வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா (லதா கந்தையா)
அவர்களுடனான நேர்காணல்
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
.jpg)
கேள்வி:-
உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப்
பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்? உங்கள் பாடசாலை
வாழ்க்கை பற்றியும் குறிப்பிடுங்கள்?
பதில்:-
எனது தந்தை கந்தையா. தாயார் நாகம்மா. அவர்களின் ஏக
புத்திரியாக
1979.04.24
இல் பிறந்தேன். மகிழ்ச்சியான விவசாயக் குடும்பம் என்னுடையது. எனது
ஆரம்பக் கல்வி கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரியில்
ஆரம்பமானது. இயற்கையின் வசந்தங்களும் வாய்க்கால் வரப்புகளையும்
கொண்ட கரடிப்போக்கு எனது சொந்த ஊர். எங்கள் மகிழ்ச்சி, இலங்கையில்
பிறந்த காரணத்தால் எனக்கு நீடித்துக் கிடைக்கவில்லை. இனப்போர் எனது
பெற்றோர்களை 1986
இல் காவு கொண்டது. உற்றார் உறவினரற்று நான் அநாதை விடுதியில்
வளர்ந்தேன்.
உயர்
கல்வியை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கற்றேன். சட்டமும்
பயின்றேன். கலைமானி பட்டமும் பெற்றேன். வாழ்க்கைத் துணையும் நன்றாக
அமைந்தது. மூன்று பிள்ளைகளுக்கு தாயானேன். இறுதி
2009
யுத்தத்தில் எனது இரண்டரை வயது மகனையும் இழந்தேன். கடைசியில் கணவர்
வேறு திருமணம் செய்து கொண்டார். இரண்டு பிள்ளைகளோடும் பெருந்துயரை
மறைத்து வாழக் கற்றுக்கொண்டேன். அதுபோலவே வாழ்கின்றேன்.
கேள்வி :-
உங்கள் தொழில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வீர்களா?
பதில்:-
ஆசிரியராக நான் வளர்ந்த அநாதை விடுதியிலேயே
பணியாற்றினேன். ஊடகத்திலும் எழுத்துத் துறையிலும் கால் பதித்தேன்.
''விடுதலைக் கனல்'', என்ற கவிதை நூலை
15
வது வயதிலும் ''சுவாசம் மட்டுமே சுடுகலனாய்...'' என்ற கவிதை நூலை
போர் முடிந்த பின்பு
2018
இலும் வெளியிட்டேன். பத்திரிகைகளுக்கு எழுதிய சிறுகதைகள், போர்
அனுபவங்கள், குறுநாவல், கவிதைகள் நூலுருப்பெறக் காத்திருக்கின்றன.
பெண் தலைமைக் குடும்ப பெண்ணான நான் பிள்ளைகளையும் பொறுப்பாக
வளர்த்து நூல்களையும் வெளியிடுவதானது சாதாரணமான விடயமல்ல என்பதை
தாங்களும் உணர முடியும் என நினைக்கிறேன்.
கேள்வி:-
எழுத்துத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்? இதற்குக் காரண
கர்த்தா யார்?
பதில்:-
எனது வகுப்பாசியரான சௌபாக்கியலீலா ஆசிரியரே என்னுள்
மறைந்திருந்த திறனைத் தட்டி ஊக்கப்படுத்திய முதல் நல்லுள்ளம்.
அவரோடு நான் வளர்ந்த அநாதை விடுதியில் வளர்த்த சிலரும்இ அங்கு
வளர்ந்த சகோதரிகள் பலரும் எனக்கு ஆதரவாக இருந்து நல்ல ரசிகர்களாக
இருந்தார்கள்.
'கேள்வி:-
'வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா'' என்பது உங்கள் புனைப்
பெயர் என்று நினைக்கின்றேன். அந்தப் பெயரைப் புனைப் பெயராகத்
தெரிவு செய்தமைக்கு விசேட காரணம் என்ன?
பதில்:-
அது நான் வளர்ந்த அநாதை விடுதியில், அதைப் பராமரித்த
தலைவர் பிரபாகரன் அவர்கள் எனக்கு வைத்த பெயர் அது. அவர் மேல் உள்ள
பிரியத்தால் அந்தப் பெயரை கைவிடாது தொடர்ந்தும் வைத்திருக்கிறேன்.
கேள்வி:-
உங்கள் குடும்பத்தினருக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு
உண்டா?
பதில்:-
எல்லோருமே நன்றாக படித்தவர்கள். அம்மா
28
வயதிலும் அப்பா 30 வயதிலுமாக இறக்கும் போது எனக்கு
07
வயது. ஆனால் எனது பெற்றோர் மூன்று மொழிப் புலமை உள்ளவர்கள் என்பது
எனக்குத் தெரியும்.
கேள்வி:-
எத்தனை ஆண்டுகளாக கவிதைகளை எழுதி வருகின்றீர்கள்?
நீங்கள் எழுதிய முதலாவது நூலை வெளியிடும் போது உங்களுக்கு ஏற்பட்ட
மன உணர்வு எப்படி இருந்தது?
பதில்:-
12
வயதில் இருந்து இன்றுவரை கவிதைகளை எழுதி வருகின்றேன். முதலாவது
புத்தகத்தை வெளியிடும் போது சொல்லும்படி பரவசம் ஏதும்
இருக்கவில்லை. பல வஞ்சனைகளையும் பொறாமைகளையும் கடந்து தான் அதை
வெளியிட வேண்டியிருந்தது. அதன் பிறகு நான் சொல்லெனாத்
துன்பங்களையும் அனுபவித்தேன். அதுபற்றி விரிவாக கூற விரும்பவில்லை.
கேள்வி :-
இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றிக்
குறிப்பிடுங்கள்?
பதில்:-
01. விடுதலைக்கனல் (1995)
02. சுவாசம் மட்டுமே சுடுகலனாய்... (2018)
ஆகிய
இரண்டு கவிதை நூல்களை மட்டுமே இதுவரை வெளியிட்டுள்ளேன்.
கேள்வி:-
நீங்கள் முதலாவதாக வெளியிட்ட ''விடுதலைக் கனல்'' என்ற
கவிதை நூலின் பேசு பொருள் பற்றி யாது குறிப்பிடுவீர்கள்? ஏன்
இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
பதில்:-
அது விடுதலைக்கான பாடல்களைக் கொண்ட கவிதைப் புத்தகம்.
அதனால் அவ்வாறான ஒரு பெயரைத் தெரிவு செய்தேன்.
'கேள்வி:-
'சுவாசம் மட்டுமே சுடுகலனாய்'' என்ற நூலின் ஊடாக
வாசகர்களுக்கு விசேடமாகக் குறிப்பிட விரும்புவது என்ன?
பதில்:-
என் மன உணர்வுகளின் தொகுப்புத்தான் சுவாசம் மட்டுமே
சுடுகலனாய்... என்ற கவிதைப் புத்தகம். அரசியல், காதல், விரக்தி,
ஏளனம் போன்ற பல்வேறுபட்ட உணர்வுகளை உள்ளடக்கிய கவிதைகளைக் கொண்டது.
கேள்வி:-
உங்களது நூல்களை வெளியிட ஊக்குவித்தவர்கள் யார்?
பதில்:-
நண்பர்கள், நலன் விரும்பிகள், முகநூல் வாசகர்கள், என்
பிள்ளைகள் எனப் பலருண்டு. நானாக முயன்றால் தவிர வேறேதும்
அதிசயங்கள் நடக்கப் போவதில்லை.
கேள்வி:-
நீங்கள் எழுதிய கவிதைகளில், நீங்கள் அதிகம் நேசிக்கும்
கவிதை எது?
பதில்:-
பல உண்டு. நேசிப்பதால் தானே என்னால் எழுத முடிகிறது.
குறிப்பாக ஒன்றைச் சொன்னால், அண்மையில் சிம்மாசனம் என்ற தலைப்பில்
எழுதிய பின்வரும் கவிதை மிகப் பிடிக்கும்.
நான்
கேட்காமலே
அந்த
சிம்மாசனத்தை
அவர்கள் எனக்குத் தந்தார்கள்..
அது
இருளாக இருந்தது..
தண்ணீரால் நிறைந்திருந்தது..
தகதகப்பாக இருந்தது..
அந்த
சிம்மாசனத்தை அவர்கள்
தங்களின் அன்பின் பரிசாக
எனக்குத் தந்தார்கள்..
சிம்மாசனத்தை தந்த அவர்களே
அதற்கு காவலர்களாயும்
இருந்தார்கள்..
வேடிக்கை என்ன என்றால்
அதைத்
தந்தவர்களே, நான்
அந்த
சிம்மாசனத்தை விட்டு
விக்கினம் இன்றி
இறங்கி விட வேண்டும்
என்று
தான் அடிக்கடி
வேண்டுதலும் செய்தார்கள்..
அந்தச் சிம்மாசனம் எனக்கு
தகதகப்பாக இருந்தது..
சோலைகள் அற்ற தீவு அது..
ஆனால்
குளிர்ச்சி இருந்தது..
நீந்தினேன்..
ஒளியற்ற கருங்குகை அது
அதனால் வெளிச்சத்தை தேடி
சில
சமயம் தவமிருந்தேன்..
வெறிகொண்ட பறவையின்
சிறகுதைப்பு போல சடசடத்தேன்..
ஒருநாள்,
அந்த
கருங்கடல் தீவின்
சிம்மாசனத்தை எட்டி உதைத்து
வழிகண்டு வெளியேறினேன்..
வெளிச்சத்தை முதன் முதலாக
கண்டு
திகைத்தேன்..
மலைத்தேன்..
வெளிச்சத்திலும் அழுதேன்..
மறுபடியும் அந்த சிம்மாசனம்
எனக்கு கிடைக்கப் போவதில்லை..
சிம்மாசனங்கள் நிரந்தரமற்றவை..
தேடலும் வெளிச்சமுமே
நிரந்தரம் என்பதை
கற்றுக் கொண்டேன்..
புதிதாய்ப் பிறந்தேன்..
பிறந்தபோது தான்
வெளிச்சத்தில்
இன்னும் விதம்விதமான
சிம்மாசனங்கள்
வழி
முழுதும் காத்திருந்தன!
கேள்வி:-
கவிதைத் துறையில் ஈடுபாடு காட்டி வரும் ஈழத்துப் பெண்
கவிஞர்கள் பற்றிய உங்களது பார்வை எப்படி இருக்கிறது?
பதில்:-
இலக்கிய கர்த்தாவின் வாழ்விட அமைவும் மனநிலையுமே அந்த
அந்தப் படைப்பாளர்களது கருப்பொருளாகிறது. போர்க்காலப் பதிவுகள்
தற்காலத்தில் அடிபட்டுப் போக வேறு வகையான கருப்பொருட்கள்
பிறப்பெடுத்துள்ளன. அதற்கேற்ப ஈழத்துப் பெண்களும் தமது
படைப்புக்களை படைத்து வருகிறார்கள். பெண்கள் படைப்புத் துறைக்கு
வருதல் என்பது ஒப்பீட்டளவில் குறைவு. அதை உடைத்தெறிந்து வந்தோர்
தம் படைப்பின் திறத்தால் பேசப்படுவோராக நிலைத்திருக்கிறார்கள். அதி
புத்திசாலிப் படைப்பாளர்கள் பலரை வறுமை கவ்விக் கொண்டுள்ளது
துரதிர்ஷ்டமே.
கேள்வி:-
புதுக் கவிதைக்கும், மரபுக் கவிதைக்கும் என்ன
வேறுபாட்டைக் காண்கின்றீர்கள்?
பதில்:-
மரபுக் கவிதைகள் இலக்கண வரம்புடையது. பொருள் கொள்ளல்
கடினம். புதுக் கவிதை பாமரருக்கும் நன்கு விளங்கக்கூடியது.
இலக்கியம் பாமரர் வரை சென்றாலே அது வெற்றியுடையது. அந்தக்
காலத்தைப் போல மரத்தடியிலும் திண்ணைகளிலும் கூடியிருந்து மரபுக்
கவிதைகளைப் பிரித்துப் போதிக்க தற்காலத்தில் யாருக்கும் நேரமும்
இல்லை. அவற்றை சுவைபட கேட்கவும் இளையோருக்கு விருப்பில்லை. சுவை
மாறுபட்டு விட்டது.
கேள்வி :-
கவிதைகளினூடாக சமூகத்துக்குள் ஏற்படுத்தக்கூடிய பல
மாற்றங்களில் நீங்கள் எதை இலக்காகக் கொள்கிறீர்கள்?
பதில்:-
புரிந்துணர்வையும் விடுதலையுணர்வையும் மனித
சுதந்திரத்தையும்தான். கவிதைகள் எப்போதுமே பல்வேறு உத்திகளை
தன்வசம் வைத்திருக்கும் அழகிய களஞ்சியம். அணிச் சிறப்புகளும் ஓசை
நயமும் கொண்ட மனதைப் பிரதிபலிக்கும் வர்ணம். அந்த வர்ணத்தை
காலத்துக்கு ஏற்ற வகையில் சமூகத்துக்குள் தீட்டக்கூடிய கூரிய
ஞானத்தைக் கொண்டவரே கவிஞராகவும் இருக்க முடியும். அந்த காலமறிந்த
உத்தியை எனது மனமும் எனது கவிதைகளிலே ஏந்திச் செல்கிறது. அது
வாசிப்போரின் மனதில் வாசிப்பாளரின் மனநிலையைப் பொறுத்து மாற்றங்களை
ஏற்படுத்தும்.
கேள்வி:-
வானொலியிலும் உங்களது பங்களிப்புக்களைச்
செய்துள்ளீர்களா?
பதில்:-
ஆம். இலங்கை வானொலியிலும் எனது பங்களிப்புக்களைச்
செய்துள்ளேன். புலிகளின் குரல் வானொலி, தமிழீழ வானொலி,
அவுஸ்திரேலியா தமிழ் வானொலி, நோர்வே வானொலி, கனேடிய வானொலி என எனது
ஆக்கங்கள், பேட்டிகள் வெளிவந்துள்ளன.
கேள்வி:-
உங்கள் படைப்புக்களுக்கு ஊடகங்கள் எந்த வகைகளில்
உதவுகின்றன?
பதில்:-
ஊடகங்கள் பெண்களின்; முன்னேற்றத்தைத் தட்டி
உற்சாகப்படுத்துவது ஒப்பீட்டளவில் குறைவு என்று தான் சொல்ல
வேண்டும். அரிதிலும் அரிதான பெண்களே தம்மளவில் ஒளிர்கிறார்கள்.
வெளிக் கொண்டு வரப்படுகிறார்கள். வீட்டு நிர்வாகம், பிள்ளைகளைக்
கவனித்தல், வேலைப் பொறுப்பு என பல்வேறு அழுத்தங்களுக்கு முகம்
கொடுத்து தம் திறமைகளை வெளிக்கொணரும் பெண் படைப்பாளர்களை ஊடகங்கள்
வெளிக்கொணருதலே சமூக மறுமலர்ச்சி என்று சொல்ல முடியும். சமுகத்தின்
அத்திவாரமாக பெண் உள்ளாள் என்பதை யாவரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
அவ்வாறான பெண்ணை ஊடகங்கள் வெட்ட வெளிச்சமாக கொண்டுவர வேண்டும்.
அந்தவகையில் பல ஊடகங்கள் என்னை உற்சாகப்படுத்தி உதவியுள்ளன.

கேள்வி:-
'நெருஞ்சிமுள்'' முழு நீளத் திரைப்படம் பற்றியும், அதில்
நடித்த அனுபவம் பற்றியும் குறிப்பிட முடியுமா?
பதில்:-
'நெருஞ்சி முள்'' முழு நீளத் திரைப்படம். காணாமல் போன
கணவனைத் தேடும் பெண்ணுக்கு ஏற்படும் நெருக்கடிகள், சமூக
அழுத்தங்கள், அரசியல்வாதிகளின் சூழ்ச்சி, இனமதமற்ற மனிதாபிமானம்
போன்றவற்றை கூறும் படம். இந்த முழு நீளத் திரைப்படத்தில் நானே
கதாநாயகி. இலங்கையின் 15 திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியிடப்பட்ட
இலங்கைப் படைப்பும் இதுவே. தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்களக்
கலைஞர்களாலும் பாராட்டுப் பெற்ற படம் இது. இன வன்முறையைத் தூண்டி
போரை மட்டுமே விரும்புவோருக்கு இந்தப் படம் விருப்பத்துக்கு
உரியதாக இருக்காது என நினைக்கிறேன். இதில் விசேடமாக எனது இரண்டு
பிள்ளைகளும் குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ளனர்.
கேள்வி:-
இலக்கிய உலகில் நீங்கள் கற்றுக்கொண்டவற்றில் இதுவரை
உங்கள் நெஞ்சத்தைவிட்டு மறக்காத நிகழ்வொன்றைக் குறிப்பிடுங்கள்?
பதில்:-
நான் தழைத்த போதே பிடுங்கி எறியப்பட்டவள். எறிந்த
இடமெல்லாம் தழைக்கக் கற்றுக்கொண்டேன். என்னை எரிக்க நினைத்தவர்கள்,
என் முன்னேற்றத்தை தடுத்தவர்கள் தற்போது முகவரியற்று
இருக்கிறார்கள். கடவுள் தன் கிருபையோடு என்னை கரம் பிடித்து
வீழ்ந்து விடாது வழிநடத்துகிறார்.
2019
இல் இந்தியாவில் பூவரசி அறக்கட்டளை என்னை அழைத்து ஷஷபாலுமகேந்திரா
படைப்பூக்க விருது' தந்து கௌரவித்தது. நாடு கடந்து கௌரவம் பெற்ற
அந்தப் பொழுது பேரின்பம் மிக்கது. விருதுகளுக்கு அப்பால் எனக்கு
நல்ல ரசிகர்கள் இருப்பது பல மடங்கு விருதுகளுக்கு சமனானது.
கேள்வி:-
உங்களுடைய எழுத்தாள நண்பர்களாக யார், யாரைக்
குறிப்பிடுவீர்கள்? உள்ளுர், சர்வதேச எழுத்தாளர்களுடனான உங்களது
தொடர்புகள், உறவுகள் எப்படியுள்ளது?
பதில்:-
பலருள்ளனர். தனிப்பட பெயர் சுட்டி ஒருவரை ஒருவர் தவறவிட
வேண்டாமென நினைக்கிறேன். புலத்திலும் புலம்பெயர் சமூகத்திலும்
என்னோடு நெருக்கமான படைப்பாளர்கள் பலருள்ளார்கள். எல்லோருமே
வஞ்சகம் சூதற்ற நல்ல மனமுடையவர்களாக நீடித்து நட்பாக இருக்க
வேண்டுமென்பதே எனது வேண்டுதலாகும்.
கேள்வி:-
கவிதைத் துறை, நடிப்புத் துறை தவிர வேறு எந்தத் துறையில்
ஈடுபாடு காட்டுகிறீர்கள்?
பதில்:-
ஊடகம். வரைதல். ஆசிரியத்துவம். ஆவணக் காணொளிகள்
தயாரித்தல். அதாவது ஊடகத் துறையில் புகைப்பட ஆவணப்படுத்தல்,
வரைதல். காணொளி மூலமான ஆவணப்படுத்தல்களையும் செய்கிறேன். வெளிநாடு
செல்லும் பெண்களுக்கு அடிப்படை ஆங்கிலத்தை படிப்பிக்கிறேன்.
ஓய்வுப் பொழுதுகளில் சஞ்சிகைகளுக்கும் பத்திரிகைகளுக்கும்
எழுதுகிறேன்.
கேள்வி:-
யுத்தத்துக்கு முற்பட்ட இலக்கிய முயற்சிகளுக்கும்,
யுத்தத்துக்கு பிற்பட்ட இலக்கிய முயற்சிகளுக்கும் இடைப்பட்ட
வேறுபாடுகளாக எதனைக் காணலாம்?
பதில்:-
யுத்தத்துக்கு முன்னராக இருந்தாலும் சரி, அதன் பின்னராக
இருந்தாலும் சரி ஒன்றோடு ஒன்று தொடர்ச்சியாக இருப்பது வழமை. ஆனால்
யுத்த இலக்கியங்கள் பல ஒருபக்க நியாயத்தோடும் நிறுவலோடும்
மறைப்புகளோடும் பதியப்படுவது துயரமானது. அவை காலப்போக்கில் ஒரு
பக்கமாகவே கருதப்படும்.
கேள்வி:-
எழுத்துலகில் நீங்கள் எதிர் நோக்கும் சவால்கள் என்ன?
பதில்:-
உண்மையை உள்ளபடி யதார்த்தமாக எழுதுவதனால் பலரது
அச்சுறுத்தலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆளாகியுள்ளேன்.
அண்மையில் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டேன். இவை மனித உரிமை
ஆணைக்குழு மற்றும் பொலிசிடம் அறிவிக்கப்பட்டுள்ள போதும்
தொடர்கிறது. அச்சுறுத்தல் காரணமாக எனது எழுத்துத் துறை தன்னளவில்
சுதந்திரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரிதிலும்
அரிதாக உண்மையோடு எழுத்துலகை நேசிக்கும் பெண்களுக்கு இது மாபெரும்
அச்சுறுத்தலே.
பெண்ணுக்கு உடல் ரீதியாக பாதுகாப்போடு போரட வேண்டிய தேவை
மட்டுமன்றி அவள் தன் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தவும்
போராடிக்கொண்டு தான் இருக்கிறாள்.
கேள்வி:-
இதுவரை உங்களுக்குக் கிடைத்த வரவேற்புக்கள்,
பாராட்டுக்கள், பரிசுகள் பற்றியும் குறிப்பிடுங்கள்?
பதில்:-
எனது முதல் கவிதைக்கு உடனடியாகவே பாடசாலை ஒன்று கூடலில்
பலத்த பாராட்டும் கரகோசமும் கிடைத்தது. பாடசாலை மட்டம், கோட்ட
மட்டம், மாவட்ட மட்டமென பாடசாலைக் காலத்தில் பல முதலிடங்களை
எனதாக்கியுள்ளேன். போட்டிக்கு வருவோர் தலைப்புக்கு ஏற்றது போல
பெரியவர்களால் எழுதி மனனம் செய்து வந்தெழுதுவதை அவதானித்துள்ளேன்.
நான் அங்கு தான் என் மனதில் வந்ததை எழுதி முதலிடங்களைப்
பெற்றுள்ளேன். தலைவர் வே. பிரபாகரன் அவர்களிடம் பல பரிசுகளைப்
பெற்றுள்ளேன். எனது படைப்புக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு.
பாலுமகேந்திரா படைப்பூக்க விருது இந்தியாவில் பெற்றேன். விருதுகள்
இன்னும் என்னை நோக்கி குவியலாம். காலம் அதை பதிவு செய்யும்.
கேள்வி:-
இப்போது பல அமைப்புக்களால் வழங்கப்படும் விருதுகள்
தகுதியானவர்களுக்குத்தான் வழங்கப்படுகின்றனவா?
பதில்:-
இல்லை. பணம் கொடுத்து, முகமன் பார்த்து பகட்டுக்காக
தகுதியற்ற பலருக்கும் விருது கொடுக்கும் இழிநிலைச் சமூகம் ஒன்று
இன்று பரவலாகத் தோன்றியுள்ளது. அது மிகவும் வருந்தத்தக்கதே. சில
இடங்களில் மட்டும் விருது என்பது தகுதி கேட்டு தானே
கொடுக்கப்படுகிறது. உரிய தகுதி உடையவர்களுக்கு அது கிடைக்கிறது.
பெரும்பாலும் தகுதியற்ற முறையில் செயற்பாடுகள் நடைபெறுவதாகவே
பலரும் பேசிக்கொள்கிறார்கள். அது மிகவும் வருந்தத்தக்கதே.
கேள்வி:-
இறுதியாக வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்...?
பதில்:-
ஆயுதப் போரோடு பிறந்து, அதிலிருந்து மீண்டு, வாழ்க்கைப்
போரோடும் போராடித் தழைத்து தலைநிமிர்ந்த என்னை நீங்கள் பேட்டி காண
அழைத்தமைக்கு முதல்கண் நன்றிகள். என்னைப்போல நிறையவே திறமை மிக்க
படைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் இனங்கண்டு ஊக்குவிக்க
வேண்டும். அதற்கு உங்களுக்கு வேண்டிய ஆரோக்கியத்தையும் வரத்தையும்
கடவுள் நிறைய நிறையத் தரவேண்டுமென பிரார்த்திக்கிறேன். நன்றி.
.jpg)

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|