சுளுக்கெடுப்பவர்                              

         கல்கி எழுதிய ஐந்து பாகம் பொன்னியின் செல்வனில் குந்தவையும், வந்தியத்தேவனும் சந்திக்கும் இடம் மிகவும் சுவாரஸ்யமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். குந்தவை, வந்தியத்தேவனிடம் பேசும்போதெல்லாம் 'நீர் பழுவூர் ராணியின் ஒற்றன்' ' நீர் எங்கே சென்றீர்?' என்று 'நீர்,    நீர்' என்றே பேசுவாள். வந்தியதேவனோ 'தேவி, தங்களுடைய இதய சிம்மாசனம்', 'தங்கள் திருக்கரம்' என்பான்.  

                யாழ்ப்பாணத்தில் கணவன் மனைவி பேசும்போது கணவன் 'நீர், உமக்கு' என்று பேசுவான். மனைவியோ 'நீங்கள், உங்களுக்கு' என்று பேசுவாள். சிறுவர்கள் 'வாடா, போடா' என்பார்கள், சிறுமிகள் 'வாடி, போடி' என்று பேசுவார்கள். ஆனால் பதின்பருவத்துப் பெண்ணுடன் பேசும்போது 'நீர், உமக்கு' என்று ஆண் பேசுவான். அவளும் 'நீர், உமக்கு' என்றே பேசுவாள். இது அபூர்வமான பருவம்.  

                இந்தப் பருவம் எனக்கும் ஒருமுறை வந்தது.

                                என்னுடைய கொலர் சைசும், வயதும் ஒன்றாயிருந்த வருடம் எனக்கு ஞாபகமிருக்கிறது. பள்ளிப் பருவம். அதற்குப் பிறகு என் வயது கூடியும், கொலர் சைஸ் குறைந்தும் போனது. இரண்டும் பிறகு இணையவே இல்லை. அந்த வருடம்தான் எனக்கு கழுத்து சுளுக்கு வந்தது. இதற்கு வைத்தியம் எங்கள் கிராமத்தில் எல்லா வீடுகளிலும் இருந்தது. எளிய வைத்தியம்தான். நெல் அளக்கும் கொத்தை தலைக்கு கீழ் வைத்து படுப்பது. இந்த சிகிச்சை எல்லோருக்கும் வழிவழியாக பலனளித்தது என்று சொன்னார்கள். என்னுடைய சின்னக் கழுத்தை அந்த பெரிய கொத்தில் வைத்து நாலு நாள் தொடர்ந்து உருட்டினேன். கொத்து தேய்ந்ததுதான் மிச்சம், ஒரு வித பிரயோசனமும் இல்லை. அம்மாவின் கைவைத்தியம் கைகொடுக்கவில்லை. இறுதியில் சுளுக்கெடுப்பவரிடம் அடுத்த நாள் காலை என்னைக் கொண்டுபோய் காட்டுவது என்று தீர்மானித்தார்கள்.   

                அவர் இருந்தது இரண்டு மைல் தூரத்தில்நான் எழும்ப முன்னர் சன்னல் வழியாக காலை வந்துவிட்டது. ஐயா என்னை உருட்டி எழுப்பி வெளிக்கிடுத்தி கூட்டிக்கொண்டு போனார். ஒவ்வொரு அடி வைத்தபோதும் கழுத்து விண்விண்ணென்று தெறித்தது. எப்படியோ அவ்வளவு தூரத்தையும் நான் கடந்து முடித்தேன்

                சுளுக்கெடுப்பவரின் வீட்டுக்கு வந்தபோது அங்கே எனக்கு பெரிய ஆச்சரியம் ஒன்று காத்துக்கொண்டிருந்தது. காலிலே கட்டுப் போட்டபடி முறுக்கிய உடம்புடன் நடுத்தர வயது ஆண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இரண்டு கொலை ஆயுதங்கள்போல இரண்டு கைகள் அவருக்கு தொங்கின. எதிர்ப் பக்கத்திலே பள்ளி மாணவிபோல தோற்றமளித்த பெண், தென்னை மட்டையில் சீவி எடுத்த இரண்டு கம்புகளை தன் இரு கக்கங்களிலும் வைத்திருந்தாள். அந்த கம்புகளின் மற்ற நுனி அந்த மனிதரின் கக்கங்களில் இருந்தன.  

                ஒரு சட்டியிலே இருந்து சிவந்த மண்ணை எடுத்து சுளுக்கெடுப்பவர் அந்த கம்புகளின் மீது தூவி மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். அது புற்று மண் என்று ஐயா பிறகு சொன்னார். நான் பார்க்கும்போது என் கண்ணுக்கு முன்னாலேயே அந்தக் கம்புகள் நடுங்கத்தொடங்கின. அசைவு மேலும் கீழுமாக இல்லாமல் பக்கவாட்டில் இருந்தன. அந்த மனிதரும் பெண்ணும் அடித்து வைத்தது மாதிரி நின்றார்கள். கம்புகள் மாத்திரம் மந்திர உச்சாடனம் உச்சத்துக்கு போக பேய்த்தனமாக ஆடின. ஒரு கட்டத்தில் நடுக்கம் அதிகமாகி இரண்டு கம்புகளும் நெருங்கி வந்தன. ஒன்றையன்று தொட்டு மீண்டன. இறுதியில் ஒட்டிக்கொண்டன.  

                சுளுக்கெடுப்பவர் புன்னகை செய்தார். நான் ஐயாவிடம் என்னவென்று விசாரித்தேன். அந்த ஆளின் கால் எலும்பு பொருந்திவிட்டதா என்று அவர் மந்திரித்து பார்த்ததாகவும், கம்புகள் நேர்த்தியாக ஒட்டிக் கொண்டதால் எலும்புகளும் ஒட்டிக்கொண்டு விட்டதாகவும் இனி கட்டை அவிழ்க்கலாம் என்றும் சொன்னார்.  

                ஐயா வந்த காரியத்தை சுருக்கமாகக் கூறினார். 'தம்பி, உள்ளுக்கு போம்' என்றார் சுளுக்கெடுப்பவர். அவர் அன்றும், அதற்கு பிறகு வந்த நாட்களிலும், என்னுடன் பேசிய ஒரே வசனம் அதுதான். நான் உள்ளே போய் இருட்டுக்கு கண்களை பழக்கிக்கொண்டு சுற்று முற்றும் பார்த்தேன்.  

                கக்கத்தில் கம்போடு நின்ற பெண் சுழன்றுகொண்டு எங்கிருந்தோ ஓடி வந்தாள். மகளாயிருக்கலாம். கைப்பிடி இல்லாத ஒரு மரக்கதிரையைக் காட்டி 'இதிலே நீர் உட்காரும்' என்றாள். பிறகு மறைந்துவிட்டாள். நான் கதிரையை தடவிப்பிடித்து ஏறி உட்கார்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வந்தது. சுவரிலே இரண்டு நாள்காட்டி மாட்டியிருந்தது. இரண்டிலுமே தேதி கிடையாது. ஒன்று சுவாமி படம், மற்றதில் சுபாஷ் சந்திரபோஸ் இருந்தார். கூரையிலே நீளமான கத்தி ஒன்று செருகியிருந்தது. தூக்குபோடுவதற்கு யாரோ ரெடி பண்ணி கடைசியில் மனதை மாற்றியதுபோல விட்டத்தில் இருந்து ஒரு கயிறு தொங்கியது

                ஓர் எண்ணெய் நெடி அந்த இடத்தில் பரவியிருந்தது. அன்றிலிருந்து, அடுத்து வரும் பல வாரங்களுக்கு, அந்த மணம் என்னைச் சூழ்ந்தபடி இருக்கும். என்னைப் படிப்பிக்கும் வாத்தியார்கள்கூட ஒரு தொற்று நோய்க்காரனை நடத்துவதுபோல என்னைக் கண்டதும் விலகுவார்கள். என் இடது காதுக்குள் சத்தம் கேட்டு நான் திடுக்கிட்டு துள்ளினேன். என் கழுத்து வலது பக்கம் திரும்பியிருந்ததால் நான் அவள் வந்ததை கவனிக்கவில்லை. 'உமக்கு என்ன கழுத்து சுளுக்கோ?' என்றாள். நான் இருந்த இரையிலே கதிரையோடு சேர்த்து அவள் பக்கம் திரும்பினேன்.  

                'நீர் எப்பிடி கண்டுபிடித்தீர்?'

                'என்ன, அண்டங்காக்காய் போல ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறீர், அதுதான்.'

                'அப்ப அண்டங்காக்காய் எல்லாத்துக்கும் கழுத்துப் பிடிப்போ?'

                'அவை பிறக்கும்போதே அப்படித்தான். சரி, நீர் என்ன படிக்கிறீர்?'

                'எட்டாம் வகுப்பு , சயன்ஸ்' என்றேன். அவள் அதைக்கேட்டு ஒன்றும் பெரிதாக ஆச்சரியப்படவில்லை. கண்களைக்கூட விரிக்கவில்லை

                'நீர் என்ன படிக்கிறீர்?' என்றேன். என்னுடைய ஊகத்தில் அவளும் என் வகுப்புத்தான் படிக்கவேண்டும். அல்லது ஒரு வகுப்பு கூடவாக இருக்கலாம். அவள் அந்தக் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. 'சரியாய் நோகுதா' என்றாள். 'தலையை அசைக்க ஏலாது; உயிர் போகுது' என்றேன். 'உமக்கு சின்னக் கழுத்துதானே, ஒரே உருவலில் போய்விடும்' என்றாள். அவளுடைய தர்க்கம் அசைக்க முடியாததாக இருந்தது.  

                பிறகு என்ன நினைத்தாளோ, தானாகவே 'நான் படிப்பை முடிச்சிட்டன்' என்றாள்

                'எத்தனாம் வகுப்பு மட்டும் படிச்சனீர்?"

                'எங்கட பள்ளிக்கூடத்தில் இருக்கிற எல்லா வகுப்பும் முடிச்சிட்டன்; எல்லா புத்தகமும் படிச்சிட்டன்.'

                அந்த நேரம் பார்த்து சுளுக்கெடுப்பவர் ஒரு பாம்பு நுழைவதுபோல சத்தமில்லாமல் உள்ளே வந்தார். மந்திரிக்காத நிலையில் அவரைப் பார்த்தால் படு சாதாரணமாக தெரிந்தார். கம்பீரமும் கிடையாது. நெற்றியிலே பட்டை பட்டையாக திருநீறு. ஊரிலே எங்கே எலும்பு முறிந்தாலும் அதை நேராக்கும் வைத்தியரின் நெஞ்சு உள்ளுக்கு போய் வளைந்து கிடந்தது. கதிரையில் ஒருத்தன் உட்கார்ந்திருக்கிறானே என்று என்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை. சரி கணக்காக நான் பார்க்கமுடியாத இடத்தில் பின்னால் நின்றுகொண்டார். அதுவே திகிலைக் கொடுத்தது. என்ன சதி திட்டம் போடுகிறார் என்பதும் தெரியவில்லை. என் உடம்பு சுருங்கி அவர் செய்யப்போவதை ஏற்பதற்கு தயாரானது

                கனகி என்று குரல் கொடுத்தார். சரி, அவளுடைய பெயர் கனகி என்பது தெரிந்தது. அவர் என்னிடம் கேட்கப்போகும் கேள்விகளுக்கு மனதுக்குள் பதில்களை தயாரித்தேன். அவர் ஒன்றுமே கேட்கவில்லை. ஒரு குளவியை அறைக்குள் விட்டு கதவைச் சாத்தியதுபோல அறையின் இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமாக கனகி சர்க் சர்க் என்று பறந்துகொண்டிருந்தாள். அவளுடைய இடை ஒரு கைப்பிடி அளவுக்குத்தான் இருந்தது. அது ஸ்பிரிங்கினால் செய்ததுபோல ஓர் இடத்தில் நில்லாமல் ஆடியது.  

                ஒரு சின்னக் கிண்ணத்தில் பச்சை நிறத்தில் எண்ணெய் வந்தது. விரல்களை வெளியே பிடிக்காமல் ஒரு விரலை உள்ளுக்கு விட்டு தூக்கிக்கொண்டு வந்தாள். சுளுக்கெடுப்பவர் விரல்களினால் எண்ணெயை தொட்டு என் கழுத்திலே வைத்தார். பின்பு மெல்ல மெல்ல அந்த விரல்கள் ஊரத் தொடங்கின. என் உடம்பு இன்னும் சிறுத்து கதிரையுடன் அமுங்கிக்கொண்டது

                மூன்று நாட்கள் தொடர்ந்து ஐயா என்னைக் கூட்டிவந்தார். நான்காவது நாள் நான் தனியாகவே வந்தேன். வெளி முற்றத்திலே ஓர் அடுப்பில் தைலம் போன்ற ஏதோ ஒன்று கொதித்துக்கொண்டிருந்தது. இரண்டு குதிக்கால்களை ஊன்றிக்கொண்டு, ஏணி சாய்த்து வைத்ததுபோல சுவரிலே சாய்ந்துகொண்டு கனகி அடுப்பை அரைக்கண்ணால் பார்த்தபடி நின்றாள். அடர்த்தியான இமைகளின் பாரத்தால் அவள்  கண்கள் எப்பவும் பாதி மூடியபடியே இருக்கும். என்னைக் கண்டதும் வாயிலே விரலை வைத்து எனக்குச் சைகை காட்டி இருக்கச் சொன்னாள். நான் ரகஸ்யக் குரலில் 'என்ன காய்ச்சுறீர்? நோவுக்கு மருந்தா?' என்றேன்.  

                'இது உமக்கு அல்ல, எலும்பு முறிவு நோவுக்கு.'

                'உமக்கு இது எல்லாம் தெரியுமா?'

                அவள் மறுமொழி சொல்லவில்லை. குண்டானை குனிந்து தீவிரமாக துளாவினாள். நாலு நாளாக அதே உடுப்பைத்தான் அணிந்திருந்தாள். சிங்களவர்கள் அணிவதுபோல கீழுக்கு ஒரு துண்டு, மேலுக்கு ஒரு சட்டை. உரித்தெடுத்தால்தான் கழற்றமுடியும் என்பதுபோல உடம்போடு ஒட்டியது. அதுவும் பயிற்சி முடிவு பெறாத ஒரு தையல்காரி தைத்ததுபோல ஒரு பக்க அளவு கூடியும் மறுபக்கம் குறைந்தும் இருந்தது. ஆனால் அவளுடைய தலை மயிர் மாத்திரம் நாளுக்கு ஒரு விதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னுவாள், சொருகுவாள்; அள்ளிக் கட்டுவாள். இன்று சடை சடையாக அவிழ்த்துவிட்டு அது பிருட்டத்தை தாண்டி தொங்கியது. இடுப்பு மாத்திரம் ஸ்பிரிங் பூட்டியதுபோல அசைந்துகொண்டிருந்தது

                'அப்பா பூசையிலே இருக்கிறார், உதில பேசாமல் இரும்.'

                'உமக்கு திலகவதியை தெரியுமா? உம்மடை பள்ளிக்கூடத்தில் படிக்கிறவள்.' எனக்கு திலகவதியை தெரியாது. தி எழுத்தில் தொடங்கும் வேறு எந்தப் பெண்ணையும் தெரியாது. யோசித்துப் பார்த்தால் தீனா, தீயன்னா, வானா, வாவன்ன, கானா காவன்னா  என்று எந்த அட்சரத்தில் தொடங்கும் எந்தப் பெண்ணையும் தெரியாதுஆனாலும் விட்டுக் கொடுக்காமல் 'தெரியும். ஒரு வகுப்புக்கூட. வட்டமான வாய். நல்ல வடிவு' என்றேன்.

                நான் வட்டமான வாய் என்று சொன்னது கனகியின் வாயைத்தான். அவளுக்கு ஓர் அபூர்வமான வாய். அவள் வாயை மூடியிருக்கும்போதும் ஒரு மீன் வாயை திறந்ததுபோல அவள் உதடுகள் சரி வட்டமாக இருக்கும்.  

                அவளுக்கு அது பிடிக்கவில்லை. முகம் சினந்துகொண்டு வந்தது. ஒரு நிமிடம் முன் இருந்த பெண் அங்கே இல்லை. என் முகத்தைப் பார்க்க அருவருத்ததுபோல தீவிரமாகத் துளாவத் தொடங்கினாள். அவள் ஆட்டிய ஆட்டில் குண்டான் இரண்டு பக்கமும் ஆடியது.

 

                'உமக்கு இவ்வளவு சடையாய் இருக்குதே. பேன் கடிக்காதா?' என்றேன்.

                'ஒரு நாளைக்கு நீர் வந்து பாத்துவிடுமென்.'

                'நான் நல்லாய் பாப்பன்; எப்ப வர?'

                'இன்றைக்கே வாருமென்.'

                'சரி. என்ன ரைம் வர?'

                'நான் பேனைக் கேட்டு சொல்லுறன்.'                                            

                பள்ளிக்கூடத்தில் நான் நரகவேதனையை அனுபவித்தேன். என்னுடைய வெள்ளைக் கலர், பிரவுண் கலர், சாம்பல் கலர் சேர்ட்டெல்லாம் பச்சையாக மாறிக்கொண்டு வந்தது. வகுப்பில் என்னுடன் படிக்கும் பையன்கள் எல்லாம் தூரமாகப்போய் உட்கார்ந்தார்கள். பொன்னுசாமி வாத்தியார் உள்ளங் கையாலும் அடிப்பார், பிறங்கையாலும் அடிப்பார். அவருடைய கேலிக்கும் குறைவில்லை. பெருந்தலைச் சாத்தனாரும் பெரும் உதவி செய்தார். 'சேய் தாய் முகம் பார்க்க, தாய் என் முகம் பார்க்க, நான் உன் முகம் பார்த்து வந்தேன்' என்று விளக்கிவிட்டு, கொஞ்ச இடைவெளி கொடுத்து, 'சரநீ ஆர் முகம் பார்க்கிறாய்' என்று என்னைப்பர்த்துக் கேட்க, நான் விழுந்தடித்து எழும்பி நிற்க, வகுப்பு முழுவதும் சிரித்தது.  

                அம்மா தன்னுடைய கை வைத்தியத்தை நிறுத்தவில்லை. தலையணையை காயப்போட்டு படுக்கவைத்தார். கம்பளியை சூடாக்கி கழுத்திலே சுற்றிக் கட்டினார். கை வைத்தியம் எல்லாம் முடிந்த பிற்பாடு கால் வைத்தியமும் நடந்தது. பக்கத்து வீட்டு சிறுவன் ஒருவன் கால் சுற்றி பிறந்தவன். அவன் வந்து என் கழுத்தில் காலால் தடவி விட்டான். எனக்கு வந்த சுளுக்கு ராச குடும்பத்து சுளுக்கு. இது ஒன்றும் வேலை செய்யவில்லை. முதல் நாள் எப்படி இருந்ததோ அந்த தீவிரம் குறையாமல் கழுத்து வலி நெருக்கிப் பிடித்தது

                அம்மா பேச்சுவாக்கில் ஐயாவுக்கு சொன்னார். எந்த வைத்தியமும் அதுக்கு தக்க ஊதியம் கொடுக்காவிட்டால் பலிக்காது. அந்த மனுசன் காசு வாங்க மாட்டார். மரத்திலை பலாப்பழம் ஒன்று பழுத்துக் கிடங்கு. அதைப் பிடுங்கி குடுங்கோ

                நான் அப்பொழுதுதான் சைக்கிள் பழகியிருந்தேன். சுளுக்குப் பார்ப்பதற்கு போவதற்கு வெளிக்கிட்டபோது அப்பா சைக்கிளை எடுத்து நிறுத்தி  அதிலே பலாப்பழத்தையும் கட்டி, என்னை கவனமாக ஓட்டிப்போய் கொடுக்கச் சொன்னார்.  

                நான் சைக்கிளில் வந்ததை கனகி கவனிக்கவேண்டும் என்ற பெரிய ஆசை எனக்கு. வீட்டிலே ஒரு சத்தத்தையும் காணவில்லை. சைக்கிள் பெல்லை நான் அடித்ததும் கனகி துள்ளலோடு உள்ளேயிருந்து வந்தாள். வழி தவறி குதிரையிலே வந்த ஒரு ராசகுமாரனைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் வியப்பும், கனிவும் கலந்து கிடந்தது. நான் பலாப்பழத்தை இறக்கினேன். ஒரு கழுத்துப் பிடிப்பு வந்த ராசகுமாரன் எப்படி பலாப்பழத்தை தூக்கிக்கொண்டு நடந்திருப்பானோ அப்படி நடந்தேன். அவள் காட்டிய இடத்தில் பழத்தை வைத்தேன். பலாப்பழம் குத்தி என் கைகளில் முள் அடையாளம் விழுந்து கிடந்தது. தன் முகத்தை வேண்டிய விதத்தில் உயர்த்தியும், சரித்தும், நிறுத்தியும் என்னை புதுக்கப் பார்ப்பதுபோல பார்த்தாள். பின்னர் என் கை ரேகைகளை தொட்டுப் பார்த்து நோகுதா என்றாள். அந்தச் சின்ன ஸ்பரிசம் அவளுடைய உடம்பின் மிச்ச பகுதிகளில் சேகரமாயிருக்கும் ஆச்சரியங்களைப் பற்றி யோசிக்க வைத்தது. நான் இரண்டு தோள் மூட்டுகளையும் பக்கவாட்டில் ஆட்டி இல்லை என்றேன்.  

                ஏதோ ஞாபகம் வந்து அவள் ஓடிப்போய் பூசைக்கு வைத்திருந்த மோதகத்தில் இரண்டை எடுத்து வந்தாள். அதில் ஒன்றைச் சாப்பிட்டபடி மற்றதை நீட்டினாள். நான் 'ஐயோ, வேண்டாம். சாமிக்கு படைக்க முன்னர் சாப்பிடக்கூடாது. எனக்கு பாவம் வரும்' என்றேன். சாமி ஒன்றும் செய்யாது. சாப்பிடும் என்றாள். இல்லை இரவு கழுத்தை திருகும் என்றேன். உமக்குத்தான் கழுத்து மற்றப் பக்கம் திரும்பிக் கிடக்கு. சாமி திருகினால் சரியாய்ப் போகும் என்றாள். இன்னொரு முறை கேட்டிருந்தால் வாங்கியிருப்பேன். அதற்கிடையில் அவளுடைய அப்பா வரும் சத்தம் கேட்கவே அவள் எனக்கு காட்டிய மோதகத்தையும் வாய்க்குள் திணித்தபடி ஓடி மறைந்தாள்.  

                ஐயா ஒரேயொரு நாள்தான் சைக்கிள் தந்தார். அதுவும் பலாப்பழம் கட்டிப் போவதற்கான சலுகை. அதற்குப் பிறகு வீட்டில் என்னை யாரும் கவனிப்பதில்லை. என் கழுத்தைப் பற்றி அம்மாகூட கவலைப் படுவதை நிறுத்திவிட்டார். இது நிரந்திரமான ஒரு வியாதி என்று      வீட்டிலே சகலரும் முடிவு கட்டிவிட்டார்கள்.  

                நான் காலையில் எழுந்ததும் சுளுக்கு பார்க்கப் போவதும் பிறகு வந்து உடுப்பு மாற்றி பள்ளிக்கு செல்வதும் வழக்கமாகிவிட்டது. வைத்தியரும் முன்பு போல என்னை அவசரமாகப் பார்த்து அனுப்புவதில்லை. நாய்க்கடி, பாம்புக் கடி, எலும்பு முறிவு, கரப்பான் பூச்சி துப்பல் அனைத்தையும் பார்த்துவிட்டுத்தான் என்னைப் பார்ப்பார். நான் பல சமயங்களில் பள்ளிக்கு லேட்டாய் போய்ச்சேர துவங்கியிருந்தேன்

                கனகி என்னைக் கண்டாலும் காணாத மாதிரி சில வேளைகளில் நடந்துகொள்வாள். சமயங்களில் சர்க் சர்க் என்று குளவிபோல சுற்றிக் கொண்டு திரிவாள். சில நாட்களில் கண்களால் மட்டும் சிரிப்பாள். வேறு நாட்களில், யதேச்சையாக திரண்டு வந்து பாம்பு செட்டை உரிப்பதற்கு உரசுவதுபோல என்னை உரசிக்கொண்டு போவாள். என் இருதயம் ஒரு துடிப்பை தவறவிட்டு மீண்டும் பிடித்துக்கொள்ளும். அந்த தற்செயலான கணத்துக்காக நான் கழுத்து, முழங்கை, முதுகு, கணுக்கால் என்று பல அங்கங்கள் நிறைய சுளுக்கு வேதனை அனுபவிக்க தயாராயிருந்தேன்.                

                ஒரு நாள் வழக்கம்போல என் முறைக்காக காத்திருந்தேன். கனகி அன்றைக்கு பளிச்சென்று முகம் கழுவி, அஞ்சனம் பூசி, பொட்டு வைத்து, கிட்டதட்ட அழகாகவே இருந்தாள். கீழ் உதடும், மேல் உதடும் சந்திக்கும் இடம் ஒரு நேர்க்கோடு போலவும், அவள் வாய் வட்டமாகவும் இருந்தது. அவள் உடை அதேதான், ஒரு வித மாற்றமும் இல்லை. ஒரு வேளை தோய்த்து, காயவைத்து அணிந்திருக்கலாம். தோள்மூட்டு பின் எலும்புகள் தள்ளிக்கொண்டு நின்றன. அது முதுகிலும் இரண்டு சின்ன மார்புகள் முளைத்துவிட்டதுபோல இருந்தது. என்றுமில்லாத விதமாக  அன்று தன் அடர்த்தியான தலைமயிரைச் சீவிச்சீவி நேராக்கி குழல் கட்டுகளாகச் செய்திருந்தாள்.  

                என்னுடைய முறை வந்தபோது நான் கதிரையில் போய் ஏறி உட்கார்ந்தேன். சுளுக்கெடுப்பவரில் எனக்கு நம்பிக்கை எப்போவோ போய்விட்டது. அவருக்கும் என்னில் மதிப்பு இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஏனோதானோவென்று கழுத்தைப் பிடித்து உருவ ஆரம்பித்தார். வலியும் எனக்கு பழகிவிட்டது. சிலநேரம் இதமாகக்கூட இருந்தது. ஒரு முக்கால்வாசி வேலை முடிந்திருக்கும் வெளியே தடதடவென்று பெரிய சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து இரண்டு பெண்களின் அழுகை ஓலம் எழும்பியது. ஒரு கயிற்றுக் கட்டிலில் ஒருவரைக் கிடத்தி நாலு பேர் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவருக்கு பாம்பு கடித்திருந்தது. மனிதர் வாயிலே நுரை தள்ள பேச்சு மூச்சின்றிக் கிடந்தார்.  

                இது எல்லாவற்றையும் என்னால் கதிரையில் உட்கார்ந்தபடியே காணக்கூடியதாக இருந்தது. சுளுக்கெடுப்பவர் கனகியைக் கூப்பிட்டு கழுத்தைப் பார்க்கச் சொல்லிவிட்டு சட்டென்று வெளியே போனார். சனங்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆளாளுக்கு பாம்பு எப்படி வந்தது, எங்கே கடித்தது, எப்போது கடித்தது என்ற விசயத்தை ஒரே சமயத்தில் கூறினார்கள்.  

                கனகி இது ஒன்றையும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவளுடைய பத்து விரல்களும் ஒரு மென்மையான ஒழுங்குடன் என் கழுத்தில் ஊரத் தொடங்கின. அவை விரல்கள்போலவே இல்லை. இப்பொழுதுதான் முற்றிய பத்து திராட்சை பழங்கள்போல இருந்தன. என்னுடைய கழுத்துப் போய் புதுக் கழுத்து வந்ததுபோல இருந்தது. கழுத்தில் இருந்த அத்தனை நரம்புகளும் வேலை செய்யத் தொடங்கின. நான் கதிரையில் இருந்தாலும் அதில் இருக்கவில்லை. அந்த வெளியை நிறைத்திருந்தாலும் நான் நிறைக்கவில்லை. என் நெஞ்சுக்கூட்டுக்குள் இன்னொரு இருதயம் புகுந்துவிட்டதுபோல படபடப்பு இரண்டு மடங்கானது. என் கழுத்தும் அந்த வலியும் அந்த இன்பமும் மட்டுமே நிசம். மற்ற எல்லாம் அழிந்துவிட்டது.  

                திடீரென்று வெளியே பெரும் கூக்குரல் கேட்டது. இரண்டு பெண்களும் நெஞ்சிலே மடார் மடார் என்று அறைந்தார்கள். 'ஐயோ, என்னை விட்டுப் போயிட்டியே, ஐயோ போயிட்டியே!, நான் என்ன செய்வன்' என்று ஒரு பெண் ஒப்பாரி வைத்து அழுதாள்

                கதிரைக்கு பின்னால் நின்ற நிலையில் விரல்களை கழுத்தில் அழுத்தியபடி கனகி தலையை கவிழ்த்தாள். அவள் முகம் அணுகுமுன் கத்தையான அவள் குழல் கட்டுகள் என் மேல் விழுந்து முகத்தை மறைத்தன. கனகி என்னை முத்தமிட்டுக் கொண்டிருப்பதை கண்டேன். அவள் கணக்கு வைக்கவில்லை. எந்தக் காரணம் கொண்டும் கழுத்துப் பிடியை தளர்த்தவும் இல்லை.  

                நாள் போகப் போக கழுத்து சுளுக்கின் தீவிரம் குறைந்தது. நான் அங்கு போவதையும் நிறுத்திவிட்டேன். ஒரு நாளாவது அவளை கனகி என்று பெயர் சொல்லி நான் அழைத்ததில்லை. இறுதிவரை 'நீர், உம்முடைய, உமக்கு' என்றே பேசினேன். யோசித்துப் பார்த்ததில் அவளுக்கும் என் பெயர் தெரியாது. அவளும் 'நீர், உமக்கு' என்றே பேசினாள். ஒருவேளை பெயர் தெரிந்தும் கூப்பிடவில்லையோ அறியேன். 'நீர், நீர்' என்று அழைக்கும்போது கிடைக்கும் அந்நியோன்யம் பெயர் சொல்லி அழைக்கும்போது கிடைத்திருக்குமோ தெரியாது.

                அவளுடைய பெயர் என்னவாயிருக்கும் என்று யோசித்திருக்கிறேன். கனகேஸ்வரி, கனகாம்பிகை, கனகராணி, கனகவல்லி, கனகாங்கி, கனகபாக்கியம் இதில் ஒன்றாக இருக்கும். ஒரு காலத்தில் கனகி என்று பேரும் புகழும் பெற்ற ஒரு தாசி  எங்களூரில் வாழ்ந்திருக்கிறாள். அவளுடைய வழி வந்தவளாக இருக்கலாம். அத்தனை நாட்கள் பழகியும் அதை அறியவில்லையே என்ற துக்கம் கொஞ்சம் என்னிடம் இருந்தது.

                சுளுக்கு வந்ததுபோலவே திடீரென்று ஒருநாள் போனதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தேன். அம்மா நாள் முழுக்க இதே வேலையாக தலையணையை வெய்யிலிலே மாற்றி மாற்றி இரண்டு பக்கமும் காயப்போட்டு அதில் என்னை படுக்க வைத்ததால் இருக்கலாம். வேப்பமரத்தூள் ஒத்தடம் கைகண்ட மருந்து என்று சொல்கிறார்கள். அதுவாக இருக்கலாம். சுளுக்கு எடுப்பவரின் விரல்கள் ஊர்ந்து ஊர்ந்து போய் சுளுக்கு உற்பத்தியாகும் மூல நரம்பு முடிச்சை கண்டுபிடித்து நேராக்கியதால் இருக்கலாம். ஒருவேளை வைத்தியருக்கு ஊதியம் கொடுக்காவிட்டால் பலிக்காது என்று அம்மா சொன்னதால் சைக்கிள் காரியரில் கட்டி வலது பக்க வேலிகளைப் பார்த்தபடி நான் பெடலை உழக்கி உழக்கி கொண்டுவந்து இறக்கிய அட்டாளை பலாப்பழம் காரணமாக இருக்கலாம்.  

                நிச்சயமாக அந்தக் காரணம் கனகியை அவள் கணவன் வந்து கூட்டிப்போனதால் இருக்கமுடியாது.

 

முற்றும் 

 

-அ.முத்துலிங்கம்

amuttu@gmail.com

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)