழ்ந்த பரவசத்தோடு நான் தட்டெழுத்து லீலைகள்
செய்யும்போது அம்மி பொளிவதுபோல ஒரு விதமான சத்தம் வரும் என்று
சொல்வார்கள்.
என்னுடைய மகன் அப்படியல்ல. அவனுடைய விரல்கள் பட்டுத்துணியில் படுவதுபோல
மெல்லப்பட்டு நகரும். விசைக்கட்டைகளில் அவன் விரல்கள் வண்ணத்துப்பூச்சி
பறப்பதுபோல தொட்டு தொட்டு பறந்தபடியே இருக்கும். எழுத்துக்கள் திரையிலே
மின்னி மின்னி கை கோத்துக் கொண்டு வரும்போது பார்க்க கொள்ளை அழகாக
இருக்கும்.
இதில் பல ரகஸ்ய பாதைகளை என் மகனே கண்டுபிடித்துக்கொடுத்தான். நான் முன்பே
அவற்றை அறிந்திருந்ததுபோல ஓர் அலட்சியத்துடன் ஏற்றுக்கொண்டேன். எப்படி
நகல் எடுப்பது, சுத்தரித்து ஒட்டுவது, தேடுவது, அழிப்பது, எழுத்துக்களை
பெரிதாக்குவது, சிறிதாக்குவது போன்ற நுணுக்கங்களை எல்லாம்
தெரிந்துகொண்டேன்.
சொற்பிழைகளைக் கண்டுபிடிக்கவும், ழ, ள
மயக்கங்களை நீக்கவும் சீக்கிரத்தில் பழகிக்கொண்டேன். ஆனால் என்னை
ஆச்சரியத்தில் அடித்தது ஒரு வார்த்தையைத் தேடிக்கொண்டு பிடிப்பதும்,
பிறகு அதை மாற்றுவதும்தான். கதாநாயகனுடைய பெர் 'சந்திரன்' என்று
இருந்தது. அதை 'ரமே' என்று மாற்ற முடிவு செய்தேன். கணிப்பொறியில்
அந்தக்கட்டளையை கொடுத்ததும் அது முப்பத்தாறு பக்கங்களையும் தேடித்துருவி
'சந்திரன்' என்றுபேர் வரும் இடங்களில் எல்லாம் 'ரமே' என்று ஒரு கணத்தில்
மாற்றிவிட்டது.
இதிலும் பார்க்க இன்னொரு அதிசயம் காத்துக்கிடந்தது. கதை ஆறாயிரம்
வார்த்தைகளுக்கு மேல் நீடிக்கக்கூடாது. கணிப்பொறியில் கட்டளை கொடுத்ததும்
அது நொடியில் வார்த்தைகளை எண்ணிக்கூறிவிடும். அது மாத்திரமல்ல, எத்தனை
பக்கம், எத்தனை வரிகள், எத்தனை பாராக்கள் என்று குச்சிதமாகச்
சொல்லிவிடும். இது எனக்கு நல்ல வசதியாக இருந்தது.
இருதுபர்ணன் என்ற அரசன் தமயந்தியுடைய இரண்டாம் சுயம்வரத்தில்
கலந்துகொள்ளதேரில் விரைகிறான். தேரை நளன் ஓட்டியபடியால் அது மின்னல்
வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. தேர் ஒரு தரையைக் கடக்கும்போது அங்கே
தான்றிக்காய்கள் கூடைக்கூடையாகக் காய்த்திருப்பதைக் கண்டார்கள். அப்போது
இருதுபர்ணன் தலையைக் திருப்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு 'பத்தாயிரம்
கோடி காய்கள்' என்று சரிகணக்காகச் சொன்னானாம். அவன் ஒரு பார்வையில்
எண்ணும் 'அட்ச இருதயம்' என்ற கலையைப் படித்து இருந்தான். இந்தக்
கம்புயூட்டரும் அப்படித்தான் அட்ச இருதயக் கலையில் கைதேர்ந்ததாக
இருந்தது.
ஆனால் இதையெல்லாத்தையும் சாப்பிடக்கூடிய ஓர் அதிசயத்தை அது எனக்காக
அந்தரங்கமாக வைத்திருந்தது. அப்போது நான் அதனுடைய வஞ்சகத்தையும்,
சூழ்ச்சியையும் கண்டு கொள்ளவில்லை.
நான் அந்த நெடுங்கதையை எழுதி முடிக்கும்போது இரவு இரண்டு மணி இருக்கும்.
திருத்தங்களுக்கு மேலாக திருத்தங்கள் செய்து கதை ஓர் அபூர்வ அழகுடன்
வந்திருந்தது. இப்படியான கதைகள் ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறையே
பிறக்கும் என்று சொல்வார்கள். மனைவியைப் பார்த்தேன். அவள் அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தாள். மகன், பால் வடியும் முகத்தைக்காட்டியபடி ஏதோ
கனவில் மிதந்து கொண்டிருந்தான். இப்பொழுது அச்சடித்தால், பிரின்டர்,
'கர்க்' கர்க்' என்று ஊரையே கூட்டிவிடும். நாளை காலை அதைச் செய்யலாம்
என்று நினைத்து கணிப்பொறியை மூடிவிட்டு படுத்துக்கொண்டேன். ஆஹா! என்ன
மடத்தனமான முடிவு அது?
அடுத்தநாள் அதிகாலையில் எழும்பி கணிப்பொறிக்கும், பிரின்டருக்கும்
இணைப்பு கொடுத்தேன். கம்புயூட்டரை எழுப்பினேன். நல்ல பாம்பை உசுப்பி
விடுவதுபோல 'ஸ், ஸ்' என்று அது உயிர்த்தது. அந்தச்சத்தத்தை
கேட்டுக்கொண்டு இருப்பதே ஒரு தனி ஆனந்தம். கதை சேமித்துவைத்த பைலைக்
கூப்பிட்டேன். அது பேசாமல் கம்மென்று இருந்தது. இன்னொரு முறை விளித்தேன்.
அதற்கு கோபம் வந்துவிட்டது. 'அப்படி ஒரு கோப்பே இல்லை!' என்று ஒரே
போடாகப் போட்டது. இந்த கம்புயூட்டரில் ஒரு சனியன் என்னவென்றால் சொன்னதையே
திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டிருக்கும்.
ஒருவரும் இல்லாத நேரமாகப் பார்த்து ஒரு நண்பர் வந்து நூறு ரூபா உங்களிடம்
கடனாக வாங்குகிறார். அடுத்த நாள் உங்களைப் பார்த்ததேயில்லை என்கிறார்.
உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் எனக்கும் இருந்தது.
முப்பத்தாறு பக்கத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டு ஒன்றும்
தெரியாத அப்பாவிபோல என்னைப்பார்த்தது. எனக்கு சாட்சிக்குகூட
ஒருவருமில்லை. துருவித் துரவி தேடினேன். என்னுடைய யுக்தி ஒன்றும்
பலிக்கவில்லை. அந்த கோப்பு இருந்த சிலமன்கூட இல்லை. எனக்கு அழுகை
வந்துவிடும்போல் இருந்தது. 'தொலை' என்ற தலைப்பில் நான் கணிப்பொறியில்
எழுதிய முதல் கதை உண்மையிலேயே தொலைந்து போய்விட்டது.
ஓர் ஏழைப்புலவர், அவருடைய பரம்பரைச் சொத்து ஒரு பாக்குவெட்டி உயிருக்கு
அடுத்தபடி அவருக்கு அதுதான் எல்லாம். விறகு வெட்ட, கறி நறுக்க,
பாக்குச்சீவ என்று எல்லாத்துக்கும் அதைத்தான் நம்ம்பியிருந்தார். ஒருநாள்
அதைக் காணவில்லை. புலவருக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. தேடு
தேடு என்ற தேடினார்.
விறகு தறிக்க, கறி நறுக்க, வெண் சோற்றுப்புக்கு அடகு வைக்க,
பிறகு பிளவு கிடைத்ததென்றால் நாலாறாகப் பிளக்க,
பறகு பறகென்றே சொறியப் பதமாயிருந்த பாக்கு வெட்டி
இறகு முளைத்துப் பறந்ததுவோ? எடுத்தீராயிற் கொடுப்பீரே!
இந்த கதிதான் எனக்கும். பக்குவமாக பணியாரம் செய்து பனை நார்ப்பெட்டியில்
மூடி மாடாவில் மறைத்து வைத்ததுபோல இவ்வளவு கவனமாக இந்தக்கதையை கோப்பிலே
செருகீ வைத்தேனே! எங்கே போனது. இறக்கை முளைத்து பறந்துவிட்டதா?
பனி மூடிய அந்த அதிகாலையிலும் நான் நண்பரைத் தேடிக்கொண்டு ஓடினேன்.
ஆத்திரத்தோடு நண்பர் அவுக்கென எழுப்பி 'இரண்டில் ஒன்று பார்ப்பது' என்று
பாய்ந்து வந்தார். அவர் கொடுத்த அந்தரங்க மந்திர வித்தையெல்லாம்
செய்துபார்த்தார். அது அசையவில்லை. குழையடிப்பது ஒன்றுதான் பாக்கி.
எல்லாத்தையும் விழுங்கிவிட்டு ஒரு கெப்பரோடு இருந்தது. இறுதியில் பெண்
கம்புயூட்டர் என்றும் பார்க்காமல் நண்பர் 'குலுக்கல் முறையில்' தன்
சாமர்த்தியத்தைக்காட்டினார். அது அப்போது ஓர் அசிங்கமான பார்வையை அவர்
பக்கம் வீசியது.
நான் அந்தச்சம்பவத்திற்கு பிறகு கணிப்பொறியை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை.
அதைப்பார்த்தால் கொன்றுவிட வேண்டும் என்ற கடமை உணர்வு எனக்கு
வந்துவிடும். முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு போய்விடுவேன். அது
செய்த நம்பிக்கைத் துரோகத்தை என்னால் மன்னிகவே முடியாது. பவித்திரமான
எங்கள் குடும்ப சந்தோஷத்திலும், அன்னியோன்னியத்திலும் இப்படியாக ஒரு
கீறல் விழுந்துவிட்டதே என்று எனக்கு வேதனையாக இருந்தது.
தொன்றுதொட்டு வந்த பாரம்பரியப்படி கதையை திரும்பவும் கையினால்
எழுதுவதென்று தீர்மானித்தேன். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் கதை 'வர
மாட்டேன்' என்றது. கம்புயூட்டரைப் படைப்பதற்கு முன்பாகவே கடவுள் கைகளைப்
படைத்திருக்கிறார் என்பது என் நம்பிக்கை. இருந்தும் எனக்கு கையினால் எழுத
முடியவில்லை. கம்புயூட்டர்தான் தேவைப்பட்டது. அது இப்படிக் காலை வாரியுர்
எனக்கு புத்திவரவில்லை.
முந்திய கதை முற்றிலும் மறந்துவிட்டது. எழுத எழுத கரு மாறிக்கொண்டே
போனது. என்ன எழுதுகிறோம் என்று எனக்கே புரியவில்லை. இப்படியாக என்னுடைய
எழுத்து ஊழியம், கடவுளின் காருண்யத்தாலும், வாசகர்கள் முற்பிறவியில்
செய்த நற்பயனாலும்இ அவசரத்தில் இழுத்த 'ஸ'ப்' போல தடைப்பட்டு அந்தரத்தில்
நின்றுபோனது.
இந்தக் கஷ்டகாலத்திலும் என் மகன் அதனுடன் மிகவும் வாஞ்சையாகப் பழகினான்.
மணிக்கணக்காக விளையாடிக் கொண்டிருப்பான. நீல நிற பானையும், சிவப்பு
நிறக்குதிரையும் வரைவான். பள்ளியில் கொடுக்கும் வீட்டு வேலைகளை
கணிப்பொறியில் செய்வான். கதை சொல்லும்போது 'ம்' சொல்லுவதுபோ,
கம்புயூட்டரும் 'ங்ம், ங்ம்' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும்.
அவன் ஏதாவது தப்பாச் செய்யும்போதுதான் அப்படி எச்சரிக்கும். என் மகன்
அந்த நேரங்களில் 'கோவிக்காதே, கோவிக்காதே' என்று சொல்லி
அதைச்சமாளிப்பான்.
ஒரு நாள் நான் வழக்கம்போல தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். மகன்
கணிப்பொறியுடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தான். விளையாடுவதும், அடிக்கடி
சிரிப்பதுமாக சமவயது நண்பர்கள் இருவர் பழகுவதுபோல இருந்தது இந்தக்காட்சி.
தொலைக்காட்சி கதாநாயகியின் தொப்புள் பிரதேசத்தில் மெய்மறந்து இருந்த நான்
திரும்பி மகனுடைய கம்புயூட்டர் திரையைப் பார்த்ததும் திடுக்கிட்டேன். என்
கண்களை என்னால் நம்ப முடியவில்லை. நீத்துப் பூசணிக்காய் போல கொழுத்து
திரை முழுக்க அடைத்துக்கொண்டு கிடந்தது என்னுடைய கதை. குண்டு குண்டான
ஏழுத்து; தடித்த தலைப்பு அதேதான் என்னுடைய கதைதான்.
நான் இரண்டு தரம் வாயைத்திறந்து திறந்து மூடினேன். காற்றுத்தான் வந்தது.
'விட்டிர்ராதே! விட்டிர்ராதே! பிடி' என்று கத்தினேன். ஏதோ கன்றுக்குட்டி
ஒன்று அறுத்துக்கொண்டு ஓடுகிறது போலவும் 'தும்பைப் பிடி, பிடி' என்று
நான் கத்துகிறது போலவும் அது இருந்தது.
என்னடைய மகன் குவளை மலர்போன்றகரு நீலக்கண்களை இன்னும் அகல விரித்து
என்னைப்பார்த்தான். அவனுடைய கை 'மௌஸை' அழுத்திப்பிடித்தபடியே இருந்தது.
நான் பாய்ந்து கிட்டப்போய்விட்டேன்.
'இந்த பைல் இஞ்ச எப்பிடி வந்தது?' என்றேன்.
'எனக்கு ஒண்டும் தெரியாது. நான் என்ரை டைரக்டரியில் தேடிக்கொண்டே
வந்தேன். இது வந்திருக்கு. இது உங்கடையா? என்றான்.
எனக்கு அப்படியே அவனை எடுத்து கொஞ்சவேண்டும் போல இருந்தது. நான் இன்னொரு
தரம் பார்த்தேன். இவ்வளவு நாளும் என் கதையை தன் வயிற்றிலே வைத்திருந்து
இரைமீட்டு தந்திருந்தது இந்தக் கம்புயூட்டர்.
பெற்றோரை ஏமாற்றி களவாக ஓடிவந்த காதலியைக் கண்டதுபோல ஆசை
தீரப்பார்த்துக்கொண்டே இருந்தேன். ஆனந்தத்தில் என் கண்ணில் நீர் துளும்பி
நின்றது. 'வந்து விட்டாயா! வந்துவிட்டாயா! என்று மனத்திற்குள் சொல்லிக்
கொண்டேன்.
நான் கம்புயூட்டரைப் பார்த்தேன். அதுவும் பார்த்தது. அதன் பார்வையில்
இப்போது கொஞ்சம் நம்பு தெரிந்தது.
|