மரீனா இல்யாஸ் ஷாபி
அவர்களுடன் ஒரு நேர்காணல்.......
எழுத்தாளர்
வெலிகம ரிம்ஸா
முஹம்மத்
01.
உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது
வாசகர்களுக்காக கூறுங்கள்?
நான்
கண்டி மாவட்டத்தில் உள்ள தெஹிதெனிய மடிகே என்ற ஊரில் பிறந்தேன். என்
தந்தை சிங்கள மொழி மூலம் கல்வி கற்றவர். என் சகோதரியும் ஆரம்பத்தில்
சிங்கள மொழிப் பாடசாலைக்குத்தான் சென்றார். வாசிப்புத் துறையில் எனக்கு
இருந்த ஆர்வம் காரணமாகத்தான் நான் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு காட்ட
ஆரம்பித்தேன். நான் ஆரம்பத்திலிருந்து மரீனா இல்யாஸ் என்ற பெயரில் தான்
எனது ஆக்கங்களை எழுதி களப்படுத்தி வந்தேன். இலங்கை வானொலி முஸ்லிம்
நிகழ்ச்சியில் எனது அதிகமான நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
02. உங்களது ஆரம்பக் கல்வி, பல்கலைக்கழக வாழ்வு, தொழில் அனுபவம் பற்றிக்
குறிப்பிடுங்கள்?
நான் ஆரம்பக் கல்வியை எங்கள் ஊரிலும் உயர் கல்வியை மாவனல்லை சாஹிராக்
கல்லூரியிலும் கற்றேன். பேராதனை பல்கலைக்கழத்தில் பட்டப் படிப்பை
முடித்துவிட்டு மலேஷியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் முதுமானிப்
பட்டம் முடித்தேன். இலங்கைக்கு திரும்பி வந்ததும் தென்கிழக்கு
பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகக் கடமையாற்றினேன். அதன்
பிறகு நியூஸிலாந்தில் குடியேறிவிட்டேன்.
03. கலை
இலக்கியத் துறைக்குள் எப்பொழுது, எவ்வாறான சூழலில் உள்வாங்கப்பட்டீர்கள்?
1980 ஆம் ஆண்டில் தினகரன் சிறுவர் உலகம் பகுதியில்தான் எனது முதலாவது
ஆக்கம் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து ஏனைய பத்திரிகைகளிலும் எழுத
ஆரம்பித்தேன்.
04. உங்களது முதலாவது ஆக்கம் எதில், எப்போது வெளியானது?
சிறுவர் உலகம் கட்டுரைகளை தொடர்ந்து, கவிதை, சிறுகதை, நாடகம் போன்ற
இலக்கிய வடிவங்களை 1980 களில்தான் எழுத ஆரம்பித்தேன். முதல் கவிதையும்
முதல் சிறுகதையும் தினகரன் வார மஞ்சரியில்தான் பிரசுரமானது.
05. கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளை எப்படியான சந்தர்ப்பங்களில்
எழுதுகின்றீர்கள்?
எனது ஆரம்ப காலப் படைப்புக்களில் பல பாடசாலை மட்டத்தில் நடந்த கலை
இலக்கியப் போட்டிகளுக்காக எழுதப்பட்டவை. அவை சமூகப் பிரச்சினைகளை
மையமாக வைத்து எழுதப்பட்ட போதிலும், போட்டிகளில் வெற்றி பெறுவதே என்
குறிக்கோளாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிற்காலப் படைப்புக்கள்
என் அனுபவங்களையும், என்னைப் பாதித்த சமூக நிகழ்வுகளின் உந்துதலாலும்
பிறந்தவை.
06. எழுத்துத்
துறைக்குள் நுழைந்ததைப் பற்றி தற்போது என்ன நினைக்கிறீர்கள்?
அது ஒரு விபத்து என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஓர் அழகிய விபத்து.
07. உங்களது
எழுத்து முயற்சிகளுக்கு ஊக்கம் தந்தவர்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
என் பெற்றோர்களே எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தனர். திருமணத்தின்
பின்பு என் கணவர் எனக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.
08. இதுவரை
வெளிவந்துள்ள உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
1998 இல் இரண்டு நூல்களை வெளியிட்டிருக்கிறேன். அவை ''குமுறுகின்ற
எரிமலைகள்'' என்ற சிறுகதைத் தொகுதியும், ''தென்னிலங்கை முஸ்லிம்களின்
இலக்கிய பங்களிப்பு'' பற்றிய ஓர் ஆய்வு நூலுமாகும். சகோதரர்
புன்னியாமீன் வெளியிட்ட அரும்புகள் என்ற கவிதைத் தொகுப்பில் எனது ஆரம்ப
காலக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.


09. கவிதை,
சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு ஆகிய வடிவங்களுள் எவ்வடிவத்தின் தேவை
அதிகம் உள்ளதெனக் கருதுகின்றீர்கள்?
எல்லோரும் எல்லாவற்றையும் படிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால்
சமூகத்தில் பல மட்டங்களிலும் இருப்பவர்களை சென்றடைய வேண்டுமானால் பல
இலக்கிய வடிவங்களைக் கையாள வேண்டிய தேவை இருக்கிறது.
10. இலக்கிய
முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பெண் எழுத்தாளர்கள் பற்றிய உங்கள்
கருத்தென்ன?
குடும்பப் பொறுப்புகளைச் சுமந்துகொண்டு இலக்கியப் பங்களிப்பு செய்வது
சாதாரணமான விடயம் அல்ல. அதனால்தான் திருமணத்தின் பின்பு பல பெண்கள்
எழுத்துலகிலிருந்து ஒதுங்கி விடுகிறார்கள். சவால்களை சமாளித்துக்கொண்டு
தொடர்ந்து எழுதிவரும் பெண்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
11. வானொலித் துறையில் உங்களுக்குக் களம் அமைத்துத் தந்தவர்கள் யாவர்?
வானொலித் துறையில் உங்களது பங்களிப்புக்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?
அந்த நாட்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சிப்
பிரிவில் நாடகத் தயாரிப்பாளராக இருந்த எம். அஷ்ரப்கான் அவர்கள் என்
நாடகங்களுக்கு தொடர்ந்தும் களம் தந்து என்னை ஊக்கப்படுத்தி வந்தார்.
வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழத் தொடங்கிய பின் சிறிது காலம் என்
கவனம் முழுவதும் குடும்பம், தொழில், சமூக சேவை என்ற வட்டத்துக்குள்
இருந்தது. ஆனால் என்னைத் தேடிக் கண்டு பிடித்து மீண்டும் என்னை
வானொலிக்கு அழைத்து வந்தவர் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனத்தின் வளர்பிறை முஸ்லிம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
முஹம்மது எஸ். முஹுஸீன் அவர்கள்தான். அதுமட்டுமல்லாமல் லண்டன் முஸ்லிம்
குரல் வானொலி வளர்பிறை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் என்னை
இணைத்துக்கொண்டார்.
நாடகங்கள் மட்டுமன்றி உரைச் சித்திரம், சிறுகதைகள், கவிதைகளும் எழுதி
வருகிறேன். குர்ஆன் வசனங்களை வைத்தும் கவிதைகள் எழுதியுள்ளேன். இவைதவிர,
தன்னம்பிக்கையூட்டும் பேச்சுத் தொடரையும் வழங்குகிறேன். வானொலியில் என்
மீள்பிரவேசத்துக்கு சகோதரர் முஹுஸீன் அவர்களே காரணம் என்பதை
இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.
12. இதுவரை நீங்கள் எழுதியுள்ள நாடகங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
இலங்கை வானொலியில் 25 இற்கும் மேற்பட்ட நாடகங்களுடன் ''பாறையில் பூத்த
மலர்'' என்ற ஒரு தொடர் நாடகமும் எழுதியுள்ளேன். இவைதவிர அவுஸ்திரேலியா
வானொலி வளர்பிறை நிகழ்ச்சியிலும் லண்டன் முஸ்லிம் குரல் வானொலி வளர்பிறை
நிகழ்ச்சியிலும் எனது பல நாடகங்கள் ஒலிபரப்பாகி உள்ளன.
13. நாடகங்கள் எழுதும் போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்
எவை?
நாடகத்தில் சொல்லவரும் கருத்து எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குப்
பாத்திரப் படைப்பும் மிக மிக முக்கியம்.
14. நீங்கள் பாத்திரமேற்று நடித்த நாடகங்களின் பெயர்களையும், நீங்கள்
விரும்பி ஏற்ற சில பாத்திரம் பற்றியும் குறிப்பிட முடியுமா?
பெருநாள் சட்டை, கடிவாளம் இல்லாத குதிரைகள், நெஞ்சு பொறுக்குதில்லையே,
நிலை மாற வேண்டும், அக்கரைப் பச்சை போன்ற பல நாடகங்களை எழுதி
நடித்துள்ளேன். பெருநாள் சட்டை என்ற நாடகத்தில் தாயாகவும் மகளாகவும்
இரட்டை வேடமேற்று நடித்தேன். சிறுமியின் கதாபாத்திரம் மிகத் தத்ரூபமாக
அமைந்தது என்று பல நேயர்கள் பாராட்டி இருந்தார்கள்.
15. உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஏதாவது மறக்க முடியாத அனுபவம் ஒன்றைக்
கூற முடியுமா?
ஒரு வாகன விபத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்கள்
சக்கர நாட்காலியில் இருந்தேன். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கூடவே
என் பிரார்த்தனைகளும் சேர்ந்து என்னை மீண்டும் எழுந்து நடக்க வைத்தது.
இந்தக் காலப் பகுதியில்தான் உளவியல் துறையில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அதன்பிறகே நான் ஓரு தன்னம்பிக்கையூட்டும் பேச்சளராகவும் உருவாகினேன்.
16. மனநல ஆலோசகராக அல்லது உளவியல் துறையில் நீங்கள் செய்துள்ள
பங்களிப்புக்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
வெளிநாட்டு வாழ்க்கையில் நெறிதவறி வாழ்ந்து சீரழிந்துபோய் விவாகரத்தின்
எல்லை வரை போன பல குடும்பங்களை நானும் என் கணவரும் சேர்ந்து ஒன்றிணைத்து
வைத்துள்ளோம். போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை நேர்வழிக்கு அழைத்து
வந்துள்ளோம். தன்னம்பிக்கையூட்டும் பேச்சுக்கள் மூலம் நாகரீக மோகத்தில்
நிலை தடுமாறிப்போன இளைஞர், யுவதிகள் திருந்தி வாழ்வதற்கு உதவி
செய்துள்ளோம்.
17. மொழிபெயர்ப்புத் துறையில் உங்களுக்குள்ள ஈடுபாடுகள் பற்றி என்ன
சொல்வீர்கள்?
மொழிபெயர்ப்புத் துறையில் ஆர்வம் இருந்தபோதும் தொடர்ச்சியாக எந்தப்
பங்களிப்பும் செய்யக் கிடைக்கவில்லை. நேரம் கிடைக்கும்போது நல்ல
ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
18. உங்களுடைய வாழ்கையனுபவங்கள் பல வித்தியாசமான கட்டங்களைக் கடந்து
வந்தவை. அவை பற்றிக் கூறுங்கள்?
இளமைப் பருவம் மிக இனிமையாகக் கழிந்தது. பல்கலைக்கழகம் சென்றபோது
ஷஷராக்கிங்|| தொல்லைகளை பச்சையாக அம்பலப்படுத்தி நாடகம் எழுதியதால்
நிறையப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தேன். அதை ஒரு சவாலாக
எடுத்துக்கொண்டு எழுதுவதில் தீவிரம் காட்டினேன். உயர் கல்விக்காக
மலேஷியா சென்ற பின்னர் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
புலம்பெயர்ந்து வாழத் தொடங்கிய பின்புதான் என் வாழ்க்கையில் புதிய
பக்கங்களை புரட்டிப் பார்க்கத் தொடங்கினேன். என் சமூக சேவைப் பணிகள்
அதன்பிறகே ஆரம்பித்தன. தொழில் ரீதியிலும் உச்சநிலைக்கு வளர்ந்தேன். ஒரே
ஒரு துறையில் கவனம் செலுத்திய நிலை மாறி பல துறைகளில் கால் ஊன்றினேன்.
கணவரின் உதவியுடன் தஃவா பணியிலும் ஈடுபாடு காட்டத் தொடங்கினேன்.
அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
19. உங்கள் படைப்புக்களால் அல்லது நீங்கள் செய்த சேவைகளால் சமூகத்தில்
ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?
என் படைப்புகளால் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்று
எனக்குத் தெரியாது. ஆனால் சமூக சேவையின் மூலம் தனி மனிதர்கள் வாழ்வில்
நல்ல மாற்றங்களை உருவாக்கியிருக்கிறேன். வாழ்க்கையில் விரக்தியுற்று
தற்கொலைவரை சென்ற பலரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி
இருக்கிறேன். திசைதெரியாமல் பயணிக்கும் படகுகளைப்போல் வாழ்க்கைக் கடலில்
தத்தளித்து கொண்டிருந்தோர்களுக்கு கரைசேர வழிகாட்டி இருக்கிறேன்.
இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன்.
20. உங்களது படைப்புகளுக்கு கிடைத்த வரவேற்புகள் பற்றிக் கூறுங்கள்?
தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர்களுக்கு பட்டமும் பாராட்டும் வழங்கும்
ஒரு அணுகுமுறை இலங்கையில் இருப்பதை நான் அறிவேன். அப்படிப்பட்ட
அணுகுமுறை என் கொள்கைக்குப் புறம்பானது. ஆனால் தனிப்பட்ட முறையில்
வாசகர்களிடமிருந்தும் நேயர்களிடமிருந்தும் கிடைக்கும் பாராட்டுக்களையும்
விமர்சனங்களையும் பெரிதும் மதிக்கிறேன்.
21. மூத்த எழுத்தாளர்களுக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும் பொதுவாக என்ன
கூற விரும்புகின்றீர்கள்?
நல்ல படைப்புக்களைப் பாராட்டி தட்டிக்கொடுக்கும் பழக்கத்தை
உருவாக்கிக்கொள்ளுங்கள். அதுவே ஆரோக்கியமான இலக்கிய உலகத்தை உருவாக்க
உதவும்.

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|