அகமும்
புறமும் (இலக்கிய கட்டுரைகள்)

.. ஞானசம்பந்தன்
 

முன்னுரை: 

இந்நூலின் முதற்குறிப்பு அகம் ஆகும். 

பழந்தமிழனுடைய ஒப்பற்ற குடும்ப வாழ்க்கை பற்றிக் கூறுகிறது இப்பகுதி. ஒரு சமுதாயத்தார் சிறந்த நாகரிகமும் பண்பாடும் பெற்றுச் சிறந்து வாழ்ந்தனர் எனில், அதன் அடிப்படை அவர்களுடைய குடும்ப வாழ்விலேதான் காணப்பெறும். வீட்டில் நல்வாழ்வைப் பெறாத சமுதாயம், வெளியில் சிறந்த வாழ்வைப் பெறுதல் என்பது வேரில்லாத மரம் தழைத்தது என்பது போலத்தான். அகவாழ்வு நன்கு சிறவாமையாலேதான் ரோம, கிரேக்க, எகிப்திய நாகரிகங்கள் இன்று சரித்திரத்தில் மட்டும் இடம் பெறும் நிலையை அடைந்துவிட்டன. எனவே, பழந்தமிழர் நாகரிகத்தின் ஆணி வேராய் விளங்கிய அகவாழ்வை மூன்று பிரிவாகக் காண்கின்றது இப்பகுதி.

'அகம்' என்பதன் அடிப்படையும், மனத் தத்துவமும், குறிக்கோளும் பயனும் ஆயப்படுகின்றன. உலகுக்கு ஒரு பொது மறையாகிய குறள் கருத்துப்படி அமையும் இல்வாழ்வு எத்தகையதாய் அமைதல் வேண்டும் என்பதைக் காண்பதே அடுத்த பிரிவு. இந்த இரண்டு இலக்கணங்களையும் கொண்டு சில அகப்பாடல்கள் ஆயப்படுகின்றன. மூன்றாம் பிரிவாகிய 'இலக்கியத்தில் வாழ்வு' என்னும் பகுதியில்.


அடுத்து
அமைவது புறம் ஆகும்.

 

ஒரு நாட்டு மக்களின் சமுதாய வரலாற்றை அறியப் பல கருவிகள் உண்டு. ஒரு காலத்தில் ஒரு சமுதாயத்தில் தோன்றிய கவிதைகளைக் கொண்டு அக்காலத்து வரலாற்றை அறிய முயல்வது ஒரு முறை. 'இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்கள் என்ன நினைத்தார்கள்? எவற்றைத் தம் குறிக்கோள் எனக் கருதினார்கள்?' என்பவற்றை அறிதலும் ஒரு வகைச் சமுதாய வரலாறேயாம்.

அன்றைய சூழ்நிலையில் தமிழ் மன்னன் ஏறத்தாழத் தெய்வமாகவே கருதப் பெற்றான். எனவே, அவனைப் பற்றிச் சற்று விரிவாகக் காண்பதன் மூலம் தமிழருடைய எண்ண ஓட்டங்களை அறிய முடிகிறது. 'தமிழர் கண்ட அரசன்' என்ற பகுதி சற்று விரிவாகப் பேசப்படுகிறது. 'அன்றைய தமிழன் எவற்றை உண்டான்? எவ்வாறு உடுத்தான்?' என்பவற்றை அறிவதும் பயனுடைய செயலாம். எனினும், 'எவற்றை அவன் உயிரினும் மேம்பட்ட குறிக்கோள்களாகக் கொண்டான்?' என்று அறிவது மிகுதியும் பயனுடைய செயலாகும். எனவே, இப்பகுதி இறுதி அதிகாரமாகப் பேசப்படுகிறது. இத்தகைய உயர்ந்த புறவாழ்வை மேற்கொண்டிருந்தனர் தமிழர் என்று அறிகிறோம்.

இந்நூலை தொகுத்து, நூல்வடிவம் தந்து வெளியிட உதவிய சிவசக்தி கணிப்பொறியாளருக்கு நல்வாழ்த்துகள் உரியனவாகும்.

இந்நூலை வெளியிட்டுதவிய கங்கை புத்தக நுலையத்தாருக்கு என் நன்றி உரியதாகும்.

 

.. ஞானசம்பந்தன்.

சென்னை 10-11-98.

-------------------------

 

பொருளடக்கம்: 

அகம்

1. அகத்தின் அடிப்படை

2. வள்ளுவர் கண்ட அகவாழ்வு

3. இலக்கியத்தில் வாழ்வு

புறம்

4. இலக்கியத்தில் வரலாறு

5. நாட்டு வளமும் மக்கள் வளமும்

6. தமிழர் கண்ட அரசன்

7. தமிழர் கண்ட அமைச்சன்

8. தமிழர் கண்ட உண்மைகள்

---------------

 பாகம் 1 – அகம்

1. அகத்தின்அடிப்படை

 

சீரும் சிறப்புடனும், உயர்ந்த குறிக்கோளுடனும் ஒரு சமுதாயம் வாழ வேண்டுமாயின், அவ்வாழ்வில் அமைதி நிறைந்திருத்தல் வேண்டும். அமைதி இல்லாத வாழ்வில் பண்பாடு நாகரிகம், குறிக்கோள் என்பவை தோன்றா; தோன்றினாலும் நிலைத்து வளரா. பழந்தமிழன் வாழ்வில் சிறந்த குறிக்கோளும், பண்பாடும் நிறைந்து காணப் பெற்றன எனில், அவனுடைய வாழ்வு அமைதி நிறைந்ததாய் இருந்திருக்கும் என்று கூறத் தேவையில்லை. அமைதி என்பது புறத்தே இருந்து வருவதன்று; அகத்தே தோன்றுவது. எத்துணை விரும்பினாலும், விலைகொடுக்க முயன்றாலும் சிலருக்குக் கிட்டாத இவ்வமைதி, ஒரு சிலருக்கு எளிதாகக் கிடைத்து விடுகிறது.

அமைதி தோன்றுவது எங்கே?

அமைதி அகத்தே தோன்றி மலர்வதாயினும் அதனுடைய வளர்ச்சிக்குப் புறமும் ஓரளவு உதவி புரிகின்றது. பல சந்தருப்பங்களில் புறப்பொருள்கள் அமைதியின் வளர்ச்சிக்குத் துணை புரியாவிடினும், இடையூறு செய்யாமல் இருந்தாற்போதும் என்று கூறத் தோன்றுகிறது. இதனாலேயே அமைதியை நாடி அலையும் பெரியோர்கள், மக்கட் கூட்டம் இல்லாத காடு முதலியன நோக்கி ஓடிவிடுகிறார்கள் போலும்! காடு நோக்கி ஓடினாலும் புறத்தே அமைதியான சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்ளலாமே தவிர, அகத்தே - மனத்தின் உள்ளே - அமைதியைப் பெற முடியாது. அது தானே முகிழ்ப்பது. அகத்தே அமைதி பிறக்கப் புறச்சூழ்நிலை ஓரளவு துணைக் காரணமாகலாம்.

அமைதி வேட்டை

 

உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும் இவ் வமைதியை நாடி அலைகிறான். எத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்தால் இது எளிதில் கிட்டும் என்றறியப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக மனித சமுதாயம் வாழ்ந்து பார்க்கின்றது. தனி வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என்ற பலவகை வாழ்க்கையிலும் மனிதன் நாடி அலைவது இவ் வமைதியையே.

 

தமிழன் கண்ட விடை

 

ஏனைய சமுதாயத்தார் இத்தகைய அமைதி வேட்டையில் இறங்குமுன்னரே தமிழன் அமைதியை அடைய மிகுதியும் உதவும் ஒரு சூழ்நிலையைக் கண்டான். அதுவே இல்வாழ்க்கை எனப்படும். பிறநாட்டார் இல் வாழ்வின் இன்றியமையாமையை அறியுமுன்னரே இவன் அதன் பெருமையை நன்குணர்ந்தான்.

 

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்கு (குறள்-49)

 

என்றும்,

 

இல்லறம் அல்லது நல்லறம் அன்று

 

என்றும் எழுந்த கூற்றுக்கள் இவ்வுண்மையை உணர்த்து கின்றன. அறத்தின் வழி வாழ்வதன் சிறப்பை உணர்த்திய வள்ளுவர், அடுத்து 'அறன்' எனப்பட்டதே இல்வாழ்க்கை என்று கூறுவாராயின், இல் வாழ்வின் சிறப்பை வேறு எவ்வாறு விளக்குவது? மேலும், அறம் என்ற சொல்லையே பெய்து 'இல்லறம்' என்று பெயரும் இடுவாராயின், எத்துணைத் தூரம் அதன் சிறப்பை அறிந்திருந்தனர் இத்தமிழர் என்பது கூறவும் வேண்டுமோ? 

இருவகை அறிவு 

மிகப் பழைய காலத்தேகூட மனிதன் தன் வாழ்வு முழுத் தன்மையுடையதாய் இருத்தல் வேண்டும் என்று விரும்பினான். முழு வாழ்வு என்று எதனைக் குறிக்கின் றோம். மனிதனிடத்துக் காணப்படும் பொறிபுலன்களும் அறிவும் நன்கு பயன்படும்பொழுது அதனை முழுவாழ்வு எனக் கூறுகிறோம். ஏனைய விலங்கினங்களிலிருந்து மனிதனைப் பிரிப்பது அவனுடைய நுண்மை பொருந்திய மூளை. இம் மூளையின் பயனாக அவனுக்குக் கிடைத்தது அறிவு. அறிவு ஆயப் பயன்பட்டது. பரந்துபட்ட உலகில் பல்வேறு வடிவுடனும் உருவுடனும் இயல்புடனும் பொருள்கள் காட்சி வழங்குகின்றன. வடிவு, உருவு, இயல்பு என்ற இவற்றை நன்கு ஆய்ந்து இப்பொருள்களின் இடையேயுள்ள வேற்றுமையைக் காண்கிறது சாதாரண அறிவு. அது கண் முதலாய பொறிகளின் வழிப்பட்ட அறிவும் ஆம். இதனையடுத்து நுண்ணிய அறிவு தொழிற் படத் தொடங்குகிறது. பொருள்களின் இடையே காணப்படும் இவ்வேற்றுமைகளில் பொதுத்தன்மை உண்டாவென ஆய்கிறது அந்நுண்ணறிவு. பொதுத் தன்மையைக்கண்டு வேறுபட்ட வடிவு, உருவு இயல்புடைய பொருள்களில் ஒற்றுமையைக் காண முற்படுகிறது நுண்ணறிவு. சுருங்கக் கூறின், வேற்றுமையில் ஒற்றுமையையும் ஒற்றுமையில் வேற்றுமையையும் காண்பதே நுண்ணறிவாகும். பொறி களின் மூலம் கண்டோ கேட்டோ பொருள்களின் வேறுபாட்டை அறியும் அறிவைப் பொதுமறை,

 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள்-423)

 

என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் நுண்ணறிவை,

 

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறல்-355)

 

என்றும் கூறிச்செல்கிறது. பின்னையது முன்னையதை விடச் சிறந்தது என்பதையும் எளிதில் உணரலாம். அதனாலேயே வள்ளுவரும் பொருளின் தன்மையை அறியும் நுண்ணறிவை 'மெய்யுணர்தல்' என்ற அதிகாரத்தில் வைத்துள்ளார், இரண்டையும், 'அறிவு' என்றே குறள் குறிப்பிட்டாலும், இரண்டிற்கும் ஓரளவு வேறுபாடு உண்டென்பதை யாரும் எளிதில் அறியமுடியும்.

 

முழு வளர்ச்சி

 

மனிதன் முழுத்தன்மையடைய (Development of full personality) இவ்வறிவு மிகவும் இன்றியமையாதது. ஆனால் எத்துணைச் சிறந்ததாயினும் அறிவு ஒன்ற மட்டும் வைத்துக் கொண்டு மனிதன் வாழ முடியாது. வாழ்ந்தாலும், அதனை முழு வாழ்வு என்று கருத முடியாது. மனித வளர்ச்சியில் அறிவு ஒரு பகுதியேயாம். அளவு மீறி இதனையே பெரிதெனப் போற்றி வளர்த்தால் மற்றொரு பகுதியின் வளர்ச்சியை இது தாக்கும். 

உதாரணம் 

குத்துச்சண்டை செய்கிறவர்களைப் பார்க்கிறோம். அவர்கட்குப் போரில் பயன்படுவன இரண்டு கைகளுமே. ஆனால், கைகளில் மட்டும் முழு வன்மையைப் பெற்று விட்டதால் ஒருவன் சிறந்த குத்துச் சண்டை வீரன் ஆதல் இயலுமா? இயலவே இயலாது. ஏனைய உறுப்புகளையும் உடன் வளர்க்காமல் கைகளை மட்டும் வலுவடையச் செய்த ஒருவன் குத்தினால் அதைப் பொறுப்பது எதிரிக்கு இயலாதுதான். ஆனால், பொறுத்துக் கொண்டு அவன் மீண்டும் குத்தினால் அதனைப் பொறுக்கவும் நைவின்றி ஏற்றுக்கொள்ளவும் இவனுக்கு மார்பிலும் முகத்திலும் வலுவேண்டாவா? குத்துச் சண்டை வீரன் உடல் முழுவதும் வன்மை பெறாமல் கையில் மட்டும் வன்மை பெற்றிருந்தால், அவன் 'வீரன்' என்ற பெயருக்கு இலக்காக முடியுமா? அவன் முழு வீரன் ஆதல் கூடுமா? வீரன் என்ற பெயருக்கு உரியவனாக வேண்டுமாயின், முழு உடலிலும் வன்மை பெற்றிருக்க வேண்டும்.

 

வேண்டப்படுவன இரண்டு.

 

அதே போன்று 'மனிதன்' என்ற பெயருக்கு ஏற்ப ஒருவன் வாழ வேண்டுமாயின், அவனுக்கு இன்றியமை யாமல் வேண்டப்படுவன இரண்டு. முதலாவது உள்ளத்து உணர்வு; இரண்டாவது அறிவு. இரண்டும் வளம் பெற்றாலன்றி, அவன் முழுத் தன்மையுடையவன் எனக் கருதப்படான். ஒன்றைச் சுருக்கி மற்றொன்றை வளர்ப்ப தால் விளைவது தீங்கேயாம். உலக சரித்திரத்தை ஒருமுறை நோக்கினால், இவ்வுண்மை நன்குவிளங்கும். எத்தனையோ சமுதாயங்கள் மிக்க சிறப்புடன் வாழ்ந்தும் நிலைபேறில்லா மல் அழிந்தொழிந்தன.காரணம் யாது? உணர்வு, அறிவு என்ற இரண்டையும் ஒருங்கே வளர்த்திருந்தால் அவை நிலைபெற்றிருக்கக் கூடும். பலமான காற்றடித்தாலும், பிறர் தள்ளிவிட நேர்ந்தாலும் இரண்டு கால்களையும் ஊன்றி நிற்பவன் நன்கு நிற்றல் கூடும். அவ்வாறன்றி ஒரே காலில் நிற்பவன் உயிரைப் பிடித்துக் கொண்டு நிற்றல் கூடுமே தவிர, பிறர் தாக்கினால் விழாதிருத்தல் இயலாது. அதே போலச் சமுதாய வாழ்வுக்குத் தேவையான உணர்வு, அறிவு என்ற இரண்டு கால்களினாலும் நிற்கும் சமுதாயம் காலம் என்னும் பேய்க்காற்றாலும், பிற நாகரிகம் என்ற இடியாலும் தாக்கப்படினும் வீழ்வதில்லை. இதன் மறுதலையாக ஒரு காலில் நிற்கும் நிலை ஏற்பட்ட சமுதாயங்கள் நிலை பெறவில்லை. உணர்வையே பெரிதாகக் கொண்ட நாகரிகம் படைத்த சமுதாயம் வீழ்ச்சியுற்றது - அறிவையே பெரிதாகக்கொண்ட சமுதாயம் வீழ்ச்சியுற்றது. பழந்தமிழன் வாழ்வின் சிறப்பு யாதெனில்; உணர்வு, அறிவு என்ற இவ்விரண்டையும் ஒரு சேர வளர்க்க முற்பட்டமையேயாம்.

 

அறிவு வளர்ச்சியின் பயன்

 

மனிதன் அறிவை வளர்ப்பதால் பெரும் பயன் விஞ்ஞானம், பொருளாதாரம், அரசியல் முதலியவை களாம். இவற்றின் வளர்ச்சியால் மனிதனின் புறவாழ்வு செம்மையடைந்தது. வெயிலிலும் மழையிலும் அவதியுற்ற மனிதன், வீடு கட்டி, நெருப்பு வளர்த்து வண்டி செய்து வாழக் கற்றுக்கொண்டது விஞ்ஞான அறிவை வளர்த்ததன் பயன். நிலத்திற் கிடைக்கும் பயனை நாளைக்கு வேண்டும் என்று சேமித்து வைத்துப் பிறருக்கும் பகிர்ந்து அளித்து வாழத் தொடங்கியது பொருளாதார அறிவை வளர்த்ததன் பயன். கூட்டங்கூடி வாழத் தொடங்குகையில் ஒருவனைத் தலைவன் என வைத்துக் கொண்டு சட்ட திட்டங்களை ஏற்படுத்தி அவற்றிற்குக் கட்டுப்பட்டு வாழத் தொடங்கியது அரசியல் அறிவை வளர்த்ததன் பயன். இவற்றை மேலும் மேலும் வளர்ப்பதால் மனிதனுடைய அறிவு வளர்ந்தது. மனிதன் நன்முறையில் சமுதாயத்தில் பிறருடன் கூடி வாழும் கலையைக் கற்றுக்கொண்டான். குறைந்த காலத் தில் குறைந்த முயற்சியில் நிறைந்த பொருளைப் பெற்று, நிறைந்த அளவு ஓய்வு நேரத்தையும் பெற வழி செய்து கொண்டான். இவை யாவும் அறிவு வளர்ச்சியால் அவனுடைய புறவாழ்வு பெற்ற பயன்களாகும்.

இனி, மனிதனால் தோற்றுவிக்கப் பெரும் நூல்களும் இரு வகைப்படும். ஒரு வகை, அறிவின் துணை கொண்டு ஆக்கப்பெரும் அறிவியல் நூல்கள். ஏனையவை உணர்வின் துணைகொண்டு செய்யப் பெரும் உணர்வு நூல்கள். இவற்றையே இலக்கியம் என்று கூறுகிறோம். முதல் தொகுப்பில் உள்ளனவாகிய அறிவியல் நூல்கள் கால தேச வர்த்தமானங்களால் மாறுபவை. ஓரளவு எல்லையுடைய அறிவின் திறங்கொண்டு ஆக்கப்பெரும் இந்நூல்கள், மக்கள் சமுதாயம் அறிவு வளர்ச்சி பெற்ற பிறகு தங்கள் பயனை இழந்து விடுகின்றன. விஞ்ஞான உலகின் திறவு கோல் என்று கூறப்பெற்ற 'நியூட்டனின்' இயக்கச் சட்டங்கள் (Laws of motion) 'ஐன்ஸ்டின்' தோன்றிய பிறகு ஐயுறுதற்கும் ஏதுவாய்விட்டன. அன்றைய அறிவுநிலையில் உண்மையாகக் கருதப்பெற்ற ஒன்று, இன்றைய அறிவு நிலையில் மாறிவிட்டது. உடைக்க முடியாதது என்று கருதி 'அணு' (atom) என்று பெயரிட்டார் டால்டன் என்ற பெரியார் நுண்மைப் பொருளுக்கு. அன்றைய அறிவுத் திறத்துக்கு அது சரி. ஆனால், இன்றைய அறிவு நிலை, அணுவைத் துளைத்து அதனுள் ஓர் உலகத்தையே காண்கிறது. நேற்றுவரை உண்மையென்று கருதப்பட்ட ஒன்று இன்று பொய்யாவதைக் காண்கிறோம். இன்றைய உலகம் உண்மை என்று நம்புவது நாளை உலகால் எள்ளவும் நகையாடவும் படலாம். இங்ஙனம் வளர்ச்சி யடைந்த இந்நூல்கள் அனைத்தும் அறிவின் துணைக் கொண்டு மட்டும் ஆக்கப்பெற்றவை. உணர்விற்கு இங்கு வேலையே இல்லை. உணர்வின் உதவியின்றித் தோன்றும் இவற்றால் ஓரளவு நற்பயன் விளைவது உண்டாயினும், தீப்பயனும் தோன்றத்தான் செய்கிறது. அணுவைத் துளைத்து மின்அணு, பரமாணுவாகப் பிரித்தால் பயன் உண்டா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கத் தீப்பயன் உடன் விளைந்துவிட்டது. உணர்வின் உதவி இன்றி அறிவின் பயனாகத் தோன்றினமையாலேதான் அணுவைத் துளைக்கும் ஆராய்ச்சி 'அணுகுண்டி'ல் முடிந்தது. உணர்வும் அறிவும் சேர்ந்து வளர்ந்திருந்தால், இவ்வாறு 'அணுகுண்டு' தோன்றி இருப்பினும், அது 'நாகசாக்கி' ஹிரோஷீமா' மக்கள் தலையில் விழாமல் சமுதாய நன்மைக்குப் பயன்பட்டிருக்கும்.

அறிவின் உதவியால் மட்டுமே தோன்றும் பொருள் கள், அவ்வறிவு வளர்ச்சி பெற்றபின் பயன்படாமல் ஒழிவதைக் கண்டோம். ஆனால், பின்னர்க் கூறப்பெற்ற உணர்வின் அடிப்படையில் தோன்றும் இலக்கியம் இவ்வாறு பயனற்றுப் போவதில்லை. எத்துணைக் காலஞ் சென்றாலும், மக்கள் சமுதாயம் எவ்வளவு அறிவு வளர்ச்சி யடைந்தாலும், இவை பழமையானவை என்று கருதப் படுவதில்லை ஒரு காலத்து வாழ்ந்த மக்கட்கு மட்டுமே விரும்பத்தக்கதாய் இருந்தது என்று கூறுவதற்கில்லாமல் எக்காலத்தும் எவ்விடத்தும் வாழும் மக்கள் அனைவருக் கும் விரும்பத்தக்கதாய் இருந்தது என்று கூறுவதற்கில்லா மல் எக்காலத்தும் எவ்விடத்தும் வாழும் மக்கள் அனை வருக்கும் விரும்பத்தக்கதாய் உள்ள பெருமை இலக்கியத் திற்கு மட்டுமே உண்டு. சுருங்கக் கூறின், காலதேச வர்த்தமானம் கடந்த ஒன்றாய் மிளிர்வது உணர்வின் பயனாகத் தோன்றும் இலக்கியம் என்னலாம்.

 

உணர்வு வளர்ச்சி

 

உணர்வு வளர்ச்சியாலேதான் மனிதனுடைய மனம் நிறைவடையவேண்டும். எத்துணை அறிவை வளர்த்துக் கொண்டு போனாலும், மனம் நிறைவடையாது. இது கருதியே போலும் தாயுமானவ அடிகளார்,

 

சினம்இறக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்

மனம்இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே!

(பராபரக்கண்ணி, 169)

 

என்று கூறிப்போனார்! அறிவு வளர்ச்சியால் மட்டும் மனநிறைவடைய முடியாது என்பதற்கு அமெரிக்கா, இரஷியா போன்ற மேனாடுகள் உதாரணமாகும். இத்தகைய ஓர் இக்கட்டான நிலை தோன்றக்கூடும் என்பதை அன்றைத் தமிழன் நன்கு அறிந்தமையின், உணர்வையும் அறிவுடன் வளர்க்கத் தலைப்பட்டான். அதன் பயனே அக வளர்ச்சியாம். உணர்வு வளர்ச்சியை 'அகம்' என்று கூறினான் பண்டைத் தமிழன். அகமாவது யாது?

 

"ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற

காலத்துப் பிறந்த பேரின்பம், அக் கூட்டத்தின் பின்னர்

அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக

இவ்வாறு இருந்தது எனக் கூறப்பட்டதை, யாண்டும்

உள்ளத்துணர்வே நுகர்ந்த இன்பம் உறுவதோர் பொருள்

ஆகலின், அதனை அகம் என்றார்... இன்பமேயன்றித்

துன்பமும் அகத்தே நிகழுமாவெனின், அதுவும் காமம்

கண்ணிற்றேல் (கருதினால்) இன்பத்துள் அடங்கும்."

(தொல். அகத்திணை. சூ. 1. நச்சி. உரை)

 

அகம் என்பதற்குப் பண்டைத் தமிழ் கண்ட விரிவுரை யாகும் இது. 'யான்கும் உள்ளத்துணர்வே நுகர்ந்து' என்று கூறினமையின், இதுவே உணர்வை வளர்க்கும் வழி என்பது அறிய முடிகிறது.

 

அகத்திணையும் தமிழரும்

 

உணர்வை வளர்க்கும் அகத்திற்குத் தமிழன் பெரு மதிப்பைக் கொடுத்தான்; வாழ்விலும் அதனைப் புறத்தைக் காட்டிலும் உயர்ந்தது என்று கருதினான். இலக்கணம் வகுத்த தொல்காப்பியனாறும் 'புறத்திணை இயல்' என்ற ஒரே இயலால் புறத்தைப்பற்றிக் கூறினார். ஆனால், அகத்தின் சிறப்பை அறிவிக்கப் போலும் அதனை 'அகத்திணை இயல், களவியல், கற்பியல்' என்ற மூன்று இயல்களாற் பேசினார்! அவ்வாறு இலக்கணம் செய்ய ஒரு தனிக் காரணமும் உண்டு. இலக்கியம் கண்டதற்குத்தானே இலக்கணம் கூறினார் ஆசிரியர்? இலக்கியம் எவ்வாறு வாழ்க்கையைக் கண்டது? இலக்கியம் தன்னிற் பெரும் பகுதியை அகத்திற்கே தந்து விட்டது. பத்துப்பாட்டு என்றொரு பெரிய தொகைநூல் சங்க இலக்கியத்தில் உண்டு. அதில் உள்ள பத்துப் பாடல்களும் புறப்பொருள் பற்றியே பேசுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையை ஆய்ந்தால் 'முல்லைப் பாட்டு,' 'குறிஞ்சிப் பாட்டு,' 'நெடுநல் வாடை' என்ற மூன்றும் அகத்தைப் பற்றிய பாடல்களேயாம். இலக்கண நுணுக்கம் காரணமாக இவை புறத்துள் அடக்கப் பெற்றுள்ளன.

அடுத்து 'எட்டுத் தொகை' என்றதொரு தொகுப்பு உண்டு. தொகை நூல்களாக எட்டு நூல்கள் குறிக்கப் படுகின்றன. இவற்றில் 'புறநானூறு', 'பதிற்றுப்பத்து' என்ற இரண்டு தவிர, ஏனைய ஆறும் அகப்பகுதி நூல்களே யாகும். முழுவதும் புறம் என்று கூறப்படும் பத்துப் பாடல்களில் மூன்று அகம் பற்றியன; எட்டு நூல்களில் ஆறு அகம் பற்றியன. இவற்றிலிருந்து இத்தமிழர் அகம் பற்றி எத்துணைப் பெருமை கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகின்றதன்றோ?

 

ஐந்திணைப்பிரிவு

 

அகம் எதனைப் பற்றிப் பேசுகிறது? ஒருவனும் ஒருத்தி யும் பிறர் உதவியின்றித் தாமே எதிர்ப்பட்டு ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். (இவ்வாறு எதிர்ப்படுதலுக்கு 'விதி கூட்டுவதால்' என்று பழைய நூல்கள் காரணம் கூறும்). பார்வை நோக்காக முடிகிறது. அந்நோக்கில் ஒருவரை ஒருவர் ஈர்க்கின்றனர். இருவரும் தம் நிலைமை மாறி ஒருவர் இன்றி மற்றவர் வாழ முடியாதென்ற நிலையை அடைகின்றனர்; மனத்தால் கூடிய பிறகு உடலாலும் கூடுகின்றனர்; இவ்வாறு பிறர் அறியாமல் பன்முறை கூடுகின்றனர். இதனைக் 'குறிஞ்சித் திணை' என்று இலக்கணம் கூறும்.

இந்நிலை நீடிக்கையில் இவர்கள் தொடர்பைத் தலைவியுனுடன் ஓயாமல் காலங்கழிக்கும் தோழி மெல்ல அறிகிறாள். தலைவனும் தலைவியும் தம் இன்பமே பெரிதென்று வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இருவரும் உலகில் வாழ்கின்றவர் தாமே! எனவே, இவர்கள் இவ்வாறு கூடிப் பிரிவதால் சமுதாயத்தில் மற்றவர்கள் இவர்களைப் பற்றி யாது பேசுவர் என்பதைத் தலைவியும் தலைவனும் நினைக்க நேரமில்லாவிடினும், தோழி நினைத்துப்பார்க்கிறாள். அவள் தலைவனைப் பார்த்து விரைவில் மணஞ் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்கிறாள். இதுவும் 'குறிஞ்சித் திணை'யின்பாற் படும்.

திருமணம் செய்வது என்றால் தலைவனுக்குக் கையில் பொருள் வேண்டுமே! எனவே, தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள்தேடச் செல்கிறான். திருமணம் நிகழ்ந்த பின்னும் பொருள் தேடச் செல்வதுண்டு. இவ்வாறு தலைவன் பிரிந்து செல்வதையும் அதற்குரிய ஏற்பாடுகளை யும் கூறுவது 'பாலைத்திணை' என்று இலக்கணங் கூறும்.

திருமணம் முடிந்து இல்லறம் நடத்தும் நாளில் தலைவன் பிரிந்து செல்வதும் உண்டு. அந்நிலையில் தலைவி தன் கடமைகளைச் செய்துகொண்டு வீட்டில் இருப்பாள். இதனை 'முல்லைத் திணை' என்பர்.

 

சென்ற தலைவன் குறித்த காலத்தில் மீளாவிடின், தலைவி மிகவும் வருந்துவாள். அவள் வருத்தம் அடக்கும் நிலைநீங்கி வாய்விட்டு அரற்றும் அளவிற்குச் செல்லுதலும் உண்டு. இவ்வாறு அறத்ருவதை 'நெய்தல் திணை' என்பர்.

பொருள் முதலியன தேடி மீண்டு வந்த தலைவன் வீட்டிலிருந்து இன்பமாகப் பொழுது போக்குகிறான். அதிக வேலை இல்லையாதலின், அவன் மனம் சும்மா இருப்பதில்லை, ஓரளவு சோம்பியுள்ள மனத்தில் 'சாத்தான்' குடி புகுகின்றான். எனவே, தலைவன் தவறான வழிகளில் செல்லத் தொடங்குகிறான். பரத்தையர் நட்பைத் தேடிச் செல்லும் அவனுக்கும் தலைவிக்கும் மன வேறுபாடு தோன்றுகிறது. அது காரணமாகப் பூசலும் புலவியும் ஏற்படுகின்றன. இதுபற்றிக் கூறுவதை 'மருதத் திணை' என்பர்.

 

தனி இரு திணைகள்

 

இவ்வாறு ஐந்து வகையாக நடைபெறும் வீட்டு வாழ்வை - உணர்வு வாழ்வை - 'அகம்' என்று கூறினர். இவற்றையல்லாமல், சில புற நடைகளும் (Exceptions) உண்டு. சில சமயங்களில் தலைவர் சிலர் தலைவி தம்மை விரும்புகிராளா என்பதுபற்றிக் கவலையுறாமல் காதல் புரிய முற்படுவதும் உண்டு. ஒருதலைக் காமமாகிய இதனைக் கைக்கிளைத் திணை (Subnormal love) என்பர். சில சந்தருப்பங்களில் தம்மைவிட வயதில் மூத்தாரிடம் தலைவர்கள் அன்பு செய்ய முற்படுவதும் உண்டு. இதனைப் 'பெருந்திணை' (Abnormal love) என்பர்.

 

அகத்திணையின் மதிப்பு

 

பெரும்படியாகக் கூறுமிடத்து அகப் பகுதியின் அடிப் படை இவையே. இவை அனைத்தும், நான்கு சுவர்களை எல்லையாக உடைய வீட்டினுள் நடைபெறுவனவே என்று கூறத் தேவை இல்லை. பரந்துப் பட்ட புற உலகில் நடைபெறும் வாழ்வு முழுவதையும் புறம என்ற ஒரு பிரிவாகப் பிரித்து 'சிறிய அளவுடைய வீட்டினுள் நடைபெறும் வாழ்வை அகம்' என ஒரு பிரிவாகப் பிரித்தனர் பழந்தமிழர். இதன் காரணம் யாது? பரந்த இடத்தில் நடைபெற்றாலும் குறுகிய இடத்தில் நடை பெற்றாலும் இவை இரண்டும் ஒத்த மதிப்புடையன எனக் கருதக் காரணம் யாது? அளவால் இவை மாறுபடினும், தன்மையால் ஒத்த மதிப்புடையவை என்றே கருதினர்.

தொகை நூல்கள் செய்தவர்கள் இதனை நன்குணர்ந்த தோடல்லாமல் ஒரு படி மேலேயும் சென்றுவிட்டார்கள். எட்டுத்தொகை நூல்களுள் ஆறு அகத்திற்குத் தரப்பட்டன. ஏன்? புரத்தைவிட அகம் சிறந்தது என்று அவர்கள் கருதியதே காரணமாகும். ஏன் அவ்வாறு கருதினார்கள்? குறுகிய இடத்தில் நடைபெருவதாயினும், அகம் சிறப்படையாவிடில், புறம சிறக்க முடியாது. பெரிய மரமாகப் புறத்தே ஒரு பொருள் காட்சி நல்கினாலும் கண்ணுக்குத் தெரியாத சிறிய வேர்களாலேயே மரத்தின் வாழ்வு நடைபெறுகிறது. இச்சிறிய வேர்கள் நன்கு அமையாவிடில் அப்பெரிய மரம் நன்கு வாழ முடியாது. அதேபோலப் பிறர் அறிய முடியாத சூழ்நிலையில் சிறிய வீட்டில் நடைபெறும் அகவாழ்வு செம்மையாக அமைந் தால்தான் புற வாழ்வு செம்மைப்படும். குடும்பம் நன்கு அமைந்தால்தான் சமுதாயம் நன்கு அமையமுடியும்! தனி மனிதன் சீர்திருந்தினாலன்றிச் சமுதாயச் சீர்திருத்தம் என்பது குதிரைக்கொம்புதான்.

 

வள்ளுவர் வழி

 

இவ்வுண்மையை நன்கு உணர்ந்த காரணத்தாலேதான் பொதுமறை தந்த பெரியார், உலகம் முழுவதற்கும் நல்வழி வகுக்கத் தொடங்குகையில் புது முறையைக் கையாள்கிறார். அவருக்கு முன்னர்த் தோன்றிய பிளேட்டோ போன்றவர்கள் நாடு நலம் பெரும் வழியைக் கூறினார்கள். ஆனால், வள்ளுவர் இவ்வழியை விட்டுத் தனி மனிதன், அவன் குடும்பம் என்ற இரண்டையும் முதலில் பேசுகிறார். இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், புதல்வரைப் பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல், வெஃகாமை, பயனில சொல்லாமை முதலிய அதிகாரங்கள் தனிப்பட்ட மனிதனும் அவனுடைய குடும்பமும் செம்மையடையக் கூறப்பெற்ற வழிகள் அல்லவா? குடும்பம் செம்மைப் பட்டாலன்றிச் சமுதாயமும் நாடும் செம்மையடைதல் இயலாதென்பதை நன்கறிந்தமையின், வள்ளுவர் இவ் வழியை மேற் கொண்டார். இக்கருத்துப் பின்னரும் விரிவாக ஆயப்படும்.

குடும்ப வாழ்க்கை மனிதனைச் செம்மைப்படுத்த அவ்வளவு இன்றியமையாததா? ஆம் என்றே கருதினர் பழந்தமிழர்; அதனாலேயே அகத்திற்கு அத்துணை மதிப்புத் தந்தனர். இது ஏன் என்பதைச் சற்று விரிவாகக் காண்போம்.

மனிதன் பிறந்து வளர்வதன் நோக்கம் முழுத்தன்மை (Perfection) அடைவதேயாம். மனிதன் பிறக்கும்பொழுது தன்னலப் பிண்டமாகவே பிறக்கிறான். காட்டு மனிதனாகப் பிறர் உதவியை நாடாமல் வாழ்கின்ற காலத்தில் இதனால் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், நாகரிகம் மிகுந்த சமுதாயத்தின் ஓர் உறுப்பாக அவன் வாழவேண்டிய நிலையில் இத் தன்னலம் ஊறு செய்யும். எனவே, எத்துணைக்கெத்துணை தன்னலத்தை ஒழிக்கிறானோ அத்துணைக்கத்துணை அவன் சிறந்த மனிதனாக வாழ முடியும். முழுத்தன்மை பெற இது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறாயின், தன்னலத்தை உதறித் தள்ள வழி யாது? இல்லறமே சிறந்த வழி. இவ்வாறு கூறுவதால் துறவறத்தை நேரடியாக மேற் கொண்டோர் சிறந்தவர்களாக முடியாது என்பது கருத்தன்று.அவ்வாறு ஆகின்றவர் ஒரு சிலரேயாவர். அன்னார் புறநடையாவரே (Exception) தவிர விதியாகார்.

 

தலைவனும் தலைவியும்

 

இல்லறத்தைத் தமிழன் கூரியமுரையில் மேற்கொள்வ தாள் மனிதன் தன்னலத்திலிருந்து விடுபட முடியுமா? என்பதே அடுத்து வரும் வினா. ஏனைய நாட்டினரைப் போலத் திருமணத்தைக் கூறாமல் தமிழர் அதனைக் 'களவு' என்றும் 'கற்பு' என்றும் பிரித்தனர். முதலில் களவு தொடங்கும் பொழுதே தலைவன் ஒன்றை இழக்கிறான். அவ்வாறு இழக்கப்படுவது அவனுடைய அகங்காரம் தலைவனும் தலைவியும் ஒத்த பெருமையுடையவர்கள் எனக் கூற வந்த தொல்காப்பியர், அடுத்துத் தலைவன் சற்று உயர்ந்தவனாயினுந் தவறு இல்லை எனக் கூறுகிறார்.

 

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே. (களவியல் - 2)

 

என்பதால் தலைவன் பெருமையை ஒருவாறு அறியலாம்.

 

இத்துணைச் சிறந்த தலைவன் தன் பாங்கரும் ஏவலரும் நண்பரும் புடைசூழ வேட்டை மேற் சென்றவன், தலைவியைக் காண்கின்றான். அவளைக் காணுமுன்னர் அவனைப் பற்றி நினைப்பவர்கட்கு அவன் பெருமை தோன்றாமற் போகாது. இத்துணைப் பெருமை காரணமாக அவனிடம் ஓரளவாவது ஆணவம் இல்லாமற்போகாது. மேலும், அவன், 'அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப் பகுதியும் கடைப் பிடியும் நிறையும் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும் உடையவன்,' எனத் தொல்காப்பியம் கூறுகிறது. 'பெருமையும் உரனும் ஆடுஉ மேன' (களவு-7) இவ்வளவு சிறப்பும் உடைய ஒருவன் தன்னைப்பற்றி உயர்வான எண்ணங்கொண்டு தருக்கி நிற்றலில் தவறு இல்லை.

 

அகங்காரம் அழிதல்

 

அகங்காரம் அளவு மிஞ்சினால் பிழையே தவிர, அளவுடன் இருப்பதை யாரும் குறை கூறார். இவ்வாறுள்ள தலைவன் சமுதாயத்திற்கு யாது பயனை விளைத்தல் கூடும்? அவனிடம் காணப்படுவனவாக மேலே கூறிய சிறப்புக்கள் அனைத்தும் அவன் பெருமையை மிகுதிப் படுத்தப் பயன்படுவனவே தவிரப் பிறருக்கு எவ்வாறு பயன்படும்? இத்துணைச் சிறப்பும் உடையான் மனத்தில் அன்பு என்பது பிறந்தாலன்றோ அவனால் பிறர் பயன் பெறமுடியும்? இதுவரை தனது நலத்தின்பொருட்டே பிறர் வாழ்கின்றார்கள் என்ற கருத்துடனேதான் அவன் வாழ்கிறான். இன்றேல், பாங்கரும் நண்பருமாய பலர் தன்னைப் புடை சூழ்ந்து வரவேண்டும் என்று அவன் நினைவானா? தலைவியைப் பார்க்கின்றவரை அவன் தன்னைப் பற்றியும் உலகைப் பற்றியும் கொண்டுள்ள எண்ணமே வேறு. அவளைப் பார்த்தவுடன் அவனது மனத்தில் முதலில் தோன்றும் எண்ணம் அவள் அழகைப் பற்றியதுதான். அழகைக் கண்டபொழுது அனுபவிப்பதில் தவறு இல்லையாயினும், அவன் அதனைத் தன்னலத் துடனே தான் காண்கிறான். ஆனால், சில நேரத்தில், இவ்வனுபவத்தில் அவன் ஒன்ற ஒன்ற அவனுடைய நிலைமை மாறுபடுகின்றது. தான் என்ற முனைப்புக் கொஞ்சங்கொஞ்சமாகக் கழன்று விட அழகில் தன்னை அடிமைப்படுத்தும் நிலையை அவன் அடைந்துவிடுகிறான். இன்னும் சிறிது நேரம் ஆனவுடன் அவளில்லாமல் தன் வாழ்க்கை முற்றுப்பெறாது என்று அறிகிறான் - அல்ல - உணர்கிறான். இப்பொழுது அவனுடைய பெருமையும் மதிப்பும், உரனும், நண்பர் குழாமும், தன்மதிப்பும் பொருளற்ற வெறுங்கூட்டமாய்க் காட்சியளிக்கின்றன அவனுக்கு. முழு வாழ்வின் முதற்படியில் கால் வைத்து விட்டான் தலைவன். இதுவரை தன்னையே முதலாக வைத்து எண்ணிய தலைவன், இனித் தன்னினும் உயர்ந்த ஒரு பொருளைக் கண்டுவிட்டான். அவள் இல்லாமல் தனக்கு வாழ்வு இல்லை என்பதை உணர்ந்த அந்த வினாடியிலேயே தலைவனுக்குப் புதுவாழ்வு பிறந்து விடுகிறது.

 

முழுத்தன்மையின் வளர்ச்சி

 

தலைவி தனக்கு இன்றியமையாதவள் என்று தலைவன் கருதும் பொழுதுகூடத் தன்னலமே அங்குக் காட்சியளிக்கிறது. என்றாலும், தானே, உலகம் என்ற நிலையிலிருந்து இறங்கிவிட்டான் இப்பொழுது. அவன் அவளை அடைந்து இன்பம் பெற வேண்டும் என்ற நினைவிலும் ஓரளவு தன்னலத்தைக் காண்கிறோம். களவிற் கூடி அவர்கள் பிறர் அறியாமலும், சில காலம் தோழி, பாங்கன், பின்னர் ஊரார் என்பவர்கள் அறியவும் கூடுகிறார்கள். இக் கூட்டத்தினால் இருவரும் இன்பம் பெறினும் தலைவன் இன்னும் தன்னலக் கலப்புடையவ னாகவே இருக்கிறான்; பிறர் பழி தூற்றல் முதலியவற்றால் தலைவி வருந்துவாளே என்பதைப் பற்றி அதிகக் கவலை கொள்ளாமல் களவுக் கூட்டத்தையே விரும்புகிறான். இச் சூழ்நிலை இன்னும் அவன் தனது இன்பத்தையே பெரிதாகக் கருதுகிறான் என்பதையே அறிவிக்கின்றது. தோழி பன்முறை அவனைக் கண்டு அவன் செயல் தகாதது என்று இடித்துக் கூறிய சில சந்தருப்பங்களில் அவனுடைய அன்பின் ஆழத்திற்குச் சோதனை நிகழ்வதும் உண்டு. தலைவி தனக்குக் கிடைக்க மாட்டாள் என்ற நிலை ஏற்படுமாயின், தலைவன் 'மடலூர்தல்' என்பதை மேற் கொண்டேனும் தன்னுடைய அன்பை வெளியிட முயல்கிறான்.

அன்புக்குச் சோதனை 'மடலூர்தல்' என்பது பண்டைய வழக்கம். பனங்கறுக் கினால் குதிரை ஒன்று செய்து தான் விரும்பும் தலைவியின் படத்தை எழுதிக்கொண்டு தலைவன் அப் பொம்மைக் குதிரையின்மேல் ஏறிக்கொள்வான். தெருப் பிள்ளைகள் அக் குதிரையை இழுக்கும்போழுது தலைவ னுடம்பிலிருந்து குருதி பெருகும். இதனைக் கண்ட ஊரார் அப்பெண்ணை அவனுக்கு மணம் முடிக்க முந்துவர்; இப் பழக்கம் எத்தகையதாயினும் தலைவனுடைய மனவளர்ச்சி யில் ஒரு படியைக் காட்டுகிறது. தலைவியைப் பெற வேண்டித் தன்மானத்தையுந் துறந்து பனங்கறுக்கினால் செய்த குதிரையில் ஏறத் தலைவன் முற்பட்டான் எனில், அவன் அகங்காரம் முற்றும் அழிந்து விட்டதென்பதற்கு இதனினும் சான்று வேறு வேண்டுமோ?

 

        ...போருள்

அடல் மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல்

மன்றம் படர்வித்தவள் வாழி !, சான்றீர்

 

        ...வையம்

புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்

இன்னா இடும்பை செய்தாள் - அம்மா, சான்றீர்

 

        ...வடிநாவின்

வல்லார் முன்சொல் வல்லேன் என்னைப் பறிர் முன்னர்க்

கல்லாமை காட்டியவள் - வாழி, சான்றீர் (கலித்தொகை - 141)

 

கலித்தொகையில் காணப்பெறும் இம்மூன்று தாழிசை களும் உண்மைக் காதலில் அகங்காரத்திற்கு அழிவு ஏற்படு கின்றது என்று மேலே நாம் குறிப்பிட்டதை வலியுறுத்து கின்றன.

 

அடல் மாமேல் ஆற்றுவேன்

 

என்று சொல்லும்பொழுது அவன் உடல் வன்மையும்,

 

...'வையம்

புரவு ஊக்கும் உள்ளத்தேன்

 

என்று கூறும்பொழுது அவன் நெஞ்சுரத்தையும்,

 

...'வடிநாவின்

வல்லார் முன் சொல்வல்லேன்',

 

என்று எடுத்துரைக்கும்போழுது அவன் கல்விப் பெருக்கம், கற்றன சொல்ல வல்ல ஆற்றல் என்பனவற்றையும் அறிய முடிகின்றது.

இம்மூன்று கருத்துக்களையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்பொழுது தலைவனுடைய முழு ஆளுமையும் (Personality) வெளிப்படக் காண்கிறோம்.

இதுவரை கூரியனவற்றைச் சுருக்கமாகக் கண்டால் சில உண்மைகள் தெற்றென விளங்கும். உலகின் பிற இடங்களில் வாழுகின்றவர்கள் காதலைப் பற்றிச் சிந்தித்த முறையில் இத் தமிழர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

ஆண் பெண் உறவின் அடிப்படையே காதல் என்று உலகில் வாழ்கின்ற பலரும் நினைத்திருந்த வேளையில் தமிழர் பலபடி முன்சென்று காதல் என்பது ஒருவகை மனநிலை என்று கூறிப் போந்தனர்.

ஒரு தலைவனுக்கு அன்றாடம் எத்தனையோ பெண் களைப் பார்க்கின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது; இத்தகைய வாய்ப்பு தலைவிக்கும் உண்டாகலாம் எனினும் பார்க்கின்ற பெண்கள்பால் எல்லாம் இவன் மனம் செல்வதில்லை; தலைவிக்கும் இவ்வாறே.

இன்னும் சொல்லப்போனால் பல பெண்கள் ஒரே தலைவனைப் பார்க்கின்றனர். ஒருத்தி தவிர பிறர் எவர் மனத்திலும் எத்தகைய கிளர்ச்சியும் தோன்றுவதில்லை. கூட்டமாக இருக்கின்ற பெண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே தலைவனை(யே)க் கண்டாலும் இவள் ஒருத்தி தவிர ஏனையோர்க்கு எவ்வித மனச் சலனமும் ஏற்படவில்லையாம். இந்த ஒருத்திகூட இதே தலைவனை இதன் முன்னர்ப் பன்முறை கண்டிருந்தும் எவ்விதமான மனப் பேதலிப்பும் கொண்டவள் அல்லள்.

ஆனால் இன்று அவனைப் பார்த்த உடன் மனத்தில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டு விட்டதைக் காண்கிறாள்; கூறுகிறாள்.

 

புலர் குரல் ஏனல் புழையுடை ஒருசிறை

மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர்

பலர்(தில்), வாழி-தோழி!-அவருள்,

ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி

ஓர் யான் ஆகுவது எவன் கொல்,

நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே? (அகம்-82, 13-18)

 

இன்றும்கூட அத் தலைவன் இவளிடம் நேரே வந்து தன்னுடைய காதலை வெளிப்படுத்திப் பேசியதாகத் தெரியவில்லை.

யானை வேட்டம் புக்க அவன் யானை தப்பிச் சென்ற வழி, ஆயத்தாரொடு கூட்டமாக நின்றவர்களைப் பார்த்தே,

"ஒரு யானை இப்பக்கம் தப்பிப்போனது. கண்டீரே?" எனப் பொதுவாகத்தான் கேட்டான். தலைவியைத் தனியே கேட்கவும் இல்லை; வினாவிற்கு அப்பெண்டிர் விடை தந்ததாகவும் தெரியவில்லை.

தினைப் புனத்தில் நிற்கும் இவள், தன் உடலின் பெரும் பகுதி மலர் குரல் ஏனலால் மறைக்கப்பட விளங்கினாள். எடுத்த ஓர் வினாவிற்கு எதிர்மாற்றம் பெறாதவனாய் அவன் போய்விட்டான்.

அவனைக் கண்ட, அவன் வினா கேட்ட, பெண்கள் அனைவரும் (தோழியர்) அருமையாய் உறங்குகிறார்கள். அத்துணைப் பெண்டிரிடையே இவள் மட்டும் தலையணையே துணையாய் நெகிழ்ந்த தோள்களோடு, நெக்கு நெக்கு நீடு நினைப்பவளாய் நீர் ஒழுக்கு அறாத கண்களோடு இரவு முழுவதும் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கிறாள்.

 

உருவ வல்வில் பற்றி, அம்பு தெரிந்து,

செருச் செய் யானை செல்நெறி வினாஅய்

புலர்குரல் ஏனல் புழையுடை ஒருசிறை (அகம்-82,11-13)

 

நின்ற தலைவனைக் கண்ட பலருள்ளும் நெகிழ்தோள் இவளே வருந்துகின்றாள்.

(நன்கு கட்டப்பட்ட அழகிய வில்லை ஒரு கையில் பற்றிக்கொண்டு கூர்மையான அம்புகளை ஆராய்ந்து மற்றொரு கையில் வைத்துக்கொண்டு, 'போர் செய்தலில் வல்ல யானை சென்ற வழி இதுவோ?' என்று வினவிய வனாய் கதிர் முற்றித் தலை சாய்த்த தினைப்புனத்தில் ஒரு பக்கமாக நின்று எம்முடன் பேசிய மலர் மாலை அணிந்த தலைவன் நிற்பதைக் கண்டவர் பலர். அப் பலருள்ளும் செறிந்த இருட்டோடு கூடிய இவ் இரவில் தலையணை யொடு பொருந்தி, நான் ஒருத்தி மட்டுமே நீர் நிறைந்த கண்ணொடு நெகிழ்ந்த தோளோடு இருப்பது ஏன்?)

இப்பாடலில், குறிஞ்சி பாடக் கபிலர் என்ற முதுமொழியையே ஏற்படுத்திய புலன் அழுக்கற்ற அந்தணாளன் ஆகிய கபிலர்பெருமான் குறிப்புப் பொருள் (முன்னம்) என்ற ஒரு கவிதை அழகைப் பெய்துள்ளார்.

பாடலின் முதல் 10 அடிகள் மலை அழகையும், அச் சாரலில் நடக்கின்ற இயற்கை நிகழ்ச்சிகளையும் ஈடு இணையற்ற முறையில் வருணிக்கின்றன.

 

ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்

கோடை அவ் வளி குழலிசை ஆக

பாடு இன் அருவிப் பனிநீர் இன்னிசை

தோடு அமை முழவின் துதை குரல் ஆக,

கணக்கலை இகுக்கும் கடுங் குரல் தூம்பொடு

மலைப் பூஞ்சாரல் வண்டு யாழ் ஆக

இன்பல் இமிழிசை கேட்டு, கலி சிறந்து

மந்தி நல்அவை மருள்வன நோக்க,

கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில்" (குறிஞ்சிப்பாட்டு)

 

காற்றில் அசைகின்ற மூங்கிலினிடத்து உள்ள தொளைகள் வழியாக, கோடைக் காற்று புகுந்து புறப் படுவதனால் குழலிசை தோன்றுகிறது; உயர் பாறையி லிருந்து கீழ் நோக்கிப் பாயும் அருவி நீர், கட்டப்பட்ட முழவின் இனிய இசையைத் தோற்றுவிக்கின்றது. கூட்ட மாக உள்ள கலைமான்களின்; கடிய குரல் பெருவங்கியம் போல் முழங்குகின்றது. மலைச் சாரலில் பூத்துக் குலுங்கும் மலர்களில் உள்ள தேன்நுகர் வண்டுகளின் ரீங்காரம் யாழிசை தோற்றுவிக்கின்றது.

 

ஒருநடன நிகழ்ச்சிக்குப் பின்னியம் (Back ground music) ஆக இவை அமைகின்றன.

இவ் இனிய இன்னிசைச் சூழலில் மயில்கள் தம் கலவம் விரித்து ஆடுகின்றன. ஆட்டத்தைக் கண்ட நல்ல மந்திகள் மருண்டு நோக்கினவாம். இத்தகைய வளம் செறிந்த மலைநாட்டுத் தலைவன் அவன்.

மேலே கூறப்பட்டுள்ள இயற்கைக் காட்சி, சங்கப் பாடல்கள் பலவற்றுள்ளும் காணப்படும் குறிஞ்சி நில வருணனையே.

என்றாலும் நுண்மாண் நுழை புலம் மிக்க இவ் வந்தணாளனைப் பற்றி மட்டும் "குறிஞ்சிக் கபிலன்" என்று ஏன் போற்றினார்கள்? அதற்கு ஏதாவது காரணம் இருக்கத் தானே வேண்டும்.

ஆழ்ந்து நோக்கினால் குறிப்பின்மூலம் தன் கருத்தைக் கவிதையில் வலியுறுத்துவார் இப்புலவர் பெருமகன் என்பதனை அறியமுடிகிறது.

இப்பாடலின் தனிச் சிறப்பு, காதல் என்பது ஒரு மன நிலை என்பதனையும் அது 'பொள்' எனத் தோன்றும் என்பதனையும் ஒரே சூழலில் பலர் இருப்பினும் குறிப் பிட்டவர்களையே அது தாக்குகிறது என்பதனையும் பிற்பகுதி எடுத்துக்காட்டுகிறது. இதில்கூட ஒரு நுண்மை யான குறிப்பு ஒன்று பெறவைக்கின்றார் கபிலர்.

இம் மலைநாட்டுத் தலைவன், அவனைக் கண்ட பெண்கள் அனைவரும் ஓரூர்க்காரர்களேயாவர். எனவே இத்தலைவி உள்ளிட்ட பலரும் இத் தலைவனை இதற்கு முன் பலமுறை கண்டிருக்கக் கூடும். ஆனால் இத்தனை தடவைகளிலும் அப்பெண்களுக்கோ அல்லது தலைவிக்கோ எவ்வித மனப்பேதலிப்பும் தோன்றியதில்லை.

வேட்டம் புக்க தலைவன் வேட்டம் புகு நாட்கள் தோறும் இவ்வழி உள்ளிட்ட பலவழிகளில் விலங்குகளைத் தேடிச் செல்வதுண்டு.

வழியில் நிற்பவர்களைக் காணின் தான் தப்பிய விலங்கு அவ்வழி போயிற்றோ என்று கேட்பதும் இயல் பானது தானே.

இதற்கு முன்னர்ப் பலமுறை கண்ட தலைவன்; பல நாளும் தலைவியின் உடன் வருகின்ற தோழியர், பலவகை களில் அவன் கேட்கும் வினா.

ஆனால் இதுவரையில் இல்லாத ஒரு புதுமை இன்று நிகழ்ந்துவிட்டது. தலைவி முழுமாற்றம் பெற்றுவிட்டாள்.

இது எப்படி நிகழ்ந்தது? தலைவி உள்ளிட்ட எவர்க்கும் இதற்கு விளக்கம் கூற முடியவில்லை. இப்படி திடீரென்று தோன்றுகின்ற ஒரு மன நிலையைக் காதல் என்று கூறினர் இத்தமிழர்.

 

இதுபற்றி இப்பாடல் பகுதியில் எவ்வித விளக்கமும் இல்லையே? இது நாமாக இட்டுக் கட்டிக் கொண்டு கூறுவதா? என்று சிலர் நினைக்கலாம். இதனை இவ்வளவு விளக்கமாகப் பாடினால் இவன் கவிஞனாகவே இருக்க முடியாது. அதிலும் சிறப்பாக கபிலனாக இருக்கமுடியாது என்றால் இவ்விளக்கத்தை எங்கே பெறுகிறோம்.

இயற்கை வருணனைக் கூறுகின்ற பொழுது ஓர் அற்புதமான சொல் பெய்து இத்துணைப் பொருளையும் நாம் பெறுமாறு செய்துவிட்டார் பொய்யா நாவிற் கபிலர்.

மூங்கிலிற் காற்றடிக்க குழலோசை பிறப்பதும், அருவியில் முழவோசை எழுவதும், வண்டு யாழ் செய்வதும் மயில் ஆடுவதும் என்றும் மலைச் சாரலில் நிகழ்வனவே.

தினமும் நடைபெறும் இந்த மயிலின் ஆட்டத்தை அங்கேயே வாழும் குரங்குகள் பார்ப்பதும் இயல்பே. இதனைத்தான் புலவரும் கூறியுள்ளார். என்றாலும் அன்றாடம் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இன்று ஒரு புதுமை புகுந்துவிட்டது. இதனை ஒரு சொல்லின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

'மந்தி மருள்வன நோக்க' என்ற சொற்களைக் கவனிக்க வேண்டும். மயிலின் ஆட்டத்தைத் தினமும் காண்கின்ற மந்திகளுக்கு மருட்சி எங்கிருந்து வந்தது? மருட்சி வந்தது என்று புலவர் கூறுவதால் அன்றாடம் போலன்றி இந்த மயில் ஏதோ ஒரு புதுமையான முறையில் ஆடுகின்றது என்று மந்தி தெரிந்து கொள்கிறது என்னலாம். வழக்கமான ஆட்டமாக இருந்தால் மகிழ்வது அன்றி மருள்வது ஏது?

இம் மருட்சிக்குக் காரணம் ஆட்டத்தில் நிகழ்ந்த புதுமை; புதுமை காரணமாக மருட்சி ஏற்பட்டது என்பது வெளிப்படை. இக் குறிப்பு பிற்பகுதியில் சொல்லப் பெற்ற கருத்திற்கு அங்குரமாக அமையக் காணலாம்.

அன்றாடம் காணும் தலைவன் உடன் இருக்கின்ற தோழிமார், எனினும் இன்று ஏதோ ஒரு புதுமை நிகழ்ந்து விட்டது. இன்று மருட்சி ஏற்பட்டது; தலைவிக்கு உறக்கம் போய்விட்டது.

இக் கருத்தை வலியுறுத்தும் வகையில் குறுந்தொகைப் பாடல் ஒன்று விளக்கம் தருகின்றது.

 

காமம் காமம்' என்ப; காமம்

அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்

கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை

குளகு மென்று ஆள் மதம் போலப்

பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே (குறுந்தொகை 136)

 

(காமம் காமம் என்று உலகினர் கூறும் அது தோன்றும் வருத்தமோ, பீடிக்கும் நோயோ அன்று. நுண்மையதாகி மிகுதலோ குறைதலோ இல்லாதது. தழை உணவை மென்று தின்று அதனால் யானை மதம் கொள்வது போல கண்டு மகிழ்வாரைப் பெற்றால் வெளிப்படும் செவ்வியையும் உடையது.)

இப்பாடலில் காமம் என்ற சொல்லிற்கு இன்று நாம் கருதும் பொருள் தந்து இடர்ப்படக் கூடாது. சங்க காலத்திலும் காமம் காதல் என்பவை ஒரே பொருளுடைய பரியாயச் சொற்களாய் வழங்கப்பட்டன.

யானை தின்பது பச்சை நிற அதிமதுரத் தழை. இதன் பயனாக விளைவது மதம். அது கரு நிறத்தது. மரத்தின் தழைகள் அம் மரத்திற்கு எவ்விதமான மாற்றத்தையும் தருவதில்லை. தழையைத் தின்று முடிக்கும் வரையில் யானை எவ்வித மாற்றமும் பெறுவதில்லை. யானை மட்டுமா, பிற விலங்குகளும் அல்லவா தின்கின்றன. அவை எவ்வித மாற்றமும் பெறுவது இல்லையே.

தினமும் உண்ணும் அத் தழையால் ஏதோ ஒருநாள் மட்டுமே அது மதம் பெறுகின்றது.

எனவே குளகிற்கும், மதத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்று விளங்கிக் கொள்ள முடிவதில்லை.

அது போலவே பலமுறை காணும் தலைவனை ஏதோ ஒருநாள் கண்ட போது தலைவிக்கு மனமாற்றம் ஏற்படு கின்றது. தலைவனுக்கும் இந்த மனமாற்றத்திற்கு அவர்கள் சந்திப்புதான் காரணம் என்று சொல்லமுடியாது. ஏன்? பலமுறை சந்தித்தவர்களேதாம். ஆனால் இன்றுதான் அவர்களுக்குள் இம் மனமாற்றம் நிகழ்கிறது.

இது எது போலத் தெரியுமா? தழையைப் பலகால் தின்றாலும் ஏதோ ஒருநாள் யானைக்கு மதம் ஏற்படு கின்றதே அதுபோல. எனவே இத்தொடர்பை நம்மால் பூரணமாக விளங்கிக் கொண்டு சொல்லமுடியாது என்ற கருத்தை மிளைப் பெருங்கந்தன் இப்பாடலில் பாடியுள்ளான்.

 

இதே புலவன் குறுந்தொகை பாடலில்,

 

காமம் காமம்' என்ப; காமம்

அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,

முதைச்சுவல் கலித்த முற்றா இளம்புல்

மூதா தைவந் தாங்கு

விருந்தே காமம் பெருந்தோளோயே! (குறுந்தொகை-204)

 

(காமம், காமம் என்று உலகினர் குறிப்பிடும் அது வருத்தமோ, நோயோ அன்று. மேட்டு நிலத்தில் தழைத்த முதிராத இளைய புல்லை முதிய பசு நாவால் தடவி இன்புறுவது போல நினைக்கும் காலத்து புதிய இன்பத்தைத் தருவதாகும்.)

என்று கூறுகின்றான்.

இவ்விரு பாடல்களில் முதல் இரு அடிகள் ஒத்தனவே. இவ்வாறு கூறுகின்றதனால் ஒரு கருத்தைப் பெற வைக்கின்றான்.

தொல்காப்பியம் தொடங்கி இக்காலம் வரை அகத் துறை பற்றிப் பெரிய இலக்கியங்களும், பல்வேறு பாடல் களும் தோன்றியிருப்பினும் பலரும் அதனை நன்கு புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் போலும் 'காமநோய்' என்றும் கூட அக்காலத்திலேயே கூறினர்.

இப்படித் தவறாக நினைக்கக் கூடாது என்று கருதியே போலும் புலவர் இரு பாடல்களிலும் காமம் என்பது நம்மை வருத்தும் அணங்கோ பிணியோ அன்று எனக் கூறுகின்றான்.

முதற்பாடலில் யானை, குளகு என்று உவமையைக் காட்டி உரியவர்களை உரிய காலத்தில் கண்டால் (காணு நர்ப் பெறினே) இம் மனநிலை தோன்றும் என்கிறான்.

இரண்டாம் பாடலில் இன்னும் செறிவாக ஒரு கருத்தைப் பெற வைக்கின்றான். பின் மூன்றடிகளில் இளம்புதல், மூதா, விருந்து என்ற மூன்று காணப்படு கின்றன.

மூதா கூறினமையின் அந்தப் புல்லைப் பற்றிக் கறித்து மென்று தின்னும் நிலை மறுக்கப்படுகின்றது.

முற்றா இளம்புல் என்பதனால் அதற்குரிய பக்குவம் கூறப்படுகின்றது. அதனை உண்ணாமல் தைவரல் என்பது காதல் என்பது உடலுறு புணர்ச்சியைக் காட்டிலும் உள்ளப் புணர்ச்சியையே குறிகின்றமை தெளிவு.

உண்மையான காதலில் அன்றாடம் புதுமை தோன்றும் என்பதனை 'விருந்தே காமம்' என்பதன் மூலம் பெற வைக்கின்றார்.

கபிலன், மிளைப் பெருங்கதன் ஆகியோர் பாடல் களில் சொல்லப் பெற்ற கருத்துகள் ஏறத்தாழ 28 அடிகளில் பேசப்பட்டுள்ளன.

கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டவல்ல வள்ளுவப் பேராசான் தன் ஒரு குறட்பாவில் இத்துணைக் கருத்துக்களையும் பெய்து காட்டுகிறார்.

 

மலரினும் மெல்லிது காமம்; சிலர் அதன்

செவ்வி தலைப்படு வார். (குறள்-1289)

 

இக்குறட்பா ஆழமான பொருட் செறிவு உடையது.

மலர் என்ற சொல்லால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதற்கு அமைந்து உள்ள பெயரைக் குறிப்பிடுகிறார்.

அரும்பு, முகை, போது என்பன இதற்கு முன் நிலையைச் சுட்டுவன. வீ, செம்மல் என்பன பின் நிலையைக் காட்டுவன.

எனவே மலர் என்பதால் காதற்குரிய பக்குவத்தை அறிய வேண்டும் என்று நினைவூட்டுகிறார். மேலும் மெல்லிது என்று குறிப்பிடுவதன் வாயிலாய் இம்மன நிலையைத் தெரிந்துகொள்ளா விட்டால் காதல் சாதலாகி விடும் என்பதனையும் பெற வைக்கிறார்.

இரண்டாம் அடியில் செவ்வி (பக்குவம்) என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் இது மன நிலையையே குறிப்பிடும் என்று வலியுறுத்துகின்றார்.

மலரின் பல்வேறு நிலைகளை அறியாமல் பெரும் பான்மையர் அரும்பு முதலாக செம்மல் ஈறாக உள்ள எல்லா நிலைகளையுமே மலர் எனக் கொள்கின்றனர்; கூறுகின்றனர்.

அதே போல் காதல் என்பதன் உண்மைப் பொருள் அறியாதவர்கள் அது ஒரு வகை மனநிலை என்று உணர மாட்டாமே எல்லாவற்றையும் இச்சொல்லால், குறிப்பிடு கின்றனர்.

இதனை வலியுறுத்துவதே,

 

"சிலர் அதன் செவ்வி தலைப் படுவார்" என்ற தொடர்.

 

மனநிலை மாற்றத்திற்கு உரியது.

 

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குரியது.

 

ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில், ஒரு குறிப்பிட்டவரைக் காணும்பொழுது அமைவது என்பன போன்ற கருத்துக் களையெல்லாம் மேற்காட்டப் பெற்ற குறட்பா விளக்குகிறது.

 

இக்குரட்பா, (குறுந்தொகை) மிளைப் பெருங்கந்தனின் பெருந்தொகை விளக்கம் என்னலாம்.

 

இதே போலவே குறுந்தொகை 204ஆம் பாடலின் விளக்க உரையாக அமைவது.

 

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு. (குறள்-110)

 

என்ற குறட்பாவாகும்.

 

'விருந்தே காமம்' என்று கவிஞன் அன்றாடம் விளை கின்ற புதுமை குறித்துப் பேசுகின்றான்.

 

வள்ளுவர் மனித மனநிலையின் (Human Psychology) நுண்மை அறிந்து, மிளைப் பெருங்கதன் பாடலை வேறுவிதமாகக் காண்பிக்கிறார்.

 

மனித உளவியல் வல்லுனரான வள்ளுவர் அறிதோறு அறியாமை கண்டற்றால் என்று கூறும்பொழுது 'பலகாலம் இத்தலைவியின் உடன் வாழ்ந்தும் நேற்று இந்தப் புதுமை யைக் காணவில்லையே' என்றும் வியக்கும் தலைவனின் மன நிலையைக் குறிப்பிடுகின்றார்.

 

இன்னும் ஒருபடி மேலே சென்று பலகாலம் ஒன்றித்து வாழும் தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் பரிபூரண மாக அறிந்துகொண்டதாக நினைக்கும்பொழுதுகூட அது பூரணத்துவம் அடைவதில்லை என்று உணர்வர். இதனையே,

 

'அறிதோறும் அறியாமை கண்ட அத்தன்மை போல்'

 

என்று பேசுகிறார்.

 

அறிவு வளரும் இயல்புடையது. எனவே நேற்றைவிட, இன்றும், இன்றைவிட நாளையும் வளர்கின்ற தன்மையது.

 

அதனால் இன்றைய அறிவு வளர்ச்சியால் நேற்றைய நாம் அறியாமையை அறிய முடிகின்றது.

 

இவ்வாறு கூறுவதன்மூலம் எத்துணை ஆண்டுகள் ஆனாலும் காதலில் தோன்றும் புதுமை, முதல் நாள் அறியாமையை அறிவிக்கின்றது என்று பெற வைக்கின்றார்.

இந்தக் குறட்பாவை இன்னமும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஐம்பதாண்டுகள் இல்லறம் நடத்தி உடல் தளர்ந்த நிலையில் உள்ள தலைவன் தலைவியர் உடலுறவின் மூலம் புதிய இன்பத்தைக் காண முடியுமா? நிச்சயமாக முடியாது.

அப்படியிருக்க, காமம் செறிதோறும் சேயிழையார் மாட்டு அறிதோறும் அறியாமை கண்ட அற்று (அத் தன்மையது) என்று இப்பேராசான் பாடுவானேயானால் நிச்சயமாக இவன் இணை விழைச்சைக் குறிக்கவில்லை என்பது தெளிவு என்று அறிய முடியும்.

எனவே இத்தமிழர் கண்ட காதல், காமம் என்பன உலகின் பிறநாட்டார் கனவினும் சிந்திக்காத ஒன்று; ஓர் ஒப்பற்ற கருத்து என்று முன்னர்க் கூறியது இப் பாடல் களால், (அகம், குறுந்தொகை, திருக்குறள்) தந்துள்ள விளக்கங்களால் வலியுறுத்தப் பெறல காணலாம்.

 

வீட்டு ஆட்சி அவளுடையதே!

 

இத்துணையளவு பண்பட்டுவிட்ட தலைவன், தன் மனத்துக்கிசைந்த மங்கை நல்லாளுடன் இல்லறம் தொடங்குகிறான். வீட்டு வாழ்க்கையில் நல்ல அனுபவம் பெற்ற தமிழர் தலைவனுடைய உரிமைக்கும் அதிகாரத் திற்கும் வரம்பு கட்டினர். வீட்டினுள் தலைவன் தலைவி என்ற இருவர் இருப்பதால் கொண்டு செலுத்தும் உரிமை யாருடையது என்ற வினாத் தோன்றுமன்றோ? இருவரும் அதிகாரம் செலுத்தத் தொடங்கினால் அது இரட்டை ஆட்சியாக (Dual Government) மாறித் தீமை பயக்குமே தவிர நன்மை பயவாது. எனவே, பெருமையும் உரனும் தன்னியல்பாகக் கொண்ட தமிழ் மகன், வீட்டு ஆட்சியைத் தலைவியிடம் ஒப்படைத்து விட்டான். அதனால், அவளுக்கு இல்லாள் என்ற பெயர் தோன்ற லாயிற்று. எல்லாப் பெண்பாற் பெயர்கட்கும் ஆண்பாற் பெயர் ஒன்றாக கூறும் தமிழ் மொழியில் இல்லாள் என்பதற்கு ஏற்ற ஆண்பாற்பெயரே இல்லாது போயிற்று. இது எதனை உணர்த்துகின்றது? வீட்டைப் பொறுத்தவரை அவளே அரசி என்பதையும் வீட்டினுள் தலைவனுடைய அதிகாரம் செல்வதில்லை என்பதையும் உணர்த்துகின்ற தன்றோ? ஆண்மகன் தன் மதிப்பை இன்னுங் கொஞ்சம் விட்டுக் கொடுத்துவிட்டான். வீடு வைத்தமையின் அவனுடைய அகங்காரம் பெரும்பகுதி அழியத் தொடங்கி விட்டது. அகங்காரம் அழியத் தொடங்கவே, அன்பு வளரத் தொடங்குகிறது. தன்னைப் பற்றி மட்டும் அன்பு கொண்டிருந்த தலைவனுக்குத் தன்னையல்லாத கொண்டிருந்த தலைவனுக்குத் தன்னையல்லாத பிறரிடமும் அன்பு செய்யும் வாய்ப்பைத் தேடித்தந்தது குடும்பமே யன்றோ?

 

அன்பின் விரிவு

 

தலைவியினிடம் சென்ற அன்பு, பின்னர் அவளுடைய உயிர்த்தோழி, தாயார், சுற்றத்தார் எனப் பலரிடத்தும் பரவுகின்றது. இதனையடுத்துத் தனக்குப் பிறக்கும் குழந்தைகளிடம் அன்பு விரிகின்றது. இந்த அளவுவரைத் தலைவனுடைய அன்பு விரிந்து அகங்காரம் குறைந்தது உண்மைதான். ஆனாலும், பிறருக்காகத் தன்னலத்தை முழுவதும் விட்டுக் கொடுக்கும் சந்தருப்பம் இன்னும் ஏற்படவில்லை. எனினும், குடும்பத் தலைவன் ஆனவுடன் புதிய கடமைகள் தோன்றுகின்றன அவனுக்கு!

தான் குடும்பம் வைத்தது தன்னுடைய இடையறா இன்பத்தின் பொருட்டே என்று நினைத்தான் தலைவன்; ஆனால், இப்புதிய கடமைகள் தன்னுடைய இன்பத்திற்கு இடையூறாய் நிற்றலைக் கண்டான். ஒரு பெரிய போராட் டம் நிகழ்கின்றது. அவன் ஓயாது வேண்டி நிற்கும் இன்பத் திற்கும் அவனைப் பிடித்து உந்தும் கடமைக்கும் இடையே பெரும்போராட்டம் நிகழ்கிறது. கடமையை நிறைவேற்ற வேண்டுமாயின், அருமைக் காதலியைப் பிரிந்து செல்ல வேண்டிய கடப்பாடு ஏற்படுகிறது. என்ன செய்வான் தலைவன்! பலநாள் அதுபற்றிச் சிந்திக்கின்றான். இறுதி யாகக் கடமை உணர்வே என்சுகின்றது. இல்லறம் நடத்து வதன் பயன் இத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதே என்பதை அறிகின்றான். மேலும், இக்கடமைகளை நிறைவேற்றுவதே என்பதை அறிகின்றான். மேலும், இக்கடமைகளை நிறை வேற்றுவதில் அவன் புதியதோர் இன்பத்தைக் காண் கிறான். தலைவியுடன் உரைவதே இன்பம் என்று நினைத்திருந்த தலைவனுக்கு இவ்வின்பம் புதுமையாய் உளது. அவன் தனது இன்பத்தை விட்டுக் கொடுத்துப் பிறருக்கு மகிழ்வூட்டப் பழகுகிறான். இதனால், மேலும் அவனுடைய மனம் விரிவடைகின்றது.

 

குறிக்கோள் மாற்றம்

 

இவ்வாறு பிறருக்காக வாழ்வதில் இன்பங் காணத் தலைப்படுவதால் விரிவடைந்த அவனது மனம், தன் குடும்பம், சுற்றம், அண்டை விட்டார், தெருவார், ஊரார், நாட்டார் என்ற முறையில் விரிந்துகொண்டே செல்கிறது. இறுதியில் அவன்,

 

யாதும் ஊரே; யாவரும் கேளிர் (புறம-192)

 

என்ற உணர்வைப் பெறுகின்றான். இதுவே மனிதன் பெறுகின்ற முழு வாழ்வாகும். தன்னல வடிவாய் இருந்த மனிதனைப் பிறர் நலம் பேணும பெருந்தகையாக மாற்றியது இல்லறம் என்னும் நல்லறம். தான் பெரும் இன்பம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்த மனிதனுக்கு அக்குறிக்கோள் நாளாவட்டத்தில் மாறத் தொடங்குகிறது. நல்ல முறையில் இல்லறம் நடத்திவரத் தொடங்குகையில் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் ஆவதே அவனது குறிக்கோளாக மாறிவிடுகின்றது. இத் தகைய உயர்ந்த பண்பை அகவாழ்வு நல்குவதாலேதான் புரத்தைவிட அகத்திற்கு அதிக மதிப்புத் தந்தனர் தமிழர்.

இல்லறத்தின் பயன் தன்னலத்தை ஒழித்து வாழ்தலே என்பதைக்கண்டோம். தன்னலம் சிறிது ஒழியத் தொடங்கு கையில் அவ்விடத்தில் அன்பு பிறக்கின்றது என்பதையும் கண்டோம். இறுதியாக அவனுடைய குறிக்கோள் மாறு பட்டுத் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாக மாறும் பொழுது அன்பு என்ற சிறிய பொருள் இருந்த அவன் உடைய மனத்தில் 'அருள்' என்னும் புதிய ஒளி தோன்றுகிறது. தொடர்புடையாரிடம் மட்டுஞ் செல்வதை அன்பு என்றும், தொடர்பில்லாதாரிடத்துஞ் செல்வதை அருள் என்றுங் கூறுவார். இல்லறத்தால், அகவாழ்வால் கிடைக்கும் இவ்வருட் பெருக்கத்தைப் பொது மறையாசிரியர்,

 

அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்

செல்வச் செவிலியால் உண்டு. (குறள்-757)

 

என்று குறிக்கிறார்.

 

மனிதன் முழு வாழ்வு பெறும்பொழுது அருள் அவனிடம் முழுவதும் நிறைந்து விடுகிறது. அகவாழ்வு வாழாமலும் ஒரு சில பெரியவர்கள் அருள் வாழ்வைப் பெறுவதுண்டு. இத்தகையார் விதிவிலக்கேயாவர். இவர் களைக் கொண்டு அனைவருக்கும் இது இயலுமென்று நினைத்துவிட வேண்டா. அகவாழ்வு மனிதனை முழு வாழ்வு வாழப் பழக்குகிறது என்பது பொதுச் சட்டம். சட்டத்திற்கு விதி விலக்காகச் சிலர் அமைந்துவிடுவதால், சட்டம் பொய் என்று ஆகி விடுவதில்லை. அவ்விதி விலக்கே சட்டத்தை நிலைநாட்டப் போதிய சான்றாகும்.

 

இதுகாறும் அகத்திணை வாழ்வின் அடிப்படைத் தத்துவம் யாதென்பதைக் கண்டோம். இத்துணைச் சிறந்த தத்துவங்களையும் மனத்துட் கொண்டு திருவள்ளுவர் தம்முடைய ஒப்பற்ற திருக்குறளில் அகவாழ்வு பற்றி விரித்துப் பேசுகிறார். அதனையும் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும். நீதிநூல் ஆகலின், குறள் சிறந்த இல்லறம் அமையவேண்டிய அடிப்படைத் தேவைகளை யும், அத்தேவைகள் நிரம்ப ஏற்ற வழிகளையும் மட்டும் கூறிச் செல்கிறது. இலக்கியங்களிற் காணப்படுவதுபோல, தலைவர் தலைவியருடைய வாழ்வு எங்ஙனம் அமைய வேண்டும் என்பதைக் குறள் விரித்துக் கூறுவதைக் காணலாம்.

 

 

2. வள்ளுவர் கண்ட அகவாழ்வு

 

மருதத்திணை வளர்ச்சி

மனிதன் ஆதியில் பச்சை இறைச்சியைத் தின்று பல காலம் வாழ்ந்தான்; அதன் பின்னர்ப் பல்லாயிரம் ஆண்டு கள் கழித்துச் சில விலங்குகளைப் பிடித்துப் பழக்கித் தனக்கு வேலை செய்ய அவற்றைப் பயன் படுத்தினான். இதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்துத்தான் 'குடும்பம்' என்ற ஒன்றை வைத்து நிலையான வாழ்க்கை வாழத் தொடங்கினான். இக் குடும்ப வாழ்க்கையிலேதான் தமிழ் இலக்கணங்கூறும் 'மருதத்திணை' தோன்றலாயிற்று. மருதத் திணையில் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ வழி வகுத்துக் கொண்டன. இப்பொழுதுதான் மனிதனுடைய சமுதாய வாழ்க்கை (Social life) தொடங்கிற்று. இத்தகைய வாழ்க்கையில் பல அல்லல்களும் உடன் தோன்றின. நன்மையையும் தீமையுங் கலந்துதானே உலகம் வாழ்கிறது! இதுவரை ஒருவரைப் பற்றியுங் கவலை கொள்ளாமல் தன் நலன் ஒன்றையே கருதி வாழ்ந்த மனிதனுக்கு, இப்பொழுது புதிய அனுபவங்கள் தோன்றலாயின. இவற்றில் ஓரளவு மகிழ்ச்சியும் ஓரளவு வெறுப்புங் காணலாயினான் மருதநில மனிதன். தன்னுடன் வாழ்வை நடத்த வந்துள்ள ஒரு பெண்ணின் நலத்தீங்குகளில் தானும் பங்கு கொள்ளத் தொடங்கியதே அவனது புதிய அனுபவம். மேலும், வீட்டினுள் தங்கியிருக்கும் அவளுக்கும் சேர்த்து உணவு தேடவேண்டிய பொறுப்பும் அவனதா யிற்று. நாளாவட்டத்தில் அவர்கள் வாழ்வின் பயனாகத் தோன்றியுள்ள புது உயிர்கட்கும் உணவு சேகரிக்க வேண்டிய கடமை அவனதாயிற்று. இக் கடமைகளில் ஓரளவு மகிழ்ச்சி இருந்ததை அம மனிதன் உணராமற் போகவில்லை. இம் மகிழ்ச்சியே உலகிடை மனிதன் சமுதாய வாழ்க்கை வாழ வழி செய்தது. தனிக் குடும்பங்கள் பல ஓரிடத்தில் தங்கி வாழ வேண்டுமாயின், ஒவொருவரும் தம் உரிமையைச் சிறிது இழக்கத்தான் வேண்டும். சுதந்தரத்துடன் வாழ்ந்து பழகிய மனிதனுக்குத் தன் விருப்பம் போலச் செயல் செய்யும் உரிமை, சிறிது குறைந்தாலும் அதிக மனக் கசப்புத் தோன்றத்தானே செய்யும்? அவ்வித நிலைமையிலிருந்து அவன் விடுபட ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழிதான் ஊர் முழுவதையும் ஒரு குடும்பமாக நினைத்து வாழும் முறை. இவ்வித வாழ்க்கை முதலில் வருத்தத்தைத் தரும் ஒன்றாயினும், நாளடைவில் ஓர் இன்பத்தையும் தரலாயிற்று. பிறர்க்கென வாழும் வாழ்க்கையில் ஒப்பற்ற இன்பம் இருத்தலை உணரத் தலைப்பட்ட அன்றுதான் மனிதன் விலங்கிலிருந்து வேறு பிரிந்து வாழ்ந்தான் என்று கூற வேண்டும்.

 

இரு வகை அறம்

 

மேற்கூறிய முறையில் ஒரு சமுதாயம் அமைய வேண்டும். ஆனால், சுலபமாகக் கூறிவிட்டோமே தவிர, வாழ்க்கையில் இந்நிலை அமையப் பலகாலம் செல்லும். இத்தகைய சமுதாயத்தை அமைக்கவே குறள் அடிகோலிற்று. உலகிடைப் பிறந்த ஒவ்வொருவனும் வாழ உரிமை பெற்றவன்தான். அவ்வாழ்க்கை எத்தகையதாக அமைதல் வேண்டும்? இல்வாழ்க்கை என்று கூறப்பெறும் இருவர் கூடி வாழும் வாழ்க்கையும், துறவறம் என்று ஒருவனே வாழும் வாழ்க்கையும் உலகிடை உண்டு. இவ்விரு வகையினுள் எதனைக் குறள் போற்றிக் கூறிற்று? இவ்வினாவிற்கு விடை பலர் பலவாறாகக் கூறினர். ஆனால், இவை இரண்டின் அடிப்படையையும் நன்கு ஆய்ந்தால், சில உண்மைகள் நன்கு விளங்கும். துறவி எதன்பொருட்டு வாழ்கிறான்? தன் ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு என்று கூசாமல் விடை கூறலாம். ஆனால், இல்வாழ்வான் தன் வாழ்வோடு, பிறர் வாழ்வையும் பயனுடையதாகச் செய்யவே வாழ்கிறான்.

 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை (குறள்-41)

 

என்பது குறள். எனவே, இரு பயன் எய்த வாழும் இல் வாழ்கையே வள்ளுவர் பெரிதும் விரும்புகிறார் என்பதில் ஐயமின்று. இது கருதியே அவற், 'அறன்' எனப்பட்டதே இல்வாழ்க்கை என்று கூறுகிறார். இல்வாழ்க்கை என்ற ஒன்றாலேயே உலகம் நன்கு வாழமுடிகிறது. தான் ஒருவன் மட்டும் வாழ வழி செய்யும் துறவறத்தைக் காட்டிலும் இல்லறத்தையே இத்தமிழ்ச் சமுதாயம் பெரிதும் விரும்பியது. அது கருதியே போலும் இறைவனைக்கூட 'அம்மையப்ப' னாக இச்சமுதாயம் கண்டது! மேலும், இயற்கையோடு ஒன்றிய வாழ்வு நடத்துதலே மனிதனுக்கு ஏற்றது. இயற்கை வெள்ளத்தை எதிர்த்து நீந்திச் செல்லுதல் என்பது ஒரு சிலருக்கு ஒல்லுவதே தவிர, அனைவரும் செய்தற்கு ஏற்றதன்று. மேலும், பலருடைய நன்மை கருதி வாழும் ஒரு வாழ்க்கை, தன் நன்மை ஒன்றையே கருதி வாழும் வாழ்க்கையைவிடச் சிறந்தது என்பதில் தடை என்னை? அன்றியும், உயிர் வாழ்வின் அடிப்படையில் அமைந்திருப்பது 'அன்பு' என்ற ஒன்றாகும். அதன் இன்றி யமையாமை பற்றிப் போலும் ஓர் அதிகாரமே வகுக்கிறது குறள். அனுபுடைமை அத்துணைச் சிறந்ததாயின், அதனை வளர்க்கும் வழி என்ன? இல்வாழ்க்கையைவிட அன்பை வளர்க்கும். உறுகருவி ஒன்று உண்டோ? இவை எல்லாவற்றையும் ஊன்றி நோக்கின், 'அறன்' எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்பதன் பொருள் ஆழம் விளங்காமற் போகாது.

 

அறம் என்பது யாது?

 

மேல் அதிகாரத்தில் அறத்தின் சிறப்பையும், உயிர்கள் அறஞ்செய்யவேண்டிய இன்றியமையாமையையும் நன்கு வலியுறுத்தினார். 'செயர்பாலது ஓரும் அறனே, அறத்தான் வருவதே இன்பம்,' என்றெல்லாம் கூறி, அறன் வலியுறுத்தி னால், 'அறன் என்பது யாது?' என்ற வினாத் தோன்றத் தானே செய்யும்? அவ்வினாவிற்கு விடை கூறுவார் போல 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்கிறார் ஆசிரியர். 'எனப்பட்டது' என்று கூறுவதால் 'அறம்' என்றாலும் 'இல்வாழ்க்கை' என்றாலும் ஒன்றே என்பதைப் பெற வைக்கிறார். இவை இரண்டும் ஒரு பொருள் குறித்த இரு சொல் என்ற பொருளும் அங்குக் காண்க. இனியும் ஐயப்படுவார் இருப்பின், அவர் தம் ஐயத்தினையும் அறுத்தற்கு 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது,' என்ற குறளால் இல்வாழ்வின் பயன் அறமாகும் என்றும் கூறினார். 'இல்வாழ்வு' அல்லது 'அறம்' என்னும் பயன் விளைய வேண்டுமாயின், ஒரு பண்பு வேண்டும்; அதுவே அன்பு என்பது. அன்பு என்னும் பண்பு அறம் என்னும் பயனை விளைக்கிறது. வேறு ஒரு வகையாகக் கூறுமிடத்து அன்பினில் அறம் தோன்றுகிறது என்னலாம். அன்பில்லா விடத்து அறம் தோன்றாது. அன்பு, இல்வாழ்வில் தோன்றும் என்றால், அறமும அங்கேதானே தோன்றும்? எனவே, எவ்வகையில் கண்டாலும் சமுதாய வளர்ச்சிக்குக் காரணமான இல்வாழ்வையே வள்ளுவர் போற்றிக் கூறுகிறார் என்பது நன்கு விளங்கும். இனி, அதுவே உலகிடை வாழும் வாழ்க்கையில் சிறந்தது என்பதை வேறொரு வகையிலும் கூறுகிறார். 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை,' என்று கூறிய குறளின் அடுத்த பாடலாகக் காட்சியளிப்பது எது? 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்' என்ற அருங்கருத்தன்றோ? வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் என்பது இல்லறத்தில் நிற்றலே என்பதற்குப் பரிமேலழகரும் 'இல்லறத்தோடு கூடிவாழும் இயல்பினால்' என்றுதானே பொருள் கூறுகிறார்? இதுகாறுங் கூறியவாற்றான் வாழ்க்கையில் செம்மையானது இல்லறமே என வள்ளுவர் கருதிக் கூறியது அறியப்படும். இனி அவ்வில்லறம் அமைய வேண்டும் முறைபற்றிக் காணலாம்.

 

அன்பில்லாத இல்லறம்

 

குறள் கண்ட செம்மையான வாழ்க்கை இல் வாழ்க்கையே என்பதைக் கண்டோம். இல்வாழ்க்கை என்று கூறினவுடன் எத்தனை குடும்பங்கள் மனக்கண்முன் தோன்றுகின்றன! ஆம்! பொருந்தாக் குடும்பங்களைத் தான் கூறுகிறேன். 'வற்றல மரம் அனையானுக்கு இந்த மானை வகுத்திட்ட பிரமனை யான் காணப்பெறின் - அற்ற தலை போக அறாத தலை நான்கினையும் பற்றித் திருகிப் பறியேனோ!' என்று ஔவைப் பாட்டி பாடினா ளாம் ஒரு பொருந்தாக் குடும்பத்தைப் பார்த்து விட்டு. பாவம்! பாட்டி இக்காலத்தில் இருந்திருந்தால் முற் பகுதியைப் பன்மையாக வைத்தன்றோ பாடியிருப்பாள்! அமெரிக்காவைச் சற்றுப்பாருங்கள்! ஆம்! பணத்தில் புரண்டு ஒப்பற்ற கொழுப்பில் கூத்திடும் அமெரிக்காதான்! மூன்று திருமணங்களில் இரண்டு வீதம் திருமண விடுதலை பெருகின்றனவாம்! ஏன்? வாழ்க்கையின் அடிப் படை தெரியாமையாலேதான். 'அன்பும் அறனும் உடைத்தாயின்' அன்றோ அது இல்வாழ்க்கை எனப்படும்? இவை இரண்டும் சிறு அளவும் இல்லாது நடைபெறும் வாழ்க்கையை என் என்பது? அது ஒரு வகைக் கூட்டு வியாபாரம். ஆனால், வாணிகங்கூட இருவர் சேர்ந்து நடத்துவதானால், ஓரளவு ஒத்து நடக்கும்; அன்பு இல்லையேல் முறியும். அங்ஙனம் இருக்கக் குடும்பம் எவ்வாறு நடைபெறும்.

 

எத்தகைய மனைவி?

 

வள்ளுவர் இல்வாழ்க்கை இன்றியமையாதது என்று கூறிவிட்டமையின் இல்வாழ்வில் ஒருவன் ஈடுபடத் தொடங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். எப்படிப் பட்ட மனைவி இருந்தால் இல்வாழ்வு நன்கு நடைபெறும் என்பதை ஆராய வேண்டாவா? ஆராயாது ஒரு செயலைச் செய்தல் பேராபத்தில் அன்றோ கொண்டு விடும்? நட்புச் செய்தலைக்கூட ஆராயாமல் செய்தல் ஆகாது என்கிறார் ஆசிரியர். வேண்டாவிட்டால் விட்டு விட்டு ஓடிவிடக்கூடிய நட்பிற்கே 'நாடாது நட்டலிற் கேடு இல்லை,' என்றால், விட்டு ஓட முடியாத இல்வாழ்விற் புகுவான் எவ்வளவு ஆராய வேண்டும்? ஆகவே, 'எத்தகைய மனைவி வேண்டும்?' என்ற வினாவிற்கு அவரையே விடைகேட்டல் நலம் தரும். 'மனைத்தக்க மாண்புடையாளாகி' அவள் இருத்தல் வேண்டும் என்கிறார். மனை வாழ்க்கைக்கு ஏற்ற மாண்புகள் பலவற்றுள்ளுஞ் சிறந்தது 'கற்பு' என்ற ஒன்றன்றோ? கற்பு என்பது என்ன? விடை விரியு மாயினும், சுருங்கக் கூற வேண்டுமாயின், ஒரு குரளே போதுமானது.

 

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் (குறள் - 66)

 

என்பதே கற்பின் விரிவுரை. இவை அனைத்துஞ் செய்யக் கூடியவளே பெண் என்றால், இத்தகைய பெண்ணே இல்வாழ்விற்கு உகந்தவள் என்பது கூறவும் வேண்டுமோ?

 

பெண்ணின் புற இயல்புகள்

 

இவ்வளவு சிறப்பும் அமைந்திருப்பினும், அப் பெண் வேறு ஓர் இயல்பும் உடையாளை இருத்தல் வேண்டும் அதுவே குடும்பம் நடத்தும் முறை. இதனைச் சுருக்கமாகத் 'தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை,' என்று குறள் கூறுகிறது. 'வளத்தக்காள்' என்பதற்குக் கணவன் வருவாய்க்கேற்ப வாழ்வு நடத்துபவள் என்பதே பொருள். எவளோ ஒரு பெண்ணை எவனோ ஓர் ஆண்மகன் மணந்துகொண்டு வாழ்தல்தான் இல்வாழ்க்கை என்ற எண்ணம நம்மில் பலர் உள்ளத்தில் தோன்றி யிருக்கிறது. ஆனால், வள்ளுவர் வகுத்த வாழ்க்கை முறையில் காட்சி தரும் பெண், மேற் கூறிய இலக்கணம் அமைந்தவளாக இருத்தல் வேண்டும். 'இத்தகைய பெண் கிடைத்து வாழ்வு நடத்துகையில் வேறு எது இருந்தால் என்ன?' இல்லாவிட்டால் என்ன என்ற எண்ணம தோன்றத்தான் செய்யும்! இங்ஙனம் குரளாசிரியர் மனத் திலும் தோன்றியிருக்கும் போலும்! அதனாலேயே அவர்,

 

இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்

இல்லவள் மாணாக் கடை (குறள்-63)

 

என்று வினவுகிறார். இதே கருத்துப் பிற்காலத்திலும் பேசப் படுகிறது. 'இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றில்லை,' என்பது போன்ற உரைகள் இக் கருத்தை வலியுறுத்தல் காண்க. இதே கருத்தை மேனாட்டுக் கவிஞரான 'போப்பு' என்பவர்,

 

'All other goods by fortune's hands are given

A wife is the peculiar gift of heaven.'

 

என்று கூறுதல் காண்க. பழைய விவிலிய வேத நூலும் 'A Virtuous woman is a crown to her husband.' என்றே கூறுகிறது.

 

நுண்ணிய கருத்து.

 

இத்துணைச் சிறந்த மனைவியை ஒருவன் பெற்றுக் குடும்பம் நடத்தத் தொடங்கியவுடன் இல்லறம் என்னும் நல்லறம் நன்கு நடைபெற்றுவிடும் என்று கூறிவிட முடியுமா? இவ்வறத்தின் அடிப்படை அறியப்படாவிடின் வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நடைபெறுமா? பின்னர் அடிப்படை எங்கே உளது? மனிதன் குடும்ப வாழ்விலும், சமுதாய வாழ்விலும் சிறப்படைய வேண்டுமாயின், அதற்கு அற அடிப்படை தெரிந்து இருத்தல் வேண்டும். அந்த அடிப்படையைக் குறள் 'அறன் வலியுறுத்தல்' என்ற அதிகாரத்திலே சொல்லிச் செல்கிறது.

 

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற. (குறள்-34)

 

என்ற குறளே அடிப்படை. இதனைக் கூறாதார் இல்லை. ஆனால், இவ்வடிப்படையில் வாழ்வாரைக் காண்டலே அருமையினும் அருமை! அறம் என்று கூறினவுடன் அஞ்சிவிட வேண்டா; மனம் தூய்மையாக இருத்தலே அறம் என்று கூறுகிறது இக் குறள். இதைவிட எளிமையாக அதைப்பற்றிக் கூறல் இயலாது. 'தருமத்தைச் செய்', என்று கூறும் வாழ்க்கை முறையைக்காட்டிலும் இது எவ்வளவு உயர்ந்தது என்பது கூறவும் வேண்டுமோ?

 

குடும்பத்துப் பரீட்சை.

 

மனத்துக்கண் குற்றம் இல்லாது இருக்க வேண்டிய கூறுபாடு ஆண் பெண் என்ற இருபாலாருக்குந் தானே கூறப் பெற்றது? எனவே, மனத் தூய்மை உடைய இருவர் இல்லறம் நடத்துதலே அறத்தின் அடிப்படையை அறிந்து வாழ்வதாகும். இங்ஙனம் வாழ்வு நடத்துபவர்கள் அறம் உணர்ந்தவர்களா என்பதை எவ்வாறு அறிவது? பிறர் அறிவது ஒரு புறம் இருக்கட்டும். வாழ்வு நடத்தும் இருவரும் ஒருவரையொருவர் தெரிந்து கொள்ள வேண்டாவா? தெரிந்துகொள்ள எளிய ஒருவழி கூறுகிறார் ஆசிரியர். குடும்பம் நடத்துதல் அவ்வளவு எளிய காரியம் அன்று. இரண்டு வேறுபட்ட மனங்கள் கருத்து ஒருமித்து வாழ வேண்டிய சமயத்தில் எத்தனை இடர்ப்பாடுகள் தோன்றும்! எல்லாவற்றையும் விடப் பெரிய ஓர் இடர்ப் பாட்டைக் கூறுகிறது குறள். இளம்பருவம் உடைய ஒருவனும் ஒருத்தியும் சேர்ந்து வாழும் பொழுதுதான் இப்பெரிய இடர் தோன்றும். இதுவே ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் ஐயம். ஐயோ! எத்தனை நல்ல வாழ்க்கைகள் இந்த மூன்று எழுத்துகளால் (ஐயம்) பாழாயின! ஐயம் என்ற ஒன்று புகுந்துவிட்டால், அது முற்றச் சிறிதுகாலங்கூட வேண்டுவதில்லை. ஓயாது நெருங்கிப்பழக வேண்டிய கட்டுப்பாடுடைய இருவருள் இது புகுந்துவிட்டால், அதன் பின்னர் ஒவ்வொரு சொல்லும் செயலும் புதுப் பொருளுடனே தான் காட்சி யளிக்கும். வெகுவிரைவில் இது முற்றிக் கனிந்து பயனளித்துவிடும். இதனால் விளையும் அல்லல், கொலை வரையிற் கொண்டு செல்லும் என்பதை 'ஷேக்ஸ்பியர்' எழுதிய 'ஒதெல்லோ' நாடகத்தால் அறிகிறோம். ஏன்? தினம் தினம் செய்தித்தாள்களில் வரும் இத்தகைய செய்திகளாலும் அறிகிறோம். ஆகவே, இதனைத் தடுக்கக் குறள் முற்படுகிறது. எவ்வாறு? 'மனத்து மாசில்லாது இருப் பதே அறம்,' என்று கூறி, 'செயற்பால தோறும் அறனே' என்று வலியுறுத்துவதால் மனத்தூய்மை எவ்வளவு இன்றி யமையாதது என்பதைக் காண்கிறோம். மனத்தூய்மை யுடைய இருவருள் ஒருவர் மற்றவர்மேல் 'ஐயம்' கொள்ளுதல் எவ்வளவு தவறானது! ஆனாலும், இத் தவற்றை இருபாலாரிலும் ஆண்பாலாரே மிகுதியுஞ் செய்பவராதலின், அவர்கட்காகவே இக்குறள் எழுந்தது. 'சிறைகாக்குங் காப்பு எவன் செய்யும்?' அதாவது ஒரு பெண்ணைக் காக்க வேண்டும் என்று கருதி அவளை வெளியிற் போகவிடாது காப்பாற்றுவேன் என்று ஒருவன் புறப்படுவது எத்துணைத் தவறானது! இங்ஙனம் காவல் புரியத் துணிவது ஒரு பயனையும் விளைக்காது. போவது ஒரு புறம் இருக்க, அதற்கு எதிர்ப்பயனைச் செய்தலுங் கூடுமன்றோ? ஓயாது ஐயுற்ற மனம் வெறுப்புக் காரண மாக வேனுங்கூடத் தவற்றை இழைக்க முற்படலாம் அன்றோ? மனித மனம் இவ்வளவு 'விந்தை' நிறைந்தது! தடுப்பில் வழி அடங்கி இருக்கும் குழந்தைகூட, ஓயாது ஒருவர் தடுத்துக் கொண்டிரு்ந்தால் அத் தவற்றைச் செய்ய முற்படுதல் கண்கூடு. எனவே இத்தகைய காவல் ஒரு பயனையும் தாராது என்றார். அன்றியும் மனத்தூய்மை யுடையான் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவன் இத்தகைய இழி செயலில் இறங்குதல் தகுமா? அவனவ னுடைய மனத்தூய்மையைப் பார்த்துக் கொள்வதற்கு ஒரு வழி இதுதான், காரணமின்றியும் அற்பக் காரணங்களைக் கொண்டும் பிறர் மேல் ஐயம் கொள்ளும் ஒருவன், தன்னை மனத்துக் கண் மாசில்லாதவன் என்று எவ்வாறு கூறிக்கொள்ள இயலும்! 'என்னளவிற் காவல் செய்யத் தேவை இல்லை; காவலே வேண்டாவா?' என்றால் அதற்கும் விடை கூறுவார் போல ஆசிரியர் 'மகளிர் நிறை காக்கும் காப்பே தலை', என்கிறார்.

மனத்துக்கண் மாசில்லாத ஒருவனும் ஒருத்தியும், தம்முள் கருத்து ஒருமித்து இல்வாழ்வில் ஈடுபடுவதே அறம் என்றும், அவ்வாழ்வில் முழு நம்பிக்கையுடன் இருப்பதே அவ்வறத்தின் அடிப்படை என்றும் காணலாம். இனி இங்ஙனம் வாழும் வாழ்க்கை சமுதாயத்திற்கு உறுதுணை யாக எங்ஙன் அமைகிறது என்பதைக் காண்போம்.

 

வாழ்வின் பயன்

 

மனத்துக்கண் மாசு இல்லாத ஒருவனும் ஒருத்தியும் தம்முள் கருத்து ஒருமித்து இல்வாழ்வில் ஈடுபடுகிறார்கள் என்றால், அதுவே அறவாழ்க்கை என்று கண்டோம். இத்தகைய வாழ்க்கையின் பயன் என்ன? பெறுதற்கரிய செல்வம் ஒன்றை அடைதலாம். வற்றல் மரம் போல உள்ள வாழ்க்கை தளிர்ப்படைய வேண்டப்படுவது யாது? வாழ்க்கையென்னும் போராட்டத்தில் அலைப்புண்டு தத்தளிக்கும் மனத்திற்கு அமைதி வேண்டுமானால், எங்கே செல்வது? அறவழி நிற்கும் ஒருவன் இல்வாழ்க்கை அவனுக்கும் பிறருக்கும் பயன்பட வேண்டுமாயின், ஒரு செல்வம் அவன்மாட்டு இன்றியமையாது இருத்தல் வேண்டும். அவ்வரிய செல்வம் 'மக்கட்பேறு' என்று கூறப் படும். எத்துணைச் சிறப்புடைய வாழ்க்கையாயினும், மக்கட்செல்வம் இல்லாத வாழ்க்கை சுவையற்றதுதான்.

 

        ... ... இடைப்படக்

குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,

இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும்,

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே, (புறம்-188)

 

என்று பாண்டியன் அறிவுடை நம்பி கூறியது ஆழ்ந்து சிந்திக்கற்பாலது. குழந்தைச்செல்வம் பெற்ற பின்னர்த் தான் மனித மனம் விரிவடைகிறது. தன்னலம் ஒன்றால் சூழப்பட்டுள்ள மனித மனம் விரிவடைந்து, அன்பெனும் நலத்தால் பிறரைக் கட்டித் தமர் போல நேசிக்கிறது. சொல்வதற்கு மிக எளிதாக உள்ள இச்செயல், செய்வதற்கு மிகவும் அருமையானது என்பது கூற வேண்டா. பிறரைத் தமர் போல நேசிக்கும் நிலை ஒருவனிடம் வரவேண்டு மாயின், அப்பழக்கத்திற்கு முதற்படி, இல்வாழ்விலேதான் அமைந்து கிடக்கிறாது. பிறருக்காகத் தன்னலத்தை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குடும்பத்திலல்லாமல் வேறு எங்கே தோன்ற முடியும்?

 

மக்கட் செல்வம்

 

இல்வாழ்க்கையிலும், குழந்தைச்செல்வம் ஏற்பட்ட பிறகு அக்கணவனும் மனைவியும் அடைகின்ற மன மாறுதலை நாம் உலக அனுபவத்தில் நன்கு காணலாம். எத்துணை வன்னெஞ்சாயினும் இச்செல்வம் ஏற்பட்ட பிறகு அந்நெஞ்சு மாறுதல் அடையக் காண்கிறோம். பொருந்தாத் திருமணங்கள்கூட இச்செல்வம் ஏற்பட்ட பிறகு மனம் பொருந்திய வாழ்வாதலைக் காண்கிறோம்.

 

இம்மை உலகத்து இசையொடும் பொருந்தி

மறுமை உலகமும் மறுஇன்று எய்துப

செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்

சிறுவர்ப் பயந்த செம்மலோர். (அகம்-66)

 

என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஒரு தமிழன் கூறினான் என்றால், இச்செல்வத்தின் பயனை இந் நாட்டார் நன்கு அறிந்திருந்தனர் என்பது கூற வேண்டுவ தின்று.

இல்வாழ்வில் புகுந்த ஒருவன் சமுதாயத்திற்கு நன்கு பயன்பட வேண்டுமாயின், அவனுக்கு இச்செல்வம் மிகவும் இன்றியமையாதது என்பது கண்ட வள்ளுவப் பெருந்தகையார் 'புதல்வரைப் பெறுதல்' என்ற ஓர் அதிகாரமே வகுத்துச் சென்றார். அம்மட்டோடு இல்லை, வாழ்க்கைத் துணை நலம் சிறப்படைய இதுதான் இன்றியமையாதது என்றும் கூறினார். அவ்வதிகாரத்தின் இறுதிக் குறள்,

 

மங்கலம் என்ப மனைமாட்சி;

மற்றதன் நன்கலன் நன்மக்கட் பேறு. (குறள்-60)

 

என்று கூறுதலால், முன்னர்க் கூறப்பெற்ற கருத்துக்கள் வலியுறுதல் காணலாம்.

 

எத்தகைய குழந்தை?

 

குழந்தைச் செல்வம் வேண்டுவது என்று கூறினவுடன் எத்தகைய குழந்தை என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? குழந்தைகள் என்ற பெயருடன் பேயும் பிசாசும் இருந்தால் அவ் இல்வாழ்வு சிறப்படையுமா? உறுதியாகச் சிறப்படை யாது. எனவே, மக்கள் எத்தகையவர்களாக இருத்தல் வேண்டும் என்பதை ஆசிரியர் குறிப்பாகப் பெற வைக்கிறார்;

 

அறிவு அறிந்த மக்கள், (குறள் 61)

பழி பிறங்காப் பண்புடை மக்கள் (குறள் 62)

 

என்று கூறுவதால் இத்தகைய மக்கட்பேறுதான் வேண்டத் தகுவது என்பதைப் பெற வைக்கிறார். 'பிறந்த பிள்ளை கள் பிற்காலத்தில் நல்லவர்களாகவோ, தீயவர்களாகவோ இருப்பதற்கு நாம் என்ன செய்யமுடியும்? அது அவர் களுடைய பொறுப்பே தவிர நம்மால் ஆவது ஒன்றும் இல்லை,' என்று கூறுவார் உளராயின், அக்கூற்றை மறுக்கிறார் ஆசிரியர். பிள்ளைகள், பெற்றோர்க்கும் சமுதாயத்திற்கும் நன்முறையில் பயன்படுபவர்களாக இருக்குமாறு செய்தல் நமது கடமை. பயிற்சியால் இந்நற் பழக்கங்கள் அவர்கட்கு வருமாறு செய்வது ஒருபுறம். அடுத்து இயற்கையில் அமைந்துள்ள பண்புகளாயினவும் நற்பண்புகளாக அமைதல் வேண்டும். இவை இரண்டும் நன்கு அமைந்தால் ஒழிய ஒருவன் முழுவதும் நல்லவனாக இருத்தல் இயலாது.

 

இயற்கைப் பண்பு

 

இரண்டாவது கூறப்பெற்றதை முதலிற் காண்போம். குழந்தைக்கு இயற்கையாக அமையும் பண்புகள் நல்லன வாக இல்வழி, செயற்கையில் தரும் நற்பழக்கங்கள் சிறப் படையா, இயற்கையாக அமையும் பண்புகட்கு யார் பொறுப்பாளர்? இக்கால விஞ்ஞானமும் மனத்தத்துவமும், தாய் தந்தையரே என விடை கூறுகின்றன. தாய் தந்தையர் நற்பண்புகள் உடையவராய் இருப்பின், குழந்தைகள் வேறு பண்புகள் உடையவர்களாக இருத்தல் இயலாது. மனத் தத்துவம் நன்குணர்ந்த வள்ளுவர் இக்கருத்தைப் பலவிடங் களில் வலியுறுத்திச் செல்கிறார்.

 

மனத்தூயார்க்கு எச்சம் நன்றாகும் (குறள்-456)

 

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும் (குறள்-114)

 

என்ற இவ்விரண்டு குறள்களும் ஒரு பெரிய உண்மையை நமக்குக் கூறுகின்றன.

 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறன் (குறள்-34)

 

என்று கூறிய ஆசிரியர், ஒருவன் அற வாழ்க்கை வாழ்கிறானா என்று அறிந்துகொள்ள இங்கு வழி கூறுகிறார். எவ்வளவுதான் ஆராய்ந்தாலும் ஒருவனுடைய புற வாழ்க்கையை வைத்துக்கொண்டு அது அறவாழ்வு என்ற முடிவுக்கு வரமுடியாது. தூய்மையும் செம்மையும் உடைய வாழ்வு, பிறரை ஏமாற்றக்கூட நடத்தப்படலாம். அவ்வாழ்க்கை அத்துணைச் சிறப்புடையது அன்று என்று குறிக்கவே 'ஆகுல நீர பிற' (குறள்-34) என்றும் கூறினார். ஆசிரியர். மனத்துக்கண் உள்ள தூய்மையை அறிய, சொல்லும் செயலும் பயன்படுதல் உண்மையாயினும், சில சமயங்களில் மனத்தூய்மை இன்றியும் புறத்தூய்மை காணப் பெறுகிறது. இத்தகைய நடிகர்களின் அந்தரங்கத்தை அறிய ஏதேனும் வழி உண்டோ? விளியில் இவ்வளவு தூய்மை யுடைய இவர்களுடைய அகம் எத்தகையது என்று காண்டல் வேண்டுமே! இதோ வழி வகுக்கிறார் ஆசிரியர். யாரை ஆராய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அவர்களுடைய பிள்ளைகளைக் கொண்டு அவர்களின் அகத் தூய்மையை ஆராயலாம். 'அவர் மிகமிக நல்லவர்; ஆனால், பூர்வ சென்ம பாவம். பிள்ளைகள் மோசமாய் இருக்கின்றார்கள்!' என்று சிலரைப் பற்றி சொல்லக் கேட்கிறோம். இக்கூற்று உண்மையா? 'அன்று' என மறுக்கிறார் ஆசிரியர். மனம் தூயவராக ஒருவர் இருப்பாரேயானால், நிச்சயமாக அவருடைய எச்சமும்-பிள்ளைகளும்-நன்றாக இருக்கும் என்று உறுதியாக்க் கூறுகிறார். எவ்வளவு புற உலகத்தைத் தமது வெளி வேடத்தால் ஏமாற்றினாலும், மனத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் தன்மை பிறக்கும் குழந்தைகளிடம் இருக்கின்றது. இதனை இன்னும் வலியுறுத்தவே 'தக்கார் தகவிலர் என்பதையறிய அவர்கள் எச்சமே சிறந்த கருவி' என்பது மீண்டும் குறிக்கப் பெறுகிறது.

இக்குறளுக்குப் பல்வேறு வகையாகப் பொருள் கூறப் பெறுகிறது. ஒப்பற்ற உரையாசிரியராகிய பரிமேலழகருங் கூட மாறுபட்டே பொருள் கொள்கிறார். ஆசிரியர் வள்ளுவரின் மனத்தத்துவ நுணுக்கம் அறியப்படாமையின், இப்பிழைபாடு நேரிட்டதோ என்றுகூட நினைக்க வேண்டி யுளது. அன்றியும் பரிமேலழகரின் வடநாட்டு நாகரிகக் கொள்கையும் இவ்வாறு பொருள் கூறக் காரணமாய் இருந்திருக்கலாம். இக்காலத்தில் எச்சம் என்பதற்கு 'எஞ்சி நிற்கும் புகழ்' என்றுகூடப் பொருள் விரிக்கப்படுகிறது. எவ்வாற்றானும் தகுதி இல்லாதவர் புகழ் பெற்று வாழ்தலைக் கண்ட நாம், இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிற நாம், இவ்வாறு பொருள் கூறினால் அது பெருந் தவறாக அன்றோ முடியும்? இனி இக்கருத்தைச் சற்று விரிவாகக் காண்போம்.

 

தாய் தந்தையர் காரணம்

 

தாய் தந்தையரின் அகமனம் எத்தகைய பண்பாட்டை அடைந்திருக்கிறதோ, அந்த அளவிற்குத்தான் மக்கள் மனமும் பண்பட்டு நிற்கும். ஒரோ வழி தக்கார் என்று நம்மால் கருதப்படுகிறவர்களுக்குத் தகவில்லாத பிள்ளை கள் பிறக்கக் காண்கிறோம். இத்தகைய சந்தருப்பங்களில் கொஞ்சம் நின்று ஆராயவேண்டும். ஒருவரைத் தக்கார் என்று நாம் முடிவு செய்ய என்ன முயற்சி எடுத்துக் கொண்டோம்? அவருடைய புற வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பது ஒன்று தவிர, வேறு என்ன வழியைக் கையாள முடியும்? பிறர் தன்னை நன்கு மதிக்கவேண்டும் என்று கருதுகிற ஒருவன், அப் பிறர் தன்னைக் காணும் நேரம் அனைத்திலும் செம்மையாகத்தானே நடந்துகொள்வான்? அதிலும் தன்னை எத்தகையவனாக உலகம் கருத வேண்டும் என்று நினைகிறானோ, அவ்வகையில் தான் வாழ்வதாகப் பிறர் கருதுமாறு செய்வது ஒரு பெரிய காரியமா? உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம்; ஒருவன் 'பத்தான்' என்று தன்னைப் பிறர் கருத வேண்டும் என்று நினைக்கிறான். ஆகவே, காலையில் இரண்டு மணி நேரம் பூசையில் இருந்து பலத்த சத்தத்துடன் மணி அடிக்கிறான்; உட்கார்ந்தாலும், எழுந்தாலும் 'சிவ சிவா' என்று பலத்த சத்தம் இடுகிறான்; பத்தனுக்குரிய ஏனைய கோலங்களை அணிந்துகொள்கிறான். பலகாலம் இந்நிலையில் அவனைக் காண்கிற உலகம் அவனைச் 'சிறந்த பக்தன்' என்று கூறுவதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், பூசையில் அமர்ந்த அவன், 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' இறைவன் புகழை ஒதுகிறானா இல்லையா என்பதை யார் கூறமுடியும்? கைகள் மணி அடிக்க, வாய் தேவாரத்தை ஓதலாம். ஆனால் இவை இரண்டின் செயலிலும் ஈடுபடாமல் அவன் மனம் கறுப்புச் சந்தையில் பொருள்சேகரிக்கும் வழியை ஆராய்ந்து கொண்டிருக்கலா மல்லவா? அல்லது வருமான வரியை ஏமாற்றப் பொய்க் கணக்கு எவ்வாறு புனைவது என்ற ஆழ்ந்த சிந்தனையில் செல்லலாமல்லவா? முன்னர்க் கூறிய இரண்டு செயல் களையுங் கொண்டு அவனை அன்பன் என்று கூறும் பிழை யாருடையது? இப்படிப்பட்ட அன்பர்கள் என்றும் இருந்திருப்பார்கள் போலும்! அல்லாவிடில்,

 

பொக்க மிக்கவர் பூவும்நீ ருங்ககண்டு

நக்கு நிற்பன் அவர்தமை நாணியே (திருமுறை 5:90:9)

 

என்று திருநாவுக்கரசர் பெருமான் கூறுவாரா? இத்தகைய ஒருவனுக்கும் பிள்ளை பிறந்து அவன் தவறான வழியில் சென்றால், அதில் வியப்பு என்ன இருக்கிறது? சில நாட்களுக்கு முன்னர் 'தேச பக்தர்' பலரைக் கண்டோம். அவர்களுடைய புறவாழ்க்கை ஒன்றை மட்டுங்கண்டு விட்டு மகாத்துமாவின் உண்மைச் சீடர்கள் என்று நாம் நினைத்தது உண்டு. ஆனால், சந்தருப்பம் வாய்த்தவுடன் இந்த உண்மைச் சீடர்கள் அரிசியைப் பதுக்கவும், 'கள்ள மார்க்கெட்டு' வாணிபம் செய்யவும் சிறிதும் பின்வாங்க வில்லை. இத்தகைய கல் மனம் உடையார்க்கு எச்சம் (மக்கள்) எவ்வாறு நன்றாய் இருக்க முடியும்?

 

அகமனம்

 

பிறர் தம்மைக் காணுங்காலம் அனைத்தினும் போலியாகத் தூயவர் போல நடிக்கும் இவர்கள் மனம் உண்மையில் கருங்கல் தளமிட்டு மூடப்பட்ட சாக்கடை யேயாகும். குழந்தை தரிக்கின்ற காலத்தில் இச் சாக்கடை திறக்கப்படுகிறது. கருத்தரிக்கும் காலத்தில் தாய் தந்தையர் என்ற இவருடைய மனமும் எந்நிலையில் ஈடுபட்டிருக் கிறதோ, அதே பண்பு அமைந்துதான் குழந்தைகள் தோன்றும். இற்றை னால் மனவியல் நூலார் கூறுவது ஒரு புறம் இருக்க, பழந்தமிழனும் இதை நன்கு அறிந்திருந்தான் என்பதை உதாரண முகத்தாலும் அறியலாம்.

 

உதாரணம்

 

ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஒரு புரட்சி தேவையாய் இருந்தது. அப் புரட்சியை நடத்தி வைக்க ஒருவர் தேவைப்பட்டார். தேவையைத் தமிழ் நாட்டார் பலரும் உணர்ந்தனர். ஆனால், இருவர் மட்டுந்தான் அத்தகைய புரட்சியாளர் தம்மிடம் தோன்றவேண்டும் என்று ஒருதலையாக நினைத்தனர். ஒருவர், பாண்டிமா தேவியரான 'மங்கையர்க்கரசியார்,' இரண்டாமவர், சோழ நாட்டில் சீர்காழியில் வாழ்ந்த 'சிவபாத இருதயர்' என்ற பெரியார். ஆனால், முதலாமவராய் உள்ள அரசியாருக்கு இந்நினைவு பயன்பட வழியில்லை. ஏன்? அவர் இல் வாழ்க்கை பயனற்றதாகிவிட்டது. மேலும், அவர் மட்டும் இந்நினைவு கொண்டிருக்க, அவருடைய கணவன் வேறு நினைவில் இருந்தான். இரண்டு மாறுபட்ட கருத்துடைய அவர்கட்கு இத்தகைய குழந்தை பிறத்தல் இயலாத தொன்று. எனவே, சீர்காழிக் குடும்பத்தார் எண்ணம பூர்த்தியாகிறது. ஊராரைப்போல ஒரு சாதாரணக் குழந்தை வேண்டும் என்று மட்டும் அத்தாய் தந்தையர் நினைக்கவில்லை. தமிழ் நாட்டைச் சீர்படுத்த ஒரு புரட்சி யாளர் தங்கட்கு மகனாகப் பிறக்கவேண்டும் என்றே அவர்கள் அல்லும் பகலும் நினைந்தார்கள். அவர்கள் நினைவையும் வாழ்க்கையையும் இதோ கவிஞர் சேக்கிழார் படம் பிடித்துக் காட்டுகிறார்.

 

மனையறத்தில் இன்பமுறும் மகப்பெறுவான் விரும்புவார்

அனையநிலை தலைநின்றே ஆடியசே வடிக்கமலம்

நினைவுறமுன் பரசமயம் நிராகரித்து நீறாக்கும்

புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றும்

தவம்புரிந்தார். (பெ.பு - 1922)

 

திருஞானசம்பந்தர் ஏன் சீர்காழியில் தோன்றினார்? அப்படியானால், இன்றைக்கு நாட்டில் உள்ள குறைபாடு களைப் போக்க ஏன் ஒருவர் தோன்றக் கூடாது? என்றெல்லாம் பிதற்றும் பேதைகட்கு விடை கூறுவார் போலச் சேக்கிழார் பாடுகிறார். இதே குறிக்கோளுடன் தாயும் தந்தையும் இருந்ததனாலேதான் ஞான சம்பந்தர் அக்குடும்பத்தில் தோன்றினார். தாய் தந்தையர் தக்க மனத் திண்மையுடையவராயின், குழந்தையும் அவ்வாறே தோன்றும், 'உரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி' என்ற மாபெரு நூலை இயற்றிய பெரியாராகிய 'கிப்பன்' என்பார், வீழ்ச்சியின் காரணங்கள் பல கூறுகிறார். அவற்றுள் ஒன்று வருமாறு: 'ரோமாபுரிப் பெண்கள்' வீர வழிபாடு செய்து ஓயாது வீரர்களைப் பற்றியே தியானம் செய்து கொண்டிருந்த நாளில் நல்ல வீரர்கள் அவர்கள் வயிற்றில் தோன்றினார்கள். ஆனால், அவர்கள் அக்குறிக் கோளை மறந்து களியாட்ட வாழ்க்கை நடத்த ஆரம்பித்த வுடன் அவர்கள் வயிற்றில் கோழைகள் தோன்றலானார் கள், இக்கூற்றை நன்கு ஆராய்ந்தால், நாம் இது வரையிற் கூறியன எவ்வளவு உண்மை என்பது விளங்கும்.

 

உண்மை வெளிப்பாடு

 

கருத்தரிக்கும் காலத்தே மனிதனுடைய அகமனம் எவ்வாறு உளதோ, அவ்வாறே குழந்தை தோன்றும் என்பது எவ்வாறு எனக் காண்போம். போலி வாழ்வு வாழும் ஒருவன், ஓயாது விழித்திருந்து தன் சொற்கள் செய்கை என்ற இரண்டையும் காத்துக்கொள்கிறான்; இவை இரண்டினும் பிறரறியத் தவறு நேராமல் கவனித்துக் கொள்கிறான். ஆனால், உறக்கம், புணர்ச்சி தடுக்கி விழும் நேரம், தும்மல் வந்த நேரம், எல்லையற்ற துக்கம் வந்த நேரம் ஆகிய இவற்றில் இப் போலி மனிதன் தான் வழக்கமாகக் கையாளும் விழிப்புத் தன்மையைக் கையாள இயலுவதில்லை. இந் நிலைகளில் இவன் மனத்தில் எந்த எண்ணம குடிகொண்டிருக்குமோ, அதுவே வெளிப்படும். ஒரு மனிதன் உண்மைத் தன்மையை அறிய மேலே கூறிய நேரங்களே மிகவும் சிறந்தவைகள். கோபமே வராது தனக்கு என்று கூறிப் பிறர் தாண்கையில் அவ்வாறே நடந்துகொள்ளும் ஒருவனை ஆழ்ந்த தூக்கத் தில் திடீரென்று எழுப்பினால், உண்மை விளங்கும். அவன் பழகாத நாய் போல எழுப்பியவரைப் பிடுங்கு தலைக் காணலாம். ஓயாது வேலும் மயிலுந்துணை, என்று கூறுபவன், தும்பியவுடன் 'ஐயோ!' என்று கூருதளையும் உலகிடைக் காணலாம். அகமனம் தூய்மை பெற்ற பெரியோர்கள் மட்டுமே இந்நிலையிலுங்கூடத் தவறாமல் இருப்பார். இது கருதியே போலும்,

 

தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும்

அம்மலர் அடியலால் அரற்றாது எந்நா;

' இடரினும் தளரினும் உன்கழல்

தொழுது எழுவேன், (திருமுறை 4:1)

 

என்று ஞானசம்பந்தரும்,

 

வழுக்கி வீழினும் உன் திருப்பெயர் அல்லால்

மாற்று நான் அறியேன் மறுமாற்றம் (திருமுறை 54:1)

 

எனச் சுந்தரமூர்த்திகளும் அருளினார்!

 

அகமனம் தூய்மை பெற்ற ஒருவனுக்குத்தான் கூடற் காலத்தும் மனம் தூய்மையாக இருக்கும். அப்பொழுது தோன்றும் பிள்ளைகளும் உயர்ந்த பண்பு உள்ளவர்களாய் இருப்பார்கள். இக்கருத்துடன்,

 

மனந்தூயார்க்கு எச்சம் நன்றாகும் (குறள் 456)

 

தக்கார் தகவிலர் என்பது அவரவரர்

எச்சத்தாற் காணப் படும் (குறள்-114)

 

என்ற குறள்கட்குப் பொருள் காண்டல் எவ்வளவு எளிதாய் உள்ளது? இக்கருத்தை மேலும் வலியுறுத்துவார் போன்று ஆசிரியர்,

 

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும் (குறள்-958)

 

என்றுங் கூறுதல் காண்க,

 

இவ்வாறு பொருள் கூறுவதால் இழுக்கின்மையும் அறிதல் வேண்டும். தக்கார் ஒருவருக்குப் பிள்ளை இல்லை எனில், அதனால் அவரைக் குறையுடையார் எனக் கூறல் வேண்டா. இவ்வாறன்றிப் பரிமேலழகர் 'தக்கார் தகவிலர்' என்ற குறளுக்குப் பொருள் கொள்வது போலக் கொண்டால் பல இடையூறுகள் வருதல் கண்கூடு. ஆசிரியர் பரிமேலழகர் இக்குறளுக்கு, 'இவர் நடுவுநிலை உடையார், இவர் நடவு நிலை இலர் எனும் விசேடம் அவரவருடைய நன்மக்களது உணமையானும் இன்மை யானும் அறியப்படும்,' என்று கூறுகிறார். இவ்வாறு கூறினால், மணஞ்செய்தும் பிள்ளைப் பேறில்லாத சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஞானசம்பந்தர், பெரியாழ்வார், சாக்கிரட்டீஸ் போன்ற பெரியார்கள் நடுவு நிலையற்றவர் கள் என்று கூறவேண்டிய இடர்ப்பாடு வருதல் காண்க.

எனவே, நல்ல அறவாழ்க்கை உடைய ஒருவன் நடத்தும் இல்வாழ்க்கை செம்மையுடையதுதானா என்று காண வேண்டுமாயின், அவன் மக்களே தக்க உரைகல் என்ற ஆசிரியர் கூறுகிறார்.

 

பேருக்குப் பிள்ளை

 

வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தின் இறுதிக் குறள் நன்கு சிந்திக்கற்பாலதாகும். வழக்கம் போலப் பின்னர் வரும் அதிகாரத்திற்குத் தோற்றுவாயாக மட்டும் இக்குறள் அமையவில்லை. மனித வாழ்க்கையில் அனைத்தையும் பெறுவதற்கோ, அன்றி இழப்பதற்கோ காரணமாக இருப்பது மனை வாழ்க்கைதான். மனையாள் நற்பண்புடையவளாயின், வாழ்க்கை பயன் பெறலாம்; அன்றேல், அனைத்தும் இழந்ததாகவே கருதப்படும். இது கருதியே 'மங்கலம் என்ப மனைமாட்சி' என்றார். இனி இவ் இல்வாழ்க்கையின் பயன் மக்கட்பேறு என்றார். அதுவும் நன்மக்கள் பெற்றால் ஒழியப் பயனாகக் கருதப் படுவதில்ல. தம் குளம் விளங்கவோ, அன்றிப் 'புத்து' என்னும் நரகில் வீழாமல் பெற்றோரைக் காக்கவோ 'புதல்வர்ப் பேறு' வேண்டும் எனப் பலரும் நினைய லாயினர். ஆனால், வள்ளுவர் அவ்வாறு நினைத்தாரல்லர். முன்னவர் கருத்துப்படி பிறக்கும் குழந்தை எப்படி இருப்பினும் சரியே. 'பேதையாய் இருப்பினும் பிள்ளை பிள்ளைதானே? பேருக்கு ஒரு பிள்ளை என்று இருந்து விட்டாலும் சரி,' என்பார் கருத்து வள்ளுவருக்கு உடன் பாடு அன்று போலும்! அதனாலேயே மக்கள் என்று குறிப்பிடும் இடங்கள் அனைத்திலும் பெரும்பாலும் அடைமொழி கொடுத்தே கூறுகிறார். 'நன்கலம் நன்மக்கட் பேறு' 'அறிவு அறிந்த மக்கட்பேறு' என்பன போன்ற இடங்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.

 

பண்புடை மக்கள்

 

புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தின் முதலிரண்டு குறள்களும் மக்கள் என்ற பொதுச் சொல்லையே ஆள்கின்றன. எனவே ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றியே ஆசிரியர் பாடுகிறார் என்பது நன்கு தெரியப்படும். இந்த இரண்டு பாடல்களும் சிறந்த உட்கோளோடு திகழ்கின்றன.

 

'பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.' (குறள்-61)

 

'எழுபிறப்பும் தீயவை தீண்டா; பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.' (குறள்-62)

 

வெண்பாவிற்கு அழகுசெய்யும் மோனையைக்கூடத் துறந்து விட்டு மக்கள் என்ற சொல்லுக்கு ஆடை வழங்குகிறார் ஆசிரியர். எத்தகைய மக்கள் வேண்டும்? அறிவு நிரம்பிய மக்களே வேண்டும். மனிதனை ஏனைய விலங்கு உலகினின்றும் பிரிப்பது அவன் பெற்றுள்ள அறிவு ஒன்றேயாகும். எனவே, அதன் இன்றியமையாமை அதிகம் வலியுறுத்தப்பட வேண்டுவதில்லை. என்றாலும் மக்களாய்ப் பிறந்தோர் பலர் இவ்வறிவு இல்லாதும், இருந்தும் பயன் படுத்தாதும் இருப்பைக் காண்கிறோமாகலின், அறிவுடை மக்கள் வேண்டும் என்றார். எத்துணைச் சிறப்புடைய தாயினும், இவ்வறிவு கூர்மையான வாள் போன்ற ஒன்றாகும். இதனைப் பெற்ற ஒருவன் தக்க பண்பில்லாத வனாயின், இவ்வறிவாகிய வாளைக்கொண்டு தனக்கும் பிறர்க்கும் தீங்கையே இழைப்பான். எனவே, அறிவு எனும் வாள் நன்கு பயன்பட வேண்டுமாயின், இதனினும் மேம்பட்ட ஒன்று கூடவே இருத்தல் வேண்டும். அதனை மனத்துட் கொண்ட ஆசிரியர் விடாது அதனை அடுத்த குறளில் கூறியுள்ளமை காண்க. சிறந்த அறிவாயினும், அது நன்முறையில் தனக்கும் பிறர்க்கும் பயன்படுமாறு செய்வது நற்பண்பே ஆகும். அப் பண்பு இல்வழி, அறிவு, நலன் விளைக்காததன்றித் தீமையே புரிதலுங்கூடும். இது கருதியே ஆசிரியர் அடுத்த குறளில் 'பண்புடை மக்கள்' வேண்டும் என்றார்.

 

பண்புடன் கலந்த அறிவு

 

அறிவின் செயலும் பண்பின்செயலும் பகுத்தறியப்பட்ட வேண்டுவனவாகும். இன்றைக்குப் பலரும் அறிவுக்குத் தலைமை இடம் அளித்து வழிபடத்தொடங்கி உள்ளனர். அவர் கருத்துப்படி அறிவு ஒன்று மட்டும் உலகை ஆளத் தொடங்கி விட்டால், அந்நாள் நன்னாளன்று. உலகம் அழியும் நாள் அன்றேயாகும். பொருள்களின் வேறு பாட்டைக் கூர்ந்து அறிவது அறிவு. பெரும்பாலும் ஒற்றுமைப்பட்ட இயல்புகள் வாயந்த இரு பொருள்களை ஆராய்ந்து அவற்றின் ஒற்றுமை வேற்றுமை கருதி இரண்டாகப் பிரித்துக் கூறுவது அறிவின் வேலை. பயன் கருதாது ஆராய்ந்து சென்று பொருளின் உண்மைத் தன்மையைப் புலப்படுத்துவது அறிவின் தொழிலாகும். ஆனால், இங்ஙனம் செய்வதால் உள்ள நலந் தீங்குகளைப் பற்றி அறிவு கவலைப்படுவதில்லை. அணுவைப் பற்றி ஆராய முற்படுவது அறிவு. 'அணு' என்பது பகுக்க முடியாத ஒன்று, என்று ஒரு காலத்தில் நினைத்ததும் கூறியதும் அறிவுதான். அதே அணுவைப் பயன்கருதாது உடைத்து அதனுள் இருக்கும் பொருள்களைக் காணத் துடித்துக் கண்டதும் அறிவுதான். இவ்வணுவின் சக்தி எவ்வளவு என்று காண முற்பட்டதும் அறிவுதான். அணுவைத் துளைத்து அளவற்ற ஆற்றலை வெளியிட்ட அறிவுக்கு வணக்கம்! ஆனால், இன்று நம்மில் பலரும் இவ்வாற்றலை வெளியிட்ட அறிவைப் போற்றி வியவாது தூற்றுகிறோம். நாகாசாக்கி, ஹிரோஷிமா என்ற நகரங்களில் வாழ்ந்து இன்று எஞ்சியவர்கள் இந்த அறிவைப் போற்று கிறார்களா என்பதை அவர்களைக் கேட்டாள் அல்லவோ தெரியும்! காரணம் என்ன? அறிவு பண்பாட்டுடன் கலவாமல், கேவலம் அறிவு மாத்திரையாய் நின்று தொழிற்படுவதனால் இந்நிலைக்குத்தான் வர நேரிடும். தம் அறிவின் பயன் மக்கட் சமுதாயத்திற்கு நலம் விளைவிப்பதா, தீங்கு விளைப்பதா என்பது பற்றிக் கவலையுறாமல் செய்யப்படும் அறிவின் செயல் எதுவாயினும் அது உலகோரால் பழிக்கவே படும்.

இனிப் 'பண்புடைமையாவது யாது?' எனக் காண்டல் வேண்டும். இச்சொற்கும் பொருள்கூற வந்த ஆசிரியர் பரிமேலழகர், 'பெருமை சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்று 'எல்லா இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல்' எனப் பொருள் கூறினார். கலித்தொகையில் 'பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்' (கலி. 133) என வருவதும் காண்டற்குரியது. இப்பண்பாடு இல்லாத அறிவு, பெருந்தீங்கை விளைத்து 'அணுகுண்டு' தோற்றுவதற்கே பயனாம். இது கருதியே போலும் ஆசிரியர்,

 

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர் (குறள்-997)

 

எனக் கூறினார்! பண்பாடு இல்லாதவர் அறிவு, அழித்தல் ஒன்றிற்கே காரணமாகும் என்பதை இதனால் நன்கு அறியலாம். பண்பாட்டிற்கு, ஆசிரியர் தரும் சிறப்பு இத்துணையது என்று அறிந்தபின், மக்கட்பேற்றில் எடுத்துக் கட்டப்பெற்ற குரல்களின் பொருளை நன்கு சிந்திக்க முற்படல் வேண்டும். பிள்ளைகள் கூர்மையான அறிவும், சிறந்த பண்பும் அடையப்பெற்றவராக இருத்தல் வேண்டும் என்று கூறுவதன் கருத்தென்ன? பிள்ளைகலி தீர்ப்ப தொன்றற்காகவே பிள்ளைப்பேறு வேண்டும் என ஆசிரியர் கூறி இருப்பின், இத்தனை அடைமொழிகள் தந்திரார். எனவே, இதன் உட்கோள் ஒன்று இருத்தல் வேண்டும் அது யாது? பிள்ளைகள் நாளைச் சமுதாயத்தின் தூண் களாக இருக்க வேண்டுபவரல்லரோ? அவர்களின் சிறப்பும் சிறப்பின்மையும் நோக்கித்தானே நாளைச் சமுதாயம் அமையப் போகிறது? எனவே, நல்ல சமுதாயம் நாட்டில் அமைய வேண்டுமாயின், நன்மக்கட்பேறு வேண்டும் என ஆசிரியர் வலியுறுத்துகின்றார். வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும் ஆசிரியர், நன்மக்கட் பேற்றையும் அதில் ஒரு கூறாக வைக்கிறார்.

 

சமுதாயப் பிராணி

 

ஒரு மனிதன் வாழ்க்கை, அகம்-புறம் என இரு பகுப்பாகி இயல்கிறது. அகம் பெரும்பாலும் வீட்டினுள் தலைவன் தலைவி மக்கள் சுற்றத்தார் என்பவருள் அடங்கி விடுதலின், அதில் சமுதாயம் பற்றிய வினாவிற்குத் தேவை இல்லை. ஆனால், எத்தகைய மனிதனும் வீட்டினுள்ளேயே தங்கித் தன் காலத்தைக் கடத்திவிட முடியாது. வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் தன்னை ஒத்த மனிதர் களிடம் கூடிப் பழக வேண்டி உளது. அங்ஙனம் பழகுங்கால் தன் இயற்கையோடு ஒத்தவர்களுடன் நட்புக் கொள்ளவும், மாறுபட்டவர்களுடன் மாறு கொள்ளவும் தொடங்குகிறான். இந்நிலை மாறிப் பிறர் இயற்கை தன்னியற்கையுடன் ஒத்ததாக அமையாதவிடத்துங்கூட அவர்களுடன் சேர்ந்து வாழ முனைகிறான். இம்முயற்சி யால் சகிப்புத் தன்மை பிறக்கிறது. தன்னினும் வேறுபட்ட கருத்துடையாருங்கூட இப்பரந்த உலகில் வாழ உரிமை பெற்றவர்களே என்று முழுவதும் உணரும் நிலையிலே தான் ஒரு மனிதன் பண்பாடு பெற்றவன் ஆகிறான். இத்தகைய பண்பாடு இல்லை எனில், வாழ்க்கை வறண்ட பாலைவனம் ஆகிவிடும். 'மனிதன் சமுதாயப்பிராணி' (Man is a social animal) என்ற பழமொழி உண்மையானது இந் நிலையிலேதான், உலகிடைப் பிறந்ததன் பயன் இரு வகைப்படும். ஒன்று, ஆன்ம முன்னேற்றம். அது பிறர் உதவி இன்றித் தன் முயற்சியாலேயே நடைபெறுவது. இரண்டாவது, சமுதாயத்தில் உள்ள தன் போன்ற பிறர் நலமடையத் தன் வாழ்க்கையைச் செலுத்துவதாகும். இவ்விரு வகைப் பயனையும் அடைய வள்ளுவர் நூல் வகுக்கிறார். ஏனையோர் நூலினும் குறள் சிறப்படைவது இத் துறையிலேயே ஆம். இவ்விரு பயனையும் அடைய இருவேறு வழி வகுக்காமல், ஒன்றன மூலமே மற்றொன்றை அடையக் குறள் அடி கோலுகின்றது; இரண்டாவது பயனை அடையச் செய்யும் முயற்சியிலேயே முதற் பயனையும் அடைய வழி செய்கிறது.

 

சமுதாயத் தொண்டன்

 

இல்லறவியல் முழுவதும் இவ்விரண்டாம் வழியை வகுப்பதேயாகும். அதிலும், 'புதல்வரைப் பெறுதல்' என்ற அதிகாரத்தின் இவ்விரு குறள்களும் சமுதாயம் நன்கு நடைபெறவே வழிகாட்டுகின்றன. ஒருவன் எத்துணைச் சிறந்தவனாயினும், பிறர் வாழத் தன் வாழ்க்கையைச் செலுத்துபவனாய் இருப்பவனாயினும், அவன் எச்சமும் அவ்வாறு பயிற்றுவிக்கப்பட இல்லை எனில், பயனின்றாய் முடியும்.

 

பிள்ளைகட்கு இயற்கை, செயற்கை என இரு இயல்புகள் உண்டு என்பது முற்கூறப்பெற்றது. செயற்கை முறையால் அவர்களை நல்லவர் ஆக்கும் வழி,

 

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தி இருபச் செயல் (குறள் - 67)

 

என்ற குறளால் கூறப்படுகிறது. எனவே, இயற்கையாக அவர்மாட்டு அமையவேண்டுவன கூர்த்த அறிவும் சிறந்த மக்கட்பண்பும் ஆகும் என்பதை இங்குக் குறிப்பிட்டு விட்டார். இங்ஙனம் இயற்கையாகவே இவ் விரண்டும் அமைந்து செயற்கையால் பெற வேண்டிய அவையத்து முந்தி இருக்கும் நிலையையும் பெற்று விட்டால், ஒருவன் பெறவேண்டிய பகுதி முழுவதும் பெற்றவனாவான். இத்தகைய மைந்தனைப் பெற்றவன் மகிழ்ச்சியடையக் கேட்பானேன்? அதிலும் அம்மகனைச் 'சான்றோன்' என்று பிறர் கூறக் கேட்ட தாய், ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் என்பதிலும் வியப்பு என்னை? குறைபாட்டை அறியத் தாய் மனப்பான்மையால் முடியாது ஆகலானும், குணமும் குற்றமும் நாடிக் குணம் மிக்க வழியே 'சான்றோன்' என்று பிறர் கூறுவார் ஆகலானும், அவர்கள் கூறியதைக் கேட்டபொழுது அவள் பெரிதும் உவக்கும் எனக்கூறினார் ஆசிரியர்.

இத்தகைய பிள்ளைகளைப் பெருவதாலேதான் மனித மனம் விரிவடைகின்றது. தன்னலம் குடிகொண்டிருந்த மனத்தில் மனைவி இடம் பெற்று ஓரளவு விரிவடையச் செய்யினும், புதல்வர்ப் பேற்றின் பின்னரே மனிதன் முழுத் தன்மை அடைய முடிகிறது. அதன் பின்னரே சமுதாயத்தின் முழு உறுப்பாக ஒருவன் வாழ முடிகிறது. வாழை இருந்து பயன் உதவிய பின்னர் அதன் கீழ்க் கன்று தோன்றி அதே பயனை நல்குதல் போல, அவன் பிள்ளைகளும் ஏற்கெனவே பெற்றுள்ள அறிவு, பண்பு, கல்வி நலன் இவற்றால் சமுதாயத்திற்கு உதவும் சான்றோர்கள் ஆகின்றார்கள்.

 

வாழ்வாங்கு வாழ்தல்

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்தலின் அடிப்படை எங்கு உளது? இவ்வினாவிற்கு விடை பலர் பலவாறாகக் கூறுவர். ஆனால், எல்லா விடைகளையும் சேர்த்து ஒரு முடிபு காண முற்படல் வேண்டும். எத்தகைய வாழ்க்கையில், தனக்கும் பிறருக்கும் மிகுதியான பயன் உண்டாகிறதோ, அத்தகைய வாழ்க்கையையே 'வாழ்வாங்கு' வாழும் வாழ்க்கை என்ற முடிபுக்கு வருதல் கூடும். இந்த நிலையையும் சுருக்கிக் கண்டால், பிறர் பொருட்டு வாழ்வதே வாழ்க்கையின் நோக்கம் என்ற உண்மை தெற்றெனப் புலனாகும். மேலாகப் பார்க்கும் பொழுது அனைவரும் கடைபிடிக்க முடியாத ஒரு கொள்கை போலத் தோன்றும் இது. ஆழ்ந்து சிந்தித்தால், நாம் அனைவருமே வாழ்க்கையின் பெறும் பகுதியை பிறருக் காகவே வாழ்கிறோம் என்று அறிதல் கூடும். இது எவ்வாறு என்பதைக் காண்போம்.

 

தன்னலப்பிண்டம்

 

சிறு குழந்தையாய் இருக்கும் பொழுது ஒவ்வொரு வரும் தன்னலப் பிண்டமாகவே இருக்கிறோம் என்பதில் ஐயமின்று. புத்ததேவன்கூட இவ்விதிக்கு விலக்கன்று. தாய் தந்தையரை அறிந்து கொள்ளும் நிலை வந்த பின்புகூட இந்நிலை முற்றிலும் மாறுவதில்லை. பிறருடைய நலந் தீங்குகளை ஆராயாமல் தன்னுடைய நலத்தைக் கவனிக்கவே அனைவரும் உளர் என்ற மன நிலையில் குழந்தை இருக்கக் காண்கிறோம் அல்லவா? சாதாரண மாகத் தானே விளையாடிக் கொண்டிருக்கிறது ஒரு குழந்தை, ஆனால், தன் தாயுடன் யாராவது ஒருவர் பேச வந்தவுடன் தாயின் கவனம் வேறு இடம் செல்வதைக் குழந்தை பொறுப்பதில்லை. அவள் கவனம் முற்றும் தன்பால் வரவேண்டும் என்ற எண்ணத்தால், இது வரை சும்மா விளையாடிய குழந்தை, தாய் பிறருடன் பேச ஆரம்பித்தவுடன் அழத் தொடங்குகிறது. பேச்சை நிறுத்தித் தன்னைத் தாயானவள் தூக்கியவுடன் அழுகை நின்று விடுகிறது. ஆனால், சில வினாடிகளில் தாயின் மடியி லிருந்து இறங்கி விளையாட ஓடி விடுகிறது. இங்ஙனம் தொடங்கும் 'தன்னலம்' எளிதில் நம்மை விட்டுப் போவதில்லை. தோழர்களுடன் சேர்ந்து விளையாடும் குழந்தை கையில் வைத்திருக்கும் ஒரு பொருளைக்கேட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும். தன்பொருளைப் பிறரிடம் தர எளிதாக அக் குழந்தை உடன்படுவதில்லை.

 

பெரியோர் தன்னலம்

 

'தன்னலம்' என்று கூறினால் வெறுக்கத்தகுந்த சொல்லாய் அது விளங்குகிறது. ஆனால், நடைமுறையில் நடைபெறுவது அதுதான். குழந்தை தன் தின்பண்டத்தைத் தர மறுப்பதும், ஒரு நாட்டார் பிற நாட்டாருக்கு விடுதலை தர மறுப்பதும் இதே அடிப்படையில் தோன்றுவனவே. பாரசீக எண்ணெய்க் கிணறுகளை அந்த நாட்டினர் தேசிய மயமாக்கக் கூடாது என்று ஆங்கிலேயர் ஏன் கரைந்தனர்? வடகொரியர் தென்கொரியர் மேல் படையெடுப்பது பற்றி அமெரிக்கரும் இரஷியரும் கரைவதன் கருத்தென்ன? சுருங்கக் கூறினால், 'சுயநலம்' என்ற சொற்பொருள்தான் இச்செயல்கள் எனலாம். ஆனால் இவ்வாறு கூறினால் அவர்கள் ஒப்புக் கொள்ள மறுப்பார்கள். என்றாலும், உண்மை உண்மையே, இளமையில் உடன் பிறக்கும் இத்தன்னலம் இறுதி வரை மனிதனை விடாது பற்றி இருத்தலும் உண்டு; வயது ஏற ஏற அதிகப்படுதலும் உண்டு. ஒரோவழி ஒரு சிலரிடம் இது குறைந்து நாளாவட்டத்தில் அற்றுப் போதலும் உண்டு.

 

இரு வகைத் தன்னலம்

 

இங்கு தன்னலம் என்று கூறுவது தனிப்பட்ட ஒருவனுடைய நலத்தையும், ஓர் இனத்தின் நலத்தையும் குறிப்பிடுவதாகும். தனிப்பட்ட ஒருவன் தன் சொந்த நன்மையை விட்டுவிட்டுப் பிறருடைய நலத்தை நாட முற்படும் பொழுது அது உயர்ந்த ஒன்றாகக் கருதப் படுகிறது உண்மைதான். ஆனால், ஓர் இனம் முழுவதும் கூடித் தன் நலன் ஒன்றையே கருத்திற்கொண்டு அதன் பொருட்டு பிற சமூகத்தின் அல்லது இனத்தின் நலனைப் பாதிக்கக் கூடிய செயல்களைச் செய்தால், அதுவும் தன்னலம் என்றுதானே குறிக்கப்படும்? இந்தப் பரந்த பொருளிலும் முதலிற் குறித்த குறுகிய பொருளிலும், ஆக இரு பொருள்களிலுமே 'தன்னலம்' என்ற சொல் இங்குப் பயன்படுத்தப் படுகிறது.

தன்னலம் குழந்தையிடம் மிகுதியாகக் காணப்படு வதற்கு மனத்தத்துவ நூலார் பல்வேறு காரணங்கள் காட்டுவர். அவை நமக்குத் தேவை இல்லை. தன்னிடம் உள்ள இப்பண்பைக் குழந்தை மறைக்க முயல்வதில்லை. ஆனால், பெரியவர்கள் கூடுமான வரை இதைப் பிறர் அறியாதபடி நடந்து கொள்கிறார்கள். இவ்வாறு அனைவ ரிடத்திலும் காணப்பட்டாலும், இப்பண்பு உயர்ந்தது என்று கூறுவதற்கில்லை. மிகத் தாழ்ந்த ஒரு குணந்தான் இது. இப்பண்பு நிறைந்த ஒருவன் சமுதாயப் பிராணி அல்லன். பலருடன் கூடி வாழ அவன் தகுதி அற்றவன் ஆவன். ஆனால், இப்பண்போடு பிறக்கும் ஒருவன் தக்க வகையில் சமுதாயத்தில் வாழ வேண்டுமாயின் அதற்கு ஒரு வழிதான் உண்டு. அதாவது, இதனைக் கூடுமானவரை களைந்து எறிவதுதான். எவ்வளவுக்கெவ்வளவு இது ஒருவனிடமிருந்து கலையப்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவன் சிறந்தவன் ஆகலாம்; சமுதாயத்தில் சிறப்புடனும் வாழலாம்.

 

சீர்திருத்தம்

 

எவ்வாறு இதனைக் களைவது? நம்மையும் அறியாமல் நாம் சீர்திருந்தத்தான் செய்கிறோம். குழந்தையாய் இருந்த பொழுது ஒருவருக்கு ஒன்று தர மறுத்தவன், பெரியவன் ஆனவுடன் தன் மனைவி மக்கள் என்பவர்க்குத் தன் பொருளைப் பகிர்ந்து கொடுக்க முன் வருகிறான்; ஏன்? பல சமயங்களில் தன் நலந்தீங்குகளைப் பாராது அவர்கள் நலத்துடன் இருக்கப் பாடுபடுகிறான். இப்பொழுது பழைய தன்னலம் ஓரளவு அகல்கிறது. இன்னுஞ் சில காலங் கழித்துத் தன் மனைவி மக்கள் என்ற நிலைக்குப் பிறகு தன் சுற்றத்தார் என்பவர்கட்காகவும் தன்னுடைய வாழ்க்கை உளது என்பதை உணரத் தலைப்படுகிறான். அதன் பின்னர்த் தான் வாழ்க்கை நடத்தும் இடம், தெரு, ஊர், மாவட்டம், நாடு என்று அவனுடைய பற்று விரிவடையக் காண்கிறோம். ஆதியில் இருந்த தன்னலமே மாறி இங்ஙனம் விரிந்து இடம் தருகிறது. ஒரு சிலரைப் பொறுத்தமட்டில் அவர்கள் என்றும் ஒரே மாதிரியாக இருப்பதையும் உலகிடைக் காண்கிறோம். மனைவி மக்களுக்குச் சோறு போடுவதைகூடத் தருமக் கணக்கில் எழுதும் ஒப்பற்ற பிறவிகள் அவர்கள். ஆனால், பெரும்பாலார் முன்னர்க் கூறிய முறைப்படி விரிந்து செல்லும் பற்றுடையவரேயாவர்.

இனி இத்தன்னலம் ஏன் இவ்வாறு பரிணமித்து விரிகிறது என்பதைக் காண்டல் வேண்டும். இது தானாக விரிவடையும் ஒன்றா, அல்லது நாமாக இதனை விரிவடையச் செய்ய வேண்டுமா? நாமாகத்தான் இதனை விரிவுபடுத்த வேண்டும். மனித மனத்தை அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கல்லாகும் இத்தன்னலம் என்பது. இதனை அப்பால் புரட்ட வேண்டுமானால், வலுவான ஓர் இரும்புக் கம்பி வேண்டும். அக்கம்பிதான் 'அன்பு' என்பதாகும். அன்பு எனும் கம்பியின் அடியில் 'உறுதி' என்னும் ஆப்பை வைத்து நெம்பினால், தன்னலம் என்னும் பெறுங்கல் புரண்டு விடும்.

 

அன்பு

 

அன்பு என்பதும் இயற்கையில் மனித மனத்தில் அமைந்து விட்ட ஒரு பண்பாகும். இதனை நன்கு வளர்ப்பவர் முழு மனிதன் ஆகமுடியும். இஃது இல்லாதவரை மனித இனத்திற்கூடச் சேர்த்தல் அரிது என்பர் ஆசிரியர் வள்ளுவர்.

 

என்புஇல் அதனை வெயில்போலக் காயுமே

அன்புஇல் அதனை அறம்.' (குறள்-77)

 

அன்பின் வழியது உயர்நிலை; அஃதுஇல்லார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு. (குறள்-80)

 

என வரும் குறட்பாக்கள் இக்கருத்தை வலியுறுத்தல் காண்க. இவ்வன்புடையாரே சமுதாயத்தில் நன்கு வாழ முடியும். தன்னைத்தானே பெரிதும் பற்றி நிற்கும் இந்த அன்பு விரிந்து முதல் முதலில் குடும்பத்தில் படருகிறது.

அந்நிலையை எளிதில் அறிந்துகொள்ள இயலும். எப்பொழுது ஒருவனுக்குக் குழந்தைகளிடம் உண்மை அன்பு சுரக்கிறதோ, அப்பொழுது 'குழலும், யாழும்' ஓரளவு அவனுக்குச் சுவை குறைந்துவிடும். அவர்கள் மெய் தீண்டியவுடன் உடலுக்கு ஒரு புதிய இன்பம் தோன்றும். அவர்கள் சிறு கை அளாவிய கூழ் அமிழ்தினும் ஆற்ற இனிமையுடையதாகக் காணப்படும். தனது ஐம்பொறிகளா லும் அவர்களுடைய இன்பத்தை ஒருவன் அனுபவிக்கத் தொடங்குகையிலேதான் அவன் அன்பு முழு விளக்கம் பெற்றதென்று கூறமுடியும்.

இத்தகைய அன்பு ஒன்றே மனிதனை வையத்துள் வாழ்வாங்கு வாழ வகை செய்து, பின்னர் அவனை வானுறையும் தெய்வத்துள்ளும் ஒருவனாகச் செய்கிறது. தன்னலம் போல இயற்கையாகவே ஒருவன்மாட்டுத் தோற்றுகிற இந்த அன்பானது, அவனாலேயே போற்றி வளர்க்கப்படல் வேண்டும். அவ்வாறு வளர்ப்பதனாலேயே அவன் சமுதாயத்தில் சிறந்த உறுப்பினன் ஆதல் கூடும். முன்பின் அறியாதாரிடத்து அன்பு செலுத்திப் பழகுதல் எளிதன்று. எனவே, தன் மக்களிடத்திலேயே அதனை முதலிற்செய்து பழக, ஆசிரியர் வழி வகுத்தார். தன்னலம் என்னும் பேய் பிடித்தவனை அப் பேயினிடத்திருந்து விடுவிக்கவே குழந்தைச் செல்வம் பயன்படுகிறது.

 

இசை வெறுக்கிறதா?

 

இசை வெறுக்கிறதா உங்கட்கு? குழலும், யாழும் வெறுப்புத் தட்டுகின்றனவா? இவ் வினாவைக் கேட்டாள் விடை தரப் பலரும் கூசுவர். உலக மகாகவி 'ஷேக்ஸ்பியர்' கூறியது போல 'இசையில் ஈடுபடாதவன் எக் குற்றவமும் செய்வான்,' என்ற முறையில் தம்மைப் பற்றிப் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற கருத்தால் உண்மை கூற மாட்டார்கள். உலகில் பிறந்த மக்கள் அனைவரும் ஓரளவாவது இசையில் ஈடுபடத்தான் செய்வர். விலங்கினங்களிற்கூடப் பல இசையில் ஈடுபடும் என நூல் கள் கூறுகின்றன. மதங்கொண்ட யானையும் இசைக்குக் கட்டுப் பட்டு நிற்குமாம்.

 

காழ்வரை நில்லா கடுங்களிற்று ஒருத்தல்

யாழ்வரைத் தங்கியாங்கு (பாலைகலி-1)

 

எனக் கலித்தொகை கூறுவதால் இவ்வுண்மை நன்கு விளங்குகிறது.

 

இனிய மழலை

 

கண்ணன் குழல் வாசித்தபொழுது மாடுகளும் ஏனைய கொடிய விலங்குகளும் அவன் இசையில் ஈடுபட்டு அப்படியே நின்றுவிட்டன என்றும், ஆனாயர் குழல் ஊதியபொழுது,

 

'மரங்கள் மலர்ச்சினை சலியா; கான்யாறும் கலித்து ஒடா'

 

என்று கூறப்படுகிறது. இத்துணைச் சிறப்பு வாய்ந்த இசையில் ஈடுபடாத மனம் உடையார் இருக்கவும் கூடுமா? இவ்வாறு இருக்கவும், ஆசிரியர்,

 

குழல்இனிது யாழ்இனிது என்ப தம்மக்கள்

மழலைச் சொல் கேளாதவர் (குறள்-66)

 

என்று கூறக் காரணம் என்னை? இக்குறளுக்கு உரை கூற வந்த ஆசிரியர் பரிமேலழகர், 'இசையைக் கேட்டவர் அவற்றினும் மழலைச் சொல் இனிது என்பார் என்பது குறிப்பெச்சம்.' என்று பொருள் எழுதிச் சென்றார்.

இக்குறளில் வள்ளுவப் பெருந்தகை கூறியது உயர்வு நவிற்சி அணியா என்பது ஆராய்தற்குரியது. இதற்கு முன்னர் உள்ள குறளிலும் 'அவர்தம் சொல் கேட்டல் இன்பம் செவிக்கு' என்று கூறப்பெறுகிறது. இவ்வாறு இரண்டு இடங்களிற் கூற்றவேண்டுமாயின், தக்க காரணம் இல்லாமல் ஆசிரியர் கூறமாட்டாரன்றோ?

 

இசையில் ஈடுபடுபவர்

 

குழல், யாழ் முதலிய இசைக் கருவிகளில் இசை தோன்றுகிறது. இந்த இசையில் அனைவருமா ஈடுபடு கின்றனர்? இல்லையே! காரணம் என்ன? சிலர் இசையில் தம்மையே மறந்துவிடுகின்றனர்; சிலர், இசையைத் தலையிடியாகக் கருதுகின்றனர். ஈடுபடுத்தும் இயல்பு இசையினிடம் மட்டும் காணப்படுமானால், அனைவரையு மல்லவா அது ஈடுபடுத்த வேண்டும்? எனவே, இசையில் ஈடுபடுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு என்பது விளங்கும். ஒன்று, இசை ஈடுபடுத்தும் தன்மை பெற்றதாய் இருத்தல் வேண்டும். இரண்டாவது, அதனைக் கேட்பவர் தக்க மனநிலை உடையவராய், பண்பட்ட மனம் உடையவராய், இருத்தல் வேண்டும். இவை இரண்டும் சேரும் பொழுது இசை இனிமையாய் இருக்கிறது. இந்த நிலையில் என்ன நடைபெறுகிறது என்பதைக் காண்டல் வேண்டும்.

நல்ல பண்பட்ட மனம் உடைய ஒருவர் இசையைக் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய நான்கு பொறிகளும் வேலை அடங்கச், செவி ஒன்று மட்டுமே தொழிற்படுகிறது. மனமும் அச் செவிக்கு உறுதுணையாய் இருந்து இசை இன்பத்தில் ஈடுபடுகிறது. கேட்கக் கேட்க மனம் அடங்கி ஒன்றிவிடுகிறது. இந்த 'ஒன்றல் தன்மை' (Harmony) தான் இசை நமக்குத் தரும் பெரிய செல்வம். இந்நிலையில் ஒன்றி இருக்கும் ஒருவருக்கு மனம் மாறுபட்டாலும் இசை 'அபஸ்வரம்' ஆகிக் கேட்டாலும் மறுபடியும் ஒன்றல் தன்மையை அடைவது இசையில் இயலுமாயினும், அவ்வொன்றலின் பயனாக அன்பு பிறப்பதில்லை. ஒன்றல் தன்மை நாளா வட்டத்தில் தன்னலம் என்ற இயல்பை மறக்க உதவும் என்பது உண்மையே. கலைஞன் 'தான்' என்ற அகங்காரத்தை மறந்து உயர்நிலை அடைவது இவ் ஒன்றல் தன்மையாலேயே ஆகும்.

 

இசை ஈடுபாடு போதாது

 

ஆனால், சமுதாயத்தில் ஓர் உறுப்பாய் இருந்து பிறருக்கும் தனக்கும் பயன்படும்படி வாழ்வை நடத்த வேண்டிய கடப்பாடு உடைய ஒருவன், இத்தகைய ஒன்றல் தன்மை மட்டும் பெற்றிருந்து பயன் இல்லை. அவனுடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு அது பயன்படுமாயினும், பிறருக்கு அவன் பயன்படமாட்டான். இசையில் ஈடுபட்டுத் தன்னை மறக்கும் இயல்பால் சமுதாயத்திற்கு ஒருவன் என்ன பயனை விளைக்க முடியும்? எனவே, சமுதாயத்தில் வாழும் ஒருவன் மனம், வேறு வகையில் பழக்கப்படுத்தப்பட வேண்டும். அவன் வாழ்க்கை நன்கு நடைபெற ஒரே வழிதான் உண்டு. அதாவது அவன் அன்பு நிறைந்த மனத்தைப் பெறல் வேண்டும். அன்பைப் பெற வழி யாது? குழந்தைகளிடந்தான் மனிதனுடைய அன்பு நன்கு வளர்கிறது. குழந்தைகளிடத்தில் பழகுவதில் தனிப்பட்ட ஓர் இன்பத்தையும் அவர்கள் மழலையைக் கேட்பதில் ஒரு தனி மகிழ்ச்சியையும் எவன் பெற முடிகிறதோ, அவனே முழுத் தன்மை பெற்ற மனிதனா கிறான். மனிதன் முழுத் தன்மை பெற இது ஒரு வழி என்பதைப் பழங்காலத் தமிழன் நன்கு கண்டிருந்தான். இதனாலேயே இலக்கியத்திலும் குழந்தை இடம் பெற்றது. பிற்காலத்தில் குழந்தையைப் போற்றப் 'பிள்ளைத் தமிழ்' என்ற தனி இலக்கியமே தோன்றலாயிற்று.

 

இத்தகைய அரிய, குழந்தை இன்பத்தில் ஈடுபடுவது எளிது என்பதும் நோக்கற்பாலது. மனிதன் பொறிகளின் வழி இசையை அனுபவித்துத் தன்னினும் வேறுபட்ட அந்த இசையில் சென்று ஒன்றுவதைக் காட்டிலும் சுலப மானது குழந்தையினிடம் ஒன்றுவது. குழந்தை என்பது தந்தையின் 'நகல்' அல்லது 'பிரதி' தானே? தானே வேறு வடிவமாய் இருக்கிறது அக்குழந்தையிடம் ஒருவன் ஒன்றுவது எளிது அன்றோ? எனவே, குழந்தையிடம் உண்மையான அன்பு நிறைந்த ஒருவனுக்குக் குழலும் யாழும் ஓரளவு வெறுத்துவிடும் என்பது உண்மையன்றோ? இக்கருத்தை வலியுறுத்தும் அகநானூற்றுப் பாடல் ஒன்று நினைவு கூர்வதற்குரியது.

 

குழல் வெறுத்த தலைவன்

 

தலைவன் ஒருவன் பரத்தை வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டான். புதிய ஆடை அணிகளால் தன்னை அலங்காரம் செய்துகொண்டு தேர்மேல் ஏறி வருகின்ற அத்தலைவன், தன்னுடைய புதல்வன் வீதி வழியே தளர நடையுடன் நடந்து வருவதைக் கண்டான்; தேர்ப் பாகனுக்குத் தேரை நிறுத்துமாறு உத்தரவிட்டான்; கீழே இறங்கிக் குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தான்; குழந்தை அவனை விட மறுத்து, அழத் தொடங்கி விட்டது. தலைவன் வேறு வழியின்றித் தவித்தான். பரத்தை வீட்டில் அவன் வரவை எதிர்பார்த்து இசை முழக்கம் நடைபெறுகிறது. அவனை வா என அழைப்பது போல் அந்த இசை அவனுடைய காதில் வந்து விழவும் குழந்தையினிடம் கொண்டுள்ள அன்பால் தலைவன் பரத்தை வீடு செல்லாமல் நின்றுவிட்டான். இக் கருத்தை அழகிய அகப்பாடல் குறிக்கிறது.

 

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

மறுமை உலகமும் மருவின்று எய்துப

செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்

சிறுவர்ப் பயந்த செம்ம லோர்எனப்

பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்

வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி!

நிறைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு

வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்

இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்

மாண்தொழின் மாமணி கறங்கக் கடைகழிந்து

காண்டல் விருப்பொடு தளர்புதளர் போடும்

பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர்

தாங்குமதி வலவஎன்று இழிந்தனன் தாங்காது

மணிபுரை செய்வாய் மார்பகஞ் சிவண புல்லிப் பெரும .....

இமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனை

பயிர்வன போலவந் திசைப்பவும் தவிரான்

.....அழுங்கினன் அல்லனோ.... (அகம்-67)

 

இசையில் ஈடுபடுகிற ஒரு மனம் மட்டுமன்று இப் பாட்டில் காணும் தலைவனுடைய மனம்; அதையும்விட அவன் பரத்தைமாட்டு விருப்புக்கொண்டு புறப்பட்டான் அன்றோ? இவ்வாறு இருந்தும் அவன் இரண்டு இன்பங்களையும் துறந்துவிட்டு இருப்பதற்குக் காரணமாய் இருந்தது எது? தலைவிக்கு வருத்தம் உண்டாகும் என்ற பெருநோக்கத்தால் அவன் நின்றுவிடவில்லை. அவ்வாறா யின், அவன் புறப்பட்டிருக்கவே மாட்டான். ஊரார் அவனை ஏளனம் செய்வர் என்பதற்காகவும் அவன் நின்றுவிடவில்லை. அவ்வாறாயின், பலர் அறியத் தேரில் ஏறிக்கொண்டு புறப்பட்டிருக்கமட்டான். பின்னர் ஏன் அவன் செலவு தடைப்பட்டது? மனைவிமாட்டுக் கொண்ட காதலினும், பிறர் பழிச்சொல்லில் கொண்ட அச்சத்தினும், வலிய ஒன்றால் அன்றோ அவன் போவது தடைப்பட்டது? அது எது? அவன் குழந்தைமாட்டுக் கொண்டிருந்த அன்புதான். குழந்தையிடம் இத்தகைய அன்புடைய ஒருவனுக்கு இசை வெறுத்து விடும் என்பதில் ஐயம் என்ன? ஆம்! குழல் இனிது, யாழ் இனிது என்பர்; யாரென்றால், 'தம் மக்கள்' மழலைச் சொல் கேளாதவர். 'தம் மக்கள்' என்று ஆசிரியர் கூறியது ஆராயத்தக்கது. மேலும் 'அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்' என்றும் கூறுகிறார் அன்றோ? பொது வாகக் குழந்தைச் செல்வதில் ஈடுபட்டு இன்பம் அடையும் ஒரு நிலை எளிதன்று.

இல்வாழ்க்கையை அன்புப் பெருக்கத்திற்கு அடிப் படியாக வைக்கிறார் ஆசிரியர் என்பது முன்னமே கூறப பெற்றது. அந்த அன்பு பெருக வேண்டின், அவன் குழந்தையிடந்தான் அவனுக்கு அன்பு பெருகமுடியும். இத்தகைய அன்பைத் தம் குழந்தையிடங்கூடப் பெறாது வாழும் சில 'புண்ணியவான்களும்' இவ்வுலகில் உண்டு. ஆனால், மனிதன் மனிதத் தன்மை அடையக் குழந்தை ஒரு நல்ல 'சாதனமாகும். ஒருவனுடைய அன்புவளர்ச்சி எந்நிலையில் உள்ளது என்பதை அறியத் தகுந்த அளவு கோலாகும் இது. என்றைக்கு ஒருவனுக்குத் தன் மக்களின் மழலை, இசையைவிட இனிமையுடையது ஆகின்றதோ, அன்று அவன் இல்வாழ்வின் பயனைப் பெற்றுவிட்டான் என்றே கூறிவிடலாம்.

 

அதிகார முறை வைப்பு

 

மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானால், 'அன்பு' என்ற ஒரு பண்பு அவனிடம் நிறைந்து இருத்தல் வேண்டும். இப்பண்பு ஒருவனிடம் காணப்பெறும் அளவை நோக்கித்தான் ஒருவனை ஆத்துமா என்றும் மகாத்துமா என்றும் பிரித்துக் கூறுகிறோம். வேண்டத்தக்க இப்பண்பை வளர்க்கும் வழி அறிந்துகொள்ள வேண்டாவா? அதற்கு உற்ற வழி இல் வாழ்வும் அதன் பயனாகிய குழந்தைப் பேருமே என்று ஆசிரியர் வள்ளுவர் குறிக்கிறார். அன்புடைமை என்ற அதிகாரம் புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தின் பின்னர் அமைந்திருப்பது அறிந்து மகிழ்தற்குரியது. இவ்வதிகார முறை வைப்பு வள்ளுவர் செய்ததுதானா என்ற உண்மை இன்று பலராலும் ஆராய்ச்சி செய்யப்படினும் இங்ஙனம் சில அதிகாரங்கள் அவர் வகுத்தவை என்பதற்கு ஐயமின்று.

 

இது வாழ்வா?

 

சிறு குழந்தை முதல் பெரியவர் வரை காணப்படும் இவ்வகன்ற உலகம் நன்கு வாழ்வதற்கு இன்றியமையாது வேண்டப்படும் ஒரு கருவியாகும் அன்பு என்பது. இஃது இல்லையாயின், வாழ்க்கை அல்லது குடும்பம் என்று ஒன்று நடைபெற முடியுமா என்பதை நினைந்து பார்க்க வேண்டும். தாய்க்குக் குழந்தையிடம் அன்பு இல்லை யானால் குழந்தை வளர்வது எப்படி? தந்தைக்குக் குடும்பத்தில் அன்பு இல்லையானால், குடும்பம் நடைபெறுவது எங்ஙனம்? சுருங்கக் கூறின், உலகமும், அதில் மக்களும் வாழ முடியாது, அன்பு இல்லையாயின் இது கருதித்தான் ஆசிரியர்,

 

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம்தளிர்த்து அற்று. (குறள்-78)

 

என்று கூறினார். வலிய பாறையில் விறகுக் கட்டை தளிர்க்கப் போவதுமில்லை; அன்பு இல்லாத குடும்பம் நன்கு வாழப் போவதுமில்லை.

 

போலி வாழ்வு

 

அன்பு என்னும் பண்பை ஒருவர் பெற்றிருக்கிறார் என்பதை எவ்வாறு அறிவது? இத்துணைச் சிறப்புப் பொருந்திய இப்பண்பை ஒவ்வொருவரும் பெற்றுள்ளது. போலவே நடித்தால் அதனை எவ்வாறு நம்புவது? உண்மை அன்புடையாரை அறிதற்கு அவர் வாய்மொழியைக் கருவியாகக் கொள்ளலாமா? கூடாது என்கிறார் ஆசிரியர். அன்பிலாருங்கூட, வாய்ச் சாமர்த் தியத்தால் அன்புடையார் போல நடிக்கவுங் கூடுமன்றோ? எனவே, அன்புடையாரை அறிய ஒரு வழி வகுக்கிறார் ஆசிரியர். அன்பு செய்யப்பட்டோரைக் கண்ட மாத்திரத்தே பொங்கி வழியும் கண்ணீரே அன்பை வெளிப்படுத்தும் சாதனமாகும். அன்புடையார் வாய் பேசாதுகூட இருக்கலாம். என்றாலும், அவர் கண்கள் உண்மையை உலகறியப் பறை சாற்றிவிடும். அன்புடைய ஒருவனுக்கும், அவன் கொண்டுள்ள அன்புக்கும் தொடர்பு எவ்வாறுளது? அன்பு என்ற பண்பை ஒருவன் எவ்வாறு பெறுவது? பெற்று வளர்க்கக் கூடிய ஒன்றா அது? இருக்கலாம். ஆனால், பெற்றுவிட்ட பின் ஒருவனுடைய புறத்துணையாகிய வேட்டி, சட்டை போன்று வேண்டுமான பொழுது போடவும் கழற்றவும் கூடிய ஒன்று அன்று அது. மனிதன் உடம்பு எடுத்ததன் பயன் அன்பு செய்தலேயாம் என்று கூறுகிறார் ஆசிரியர்.

 

அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு. (குறள்-73)

 

என்ற குறளால் பெறுதற்கு அரிய ஓர் உண்மையைக் கூறுகிறார். கேவலம் இந்த உலகில் மட்டும் செம்மையாக ஒருவன் வாழ்ந்தாற் போதுமா? மறுமையிலும் அவன் சிறப்புடைய ஒரு வழி உண்டானால், அதுவே அன்புடைமை ஆகும் என்கிறார். அன்புடையார் இம்மை மறுமை என்ற இரு பயன்களையும் பெறுவர். வீடு பேற்றை இப்பிறவியில் பெற்றுயர்ந்த பெரியார் அனைவரும் கையாண்ட சுருங்கிய வழி இஃது ஒன்றுதான். இயேசு நாதர், இராமகிருஷ்ணர் போன்ற ஜீவன் முக்தர்கள் வேறு என்ன அரிய காரியத்தைச் செய்தனர்? அன்புடைமை ஒன்றே அவர்கட்கு வீட்டை அளித்தது. திருத்தொண்டர் புராண வரலாறுகளை அறிந்தவர்கட்கு இவ்வுண்மை நன்கு விளங்கும். சிறுத்தொண்டர், இயற்பகையார், மெய்ப் பொருள் நாயனார் போன்ற அடியார்கள் செயற்கருஞ் செய்கை செய்தார்கள். ஆனால், ஆனாயர் போன்றார் எவ்விதச் செயற்கரிய செயலையுஞ் செய்யவில்லை. அன்புடைமை ஒன்றே அவர்கள் வாழ்வை ஈடேற்றியது. இத்தகையவர்கள் கொண்டிருந்த அன்பு எப்படிப்பட்டது?

 

அன்பே தாமாதல்

 

இவர்கள் கொண்டிருந்த அன்பு வேறு, இவர்கள்வேறு என்று பிரித்துக் காண்பது இயலாத காரியம். அன்பு எனும் பண்பைத் தாங்கினார்கள் இவர்கள் என்று கூறுவதற்கில்லை. இவர்களே அன்பின் வடிவம் என்று தான் கூறவேண்டி உளது. கண்ணப்பரைப் பற்றிக் கூற வருகிறார் சேக்கிழார். தான் என்ற முனைப்பை அறவே களைந்துவிட்டு இறைவரைத் தம் தோழராகவே மதித்து, அவருக்காக வேட்டை ஆட வந்த அப்பெருந்தகையை என்னவென்று வழங்குவது?

 

அன்பு பிழம்பாய்த் திரிவார், அவர் பெருமை அளவிற்றோ (பெ.பு-803)

 

என்று கூறுகிறார் கவிஞர். இறைவனைப்பற்றிக் கூறிய இடங்களில் எல்லாம்,

 

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!

அன்பெனும் குடில் புகும் அரசே! (திருவருட்பா-1)

 

என்றெல்லாம் கூறினார் வள்ளலார். ஆனால் சாத்திரஞ் செய்த திருமூலர்,

 

அன்பும் சிவமும் இரண்டு என்பார் அறிவிலார் (திருமந்திரம்-279)

 

என்று கூறியதோடு அமையாது, 'அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்' என்றும் அல்லவா கூறிப் போந்தார்? 'அன்பே சிவமாவது' என்பதன் கருத்து என்ன? இறைவர் அன்பே வடிவாக உடையார் என்ற ஒரு பொருள் நிற்க. அன்பே இறுதியில் சிவமாக ஒருவரை ஆக்கிவிடும் என்பதும் ஒரு பொருள் அன்றோ? பிறவிக்கடல் நீந்த வேண்டும் என்று நினைப்பவர்க்கு அன்புதான் புணையாகிறது. ஏனைய துறவு நிலை முதலியனவும் வீடு பேற்றைத் தரினும், இவ்வுலகில் கடுந்துன்பத்தை அனுபவிக்கச் செய்கின்றன அவை. ஆனால், இவ்வுலகிலும் இன்பம் அனுபவித்து மறுமையிலும் வீடுபேற்றை அளிக்கவல்லது ஒன்று உண்டு எனில், அது 'அன்பு' என்ற ஒன்றுதான். இது கருதியே ஆசிரியர்,

 

அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து

இன்புற்றார் எய்துஞ் சிறப்பு. (குறள்-75)

 

அன்பின் வழியது உயிர்நிலை;,அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு. (குறள்-80)

 

என்றும் கூறினார்.

 

அன்பின் இரு பயன்கள்

 

பிறவிக்கடல் நீந்தப் பெரும்புணையாகும் இவ்வன்பு, சமுதாயத்தில் ஒருவன் நன்கு வாழவும் வழிவகுத்துத் தருகிறது. இக்கால உலகில் வாழும் ஒருவன் காலையி லிருந்து மாலை வரை எத்துணைப் பேர்களுடைய உதவியை நாடி வாழ வேண்டியவனாய் உள்ளான்? கேவலம் பணம் ஒன்று மட்டும் இருந்தால் மன அமைதியுடன் வாழ்ந்துவிட முடியுமா? எவ்வளவு பணம் இருப்பினும் மனிதர் உதவி வேண்டும்', என்பன போன்ற பழமொழிகள் எவ்வளவு உண்மையை அறிவுறுத்துகின்றன! மனிதர் உதவி தேவை என்றால் அதைப் பெறுதல் யாங்ஙனம்? எல்லா மனிதரையும் விலைக்கு வாங்குதல் என்பது நடைபெறக் கூடியதா? பணத்தைக் கண்டு பரக்க விழிக்காதவர்களை என் செய்வது? இத்தகையவர்களை நமக்கு நண்பர்களாகச் செய்வது எது? ஆசிரியர்,

 

அன்புஈனும் ஆர்வ முடைமை; அதுஈனும்

நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. (குறள்-74)

 

என்ற குறளால் விடை கூறுகிறார். ஏனைய வசதி ஒன்றும் இல்லாதவர் பலர், பல நண்பர்களைப் பெற்று அரிய காரியங்களைச் சாதித்தலைக் காண்கிறோம். இவர்கள் செல்வாக்கின் காரணத்தை ஆராய்ந்து பார்த்தால், 'அன்பு என்ற ஒன்றைக் கொண்டே இவர்கள் இப்பெருநிலையை அடைந்தார்கள் என்பதை நாம் நன்கு அறியலாம். அன்புடையார் சமுதாயத்தில் பெருஞ்செல்வாக்கு அடையக் காரணம், அவர்கள் தமக்கு என ஒன்றையும் ஏற்காமைதான் 'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' (குறள்-2) என்ற குறளை உண்மையிலேயே நடத்திக் காட்டும் இயல்பினர்க்கு வேண்டும் சிறப்புத் தானே வந்து எய்தும்.

 

பழைய குறள்-புதிய பொருள்

 

உலகிடை நடைபெறும் செயல்கள் அனைத்தையும் ஆய்ந்து பார்த்தால் அனைத்தும் அன்பின் வழிப்பட்ட செயல்களாகவே இருக்கக் காணலாம். ஒருவனுக்கு மற்றவன் செய்யுந் தீங்குகூட அன்பினால் செய்யப்படுவது தான் என்றால், யார் நம்புவார்கள்! ஆனால், உண்மையில் உலகில் நடைபெறும் அனைத்துச் செயல்களும் அன்பினாலேயே நடைபெறுகின்றன. செயலளவில் இன்பம் பயப்பனவும், துன்பம் பயப்பனவும் எனச் செயல்கள் இருவகைப்படும். ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு குழந்தைக்கு வெப்பு நோயும், மற்றொன்றுக்கு வயிற்றுக் கடுப்பும் இருக்கின்றன. முதற் குழந்தைக்குக் கசப்பு மருந்தும் மற்றொன்றிற்கு இனிப்பு மருந்தும் தருகிறாள் தாய்; கசப்பு மருந்தை உட்கொள்ளாத குழந்தையைக் காலில் போட்டுப் பிடிவாதப்படுத்திப் புகட்டுகிறாள். அதனால் அக்குழந்தை தன் தாய்க்குத் தன்மாட்டு அன்பு இல்லை என்றும், தனக்குக் கசப்பு மருந்தே தருகிறாள் என்றும், அடுத்த குழந்தைக்கு அன்புடைமையின் இனிப்பு மருந்து தருகிறாள் என்று நினைத்துக் கொண்டால், இப்பிழை யாருடையது? கசப்பு மருந்தை ஊட்ட வேண்டித் தாய் குழந்தையின் துன்பத்தைப் பாராது காலில் போட்டு அமுக்கினது உண்மைதான். செயலளவில் இது அன்புச் செயலன்று; மறச் செயல்; கொடுமை உடைய செயல் என்றுதான் கூற வேண்டும். வழியே செல்கின்ற ஒருவனை மற்றொருவன் கத்தியால் குத்திவிடுகிறான் என்றால் அதற்குரிய தண்டனை என்ன என்பதை நம்மில் பலரும் அறிவோம். ஆனால், அறுவை வல்லுனரான ஒரு வைத்தியர் நோயாளி ஒருவரை அறுக்கிறார்; அதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான ரூபாய்களையும், நோயாளி யின் நன்றியறிதலையும் பரிசிலாகப் பெறுகிறார். ஏன்? செயலளவில் மருத்துவர் செய்வது மறச் செயல்தான்? 'ஐயோ! அம்மா!' என்று நோயாளி கதறுவதையும் பொருட்படுத்தாமல் அவனுடலை அறுத்தல் மறச்செயல் தானே? ஆனால், செயலளவில் மறமாய் இருப்பினும் அவருடைய கருத்து நோயாளிக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதன்றோ? இது கருதித்தான் ஆசிரியர்,

 

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை (குறள்--76)

 

என்று கூறினார். தாய் தந்தையர் மகனைக் கடிவதும், மருத்துவர் அறுத்து ஊறுபோக்குவதும் அன்பால் விளைந்த செயலேயன்றி வேறு இல்லை.

 

எனவே, சமூகத்தில் வாழ்பவனுக்கும், துறந்து வீடுபேற்றை நாடுபவனுக்கும் அன்பு இன்றியமையாது வேண்டப்படும் என்பது இதனாற்பெறப்படும்.

 

இல்லறப் பயன்

 

அன்புடையார் செய்யும் இல்லறத்தில் விருந்தோம்பல் மிகுதியாகக் காணப்பெறும். விருந்தை உபசரிப்பதில் என்ன அவ்வளவு சிறப்பு இருக்கிறது என்று வினவத் தோன்றுகிறதன்றோ? விருந்தினரை எவ்வளவு தூரம் ஒருவன் போற்றி வாழ்கிறானோ, அவ்வளவு தூரம் அவன் சமுதாயத்தில் சிறந்து வாழ முடியும். விருந்து என்றவுடன் தன் உற்றார் உறவினருக்கு ஒருவன் செய்யும் உபசரிப்பைப் பற்றி நினைந்து விடக்கூடாது. உற்றார் உறவினர் என்பவர் வேறு, விருந்து வேறு என்பதைக் காட்டவே 'தென்புலத்தார், தெய்வம் விருந்து ஒக்கல், தான்' (43) என்று ஐந்து வகைப்படுத்திக் காட்டினார் ஆசிரியர். இங்கு ஒக்கல் என்று அவர் குறிப்பிடுவது உற்றார் உறவினர் என்பவரை யேயாகும். எனவே, விருந்து என்றது இவரினும் வேறுபட்டாரையாகும். புதியவர்களாக வருபவர்களும், என்றோ ஒரு நாள் வருகின்றவர்களுமே விருந்து என்ற தொகையில் அடங்குவார்கள். மேலே கூறிய ஐந்து வகையினரையும் உபசரிக்க வேண்டுவது இல்லறத்தானின் கடைமையாய் இருப்பினும், அவ்வைவர் உள்ளும் தலையா யவர் 'விருந்தினர்' என்பதைக் காட்டவே 'அன்புடைமை' என்ற அதிகாரத்தின் பின்னர் 'விருந்து ஓம்பலை' வைத்துள்ளார் ஆசிரியர்.

சமுதாயத்தில் வாழும் ஒவ்வொருவனும் தன் கடமைகளில் ஒன்றாக விருந்தோம்பலைக் கொள்ள வேண்டும் என்பதே ஆசிரியர் கருத்துப் போலும்! அன்றேல்,

 

இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற்பொருட்டு. (குறள்--81)

 

என்று கூறியிருக்க மாட்டார். விருந்தினரை வரவேற்பதற் காகவே இல்லறம் நடத்துகிறோம் என்று அவர் கூறுவதில் எவ்வளவு உண்மைகள் அடங்கி உள்ளன! இல்லறம் நடத்துபவன் சமுதாயட்டில் ஓர் உறுப்பாகிறான். எனவே, நாட்டிற்கும் அவன் உற்ற ஒரு துணை ஆகிறான். அத் தகையவன் சமுதாயத்தோடு சேர்ந்து வாழவேண்டும் என்றால், அவனுக்கு நட்பு அதிகமாக இருத்தல் வேண்டும். நட்பினர் மிகுதியாதற்கு விருந்தோம்பல் ஒரு சிறந்த வழி அன்றோ?

 

ஓர் அறம்

 

இதன்றியும் மனிதனின் கடமை ஒன்றை நிறைவேற்ற வும் விருந்தோம்பல் பெரிதும் பயன்படுகிறது. பசித்து வந்தவர்க்கு ஒரு பிடி சோறு தருதலைக் காட்டிலும் சிறந்த அறம் வேறு யாது உளது? ஏற்றலுக்கு உரிய மனப் பான்மை இல்லாமலும் அதற்கு மனம் துணியாமலும் உள்ள ஒருவரை எவ்வாறு உச்சரிப்பது? அவர் எக் காரணத்தாலும் ஒருவரிடம் சென்று உணவு வேண்டும் என்று இரக்கமாட்டார். அத்தகைய ஒருவரை விருந்தின ராகக்கருதி அழைத்து உபசரித்தாலன்றி, வேறு எவ்வழியில் அவரைப் போற்ற முடியும்? இது கருதியே போலும் விருந்தினரைப் புறத்தே வைத்து உண்ணலாகாது எனக் கட்டளை இடுகிறார்.

 

விருந்து புறத்ததாத் தான் உண்டல் சாவா

மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று. (குறள்-82)

 

என்ற குறளை உற்று நோக்குக. சாவாமையைத் தரும் அமிழ்தமாயினும் விருந்தைப் புறத்தே வைத்து உண்ணற்க என்று பொருள் கூறுவதைக் காட்டிலும் திரு அரசன் சண்முகனார் கூறியதாகக் கூறும் உரை இன்னும் அழகாக அமைவதைக் காணலாம், 'விருந்து புறத்ததாத் தான் உண்டல் சாவாம்' என்று கூறுவாராம் அவர். விருந்தைப் புறத்தே வைத்துவிட்டு உண்ண வேண்டாவென்று கூறுவதைக்காட்டிலும், உண்டால் அது சாவைத் தவிர வேறு அன்று என்பதே இதன் பொருள். 'உண்பது மருந்தாக இருந்தால் என் செய்வது? நோயுடையார் மட்டுமே உண்ண வேண்டிய மருந்தாயின் என்செய்வது?' என்பாரை நோக்கி. 'மருந்து எனினும், அவ்வாறு தனியே உண்டல் வேண்டற்பாற்று அன்று' என்று கூறுவது எவ்வளவு ஆழமும் அழகும் உடையது! பிறருக்குச் சோறு கொடுத்து அதனால் வறுமை அடைந்தோர் உலகத்து இல்லை என்ற உண்மையைத் தெளிவுறத்தவே விருந்தோம்பு பவனுடைய வாழ்க்கை தரித்திரத்தால் பாழாகாது என்று பின்னும் கூறுகிறார்.

 

பரந்த மனப்பான்மை

 

எதிர்மறை முகத்தான் அவன் தரித்திரத்தால் வாட மாட்டான் என்று கூறிய ஆசிரியர், அடுத்து உடன்பாட்டு முகமாகக் கூறத் தொடங்கி, 'விருந்து ஓம்புவான்' என்றும் கூறினார். கூடி வாழும் இயல்புடையவனாகிய மனிதன் விருந்தோம்பலின் மூலம் தனது இந்த இயல்பை வளர்த்துக் கொள்கிறான். மேலும், இவ்வுலகில் வாழத் தொடங்கிய அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் 'தன்னலம்' என்ற பேயினுடைய பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பது முன்னமே கூறப்பட்டதன்றோ? அதற்குரிய வழி துறைகள் யாவை? அவ்வழி துறைகளில் ஒன்றுதான் விருந்து ஓம்பலாகும். விருந்தினரை வெற்று வாய்ச் சொல்லால் மட்டும் உபசரித்தல் போதுமா? அவர்கட்கு உணவு கொடுப்பது என்றால், அதனால் ஆகும் செலவு எவ்வளவு ஆகும்? ஒருவன் உடலை உழைத்துச் சம்பாதிக்கும் பொருளைச் செலவு செய்ய இதுதானா? 'ஆம்' என்கிறார் ஆசிரியர். அவருக்கும் முன்னரே நக்கீரர் என்ற பெரியார் 'செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே தப்புந பலவே!' என்று கூறியுள்ளார். ஒரு மனிதன் தானாகப் பாடுபட்டு உழைத்துப் பெற்ற பொருளை எளிதில் ஈந்துவிட்ட விரும்ப மாட்டான். ஆனால், இந்தப் பற்று உள்ளமே அவனுக்குப் பெருந்தீங்காகப் பின்னர் விளையப்போகிறது. மனிதனைப் பற்றிய தன்னலப் பேய் ஒழிய, விருந்தோம்பல் முதற்படி ஆகும். அதிலும், வேளாண்மை செய்பவன் பிறருக்குச் சோறு கொடுத்தலை ஒரு பெரும்பாரமாகக் கருத மாட்டான். எனவே, விருந்தோம்பலின் மூலமே அவனுக்குப் பரந்த மனப் பான்மை வருமாறு செய்யலாம்.

 

புதிய காரணம்

 

விருந்தோம்பலை இவ்வளவு அழுத்தமாக வள்ளுவர் கூறுவதற்குப் பிறிது ஒரு காரணமும் இருக்கலாமோ என ஐயுற வேன்டி உளது. இன்றுங் கூடத் தமிழ்நாடு உணவு நிலைமையில் 'சுயதேவை' அளவுக்குக் குறைவாகவே உற்பத்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளது. இன்றைய நிலைமையே இவ்வாறு என்றால், இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன்னர் இந்நிலை இன்னும் மோசமாகத்தானே இருந்திருக்கும்? இன்றுள்ள அளவுகூட அன்று விளை நிலங்கள் பயன்படுத்தப்பெற்றுப் பயன் தந்திருக்கமுடியாது.

 

இன்று தமிழ்ச் சமுதாயம் பெருகியுள்ள அளவு தமிழ் மக்கள் கூட்டம் அன்று இல்லாமல் இருந்திருக்கலாம். எனவே, உணவு நெருக்கடியும் இவ்வளவும் இல்லாமல் இருந்திருக்கலாமெனில். விளை நிலங்களும் குறைவாகவே இருந்திருத்தல் வேண்டும், மேலும், தமிழ் மக்கள் இடையே ஓயாத போர் ஏற்பட்டு வந்தமையின், அமைதியாக இருக்கும் காலத்தில் மட்டுமே அதிகமான வேளாண்மை நடைபெற முடியும். ஓயாது போர் என்றால், அதனால் ஏற்படும் பொருள் அழிவும் ஆள் சேதமும் எவ்வளவு என்று எண்ணிப் பார்க்கவும் மணம் நடுங்குகிறது! இந் நிலையில் உள்ள பயிர் நிலங்களைக்கூடச் செம்மையாகப் பயிர் செய்யப் போதிய ஆட்கள் இருக்க வியலாது அன்றோ? எனவே, உணவுப் பஞ்சமே நாட்டிலிருந்திருக் கும் என்பதில் ஐயமென்னை? இம்மட்டோடு இல்லை. உள்ள பயிர் நிலங்களும் இன்று போலப் பலரிடம் இருந்திருக்க இயலாது. உடையார் சிலரும் இல்லார் பலருமாகவே இருந்திருப்பார். 'இலர் பலராகிய காரணம்' என்ற குறளால் (270) இவ்வுண்மை அறியப்படுகிறதன்றோ? உடையாராகிய சிலரும் தம்பால் உள்ள பொருளைப் பிறர்க்குப் பகிர்ந்து தாராவிடின், இல்லார் கதி என்ன ஆகும் என்பது கூற வேண்டுவதின்று. அதிலும் ஏனைய பொருள்களைத் தாராளமாக வழங்கி விட்டு உணவைத் தாராவிடினும் பயன் இல்லை. தரத் தக்கனவாய பொருள்களில் தலை சிறந்தது உணவே என்பது விளங்கும். ஆகவே, எல்லா வகை ஈகையினும் சிறந்தது உண்டி கொடுக்கும் ஈகையேயாகும். பழந்தமிழ்ப் பாடல்களை ஒரு முறை படிப்பவரும், 'பாணர், கூத்தர்' என்பவரை மறத்தல் இயலாது. இப்பாணர்கள் ஓயாது வறுமையில் உழலும் திருக்கூட்டத்தார்; இவர் விரும்புவது நல்லுணவே ஆகும். அரசர்கள் தரும் பொன், வெள்ளி முதலிய பரிசில்களைக் காட்டிலும் அவர்கள் தரும் உணவையே பெரிதும் விரும்பி உள்ளனர் என்பது இவர்கள் கூற்றாக அமைந்த பாடல் களைப் படிப்பார் நன்கு உணர இயலும். இந்நிலையான பாடல்கள் நாட்டில் அன்றும் இருந்த உணவுப் பஞ்சத்திற்கு அறிகுறியோ என நினைய வேண்டி உளது. இத்தகைய சூழ்நிலையில் பாட வந்த ஆசிரியர், விருந் தோம்பலை மிகுதிபடுத்திக் கூறியது சாலப் பொருத்தம் உடையதே.

 

சூழ்நிலை நாட்டில் இவ்வாறு இருந்தமையின் விருந்து இடுபவர் தம்மைப் பெரியாராக நினைத்துக் கொண்டு, விருந்தினரை மட்டமாக நினைக்கவும் இடம் உண்டு அன்றோ? அனைவரும் இவ்வளவு மோசமாய் இராவிடி னும், ஒரு சிலராவது இத்தவற்றைச் செய்தல் இயல்பே யன்றோ? இது கருதியே ஆசிரியர்,

 

மோப்பக் குழையும் அனிச்சம்; முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து (குறள்-190)

 

என்று கூறுவாராயினார். விருந்திடுபவர் தாம் செய்வதை ஏதோ பெரிய உபகாரமாக நினையாமல், கடமையைச் செய்வதாகவே நினைக்கவேண்டும். அதிலும், மகிழ்ச்சி யோடு கடமையைச் செய்வது எவ்வளவு சிறப்புடையது! வெறுஞ்சோற்றை இட்டு, இன்முகம் காட்டவில்லை யாயின், இட்டும் பயன் இல்லையாய் விடும். எனவே, இன்முகம் காட்டலே விருந்திடுவதினும் இன்றியமையாதது என அறிவுறுத்துகிறார் ஆசிரியர். விருந்தோம்பல் இல்லறத் தானுக்கு இன்றியமையாத கடமை என்றால், இன்முகங் காட்டி விருந்தினரை உபசரித்தல் அவ்விருந்து இடுதலினும் தலையாய கடைமையாகும். அன்றைய தமிழர்களுக்கு வள்ளுவப் பெருந்தகை கூறிய இப் பொன்மொழிகள் இன்றைய தமிழ் நாட்டிற்கும் எவ்வளவு தேவை என்பதை உன்னிப பார்ப்போமாக.

 

தலைவியின் கண்கள்

 

அகவாழ்வின் இன்றியமையாத உறுப்பாவாள் தலைவி, பின்னர்க் காணப்போகும் நற்றிணைப் பாடல்கள் அனைத்திலும் தலைவியின் அழகு முதலியன விரிவாகப் பேசப்படும். ஆனால், குறள் அத் தலைவியின் அழகு பற்றிப் பேசுவதே ஓர் அலாதியான அழகு. இதோ தலைவியின் கண்களைப் பற்றிக் குறள் பேசுகிறது.

 

பெண்ணைப்பற்றிப் பாடாத தமிழ்ப் புலவரே இல்லை என்று கூறிவிடலாம். புலவரனைவரும் கலைஞர்; கலைஞரோ அழகில் ஈடுபடுபவர்; பெண்களோ, அழகின் இருப்பிடம்; எனவே, பெண்களைப் கவிஞர்கள் பாடுவதில் வியப்பொன்றுமில்லை.

பெண் அழகில் ஈடுபடுவதும் அவ்வழகு பற்றிக்கவிதை புனைவதும் கவிஞர் அனைவருக்கும் பொதுவெனில், சிறந்த கவிஞரைக் காண்பது எவ்வாறு? அனைத்துக் கவிஞரும் இவ்வொரு பொருளைக் பற்றிப் பாடினாலும் அவரவர் தம் அனுபவத்தின் விரிவு, ஆழம், கற்பனை என்பவற்றிற்கேற்ப அவர்கள் கவிதைகளும் மாறுபடும். அழகில் ஈடுபடும் இயல்பு போதுவாயினும், அவ்வழகை எங்கே, எவ்வாறு காண்பது என்பதில் வேறுபாடுகள் தோன்றக் கூடும். அழகைப் புறத்தே காண்பவர்களும் அகத்தே காண்பவர்களும் உண்டு.

பொருளில் அழகு எங்கே உறைகிறது என்பது பற்றித் தத்துவப் பேராசிரியர்கள் இன்னும் முடிந்த முடிபாக ஒன்றுங் கூறவில்லை. பொருளிலேயே அழகு இருக்கிறது எனில், அப்பொருளைப் பார்ப்பவர் அனைவர்க்கும் அவ்வழகு காட்சி நல்க வேண்டும். உலகானுபவத்துடன் காணும்பொழுது இவ்வாறு இல்லை என்பது நன்கு விளங்கும். ஒருவர் அழகுடைய பொருள் என்று கூறுவதை மற்றவரும் அழகுடையது என்று ஒப்புமாறு இல்லை. இன்னுங் கூறப்போனால், அழகே வடிவமானது என்று ஒருவரால் மதிக்கப்படும் பொருள், மற்றொருவரால் அழகற்றது என்றுங் கூறப்படுதலைக் காண்கிறோம்.

அவ்வாறாயின், அழகென்பது பொருளினிடத்து இல்லை; காண்பான் மனத்திடமே உள்ளது என்றாவது கூறிவிடலாமா? எனில், அதுவும் இயலுவதாக இல்லை. காண்பான் மனத்திடத்தேதான் அழகு இருக்கிறதெனில், பொருள் இல்லாமலும் அவன் அழகை அனுபவிக்க வேண்டும். அதுவும் இயலாத காரியம். எனவே, 'அழகென்பது பொருளினிடத்தும் காண்பான் மனத்தும் ஒருசேரத் தோன்றுகிற ஒன்று' என்றுதான் நினைய வேண்டியுளது. இக்கருத்தை மனத்துட்கொண்டு பார்க்கும் பொழுது பெண்ணிடத்துக் காணப்படும் அழகும் இம்முறையில் அமைவதே என்பது விளங்கும்.

பென்னிடத்து இருக்கும் அழகு காண்பானுடைய மனநிலைக்கு ஏற்பக் காட்சி நல்குகிறது. தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைக் கண்டு தன் மனத்தை அவளிடம் பறிகொடுக்கிறான். அவள் புற அழகே முதன் முதலில் அவன் காதல்கொள்ளக் காரணமாயிற்று. அவனுக்கு இக் காதல் உணர்ச்சி தோன்றுவதன் முன்னர்த் தோன்றிய உணர்ச்சி யாதாய் இருத்தல் கூடும்? அழகுடையவர்களை அவன் இதற்குமுன் கண்டதில்லையா? நூற்றுக்கணக்கான வர்கள், சிறந்த அழகுடையவர்களைக் கண்டதுண்டு; ஆனால், அவர்களிடம் ஈடுபட்டு அவன் மனத்தை இழக்க வில்லை. இப்பொழுதோ எனில், இந்தத் தலைவியைக் கண்ட மாத்திரத்தில் தன்னையும், தன்மனத்தையும் இழந்துவிட்டான். இவ்வாறு இழக்க மூல காரணமாய் இருந்த உணர்ச்சி யாது? எவ்வளவு ஆராய்ந்து பார்த்தா லும் 'வியப்பு' என்ற உணர்ச்சியே அவன் முதலில் பெற்றது என்றுதான் கூறல்வேண்டும். இவ்வாறு வியப்படைய அத் தலைவன் அவளிடம் யாது கண்டான்?

நிறைந்த அழகைக் கண்டிருக்கலாம். ஆனால், அவளுடைய அழகைப் பிறகும் கண்டிருப்பாரல்லரோ? அவர்கள் ஏன் அவளிடம் ஈடுபடவில்லை? எனவே, 'அவளுடைய அழகு மட்டும் அவனுடைய ஈடுபாட்டுக்குக் காரணமாகாமல், அவனுடைய மன நிலையும் ஒரு துணைக் காரனமாயிருத்தல் கண்கூடு.'

அவளுடைய அழகின் எப்பகுதியில் ஈடுபடக் கூடிய மனநிலை தலைவனுக்கிருந்தது? தூரத்தே தலைவியைக் கண்டான்; 'இவள் மானிடப் பெண்ணோ, அன்றித் தேவமகளோ!' என்று ஐயுற்றான்; பின்னர் அவள் நடை பயில்வதைக் கண்டவுடன் மயிலோ என்று ஐயுற்றான்; இன்னுஞ் சற்று நெருங்கிச் சென்று காண்கையில் அவளுடைய கனமான காதணிகள், அவள் தன் இனத்தைச் சேர்ந்தவளே என்று முடிவு செய்யச் செய்தன. இதுவரை அவனுடைய கட்புலன் வேலை செய்ய, அதன் பின் சென்ற மனத்திரையில் ஓடும் எண்ணங்களைக் கூறுகிறார் வள்ளுவப் பெருந்தகை தம்முடைய காமத்துப் பாலின் முதற்குறளில்:

 

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (குறள்-1081)

 

தலைவியின் பொது அழகையும், நடை அழகையும் கண்ட தலைவன், அடுத்துக் கண்டது தலைவியின் கண்களையேயாம். காமத்துபாலின் இரண்டாவது குறளிற் காட்சி தரும் தலைவியின் கண்கள் அப்பால் முழுதும் விரவிக் காட்சி தருவதுடன் 'குறிப்பறிதல்' என்ற அதிகாரம் முழுவதையும் பெற்று விளங்குகிறது. காமத்துப் பாலில் மிகுதியும் இடம்பெற்று விளங்கும் தலைவியின் உறுப்பு கண்களேயாம். 'கண்ணிற் சிறந்த உறுப்பில்லை', என்ற பழைய மூதுரையை நினைத்து இவ்வாறு கண்களுக்குப் பெருமை தருகிறாரா ஆசிரியர்? ஆம், ஆம் முது மொழியின் சிறப்பை உள்ளவாறு உணர்ந்தமையாலே தான் வள்ளுவர் இவ்வாறு கண்களை விவரிக்கிறார்.

தலைவியின் அழகில் தலைவன் ஈடுபடுவது இரு வகைகளில் அமையலாம். ஒன்று அவளுடைய புற அழகில் ஈடுபடுபவது. தோல், தசை இவற்றாலாய கூட்டின் அழகில் ஈடுபடுபவர் பலருண்டு. கவிஞரிலும் பலர் இத்தகையரே. ஆனால், சிறந்த கலைஞருக்கு இவ்வழகு மட்டும் போதாது. எனவே, அவர் அக அழகைக் காண முற்படுகின்றனர். சங்ககாலப் பாடல்களில் தலைவியை வருணிக்கின்ற பாடல்கள் எண்ணில. என்றாலும், அவற்றுள் பெரும்பான்மையானவை அவளுடைய கண்களைக் கூறாமல் விடுவதில்லை. தலைவியின் கண்களைத் தாமரை, வண்டு, கயல் என்பவற்றோடு உவமிக்கும்பொழுது வடிவு உவமையாக மட்டும் இராமல் வேறு காரணங் கருதியும் உவமிக்கப்படும். தலைவியின் உடல் அழகு சிறந்துளதென்பதில் ஐயமின்று.

ஆனால், இத்துணை அழகுடைய உடம்பினுள் உறையும் மனம் எத்தகையதோ! எவ்வாறு இம் மனத்தைக் காண்பது? அவளுடைய பேச்சால் ஓரளவு காணலாம் என்பது மெயம்மைதான். ஆனால், பேசும் முன்னர், பேசக் கூடிய இயல்பும் தகுதியும் வாய்ந்தவளா என்பதை அறிவது யாங்ஙனம்? தலைவியின் மனம் உடலைப் போல் மென்மையும் கருணையும் நிரம்பியதா என்று அறிய வேண்டும். அவள் உறுதிப்பாடு உடையவளா என்பதையும் அறிதல் வேண்டும். இவை அனைத்தையும் அறிய ஒரே ஒரு வாய்ப்புத்தான் உண்டு. அவளுடைய மனத்தை அறியும் ஒரு பலகணி (ஜன்னல்) வேண்டும். மனத்தைப் பிறர் காணுமாறு காட்டும் பலகணி யாது?

ஒருவருடைய கண்களே மனத்தை அறிவிக்கும் பலகணி என்பர். ஏனைய புலவர்களைப் போலத் தலைவியை வருணிக்கப் புகுந்துவிடாமல், வள்ளுவர் இரண்டாம் குறளிலேயே தலைவியின் கண்களைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார். தலைவன், 'இவள் தேவப் பெண்ணோ, மயிலோ!' என்று ஐயுற்றுத் தெளிந்தான் என்று முதற் குறளில் கூறிய கவிஞர், இரண்டாம் குறளில்,

 

நோக்கினாள் நோக்குஎதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்னது உடைத்து. (குறள்-1082)

 

என்று தலைவன் ஈடுபடும் உறுப்பினைக் கூறியது அறிதற் குரியது. 'நோக்கினாள்' என்று தலைவன் கூற்றாகத் தலைவி குறிக்கப்படுகிறாள். தலைவியை எத்தனையோ சொற்களால் தலைவன் குறிக்கலாம். அவ்வாறிருந்தும், 'நோக்கினாள் (பார்க்கின்றவள்) என்று கூறுதல் வியப் பன்றோ? இதிலிருந்து அறியப்படுவதொன்று உண்டு. தலைவன் தலைவியினுடைய பார்வைக்கு அடிமையாகி விட்டான். எனவே, அவளைக் குறிக்க நேர்ந்த முதல் சொல்லிலேயே எந்த உறுப்பில் ஈடுபட்டானோ அந்த உறுப்பாலேயே அவளைக் குறிக்கிறான். அன்றேல், 'நோக்கினை உடையாள்' என்று குறிப்பது பொருளற்றுப் போய்விடும்.

அடுத்து வரும் குறள்களிலும் தலைவியின் கண்கள் 'பேர் அமர்க்கண்', 'அமர்த்தன கண்', 'நோக்கம் இம் மூன்றும் உடைத்து', 'இவள் கண்', 'மடநோக்கு' என்று ஐந்து இடங்களில் குறிப்பிடப்படுகின்றன.

தலைவியின் கண்களுக்கு இத்துணைப் பெருமை தந்தது போதாது என்று கருதிய வள்ளுவப் பெருந்தகை அடுத்துக் 'குறிப்பறிதல்' என்றோர் அதிகாரம் ஏற்படுத்திப் பத்துக் குறளிலும் கண்ணின் பெருமையைப் பேசுகிறார். எனவே, பெண்ணிடத்து அழகைக் காண முற்படுபவன் அவள் கண்ணிடத்தே அதனைக் காண முற்படவேண்டும். இது அத்துணை எளிதானதன்று. பலகாலம் ஒருவரிடத்துப் பழகியவிடத்தும் அவருடைய கண்ணிலிருந்து மன நிலையை அறிதல் பலருக்கு இயலாததாம். இது கருதியே ஆசிரியர்,

 

பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின். (குறள்-709)

 

என்று கூறுகிறார். எனவே, கண்கள் மூலம் ஒருவர் மன நிலையை அறிய அனைவராலும் முடியாதென்பதும், ஒரு சிலர்க்கே அது இயலும் என்பதும் பெற்றாம். தலைவியின் கண்களைக் கொண்டே காதலை அறிதல் வேண்டும் என்ற கருத்தை வள்ளுவர் குறிக்கிறார் என்பதுங் கண்டோம். அவ்வாறாயின், அனைவரும் கண்களைக் கொண்டு காதலை அளக்க அறிந்திருந்தால் ஒழியக் காதல் வாழ்வு வாழ முடியாது. கண்கள் மூலம் மனநிலையை அறிதல் அனைவர்க்கும் இயலாது எனில், காதல் வாழ்வு வாழ்வதும் அனைவர்க்கும் இயலாது என்பது பெறப்படும். இக்கருத்தை மனத்துட்கொண்டு,

 

மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார் (குறள்-1289)

 

என்ற குறளை ஆராயும் பொழுது உண்மை விளங்கும். பலரும் காதல் வாழ்வு வாழ்கிறோம் என்று நினைத்திருப் பினும் உண்மையில் காதலின் இயல்பை அறிந்தவர் மிகச் சிலரே என்பதைத் தலைவியின் கண்களை நேரடியாக 45 இடங்களிலும், கண்ணின் தொழிலை 23 இடங்களிலும் கூறுவதன் மூலம் வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

வள்ளுவப் பெருந்தகை வகுத்த அக வாழ்வின் சில சிறந்த பகுதிகளை இதுகாறுங்கண்டோம். சிறந்த முறையில் வாழவேண்டும் என்று அவர் இலக்கணம் வகுத்ததற்கேற்ப பழந்தமிழ் நாட்டில் சிலரேனும் வாழ்ந்திருத்தல் கூடும். அவ்வாறு வாழ்ந்தவர் வாழ்வை ஒட்டி இலக்கியம் தோன்றிற்று. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய நூல்கள் சிறிய பாடல்களின் மூலம் இவ் வகவாழ்வின் ஒவ்வொரு பகுதியைச் சிறப்பித்தன. அந் நூல்களுள் அதிகம் பயிலப்படாத ஒரு நூல் நற்றிணை யாகும். எனவே அகவாழ்வின் ஐந்து திணைகட்கும் சில உதாரணங்கள் அந்நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளன. அவையே அடுத்து அமையும் 'இலக்கியத்தில் வாழ்வு' என்னும் தலைப்பில் காணப் பெறுபவை.

 

 

3. இலக்கியத்தில் வாழ்வு

 

குறிஞ்சி

 

அகவிலக்கியத்தில் குறிஞ்சித்திணை முதலாவதாக இருப்பது. இத்திணையில் கூறப்பெற்ற ஒழுக்கம் நடை பெறக் கூடிய இடம் மலையும் மலைசார்ந்த இடமுமாம். இது நடைபெறக்கூடிய காலம் குளிர்காலம்; பொழுது, நடு இரவு; இடம், பொழுது என்று வகுக்கப் பெற்ற இவற்றை முதற்பொருள் என்று இலக்கணம் கூறும். பாடல் அமைவதற்கு ஒரு நிலைக்களம் போன்றது இவ் விலக்கணம் வகுக்கும் வரம்பு.

தலைவனும் தலைவியும் சந்திப்பதும், கூடுவதும், இதனுடன் தொடர்புடைய செய்திகளும் குறிஞ்சித் திணைப் பாடலில் இடம் பெறும்.

 

நீரின்று அமையா உலகம்

 

பெரியதொரு மலையடிவாரத்தில் அழகாய் அமைந் துள்ளது தலைவனுடைய வீடு. வீட்டைச் சுற்றிலும் வளமான நல்ல செடி கொடிகள் அடர்ந்துள்ளன. அந்த வீட்டின் எதிரே உள்ளது ஒரு தாமரைத் தடாகம். அக் குளத்தில் நீர் நிறைந்திருப்பதால், தாமரை நன்கு செழித்து வளர்ந்துள்ளது. குளத்தின் கரையில் உள்ளவை வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்த சந்தன மரங்கள். ஒரு நாள் தலைவி முற்றத்தில் வந்து நின்றாள். அப்போது கதிரவன் உதித்த காலை நேரம். குளத்தில் உள்ள தாமரை தன் தலைவனாகிய சூரியன் வரவு கண்டு, முகம் மலர்ந்து, அவனுடைய கைகளாகிய கதிர்களைத் தன் முகம் முழுவதிலும் தைவருமாறு விட்டிருக்கிறது. தாமரையின் இந்த இன்பத் திளைப்பைப் பார்த்துக் கொண்டிருந்தன தேன்ஈக்கள்.

எப்பொழுது தாமரை முகம் மலரும் என விடிகிற வரை காத்திருந்த அவ்வீக்கள், உடனே அம் மலரில் சேர்ந்து மொய்த்தன. ஏன்? தாமரையில் உள்ள தேனைக் கருதியே அவை புகுந்தன; புகுந்து தேனை உண்டன. அத்தேனை உடைய மலர் திறக்கும் வரையில் அவ்வீக்கள் அம்மலரைச் சுற்றிச் சுற்றிப் பன்னூறு தடவை வட்ட மிட்டன. அம்மட்டோ! தன் இனிய குரலால் தாமரையின் பெருமையைப் பலவாறாகப் பாராட்டி யாழும் தோற்று விடும் இன்னிசை பாடின.

 

ஆனால், மலர் திறந்தவுடன் ஈக்கள் தம் பாடலை நிறுத்திவிட்டன; உடனே மலரினுட் சென்று தேனை வயிறார உண்டன; உண்ட பிறகு வாய் திறந்து மலருக்கு நன்றி பாராட்டவில்லை; அம் மலரை முன்போலச் சுற்றி வரவும் இல்லை. வாயை மூடிக்கொண்டு முன்பின் மலரைப் பார்த்து அறியாதவைகள்போல அகன்றுவிட்டன.

எந்தக் குளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறதோ, அந்தக் குளத்தின் சொந்தக்காரியான தலைவி தன் வீட்டு முற்றத்திலிருந்து இந்த ஈக்களின் செயலைக் கண் கொட்டாமற் பார்க்கிறாள். அவளுடைய வியப்பு அதிகமா கிறது. 'என்ன ஈக்கள் இவை! சிறிதும் நாணமில்லாமல் தாமரையைப் பாராட்டிப் பாடிச் சுற்றி வந்து அதன் தேனைக் குடித்துவிட்டு இப்படி வாய் பேசாமல் திரும்பலாமா? எங்கேதான் போகின்றன இவை! என்று மீண்டும் அவ்வீக்களையே பார்க்கிறாள். பக்கத்தில் உள்ள சந்தன மரத்தை அடைகின்றன அவை. சந்தன மரப்பூவை அவை நாடுகின்றன. மறுபடியும் அதே பாடல்; அதே சுற்றல்; பிறகு அமைதியாய் இருந்து தேனை உண்ணல். இவையே அங்கும் நடைபெறுகின்றன.

இன்னுங்கொஞ்சம் தன் பார்வையை உயர்த்தினாள் தலைவி. என்ன வியப்பு! எவ்வளவு பெரிய தேன் கூடு? இந்த ஈக்களா இத்துணைப் பெரிய தேன் கூட்டைக் கட்டின! ஆம். இவையேதாம்! எத்தனையோ இடங்கள் இருக்க, ஏன் இவ்வளவு உயர்ந்த சந்தனமரத்தைப் பிடித்தன? 'சிறுகக் கட்டிப் பெருக வாழ்' என்ற முதுமொழிப்படி 'பெருக' என்ற சொல்லுக்கு 'உயர' என்ற பொருளை நினைத்து விட்டனவோ இந்த ஈக்கள்! காரணம் திடீரெனத் தலைவிக்கு விளங்குகிறது. ஆம்! என்னதான் தாமரை சிறந்ததாய் இருந்தாலும், அதில் கிடைக்கும் தேனுக்குத் தனி மணம் கிடையாதல்லவா? ஆகவே, தாமரைத் தேனின் பெருமை வெளிப்பட வேண்டுமானால், அது சந்தன மரத்துடனும், சந்தனப் பூவில் உள்ள தேனுடனும் சம்பந்தப் படல் வேண்டும். ஆகவேதான் தாமரைத் தேனுடன் சந்தன மரத்தைச் சம்பந்தப்படுத்தின போலும் ஈக்கள்.

இக்காட்சியில் ஈடுபட்டிருந்த தலைவிக்குத் திடீரெனத் தோழி முதல் நாள் கூறியது நினைவுக்கு வந்தது. தோழி மிகவும் அறிவாளி. குறிப்பு அறிபவள்; நேற்றுத் தலைவி யிடம் பேச்சுவாக்கில் ஒரு காரியத்தையும் கூறிவிட்டாள். சில நாளாகவே தலைவன் ஒரு மாதிரியாய் இருக்கிறான்; திடீரென்று தலைவியின் நெற்றியை உற்றுப் பார்க்கிறான்; ஏன் என்று கேட்டால், 'ஒன்றுமில்லை. உன் நெற்றியில் உள்ள ஒளியைக் கண்டு மகிழ்ந்தேன்' என்று கூறிவிடுகிறான். இதனைத் தலைவி பெரிதாகப் பாராட்ட வில்லை. மேலும், எப்பொழுதுமே அவனுக்கு அவளுடைய அழகில் ஒரு தனி ஈடுபாடு உண்டு. அவளுடைய உறுப்புக் களின் அழகை விரித்து விரித்துப் பேசுவதிலும், அதை அனுபவிப்பதிலும் அவனுக்கு விருப்பம் அதிகம். ஆனால், நேற்றுத் தோழி கூறியது தலைவியை மிகவும் அச்சுறுத்தி விட்டது. 'தலைவன் பொருள் தேடுவதற்காக வெளிநாடு செல்லப்போகிறான்', என்பதே தோழி நீட்டி மடக்கிக் கூறியதன் பொருள்.

 

அவன் பிரியப் போகிறான் என்பதைக் கேட்ட தலைவி நடுநடுங்கிவிட்டாள். பிரிவின் துயரம் என்ன என்பதை முன்னரே களவுக்காலத்தில் அவள் அனுபவித்த துண்டு. ஆனால், தலைவனை மணந்துகொண்டு அவனுடன் குடும்பம் நடத்தும் இந்நிலையில் அப்பொழுது பிரிவால் பட்ட வருத்தம் கனவுபோல ஆகிவிட்டது; ஏன் - தலைவி அதைக் கூட மறந்துவிட்டாள். ஆனால், தோழி நேற்றுக் கூறியதை மீட்டும் நினைவில் கொண்டு வந்தபொழுது தலைவன் செய்த செயலுக்குப் பொருள் வேறுவிதமாகவே பட்டது. ஏன் அவள் நெற்றியை உற்றுப் பார்த்தான்? ஏன் அதன் ஒளியில் ஈடுபட்டதாகக் கூறினான்? இப்பொழுது அது ஒளியைத் திடீரென இழந்து விட்டதா? ஓஹோ? அவன் பிரிந்து விட்டால், அந்த வருத்தத்தால் அவள் வாட, அவளுடைய நெற்றி ஒளியை இழந்துவிடுமே என்று அஞ்சித்தான் அப்படிப் பார்த்தானா!

'இல்லை; அவ்வாறு இருக்க முடியாது,' என்று தலைவி நினைத்தாள். 'ஒரு வேளை அப்படி இருந்தாலோ?" என்ற எண்ணம் மீட்டும் மனத்தில் முளைத்தது. அவ்வாறாயின், அவன் வாய்ச்சொல் தவறாதவன் ஆயிற்றே என்ற எண்ணம் மறுபடியும் அவள் மனத்தில் உதித்தது.

களவுக் காலத்தில் அவளை முதன்முறை சந்தித்துக் கூடிய பின்னர், 'இனி ஒரு கணமும் உன்னைப் பிரியேன்; பிரிந்தால், உயிர்வாழேன்! என்றல்லவா கூறினான்? இது வரை அவன், கூறிய சொல்லை மீறுபவன் என்று அறியக் கூடவில்லையே! சாதாரண மனிதர்களானால் சந்தர்ப்பத் துக்கு ஏற்றபடி எதையாவது கூறிவிட்டுப் பிறகு அதனை மறந்துவிடுவார்கள். ஆனால் தன் தலைவனைப் பற்றி 'உறுதியான சொல்லுடையவன்' என்ற முடிவுக்குத் தலைவி பல நாள் முன்னரே வந்துவிட்டாள்.

சிலரிடம் பழகுவது கரும்பை அடியிலிருந்து தின்பது போல இருக்கும். அதாவது, முதலில் '! ஹோ!' என்று பழகிவிட்டு, நாட்கள் செல்லச் செல்ல வெறுப்புத் தட்டும் வகையில் நடந்து கொள்வர். ஒரு சிலர் பழக்கம் அல்லது நட்பு, நாளாக ஆக மிகச் சுவையுடையதாய் இருக்கும். அது கரும்பை நுனியிலிருந்து தின்பதுபோன்று ஆகும். தலைவனுடைய நட்பு அத்தகையதன்றோ? திருமணமாகி இத்துணை நாட்கள் கழித்தும் அந்நட்பில் தினந்தோறும் புதிய இன்பம் அல்லவா காண்கிறாள் தலைவி? 'நீடுதோறும் இனியன் அவன்' என நினைக்கிறாள். மேலும், அவளைப் பிரிந்து இருக்க அவனால் முடியாது என்பதை யும் பலமுறை அவனே கூறியிருக்கிறான். இது வரை பிரிந்திருந்ததும் இல்லை அவன்.

அப்படிப்பட்டவன் இப்பொழுதுமட்டும் எவ்வாறு பிரிந்து வாழப் போகிறான்? பிரிதல் என்ற ஒன்று மட்டும் அவன், அவள் இருவருக்குமே இயலாத காரியம். தாமரை யில் தேன் நுகர்ந்து சந்தன மரத்தை அடைந்து தேன்கூடு வைக்கும் ஈயைப் போலத் தலைவனும் அவளுடன் இருந்து இன்பம் நுகர்ந்து உயர்ந்ததாகிய 'இல்லறம்' என்னும் மணம் அந்த இன்பத்திற்குக் கிடைக்குமாறு செய்துவிட்டான். வெற்றின்பம் ஒன்றையே கருதுபவ னாயின், கனவில் அனுபவிப்பதுடன் நின்றிருப்பான். ஆனால், இல்லறமாகிய மணத்துடன் கூடிய இன்பமாகிய தேனை அல்லவா அவன் சேகரித்தான்! இந்த ஈக்களைப் பார்த்தவுடன் தலைவிக்குத் தலைவன் செய்கின்ற செயல் நினைவுக்கு வந்தது.

அந்த நேரத்தில் தோழி உள்ளே இருந்து வெளியில் வந்தாள்; தலைவி குளத்தையும் சந்தன மரத்தையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, ஆழ்ந்த சிந்த்னையில் நிலைபெற்று விட்டதைக் கண்டாள். அவளும் தலைவன் பிரிவைப் பற்றித்தான் நினைந்து வருந்துகிறாள் என்று நினைத்த தோழி, தலைவிக்கு ஆறுதலாக ஏதோ கூறத் தொடங்கு கிறாள். ஆனால், தலைவி அவளைப் பேசவிட்டால் தானே! இல்லை, 'தோழி, அவர் என்னுடைய நெற்றி அழகு கெட்டு ஒளி இழந்து போகும்படியாக ஒரு நாளும் நம்மை விட்டு நீங்க மாட்டார்', என்று ஒரேயடியாகக் கூறி விடுகிறாள்.

 

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்

என்றும் என் தோள் பிரிபு அறி யலரே!

தாமரைத் தண் தாது ஊதி மீ மிசைச்

சாந்தின் தொடுத்த தீம்தேன் போலப்

புரைய மன்ற புரையோர் கேண்மை;

நீர் இன்று அமையா உலகம் போலத்

தம் இன்று அமையா நம் நயந்து அருளி

நறு நுதல் பசத்தல் அஞ்சிச்

சிறுமை உறுபவோ செய்பு அறி யலரே? (நற்றிணை-1)

 

(நின்ற சொல் - தவறாத சொல்; நீடு தோன்று இனியர் - நெடுங்காலம் பழகினும் இனிமையுடையவர்; மீமிசை - மேலே; சாந்தின் தொடுத்த - சந்தன மரத்தில் கட்டிய; புரைய - உயர்ச்சியை உடையன; நறு நுதல் - மணம் பொருந்திய நெற்றி; பசத்தல் - ஒளி கெட்டு விளர்த்துப் போதல்; சிறுமை உறுபவோ - சிறுமை செய்வாரா?)

இப்பாடலில் தலைவி, தலைவன்மாட்டுக் கொண்டுள்ள அன்பின் ஆழத்தைக் 'கபிலர்' என்ற புலவர் பெருமான் குறிக்கிறார். பெரியோர்கள் நட்பு (தலைவன் காதல்) தாமரைத் தேன், சந்தன மரத்தில் தேன் அடையானது போல உயர்ந்ததாகும். தலைவிக்குத் தலைவன் எவ்வளவு இன்றியமையாதவன் என்பதை 67 அடிகள் விளக்குகின்றன. உலகத்திற்குத் தண்ணீர் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவிற்கு தலைவன் தலைவிக்கு இன்றியமையாதனவாம்.

காதல் என்பது கேவலம் கடைச்சரக்காக வாங்கப் படும் இந்நாளில் இத்தலைவியின் காதற்பெருமையும் ஆழமும் அறிந்து மகிழ்தற்குரியன. நம் முன்னோர் காதலையே கடவுளை அடையும் வழியாகக் கொண்டனர் என இலக்கியம் பேசுகிறது. காதல் இத்தகையதாய் இருப்பின், ஏன் அது முடியாது என்று கேட்கத் தோன்று கிறதல்லவா?

 

பொன் வளையல்

 

தமிழ் இலக்கியத்தில் சாவா இடம் பெற்று வாழும் கவிதைகளில் எல்லாச் சுவைகளையும் (ரசம்) காணலாம். சில இடங்களில் சில சுவைகள் ஆழ்ந்து நோக்கிய வழியே புலனாகும்படி அமைந்துள்ளன. பழந்தமிழ் இலக்கண மாகிய தொல்காப்பியம், சுவை எட்டு எனக் கொண்டது; நகை முதலாக உவகை ஈறாக அவற்றிற்குப் பெயர்களும் தந்துள்ளது. ( தொல், மெய்ப்பாட்டியல்--3) இதனுள் நகை என்ற முதற்சுவையும் உவகை என்று இறுதியாகக் கூறப் பட்டதும் ஆய்தற்குரியன. உவகை என்பது மகிழ்ச்சி என்றே கூறப்படலாம். ஆனால், மகிழ்ச்சி காரணமாகப் பிறக்கின்ற நகைக்கும் தொல்காப்பியனார் முதற்சுவை யாகக் குறிப்பிட்ட நகைக்கும் வேறுபாடு உண்டு. 'எள்ளல், இளமை, பேதைமை,மடமை' என்ற நான்கும் காரணமாக நகை தோன்றும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவ் வாறாயின், இதனை மேலைநாட்டுத் திறனிகள் கூறும் 'Humour' என்பதனோடு ஒருவாறு ஒப்பிடலாம். ஒருவாறு தான் ஒப்பிடல் கூடுமே தவிர, இவை இரண்டும் ஒன்று என்று நினைத்து யாரும் இடர்ப்படல் வேண்டா. நம்மவர் நகைச்சுவை தோன்றப் பேசிய இடங்களும், மேலை நாட்டார் 'ஹ்யூமர்' தோன்றுகிறது என்று கூறும் இடங்களும் வெவ்வேறானவை. இயற்கையில் தோன்றும் நகைச்சுவை ஒருவருடைய பேச்சின் மூலமும் செயலின் மூலமும் பிறரால் அனுபவிக்கப் பெறுகிறது. ஆனால், ஒவ்வொரு நாட்டினரின் பேச்சும் செயலும் பிற நாட்டின ருடைய சொல் செயல்களிலும் மாறுபட்டவை அல்லவா? எனவே, நாம் நகை தோன்றப் பேசும்பொழுது பிற நாட்டாருக்கு அங்கே அச்சுவை தோன்றுவதில்லை. அப் பிறநாட்டார் நம்மொழியை நன்கு கற்றிருப்பினுங்கூட, நகைச்சுவை தோன்றும் இடங்களை அவர் காண்டல் இயலாது. நமது மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட வர்கள் மட்டுமே இம்மொழியில் தோன்றும் நகைச் சுவையை நன்கு அனுபவித்தல் கூடும். ஆங்கிலப்படக் காட்சிகள் பார்க்கும்பொழுது இந்த அனுபவம் ஏற்படு தலைக் காணலாம். பேசிக் கொள்பவர்கள் விழுந்துவிழுந்து சிரிப்பார்கள்; ஆனால், அதனைக் கேட்கும் நமக்கு அந்த பேச்சு முற்றிலும் விளங்கினாலுங்கூட ஏன் சிரிக்கிறார்கள் என்பது பல சமயங்களில் விளங்குவதில்லை!

 

எனவே, மேலை நாட்டார் கூறும் 'ஹ்யூமரை' அப்படியே தமிழில் 'நகைச்சுவை' என்று கூறிவிட்டதாக யாரும் நினைந்துவிட வேண்டா. பிறரைப் புண்படுத்தாத முறையில் அமையவேண்டிய நகைச்சுவை, பிறரிடம் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டும் பொழுது கூட, அவர்களும் சேர்ந்து நகைக்குமாறு அமைய வேண்டுமே தவிர, அவர்களை வருத்தத்தில் ஆழ்த்திவிடக் கூடாது. தம்பால் உள்ள குறைகளைத்தாம் எடுத்துக் காட்டுகின்றனர் என்று அறிந்தவிடத்தும் குறையுடையார் வருந்தாமல் ஏற்றுக் கொள்ளும் முறையில் அமைவதுதான் சிறந்த நகைச்சுவை எனப்படும். நகைச்சுவை தோன்றப் பேசும் வன்மை சிலரிடம் காணப்படும்; ஆனால், இவ் வாறு பேசுவதால் யாதொரு பயனையும் அவர்கள் எதிர்ப் பார்ப்பதில்லை. அந்த நேரத்தில் பேச்சைக் கேட்பவர்கள் கைகொட்டிச் சிரித்து ஆர்ப்பரிப்பதைத் தவிர வேறு பயனைப் பேசுபவரும் கேட்பவரும் எதிர் பார்ப்பதில்லை.

ஆனால், இலக்கியத்தில் நகைச்சுவை தோன்றும் பொழுது இவ்வாரில்லை. நகை தோன்றச் செய்வதுடன் பெரியதொரு பயனையும் கருதியே இலக்கிய ஆசிரியன் நகைச்சுவையைக் கையாள்கிறான். அவன் கருதும் பயன் தனிப்பட்ட ஒரு மனிதனைத் திருத்தவேண்டும் என்பதாக வும் இருக்கலாம். அன்றே, அவன் காலத்தில் காணப் பெற்ற சமுதாயம் முழுவதையும் திருத்தவேண்டும் என்ற நோக்கமாகவும் இருக்கலாம். இவையல்லாத மூன்றாவது வகையும் உண்டு. அகப்பாடல்களில் மருதத்திணைப் பாடல்கள் பலவற்றுள்ளும் நகைச்சுவை உண்டு. தலைவனுடைய நாட்டு வளனை விவரிக்கும் முகமாக அவனுடைய குறைபாடுகள் அனைத்தும் பேசப்பெறும். மேலாகப் பார்ப்பதற்கு நகைச்சுவை தோன்றினாலும், ஆழ்ந்து நோக்குகையில் தலைவனைத் திருத்தவேண்டும் என்ற ஆவல் அச்சொற்களுள் அடங்கியிருக்கும். எவ்வளவு பெரிய தவற்றையும் நகைச்சுவையுடன் எடுத்துக் கூறினால், பிறர மனம் நோவாமல் எடுத்துக் கூறலாம். நற்றிணையில் வரும் நுண்மையான நகைச்சுவை ஒன்றைக் காணலாம். அது மூன்றாம் வகையைச் சேர்ந்தது.

பல வகையாலும் சிறப்பெய்திய தலைவன் அவன். அவளும் பெரிய இடத்துப் பெண்தான். அவன் கண்ட பெண்களிடமெல்லாம் மனத்தைப் பறிகொடுத்துத் தவிப் பவன் அல்லன்; அவளும் அவ்வாறே. இவ்வாறு இருந்தும், அவ்விருவரும் ஒருவரையொருவர் சந்தித்தவுடன் காதல் கொண்டனர். 'கண்டதும் காதல்' என்று இக்காலத்தார் கூறும் வகையில் அமைந்ததன்று அவர்களுடைய காதல். பல பிறவிகளிலும் தொடர்ந்து வரும் ஒன்றுதான் தம்முடைய காதல் என்பதை அவ்விருவரும் நன்கு அறிந்து கொண்டனர். முதன்முறை இருவரும் சந்தித்துக் களவுப் புணர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் பிறகு பல முறையும் சந்திப்பதாகவே உறுதி பூண்டு இருவரும் பிரிந்தனர்.

முதன்முறை அவர்கள் சந்தித்தது ஒருவருக்கும் தெரியாது. விதிதான் தங்களைச் சேர்த்துவைத்தது என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். ஆனால், மறுமுறை சந்திப்பது முதன்முறை போல அவ்வளவு எளிதாய் இல்லை. தோழியின் உதவி இல்லாமல் தலைவனைச் சந்திக்க முடியாது என்பதைத் தலைவி உணர்ந்தாள்; தலைவனும் இதனை நன்கு உணர்ந்தான். எனவே, இருவரும் தனித் தனியே தோழியிடம் பேசி அவளுடைய உடன்பாட்டைப் பெற்றுவிட்டனர்.

நாள்தோறும் வந்தான் தலைவன்; தலைவியைச் சந்தித்தான். ஆனால் அதற்குமேல் அவன் ஒன்றும் செய்வ தாகத் தெரியவில்லை. வாழ்நாள் முழுதும் களவொழுக் கத்தில் கழித்துவிடமுடியுமா? அவள் நினைக்கிறாள் முடியாதென்று. ஆனால், அவன் அதுபற்றிக் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. குடும்பப் பொறுப்பு இல்லாமலே இன்பம் பெறுவதைச் சிறந்த வழி என்று கருதிவிட்டானா? அவன் வாய்மூடி இருப்பதால் தலைவி படும் துயரை அவனுக்கு யார் எடுத்து உரைப்பார்? தலைவியே கூறுதல் நலம் என்றுகூடத் தோழி கருதினாள். ஆனால், பண்பாடுடைய அவனுக்கு இதனை எடுத்துக் கூறுதல் பொருத்தமற்றது என்று கருதினாள் தலைவி.

ஒருநாளில் எப்பொழுதோ ஒரு நேரத்தில் வருகிறான் அவன். அந்த நேரத்தில் அவன் எதிர்பார்த்து வரும் இன்பத்திற்கு மறுதலையாக அவனுடைய கடமை பற்றி நினைவூட்டுவது நாகரிகமற்ற செயலாகும் என்று கருதினாள் தலைவி. தலைவிக்குத் தோன்றும் இவ் வெண்ணங்கள் தலைவனுக்குப் புலப்பட்டதாகவே தெரிய வில்லை. எத்தனை நாட்களுக்குத்தான் பொறுத்திருக்க முடியும்? தலைவன்மாட்டுள்ள அன்பு காரணமாகத் தலைவி பொறுத்திருக்கத் துணியலாம். ஆனால், ஊரார் வாய் சும்மா இராதே! சிறு தூற்றல் பெருமழையானாற் போல ஊரார் பழிச்சொல்லும் மிகுந்துவிட்டதே! இந் நிலையில் இதற்கு ஒரு வழிகாணவேண்டும் என்று முடிவு கட்டினாள் தலைவி.

தலைவி சிறு குழந்தையாய் இருந்தபோது அவளுக்கு மருத்துவம் செய்துவந்தார் ஒரு மருத்துவர். அவளுக்கு மட்டும் என்ன? ஊரார் அனைவரும் நோயுற்றபொழுது அவரிடமே சென்றனர். அவர் எவ்வளவு அறிவும் ஆற்றலும் படைத்தவர்! அவர்,

 

'நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்' (குறள்-948)

 

என்ற குறளை நன்கு அறிந்து கடைப்பிடிப்பவர். ஒரே நேரத்தில் இருவர் வயிற்றுவலி என்று கூறிக்கொண்டு வருவர். இருவருக்கும் வயிற்று வலிதானே என்று அவர் ஒரே மருந்தைத் தருவதில்லை. வயிற்று வலியாகிய காரியம் ஒன்றேயாயினும், அதன் காரணம் வெவ்வேறாகலாம் அல்லவா? எனவே, ஒருவருக்கு இனிய மருந்தும், மற்ற வருக்குக் கசப்பு மருந்தும் தருவார். கசப்பு மருந்து உண்பவர் தம்முடைய வருத்தத்தைத் தெரிவித்து எவ்வா றாயினும் தமக்கும் இனிப்பு மருந்து தர வேண்டுவார். ஆனால், மருத்துவர் அதற்கு ஒப்புக் கொள்ள மறுத்து விடுவார். 'நோய்க்கு மருந்தே தவிர நாவுக்கு மருந்து அன்று' என்று கூறிவிடுவார். இதனால் நடுவு நிலை திரியாத அறவோர் என்ற பெயரையும் பெற்றுவிட்டார். பல காலம் அவர் இவ்வாறு செய்வதைத் தலைவி கண்டிருந்தாள். இப்பொழுது அவளுக்கு அவருடைய நினைவு தோன்றிற்று. அவர் செயலை எடுத்துக் காட்டுவதன் மூலம் தலைவனுக்கு அறிவு கொளுத்த முடிவு செய்துவிட்டாள்.

நேரடியாக ஒன்றைக் கூறுவதைக்காட்டிலும் மறைமுக மாகக் கூறுவது எளிது. அவ்வாறு கூறுவதிலும் நகைச்சுவை தோன்றக் கூறுவது இன்னும் நலம் பயக்கும். ஆனால், நகைச்சுவை ததும்பப் பேசக்கூடிய நிலையிலா தலைவி இருக்கிறாள்? எல்லையற்ற வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும் அவளால் சுவைபடப் பேசல் இயலுமா? பேச முடியும் என்று 'சுவை இயல்' ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஒவ்வொருமுறையும் ஒருவன் நகைச்சுவை ததும்பப் பேசும் பொழுதும் சிரிக்கும் பொழுதும் ஆராய்ந்து பார்த்தால் ஓர் உண்மை விளங்கும். அவனுடைய உணர்ச்சிகளை ஆழ்ந்து நோக்கினால் கண்ணீர் வரவழைக்கும் ஒரு நிலையி லிருந்தே இந்த நகைச்சுவை தோன்றிற்று என்பதை அறிய முடியும்? இவ்விலக்கணத்தைத் திருப்பி வைத்துப் பார்த்தாலும் இதில் உண்மை இருப்பது விளங்கும். எல்லையற்ற துயரம் தோன்றிய பொழுதும் சிரிப்பும், சிரித்தற்கு ஏற்ற பேச்சும் தோன்ற இடமுண்டு என்பதை அறிய முடிகிறது. [For, in every case in which a man laughs humorously there is an element which, if his sensitivity were sufficiently exaggerated, would contain the possibility of tears. - The Sense of Humour by Max Eastman. P.21.] மேலே கூறப் பெற்ற தலைவிக்கு எல்லையற்ற வருத்தத்தினாலேதான் நகை ததும்பப் பேசும் வாய்ப்பு ஏற்படுகிறது.

நகைச்சுவையுடன் வரும் பேச்சு ஏதாவது ஒரு காரணம் பற்றியே தோன்றல் கூடும். அக்காரணத்தை ஆய்ந்த திறனாய்வாளர் இவ்வாறு கூறுகின்றனர்; 'நகைப் பேச்சு என்பது வைரம்போன்ற ஒளிபடைத்த ஓர் அனுபவமாகும். விளையாட்டில், எதிர்பாராமல் தோன்றிய அதிர்ச்சியோ, ஏமாற்றமோ (அது மனத்திருப்தியை உண்டாக்குவதாயின்) தோன்றும் பொழுதுதான் இந்த அனுபவம் கிட்டுகிறது. [And a joke is a little node, or gem like moment in our experience created by the exact coincidenc of a playful shock or disappointment with a playful or a genuine satisfaction - ibid P.28.]

தலைவியின் எல்லையற்ற நம்பிக்கை மெள்ளத் தகர்கிறது. தலைவன் நீண்ட காலமாகத் தன் எதிர்காலம் பற்றி ஒன்றும் கவலையுறாமல் இருப்பதால், இது எவ்வாறு முடியுமோ!' என்ற ஐயம் முதலில் தோன்றிற்று, நாளடை வில் அந்த ஐயம் வளர்ந்து பெரிதாயிற்று. ஒருவேளை அவள் அவனை நெருக்கிக் கேட்ட பொழுது அவன் தட்டிக் கழிக்கும் முறையிலோ, அன்றி அவள் மனம் அமைதியடையாத நிலையிலோ பேசியிருக்கலாம். இந்த ஏமாற்றம் அவளுடைய மனத்தில் ஆழப் பதிந்து விட்டது. இதன் பயனாகவே அவளுடைய பேச்சும் மாறுபட்டு வெளிவருகிறது. ஒரு நாள் தலைவன் வந்தான்; ஆனால், தலைவியிடம் நேரே வந்துவிடாமல், ஒரு வேலி ஓரத்தில் மறைவாக நிற்கிறான். அவன் வந்து நிற்பதைத் தோழி தலைவி என்ற இருவரும் அறிந்தனர். அவனிடத்தில் நேரிற் கூறமுடியாத ஒன்றை மறைமுகமாகக் கூற விரும்பினாள் தலைவி; அவன் இருப்பதை அறியாதவள் போலப் பேசத் தொடங்குகிறாள் தோழியை நோக்கி; தலைவன் தன்னை விட்டு நீண்ட காலம் பிரிந்திருப்பதால் தன் தோள்கள் மெலிந்துவிட்டன என்று கூறவேண்டும் அவளுக்கு. அதைத்தான் எவ்வளவு திறம்படக் கூறுகிறாள்! ஆத்திரத் துடனும் அழுகையுடனும் பேசவேண்டிய ஒரு நிகழ்ச்சியை ஆழ்ந்த நகைச்சுவை ததும்பப் பேசுகிறாள் தலைவி;

"தோழி, திருத்தமாகச் செய்ய பெற்றனவும் ஒளி பொருந்தியனவுமான வளையல்களை வேண்டுமென்று யான் அழவும், என் தந்தையார் என்ன செய்தார் தெரியுமா? கடுமையான பிணியுடையவர்கள் விரும்பிய மருந்தைக் கொடாமல், அவர்கள் நோயை ஆய்ந்து அதற்கு ஏற்ற மருந்தையே தரும் அறமுடைய மருத்து வானைப் போலத் தந்தையார் எனது நிலையை உணர்ந்து கொண்டார். தலைவனொடு நமக்குப் பிரிவு நேரிடும்; அந்த நேரத்தில் நம்முடைய தோள் நெகிழும். அவ்வாறு நெகிழ்ந்தால், இந்த வளையல்கள் கழன்று வீழ்ந்துவிடுமே என்று ஐயுற்றவர் போல, மிகவும் இறுக்கமாக அமைந்துள்ள சிறிய வளையல்களையே போட்டு விட்டிருக்கிறார்," என்று கருத்துபடக் கூறுகிறாள்.

 

திருந்துகோல் எல்வளை வேண்டியான் அழவும்

அரும்பினி உறுநர்க்கு வேட்டது கொடாது

மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல

என்ஐ வாழிய பலவே! பன்னிய

மலைகெழு நாடனொடு நம்மிடைச் சிறிய

தலைப்பிரிவு உண்மை அறிவான் போல

நீப்ப நீங்காது வரின்வரை அமைந்து

தோட்பழி மறைக்கும் உதவிப் போக்குஇல்

பொலம்தொடி செறீஇ யோனே! (நற்றிணை, 136)

 

'தலைவன் பிரிந்தபொழுது தோள் இழைத்தாலும் கழன்று விழாத வளையல்களாகப் பார்த்து எனக்குப் போட்டு அனுப்பினார் போலும் தந்தையார்! அவர் வாழ்க!' என்று கூறுவதில் நகைச்சுவை அமைந்துள்ளது. ஆனால், நுண்ணிதின் நோக்குவார்க்கேயன்றி மேலாகக் கற்பார்க்கு விளங்கா வகையில் அமைந்து கிடக்கிறது அந்தச் சுவை. தன் தோள்கள் இளைத்துவிட்டமையைத் தலைவன் ஆர்வமிகுதியால் காணவில்லையாகலின், சிரிப்புடன் பேசுவதுபோல அவ்வுண்மையை அவன் காது கேட்கக் கூறிவிட்டாள். என்றாலும், அந்த நகைச்சுவையும் அவளுடைய பெண் தன்மைக் கேற்ப அடக்க ஒடுக்கத் துடன் வெளிவருகிறது. வெடிச் சிரிப்புடன் வரும் சொற்களல்ல இவை; மெல்ல முல்லையரும்புப் போன்ற பற்கள் மட்டும் வெளியே தெரியும் படியான புன் சிரிப்புடன் வரும் சொற்கள் .

இலக்கியத்தில் தோன்றும் இத்தகைய நகைச்சுவை கட்கு ஒரு காரணம் கூறுகின்றனர் திறனாய்வாளர். மனித மனத்தின் ஆழத்தை அது வெளிப்படுத்துகிறது. ஆதலின், அதனைக் காண்டல் வேண்டும்.

"எதிர்பார்த்தது நடைபெறும் பொழுது தோன்றும் இன்பத்தையும், அது நடைபெறாத பொழுது ஏற்படும் துன்பத்தையும் நம் அறிவு எடை போடுகிறது. துன்பந்தான் நேரும் அந்த இக்கட்டான நிலையில், மகிழ்ச்சி தரக் கூடியது எதுவாயினும், அந்த ஒன்று கற்பனை அளவிலே தான் மகிழ்ச்சி தரும். என்றாலும், அறிவு அந்தக் கற்பனை மகிழ்ச்சியைப் பற்ற விரும்புகிறது. இவ்வாறு கற்பனை மகிழ்ச்சியைப் பெறுவதன் மூலம், இன்மையால் நேரும் துன்ப உணர்ச்சி தணிகிறது."

[Our brain is just balancing, as we might imagine upon the Fine edge between pain and pleasure at the failure of what it had momently desired, when there looms into the void some unexpected rips apple of a thing desired more, or desired at least deeply and continuosly, and with a hunger that can be relied on to be glad. And by this means that arbitrary trick of turning loss into gain is actually warrented and borne out by the facts. - Ibid, p. 28]

தலைவன் செய்த கொடுமையால் ஏற்பட்ட ஆறாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவியைத் தந்தை செய்து போட்ட இறுக்கமான வளையல்கள் பற்றிய நினைவு சிரிக்கச் செய்கிறது. ஏனைய சந்தர்ப்பமாயின், இது நகைப்புக்குரிய செயலன்று. ஆனால், பிரிவினால் ஏற்பட்ட வருத்தத்தின் எதிரே தந்தையின் இந்தச் செயலிலும் ஒரு நகைப்பைப் பெறுகிறாள் தலைவி. இத்துணை நுண்ணிய முறையில் சுவைகளைப் பெய்து பாடும் தமிழ்க்கவிஞர் இனம் இன்று எங்கு மறைந்ததோ, தெரியவில்லை.

 

'நாடனை அறியலும் அறியேன்!'

 

தம்முடைய நெஞ்சால் உண்மை என்று அறிந்த ஒன்றை மறைத்துக் கூற முற்படுதல் தவறாக முடியும் என்று கூறினார் வள்ளுவப் பெருந்தகையார். ஆனால், உலக மக்களின் பெரும்பாலோர் அறிந்தும் அறியாமலும் இக்குற்றத்தைச் செய்துதான் வருகின்றனர். நெஞ்சறிந்தே பல சந்தர்ப்பங்களில் பொய்பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவதால் அந்த நேரத்தில் வரும் துன்பத்திலிருந்து விடுபடவே பல சமயங்களில் இவ்வாறு பொய் பேசுகின்றனர். இன்னுஞ் சிலர் பொய் கூற வேண்டிய இன்றியமையாமை இல்லாத பொழுதும் பொய் கூறு கின்றனர். இவர்களே ஒரு தனி இனத்தைச் சேர்ந்தவர்கள். காரணமில்லாமல் ஏன் பொய் கூறுகின்றனர் என்று ஆராய்ந்தால், ஓர் உண்மை விளங்கும். இவ்வினத்தார் பொய் கூருதலை ஒரு கலையாக வளர்த்து விட்டனர். கலைப்பித்துப் பிடித்த கலைஞர்களுக்குத் தங்கள் கலையை மட்டும் மறக்க இயலாது; உணவின்றிப் பட்டினியால் வாடுவார்கள்; ஏனைய எத்தகைய கடுந் தண்டனையை வேண்டுமானாலும் அனுபவிப்பார்கள். ஆனால், அவர்கள் விரும்புகிற கரையிலிருந்து அவர்களைப் பிரித்து விட்டால், நீரிலிருந்து தரையில் எடுத்துப் போடப்பட்ட மீன் போல மூச்சுத் திணறுவார்கள். இந்த இலக்கணமும் கலைஞர் அனைவருக்கும் பொதுவானதே. எனவே, பொய் பேசுதலைக் கலை போல வளர்த்தவர்கட்கும் இது உண்மையாகும். அவர்கள் எந்தத் துன்பத்தை வேண்டு மானாலும் அனுபவிக்கத் தயங்க மாட்டார்கள். ஆனால், ஒரு நாள் மட்டும் பொய் கலவாமல் பேசவேண்டும் என்று கட்டுப்பாடு செய்துவிட்டால்-பாவம்-அவர்கள் பாடு பெருந் திண்டாட்டமாய்ப் போய்விடும்! இந்த வியப்பான பிராணிகளிடம் மற்றொரு புதுமையையும் காணலாம். அதுதான் காரணமில்லாமல் இவர்கள் பொய் பேசுவது ஒரு பயனைக் கருதிப் பொய் பேசுபவர்களை நாம் மன்னித்துவிடலாம். ஆனால், எவ்விதப் பயனையும் எதிர்பாராமல் பொய்யைப் பொய்க்காகவே பேசும் இயல்புடையவர்கள் இவர்கள். ஆதலாலேதான் இவர் கலைக் கலைஞர்கள் என்று கூடக் கூறலாம் போலத் தோன்றுகிறது.

ஏனைய கலைகளில் ஆன பெண் என்ற வேறுபாடு இல்லை; இரண்டு தரத்தாரும் ஒத்த மதிப்புடைய கலைஞராய் விடலாம். ஆனால், 'பொய்க் கலை'யில் மட்டும் நம் சோதரிமார்கள் நம் பக்கத்திற்கூட வர இயலாது. ஆண் மக்களாகிய நம்முடைய இனத்தின் தனி உரிமை இக்கலை. இக்காலத்தில் வாழும் நமக்கும் மட்டும் இதனைக் கூறுவதாக யாரும் நினைத்து மகிழ்ந்துவிட வேண்டா. நம்முடைய முன்னோர்கட்கும் இது பொருந்தும். அதுவும் 'காதல்' விஷயத்தில் இது முற்றிலும் உண்மை. காதல் சம்பந்தமான விஷயங்களில் தலைவன் அஞ்சாது பொய் உரைப்பான். ஆனால் ஒன்று; அந்நாளில் பொய் பேசிய நம் இனத்தவனாகிய தலைவனுக்கும் இன்று வாழும் நமக்கும் ஒரு சிறு வேறுபாடு உண்டு. அவனுடைய பொய்யால் பிறருக்குத் தீமை ஏற்படுவ தில்லை. இன்று நாம் கூறும் பொய்களால்....?

பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த தலைவனுடைய பொய் ஒரு புறம் இருக்க, சில சந்தர்ப்பங்களில் பெண்களும் இதனைக் கையாண்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் பொய் கூறவேண்டிய இன்றியமையாமை ஏற்படுவதும் அந்தச் சமுதாய வாழ்வில் உண்டு. ஓர் ஆண் மகனும் ஒரு பெண் மகளும் சேர்ந்து தாமே களவு வாழ்க்கையில் ஈடு பட்டார்கள். அப்படி இருக்க, ஊரார் அனைவரும் அந்தப் பெண்ணைப் பற்றித்தான் அலர் (பழி) தூற்றினார்கள். அவள்மேல் வந்த பழிக்கு அவனும் சரிபாதி காரண மாவான் என்பதை ஏனோ அவர்கள் அறிவதில்லை! அறிந்தாலும் அவனைக் குற்றம் கூறுவதும் இல்லை.

எனவே, தம்முடைய களவு வாழ்க்கையைப் பிறர அறியாமல் மறைத்து ஒழுக வேண்டுமென்று அவன் கவலைப்படவே இல்லை. இவ்வாழ்க்கை வெளிப்பட்டு விடக்கூடாதே என்ற கவலையெல்லாம் - பாவம் - அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய தோழிக்குமே உண்டு. இதனால், சில சந்தர்ப்பங்களில் தலைவியும் தோழியும் வேறு வழி இன்றிப் பொய் பேசி உள்ளனர். இலக்கியத்தில் எங்கோ இரண்டொரு பாடல்கள் இத்தகைய காட்சியைச் சித்தரிக்கின்றன.

அத்தலைவனிடம் சில காலமாக அத்தலைவி களவில் ஈடுபட்டு வருகிறாள். இந்தச் சந்தர்ப்பத்தில் அவள் தினைப்புனத்தில் காவல் காத்து வருவது அவளுடைய களவு வாழ்க்கைக்கு மிகவும் உதவியாய் இருக்கிறது. தினைப்புனம் அவர்களுடைய வீட்டிலிருந்து நெடுந் தூரத்திற்கு அப்பால் அமைந்திருக்கிறது, நீண்ட தூரத்தில் அமைந்துள்ள அப்புனத்திற்கும் வீட்டிற்கும் அடிக்கடி சென்று வருதல் என்பது இயலாத காரியம். எனவே, தலைவியும் தோழியும் இரண்டொரு பணிப் பெண்களுமே தினைப்புனத்தில் தங்குவார்கள். தினைப்பயிர் அறுவடை ஆகிற வரையில் அவர்கள் புனத்திலேயே தங்கி இருக்க வேண்டும். வீரக்குடியில் பிறந்த பெண்கள் ஆதலின், வேறு ஆண் மக்களின் துணை இன்றி அவர்கள் மட்டுமே அங்குத் தங்கியுள்ளார்கள். ஆண் மக்களின் வாடையே இல்லாமல் 'அல்லி ராஜ்யம்' நடத்தும் தலைவி, ஏனைய தோழிகளோடு சேர்ந்து வாழ்க்கையை மிக இன்பமாகக் கழிக்கிறாள். என்றோ ஒரு நாள் அவள் தந்தை மகளைப் பார்த்துவிட்டுப்போக வருவான். மற்றொரு நாள் தாய் வருவாள். பிறிதொரு நாள் தலைவியின் உடன் பிறந்தார் வந்து அவளைக் கண்டு போதலும் உண்டு. அவளுடைய வாழ்க்கை தினைப்புனத்தில் நன்கு நடைபெற இன்றி யமையாத பொருள் ஏதேனும் தேவைப்பட்டால், அவர்கள் அதைக் கொண்டு வந்து தந்து போவார்கள். தந்தைக்கும், அண்ணன்மார்க்கும் குடும்பத்தைத் தாங்க வேண்டிய பொறுப்பு இருத்தலின், அவர்கள் புனத்திற்கு எப்பொழு தாவது வந்தாலும் நீண்ட நேரம் தங்க இயலாது. தாயும் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய கட்டுப்பாடு உடையவள். ஆதலால், அவளும் அடிக்கடி வரமாட்டாள். வந்தாலும், இவர்களுடன் தங்கமாட்டாள். எனவே, தலைவியின் பாடு கொண்டாட்டந்தான்!

இம்மாதிரி வாழ்க்கை நடைபெற்று வருகையிலேதான் ஒரு நாள் அவன் வந்தான்; தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்; உடன் காதலும் பிறந்தது. பின்பு இருவரும் தனியே சந்தித்தனர்; மகிழிச்சியுடன் காலத்தைக் கழித்தனர். தலைவனுடன் சேர்ந்த தலைவி, அந்த மலைப்புறமெல்லாம் சுற்றி அலைந்தாள்; அவனுடன் சேர்ந்தே மலைச் சுனைகளில் நீராடினாள்; அருவிகளிலும் குளித்து விளையாடினாள். இருவரும் நேரம் போவது தெரியாமல் வாழ்ந்து வரத் தலைப்பட்டனர். தலைவியின் உயிர்த் தோழிக்கு மட்டும் தலைவியின் இந்தப் புதிய வாழ்க்கை தெரியும். அவளும் தன்னால் இயன்ற அளவுக்குத் தலைவியின் வாழ்க்கை இன்பம் அடைய உதவுவாள். மற்றப பணிப பெண்களைப் பொறுத்த மட்டில் தலைவியின் வாழ்க்கை இன்பம் அடைய உதவுவாள். மற்றப பணிப பெண்களைப் பொறுத்த மட்டில் தலைவியின் புது வாழ்வு நன்கு தெரியாது. தெரிந்தாலும், அவர்கள் அவள் செயல்களில் ஈடுபடுவது மில்லை. அவள் நடத்தையைக் கவனிக்க அவர்கள் யார்? புனத்திற்கு வெளியிலிருந்து ஒருவரும் வாராத வரை தலைவியின் இன்ப வாழ்வு ஆற்றோட்டம் போல நன்கு நடைபெற்றுத்தான் வந்தது.

 

தாயோ, தந்தையோ வருகின்ற அந்த நேரத்தில் தலைவி பரண்மேல் நின்று கொண்டிருந்துவிடுதல் போது மானது. என்றாவது தலைவியின் முகம் மாறுபட்டு இருப்பதாகத் தாய்க்குத் தோன்றும். அவளுடைய நடை, உடை, பாவனைகள் அனைத்திலுங்கூடச் சில சந்தர்ப்பங் களில் வேறுபாடு தோன்றுவதுண்டு. அம்மாதிரி நேரங் களில் எல்லாம் அந்தப் பைத்தியக்காரத் தாய்க்கு மகள் மேல் ஐயந் தோன்றுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் தங்களைப் பிரிந்து இருப்பதால் இந்த மாறுபாடு ஏற்பட்டிருந்தாலும் இருக்கலாம் என்று அவள் நினைத்துக் கொண்டு சென்றதும் உண்டு.

தாய் இவ்வாறு வந்து சென்றுகொண்டிருந்த வரை தலைவிக்கு எவ்வித துன்பமும் நேரவில்லை. ஆனால் உலகத்தில் நாம் நினைத்தவை நினைத்தபடி நடை பெறுவதில்லை அல்லவா? அவ்வாறு நடைபெற்றால், இதனை உலகம் என்றுதான் கூற முடியுமா? ஒரு நாள் தாய் வருவாள் என்று தலைவி சற்றும் எதிர் பார்க்க வில்லை. ஏனெனில், முதல் நாள்தான் அவள் வந்து போனாள். எனவே ஊரிலிருந்து ஒருவருமே தன்னைக் காண வரமாட்டார் என்று நினைத்துவிட்டாள் தலைவி. எனவே, தலைவன் வந்தவுடன் அவனுடன் புறப்பட்டு விட்டாள். நேரம் போவதே தெரியவில்லை அவளுக்கு. மாலை நெடுநேரம் ஆகிவிட்டது. ஏன் அதற்குள் அந்திப் பட்டுவிட்டது என்று கேட்கத்தான் அவளுக்குத் தோன்று கிறது. தன்னால் காவல் காக்கப்பட வேண்டிய தினைப் புனம் என்ன கதியாயிற்றோ என்றுகூட அவள் கவலைப் படவில்லை.

அவள் எல்லையற்ற இன்பக்கடலில் திளைத்தபடியே மாலை நேரத்தில் பரணை நோக்கி வந்தாள். பரண் அமைந்திருக்கும் இடத்திற்கு சிறிது தூரம் வரை தலைவனே அவளைக் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றான். பரண்மேல் ஏறிச் சென்றாள் தலைவி. என்ன வியப்பு! அவள் தாய் அங்கே அமர்ந்திருந்தாள். கால தேவனைக்கூடத் தலைவி அந்த இடத்தில் அஞ்சாமல் சந்தித்திருப்பாள்; ஆனால், அவளுடைய தாயை மட்டும் சந்திக்க விரும்பவில்லை. என்ன செய்வது!

எவ்விதமான ஐயமும் கொள்ளாமல், "எங்கே அம்மா இவ்வளவு நேரம் சென்றிருந்தாய்?" என்று கேட்டுவிட்ட தாயையும், அவளுடைய கேள்வியையும் சற்று எதிர்பாராத தலைவி, வாயடைத்து நின்றுவிட்டாள். அவள் தாய் வேறு விதமாகப் புரிந்துகொண்டுவிட்டாள். தன் கோபத்தை எங்கே மகள் அறிந்து கொண்டு மனவருத்தும் அடைவாளோ என்று அஞ்சிய தாய், உடனே. "ஏன் அம்மா, தினைபுனக் காவலைக்காட்டிலும் முக்கியமான காரியம் என்ன இருக்கிறது? எங்குச் சென்றிருந்தாய்?" என்று கேட்டுவிட்டாள். 'புனக்காவலை விட்டுவிட்டு ஏன் போனாய்?" என்று தாய் கேட்டதும் தலைவி மிகவும் அஞ்சிவிட்டாள். தான் தலைவனுடன் இருந்ததைத் தாய் கண்டுவிட்டாளோ என்ற ஐயம் மகள் மனத்தில் தோன்றி விட்டது. மேலும் தான் ஒரு தவற்றைச் செய்துவிட்டு அஞ்சி நிற்கையில் பிறர் யாது கூறினாலும், உண்மையை அறிந்துவிட்டர்களோ என்ற ஐயம் தோன்றுவது இயல்பு. 'பூசணிக்காய் திருடியவன் முதுகு வெள்ளை நிறம் ஏறி இருக்கும்,' என்று கூறினால், உடனே திருடியவன் முதுகைத் தடவிப் பார்ப்பது உறுதியன்றோ? எனவே, தாயின் இக்கேள்விக்கு, 'நான் எங்கும் வெளியே செல்ல வில்லை,' என்று விடை இருக்க நினைத்தாள் தலைவி. நன்கு பொய் கூறிப் பழக்கப்பட்டிருந்தால், பதறாமல் இவ்வாறு கூறியிருப்பாள். ஆனால் இதற்கு முன்னர்ப் பொய் கூறிப் பழக்கம் இல்லை தலைவிக்கு. எனவே, அவளையும் மீறி மெய்ம்மை வெளிப்பட்டு விடுகிறது. மெய்ம்மையை மறைக்கவேண்டும் என்று முயன்றதால் வேடிக்கையான முறையில் விடை வெளி வருகிறது. 'நான் தலைவனைப் பார்க்கவும் இல்லை; அவனை நான் அறியேன்; சுனையில் யாருடனும் சேர்ந்து நீராடவும் இல்லை,' என்று கூறுகிறாள்.

இவ்வாறு மகளிடம் ஒரு விடையை அந்தத் தாய் எதிர்பார்க்கவே இல்லை. இவ்விடையைக் கேட்டு அப்படியே தலையைத் தொங்கவிட்டுக்கொண்டாள் தாய். பதில் பேச அவளுக்கு வாய் ஏது? இனி மகளைத் தினைப்புனக் காவலுக்கு விடுவாளா என்பது ஐயந்தான்.

இவ்வாறு ஒரு நாள் நடந்ததாகவும் இனித்தலைவியின் நிலைமை யாதாகுமோ என்று கவலையுறுவதாகவும் தோழி கூறுகிறாள். தலைவன் பரணின் பக்கத்தே மறைந்து கொண்டிருக்கிறான். அவன் காதில் இது விழ வேண்டுமாம். இதைக் கேட்டவுடன் இனித் தலைவியைச் சந்திக்க முடியாதென அஞ்சி விரைவில் மணந்துகொள்வானாம்.

இனிய தேன் பிலிற்றுகிற சாரலினிடத்துச் சிறிய தினைப்பயிரின் பெரிய கதிர்களைச் சிவந்த வாயை யுடைய பசிய கிளிகள் திருடுமாறு விட்டுவிட்டு நீ எங்கே சென்றுவிட்டாய் என்று தாய் கேட்டாளே! நீ அவள் எதிரே நின்று, 'அருவி ஒலிக்கும் மலை நாடனை நான் அறியேன்; கண்டதும் இல்லை. கிளியை ஓட்டும் கருவியைக்கொண்டு பூக்களைக் கொய்து, அவனுடன் சுனையில் ஆடவும் இல்லை,' என்று நீ பொய் கூறுவது போல மெய்யைக் கூறிவிட்டாய். அதைக் கேட்டுத் தாய் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டாள். இனி உன்னைத் தினைப்புனக் காவலுக்கும் விடமாட்டாள். நம் கதி யாதாகுமோ!' என்கிறாள் தோழி:

 

யாங்குஆ குவமோ அணிநுதல் குறுமகள்!

தேம்படு சாரல் சிறுதினைப் பெருங்குரல்

சிவ்வாய்ப் பைங்கிளி கவர நீமற்று

எவ்வாய்ச் சென்றனை அவண்? எனக் கூறி

அன்னை ஆனாள் கழற, முன்நின்று

'அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை

அறியலும் அறியேன்! காண்டலும் இலனே!

வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து

சுனைபாய்ந்து ஆடிற்றும் இலன்!' என நினைவிலை

பொய்யல் அந்தோ வாய்த்தனை! அதுகேட்டுத்

தலைஇறைஞ் சினளே அன்னை

செலவுஒழிந் தனையாள் அளியைநீ புனத்தே!' (நற்றிணை, 147)

 

(யாங்காகுவமோ- நாம் இனி எவ்வாறு தப்பப் போகி றோமோ; தேம்படு சாரல்- இடம் அகன்ற மலைச்சாரல்; பெருங்குரல்- பெரிய கதிர்; வெதிர்புனைதட்டை- மூங்கிலாற் செய்த கிளியை விரட்டும் கருவி; பொய்யால் வாய்த்தனை - பொய் கூற முடியாமல் உண்மை கூறி விட்டாய்; இறைஞ்சினள்- தொங்கவிட்டாள்; அளியை- நீ இவ்வாறு குடும்பம் நடத்தப் போகிறாய் என்று பிறரால் இரங்கத் தக்கவள்).

 

'மன்ற மடவை, வாழிய முருகே!'

 

தலைவிக்கு உற்ற துணைவியாய் உள்ள தோழியின் சிறப்பையும் அவள் தலைவிக்குச் செய்த உதவியையும் பற்றிக் கூறும் பாடல் இது.;

வானை முட்டும் மலை ஒன்று. பல வளங்களும் நிறைந்துள்ளன அங்கு. குறிஞ்சித்திணை என்றால் மலை யும் மலையைச் சுற்றியுள்ள இடங்களுமே குறிக்கப்படும். இம் மலைநாட்டை ஆள்பவன் 'நாடன்' என்று பொது வாகக் குறிக்கப்படுவான். அவனுடைய மலை பல வளங் களுக்கும் உறைவிடமாய் இருப்பதற்கு நீர்வளம் வேண்டு மல்லவா? அவ்வளத்தை அங்கு ஓயாமல் பெய்யும் மழை தருகிறது. ஆனால், மலையில் பெய்யும் மழை நில்லாமல் ஓடிவிடும் இயல்புடையது. எனவே அம்மழை நீரைத் தேக்கி வைத்துக்கொள்ள, இயற்கை அன்னை குளங்கள் தோண்டி வைத்திருப்பாள். அவற்றிற்குச் 'சுனைகள்' என்று பெயர் கூறுவர்.

பாறைகள் மூடிய சுனைகள் பக்கம் மாந்தர் செல்ல வும் அஞ்சுவர். சின்னாட்களில் அவைகளும் கடவுள் தன்மை பெற்றுவிடும். இத்தகைய கடவுட் சுனையை உடைய மலைக்கு அவன் தலைவன். அவனுடைய மலையில் உள்ள இந்தச் சுனையில் மக்கள் செல்வதில்லை யாகலின், அங்குத் தேவமாதர்கள் வருவார்களாம். அவர்களைச் 'சூர் அரமகளிர்' என்று சங்கப் பாடல்கள் குறிக்கும். அத்தேவ மாதர்கள் அந்தத் தலைவனுடைய மலையில் உள்ள கடவுட் சுனைக்கு வந்து, அங்கு மக்கள் பறிக்க அஞ்சி விட்டுச் சென்ற மலர்களைப் பறிக்கிறார்கள். அப்பூக்களைக் கவிஞன் 'பறியாக் குவளை' என்றே குறிப்பிடுகிறான். பறியாக் குவளை என்றால், மக்களால் பறிக்கப்படாத குவளை மலர்கள் என்பது பொருள். மக்களால் தீண்டப்படாத அக்குவளை மலர்களை அத் தேவ மாதர்கள் பறிக்கிறார்கள்; அக்குவளையுடன்சேர்த்துக் கட்டுவதற்காக, இரத்தம் போன்று சிவந்த நிறமுடைய 'காந்தள்' பூவையும் பறிக்கிறார்கள்; பிறகு அவை இரண்டையும் அழகு பொருந்தக் கட்டுகிறார்கள், அந்த மாலைகளை அணிந்து கொண்டு அத்தேவ மாதர்கள் ஆடுகிறார்களாம். பலர் சேர்ந்து ஆடும் அந்நாட்டியத்திற்கு இசை வேண்டும் அன்றோ? மலையில் சுனையின் அருகே வீழ்கின்ற அருவி சிறந்த பின்னணி இசையை அமைக் கிறதாம். இயற்கையில் பிறந்து வளர்கின்ற சூர் அரமகளிர் ஆடும் ஆட்டத்திற்கு அருவியின் 'ஓங்கார' ஒலி நல்ல பின்னணி இசையாய் அமைந்துவிடுகிறதாம். முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த குறிஞ்சி நிலத்தில், அச்செம் மேனியனுக்கே உரிய மலையில், அவனுடைய சுனை என்று கருதி, மக்கள் நெருங்க அஞ்சுகிற சுனைக்கரையில், அச்சுனையில் பூத்த குவளை மலர்களையும் காந்தட் பூவையும் சூடிக்கொண்டு சூர் அரமகளிர் நாட்டியமாடு கின்றனர், அருவியின் ஓசையைப் பின்னணி இசையாகக் கொண்டு. எனவே, அச்சூர் அரமகளிரும் முருகனுக்கு மிகவும் விருப்பமான அடியார்கள் போலும்!

இத்துணைப் பெருமை வாய்ந்த அருவி, சுனை முதளியவற்றையுடைய மலைக்குத் தலைவன் அவன்; நம்மைப் போன்ற மனிதன்தான். எனவே, அவனுக்கும் நம்மைப் போலக் காதல் முதலிய உணர்ச்சிகள் உண்டல்லவா? அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவளும் அந்த மலையை அடுத்த சிற்றூரில் வாழ்ந்து வருகிறாள். நீண்ட நாளாகவே அவனுக்கும் அவளுக்கும் நட்பு உண்டு. ஆனால், பிறர் அறிய மணந்து வாழும் நிலைமையை அவர்கள் இன்னும் அடையவில்லை. ஆனால், ஒருவர் இன்றி மற்றவர் வாழ முடியாது என்று கூறும் அளவுக்குக் காதல் கொண்டவர்கள். அவன் ஏறத்தாழத் தினம் ஒருமுறை சென்று தலைவியைக் கண்டு, ஆவலுடன் மகிழ்ந்துவிட்டு வருவான். அப்பொழு தெல்லாம் அவளும் வீட்டில் தங்கவில்லை. அவள் வீட்டை விட்டுச் சற்றுத் தூரத்தேயுள்ள தினைப்புனத்தைக் காவல் காத்து வந்தாள். அவளும் அவளுடைய உயிர்த் தோழியும் சேர்ந்து புனத்தில் காவல் காத்து இருந்தமை யின், வேறு ஆடவர் துணை இல்லாமல் இருந்தது, தலைவன் முதன்முறை தலைவியைச் சந்தித்த பொழுது, தோழிக்குத் தெரியாமலே சந்தித்தான். அனால், முதற் கூட்டம் முடிந்த பிறகே, தோழியின் தயவு இல்லாமல் தாம் இருவரும் நீண்ட காலம் இவ்வாறு களவுப் புணர்ச்சியில் இருக்க முடியாது என்பதைக் கண்டு கொண்டான். எனவே, மறுமுறை தோழியைச் சந்தித்துக் குறிப்பால் தன்னுடைய காதலை அவளிடம் கூறித் தலைவியைத் தான்சந்திப்பதற்குத் தோழியின் சம்மதியைப் பெற்றுவிட்டான்.

தடைஇல்லாமல் நீண்டகாலம் அனுபவிக்கக் கூடியது என்ற இன்பம் ஒன்றும் இந்த உலகில் இல்லை, ஆதலால், தலைவனுடைய இன்பத்திற்கும் முற்றுப் புள்ளி வைப்பது போலத் தினைக்கதிர்கள் நன்கு முற்றி அறுவடையாகி விட்டது. தினைப்புனத்தில் வேலை முடிந்தவுடன் தலைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். வீடு ஊரின் நடுவே இருக்கிறது. ஊருக்கோ, கட்டும் காவலும் மிகுதி. தலைவன் விருப்பம்போல வந்து தலைவியைக் கண்டு போக முடியவில்லை இப்பொழுது. எத்தனையோ முறைகள் வந்து தலைவியைச் சந்திக்க முடியாமற் போய் விட்டான். அவன் அடைந்த வருத்தம் கொஞ்சமன்று; ஆனாலும், அவன் ஆண் மகன் அல்லனோ! எனவே, தன் வருத்தத்தை அடக்கிப் பிறருக்கும் புலப்படா வண்ணம் மறைத்துக் கொண்டும், தன் பிற கடைமைகளில் ஈடுபட்டும், கவலையை மறந்தும் வாழ்ந்து வருகிறான். ஆனால், தலைவியின் நிலைமை என்னாவது?

கட்டுக் காவல் மிகுந்த ஊரில், தன்னுடைய ஒவ்வொரு செயலையும் கூர்ந்து நோக்கும் தாயினுடைய பாதுகாவலில் இருந்து வருகிறாள் தலைவி. அவளுக்கு மட்டும் தலைவன் நினைவு இல்லையா? அவள் நேரம் முழுதும் அவனைப் பற்றிய நினைவிலேதான் கழிகிறது. ஆனால், அவள் படும் துயரை உயிர்த் தோழி தவிர வேறு யாரும் அறியவில்லை; அறியவும் முடியாது. அறிவதை அவள் விரும்பவும் இல்லை. ஆனால் பாரதியார் கூறிய படி, ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கிறது அவள் உள்ளம். மனத்தில் தோன்றிய இந்த வருத்தம் சும்மா விடுமா அவளை? அது மெள்ள மெள்ள அவளை அரிக்கத் தொடங்கி விட்டது. உடலில் மெலிவு கண்டு கைவளைகள் தாமாகக் கழன்று விழலாயின. உணவு செல்லவில்லை. உறக்கம் கொள்ள வில்லை. ஏதோன்றிலும் மனம் நாடவில்லை. தலைவியின் இந்த நிலையைத் தாயும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். என்ன செய்வாள் பாவம்! அவளுக்குத் தெரிந்த கைம்முறை மருத்துவமேல்லாம் செய்து பார்த்து விட்டாள். பக்கத்துவீட்டுப் பாட்டிமார்கள் வந்து பார்த்தார்கள். ஒருமுகமாக அவர்கள் தீர்ப்பும் கூறி விட்டார்கள். தீர்ப்பு என்ன தெரியுமா? தலைவியைத் தெய்வம் பிடித்துக் கொண்டது என்பதுதான். அவள் தினைப்புனம் காவல் செய்து கொண்டிருந்த அந்த வேளையில், கடவுட்சுனை என்று தெரிந்துகொள்ளாமல் அதில் ஒருவேளை சென்று குளித்து இருக்கலாம். கடவுட் பூ என்பதை அறியாமல் அதைச் சூடி இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் தெய்வம் அவளைத் தீண்டிவிட்டது. அதைத் தணிப்பதற்கு வழி யாது? ஒரே வழிதான் உண்டு. அவளைப் பிடித்த தெய்வக் குற்றம் நீங்கும்படியாக வேலன் வெறியாட வேண்டும். இன்று நாம் பூசாரி என்று கூறும் இனத்தான் அன்று வேலன் என்று வழங்கப் பட்டான். ஊரில் உள்ள பாட்டிமார் அனைவரும் கூடிச் சொன்ன இந்த முடிவைத் தாய் ஏற்றுக் கொண்டாள்.

வெறியாடுதலுக்கு உரிய சகல ஏற்பாடுகளும் ஆகி விட்டன. ஆனால், இதனால் ஒரு பெரிய இடையூறு தலைவிக்கு உண்டு. உண்மையிலேயே அவளைத் தெய்வம் தீண்டியிருந்தால், வேலன் வெறியாடிய பின் அது தீர்ந்து விடும். ஆனால், அவளைத் தலைவன் அல்லவோ தீண்டி இருக்கிறான்? வெறியாடுவதால் யாது பலன்? மீட்டும் தலைவன் வந்து அவளைத் தொட்டால் ஒழிய அவளுடைய நோய் தீரப் போவதில்லை என்பதை ஊரார் அறிந்து விட்டால் பழி தூற்றுவார்கள். இவ்வாறு தலைவியை ஐயுற்றுப் பழி தூற்றுதலை 'அம்பல்' என்ற பழந்தமிழர் இலக்கியம் பேசுகிறது. கொஞ்சம் 'கசமுச' என்று தூற்றப்பெறும் இதுவே பெரிதாகிப் பலரும் வெளிப் படையாகப் பேசும் நிலைமையில் 'அலர்' எனப் பெரும்.

இந்த நிலையில் தோழிக்கு வருத்தம் மிகுதிப்பட்டு விட்டது. எவ்வாறாவது அன்னை வெறி எடுப்ப முயல் வதைத் தடுக்க வேண்டும் என்று, அத்தோழி, அன்னை காதில் விழும்படி சில வார்த்தைகளைக் கூறுகிறாள். இதுவே பாடல் அமைந்த விதம்.

"முருகப் பெருமானே, நீ நெடுங்காலம் இந்த மடமை யோடு வாழ்வாயாக! தலைவியானவள், கடவுள் தன்மை பொருந்திய மலையிலுள்ள சுனைகளில் மலரும் குவளைப் பூவையும் உதிரம் போலச் சிவந்துள்ள காந்தட்பூவையும் அழகு பொருந்தக் கட்டிக் கொண்டு பெரிய மலையின் பக்கங்கள் எல்லாம் அழகுபொருந்தச் சூர் அர மகளிர் அருவியின் இனிய ஓசையைப் பின்னணியாகக் கொண்டு ஆடும் மலைக்குத் தலைவனுடைய மார்பு தந்த வருத்தத் தால் உண்டான நோய் நின்னால் ஏற்பட்ட துன்பம் அன்று என்பதை நீ நன்கு அறிந்திருந்தும், வேலன் வெறியாடும் களத்தில் இறுமாந்து அங்கே கொடுக்கப்படும் பழியை ஏற்றுக் கொள்வதற்காக வந்தவனே, நீ கடவுளாய் இருப்பினும் இருக்கட்டும்! திண்ணமாக நீ அறியாமை உடையவன்தான்!"

 

'கடவுள் கற்சுனை அடையிறந்து அவிழ்ந்த

பறியாக் குவளை மலரொடு காந்தன்

குறுதி ஒண்பூ உருகெழக் கட்டிப்

பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்

அருவி இன்இயத்து ஆடும் நாடன்

மார்புதர வந்த படர்மலி அருநோய்

நின்அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து

கார்நறுங் கடம்பின் கண்ணின் சூடி

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்!

கடவுள் ஆயினும் ஆக!

மடவை மன்ற வாழிய முருகே! (நற்றிணை-34)

 

(அடை இறந்து - இலைகளை விலக்கிக்கொண்டு; அவிழ்ந்த-மேலே மலர்ந்துள்ள; குருதி - இரத்தம்; உருகெழ -அழகு பொருந்த; அடுக்கம் பொற்ப-பக்க மலைகள் அழகு பொருந்த; இன் இயத்து - (பின்னணியான) இனிய வாத்தியமாக; படர்மலி அருநோய்-நினைப்பதால் மிகுதிப் பட்டு நீக்க முடியாத அரியநோய்; நின் அணங்கு அண்மை -நீ தொட்டதால் வந்த வருத்தமன்று; அண்ணாந்து-- மிக்க செருக்குடன்; கடம்பு-கடம்பம் பூ; கண்ணி- தலைமாலை).

சமுதாயத்தை அறிய தலைவன், தலைவி, தோழி முதலியோரை வைத்து நூற்றுக்கணக்கான அகப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் உள்ளன. குறிப்பிட்ட ஒரு தலைவன் அல்லது ஒரு தலைவி என்போரின் பெயரை வெளிப்படுத் தும் பாடல் ஒன்றுகூட இல்லை. அகத்துறை பற்றி எழுந்த பாடல்களில் தலைவன் பெயர் அல்லது தலைவி பெயர் காணப்பெற்றால் அதனை அகத்துள் சேர்க்காமல் புறத்தில் சேர்த்துள்ளனர். அகத்தினைக்கு இலக்கணம் கூறும் தொல் காப்பியம், 'சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறா' (அகத் திணை:57) என்று ஆணையிடுகிறதாகலின் அகப்பாடல்கள் அனைத்திலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்பெறவில்லை. இது ஏன் என்று சிந்தித்தால் ஓர் உண்மை நன்கு விளங்கும்.

அகப்பாடலில் வரும் தலைவன் தலைவி என்பவர்கள் அன்றைய சமுதாயம் ஒட்டு மொத்தத்திற்கும் குறியீடாக உள்ளவர்கள். அன்றையத் தமிழர்களில் ஓர் ஆண்மகன் தனியனாய்த் தோன்றி அன்பின் அடிப்படையில் ஒரு தலைவியைத் தேடிக் கொண்டான். இருவர் சேர்ந்து வாழும்பொழுது குடும்பம் அமைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. நூறு அல்லது மேற்பட்ட குடும்பங்கள் ஒன்று சேரும்பொழுது புறநிலையில் ஒரு கிராமம் உருவாயிற்று. அந்த கிராமத்தில் வாழ்கின்றவர்கள் அனைவரும் சமுதாயம் என்ற தொகுப்பின்கீழ் இடம் பெறலாயினர்.

சமுதாய வாழ்க்கை என்று வந்தபிறகு, தனி மனிதனுக் குள்ள உரிமைகள் சிலவற்றை இழக்க வேண்டி நேரிட்டது. கூடி வாழும் பொழுது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையும் உருவாயிற்று. இதனையடுத்து ஒருவருக் கொருவரும், குடும்பத்திற்குக் குடும்பமும் சமுதாயத்தின் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினருக்கும் உதவவேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. இது எப்படி முடிந்தது? அன்பு என்ற ஒன்றின் அடிப்படையில்தான் தனிக்குடும்பம் சமுதாயத்திற்கு உதவவும், சமுதாயம் தனி ஒருவருக்கு உதவவும் முடிந்தது. அப்படியானால் இந்த சமுதாயம் சிறந்த சமுதாயமாய், குறிக்கோள் தன்மை பெற்றதாய், பிறர் கண்டு வியக்கும் சிறப்புடையதாய் வளர அஸ்திவாரமாக இருந்தது இந்த அன்பு ஒன்றுதான்.

இந்த அடிப்படையான அன்பை தனிமனிதன் எங்கே பெற்றான்? ஆம். பிறர் பற்றி அதிகம் கவலைப்படாமல் தான் உண்டு, தன் வாழ்க்கை உண்டு என்றிருந்த தலைவன் ஒரு நாள் ஒருத்தியைக் கண்டு அன்பு கொண்டு அந்த அன்பே காதலாக முதிர்வதைக் கண்டான். 'யாயும் ஞாயும் யாராகியரோ; எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்; யானும் நீயும் எவ்வழி அறிதும்' (குறு) என வரும் குறுந் தொகைப்பாடல் (40), மேலே கூறியவற்றிற்கு அரண் செய்கிறது.

 

ஒருத்தி மாட்டு தோன்றிய இந்த அன்பு காதலாக முதிரும்பொழுது அந்தத் தலைவன் தன்னலத்திலிருந்து விடுபடுகிறான். அவளில்லாமல் தனக்கு வாழவில்லை என்று நினைக்கும் அளவிற்கு அந்த அன்பு வளர்ந்து, ஓருயிர் ஈருடல் என்ற அளவிற்கு முதிர்ந்து விடுகிறது. இங்கு தலைவனுக்குக் கூறிய அனைத்தும் தலைவிக்கும் பொருந்தும். இப்படி அன்பை வளர்த்துக் கொண்டதனால்தான் தனி ஒருவனும், தனி ஒருத்தியும் சமுதாயத்தின் சிறந்த உறுப்புக் களாக மலர்கின்றனர். எனவே அக இலக்கியம் சமுதாய வரலாற்றைக் கூறும் கண்ணாடி என்று கூறுவது பொறுத்த மாவதைக் காணலாம். சமுதாய வரலாற்றையும் வளர்ச்சி யையும் குறிக்கும் பாடல்கள் ஒரு தலைவன் அல்லது தலைவியின் பெயரைக் கூறுவது பொருத்தமற்றது, என்பது சொல்லத் தேவையில்லை. மேலே காட்டிய பாடல்கள் தமிழர் சமுதாயத்தின் அன்றைய ஒட்டுமொத்த வரலாற்றை எடுத்துக் காட்டுவனவாகும் என்பதை மனத்தில் கொள்ளுதல் நலம்.

 

போரும் அமைதியும்

 

சங்கப் புலவர்களுள் தலையாய பெருமை வாய்ந்தவர் கபிலர் ஆவார். அவர் பாண்டி நாட்டிலே உள்ள திருவாதவூரர் அந்தணர் மரபில் அவதரித்தவர். பரணர், இடைக்காடர் முதலிய புலவர் பெருமக்களோடு ஒருங்கு வாழ்ந்தவர். ஆரிய அரசனாகிய பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்துவான் வேண்டிக் குறிஞ்சிப் பாட்டு என்றதொரு பாடலைப் பாடினார். அவ்வொரு பாடலின் மூலம் தமிழ்ச் சுவையை ஓரளவு அறிந்த அவ்வரசன், தமிழை நன்கு கற்றுத் தானும் தமிழ்க் கவி இயற்றும் அளவிற்குப் புலவனாயினான். கபிலருடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த பகுதி அவர் வள்ளல பாரியினிடத்து நட்புக் கொண்டிருந்ததாகும். அவர், மூவேந்தரும் பாரியைக் கொன்ற பிறகு, பாரியின் மகளிர் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்று, ஓர் அந்தணரிடத்து அவர்களை ஒப்படைத்தார்; பின்னர்ப் பாரியின் பிரிவுத் துயர் தாங்காமல் வடக்கு முகமாய் இருந்து, இந்திரியங்களை ஒடுக்கி, உணவு உட்கொள்ளாமல் உயிர் துறந்தருளினார்.

அவர் பாடினவற்றுள் மிகப் பெரும்பகுதி குறிஞ்சித் திணை பற்றியது. ஆகலின், 'குறிஞ்சி பாடக் கபிலன்' என்ற முதுமொழியும் பிற்காலத்தெழுந்தது. அவர் பாடியனவாக நற்றிணையில் 19ம், குறுந்தொகையில் 29ம், ஐங்குறு நூற்றில் 100ம், பதிற்றுப் பத்தில் 10ம், அகநானூற்றில் 16ம் ஆக 174 செய்யுட்கள் கிடைத்துள்ளன. இவற்றையல்லாமல் பத்துப் பாட்டில் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டும் அவர் பாடியதே. அப்புலவர் பெருந்தகை பாடிய நற்றிணைப் பாடலுள் ஒன்றை இங்குக் காண்போம்.

 

மலை போன்ற பெரிய யானையின் பிடரியில் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரி அமர்ந்திருக்கிறான். அவனைச் சூழக் கடல் போல பெறும் படை செல்கிறது. பறை கொட்டும் புலையன் மிக்க எக்களிப்போடு கொட்டிச் செல்கிறான். மிக நீண்ட தூரம் சென்ற பிறகு பகைவனுடைய புலத்தில் மலையமானின் மாட்சிமிகு சேனை புகுந்துவிட்டது. புதிய நாட்டைப் போர் செய்து வெல்லுகிற வரை அது படைகளின் வேலை. படைகள் போரிட்டு வென்று தந்த பின்னர் அரசியளாரின் வேலை தொடங்குகிது. முதல் வேலையைவிட இவ்வேலை கடினமானது. பாரியின் மாட்டுக் கழிபெருங்காதல் கொண்டு அவன் அவையில் நீண்டகாலம் வாழ்ந்த கபிலருக்கு இந்த அரசியல் நுணுக்கங்கள் நன்கு பிடிபட்டிருக்கும் அல்லவா? எனவே, அவர் தகுந்த சமயத்தில் இதனைப் பயன்படுத்துகிறார்.

ஒரு தலைவியைத் தலைவன் ஒரு நாள் சந்தித்தான். அதற்கு முன்னர் அவனும் அவளும் சந்தித்ததுகூட இல்லை. ஆனால், இன்று இந்தச் சந்திப்பு எவ்வாறு ஏற்பட்டது? 'பால்வரை தெய்வம்' என்று கூறப்படும் 'விதி' தான் அவர்களைக் கூட்டுவித்தது. இதற்கு முன்னர் அத் தலைவனும் பல பெண்களைக் கண்டதுண்டு; அத்தலைவி யும் பல ஆடவர்களைக் கண்டதுண்டு. ஆனாலும், இருவரும் தம் உறுதிப்பாட்டை இழந்ததில்லை, இன்று அத்தலைவனும் தலைவியும் சந்தித்தவுடன் ஒரு பெரிய போராட்டமே தொடங்கிவிட்டது. அவனும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்; இருவரும் நோக்கிய 'நோக்கு எதிர் சென்று', 'இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்'. ஆனால், இவ்வளவு விரைவில் இந்நிகழ்ச்சி நடந்துவிட்ட போதிலும், நடைபெற்ற போராட்டம் எளிதானதன்று. புதிய ஆடவன் தன் மனத்துள் இடம்பெற அவள் விரும்ப வில்லை. அவள் பிறப்புடன் பிறந்த நாணமும் நிறையும் அப்புதிய ஆடவன் அவள் மனத்துள் இடம் பெறுவதைத் தடுத்து நிற்கின்றன. எனவே, அவை இரண்டும் ஒருபுறம் நின்று போரிடுகின்றன. ஆனால், அவள் மனமும் அன்பும் அவனை வரவேற்று நிற்கின்றன. ஆனால், இப் போராட்டம் பெரிய அளவில் நடைபெறுகிறது. தலைவனுடைய 'கண்கள்' தலைவியின் 'நாணம்' என்ற முதற் கோட்டையை அழிக்க வேண்டும். அதனை அழித்த பிறகு உள்ளே 'நிறை' என்று கூறப்படும் இரண்டாவது கோட்டை Second line of defense இருக்கிறது. தலைவன் தன்னுடன் பிறந்த 'ஆண்மை' என்ற படைகொண்டு தலைவியின் நாணம், நிறை என்ற கோட்டைகளைத் தகர்க்கிறான். நெடுநேரம் வரை வெற்றி தோல்வி யாருக்கு என்று கூற முடியாதபடி போராட்டம் நடைபெறுகிறது. இப் போராட்டம் இந்த முறையில் ஒருவரிடம் மட்டும் நடைபெறுவதன்று. தலைவனிடம் உள்ள 'பண்பாடு' என்ற கோட்டையைத் தலைவியின் 'கண்கள்' தாக்குகின்றன. இவ்வாறு இருவரும் போரிட்ட நிலைமையில் இருவருக் கும் வெற்றி கிட்டி விடுகிறது. 'காதற்போர்' ஒன்றிலேதான் இரண்டு கட்சியாளர்களுக்கும் வெற்றி கிடைக்கும்.

 

போரில் வெற்றி கிட்டியவுடன் அரசன் அமைதியை நிலைநாட்டும் வேலையை அமைச்சர்களிடம் ஒப்படைத்து விட்டு இளைப்பாறுகிறான். தலைவனுக்கும் இத்தகைய போர் ஒன்று கிட்டியதன்றோ? அப்போரில் தலைவியின் நாணம் முதலியவற்றை வெற்றி கண்ட பிறகு அவன் இளைப்பாறத் தொடங்கினான். தலைவியும் தன் போராட்டம் முடிந்து வெற்றி பெற்றவுடன் இளைப்பாறு கிறாள். போரில் மிக்க அனுபவம் உடைய தலைவன் கூறுவது போல அமைந்துள்ளது பாடல். இந்நிலையில் தலைவனுக்கு வியப்பு உண்டாகிறது. தன்னுடைய ஆண்மை முதலியவற்றை நினைந்து பார்க்கிறான். பகைவர் கள் தன் பெயரைக் கேட்டவுடன் நடுங்குவதை அவன் கண்டும் கேட்டும் இருக்கிறான். அத்தகைய வீரம் பொருந்திய, தானா இந்நிலைக்கு வர நேரிட்டது என்று வியப்படைகிறான். இவ்வாறு தன் தோல்விக்குக் காரண மாய் இருந்தவள்தான் யார்? போர் புரிதலில் வல்லவ னாகிய தன்னைத் தோற்கச் செய்தவள் ஒரு பெண்தானே!

அதிலும் கலை நலம் நிரம்பப்பெற்ற ஒரு பெண்ணினாலா தான் தோல்வியடைய வேண்டும் என்று வியக்கிறான். மேன்மையுடைய அப்பெண் தானும் வேறு படைக் கலங்களின் உதவியின்றித் தான் குவளை மலர் போன்ற கண்களால் அல்லவா வெற்றி கொண்டு விட்டாள்? போர் என்றால் ஒருவரை ஒருவர் கோபித்துக் கொண்டல்லவா போரிடுவர்? ஆனால், அப்பெண் சிரித்துக் கொண்டல்ல வா வெற்றி பெற்றாள்? குவளை மலர் போன்ற அவளுடைய கண்களால் மகிழிச்சியைக் காட்டிக் கொண்டே வெற்றியடைந்து விட்டாள்.

இனி இத்தனை எண்ணங்களும் தலைவன் மனத்தில் ஊடாடுகின்றன என்பதைக் கவிதை தெரிவிக்கிறது. 'மலையமான் திருமுடிக்காரி பெரிய யானையின் மேல் ஏறிக்கொண்டு, புலையனின் துடிப்பறை ஒலிக்கப் பகை வருடைய நாட்டில் புகுந்து, அவர்களுடைய அரிய கோட்டையை அழித்து வெற்றிகொண்டு இளைப்பாறியது போல, நெஞ்சே, சிவந்த வேர்களையுடைய கிளைதோறும் தொங்குகிற பலாப் பழத்தின் சுளைகளையுடைய வீட்டு முற்றத்தில் மனைவியானவள் அருவியின் இனிய ஓசையில் உறங்க, சிற்றூரின் சேரியில் வாழும் கைத்தொழில் வல்ல வினைஞன் கையால் அறுத்துச் செய்த சங்கு வளைகள் தன் கையில் அழகுபொருந்த விளங்கும் தலைவியினுடைய குவளை மலர் போன்ற மையுண்ட கண்களில் தோன்றும் மகிழ்ச்சி பொருந்திய நோக்கமானது நம்மை இத் தலைவி பால் செலுத்துகிறது. (அம்மன்னன் வெற்றியின் பின்னர் அயாவுயிர்த்தது போல) நாமும் இவள் உடன்படும் வரை பொறுத்திருப்போம்'. என்னும் கருத்தமைந்த அக்கவி இது;

 

'மலையன்மா ஊர்ந்து போகிப் புலையன்

பெருந்துடி கறங்கம் பிறபுலம் புக்குஅவர்

அருங்குறும்பு இருக்கி அயாவுயிர்த் தாங்கு

உய்த்தன்று மன்னே நெஞ்சே! செவ்வேர்ச்

சினைதொரும் தூங்கும் பயம்கெழு பலவின்

சுளையுடை முன்றில் மனையோள் கங்குல்

ஒலிவெள் அருவி ஒலியில் துஞ்சும்

ஊரலம் சேரிச் சீறூர் வல்லோன்

வாள்அரம் பொருத கோண்ஏர் எல்வளை

அகன்தொடி செறித்த முன்கை ஒண்ணுதல்

திதலை அல்குல் குறுமகள்

குவளை உண்கண மகிழ்மட நோக்கே'. (நற்றிணை-77)

 

(மா-யானை; கரங்க-ஒலிக்கள; அருங்குறும்பு-காவல் பொருந்திய கோட்டை; எருக்கி-அழித்து; அயாவுயிர்த் தாங்கு-ஓய்வு எடுத்தது போல; உய்த்தன்று-செலுத்தியது; வாள் அரம் பொறுத-கூறிய அரத்தால் அராவிய; கோண் ஏர்-வளைந்த அழகிய; ஒண்ணுதல்-ஒளி பொருந்திய நெற்றி; திதிலை-தேமல்; குறுமகள்-இளம்பெண்; மடநோக்கு-இளமையுடைய பார்வை.)

'அரசன் அரிய அரணை அழித்து இளைத்துப் போனது போல யானும் இத்தலைவியின் மனத்தின் திண்மையை நெகிழ்த்தி இளைத்துவிட்டேன். அரசன் அமைதியை நிலைநாட்டும் தொழிலை அமைச்சர் முதலானவர்க்கு விட்டுவிட்டு, தான் இளைப்பாறியது போல யானும் இத்தலைவியை என்னிடம் சேர்ப்பிக்கும் வேலையைத் தோழனிடம் விட்டுவிட்டு இளைப்பாறுவேன் ஆகலின், நெஞ்சே, நீ இனிக் கவலைப்பட வேண்டா என்ற குறிப்புப் பொருளும் இந்த உவமையால் பெறப்பட்டது.

இதனையடுத்துத் தலைவி அணிந்திருக்கும் வளைய லின் வரலாறு பாட்டின் 5ஆம் அடிமுதல் 10ஆம் அடி வரை பேசப்படுகிறது. இவ்வரலாற்றில் பிறிதோர் அழகும் தோன்றுமாறு கவிதை புனையப்பட்டுள்ளது. வளையல் அறுப்பவன் ஊர் வளம் பேசப்படுகிறது. முதற்கண் பலாமரத்தின் கிளைதோறும் நல்ல பலாப் பழம் தொங்குகிறது. அப் பலா மரமும் வீட்டின் முன்றிலில் தழைத்து நிற்கிறது. அம்மரத்தின் அருகே வெண்மையான அருவி ஒலி செய்து கொண்டு வீழ்கிறது. அவ்வொலியே பின்னணி இசையாய் இருக்க, அக்கலைஞன் மனைவி உறங்குகிறாள். அவள் உறங்கிக் கொண்டு இருக்கையில், அவ்வினைஞன் பக்கத்தில் அமர்ந்து வலையல்களைச் செய்கிறான். வளையல் அறுப்பவனுடைய காதல் வாழ்வின் படப் பிடிப்பாகும் இவ்வடிகள். அமைதி நிறைந்த வாழ்வு வாழ்பவனாகலின், அவன் கடமையைக்கூடக் கலை போலச் செய்கிறான். வளை அறுப்பது அவன் தொழிலே யாயினும், இன்று அதனை மகிழ்வுடன் செய்கிறான். ஆகலின், அது கலைபோலப் பரிணமிக்கிறது. உணவு நிறைந்த ஊரில் காதல் வாழ்வு வாழ்பவன் வளை செய்பவன்; அவன் அறுக்கும் வளைகள் கலையாகச் செய்யப் பெற்றவை. இத்தகைய வளையல்கள் தலைவியின் கையை அலங்கரிக்கின்ற காரணத்தால் தலைவியின் பிற் கால வாழ்க்கை வளம் நிறைந்ததாய், காதல் வாழ்வுடையதாய் செம்மை பொருந்தி இருக்கும் என்பதும் குறிப்பால் பெற வைத்தார் கவிஞர் திலகராகிய கபிலர்.

தலைவி தன் கண்களின் உதவியால் தலைவனை வென்று விட்டாள். தலைவனும் ஆண்மையின் உதவியால் தலைவியின் நாணம், நிறை முதலியவற்றை வெற்றி கொண்டுவிட்டான். சில வினாடிகளில் இப்போராட்டம் நடந்து முடிந்துவிட்டாலும் இந்நிகழ்ச்சிகள் ஆழ்ந்த பொருளாழம் உடையன. கபிலர் மலையமானின் போர் முறையையும், வெற்றியையும் பின்னர் அமைதியை நிலை நிறுத்தினதையும் நேரே கண்டிருக்கிறார். பின்னர், எங்கோ ஒரு முறை இக்காதலர் போராட்டத்தையும் அவர் கண்டிருத்தல் வேண்டும். தலைவன் வெற்றிகண்ட பிறகு தோழியின் உதவியை நாடுகிறான். அந்தத் தோழி மணம் இரங்கித் தலைவியை அவனிடம் சேர்த்துவைத்தால் ஒழிய அவன் அவளை அடைய முடியாது. தான் போரிட்டு வெற்றி கொண்ட தலைமகளைத் தன்பால் சேர்ப்பித்து இல்லறம் நடத்துமாறு செய்யத் தோழியின் உதவியை நாடுகிறான். அரசன்--தலைவன்; பகைப்புலம்--தலைவி; பகைவர்கள் கோட்டை--தலைவியின் நாணம் முதலியன; அரசன் படைகள்--தலைவனின் ஆண்மை முதலியன; அரசன் அமைதியை நாட்ட அமைச்சரை ஏவி இளைப் பாறுதல்--தலைவனது வெற்றியின் பின்னர்த் தோழியை வேண்டித் தலைவியை தன்பால் சேர்க்கச் சொல்லுதல். இம்முறையில் உவமை அமைந்துள்ளமை அறிந்து மகிழ்தற் குரியது.

 

மடலேறுவது பற்றிய பாடல்

 

அறிவாலும் திருவாலும் நிறைந்தவன் அத்தலைவன்; நல்ல கல்வியும் 'மன உறுதியும் கொண்டது முடிக்கும் ஆற்றலும்' உடையவன். இத்தகைய அவன் எதிர்பாராவித மாக ஒரு பெண்ணைக் கண்டான். அதற்கு முன் அவன் ஆயிரக்கணக்கான பெண்களைக் கண்டதுண்டு. ஆனால், மனித சமுதாயத்தின் சரிப் பகுதியினரான அவர்களுள் அவன் மனத்தை ஒருவரும் கவரவில்லை. ஆனால், இன்று அப்பெண்ணைக் கண்டவுடன் தன் மனத்தைப் பறி கொடுத்து விட்டான். ஒரு பெண்ணால் இம்மாதிரி தன் மனத்தைக் கவர முடியும் என்பதை அவன் அதற்குமுன் நினைத்ததுகூட இல்லை அவளும் இம்மாதிரியே அத் தலைவனிடம் தன மனத்தைப் பறிகொடுத்துவிட்டாள். அச்சம், மடம், நாணம் முதலியவற்றை உடையவள்தான் அத்தலைவி; சிறந்த குடியிற் பிறந்தவளும் ஆவாள். ஆடவரைக் கண்டால் உடனே மனம் மாறுபடும் இனத்தைச் சேர்ந்தவளல்லள் அவள். அவ்வாறு இருந்தும், அவர்கள் ஒருவரை ஒருவர் காண நேர்ந்தது எனில், அது விதியின் விளையாட்டு என்றே இருவரும் கருதினர். 'பால் வரை தெய்வம் கடைக்கூட்டக் கண்டனர்' என்று பழந் தமிழர் இக்காட்சியை விரித்துரைத்தனர். எதிர்பாரா விதமாக ஒரு நாள் ஒரு சோலையில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டனர். 'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்'. இருவரும் பார்த்துக் கொண்ட பார்வை மூலமாகவே ஒருவர் மற்றொருவருடைய உள்ளத்தில் புகுந்து நிலையாய்த் தங்கி விட்டனர். 'இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்'. இக்காட்சியின் பின்னர் இருவரும் உள்ளமும் உடலும் கலந்தவர்களாய்ச் சிறிது நேரம் இருந்துவிட்டுப் பிரிந்தனர். அவ்வாறு பிரியும் பொழுது அவள் மிகவும் வருந்தினாள்; இனி எப்பொழுது எவ்வாறு அவனைக் காண முடியும் என்று அஞ்சினாள். அவன் பலபடியாக அவளுக்கு அமைதி கூறினான்; தன் ஊர் மிக அணித்தாகவே உளதென்றும், தினந்தோறும் அவளை வந்து சந்திப்பதாகவும் கூறினான்.

தனது ஊர் மிகவும் அண்மையில்தான் இருக்கிறது என்பதை மிகவும் அழகுபடக் கூறுகிறான் அத்தலைவன்.

'பெண்ணே, அஞ்ச வேண்டா! எம் ஊரிடத்திலுள்ள மலை போன்ற பெரிய மாளிகைகள் சுண்ணாம்பு பூசப் பெற்று மிக்க ஒளியுடன் விளங்குகின்றன. அந்தச் சுண்ணத் தின் வெண்மையான ஒளிபடுவதால், உன் ஊரில் உள்ள கரியநிறமுடைய குன்றுகள் அனைத்தும் வெண்மை நிறம் பெற்று விளங்கும்', என்ற கருத்தால்,

 

இருங்குன்ற வாணர் இளங்கொடி யே! இடர் எய்தல்! எம்ஊர்ப்

பருங்குன்ற மாளிகை நுண்கள பத்து ஒளி பாயநும் ஊர்க்

கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் கனங்குழையே!

(சிற்றம்பலக்கோவை-15)

 

என்று தன் கலையறிவையும் காட்டி அவள் வருத்தத்தை யும் போக்கினான். இருவரும் ஓரளவு ஆறுதல் பெற்றுப் பிரிந்து விட்டனர்.

அத்தலைவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன. பற்பல அலுவல்களை உடையவன். எனவே, அவனுடைய வேலை காரணமாகச் சில நாட்கள் அத் தலைவியைச் சந்திக்க முடியவில்லை. ஒருநாள் மிகவும் அவளுடைய நினைவைப் பெற்றவனாக முன்னர் அவளைச் சந்தித்த இடத்திற்குச் சென்றான். ஆனால், அவளை அங்குக் காண முடிய வில்லை. அவனுடைய வருத்தம் மிகவும் அதிகமாகி விட்டது. என் செய்வதென்று தெரியாமல் வருந்தினான். அவளுடைய ஊர் முதலியன அவனுக்குத் தெரியுமேனும், ஊரினுட்சென்று அவளைப் பற்றி விசாரிப்பது இயலாத காரியம். எனவே, தன் துயரத்தைப் பிறரிடம் கூறி வருத்தத்தை ஆற்றிக் கொள்ளக்கூட முடியாத நிலைமை யில் பலமுறை வருவதும் போவதுமாய் இருந்தான்.

 

இந்நிலையில் தலைவியின் பாடு மிகவும் திண்டாட்டமாகி விட்டது. அவனாவது ஆண்மகன் என்ற முறையில் பல இடங்கட்குச் செல்வதாலும் பலருடன் பழகுவதனாலும் தன் துயரை மறக்கக் கூடிய நிலையில் இருந்தான். ஆனால், அவளோ, பெண்! அவளுடைய வருத்தத்தை வெளியிற்கூடக் கூற முடியவில்லை! என் செய்வாள் பாவம்! அவளுக்கு உயிர்த் தோழி ஒருத்தி உண்டு. அவளிடமாவது கூறித் தன் மன வருத்தத்தை ஆற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தாள். ஆனால், பலமுறை நினைந்தும் துணிவு பிறக்கவில்லை. ஒருவரிட மும் கூறாமல் தன் துயரத்தைத் தானே பொறுத்துக் கொண்டு வருந்தினாள். உடல் இளைக்கத் தொடங்கிற்று; உணவு சரியாகச் செல்லவில்லை; பாலும் கசக்கும் நிலைமை அடைந்துவிட்டாள். படுக்கை நோவத் தொடங்கிவிட்டது. இரவில் அவள் நல்ல உறக்கம் பெற்றுப் பல நாட்களாகிவிட்டன. உடல் இளைப்பைக் கண்ட அவளுடைய தாய், மகளைத் தெய்வம் தீண்டி விட்டதாகவே முடிவு செய்துவிட்டாள். தெய்வக் குற்றத்தைப் போக்கும் முறையில் வேலனை வைத்து வெறியாட முடிவு செய்துவிட்டாள்.

தலைவியின் பாடு மிகவும் இடைஞ்சலாகிவிட்டது. வேலன் வெறியாடிய பிறகும் அவளுக்கு உடல் தேற வில்லை என்றால், தாய் முதலானவர்கள் அவள் மேல் ஐயங்கொள்ளத் தலைபட்டுவிடுவார்கள். எனவே தீவிர மாக இதுபற்றி ஆய்ந்து இறுதியாகத் தோழியிடம் கூற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். இந்நிலையில் தோழியே ஐயப்பட்ட நிலையிலிருந்து உறுதிப்பாட்டுக்கு வந்து விட்டாள். தான் உறுதியாக நம்புகிற ஒன்றை எவ்வாறு தலைவியிடம் எடுத்துக் கூறுவது என்பதுதான் அவளுடைய தொல்லை. வேறு வழி இல்லாமல் குறிப்பாக ஒரு நாள் பேச்சைத் தொடங்கினாள். இத்தகைய ஒரு வாய்ப்பை எதிர்ப்பார்த்திருந்த தலைவிக்கு இது மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது. எனவே, தோழியிடம் தன் தலைவனைப் பற்றிக் கூறிவிட்டாள். மேலும், அவனை விரைவில் அடையாவிடில், தன்பாடு மிகவும் திண்டாட்ட மாகிவிடும் என்பதையும் அறிவித்தாள். தோழி அவளை அஞ்சவேண்டா என்றும், விரைவில் அத்தலைவனையே மணந்து கொள்ளுமாறு செய்வதாகவும் உறுதிமொழி கூறினாள்.

இவ்வாறு தோழிக்கும் தலைவிக்கும் உரையாடல் நடைபெற்ற இரண்டொரு நாட்கள் கழிந்த பின் ஒரு நாள் தோழி தலைவனைக் கண்டாள். இவள்தான் தன் தலைவியின் உற்ற தோழி என்பதை அறிந்த தலைவன், தோழியிடம் பேச்சைத் தொடங்கினான். ஆனால், தோழி சிறிதும் விட்டுக் கொடாமற் பேசினாள்; தலைவி படும் வருத்தத்தைச் சிறிதும் வெளிக்காட்டாமலும், பிடி கொடாமலும் பேசினாள். தலைவன் பாடு போதும் போதும் என்றாகி விட்டது. இறுதியாக அவன் தன் வருத்தம் முழுவதையும் வெளியிட்டான். அதிலும் பயன் இல்லாமற் போய்விடவே, தலைவன் தான் மடல் ஏறப் போவதாகவே கூறினான்.

 

மடல் ஏறுதல் என்பது அக் காலத்து வழக்கம். ஒரு தலைவன் தன்னால் விரும்பப்பட்ட தலைவியை மணந்து கொள்ள முயல்வான். ஆனால், சுற்றத்தார், தோழி முதலிய யாராலாவது தடை ஏற்படுமாயின், தன் தலைவியினிடம் கொண்டுள்ள அன்பின் ஆழத்தை வெளியிட மடல் ஏறுவதும் உண்டு. இலக்கியத்தில் காணப்பெறும் இம்மடல் ஏறும் வழக்கம் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கடைப் பிடிக்கப்பட்டது என்பதை அறிதற்கில்லை. இலக்கிய இலக்கணங்களிற் கண்டபடி மடல் ஏறுதல் என்பது வியப்பைத் தரக்கூடியதாம். பனை மரத்தின் கருக்கினால் செய்யப் பெற்ற குதிரை ஒன்றின் மேல் தலைவன் ஏறிக் கொள்வான். தலைவியினுடைய உருவம் தீட்டப் பெற்ற ஓர் ஓவியம அவனது கையில் இருக்கும். தலைவியினுடைய ஊரில் சென்று அவளுடைய பெற்றோரும் சுற்றத்தாரும் இருக்கும் இடத்தின் எதிரேசெல்வான். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவ்வூரில் உள்ள சிறு பிள்ளைகளை விட்டு அக்குதிரையை இழுக்கச் செய்வான். பணங்கருக்கினால் செய்யப் பெற்ற குதிரையாதலின், அது தலைவனுடைய தொடையைக் கிழிக்கும். அவனுடைய தொடையிலிருந்து உதிரம் பெருகும். இக் கொடுமையைக் காணச் சகியாத சுற்றத்தார், அத்தலைவியினுடைய பெற்றோரைக் கேட்டு அப்பெண்ணை இத்தலைவனுக்கே மணம் முடிக்க ஏற்பாடு செய்வர். தலைவன் தலைவியி னுடைய படத்தை எழுதிக்கொண்டுதான் அக்குதிரையில் ஏற வேண்டும் என்ற இந்தக் கட்டுப்பாடு இலக்கியத்தில் மிக அழகான சில பாடல்கள் தோன்றவும் காரணமாயிற்று.

திருச்சிற்றம்பலக் கோவையார் என்பது 'மாணிக்க வாசகர்', என்று கூறப்பெறும் திருவாதவூர் அடிகளால் அருளிச் செய்யப் பெற்றது. திருவாசகத்தை அருளிய அப் பெருமானே இவ்வழகிய நூலையும் இயற்றியுள்ளார். கோவை என்பது ஒரு தலைவன் தலைவியைக் கண்டு காதலித்து அவளுடன் களவு மணத்தில் ஈடுபட்டுப் பின்னர் அவளையே மணந்து வாழ்வதைப் பற்றிப் பாடுவது, இந்த நிகழ்ச்சியை நானூறு பிரிவுகளாக வகுத்துக் கொண்டு பாடுவதே கோவை எனப்படும். தலைவன் தலைவியைக் காண்பது, "இவள் தெய்வ மகளோ!" என்று ஐயங்கொள்வது போன்ற ஒவ்வொரு நிலைக்கும் ஒன்று முதல் பல பாடல்கள் பாடப் பெறும். பெரும்பாலும் இறைவனையோ, ஒரு பெரிய அரசனையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டே பாடப்பெறும் இந்நூல். மணிவாசகப் பெருமான் பாடிய கோவையாரின் பாட்டுடைத் தலைவன் சிதம்பரத்தின்கண் ஆனந்தத் தாண்டவம் புரியும் பொன்னம்பலவனே. அந்தச் சிறந்த நூலில் மடல் ஏறுதல் பற்றி வரும் பகுதி மிக அழகானது. தலைவன், 'நான் மடல் ஏறப்போகிறேன்' என்று கூறு கிறான். தோழி, 'அது முடியாது,' என்கிறாள். தலைவன் 'ஏன் முடியாது?' என்று கேட்கிறான். அதற்குத் தோழி அழகாக விடை கூறுகிறாள். 'தலைவீர், மடல் ஏற வேண்டு மானால், தலைவியினுடைய படத்தை எழுத வேண்டும் அன்றோ? எம் தலைவியின் படத்தைத்தான் எழுத முடியாதே! அவள் குரலுக்குப் பதிலாக ஒரு யாழை எழுதும்; அவள் பல் வரிசைக்குப் பதிலாக முத்துக்களை எழுதும். கூந்தலுக்குப் பதிலாக மேகக் கூட்டத்தைப் பூவுடன் எழுதும்; அவள் உதடுகட்குப் பதிலாக ஒரு கொவ்வைக் கனியை எழுதும்; இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூங்கொம்பு இருக்குமாயின், அதனைக் கொண்டு வாரும் மடல் ஏறுவதற்கு,' என்று கூறுகிறாள் தோழி.

 

யாழும் எழுதி எழில்முத்து எழுதி இருளின் மென்பூச்

சூழும் எழுதிஓர் தொண்டையும் தீட்டிஎன் தொல்பிறவி

ஏழும் எழுதா வகைசிதைத் தோன்புலி யூர்இளமாம்

போழும் எழுதிற்றுஓர் கொம்பர்உண் டேல்கொண்டு போதுகவே!

(திருக்கோவையார்-79)

 

திருமங்கை ஆழ்வார் 'சிறிய திருமடல்' என்றும் 'பெரிய திருமடல்' என்றும் இம்மடலேறுதலை இரண்டு பாடல்களாக அருளிச் செய்துள்ளார். அவ்வழகிய பாடலிலும் ஆழ்வார்:

 

"பேர்ஆ யிரமும் பிதற்றிப் பெருந்தெருவே

ஊரார் இகழினும் ஊராது ஒழியேன்நான்

வாரார்பூம் பெண்ணை மடல்." (சிறிய திருமடல், 78-80)

 

என்று அருளுவது காண்க.

நாம் கூறி வந்த தலைவனும் தோழியைக் கண்டு, தான் மடல் ஏறித்தான் தலைவியை அடைய வேண்டுமா என்று கேட்கிறான். 'மடல் ஏறி அதனால் பெறுகின்ற பழியுடனா தலைவியை அடைய வேண்டும்? இதைவிடச் சாவு வருமேயாயின், அது எவ்வளவு சிறப்புடையதாக இருக்கும்?" என்று வருந்திக் கூறுகிறான் அத்தலைவன்.

"பனை மடலாலே செய்யப்பெற்ற குதிரையில் ஏறி, எருக்கம்பூ, பூளைப்பூ முதலியவற்றைச் சூடி, இடம் அகன்ற பல ஊர்களிலும் நாட்டிலும் திரிந்து, அழகிய தலைவியின் நலங்களை எல்லாம் எடுத்துக் கூறிச் செல்லும் மடலேறும் தொழிலைச் செய்யாமல், என் மனத்தைக் கட்டுப்படுத்தி, அதுவே நோயாக இருந்து இறந்து போவேனாயின், அது எவ்வளவு நன்மையாக இருக்கும்! அகன்ற பெரிய ஆகாயத்திடத்தே இராகு விழுங்கிய பசிய கதிர்களை உடைய நிலவைப் போலக் கூந்தலுடன் விளங்கும் நெற்றியையுடைய தலைவி யான் நினைக்குந்தோறும் என் எதிரே வந்து வினாவி என்னை மெலியச் செய்கிறாள். அதனால் எனக்குக் காமநோய் மிகுதியாகி இருக்கிறது!" என்ற கருத்துடன் பாடல் அமைகிறது.

 

மடல்மா ஊர்ந்து மாலை சூடிக்

கண்அகன் வைப்பின் நாடும் ஊரும்

ஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப்

பண்ணல் மேவலம் ஆகி அரிதுற்று

அதுபிணி ஆக விளியலங் கொல்லோ?

அகல்இரு விசும்பின் அரவுக்குறை படுத்த

பசுங்கதிர் மதியத்து அகல்நிலாப் போல

அளகம் சேர்ந்த சிறுநுதல்

கழறும் மெலிக்கும் நோய்ஆ கின்றே! (நற்றிணை-377)

 

(மடல்மா- பனங்கருக்கால்; செய்த குதிரை; கண் அகன் வைப்பு- இடம் அகன்ற பூமி; ஒண்ணுதல்- ஒளி பொருந்திய நெற்றி; அரிவை- தலைவி; பண்ணல் மேவலம் - அலங்கரித்துக் கொள்ளலை விரும்பேம்; விளியலங் கொல்லோ- சாகமாட்டோமோ; அளகம்- கூந்தல்; கழறும்- இடித்துக்கூறும்)

இவ்வழகிய பாடலின் இறுதி நான்கு அடிகளிலும் தலைவியின் அழகைக் கூறுகிறான் தலைவன். ஆனால், அவ்வாறு கூறுமுகமாகவே அவளிடத்தில் தான் கொண்டுள்ள தணியாக் காதலையும் வெளியிட்டு விடுகிறான். 'மடலேறித்தான் நான் இறக்க வேண்டுமா? அது இல்லாமல் இந்தப் பாழ் உயிர் போகவும் மறுக்கிறதே' என்று கூறுகையில் தலைவி இல்லாவிட்டால் தான் இறந்து போவது உறுதி என்னுங் கருத்தையும் பெற வைத்தான். மேலும், அவ்வாறு தான் உயிர்விட நேர்ந்தால் அந்தப் பழி தலைவியைத்தான் சேரும் என்பதையும் கூறிவிட்டான்.

 

காதல் காதல் காதல்

காதல் போயிற்

சாதல் சாதல் சாதல்

 

என்று கூறிய கவியரசர் பாரதியாரின் மூதாதை போலும் இத்தலைவன்!

 

பாலைத் திணை.

 

பாலைத் திணை நிகழ்வதாகக் கூறப்படும் இடம் பாலை நிலம், காலம் நல்ல கோடைக்காலம், பொழுது நண்பகல்.

தலைவன் தலைவியைவிட்டுப் பிரிவதும் அதுபற்றிய பிற செய்திகளும் பேசப்படும் இத்திணைப் பாடல்களில்.

தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலைவனுடைய மனநிலையை விளக்கும் பாடல் இது:

 

பொய்கையில் ஓடுமீன் வழி

 

ஒருநாள் தலைவன் குளிப்பதற்காகக் குளத்திற்குச் சென்றான். நல்ல தாமரைத் தடாகத்தில் தண்ணீர் குளிர்ந்தும் தெளிந்தும் இருந்தது. அதன் அருகில் ஈடுபட்ட தலைவன், குளத்துள் இறங்கிக் குளியாமல், கரையில் அமர்ந்துவிட்டான். அவன் மனத்துள் ஒரு பெரிய போராட்டம் நிகழ்கிறது. நெடுநாளாகவே குடும்பத்தில் ஒரு குறை இருந்து வருகிறது. அக்குறையை எவரும் எடுத்துக் காட்டவில்லை. இன்னும் பார்க்கப்போனால் அது இல்லாததுபோலவே நடந்துகொள்கின்றனர். அக்குறை பொருட்குறைதான். வேண்டுமான அளவு பொருள் வசதி இல்லை. தலைவனுக்குப் பெரிய பெரிய குறிக்கோள்கள் உள்ளன. இவற்றை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமாயின், நிறையப் பொருள் வேண்டும். ஆனால், வீட்டிலே இன்றி யமையாதவற்றை வாங்கக்கூடப் பொருள் முட்டுப் படுகிறது. தலைவனுக்கு உள்ளூரப் பெரிய கவலைதான். ' என்ன செய்தால் இக்கவலை தீரும்!' என்று ஆராய்நதான். முடிவாக, 'வெளியூர் சென்று பொருளீட்ட வேண்டும்,' என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

அவன் ஏதோ செயற்கரிய காரியத்தைச் செய்யத் துணிந்துவிட்டவன் போல மகிழ்ச்சி அடைந்தான். ஆனால், இம்மகிழ்ச்சி மிகச் சிறிது நேரமே தங்கியிருந்தது. ஏன் எனில், 'பொருள் தேடுதல்' என்றாலே வெளிநாடு செல்லவேண்டும் என்பது தானே பொருள்? வெளிநாடு செல்லவேண்டும் என்றால் அது எத்துணைப் பெரிய காரியம் அந்த நாட்களில்? வெளிநாட்டில் வாழும் அந்த நாட்களில் என்ன தனிமை! நினைத்த பொழுதே நெஞ்சு நடுங்கும் தனிமை! ஏன்? அங்கு மக்களே இல்லையா? இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும், தான் பல காலம் பழகிய தன் சுற்றத்தாரையும் உயிரினும் இனிய காதலியை யும் விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய அந்தத் தனிமை! தலைவியை விட்டுப் பிரிவதை நினைத்தாலே போதும், பொருள் சேகரிப்பதில் உள்ள மகிழ்ச்சி எல்லாம் காற்றாய்ப் பறந்து விடும். ஆனால், இப்பொழுது தலைவன் வீட்டிலேதான் இருக்கிறான். தலைவியின் இன்பத்தில் ஈடு பட்டிருக்கையில் ஒரோவழிப் பெருள் இல்லாத கவலை வந்து குறுக்கிடுகிறது.

 

இவ்வாறு பலவிதமான எண்ணங்கட்கு இடையில் அவதிப்பட்ட தலைவன், அன்று குளக்கரையில் அமர்ந்து தன் எண்ணங்களை ஓடவிட்டிருக்கிறான். ' தலைவி, பொருள் தேடப் பிரிவு' என்ற இரண்டின் இடையே நடைபெற்ற போராட்டத்தில் ஒருவிதமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் நேற்றைப் பொழுதில். எவ்வாறாயினும் கடமையை நிறைவேற்றப் போவதுதான் ஆண் மகனாகிய தனக்கே முறை என்பதை உணர்ந்தான். தலைவியின் மாட்டுக் காதலில் திளைக்கும் அவனுடைய நெஞ்சங்கூட அவன் செய்யத் துணிந்ததே முறையானது என்று கூறிற்று. இனித் தடை என்ன? எவ்வாறாயினும் பொருள் தேடப் போய்விடலாம் என்ற முடிவுடனேதான் நேற்றைப் பொழுது முழுவதும், ஏன்--இன்று குளக்கரைக்கு வரும் அளவும் தலைவன் உறுதி பூண்டிருந்தான். ஆனால், இப் பொழுது குளத்தினுள் பார்த்துக் கொண்டிருக்கையில்...! ! ஈதென்ன புதுமை! அவன் இதுவரை காணாத ஒன்றைக் கண்டுவிட்டானா? ஆம்! அவனுடைய உறுதி எல்லாம் குலைந்து விட்டது போன்ற ஒரு முகக் குறிப்பு இதோ வெளிப்படுகிறது. தலைவன் இதோ வாய்விட்டுப் பேசுகிறான்:

 

...............................................பொருளே

வாடாப் பூவின் பொய்கை நாப்பன்

ஓடுமீன் வழியில் கெடுவ......... (நற்றிணை-16)

 

(பொருளானது, வாடாத தாமரை போன்ற மலர்களை உடைய குளத்தின் நடுவே மீன்கள் ஓடும் பொழுது உண்டாகின்ற வழியைப் போல அழியத் தக்கது)

அதாவது, மீன்கள் ஓடும்பொழுது வழி உண்டாவது போலத் தோன்றி, அம் மீன்கள் அப்பாற் சென்ற மறு விநாடியே வழி என்ற ஒன்று இல்லாது போய்விடுகிற தன்றோ? அது போலப் பொருள் என்பதும் பாடுபட்டுத் தேடும் பொழுது நிறையச் சேர்வது போலத் தோன்றிப் பிறகு தான் இருந்த இடமும் இல்லையாக மறைந்துவிடும் ஒன்றாகும். இதனை வாய்விட்டுத் தலைவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே யாரோ ஒரு புலவர் இந்தப் பொருளின் நிலையாமை பற்றிக் கூறியது அவன் நினைவுக்கு வருகிறது. அவர் என்றோ ஒருநாள் பாடினார்;

 

'வீழுநர்க்கு இறைச்சியாய் விரல்கவர்பு இசைக்குங்கோல்

ஏழும்தம் இசைகெட இடைநின்ற நரம்புஅறூஉம்

யாழினும் நிலைஇல்லாப் பொருள்...' (பாலைக்கலி-8)

 

(விரும்பிக் கேட்பார்க்கு இன்பந் தருவதாய், விரலாலே வாசிக்கப்படுகிற நரம்பு ஏழும், தாம் இருந்தும் பயன் படாதபடி வாசிக்கும் வில்லில் அகப்பட்டு இடை நின்ற நரம்பு அறும்படியான யாழைக் காட்டிலும் நிலையில்லாத பொருள்)

மேலும் அந்தப் புலவர் பொருளின் நிலையாமை பற்றித் தொடர்ந்து பாடியதைத் தலைவன் இப்பொழுது நினைவிற்குக் கொண்டு வந்தான்;

 

'மரீஇத்தான் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது

பிரியுங்கால் பிறர்எள்ளப் பீடு இன்றிப் புறம்மாறும்

திருவினும் நிலையில்லாப் பொருள் ...' (பாலைக்கலி-7)

 

(திருமகள், தான் விரும்பி மனத்தால் ஏற்றுக் கொண்டவர் களை, தான் வந்து சேரும் பொழுது இருந்த நிலைபோல் இல்லாமல் பிரிந்து செல்லும் பொழுது பிறர் கண்டு கேவலமாய்ப் பேசும் அளவுக்குத் தாழ்த்திவிட்டுச் செல்லும் தன்மை போல நிலையில்லாத பொருள்)

அதாவது, புதுப் பணக்காரன் ஆனவன் மீட்டும் ஏழையானால், அவனது பழைய நிலைதானே என்று கருதாமல், உலகத்தார் அவனை மிகுதியும் எள்ளி நகை யாடுகிறார்களாம். முன்னர் ஏழையாய் இருந்தபொழுது இருந்த நிலைகூட இப்பொழுது (இடையில் பணக்காரனாகி மறுபடியும் ஏழையான இப்பொழுது) இல்லாமல் செய்கிற திருமகள் என்றபடி.

அந்தப் புலவர் பாடிய இந்த மூன்று அடிகளும் தலைவன் நினைவிற்கு வந்தன. உடனே தான் கொண்டிருந்த முடிவு ஆட்டங் கண்டுவிட்டதைத் தலைவன் உணர்ந்தான்; எவ்வாறு ஆயினும் பொருள் தேடப் போக வேண்டும் என்ற முடிவு இப்பொழுது தன் பால் இல்லை என்பதை உணரத் தலைப்பட்டான். தான் இதுவரை கொண்டிருந்த முடிவு நெகிழ்ந்தவுடன் தலைவனுக்கு மீட்டும் 'எது பெரிது?' என்ற வினாத் தோன்றத் தொடங்கி விட்டது. தலைவியுடன் கூடி இருப்பதைப் பெரிதென மதித்தால், பொருள் தான் இருக்கும் இடந்தேடி வரப்போவதில்லை. ஆனால், கடமையை நிறைவேற்றப் பொருள் தேவை என்று உணர்ந்து அதனைத் தேடப் புறப்பட்டால், தலைவியுடன் சேர்ந்து வாழ இயலப் போவதில்லை. இதனிடையில் அவனுடைய நெஞ்சம் மாறி மாறி அவனுக்கு அறவுரை கூறத் தொடங்கி விட்டது. தலைவி எதிரே இருக்கின்ற வரை அவளுடைய அழகில் தானும் ஈடுபட்டு தன்னையும் ஈடுபடுத்திய நெஞ்சம், 'இவ்வளவு அழகுடையவளை வருந்த விட்டுப் போகலாமா? இது முறையா?' என்று எடுத்துக் கூறிற்று. ஆனால், அவளைப் பிரிந்து அப்பாற் சென்றவுடன் உலகத்தார்க்கு அவன் ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவூட்டி, 'இனியும் சும்மா இருக்கலாமா? உடனே பொருள் தேடப் புறப்பட்டு', என்று இடித்துக் கூறத் தொடங்கி விட்டது. எனவே, தன் நெஞ்சைப் பார்த்து அந்தக் குளக்கரையில் இருந்தபடியே தலைவன் கூறத் தொடங்கி விட்டான்.

'நெஞ்சே!, தலைவி இன்பம் பெரிதென மதித்து இவண் இருந்து விட்டால், பொருள் நம்மை வந்து அடையாது. பொருள் தேடும் கடமை இன்றியமையாதது என்று நினைந்து சென்று விட்டால், தலைவியினிடத்துப் பெறும் இன்பம் கைகூடாது. ஆனால், இரண்டினும் இன்பம் அடையக்கூடும் நீ. இங்கிருந்தால் தலைவியிடத்தே இன்பம் பெறுவாய். இவளை விட்டுப் பொருள் தேடச் சென்றாலோ, அவ்விடத்தும் இன்பம் பெறுவாய். ஆனால், என்னைப் பொருத்தவரை இவளை விட்டு நீங்கிவிட்டால் இன்பம் பெறுவது இயலாத காரியம். அப்படித்தான் இவளை விட்டுத் தேடப் போகிற பொருள் இவளைப் போல நிலைத்த இன்பத்தைத் தரக் கூடியதா என்ன? அதுவும் இல்லை. வாடாத பூக்கள் நிறைந்த குளத்தினிடத்து மீன்கள் ஓடும்பொழுது தோன்றும் வழியைப் போலத் தோன்றி, உடன் மறைந்துபோம் இயல்புடைய இப்பொருளுக்காக, நிலைபெற்ற இவள் இன்பத்தைத் துறக்க என்னால் இயலாது. நீ வேண்டு மானால் அப்பொருளைத் தேடிச் செல்க. யான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். பெரிய கடலால் சூழப் பெற்ற இவ்வுலகை மரக்காலாகக் கொண்டு ஏழு முறை அளக்கக்கூடிய அளவு பெறும் பொருளைப் பெறுவதாயி னும், நான் தலைவியை விட்டு வரமாட்டேன். கனமான குழையைக் காதுகளில் அணிந்த அவள் குளிர்ச்சி பொருந்திய செவ்வரி பரந்த தன் கண்களால் அடிக்கடி என்னைப் பார்க்கிறாள். அப் பார்வையால் தாக்குண்ட நான் இனி வரமாட்டேன்! இனி அந்தப் பொருள் எக்கேடாயினும் கேட்டுப் போகட்டும்! அப்பொருளை விரும்பிச் செல்வார்மாட்டு அது தங்கி வாழட்டும்!'

இந்த முறையில் போருல்படத் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறுகிறான்:

 

புணரின் புணராது பொருளே; பொருள்வயின்

பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்

சேர்பினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு

உரியை வாழிஎன் நெஞ்சே! பொருளே

வாடாப் பூவின் பொய்கை நாப்பண்

ஓடுமின் வழியில் கெடுவ; யானே

விழுநீர் வியல்அகம தூணி ஆக

எழுமாண் அளக்கும்விழுநிதி பெறினும்

கனங்குழைக்கு அமர்ந்த சேயரி மழைக்கண்

அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனன்,

எனைய ஆகுக! வாழிய பொருளே! (நற்றிணை - 16)

 

(புணரின்-தலைவியிடம் தங்கினால்; புணராது-சேராது; ஆயிடைச் சேர்பினும்-பொருள் தேடும் அவ்விடம் சேர்ந்தாலும்; நல்லதற்கு உரியை-உனக்கு இன்பம் கிட்டும்; விழுநீர்-கடல்; வியல் அகம-அகன்ற உலகம்; தூணி-மரக்கால் என்னும் இரண்டு படி கொண்ட ஓர் அளவு; சேயரி-சிவந்த வரிகள்; அமர்ந்தினிது நோக்கம்- இனிய பார்வை; செகுத்தனன்-இவள் பார்வையால் என் ஆற்றல அழிந்தேன்.)

இவள் இன்பத்தில் வேருப்படையாமல் முதுமைப் பருவம் வரையில் இங்குத் தங்கிவிட்டால் பிறகு பொருள் தேடல் முடியாது என்ற கருத்தைத் தலைவன், 'புணரின் புணராது பொருளே,' என்றும், பிரிந்து சென்றுவிட்டால் இவள் இறந்துவிடுவாளாகலின், இனி வந்தபொழுது இவள் இன்பம் கிடைக்காது என்ற கருத்தைப் 'பொருள் வயின் பிரியின் புணராது புணர்வே,' என்றும் கூறி, அந் நெஞ்சுக்குக் குறிப்பாக 'நீயும் இங்குத் தங்க வேண்டுவதே முறை' என்று கூருமுகமாக, 'நல்லதற்கு உரியை' என்று கூறின அழகு மீட்டும் ஒருமுறையன்றிப் பன்முறை படித்து மகிழத் தக்கதன்றோ!

இதே கருத்துபடக், கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர், பட்டினப்பாலை என்றதொரு பெரிய பாடலைப் பாடியுள்ளார். கரிகால் பெருவளத்தானுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமையைப் பலபடியாக எடுத்துக்கூறி, அப்புலவர் பெருமான், 'இத்தகைய ஒப்பற்ற பட்டினத்தையே எனக்குப் பரிசிலாக அக்கரிகாலன் தந்தாற்கூட யான் என் காதலியை விட்டு வரமாட்டேன்!' என்று கூறுகிறார். 301 அடிகளையுடைய அப்பாடலில் அதில் மேற்சொன்ன கருத்து இதுதான்:

 

'முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்

வார்இருங் கூந்தல் வயங்கிழை ஒழிய...

வாரேன்; வாழிய நெஞ்சே!' (பட்டினப்பாலை-218-220)

 

தமிழன் கொண்ட காதற்சிறப்பை அறிய இவை சிறந்த எடுத்துக் காட்டுகள் அல்லவா?

கடமையை நிறைவேற்றிச் செல்லும் தலைவனுடைய மனப் போராட்டத்தை விளக்கும் பாடல் இது:

 

தேய்புரி பழங்கயிறு

 

இத்தப் பரந்த உலகத்தில் என்று மனிதன் தோன்றி னானோ, அன்றே அவனைத் தொடர்ந்து துன்பமும் தோன்றியது போலும்! மனிதன் ஆதியில் தனிமையாய்க் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்திருப்பான். குடி இருக்கக் குச்சு வேண்டும் என்று கவலைப்படாமலும், அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்பதுபற்றி அவன் கவலை கொள்ளாமலும் வாழ்ந்த காலம் அது. பசியெடுத்த பொழுது ஆயுதங்களுடன் வெளியே சென்று காட்டில் நிறைந்திருந்த விலங்குகளில் வேண்டுவனவற்றை வேட்டையாடி உண்டுவிட்டு, அடுத்த வேளை உணவுக்கு அதில் சிறிது மீத்து வைத்துக்கொள்ளவுங்கூடக் கவலைப் படாமல் இருந்த காலம்!

அத்தகைய நிலையில் அவனுக்குக் கடமை என்று கூறத் தக்கது ஒன்றும் இருந்தர்கில்லை. மனிதன் தன்*த்த பிற மனிதருடன் கூடி வாழத் தொடங்கிய பின்னரே அவனுக்கென்று சில கடமைகள் தோன்று கின்றன. இதுவரைத் தன உரிமையை அன்றிப் பிறரைப் பற்றிக் கவலை கொள்ளாது இருந்த அவனுக்கு இப்பொழுது புதிய அனுபவம் தோன்றுகிறது. சமுதாய மாகக் கூடி வாழத் தொடங்கியவுடன் தன உரிமை, பிறர் உரிமை என்ற இரண்டும் மோதத் தொடங்குகின்றன. தன உரிமையில் சிலவற்றை விட்டுக் கொடுத்தால்ஒழிய நன்முறையில் பிறருடன் சேர்ந்து வாழ முடியாது என்பதை மனிதன் உணரத் தொடங்குகிறான்.

சமுதாய வாழ்வில் தோன்றும் இந்தச் சிக்கல் ஒருபுறம் இருக்கக் குடும்பம் என்று அவன் ஏற்படுத்திக் கொண்டு வாழும் வாழ்விலும் புதிய பல சிக்கல்கள் தொன்று கின்றன. தலைவியினிடம் பெரும்காதல் கொண்டுதான் தலைவன் குடும்பம் தொடங்குகிறான்; அவளிடம் நிலைத்த இன்பம் காண ஒரே வழி குடும்பம் வைத்தாலே என்று கருதித்தான் அதில் ஈடுபடுகிறான். ஆனால், குடும்பம் தொடங்கியவுடன் புதிய பொறுப்புக்கள் அவனை வந்து அடைகின்றன. குடும்பம் என்பது தானும் அவளும் கேவலம் இன்ப வேட்டை ஆட ஏற்பட்டது அன்று என்ற உண்மை அவனுக்குப் புலனாகிறது. அக் குடும்பம் காரணமாகத் தன்னை வந்தடைந்த பலரையும் காக்கும் பொறுப்பும் அவனை வந்தடைகிறது. தமது வறுமை காரணமாகவும், இயலாமை காரணமாகவும், பலதிரப்பட்டவர் அவனை வந்தடைகின்றனர்.

அத்தனை பேரையும் உணவு கொடுத்துக் காக்க வேண்டிய பொறுப்பு அவனுடையதாகிறது. இன்மை காரணமாக வந்தவருக்கு அவர் வேண்டும் பொருளைத் தருதலும், இயலாமை காரணமாக வந்தவருக்கு அவர் குறை முடித்துத் தருதலும் அவன் செய்ய வேண்டுமாயின், அவனது காலம் முதலாவது வீணாகும்; இரண்டாவது அவனுடைய பொருள் வீணாகும்; மூன்றாவதாகவும் மிக முக்கியமானதாகவும் அவன் மனைவியைப் பிரியவும் நேரிடும். எந்த ஒருத்தியைப் பிரியாமல் இருக்க ஒரே வழி குடும்பம் என்று நினைத்தானோ, அந்தக்குடும்பமே இன்று அவன் அவளை விட்டு நீங்கக் காரணமாய் விட்டது.

 

இந்தச் சூழ்நிலையில் ஒரு தலைவன் அகப்பட்டுக் கொள்கிறான். குடும்பம் வைத்தமையின் அப்பொறுப்பு களைச் சரிவர நடத்தப் பொருள் தேடச் செல்ல வேண்டி யுளது. ஆனால், தலைவியின்மாட்டுக் கொண்ட அன்பு அவன் கடமையை உதறிவிடத் தூண்டுகிறது. கடமைக்கும் அன்புக்கும் இடையே ஒரு பெரும் போராட்டம் தொடங்கி விடுகிறது. ' கடமையே பெரிதாதலின், ' ஆண் மகனாகிய நீ அதற்கு இடையூறாக நிற்றல் கூடாது,' என 'அறிவு' அவனை இடித்துக் கூறுகிறது. ஆனால் அன்பால் நிறைந்த நெஞ்சம், 'கடமையாவது கத்தரிக்காயாவது! இரு!' என்று கூறுகிறது.

அறிவும் அன்பும் பெரும் போராட்டம் நிகழ்த்து கின்றன. ஆனால், இப் போராட்டம் நடைபெறுகையில் தலைவன் ஊரில் தலைவியுடன் வாழவில்லை. பொருள் தேடுதல் நிமித்தமாக வெளிநாடு சென்றுள்ளான். ஆனால், போன காரியம் இன்னும் முற்றிலும் முடியவில்லை.

நெஞ்சு பேசுகிறது; 'தலைவியை விட்டுப் பிரிந்து எத்தனை நாட்களாகின்றன உண்மையான அன்பென்பது இதுதானா! அவளை நினைத்தாலும் அவள் உருவம் மனக்கண்முன் வந்து நிற்கிறதே!'

அறிவு:- என்ன நெஞ்சே! இடங்கொடுத்தவுடன் ஒரே அடியாக உன் கதையைத் தொடங்கிவிட்டாயே! கடமை என்ற சொல்லை நீ எங்காவது கேள்விப்பட்டதுண்டா? ஆறு அறிவு படைத்த மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள வேறுபாடு யாது என்பதாவது உனக்குத் தெரியுமா?

நெஞ்சு:- அறிவே என்ன? கடமை, மனிதன், மிருகம் என்று ஏதேதோ கதைக்கின்றாயே! தலைவியைப் பற்றி நீ நினைத்துப் பார்த்ததுண்டா? கடமையைப் பற்றிப் பெரிய சொற்பொழிவு செய்ய வந்துவிட்டாயே! தலைவிக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றி உனக்கு ஏதாவது நினைவுக்கு வருகிறதா?

அறிவு:- நன்றாக நினைவுக்கு வருகிறது! தலைவி மட்டும் எனக்குச் சொந்தம் இல்லையா? அவளுக்கு ஓரளவு துன்பம் தந்துவிட்டது உண்மைதான். ஆனால், அவள் வருத்தப்படாமல் இருக்க வேண்டும் என்று அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் மற்றக் கடமைகள் என்ன ஆகும்?

நெஞ்சு:- என்ன அப்படி மற்றக் கடமைகளை மறந்து விட்டது? வீட்டுக்கு முக்கியம் தலைவிதானே! அறிவே! அவள் இல்லாத பொழுது இல்லறம் என்பது இல்லையே! இப்பொழுது நீ பேசும் கடமைகள் எங்கிருந்து வந்தன? ஆகவே, உன் இல்லறம் நடைபெறுவதற்கு மூலகாரண மான தலைவியை மறந்துவிட்டுக் கடமைகள் என்று கூறிக் கொண்டு திரிவதில் பயன் இல்லை என்பது உனக்குத் தெரியுமா?

அறிவு:- ஆனால், தலைவியை இன்பமால வைத்துக் கொள்வதற்கு மட்டும் நாம் இல்லறம் தொடங்கவில்லை. வீடு வைத்தவுடன் எத்தனையோ புதிய பொறுப்புகள் தோன்றுகின்றன. நீ கூறும் அந்தத் தலைவி மகிழ்ச்சியாக எப்பொழுது இருக்க முடியும்? வீட்டில் விருந்தினர்கள் வந்திருக்கும்பொழுது அடுப்பில் பூனை படுத்துக்கொண் டிருந்தால் தலைவி மகிழ்ச்சியாக இருப்பாளா? இல்லை என்று உதவு வேண்டி நிற்பவர்கள் கடைத்தலையில் நின்று கொண்டு இருக்கையில் தலைவி மட்டும் அதுபற்றிக் கவலைப்படாமல் உண்டு உடுத்து மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? நினைத்துப்பார்.

நெஞ்சு:- ஆம்! அவள் இம்மாதிரிச் சந்தருப்பங்களில் மகிழ்ச்சியாக இருக்கமுடியாதுதான். அதற்காக அவள் தலைவனை விட்டுப் பிரிந்து தனியே வாடும்படு விட்டு விட்டால் மட்டும் மகிழ்ச்சி ஏற்பட்டு விடுமா!

அறிவு:- பைத்தியக்கார நெஞ்சே! எப்பொழுதுமே துயரத்தில் ஆழ்ந்து இருக்கும்படியாகவா விட்டுவிடு கிறோம்? பொருள் தேட இங்கு வந்த நம் தலைவன் மட்டும் தலைவியை விட்டு இங்கேயே இருந்துவிடப் போகிறானா என்ன! வந்த கடமை முடிந்து, வேண்டிய பொருள் கிடைத்தவுடன் ஊருக்குத்தானே புறப்படப் போகிறான்?

நெஞ்சு:- அறிவே, நீயும் உன் தலைவனும் கடமையை முடித்துக்கொண்டு புறப்படும்வரை அருமைத் தலைவி உயிருடன் இருப்பாள் என்பது என்ன உறுதி? ! அவளுடைய கரிய கூந்தல் முதுகில் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருப்பதை நினைப்பதும் ஓர் இன்பமாகிறது. அவளுடைய அகன்ற அந்த விழிகள், ஆளை விழுங்கி விடுவது போன்று பார்க்கும் அந்தப் பார்வை, இவை இரண்டுடன் அவள் என்னைப் பிணைத்து விட்டாளே! என் செய்வது?

அறிவு:- நெஞ்சே, ஏது! இவ்வளவு தூரத்திற்கு வந்தும் வந்த காரியத்தை மறந்துவிட்டுத் தலைவியைப் பற்றிய உன் எண்ணங்களைக் கேட்டுக் கொண்டிருந்தால் எனக்குக்கூட அறிவு மழுங்கிவிடும் போல இருக்கிறதே! சிறிது நினைத்துப் பார்; நாம் இவ்வளவு தூரம் வந்து வந்த காரியத்தை முடிக்காமல் ஊர் திரும்பினால் நம் தலைவனுடைய பெயருக்கே ஓர் இழுக்கு உண்டாகாதா? அவனை அறியாமை உடையவன் என்று ஊரார் இகழ மாட்டார்களா? பொறுத்தது பொறுத்தாய், நெஞ்சே, இன்னும் சற்றுப் பொறு! எடுத்த காரியத்தை முடித்துக் கொண்டு போகலாம்.

நெஞ்சு:- இனிப் பொறுக்க முடியாது! உடனே புறப்பட வேண்டும்!

இவ்வாறு தலைவனுடைய நெஞ்சுக்கும் அறிவுக்கும் ஒரு போராட்டம் நிகழ்ந்ததாம். அறிவு, நெஞ்சு என்ற இவை இரண்டின் இடைப்பட்ட தலைவன்பாடு மிகத் திண்டாட்டமாகி விட்டதாம். அவன் பட்டபாட்டிற்குக் காட்டும் உவமை மிகமிக அழகானது. இரண்டு வலிமை பொருந்திய ஆண் யானைகள், எதிர் எதிரே நின்று கொண்டு, புரிகள் தேய்ந்து போன பழைய கயிற்றைப் பற்றி இழுக்கின்றனவாம். அந்தக் கயிற்றின் நிலை எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறதாம் அவனுடைய நிலையும். இவ்வளவு அழகிய பாடலைப் பாடியவர் பெயர் கூடத் தெரியவில்லை! எனவே பிற்காலத்தார் அவர் பாட்டில் உள்ள இந்த அழகான உவமையைக்கருதி அவருக்கே 'தேய்புரிப் பழங்கயிற்றினார்' என்று பெயர்கூட வைத்து விட்டார்கள்.

 

புறம்தாழ்பு இருண்ட கூந்தல் போதின்

நிறம்பெறும் ஈர்இதழ் பொலிந்த உண்கண்

உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம்

செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும்,

செய்வினை முடியாது எவ்வம் செய்தல்

எய்யாமையொடு இளிவுதலைத் தருமென

உறுதி தூக்கத் தூங்கி அறிவே

சிறிதுநனி விரையல் என்னும். ஆயிடை

ஒளிறு ஏந்து மருப்பில் களிறுமாறு பற்றிய

தேய்புரிப் பழங்கயிறு போல

வீவது கொல்என் வருந்திய உடம்பே! (நற்றிணை-284)

 

(புறந்தாழ்பு-முதுகில் தாழ்ந்து; (நீளமாக) போதின் நிறம் பெறும்-நெய்தற்பூவின் நிறமுடைய; உண்கண்-ஆளை விழுங்குவது போன்ற கண்; செல்லல்-வருத்தம்; எவ்வம் செய்தல்-இகழ்ந்து விட்டுப் போதல்; எய்யாமை- அறியாமை; இளிவு-இகழ்ச்சி; உறுதி தூக்கத் தூங்கி- உறுதிப்பாடு செலுத்தலினாலே செல்லாது; நனி-மிகுதி; ஒளிறேந்து மறுப்பு-ஒளி படைத்த கொன்பு; வீவது கொல்-அழியவேண்டுமா?)

உணமையான காதலும் கடமை உணர்ச்சியும் ஒருவனுடைய மனத்தில் போராட்டம் நிகழ்த்துவதைச் சித்தரிக்கிறது இப்பாடல். இவை இரண்டில் எது சரியானது என்ற முடிவுக்குத் தலைவன் வர முடியவில்லையாம். ஆகவே, எது சரியென்று கேட்டுக்கேட்டுக் கவலைப்பட்டு அவன் உடம்புகூட இளைத்துவிடுகிறதாம். இன்றும் நம்மில் பலருக்குக் கவலை உண்டு. கவலை இல்லாதவர்களே இவ் வுலகில் இல்லை. ஆனால், இம்மாதிரியான கவலை உண்டா? அன்புக்கும் கடமைக்கும் போராட்டம் நம் மனத்தில் நிகழ்வதுண்டா? உண்மைக் காதல், உண்மைக் கடமை என்ற இரண்டுமே, அருகிய சரக்காகிவிட்ட இற்றை நாளில் இத்தகைய பாடல்கள் ஒரு பெரிய உறுதி யையும் உணர்ச்சியையும் நமக்குத் தருகின்றன. இரண்டு யானைகளும் சமபலத்துடன் இழுக்கின்றன என்றமையாற் காதலும் கடமையும் சமபலத்துடன் தலைவனிடம் உள்ளன என்பதையும் கவிஞர் பெற வைத்துவிட்டார்.

...................

 

தலைவி பிரிந்து சென்றதை நினைத்து வருந்தும் தாயின் மனநிலை பேசும் பாடல் இது:

 

'நினைத்தாலும் நெஞ்சு வேகிறது!'

 

நல்ல கடுவேனில்; உச்சிப்போழுது இந்த வெயிலின் கொடுமையை நினைத்தாலும் உள்ளம சுடுகிறது! சாதாரணமாக வெயிலின் நடப்பவர்கட்கே அதன் கொடுமையை அறியமுடியும் என்பர். ஆனால், சில சமயங்களில் வெயிலில் நடப்பவர்கள் எவ்விதக் கவலையும் இல்லாமல் சாவதானமாக நடந்து செல்லுதலைக் காண் கிறோம். ஏன்? அவர்களுடைய கால்கள் இரும்பால் ஆனவையா? அப்பாதங்களில் சூடு தாக்காமல் விட்டு விடுமா? சூரியன் அவ்வாறு ஒருவரைச் சுட்டுப் பிறரைச் சுடாமல் விடுபவன் அல்லனே! எலும்பில்லாத புழுவை யும் தனது அதிகாரம் நடைபெறும் இடத்திற்கு வந்து விட்டால் அவன் விடுவதில்லை. துடித்துத் துடித்து இரறக்குமாறு செய்கிறான் புழுவை.

அத்தகைய கடு வெயிலில் இரண்டு பேர்கள் செல்லு கிறார்கள். இன்னும் சற்று நெருங்கிச் சென்று பார்க்க லாமா அவர்களை? ஓடித் தப்பித்துக் கொள்ள வேண்டிய வெயிலில் அவர்கள் இருவரும் ஏன் மெள்ள நடக்கிறார் கள் என்பது இப்பொழுது தெரிகிறதா? ஆம்! இதோ பின்னே செல்கிற இப்பெண் வேகமாக நடக்க முடியாத வள். முன்னே செல்லும் இந்த ஆடவன் இவள் பொருட்டே மெல்லச் செல்கிறான். அவனுடைய மிடுக்கை யும் உடற்கட்டையும் தோள் வலியையும் பார்த்தால், அவன் மிக வேகமாக நடக்ககூடியவன் என்பது தெரிகிறது. ஆனால், ஏன் அடிக்கடி பின் தங்கிவிடுகிறான்? இதோ பின்னே வரும் அப்பெண் கோடியை நோக்கி ஏதோ கூறுகிறான். அவனுடைய முகத்தில் எவ்வளவு அன்பு ததும்புகிறது! வீரனுடைய உடற்கட்டு அமைந்த அவனுடைய முகத்தில் இவ்வளவு அன்பும் குழைவும் எங்கிருந்து பிறந்தன? ஐயமே இல்லை! இந்தப் பெண்ணிடம் திரும்பிப் பேசுந்தோறும் அவனுடை முகத்தில் அன்பும் அருளும் காட்சி அளிக்கின்றன. இப்படி ஒரு பெண்ணிடம் பேசும் பொழுதெல்லாம் ஒருவ னுடைய முகத்தில் அன்பு தோன்றுமாயின், அவன் அவளுடைய காதலன்தான் என்று முடிவு செய்யலாம்.

இந்தப் பெண்ணைப் பார்த்தால், இவளிடம் இளமை தாண்டவமாடுகிறது. இவளுடைய உடல் அமைப்பில், பெரிய குடும்பத்தில் வசதியுடன் வளர்ந்த பொலிவு காணப்படுகிறது. இப்படிப்பட்டவள் இவ்வாறு கடுமை யான வெயிலில் நடந்து பழகியிருத்தல் இயலாது. எனவே, இவள் கால்கள் சூடு தாங்காமல் தள்ளாடுகின்றன. இவள் படும் பாட்டைக் கண்ட இவளுடைய காதலன் நின்று நின்று இவளுக்கு ஏதோ அமைதி கூறுகிறான். விளையாட் டாகப் பேசி, இவளை மகிழ்விக்கிறான். இவளுடைய கவலையை மறக்க வைக்க அவன் அரும்பாடு படுகிறான் என்பது நன்றாகத் தெரிகிறது.

 

இவளும் அவனிடம் பெருங்காதல் கொண்டுள்ளாள் என்பதில் ஐயமில்லை. அன்றேல், இக் கடுவெயிலின் கொடுமையை மறந்து, அவனுடைய சொற்களில் ஈடுபட்டு இவ்வாறு தன்னை மறந்து இவள் சிரிக்க இயலுமா? இத்துணைத் துன்பத்தையும் இவள் மறக்க வேண்டுமாயின் அவனுடைய சொற்களில் இவளுக்குள்ள ஈடுபாடு அளவற்றதாய் இருக்க வேண்டும். ஏன் இவ்வாறு இக் காதலர்கள் இந்த நேரத்தில் செல்ல வேண்டும்? அது ஒரு கதை.

இத் தலைவனுக்கும் தலைவிக்கும் நெடுனாட்கலாகவே பழக்கம் உண்டு. முதன்முதலில் இவர்கள் இருவரும் எங்கு எவ்வாறு சந்திந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. இவன், இவள், இவளுடைய உயிர்த்தோழி ஆகிய மூவருக்கு மட்டுமே அது தெரியும். ஆனால், இத் தலைவியுனுடைய சுற்றத்தார் இவர்களிடையே திருமணம் நடைபெறவிட மாட்டார்கள் என்பதைத் தோழி அறிந்து கொண்டாள். வேறு வழியாது? மற்றொருவனுக்கு இப்பெண்ணை மணம் முடிக்க ஏற்பாடுகளும் செய்துவிட்டனர் இவர்களுடைய சுற்றத்தார். நிலைமை மிகவும் மோசமாகி விடும் போலத் தோன்றலாயிற்று. தோழி பார்த்தாள்; தலைவி வேறு ஓர் ஆடவனை மணத்தல் என்பது இயலாத காரியம். அத் தகைய நிலைமை ஏற்பட்டால் இவள் இறந்துபடுவாளே தவிர அப்புதியவனை மணக்க இசையமாட்டாள். என்றாலும் தலைவியின் சுற்றத்தார்களும் தலைவியின் நிலையைப் புரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள்.

இந்நிலையில் தோழிக்கு இரண்டே வழிகள் தெரிகின்றன. ஒன்று தலைவியின் விதிப்படி ஆகட்டும் என்று விட்டுவிடுவது. இரண்டாவது, பலரும் தன்மேல் ஐயங்கொண்டு பகைமை பாராட்டுவார்கள் என்று அறிந்து இருந்தும் அதுபற்றிக் கவலையடையாமல், தலைவிக்கு அவள் விரும்பியவனை அடையுமாறு உதவுவது. எந்தத் தோழியும் தலைவியை முதல் வழியில் விடமாட்டாள். அவள் இறந்துபட நேர்ந்தால், இதைவிடக் கொடுமை வேறு யாது? எனவே இரண்டாவது வழிதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் தோழி. தன்னுடைய சுற்றத்தார் நிறைந்துள்ள இந்த ஊரில் தலைவி விரும்பியவனை மணந்துகொள்ளுதல் என்பது இயலாத காரியம். எனவே, தலைவனுடன் தலைவி ஓடிவிட வேண்டும். இவ்வாறு தலைவனுடன் தலைவி ஓடுவதை 'உடன் போக்கு' என்று இலக்கியம் கூறும். மேனாட்டார் இதனை இதே பொருளில் 'எலோபெமென்ட்' என்று வழங்குவதும் அறிதற்குரியது.

தோழியின் உதவியால் தலைவி தலைவனுடன் ஒரு நாள் விடியற்காலையில் தன் ஊரையும், தாய் தந்தையரை யும், சுற்றத்தாரையும் விட்டுவிட்டு ஓடிவிட்டாள். முதல் நாள் மாலைப்பொழுது வரை அந்த வீட்டில் வாழ்பவர் கட்கு இதுபற்றி ஒரு குறிப்பும் தெரியவில்லை. இப் பெண்ணின் தாய்க்கு இவள் ஒரே பெண். வேறு ஆண் மக்கள் இருக்கலாம். எனினும் சீராட்டித் தன் மகள் என்று கூறி ஆடம்பரமாகத் திருமணம் செய்து வைக்க வேறு பெண்ணும் இல்லை! என் செய்வாள் அத்தாய்.

 

மறுநாள் பொழுது விடிந்ததும் மகளைத் தேடினாள். யாண்டும் காணவில்லை. தோழியை விசாரித்தாள், தனக்கு யாதொன்றும் தெரியாது என்று தோழி கூறிவிட்டாள். தோழிதான் தலைவியின் உடன்போக்குக்கு உதவி செய் தாள். எனினும், அவளே இப்பொழுது ஒன்றும் தெரியாத வள் போலத் தலைவியைக் காணவில்லையே என்று அழத் தொடங்கிவிட்டாள்! போதாக்குறைக்கு ஊரில் உள்ள பெண்டிர் அனைவரும் வந்து கூடிவிட்டனர்.

ஒவ்வொருவரும் தத்தம் கவலையை ஓரளவு தெரிவித்துக் கொண்டனர். சிலர் அத்தாயைத் தேற்ற முற் பட்டு விட்டனர்; இது ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கை யில் இயல்புதான் என்பதை எடுத்துக்காட்டினர்; அறவழி யும் இதுதான் என்றும் எடுத்துக் கூறினர். எவ்வளவு சிறப்பு டன் பெற்று வளர்த்தாலும், பெண்ணைப் பெற்றுவிட்டால் ஒருவனிடம் ஒப்படைக்கத்தானே வேண்டும்? இவ்வாறு அவர்கள் பலபடியாக எடுத்துக்கூறியும் தாய்க்குக் கவலை நீங்கவில்லை. சிலர் காரண காரியத்துடன் உவமைகள் கூறியும் அவள் கவலையைப் போக்க முயன்றனர். ஒருத்தி கூறினாள் பின் வருமாறு:

"அம்மா, நல்ல மணம் வீசுகிற சந்தனம் மரமாக மலையிலேதான் பிறக்கிறது என்றாலும், தான் பிறந்த மலையில் இருக்கும் வரை மலைக்கு அது பயன் படுவதில்லை. அங்கிருந்து பிரிந்து சென்று யாருடைய வீட்டிலோ சேர்ந்து விட்டால், அங்கு மணம் வீசுகிறது. ஆராய்ந்து பாருங்கள். உம்முடைய மகளும் அத்தகையவள் தானே?" என்றாள்.

 

'பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை

மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம்என்செய்யும்?

நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;'

(பாலைக்கலி-8)

 

மற்றொருத்தி வேறு ஓர் உதாரணம் தந்தாள்; "நீவிர் அணிந்திருக்கிற முத்துக்கள் கடலிலேதானே பிறந்தன? ஆனால், அவை கடலுக்கு ஒரு சிறிதும் பயன்படாமல் உம்மை அலங்கரிக்க வந்துவிட்டன. ஆய்ந்து பார்த்தால், உம் மகளும் அவ்வாறுதான்?" என்றாள்.

 

'சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை

நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?

தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!'

(பாலைக்கலி-9)

 

என்று கூறி, அத்தையின் துயரத்தைத் தணிக்க முற்பட்ட னள். இவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அவளுடைய துயரைத் தணிக்க அமுது கூறினார்களோ, அவ்வளவுக் கவ்வளவு அவளுடைய துயரம் எல்லை கடந்து விட்டது.

தாய் தனக்கு அமைதி கூறினவர் அனைவரையும் ஒரு முறை பார்த்தாள். இன்னும் அவளுடைய வருத்தம் அதிக மாயிற்று. மேலும், அவர்கள்மேல் அது கோபமாகவும் மாறியது. ஏன் தெரியுமா? அவளுக்கு அமைதி கூறவந்த அவர்கள் அவளைப் போலவா இருக்கிறார்கள்? அவருள் ஒவ்வொருவருக்கும் இரண்டு மூன்று பெண்கள் உண்டு. ஒருத்தி இவ்வாறு தலைவனுடன் ஓடிவிட்டாலும் மற்றப் பெண்கட்கு அவர்கள் மணம் செய்து வைத்து மகிழலாம். ஆனால் தன் நிலையை அவர்களுள் யாரும் ஆராய்ந்து பார்த்ததாகவே அவளுக்குத் தெரியவில்லை. அவளுக்கு இருந்தவள் ஒரே மகள் அல்லவோ? அந்த ஒருத்தியும் இன்று இல்லாமல் சென்றுவிட்டாளே;

அத்தையும் அறியாதவள் அல்லள். ஒருவாறு தன் துயரத்தை மறந்துவிட்டு இருக்கவே முயல்கிறாள். ஆனா லும், என்ன கொடுமை! வீட்டைச் சுற்றி நொச்சிச் செடி வளர்ந்துள்ளது; நீலமணி போலப் பூக்களைப் பூத்துக் குலுங்கி நிற்கிறது. அதைப் பார்க்குந் தோறும் மகள் நினைவு வருகிறது, அச்செடியின் அடியில் அருமை மகள் விளையாடி வளர்ந்ததை அவள் எவ்வாறு மறக்க இயலும்! அவள் அமர்ந்து விளையாடிய திண்ணையை நினைக்க நினைக்கத் தாய்க்குப் பெற்ற மனம் வெடித்துவிடும் போல ஆகிவிடுகிறது.

இது ஒரு மனத்தத்துவம். அண்மையில் அன்புடைய வர்களை இழந்து விட்டவர்கட்கே இது தெரியும். இறந்த வர்களுடைய பொருளைக் காணும் போதெல்லாம் துயரம் புதியவேகத்துடன் வெளிவரும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இதனை அழகாக மகனை இழந்த தாய் என்ற பாடலில் பாடுகிறார். இறந்த மகனைப் புத்தர் பிரான் எதிரே போட்டு அத்தாய் அழுவது இம்மன நிலையை நன்கு விளக்குகின்றது. அக்குழந்தை விளையாடிய பொருள் களைக் காணும் பொழுதெல்லாம் தன்துயரம் புதிய உருவெடுத்தலை இதோ அத்தாய் கூறுகிறாள்;

 

'சித்திரத் தேரும் சிறுபறையும் கூடிஎனைப்

பித்தியிலும் பித்தி பெரும்பித்தி ஆக்குதையா!' (கவிமணி)

 

இதே போன்ற கருத்தத்தைதான் நற்றிணைப் பாட்டில் வரும் அத்தாயும் கூறுகிறாள்.

 

"அறிவுள்ள அயல் வீட்டவர்களே! உங்களைப் போல நான் பல புதல்வியரைப் பெறவில்லை. ஒரே பெண்ணைப் பெற்றேன். அவளும், போரில் மிக்க வலிமை காட்டும் கூறிய வேலாயுதத்தையுமுடைய காளை ஒருவனோடு கடும் பாலை வனத்தின் வழியே சென்றுவிட்டாள். அவளே சென்றுவிட்டமையின் யான் அவள்மேல் கொண்டிருந்த ஆசையை மறக்கிறேன். எனினும், ஆவலுடன் பழகியதை மறக்க முடியவில்லை. ஆனால், நீங்கள் கவலையை மறக்குமாறு சொல்கிறீர்கள். அந்த ஒரே மகளை எவ்வாறு மறப்பது? கண்ணுள் வாழும் பாவை வெளியே வந்து நடை பயில்வது போன்ற என் மகள், நீலமணி போன்ற பூக்கள் பூக்கும் நொச்சிச் செடியின் அருகில் விளையாடிய தையும் அவள் விளையாடிய திண்ணையையும் எவ்வாறு என்னால் மறக்க முடியும்? நினைத்தாலும் நெஞ்சு வேகிறது!"

 

ஒருமகள் உடையேன் மன்னே அவளும்

செருமிகு மொய்ம்பின் கூர்வேல் காளையொடு

பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்;

இனியே,

 

தாங்குநின் அவலம் என்றிர்; அதுமற்று

யாங்ஙனன் ஒல்லுமோ அறிவுடை யீரே!

உள்ளின் உள்ளம் வேமே; உண்கண்

மனிவாழ் பாவை நடைகற்று அன்னஎன்

அணிஇயல் குறுமகள் ஆடிய

மணியேர் நொச்சியும் கண்டே (நற்றிணை-184)

 

(செரு-போர்; மொய்ம்பு-வலிமை; நெருநல்-நேற்று, ஒல்லுமோ-முடியுமோ; உண்கண் மணி வாழ்பவை- கண்ணினுள் வாழும் பாவை; தெற்றி-திண்ணை)

"மகள் சென்ற பாலையை நினைத்து வீட்டில் நிழல் தரும் நொச்சியையும் திண்ணையையும் பார்த்தால் வருத்தத் தால் நெஞ்சு வெடிக்கிறதே!" என்றாள் அப்பெற்ற தாய். 'குடி வறன் உற்ற கொழுநன்' தலைவியின் தனிக் குடித்தனத்தில், அவள் உறுதியைப் பற்றிப் பேசும் பாடலைப் பார்ப்போம்;

 

ஒரு பெரிய மாளிகை விண்ணைத் தொட்டு நிற்கிறது. அது மிகப் பெருஞ் செல்வருடைய வீடென்பது கண்ட மாத்திரத்தில் யாரும் அறிந்துகொள்ளுதல் கூடும். வீட்டின் வெளி முற்றத்தில் பெரியதொரு தென்னங்கீற்றுப் பந்தல் போடப்பட்டிருக்கிறது. வீட்டின் சொந்தக்காரர் பொருட் செல்வம் பெற்றுள்ள அளவுக்கு மக்கட்செல்வம் பெற வில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. அல்லாவிடில், இதோ வீட்டு வாயிலை விட்டு வெளியே வரும் இந்த ஒரு பெண் குழந்தையைப் பாருங்கள். எவ்வளவு சிறந்த ஆடைகள், கண்டீர்களா? இவ்வளவு சிறிய குழந்தைக்கு இப்படி வைரத்தால் இழைத்து நகைகள் போட்டிருக்கிறார் கள். பார்த்தீர்களா? என்ன நினைக்கிறீர்கள்? இந்தக் குழந்தையைப் பார்த்து முன் ஒரு காலத்தில் ஒரு கவிஞன் 'நல்கூர்ந்தார் செல்வமகள்' என்று கூறிப்போனான். அதன் பொருள் விளங்குகிறதா? 'நல்கூர்ந்தார்' என்பதற்கு வறுமையுடையவர் என்பது பொருள். வறுமையுடையவர் கட்கு எவ்வாறு செல்வ மகள் இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா? ஆம். நியாயமான கேள்விதான். ஆனால், 'வறுமை' எதில் ஏற்பட்டது என்று அறியவில்லையே! செல்வம் நிறைய உடையவர்கள் என்பதே பொருள். 'ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு' என்று கூறுவார்களே! அது போல ஒரே ஒரு குழந்தையை அருமையாகப் பெற்று உள்ளார்கள். இங்கே நாம் காணும் அம்மை இக்குழந்தை யைப் பெற்ற தாயல்லள். ஆனால், தாயின் இடத்தில் இருந்து வளர்க்கும் செவிலித் தாய் ஆவாள். ஆம் 'நற்றாய்' என்று கூறப்படும், பெற்ற தாய்க்கு அடுத்தபடி இருப்பவள், 'செவிலித் தாய்' என்று கூறப்படும் இந்த வளர்க்கும் தாய் தானே? ஆதலாலேதான் இவ்வளவு உரிமையுடன் குழந்தையை அச்சுறுத்தும் நோக்கத்துடன் கையில் கோலை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறாள். இந்த மூதாட்டியை அடுத்து நிற்கும் அந்தப் பெண்ணின் கையில் இருக்கும் பொற்கிண்ணத்தைப் பார்த்தீர்களா? அதில் வெண்மையான பாலும் சோறும் இருக்கின்றன. பாற் சோற்றுக்கு உள்ள இனிப்பும் போதாது என்பதற்கு இச் சோற்றுடன் என்ன கலந்துள்ளார்கள் என்பது தெரியுமா? நாம் இக்காலத்தில் சத்தற்ற வெள்ளைச் சர்க்கரையை அல்லவா பயன்படுத்துகிறோம்? ஆனால், அந்நாளைத் தமிழர் பாலுக்கு இனிப்பூட்டத் தேனை உடன் கலந்தனர். எனவே, இக்குழந்தையின் பால் சோற்றுடன் தேனைக் கலந்திருக்கிறார்கள். தேன் கலந்த பால் சோற்றைத் தங்கக் கிண்ணத்தில் ஏந்திக்கொண்டு பின்னர் இருக்கும் பணிப் பெண் ஏன் இங்கே வந்து நிற்கிறாள்? முதலில் ஓடி வந்த இந்தப் பெண் குழந்தைக்குச் சோறு ஊட்டவே இத்தனை பேர்களும் வந்துள்ளார்கள். இந்தக் குழந்தை, உணவை பாலும் தேனும் கலந்த அந்த இனிய சோற்றை உண்ண மறுக்கிறது. அம்மட்டோ வெளியில் உள்ள பந்தலைச் சுற்றிச் சுற்றியும் ஓடுகிறது. வயது முதிர்ந்த நரை தோன்றிய பணிப்பெண்கள் இக் குழந்தையைப் பிடிக்க வேண்டி, தம் வயதை மறந்து குழந்தையின் பின்னர் ஓடுவது அதனை விட வியப்பாய் இருக்கிறது! ஆனால், குழந்தை அவர் களின் கையில் சிக்காமல் இங்கும் அங்கும் ஓடுகிறது. இடை இடையே அப்பணிப்பெண்கள் தம் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு குழந்தையை வேண்டுகிறார்கள்.

 

இது ஒரு காட்சி. வாழ்க்கைச் சித்திரத்தின் ஒரு பகுதி இது. இதோ! இனி மற்றொரு பகுதி தொடங்குகிறது. இங்கு நாம் காணும் பெண் நல்ல இளம்பருவம் உடைய நங்கை. இவளுடைய இயற்கை வனப்பைத் தவிர வேறு அழகு செய்யும் ஆடை அணிகளுள் ஒன்றும் இல்லை. உடையிலும், வீட்டுச் சூழ்நிலையிலும் எவ்வளவுதான் வறுமை தெரிந்தாலும், இவளுடைய முகத்தில் காணப்படுகிறது ஒப்பற்ற பொலிவு. வறுமை என்பது உடலைப் பிடிக்கும் பொழுது அதுதான் தோல்வியடைகிறது. அவ் வறுமையால் பீடிக்கப் பெற்றவன் பணிய மறுத்து விடுகிறான். எனவே, அவனுடைய உடை, உணவு, உறையுள் என்று கூறப்பெறும் இம்மூன்றும் கெட்டுவிடுகின்றன. ஆனால், அவனுடைய முகத்தைப் பார்த்து யாரும் வறுமையுடையவன் என்று கூறிவிட முடியாது. இது கருதியே தான், 'செல்வம் என்பது சிந்தையின் நிறைவு. அல்கா நல்குரவு அவாஎனப் படுமே,' என்று கூறினார் குமரகுருபர அடிகளார்.

இப்பொழுது நாம் காணும் இப்பெண்மணியின் புறத் தோற்றமும் சூழ்நிலையும் இவளுடைய வாழ்க்கை செல்வப் பாதையில் செல்லவில்லை என்பதையும், வறுமையில் நடைபெறுகிறது என்பதையும் நன்கு அறிவுறுத்துகின்றன. என்றாலும் என்ன? இவளுடைய முகத் தோற்றத்திலே தான் எவ்வளவு பொலிவு காணப்படுகிறது!

இதோ இவளுடைய வீட்டினுள் சென்று காண்போம். எவ்வளவு சிறிய வீடு! ஆனால் எவ்வளவு தூய்மையாய் வைக்கப்பெற்றிருக்கிறது! அவ்வளவு பெரிய மாளிகையில் வாழ்ந்த இப்பெண், எவ்வாறு இவ்வாறு சிறிய வீட்டில் வாழக் கற்றுக் கொண்டாள்; தொட்டதற்கெல்லாம் பணிப் பெண்களை ஏவி வேலையை முடித்துக்கொள்ளும் பழக்க முடைய இப்பெண், இப்பொழுது ஒரு பணிப்பெண்கூட இல்லாமல் எவ்வாறு வாழ்க்கை நடத்துகிறாள்? தனக்குச் சோறு ஊட்ட வேண்டும் என்று பிறரை எதிர்பார்த்து வளர்ந்த இப்பெண், இப்பொழுது எவ்வாறு தன் குடும்பத் தைக கவனித்துக் கொள்கிறாள்? இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க இவள் இப்பொழுதுதானே உணவு சமைக்க வும் தலைப்பட்டு விட்டாள். தங்கக் கிண்ணத்தில் தேனொடு கலந்த பார்சோற்றைப் பிறர் வருந்தி வருந்தி ஊட்ட முயன்றது அக்காலம். ஊட்ட ஊட்ட உண்ண மறுத்ததும் அந்தக் காலம். இன்று எத்தகைய மாறுதல்? தங்கக்கிண்ணம் என்று கூறுவதற்குக்கூட, ஒன்றும் இல்லை. வீட்டில் பழகும் சாமான்கள் அனைத்தும் நிலத்தாயின் அருளால் கிடைத்தவை தாம்! அனைத்தும் மண் பாண்டங்கள். அவற்றில் பாலும் இல்லை, தேனும் இல்லை; பழஞ் சோறுதான் இருக்கிறது. என்றாலும், அச்சோற்றை விருப்பமுடன் உண்கிறாள்! தான் மட்டும் உண்ணவில்லை! தன் கணவனுக்கும் விருப்புடன் அதனைப் படைக்கிறாள்.

இதோ! இந்த ஆண் மகன்தான் இவளுடைய காதற் கணவன் போலும்! இவனுடைய முறுக்கேறிய உடல் இவனுடைய வன்மையும் பலத்தையும் காட்டுகிறது. ஆனால், அணிந்திருக்கும் உடை முதலியன, இவனுடைய குடும்பம் செல்வத்தில் வாழவில்லை என்பதை அறிவுறுத்து கின்றன. இருந்தாலும், வறுமையில் செம்மை உடையவ னாகவே காணப்படுகிறான். இவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்கிறாள் இப்பெண். வெறுங் கடமை உணர்ச்சியால் உந்தப்பட்டு, இயந்திரம்போல மட்டும் இவள் செய்யவில்லை; முழு அன்புடன் கடமை யைச் செய்கிறாள். இவளுடைய ஒவ்வொரு செயலிலும் மனத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் காதல் உணர்ச்சி குமிழிட்டு வெளி வருகிறது.

இவ்வளவு அருமைப்பாட்டுடன் நடைபெறும் குடும்பத்தைக் காண இவள் தந்தையார் ஒரு முறை வந்திருந்தார்; மகளின் வாழ்க்கை முறையைக் கவனித்தார். பெற்று வளர்த்த அவருடைய மனம் அனுதாபத்தால் கரைந்து விட்டது. மகளுடைய இந்த வறுமையைப் போக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டார். மிகவும் பக்குவமாக இவளை அணுகி, தாம் உதவி செய்வதாகக் கூறினார். அதுவும் உதவி என்ற பெயரால் அன்று. இவளுடைய பழைய வாழ்வை நினைத்துப் பார்த்த அவர், அதை இவளுக்கு நினைவூட்டினால் ஒரு வேளை அச்செல்வ வாழ்வை மீட்டும் விரும்புவாளோ என்று ஐயுற்றார்; எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்; தம் இடத்தில் பொருளுதவி பெறுதல் தவறன்று என்று பல வகையாகவும் எடுத்துக்காட்டினார். ஆனால், இவள் அவருடைய சொல்லை மறுத்துவிட்டாள்; எந்த விதமான உதவியும் பெற மறுத்துவிட்டாள். எத்துனைத் துன்பமுற்றா லும் தன் தந்தையாரிடமிருந்து உதவி பெற இவள் விரும்ப வில்லை; தன் கணவனுடைய பெருமைக்கு அவ்வாறு உதவி பெறுதல் இழுக்கு என்னும் முடிவுக்கு வந்தாள். கணவனும் உதவி பெறுதலை விரும்ப மாட்டான் என்பது இவளுக்கு நன்கு தெரியும்!

மாமனாருடைய செல்வத்தில் பங்குபெற்று வாழ்தல் மிகவும் மானக்கேடானது என்பது அவனுடைய கொள்கை. அன்றைய நாளில் தமிழன் இவ்வாறுதான் கருதினான். எத்துனை வறுமையில் ஆழ்ந்துவிட்டாலும், தானாகச் சம்பாதியாமல் பிறர் பொருளை வைத்து வாழ்வது மானக்கேடானது என்பது தமிழனுடைய உறுதி யான கொள்கை. இவற்றையெல்லாம் மனத்துட்கொண்டு இப்பெண் தன் தந்தையார் தருவதாகக் கூறிய செல்வத்தை ஏற்க மறுத்துவிட்டாள்.

இப்பெண்ணின் இல்வாழ்க்கையை ஒருநாள் வளர்த்து வந்து செவிலித்தாய் சென்று கண்டாள். மகளின் இக் கால வாழ்க்கை அவளுடைய கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. இவளுடைய பழைய வாழ்க்கையையும் பால் சோறு உண்ண மறுத்த குறும்புத்தனத்தையும் மீட்டும் நினைந்து பார்த்தாள். கண்ணீர ஆறாய்ப் பெருகியது. ஆனால், மகள் வறுமையில் செம்மையாக வாழ்க்கை நடத்துவதைப் பார்த்ததும், பெருமித உணர்ச்சி மேலிட்டு விடுகிறது. மீண்டும் தன் வீட்டிற்கு வந்தாள். செவிலித் தாய்; இவற்றை யெல்லாம் நினைத்து ஒரு கவிதையாகப் பாடினாள். ஆனால் கவிதையைப்பாடியது போதனார் என்ற ஆண் மகனார். இதோ கவிதையைப் பாருங்கள்:

 

'பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்

விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்

புடைப்பில் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்

உண்என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணிர்

முத்துஅரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று

அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்

பரீஇமெலிந்து ஒழியப் பந்தர் ஓடி

ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி

அறிவும் ஒழுக்கமும் யாண்டுஉணர்ந் தனள்கொல்!

கொண்ட கொழுநன் குடிவறன் உற்றுஎனக்

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்

ஒழுகுநீர் நுணங்குஅறல் போலப்

பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே.' (நற்றிணை-110)

 

(பிரசம்-தென்; புடைப்பில் சுற்றும்-குஞ்சும் கட்டிய; முத்து அரிப்பொன் சிலம்பு-முத்தை உள் ஈடாக உடைய பொன் சிலம்பு; அரிநரை-மெல்லிய நரைத்த; பரீஇ மெலிந்து ஒழியப்-பின் தொடர்ந்து ஓடிப் பற்ற முடியாமல் விட்டுவிட; குடிவறன் உற்றென-கணவன் வீடு வறுமையுற்றதாக; கொடுத்த தந்தை-பெற்று வளர்த்த தந்தை; கொழுஞ்சோறு-செல்வ உணவு; ஒழுகு நீர்-ஓடும் தண்ணீர்; நுணங்கு அறல்-இடை இடையே கிடக்கும் மணல் திட்டுப்போல ஒரு முறை உணவு உண்டும் ஒரு முறை பட்டினி கிடந்தும் வாழும் வாழ்வு; பொழுது மறுத்து உண்ணும்-ஒரு பொழுது உணவு உண்டு மறு பொழுது உணவின்றி இருக்கும்; சிறு மதுகையளே-சிறிய வண்மையை உடையவள்)

பழந்தமிழ்ப் பெண்மணிகள் வாழ்வில் ஓர் ஒப்பற்ற ஏடாகும் இப்பாடல். கவிதையைப் பன்முறை படித்துச் சுவைப்பதுடன் வாழ்விலும் நம் சோதரிகள் இம்மாதிரி வாழ முற்பட்டால் நாடு எத்துணைச் சிறப்படையும்.

 

முல்லைத் திணை

 

முல்லைத் திணை காடும் காடு சார்ந்த இடமும் நிலைக்களனாக உடையது.

 

தலைவன் கார் காலம் வந்தவுடன் மீண்டுவிடுவதாகக் கூறிவிட்டுப் போனான். அக்காலம் வந்தும் அவன் வர வில்லை. அவன் சொற்களில் நம்பிக்கையுடன் தலைவி பிரிவுத் துயரைப் பொறுத்துக்கொண்டு வாழ்கிறாள். தலைவன் வருகிறான் காட்டு வழியே. இவையே இத்திணையில் இடம் பெறுபவை,

கற்பின் குறுமகள் முல்லைத் திணையின் சிறப்பு யாதெனில், தலைவி தான் படும் துயரத்தைப் பிறர் அறியாமல் மறைத்து வாழ் தலேயாம். எத்தணைத்தூரம் தலைவன் பிரிவுக்கு வருந்துவ தாயினும், வீட்டில் உள்ள கடமைகளைத் துறத்தல் இயலாத காரியம். எனவே, கடமைக்கும் மனத்தில் தோன்றும் பிரிவுத் துயரத்திற்கும் ஏற்படும் போராட்டத் தில் தலைவியின் வெற்றியைக் காட்டுவதே முல்லைத் திணை. கடலைத்தனைத் துயரம் ஏற்பட்டாலும் தமிழ்ப் பெண்கள் தம் துயரத்தைப் பெரிதாகப் பறை சாற்றிக் கொண்டு கடமையை மறந்து காற்றில் விடுவதில்லை. இந்த அரிய பண்பாட்டை எடுத்துக் கூருவதாலேதான் முல்லைத் திணை பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் சிறப்புடன் விளங்கக் காண்கிறோம்.

தலைவியும் இளமையுடையவள்; தலைவனும் அப்படி யே. ஆனால், கடமையைப் பெரிதென மதித்து அவன் பிரிந்து போய் விட்டான். தலைவியும் தன் துயரத்தை ஓரளவு மறந்து கடமைகளில் ஈடுபட முனைகிறாள். ஆனால், இவ்வுலகியற்கை எத்துணை விந்தையானது! கடமை மேற்செல்கிறவர்களைத் தடுக்க எத்தனை சூழ்ச்சி கள் நடைபெறுகின்றன வாழ்வில்! எந்தக் கடமையை நிறைவேற்ற யார் முற்பட்டாலும், தடைகட்குப் பஞ்சமே இராது. தலைவி மட்டும் இவ்விதிக்கு விலக்கானவளா? இளமையை மறந்து, தலைவனையும் கடமையில் கருத் தூன்றி நிற்கச் செய்யும் அவள் உறுதியைக் கலைக்க யார் யார், முற்படுகிறார்கள் தெரியுமா? முதலில் கார் காலக் கருமேகங்கள் திரண்டெழுந்து வருகின்றன. அம்மேகங் களைக் கண்ட மயில்கள் தம் தோகையை விரித்து ஆடத் தொடங்குகின்றன. ஆடும் மயிலின் அற்புதக் காட்சி தலைவிக்கு மனத்திற்கு அமைதி தரவில்லையே என வருந்திய தலைவி, வேறுபுறம் திரும்பினால், பகலில் மேயச் சென்ற மாடுகளும், உணவு தேடச் சென்ற புள்ளினங்களும் தம் துணையுடன் குலாவிக்கொண்டு இருப்பிடத்தை நாடி மீள் கின்றன. இவற்றைப் பார்த்தால் துன்பம் மிகும் என்று தலைவி வீட்டினுள் வந்தாலும் துன்பம் தொடர்கின்றது.

அஃறிணைப் பொருள்களாகிய விலங்குகள் மட்டுமா தலைவிக்கு வருத்தம் உண்டாக்க முற்பட்டன? உயர் திணையாகிய மனிதன் என்ன வாழ்கிறான்! அவனும் பிறருக்குத் துன்பம் தருகிறோமே என்ற எண்ணம இல்லாமலேதான் தொழில் செய்கிறான். மாடுகளை ஓட்டிச் செல்லும் அவ்விடையன் சும்மா போகக் கூடாதா? போகவில்லை; வேய்ங்குழலை வைத்து ஓயாமல் ஊதிக்கொண்டே செல்லுகிறான். அந்தப் பாவிக்கு வாய் தான் வலியாதா? ஏன் இப்படி ஊதி ஊதித் தலைவியின் உயிரை வாங்குகிறானோ, தெரியவில்லை! அவன் கண்டானா தலைவிக்கு இது வருத்தத்தை உண்டாக்கும் என்று? அவன் மக்ழிச்சியாகத்தான் ஊதிக்கொண்டே செல்லுகிறான். அந்த இடையனுடன் உறவு கொண்டதா இந்தக் குயிலும்? ஏன் இதுவும் இப்பொழுது கூவத் தொடங்கிவிட்டது? செவ்வானத்தையும் தென்றலையும் கண்டவுடன் குயிலுக்குக் 'குஷி' பிறந்துவிட்டது. ஆனால், குயிலுக்குப் பிறந்த குஷியில் அதுபாட ஆரம்பிக்கத் தலைவிக்கு இது தலைவேதனையாக அன்றோ ஆய்விட்டது! தலைவனை மறக்க முயன்ற தலைவிக்கு எத்தனை பகைகள் திரண்டெழுந்து விட்டன! மாலைக் காலம், சிவந்த அந்த வானம், குயில், துணையுடன் வரும் மாடுகளும் பறவைகளும், இடையன், தென்றல், மயில், பிறைச்சந்திரன்-இவை அனைத்தும் கார் காலத்தில் உள்ளவை. இவற்றை அடிப்படையிற் கொண்டு, இலக்கண ஆசிரியின் 'காரும் மாலையும் முல்லை' (தொல், அகத் திணை, 6) என்று கூறிப் போனான்.

 

இந்த நிலைக்களத்தை வைத்துக்கொண்டு ஒரு தலைவி படும் பாட்டை இதோ பிற்காலப் புலவன் ஒருவன் சித்தரிக்கிறான்.

 

தண்ணமுது உடன்பிறந்தாய் வெண்ணிலாவே!

தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே!

பெண்ணுடன் பிறந்ததுஉண்டே வெண்ணிலாவே! என்றன்

பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே!

 

திக்கெலாம் தென்றல் புலிவந்து பாயுதேமன்மதா-குயில்

சின்னம் பிடித்தபின் அன்னம் பிடியாதே!

(குற்றாலக் குறவஞ்சி, 24,25)

 

இத்துணைத் துயரத்துடன் இருப்பினும், தலைவி தன் கடமையிலிருந்து தவறினதில்லை. அவளைத் தலைவன் நன்கு அறிவான். எனவே, பிரிந்து சென்று மீளும்பொழுது ஓயாமல் தலைவியைப் பற்றியே நினந்துகொண்டு வருகின்றான்; மீண்டு வரும் பொழுது குதிரைகள் பூட்டிய தேரில் வருகின்றான். தேரோட்டுபவனும் தலைவனுடைய மன நிலையை நன்கு அறிந்து, மிகவும் வேகமாகத்தான் தேரைச் செலுத்துகிறான். என்றாலும் என்ன! தலைவ னுடைய மனம் செல்லுகின்ற வேகத்துடன் ஒப்பிட்டால், வேகமாகச் செல்கின்ற குதிரைகள்கூட ஓடாமல் மெள்ளச் செல்வது போலக் காட்சியளிக்கின்றன அவனுக்கு. எனவே, பாகனை நோக்கிப் பேசுகிறான் தலைவன்; "நம்முடன் வருகின்ற வீரர் விரைந்து வருதலாலே மிகவும் வருந்தி யுள்ளனர். அவர்கள் இடையிற் கட்டிய கச்சையை அவிழ்த்து விட்டுக் கொண்டு மெள்ள இடை இடையே தங்கி வருவார்களாக. இதுவரை பயன்படுத்தாமல் வைத்திருந்த தாற்று முள்ளாலே குதிரையைக் குத்தியாயி னும் விரைவில் செலுத்துக!" என்கிறான் சென்ற வினை முடித்து மீளும் தலைவன்.

 

'விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர்

அரைச்செறி கச்சை யாப்பழித்து அசைஇ

வேண்டமர் நடையர் மென்மெல வருக

தீண்டா வைமுள் தீண்டி நாம்செலற்கு

ஏமதி வலவ! தேரே' (நற்றிணை-21)

 

(விரைப்பரி-விரைந்து செல்லல்; வீங்கு செலல்-மிக்க செலவினையுடைய; இளையர்-வீரர்; அரைச்செறி கச்சை- இடுப்பிற் கட்டிய கச்சு; யாப்பு-கட்டு; வைமுள்- கூர்மையான தாற்றுக் கோல்; ஏமதி-செலுத்துக.)

 

தலைவியை நினைத்துக்கொண்டு தேரை விரைவாகச் செலுத்தக் கட்டளை இடுகின்ற காலத்திலும் தலைவன் தன் உயர்ந்த பண்பாட்டிலிருந்து நீங்கவில்லை. திடீரென்று தலைவனுடைய தேர் வேகமாகப் போகத் தொடங்கினால் உடன் வருகின்ற வீரர்கள் ஓடும்படி நேரிடுமன்றோ? அவர் கள் அவ்வாறு ஓடிப் பின் தொடர வேண்டிய இன்றியமை யாமை போர்க்காலத்தில் உண்டு. ஆனால், வேளை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்களை ஓடவைப்பது முறையன்று. எனவே, தலைவன் அவர்கள் வேண்டுமளவு தங்கி இளைப்பரிவிட்டுப் பின்னர் வரட்டும் என்கிறான்.

பழந்தமிழனுடைய பண்பாட்டைப் பார்க்க இது ஒரு தக்க வாய்ப்பாகும். சாதாரண நேரங்களில் மிக்க பண் பாட்டுடன் நடந்துகொள்பவர்கள்கூட, மனத்தில் ஒரு கவலை புகுந்துகொண்டால், பண்பாட்டை இழந்துவிடுவர். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடின்றி நடந்து கொள்வர். இங்குத் தலைவனுடைய நினைவெல்லாம் தலைவியிடம் சென்றுவிட்டது. அவன் தேரை விரைவாகச் செலுத்தவேண்டும் என்று கட்டளை இடுகிறான். ஆனால், அந்நிலையிலும் அத்தலைவன் உடன்வருபவர்களை மறந்து விடவில்லை. அவர்கள் வேண்டுமானால் சிறிது நேரம் தங்கி இளைப்பாறிவிட்டு வரலாம் என்று கட்டளை இடுவானே யாகில், அவனுடைய பரந்த பண்பாட்டை அரிய வேறு சான்றும் வேண்டுமா?

 

தங்கள் காரியம் நடைபெற வேண்டுமானால் பிறருக்கு எத்துணைத் துயரம் அதனால் ஏற்படும் என்பதைப் பற்றிக் கவலைப்படாத பெரிய மனிதர்களை நாம் அன்றாடம் கண்டுகொண்டிருக்கிறோம். 'இதற்கெல் லாம் நாம் கவலைப்பட முடியுமா சார்! என்று இப்பெரிய மனிதர்கள் வாய் கூசமால் பேசுவதையும் கேட்கலாம். ஆனால், தான் விரைவாகச் செல்லவேண்டிய வேளையில் தலைவன் கட்டளையைக் காணுங்கள்! 'தீண்டா வைமுள் தீண்டி..ஏமதி' என்று கட்டளை இடுகிறான். தாற்றுக் காம்புக்கு அடைமொழி 'தீண்டா' என்பதாகும். குதிரை ஓட்டுபவர்கள் 'சவுக்கு' வைத்திருப்பது முறைதான். ஆனால், அதனை ஓயாமால் பயன்படுத்தும் சில மக்களை யும் காண்கிறோம். 'அக்கம்பு கையில் இருப்பதே குதிரை யை அடிக்கத் தானே?' என்று பேசுவார்கள் இவர்கள். ஆனால், பயன்படுத்தாமல் குதிரைக்கு அச்சத்தை உண்டாக்க மட்டுமே வைத்துள்ளான் அக்கம்பை அப் பழந்தமிழன். அதைப் பயன்படுத்து என்று கூறும்பொழுது கூடத் 'தீண்டி' (மெள்ளத் தொட்டு) என்ற சொல்லாலே தான் கூறுகிறான்.

தன்னோடு பலகாலும் பழகுகின்ற குதிரையினிடத்து அவன் கருணை காட்டுகிறான் என்பது மிகுதியும் பாராட்டற்குரிய ஒன்று அன்று. அஃறிணையாகிய குதிரை யினிடத்தும் அவன் கருணையுடையவன் என்பதற்காகவே அவனைப் பாராட்டுகிறோம். ஆளால், அதிகம் பழகியதா லும், அதனால் தான் பயன் பெறுவதாலும் ஒருவேளை அவன் அதனிடத்து அன்பு பாராட்டுகிறானோ என்று நினைக்கத் தேவை இல்லை. அவன் இயல்பாகவே இப் பண்பாடுடையவன் என்பதையும் நாம் அறியப் பாடல் கள் உள்ளன.

ஒருதலைவன் வினை முற்றி மீண்டு வருகிறான். வருகின்ற காலமோ, கார்காலம், வரும் வழியோ, அடர்ந்த காட்டு வழி. கார் காலம் ஆகலின், காடு முழுவதும் பூத்துக் குலுங்குகின்றது. அப்பூக்களினிடத்து வண்டுகள் மொய்க்கின்றன. எவ்வாறு அவை வருகின்றன? இரட்டை யாக, துணையோடு புணர்ந்தவையாய் வருகின்றன. அவ்வாறு வண்டுகள் நிறைந்துள்ள வழியில் தலைவன் தேரில் வருகிறான். தேரில் மணிகள் நிறையக் கட்டி யுள்ளன. தேர் வேகமாக வரும்போது மணிகள் ஒலிக்கு மல்லவா? காட்டில் திடீரென்று இவ்வாறு மணி ஒலி கேட்குமானால், துணையுடன் மகிழ்ந்து தேன் உண்ணும் வண்டுகள் அச்சத்தால் ஓட நேரிடுமே! துணையுடன் மகிழ்ந்திருக்கும் அவை பிரிந்து செல்லத் தான் காரண மாய் இருக்க விரும்பவில்லை அத்தமிழ் மகன். அதற்காக யாது செய்கின்றான்? தன் தேரில் உள்ள மணிகளின் நாவைப் பிடித்துக் கட்டிவிட்டான். தன்னோடு தொடர்புள்ள மக்களிடத்துகூட அனுபுக்காட்டாத இக் காலத் தமிழன் எங்கே, ஏதோ வண்டுகள் மகிழ்ச்சியுடன் இருப்பதற்குத் தான் இடையூறாக இருத்தல் கூடாதென்று மணியின் நாவைக் கட்டும் அக்காலத் தமிழன் எங்கே! அவன் பண்பாட்டின் உச்சியை எட்டிப் பிடித்தவன் என்பதைக் கூறவும் வேண்டுமா?

 

பூத்த பொங்கர் துணையொடு வதிந்த

தாதுஉண் பவவை பேதுறல் அஞ்சி

மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் (அகநானூறு-4)

 

[பொங்கர்-சோலை; தாது உண் பறவை - மகரந்தம் உண்ணும் வண்டு; பேதுறல் - மயக்கமடைதல்.]

 

"வாழ்வின் குறிக்கோளை நன்குணர்ந்த இத் தலைவனுக்கு ஏற்ற தலைவியே வீட்டில் உறைகின்றாள். அவளும் ஏதோ வாழ்கின்றோம் என்று கருதி வாழாமல், ஓர் உயரிய குறிக்கோளுடனேதான் வாழ்கின்றாள், தலைவன் பிரிந்திருக்கின்ற காலத்து அவள் கடமைகளைச் செவ்வனே செய்து முடிப்பினும் மனம் முழுவதையும் அவன்பாற் செலுத்தி வாழ்கின்றாள். இல்லறம் நடத்தத் தொடங்கிய அன்றிலிருந்தே விருந்தோம்பலைத் தன் தலையாய கடமையாகக் கொண்டாள் தலைவி.

இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு' (குறள்-81)

 

என்றல்லவோ பொதுமறை கட்டளை இடுகின்றது? எனவே, தலைவி விருந்தோம்பலில் எத்துனை இன்பம் அடைகிறாள் என்பதைத் தலைவன் அவளைப் பிரிந்து வாழும் பொழுது நினைந்து பார்க்கிறான்.

 

அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்

முல்லை சான்ற கற்பின்

மெல்லியல் குறுமகள் (நற்றிணை, 142)

 

[அல்லில் ஆயினும் - இராப்பொழுதில் ஆனாலும்; விருந்தைக் கண்டாள் உவக்கின்றாளாம் தலைவி. அளவு மீறிய விருந்தினர் வரினும் சலியாது உபசரிக்கின்றாள்.]

 

"விருந்து ஒழிவறியாப் பெருந்தண் பந்தர்வருந்தி வருநர் ஓம்பி...." நேரங் கெட்ட நேரத்தில் எங்கேயாவது உணவு விடுதி இல்லாத ஊரில் வேறு வழியில்லாமல் யார் வீட்டிற்காவது நீங்கள் விருந்தினராகச் சென்றதுண்டா? சென்றிருந்தால், இப்பழைய பாடலில் வரும் தலைவியை நினைக்க நேரிடும்.

இத்தகைய ஓர் உயர்ந்த குறிக்கோளுடன் தலைவி வாழ்கிறாளாகலின். அத்தலைவனும் மனக் கவலையின்றி வாழ முடிந்தது; கடமைகளைக் கவனிக்கவும் முடிந்தது. தலைவநிடத்து அவள் என்ன சிறப்பைக் கண்டாள். இத்துணை மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு? இதோ கூறுகிறாள் ஒரு தலைவி.

 

அம்ம வாழி தோழி! காதலர்

நிலம்புடை பெயர்வது ஆயினும் கூறிய

சொல்புடை பெயர்தலோ இலரே." (நற்றிணை, 289)

 

இத்தகைய தலைவனுடன் வாழ்வதாலேதான் அவள் முல்லை சான்ற கற்பின் குறுமகளாக வாழ முடிந்தது.

 

இமய நம்பிக்கை

 

தலைவன் பிரிந்துள்ள காலத்துத் தலைவியின் மன நிலையைச் சித்தரிக்கிறது இப்பாடல்:

 

பலரும் ஒன்று கூடி வாழவேண்டிய கடப்பாடுடையது இக்காலச் சமுதாயம். சாதாரணமாக இருவர் ஒன்று கூடி வாழத் தொடங்கினாலே கருத்து வேறுபாடுகள் தோன்றி விடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் ஒழிய, அவ்வாழ்வு சிறப்பதில்லை. எப்பொழுது ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வார்? அன்புள்ள பொழுதுதான் என்று கூறத் தேவை இல்லை. ஒருவர்மேல் கொண்ட அன்பு காரணமாகத்தானே அவர் செய்தது நாம் விரும்பாததாக இருப்பினும், விட்டுக்கொடுக்கின்றோம்? இவ் அன்பு எவ்வாறு தோன்றுகிறது? இவ்வினாவிற்கு விடை அளிக்க ஒருவனாலேதான் முடியும். அவனே அனைத்தையும் ஒரு காரணங் கருதிப் படைக்கும் இறைவன். அவனை அல்லாத பிறர் அன்பு செய்யலாம்; அன்பைப் பெறலாம். ஆனால், ஏன் அன்புண்டாகிறது என்ற வினாவிற்கு விடை கூறுதல் இயலாது.

அன்புடையார்மாட்டு இயல்பாகவே நமபிக்கையும் உண்டாகிறது. இந்நம்பிக்கை இல்லையாயின், அடிப்படை அன்பு விரைவில் ஆட்டங்கண்டு விடும். பல சந்தருப்பங் களில் அன்புடையார்மாட்டுச் சிலர் கொண்டிருக்கும் நம்பிக்கை நமக்கு வியப்பை உண்டாக்கும். ஏதோ ஒரு செயல் நடைபெற்றது. நாம் அனைவரும் அது நடை பெற்றதை நேரே கண்டிருக்கிறோம். ஆனால், அதனைக் கண்ட நாம் செயலில் ஈடுபட்டவர்களிடத்து அன்பு கொள்ளவில்லை. எனவே, செயலைச் செயலாகவே காண் கிறோம். தவிர, அதற்கு வேறு பொருள் கற்பிப்பதுமில்லை; கற்பிக்க நமக்குத் தோன்றுவதுமில்லை. ஆனால், அந் நிகழ்ச்சியைப் பற்றி அவர்களிடத்து அன்புடையார் மாட்டுக் கூறிப் பாருங்கள். அவர்கள் நம்ப மறுத்து விடுவார்கள். நிகழ்ச்சியின் மெய்ம்மையை நீங்கள் உறுதிப் படுத்திக் காட்டினாலும், அவர்கள் அதற்கு வேறு ஒரு பொருள் கூறுவார்கள். இது உலகியற்கை. அன்புடையார் மாட்டும் அவர்கள் செய்யும் செயலினிடத்தும் நம்பிக்கை இருப்பது உலகியற்கை; மனித இயல்லபுங்கூடவாம்.

ஒரு நல்ல தலைவனும் தலைவியும் கூடி இன்பமாக இல்லறம் நடத்துகின்றனர். ஆனால், எத்துணை இன்பமாக இல்லறம் நடத்தினாலும் வெறும் பானை உலையில் ஏற முடியாது! எனவே பல்வேறு பொறுப்புகளை மேற் கொண்ட தலைவனுக்குப் பொருள் தேட வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. என் செய்வான் பாவம்! அன்பே வடிவான அருமைத் தலைவியை விட்டுப் போகவும் மனம் வரவில்லை. அழைத்துக்கொண்டு செல்லலாம் என்றால் காட்டு வழியை நினைக்கையி லேயே அச்சமாக இருக்கிறது. ஆனால், கடமை வாயிற் படியில் நின்று அவனை அழைக்கிறது. பல நாள் தலைவன் ஆய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். காதலுக்கும் கடமைக்கும் இடையே நடந்த அப்போராட்டத் தில் கடமை வெற்றி பெற்று விட்டது.

தலைவன் பொருள்தேடப் புறப்பட்டான். தலைவியும் அவன் போராட்டத்தை அறிந்து கொண்டாளாதலின் மேலும் தடை கூறி அவனுடைய வருத்தத்தை மிகுதிப் படுத்தாமல், வழி அனுப்ப முனைந்துவிட்டாள். ஆனால், அவளுடைய மனத்தின் அடித்தளத்தில் தோன்றிய ஒரு பரபரப்பினால். அவனை எவ்வாறாயினும் கேட்டுவிட வேண்டும் என்று பலநாளாகச் சிந்தித்தாள். பல சந்தருப்பங் களில் கேட்கவும் முயன்றாள். ஆனால் அக்கேள்வி வாயி லிருந்து வெளி வந்தால்தானே? என்ன செய்வது! 'அவன் எப்பழுது மீள்வான்?" இதுதான் அவள் கேட்க விரும்பிய வினா. ஆனால், விட்டுப்பிரிவது பற்றிப் பெரும் போராட்டத்தைஅவள் நடத்திக்கொண்டிருக்கும்போது 'எப்பொழுது வருவீர்கள்' என்று கேட்பது எவ்வளவு தவறானது? எனவே, 'இன்று கேட்கலாம்; நாளை கேட்கலாம்' என்று கருதிக் கொண்டிருந்தாள்.

இதோ நாளுங்குறித்து இன்று புறப்படுகிறான் தலைவன். இச்சந்தருப்பத்தில் எவ்வாறு கேட்பது? நல்ல வேளை! அவனே வாய் திறந்து அவள் கேளாமல் கேட்ட வினாவிற்கு விடை கூறிவிட்டான். எப்பழுது மீளப் போகிறானோ என்பது பற்றித்தானே அவள் கேட்க விரும்பினாள்? இதோ அவனே அவளைப் பார்த்துக் கூறுகிறான்; 'தலைவி, நீ அஞ்ச வேண்டா. வருகிற கார் காலம் தொடங்கியவுடன் யான் மீண்டு விடுவேன்!' கார் காலம் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலம் என்பதை அவன் அறியானா? எனவே, உறுதியாக அவன் கூறினான். ஒரு வேளை அவள் மனம் அதிக வருத்தம் அடையாமல் இருக்கட்டும் என்ற கருத்தினாலேதான் கூறினானா? யார் கண்டார்கள்? அப்படியுங்கூட இருக்கலாம்! போனவிடத்தில் அவன் விரும்பிய பொழுது திரும்பி வர அங்கு என்ன, பொருள் கொட்டியா கிடக் கிறது? அள்ளிக்கொண்டு வேண்டும் பொழுது திரும்பிவிட முடியுமா? இவற்றை எல்லாம் அவன் ஆய்ந்து பாராமலா கூறி இருப்பான்! தோழிக்குக்கூட அவன் சொற்களில் நம்பிக்கை பிறக்கவில்லை.

ஆனால், இத்தலைவியே ஒரு விதமான பெண்! தலைவனிடத்து எத்துணைக் காதல் கொண்டிருக்கிறாளோ, அத்துணை நம்பிக்கையும் வைத்திருக்கிறாள். எனவே அவன் மீண்டு வருகிறேன் என்று கூறிய கார்ப்பருவத்தை அப்படியே ஆழமாக மனத்தில் பதித்துக்கொண்டாள். அவன் சொற்களில் யாதோர் ஐயமும் தோன்றவில்லை இவளுக்கு. இது இயலுமோ என்ற வினாவும் இவள் உள்ளத்தில் தோன்றவில்லை! அப்படியானால், இவள் என்ன, அறிவில்லாதவளா? யாரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய இந்த எளிய வினாக்கள்கூட இவள் மனத்தில் தோன்றாமைக்குக் காரணம் யாது? தோழிக்குப் புரியும் வினாக்கள், அவளினும் மேம்பட்ட தலைவிக்கு விளங்காவா? நன்றாய் விளங்கியிருக்கும். ஆனால் இவளுடைய விளக்கத்தை மற்றொன்று முன்னின்று மறைத்து விட்டது. அதுவே இவள் அவன்மேற் கொண்ட பெருநம்பிக்கை. அவன் கூறினான்; இவள் அதனை ஏற்றுக் கொண்டாள். இதனை யார் மறுக்கமுடயும்? பிறர் கூறிய சொற்களானால், இவளும் அவற்றை ஆய்ந்து பார்த்துப் பொய்ம்மை மெய்ம்மை ஆராய்ச்சியில் ஈடுபடுவாள். ஆனால், இப்பொழுது பேசியவன் யார்? இவளுடைய தலைவன் அல்லனோ! அவனா இவளை ஏமாற்றுவான்? அவனும் இவளும் வேறு அல்லரே! அப்படி இருக்க, அவன் சொற்களில் இவள் ஐயங்கொள்ளக் காரணம் இல்லை யன்றோ? அவனுடைய சொற்களில் பொய் தோன்றுமாஃ இதென்ன வேடிக்கை! சந்திரனில் நெருப்புப் பிறக்குமா? என்றாவது திங்களில் தீத் தோன்றினால், அன்றுதான் அவனுடைய சொற்களில் பொய் தோன்றும்.

 

'குன்றகல் நன்னாடன் வாய்மையில் பொய்தோன்றின்

திங்களுள் தீத்தோன்றி அற்று' (குறிஞ்சிக்கலி-5)

 

இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் தலைவி தலைவனுடைய சொற்களில். எனவே, இவள் நம்பிக்கை, இவள் அதிகம் வருந்தாமல் இருக்க துணை செய்கின்ற தன்றோ?

நாட்கள் ஓடிமறைகின்றன. வீட்டில் உள்ள சுவர்களில் (அழகான 'காலண்டர்கள்' இல்லாத காலம்) தலைவன் சென்றபிறகு வந்து போன நாட்களைக் கோடிட்டு வைத்தாள் தலைவி; சில நாட்களில் நின்று அக்கோடு களைப் பார்த்துப் பெருமூச்செறிவாள். சென்னைப் பட்டினம் போன்ற நகரங்களில் - அல்ல நகரங்களில்- பஸ்ஸை எதிர்பார்த்து நிற்பவர்கள் 'கியூ' வரிசை நீள்வது போலத் தலைவி கிழித்த கோடுகள் நீண்டன. ஆனாலும் தலைவன் வந்த பாடில்லை. தலைவிக்கு வருத்தம் மிகுந்ததே தவிர, நம்பிக்கை தளரவில்லை. இக்காலம் போலக் காலண்டர்கள் இருப்பதனால், இன்ன நாளில் வருவேன் என்று அவனுங் கூற முடியும்; இவளும் அந்த நாளை எதிர்பார்க்க முடியும். ஆனால், அந்நாட்களில் அவ்வாறில்லை. எனவே, அவனும் கார் காலத்தில் வருகிறேன் என்று கூறினான். கார் காலம் (மழைக் காலம்) என்று தொடங்கும்? மழை பெய்யத் தொடங்கினால் கார் காலம் என்று கூறிவிடமுடியுமா? அன்றி, ஐப்பசி தொடங்கி விட்டது. எனவே, இது கார் காலம் என்றுதான் கூறிவிட முடியுமா? இரண்டுஞ் சேர வேண்டும். அப்பொழுது கூட உறுதியாக இது கார் காலம் என்று கூற முடியாதன்றோ?

தலைவன் பிரிந்து சென்று பல நாட்களாகிவிட்டன. மழை தொடங்கிவிட்டது. "மழைக் காலத்தில் பூக்கும் கொன்றை, பிடவம் முதலியன பூக்கத் தொடங்கிவிட்டன. தலைவி மனவருத்தம் அடையத் தொடங்கிவிட்டாள். அவள் வருத்தத்தைக் கண்ட தோழியின் பாடு தரும சங்கடமாகி விட்டது; என்ன செய்தால் தலைவியின் துயரம் ஆறும்? தலைவனைக் கொண்டு வந்து நிறுத்தி னால், தலைவி வருத்தம் தீர்வாள். ஆனால், அது நடக்கக் கூடிய செயல் அன்றே! தோழி நன்கு ஆய்ந்து ஒரு முடிவுக்கு வந்தாள். தலைவன் வரவில்லையே என்ற வருத்தத்தைக் காட்டிலும் தலைவிக்குக் கார் காலம் வந்துவிட்டதே என்ற வருத்தம் மிகுதி. ஆனாலும், இவ்வளவு துயரத்தின் இடையிலும் தலைவன் சொல் தவற மாட்டான் என்ற நம்பிக்கை மட்டும் இவளிடம் இருக்கிறது. இந்த நம்பிக்கையை நன்கறிந்த தோழி இதன் மூலமே தலைவிக்கு ஆறுதல் அளிக்க முடிவு செய்தாள். எவ்வாறு ஆறுதல் அளிப்பது?

 

'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.' (குறள்-948)

 

என்றார் பொதுமறையாசிரியர். தலைவியின் நோய் யாது? தலைவன் இன்னும் வரவில்லையே என்ற வருத்தந்தான். 'இன்னும்' என்பதுதானே நோயின் முதல்? அதாவது அவன் கூறிச் சென்ற கார்காலம் வந்தும் அவன் வரவில்லையே என்ற வருத்தம். இது கார்காலம் அன்று என்று நிரூபித்து விட்டால், தலைவியின் துயரத்தின் அடிப்படை நீங்கிவிடும். நல்ல கார் காலத்தை எவ்வாறு, 'இது கார்காலம் அன்று' என்று கூற முடியும்? சாதாரண மானவர்களை இது கார் அன்று என்று கூறி ஏமாற்ற முடியாது.

ஆனால், தலைவியை ஏமாற்றிவிடலாம் எனத் தோழி நினைக்கிறாள். இது எவ்வாறு முடியும் என்று நினைக்கத் தோன்றுகிறதா? நன்றாக முடியும். மனித மனத்தின் கூறுபாட்டை நன்கு அறிந்தவர்கட்கு. ஒரு மிகுதியும் நோய் வாய்ப்பட்டிருப்பதைக் காணச் செல்கிறோம். நற் பேறின்மையின் நாம் சென்ற நேரத்தில் அவர் இறந்து படுதலும் கூடும். நோயாளி இறந்துவிட்டதை நாம் அறிவோம். ஆனால், நோயாளியின் தாயோ, அன்றி மனைவியோ, இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தன்னால் அன்பு செய்யப்பட்ட ஒருவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது இந்தப் பகுத்தறி வுடைய மனித மனம்! உயிர் பிரிந்துவிட்ட நேரத்திற்கூடப் பெரிய மருத்துவர் ஒருவரை அழைத்து வந்து காட்ட முற்படுவர் எத்துணைப்பேர்! ஏன்? அவர்களுடைய அன்பின் அடிப்படையில் பிறந்த நம்பிக்கை அத்தகையது! ஆதலாலேதான், இறப்பாகிய நிகழ்ச்சியை - கண்ணெதிரே காணும் நிகழ்ச்சியை - நம்ப மறுத்து, 'எவ்வாறாயினும் இந்த மருந்து உட்செல்லுமா!' என்று உயிர் பிரிந்து விட்டவர் வாயில் மருந்தை ஊற்றுகின்றார்கள்!

 

மனித மனம் இத்தகைய விசித்திரம் நிறைந்த ஒன்று. இதனை அடிப்படையிற் கொண்டே தோழி தலைவியின் வருத்தத்தைத் தணிக்க, அன்றேல், ஓரளவு குறைக்க முற்படுகிறாள். தலைவி கண் எதிரே மழை பெய்கிறது; மயில் ஆடுகிறது; கொன்றை பூக்கின்றது. ஆனால், எப்பொழுது மழை பெய்தாலும் இவை நிகழ்கின்றனவா? இல்லையே! கோடை மழை பெய்யும்பொழுது மயிலின் ஆட்டமும், கொன்றை பூத்தலும் நிகழ்கின்றனவா? இல்லையே! ஆனாலும் என்ன? சாதாரண மன நிலை யுடையவர் மழை பெய்தல் முதலியவை தனி நிகழ்ச்சிக ளாயினும், ஒன்றுடன் ஒன்றைத் தக்க முறையில் தொடர்பு படுத்திக் காண்பர். ஆனால், மனம் மாறுபட்டு அல்லது கலங்கியிருப்பவர்க்கு இத்தொடர்பு எங்கே விளங்கப் போகிறது! தலைவி மனம் கலங்கியிருக்கிறாள்.

 

அவளுடைய கலக்கத்திற்குக் காரணம் யாது? தலைவன் கார்காலம் தொடங்கியவுடன் வந்துவிடுகிறேன் என்று கூறிப் போனான். இதோ கார்காலம் தொடங்கி விட்டது போலக் காணப்படுகிறது. ஆனால் தலைவன் வந்தபாடில்லை. தலைவன் வாராமையின், இது கார்காலம் அன்று என்று கூறிவிடலாமா? அல்லது இது கார்காலந் தான் எனினும், அவன் வரவில்லை என்று கூறிவிட லாமா? இதுவே தலைவியின் கலக்கம். இவ்விரண்டினுள் ஏதாவதொன்றுதான் உண்மையாக இருத்தல் கூடும். எது உண்மை என்று அறிய முடியாமல் இவள் வருந்தும் பொழுது தோழி இவளுடைய உதவிக்கு வருகிறாள். எவ்வாறு? 'தலைவன் வரவில்லை என்று கவலையுறாதே! இது கார்காலம் அன்று' என்று கூறுகிறாள் தோழி. கண்ணெதிரே காண்பதை இல்லை என்று எவ்வாறு கூறுவது என்று நினைக்கிறீர்களா? இதோ தோழி கூறுகிறாள்:

'மழை பெய்கிறதே இந்த மேகம் என்று நினைக் கிறாயா? தலைவி, கலங்காதே! அறிவில்லாதது இந்த மேகம்! மறதியினால் நீரை உண்டாலும், உண்டதன் பயன் இல்லாமற் போய்விடுமோ? நெருப்பில் மறந்து கையை வைத்துவிட்டால் சுடாமல் விடுமா? நீரை உண்ட உடனே மேகம் சூல் கொண்டுவிட்டது. சூலின் முடிவு யாது? மழை யாகப் பெய்துதானே ஆகவேண்டும்? வேறு வழி இன்மை யால் மழையைப் பெய்துவிட்டது. இந்த மேகம் செய்த முட்டாள் செயலினால் எத்தனைப் பொருள்கள் அந்த முட்டாள் பட்டத்தை ஏற்றுக் கொள்கின்றன? மழை பெய்தவுடன் (தவறுதலாகத்தான்) அஃறிணைப் பொருள்க ளாகிய பிடவு (முல்லை) காந்தள், கொன்றை முதலியன பூத்து விட்டன. அவை அறிவுடைய பொருள்களாயின், இது கார்காலமன்று என்று அறிந்திருக்கும். பாவம்! அஃறிணைப் பொருள்களாதலின், கார்காலம் என நம்பிப் பூத்துவிட்டன. அவைகளின்மேல் தவறு இல்லை. எல்லாம் இந்த முட்டாள் மேகம் மறதியால் செய்த வேலையாகும். நீயும் (பகுத்தறிவுடைய நீயும்) இது கார்காலம் என நம்பிக் கொண்டு, 'செல்லத் தொலையாததும் நீரில்லாமல் வரண்டு போனதும் ஆன நீண்ட வழியினிடத்து வேட்டியை விரித்தது' போன்ற வெயில் வீசுகின்ற கொடுமையால் காண்பார் நெஞ்சு நடுங்கும் கொடிய காட்டின்கண் சென்ற காதலர் 'வருகிறேன்' என்று கூறிச் சென்ற பருவம் இதுதானே என்று கேட்கிறாய். இது அன்று அப்பருவம்."

 

இந்த முறையில் தோழி பேசுவதாக அமைந்துள்ளது பழந்தமிழ்ப் பாடல்களுள் ஒன்று. ஆய்ந்து நோக்கும் பொழுது மனித மனத்தின் கூறுபாட்டை 2000 ஆண்டு கட்கு முன்னர் இருந்த தமிழர் எவ்வாறு நுணுக்கமாக அறிந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறதன்றோ? இதோ பாடல்!

 

நீர் அற வறந்த நிரம்பா நீள் இடைத்

துகில்விரித்து அன்ன வெயில்அவிர் உருப்பின்

அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம இறந்தோர்

தாம்வரத் தெளிந்த பருவம் காண்வர

இதுவோ? என்றிசின் மடந்த! மதியின்று

மறந்துகடல் முகந்த கமஞ்சூல் மாமழை

பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்

காரென்று அயர்த்த உள்ளமொடு தேர்வுஇல

பிடவுங் கொன்றையும் கோடலும்

மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. (நற்றிணை-9)

 

(நிரம்பா - செல்லத் தொலையாத; உருப்பின் - வெப்பத்தை யுடைய; பனிக்கும் - நடுக்கத்தைச் செய்யும்; வரத் தெளித்த - வருவதாக உறுதி கூறிய; மதியின்று - அறிவின்றி; இறுத்த - பெய்த; வண்பெயல் - வளப்பம் பொருந்திய மேகம்; அயர்த்த - சந்தேகித்த; கோடல் - காந்தள் பூ; மடவ - அறிவற்றவை)

 

பெய்கின்ற மழையையும், பூக்கின்ற கொன்றை, காந்தள், முல்லை முதலியவற்றையும் மறுத்து, தலைவன் சொல் தவறமாட்டான் என்று தலைவி கொண்டிருக்கும் இமயமலையை ஒத்த நம்பிக்கை வாழ்வதாக! பெண்டிர் இத்துணை நம்பிக்கை கொண்டிருந்தமையின், அற்றை நாள் சமுதாயம் வாழ்ந்தது. இன்றும் நாம் தமிழரெனத் தலை தூக்கித் திரிய இது வாய்ப்பும் வழியும் வகுத்தது.

 

நெய்தல் திணை

 

நெய்தல் திணை கடலிலும் கடல் சார்ந்த இடத்திலும் நடைபெறுவது. மாலைக் காலம் இதற்குரிய காலம் என்பர்.

தலைவன் பிரிவை ஆற்றாளாகிய தலைவி வாய் விட்டுப் புலம்புவதை அறிவிக்கும் நெய்தல் பாடல்கள். இக்கருத்து இல்லாமல் கடலும், கடலைச்சார்ந்த பொருள்களும் பேசப்படுவதனாலும் நெய்தல் என்ற பெயர் வருதலும் உண்டு.

 

தலைவியின் உயர்ந்த பண்பாட்டை விளக்குவது இப் பாடல்;

 

புன்னை மரத் தங்கை

 

இவ்வுலகம் தோன்றிய நாளிலிருந்தே இதில் காணப் பெறும் பொருள்கள் காண்பார்க்குப் புதுமையை நல்கின. புல் பூண்டில் தொடங்கி, மனிதனில் முடிவு பெறும் பல்வேறு உயிர்த் தொகுதிகள் இவ்வுலகில் உள்ளன. சிலவற்றை உயிருடைய பொருள்கள் என்று கண்டு கொள்ளக்கூட மேல்நாடுகட்குப் பத்தொன்பது நூற்றாண்டு கள் ஆயின. 'செடி கொடிகட்கும் உயிர் உண்டு, அவை களுக்கு உணர்ச்சி கூட உண்டு,' என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டக்கூட இந்நாட்டு அறிவியல்துறை வல்லுன ரான ஸர். ஜே.ஸி.போஸ் அவர்களாலேதான் இயன்றது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போஸ் அவர்கள் இவ்வுண்மையைப் புற உலகிற்கு இயந்திர சாதனத்தின் மூலம் மெய்ப்பித்துக் காட்டினார் என்பது போற்றத்தக்கது. ஆனால், இந்நாட்டிற்கூட அப்பொழுதுதான் இவ்வுண்மை காணப்பட்டது போலும் என்று நினைந்துவிட வேண்டா. வேத காலத்திற்கூட வடநாட்டாரும், தென்திசையில் வாழும் தமிழரும் இவ்வுண்மையை அறிந்திருந்தனர். தாவரங்கட்கும் உயிர் உண்டு என்ற உண்மையை அறிந்ததோடு நிறுத்தி விட்டனர் இற்றை நாள் அறிவியல் நூலார். ஆனால், பழங்காலத்தில் நம் நாட்டில் வாழ்ந்த பெரியோர் இவ்வுண்மையை அறிந்ததோடு நில்லாமல், இன்னும் ஒரு படி மேலே சென்று, இத்தாவர உயிர்கட்கும் நமக்கும் உள்ள தொடர்பைக்கூட அறிந்தனர்; தாவர உயிர்களுடன் உறவு கொண்டாடவும் தொடங்கினர்.

மிகப் பழைய நூலாகிய 'தொல்காப்பியம்' தமிழ் மொழியினுடைய இலக்கணத்தை அறிவிக்கும் நூல். அது மொழி இலக்கணத்தை மட்டும் அறிவிப்பதுடன் நின்று விடாமல், அம்மொழி பேசும் தமிழர்களுடைய வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தது. இப்பெருமை- உலகப் பல்வேறு மொழி இலக்கணங்களுள்ளும் தமிழ் மொழி இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் தாவரங் கட்கும் உயிர் உண்டு என்ற உண்மை பேசப்படுவது- வியப்பே அல்லவா! 'ஒன்றறிவதுவே உற்றறிவதுவே' என்பது சூத்திரம். இது நன்கு விளங்குதற்பொருட்டு ஓரறிவு உடைய பொருள்கள்யாவை எனக் கூறத் தொடங்கி,

 

"புல்லும் மரனும் ஓர்அறி வினவே;

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே."

(தொல்; பொரு-மரபியல் 27-28)

 

என்றும் பேசுகிறது தொல்காப்பியப் பொருளதிகாரம், மரபியல் சூத்திரங்களில். இதன் பொருளும் 'புல்லும் மரமும் ஓர் அறிவுடைய; பிறவும் அக்கிளையும் பிறப்பும் உள்ளன,' என்பதாம். புல்லுடனும் மரத்துடனும் கிளையாக உள்ள பிற உயிர்கள் புதர், கொடி என்பன. அதைவிடச் சிறப்பான உண்மை இரண்டாம் அடியிற் பேசப்படுகிறது. மக்களானும், விலங்கானும் பெறப்பட்ட குழந்தைகளும் தொடக்கத்தில் ஓர் அறிவினவாகவே உள்ளன என்கிறார் தொல்காப்பியனார். இவற்றால் தாவரங்களை உயிர்ப் பொருளாகவும் மக்களுடன் தொடர்புடையனவாகவும் கொள்கிறார் என்பதும் நன்கு விளங்கும். இக்கருத்தை மேலும் வலியுறுத்தவே போலும் இத்தாவரங்களின் இளங்கன்றுகட்குத் தொல்காப்பியனார் பெயரிடு முறை அமைந்துள்ளது!

 

'பிள்ளை, குழவி, கன்றே, போத்துஎனக்

கொள்ளவும் அமையும் ஓர் அறிவு உயிர்க்கே.'

(தொல்; பொரு. மரபியல்-24)

 

இன்றுங்கூட இந்நாட்டில் 'தென்னம்பிள்ளை' என்று கூறும் மரபு உண்டு. நாம் பெற்றெடுக்கும் பிள்ளைகளையும் 'பிள்ளை' என்ற சொல்லால் குறிப்பிட்டுத் தென்னை மரத்தின் கன்றையும் அதே பிள்ளை என்ற சொல்லால் குறிப்பிடுவதனால், இரண்டையும் ஒன்றாகவே கருதினர் இத்தமிழர் என்பதற்குச் சான்றும் வேறு வேண்டுமா!

இனி இக்கருத்துச் சங்கப் பாடல் ஒன்றில் மிகவும் விளக்கமாகப் பேசப்படுவதைக் காணலாம். ஒரு செல்வருடைய மகள் தன் தோழிகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். பெண்களுடைய விளையாட்டுக்கள் ஆண்களுடைய விளையாட்டுக்கள் போல இராமல், அமைதியும் சாந்தமும் உடையனவாகவே இருக்கும். அப் பெண் மகளிர் விளையாடும் ஆடல்களில் ஒரு வகை கும்பலாகக் குவிந்த மண்ணில் ஒருத்தி ஏதாவது ஒரு பொருளை ஒளித்து வைப்பதும், ஏனையோர் அது உள்ள இடத்தைத் தேடாமல் உடனே கண்டு பிடிப்பது மாகும். இன்றுங்கூட சில இடங்களில் குழந்தைகள் இவ்விளையாட்டை ஆடுவதுண்டு. 'கிச்சுக்கிச்சுத் தம்பலம்' என்ற பெயருடன் இது ஆடப்பெறும். இத்தகைய விளையாட்டில் ஈடுபட்டிருந்த அச்செல்வரின் மகள், புன்னை விதையை உள்ளே ஒளிக்கும் காயாக வைத்து விளையாடினாள். இரவு நேரம் வந்தவுடன் உள்ளே ஒளித்த விதையை எடுக்காமல் அவள் வீட்டுக்குச் சென்று விட்டாள். அன்றிரவு மழை பெய்ய விதை முளைத்து விட்டது. தான் மறந்து விட்டுச் சென்ற புன்னை விதை செடியாக முளைத்தது கண்ட அந்தச் சிறுமி, அதனிடம் தனித்த அன்பு பாராட்டினாள். பாலும் நெய்யும் விட்டு அதை வளர்க்க ஆரம்பித்தாள். செடி நன்கு வளர்வதைக் கண்ட அவளுடைய தாய் மகளுக்கு ஒரு நல்லுரை பகர்ந்தாள். "மகளே, நீ அன்புடன் வளர்க்கும் இந்தப் புன்னைச் செடியை ஒரு செடி என்று மட்டுமே நினைந்து வளர்க்க வேண்டா; உன் உடன் பிறந்த தங்கையாகவே கருதிக் கொள். உன்னைக்காட்டிலும் நல்ல பண்புகள் இதனிடம் நிறைந்துள்ளன. என்றோ நாம் ஒரு நாள் நீர் ஊற்றுகிறோம். அன்றேல், பல சந்தர்ப்பங்களில் நீர் ஊற்றக்கூட மறந்து விடுகிறோம். அவ்வாறு மறந்து விட்டாலும், மரம் நம்மாட்டுப் பகைமை பாராட்டுவ தில்லை; பிற்காலத்தில் பழமும் நிழலும் தருகிறது; அது மட்டும் அன்றி, தன்னையே வெட்டி வீழ்த்தக் கோடாரி யுடன் வருபவனுக்கும் அவன் வெயிலில் வாடாமல் நிழல் தந்து உபசரிக்கிறது. இவை அனைத்தைக் காட்டிலும் மற்றொரு சிறப்பும் மரத்தின்பால் உண்டு. மக்கள் தங்களிடம் உயிரும் பொருளும் உள்ளவரைதான் உதவி செய்வார்கள். எத்துணைப் பெரிய உபகாரியும் இறந்த பிறகு யாருக்கும் பயன்படுவது இல்லை அல்லவா? ஆனால், இந்த மரத்தைப் பார்; மரம் வாழும் பொழுது பழமும் நிழலும் தந்து பயன்படுவதுடன், இறந்து விட்ட பிறகும் எரித்தற்குரிய விறகாய் இருந்து பயன்படுகிறது. எனவே, இம் மரம் நீ வளர்த்த மரம்; உன்னினும் சிறந்த உன் தங்கையாகும்." என்று கூறினாள். தாய் இவ்வாறு கூறியது அச்சிறுமியின் மனத்தில் ஆழப் பதிந்து விட்டது.

சிறுமி வளர்ந்து பெரியவள் ஆகிவிட்டாள் என்றாலும் அவள் மனத்தில் தோன்றிய எண்ணம் மட்டும் மாறவே யில்லை. புன்னை மரத்தைப் பார்க்குந் தோறும் அதைத் தன் தங்கையென்றே கருதிவிட்டாள். சிறுமி தலைவியான நிலையில் இவளுக்கு ஒரு தலைவன் கிடைத்துவிட்டான். தலைவனோடு களவில் ஈடுபட்டாள். அவள் கடற்கரை யில் இருக்கும்போது இந்த நட்பு உண்டாகியிருக்கலாம். கடற்கரையில் மீன் உலர்த்தும் தொழிலில் தலைவி ஈடு பட்டிருக்கலாம். பரந்த கடற்கரையில் காலைப் பொழுதில் பரதவர்கள் கூடி மீன் பிடிக்கக் கட்டு மரங்களுடன் கடலினிற் சென்றுவிட்டால் மாலையிலேதான் மீள்வார் கள். ஆதலிற் பகற்பொழுது முழுவதும் தலைவன் தலைவியைச் சந்திக்க நல்ல வாய்ப்பாய் இருந்தது. தாழம் புதர் நிறைந்துள்ள சோலைகள் மிக்கு இருத்தலின், பிறர் கண்ணில் படாமல் சந்திப்பதற்கு வாய்ப்புகள் இருந்தன போலும்! பல நாட்களாகவே இந்நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தலைவி கடற்கரையில் பார்க்க வேண்டிய அலுவல் முடிந்து விட்டது. அவளைப் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். முன்போலத் தலைவனை அடிக்கடி சந்திக்க முடியவில்லை எனினும், தலைவன் விடுவதாக இல்லை. அவன் மெல்லத் தோழியின் உதவியை நாடினான். தோழி, அவனுடைய வருத்தத்தையும் தலைவியின் துன்பத்தையும் கண்டு ஒருவாறு மனம் இரங்கினாள்; பகல் நேரத்தில் அவன் வந்து போக ஏற்பாடு செய்தாள்; அவன் வந்து தங்களைச் சந்திப்பதற்குரிய ஓர் இடத்தைக் குறிப்பிட்டாள். இதனைப் 'பகற்குறி' என்று இலக்கணநூல் பேசும். அந்த நேரத்தில் தோழி தலைவியும் தானும் வெளியிற்செல்வது போல வீட்டாருக்குப் போக்குக் காட்டிவிட்டுப் புறப்படுவாள்; தான் முன்னரே தலைவனிடம் குறிப்பிட்டுள்ள இடத் திற்குத் தலைவியை அழைத்துக் கொண்டு செல்வாள்.

இம்முறையில் ஒரு நாள் தலைவன் வந்தான். ஒரு புன்னை மரம் நன்கு தழைத்து வளர்ந்திருந்தது. பூரிப்பும் இளமையும் செழித்துக் கொழிக்கும் தன் காதலியைச் சந்திக்க இம்மரநிழல் மிகவும் பொருத்தமுடையது என நினைத்துவிட்டான் அவன். பாவம்! அவனுக்கு இம்மரத் தின் வரலாறு எவ்வாறு தெரிய முடியும்? ஆனால், தோழியும் தலைவியும் இம்மரத்தின் அருகே வரக்கூட நாணினர். ஏன்? வரவே மறுத்துவிட்டனர். தலைவனுக்கு ஒரே வியப்பு உண்டாயிற்று.

அதற்குள் தோழி அவனை நோக்கி, "ஐயனே, இப் பரந்த கடற்கரையில் இன்னும் எத்தனையோ மரங்கள் இருக்கின்றனவே! அவற்றுள் ஒரு மரத்தடிக்குச் சென்று விடுங்கள்," என்று கூறினாள். தலைவனின் வியப்பு இன்னும் அதிகமாகி விட்டது. இவ்வாறு தலைவி மறுப்பதற்குரிய காரணத்தைத் தோழியிடம் கேட்டான். இதோ தோழி பேசுகிறாள்.

'புதிதாக வந்த பாணர்கள் பாடும் மெல்லிய இசைப் பாட்டைப் போல வெண்மையான வலம்புரிச் சங்குகள் ஒலிக்கும் விளங்கிய கடல் நீரை உடைய நெய்தல் நிலத் தலைவரே, யாம் ஒருநாள் விளையாடும் எம்தோழிகளுடன் வெள்ளிய கடற்றுறை மணலில் சென்று விளையாடி இருந்தோம். அப்பொழுது ஒரு புன்னை விதையை மணலுள் புதைத்து விளையாடிவிட்டு வரும் பொழுது அவ்விதையை மறந்துவிட்டோம். மீட்டும் அவ்விடம் சென்று காண்கையில் அப்புன்னை விதை வேர் ஊன்றி முளைத்து நின்றது. அது கண்டு நெய் கலந்த பாலுடன் கூடிய நீரை விட்டு அதனை வளர்த்தோம். எம் அன்னை அதனைக் கண்டு மகிழ்ந்து, "நீங்கள் வளர்த்து வரும் இப் புன்னையானது நும்மினும் சிறந்தது அன்றோ! இது நும்முடன் பிறந்த தங்கையாகும்,' என்று அதன் சிறப்பைக் கூறினாள். எனவே, எம் தங்கையாகிய அதன் எதிரே நாம் சந்திப்பது மிகவும் நாணம் தருவதாய் உளது! அதன் எதிர் நகைத்து விளையாட மிகவும் வெட்கப்படுகிறோம். நீர் எம் தலைவிக்கு அருள் புரிவதாயின் இன்னும் எத்தனையோ மரங்கள் இங்குள்ளன கண்டீர்!"

 

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்த காழ்முளை அகைய

நெய்பொய் தீம்பால் பெய்துஇனிது வளர்ப்ப,

'நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்' என்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே;

அம்ம நாணுதும் நும்மொடு நகையே

விருந்திற் பாணர் விளர்இசை கடுப்ப

வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்

துறைகெழு கொண்க! நீ நல்கின்

நிறைபடு நீழல் பிறவுமார் உளவே. (நற்றிணை-172)

 

'ஆயம் - தோழியர் கூட்டம்; காழ்முளை - முற்றிய விதை முளை; நுவ்வை - உம்முடைய போசரி; விருந்திற்பாணர்- புதிய பாணர்; விளர் இசை - மெல்லிய இசை; வான் கோடு - வெண்மையான சங்கு; நரலும் - ஒலிக்கும்; துறை கெழு கொண்க - கடற்றுறையின் தலைவனே.)

 

புன்னை மரத்தையும் உடன் பிறந்த தங்கையாகக் கருதி, அதன் எதிரிலும் தலைவனுடன் விளையாட மறுத்த தலைவியின் பண்பாடும், புன்னையைத் தங்கை என்று கூறிய தாயின் பண்பாடும் அறிந்து மகிழ்தற்குரியன! இவ்வாறு பிறர் பார்க்கத் தலைவனைச் சந்திப்பது வெட்க மாகிறது என்ற குறிப்பால் அவனை விரைவில் வந்து மணந்து கொள்ளக் கூறுகிறாள் தோழி. ***************

 

சமய சஞ்சீவியாகிய தோழியின் அறிவுத்திறனை விளக்கும் பாடல் இது.

 

எம் ஊரில் தங்கலாமா?

 

நெய்தல் நிலக் கருப்பொருள் என்று கூறத்தக்கவை பனை, புன்னை முதலிய மரங்களும்; நாரை, சுறா முதலிய பறவை விலங்குகளும், மீன் முதலிய உணவுகளும் ஆகும். இந்நிலத்தில் வாழும் மக்கள் "பரதவர்" என்று குறிக்கப் படுவர். தலைவன் 'துறைவன்' என்றும் 'சேர்ப்பன்' என்றும் வழங்கப்படுவான். உரிப் பொருள் என்று கூறத்தக்கது தலைவி தலைவனைப் பிரிந்து ஆற்றாமையால் அரற்றும் நிலைமைதான். பெரும்பாலும் தலைவனும் தலைவியும் குடும்பம் நடாத்துகிற காலத்தில், பொருள் தேடவோ போர் செய்யவோ தலைவன் பிரிந்து சென்றுவிடுவான். ஒரு காலத்தைக் குறிப்பிட்டு அந்த நாளில் வந்து விடுவ தாகக் கூறிப்போனாலும், தவிர்க்க முடியாத பல காரணங்க களால் அந்த நாளில் வர இயலாமல் போவதும் உண்டு, அவ்வாறாயின், தலைவி சில காலம் பொறுமையுடன் இருப்பாள். பின்னும் தலைவன் வரவில்லையாயின், அவள் துயரம் தாங்க மாட்டாமல் வாய்விட்டு அரற்றுதலும் உண்டு. இவ்வாறு அவள் துயரைக் கூறும் பாடல்கள் 'நெய்தல் திணைப் பாடல்கள்' என்பர். இவ்வாறு உள்ள பாடல்கள் 'உரிப் பொருளால் நெய்தல்' என்ற தொகுப்பைச் சேரும். இன்னும் சில சந்தருப்பங்களில் கற்புக் காலம் அல்லாத களவுக் காலத்திலும் இத்தகைய பாடல்கள் தோன்றுவதுண்டு. களவில் தலைவி எவ்வளவு துயரம் அடைந்தாலும் அத்துயரைப் பிறர் அறிய வெளிக் காட்டல் இயலாது. எனவே, அவள் துயரைப் பெரிது படுத்திக் காட்டாமல் பாடல் அதனைக் குறிப்பால் மட்டும் சுட்டுவதுண்டு.

தலைவி துயரைப் பெரிதாக்கிக் காட்டாத பாடல் களை எவ்வாறு நெய்தல் திணை என்று பிரிப்பது?

நெய்தலுக்குரிய கடல், மீன் பிடித்தல், நாரை, சுறா முதலியன பேசப்பட்டாலும், அப்பாடலை நெய்தல் என்றே குறிப்பர். இவ்வாறு முதற்பொருளாலும், கருப் பொருளாலும் நெய்தல் என்ற பெயரைப் பெற்ற பாடல் ஒன்றைக் காண்போம்;

கடலை நம்பி வாழும் வாழ்க்கை இடர் மிகுந்த வாழ்க்கையாகும். காலையில் கடல்மேல் உணவு தேடிச் செல்பவர் மாலையில் தவறாமல் திரும்பி வந்து விடுவர் என்ற உறுதி இல்லை. ஒரு மணி நேரத்தில் கடலில் எத்தகைய வேறுபாடுகள் தோன்றும் என்று கூறவியலாது. எனவே நெய்தல் நிலத்தில் வாழும் மக்கள் இயற்கையிலேயே உடல்உரமும் மனத்திண்மையும் படைத்தவர்களாய் இருப்பார்கள். துன்பம் நேர்கையில் அதற்கு அஞ்சிக் கையற்று விடாமல் அதனை ஆற்றி இருப்பதே மனத் திண்மை என்று கூறப்பெறும். துயரத்தை ஆற்றி இருப்பதால் துயரத்தை அனுபவிக்கவில்லை என்று கூறுதல் தவறாகும்.

நல்ல கடல் துறைக்குத் தலைவன் அவன். கடல் படு செல்வம் அனைத்தும் அவனிடம் நிரம்ப உள்ளன. ஆனால், அவன் மனம் அவற்றால் அமைதியைப் பெற முடியவில்லை. மனத்தில் அமைதியை உண்டாக்கும் காதலியை எதிர்ப்பட்டான் ஒருநாள்; அதுவும் ஒரு கடற் கரையில். கடற்கரை என்று கூறினவுடன் சென்னைக் கடற்கரையையும் ஆங்கு வரும் கூட்டத்தையும் நினைந்து கொண்டு அவதியுற வேண்டா. தலைவன், தலைவியைச் சந்தித்த இடம் அமைதியானதும், மக்கள் நடமாட்டம் அற்றதுமான ஒரு கடற்கரை. கடல் காதலை மிகுதிப் படுத்தும் இயல்புடையது என்பது பழந்தமிழர் கொள்கை 'நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி, நேரம் கழிவதிலும் நினைப்பின்றியே சாலப் பலப்பல நற்பகற் கனவில் தன்னை மறந்த லயம் தன்னில் இருந்தேன்' என்று பாரதியார் பாடியதும் இக்கருத்தை வலியுறுத்தும். கடற் கரையில் தனியே காணப்பட்ட அக்காரிகை, அத் தலைவன் மனத்தைக் கவர்ந்து விட்டாள். பல நாளும் கடற்கரைக்கு வரும் பழக்கம் உடையவன் அவன்; அவளும் அவ்வாறே. ஆனால், ஒருநாள் அவனும் அவளும் ஒருவரை ஒருவர் கூர்ந்து நோக்கினர்; காதல் பிறந்தது; அன்றிலிருந்து அவனும் அவளும் பலவிடங்களில் தனியே சந்தித்தனர்.

அவர்கள் ஒழுக்கம் மெள்ளத் தோழிக்கு எட்டியது. தோழியும் தலைவியைப் போல ஒத்த வயதினள். ஆகலின், தலைவியின் இவ்வாழ்க்கை மாறுபாட்டில் அதிக வியப்படைய- வில்லை. 'நடக்கவேண்டிய ஒன்றுதானே இது' என்று கருதி இருந்துவிட்டாள் போலும்! நாட்கள் பல சென்றன. தலைவன் தலைவியருடைய நட்பு நாளுக்குநாள் பிறைமதி போல வளர்ந்துகொண்டே வந்தது. அந்த அளவில் அது மகிழ்ச்சிக்குரிய செயல்தான். ஆனால் இது எவ்வாறு சென்று முடியப்போகிறதோ என்ற ஐயம் தோழிக்குத் தோன்றிவிட்டது. தலைவன் மிக உயர்ந்தவன். பண்பாடு உடையவன். எனவே அவன் தலைவியைக் கைவிட்டு விட மாட்டான் என்றாலும், எத்துணை நாட்களுக்குத்தான் இவ்வாறு மறைமுகமாகவே அவன் வந்து திரும்புவது! மறைந்து ஒழுகும் களவு ஒழுக்கத்தில் அதிக இன்பத்தைப் பெறுகிறான் தலைவன் என்ற நினைவு தோழிக்கு. தலைவி மட்டும் அதில் மகிழ்ச்சி அடையவில்லை? அடையத்தான் செய்கிறாள் ஆனாலும் அவள் பெண் தானே! பெண் களுக்கே உரிய எத்தனையோ கவலைகள் அவளைப் பிடித்து ஆட்டுகின்றன. என்ன செய்வாள் பாவம் வீட்டில் தாய், அண்ணன்மார், தந்தை என்ற அனைவரும் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் ஒரு புறம்; ஊரில் உள்ள பெண்டிர்தாம் எப்படிப்பட்டவர்! தாம் உண்டு, தம் வேலை உண்டு என்று இருக்கப்படாதா? அதுதான் போகட்டும். இப்பெண்டிர் அனைவரும் பிறக்கும்பொழுதே பாட்டிமார்களாய்ப் பிறந்து விட்டார்களா! ஒவ்வொருத்தி யும் இளமையுடையவளாய் இருந்திருக்க மாட்டாளா! அந்தக் காலத்தில் தான் வாழ்ந்த வாழ்வை ஒவ்வொருத்தி யும் நினைத்துப் பார்க்கமாட்டாளா? வேறு வேலையே இல்லாதவர்கள் போல இப்பெண்கள் ஏன் இப்படித் தலைவியைப் பற்றிப்பேசி அவள் பாவத்தைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்?

அம்மம்ம! ஒருநாளில் எப்பொழுதோ வருகிறான் தலைவன். அவனுடன் அவள் கழிக்கும் சில நாழிகை நேரத்திற்காக அவள் அனுபவிக்கும் தண்டனைதான் எவ்வளவு! அவன் பிரிவால் உண்டாகும் துயரம் ஒரு புறம். அதனைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் சுட்டிக்காட்டி ஏசும் ஊர்ப் பெண்கள் ஒருபுறம். இவை இரண்டின் இடைப்பட்டு அவள் படும்பாடு ஒருபுறம்! இவை எல்லாம் தலைவனுக்கு எங்கே தெரியப் போகின்றன! தலைவியின் நினைவு வந்தவுடன் அவன் புறப்பட்டு விடுகிறான். பகல் என்றும், இரவு என்றும் மழை என்றும், வெயில் என்றும் அவன் பார்ப்பது இல்லை. அவன் வரும் வழியிலேதான் எத்துணை அச்சந் தரும் தொல்லைகள்! 'தன்னிச்சையாகத் திரியும் சிங்கம்; அதன் சத்தத்தால் கலங்கும் யானை' போன்றவை. வரும் வழியிலேதான் எத்தனை ஆறுகள்! அவற்றில் முதலைகள் எத்தனை! நினைக்கும் பொழுதே நெஞ்சு நடுங்குகிறது! இவை அனைத்தையும் கடந்து அவன் வருகிறான் என்று நினைத்தாலே, அவன் வந்த பிறகு பெறும் இன்பம் வேண்டா என்று கூறத் தோன்றுகிறது. அவனோ, இவற்றுள் ஒன்றுக்கும் கவலைப் படுபவனாகவே தெரிய வில்லை. வழியில் வரும் ஏதம், தலைவி படும் துயரம் இவை இரண்டில் ஏதேனும் ஒன்றுக்காவது அவன் அஞ்ச வேண்டுமே! அதுதான் இல்லை. நாட்கள் கழிகின்றன. திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு எழுந்ததாகத் தெரியவில்லை.

நாட்கள் செல்லச் செல்லத் தலைவியின் வருத்தம் எல்லை கடக்கிறது. தோழி ஒருத்திக்குத்தான் தலைவியின் துயரம் எவ்வளவு என்பது தெரியும். தலைவனைக் கண்டு பலபடியாகக் குறிப்பாகத் தோழி பேசிப் பார்த்தாள். அவனுடைய காதில் அச்சொற்கள் ஏறுவனவாகத் தெரிய வில்லை. நயமாகப் பலமுறையும் தம் குறையைச்சொல்லி வருந்துமுகமாகப் பல கூறிப் பார்த்தாள். அவனிடம் நேரே கூறிய முறைகளைவிடப் பலமுறை அவன் காதில் விழும் படியாகவும் கூறினாள். இவ்வாறு அவள் கூறுவதைச் 'சிறைப்புறமாகக் கூறியது' என்று புலவர் கூறுவர். இவ்வாறு மறைமுகமாகப் பலமுறை கூறியும் தலைவன் திருமண ஏற்பாடு ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டமை யின், அத்தோழி ஒருநாள் மாலைப் பொழுதில் தலைவனைக் கண்டு நேரே அவனிடம் பேசத் தொடங்கி விட்டாள்.

பகல் நேரத்தில் தலைவியைச் சந்திக்க வந்தான் தலைவன். அவன் புறப்படுவதற்குள் மாலை முற்றி இருள் கவிய ஆரம்பித்து விட்டது.

"மிகவும் உயர்ந்த ஆகாயத்தில் திரிகின்ற செழுமை யான கதிர்களை உடைய சூரியன் பெரிய மலைப் பக்கத்தில் மறைந்து விட்டான். ஆதலால், கடற்கரையில் யாரும் போக்குவரத்து இல்லை. இறால் மீன்களைத் தின்று விட்டு எழுந்த கரிய கால்களையும் வெண்மை நிறத்தையும் உடைய நாரைகள், உப்புக் குவட்டின் மேலே பறந்து சென்று, கரிய கிளைகளையுடைய புன்னை மரத்தின் கிளைகளில் தம் துணையுடன் தங்கிவிட்டன. தண்டுடன் கூடிய நெய்தல் மலர், மறையும்படியாக நீர் பெருகுகிற கழியில் துணையுடன் கூடிய சுறா மீன்கள் வழங்குகின்றன. இரவிலும் ஒலிக்கின்ற கடலில் பல விளக்குகளை எடுத்துக் கொண்டு எம் சுற்றத்தார் மீன் பிடிக்கச் சென்றுவிட்டார் கள். ஆதலால், அலைகளின் பிசிர் வீசும் கடல் மத்தளம் போல ஒலிக்கிற எம்முடைய ஊரில் இன்றிரவு தங்கி விட்டுப் போனால் யாது குறை ஐயா?"

 

சேய்விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்

மால்வரை மறையத் துறைபுலம் பின்றே;

இறவுஅருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு

வெண்குவட்டு அருஞ்சிறைத் தாஅய்க் கரைய

கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே;

கணைக்கால் மாமலர் கரப்ப மல்குகழித்

துணைச்சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை

எல்இமிழ் பனிக்கடல் மல்குசுடர்க் கொளீஈ

எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்

தங்கின் எவனோ தெய்ய பொங்குபிசிர்

முழவுஇசைப் புணரி எழுதரும்

உடைகடல் படப்பைஎம் உறையின் ஊர்க்கே? (நற்றிணை - 67)

 

[மால் வரை-பெரிய மலை; துறை புலம்பின்றே - கடற்கரையில் ஆள் நடமாட்டம் இல்லை; இறவு - இறால்; வெண்குவட்டு- உப்புக் குவட்டில்; அருஞ்சிறைத்தா அய் - அரிய சிறகை வீசிப்பறந்து; இறை - தங்குதல்; கணைக்கால் - கொழுத்த தண்டு; எல் இமிழ் - இரவு சூழ்ந்த; முழவு - மத்தளம்; உடை கடல் - அலைகள் மேல் எழுந்த வீழ்ந்து உடைகிற கடல்]

 

திருமணம் ஆவதற்கு முன் தலைவியின் வீட்டில் தங்கிச் செல்லலாம் என்று கூறுவது இயலாத காரியம் என்பதைத் தலைவன் அறிய மாட்டானா? தோழிக்கும் அது தெரியாதா? இருவருக்குமே நன்கு தெரியும். ஆனால், ஏன் தோழி இவ்வாறு கூறினாள்? இவ்வாறு கூறுவதன் உட்பொருளை நன்கு அறிந்தாவது தலைவன் மணம் செய்துகொண்டு வீட்டில் தங்கமாட்டானா என்ற எண்ணம்தான்?

கடல்துறையில் யாரும் இல்லை என்றதனால் அவன் மீண்டு போகும்பொழுது கள்வரால் இடைஞ்சல் ஏற்படக் கூடும் என்பதைக் குறிப்பிட்டாள். நாரைகள்கூட மாலைக் காலத்திலே தம் பேடைகளோடு கூட்டில் உறையச் செல்கின்றன என்ற குறிப்பால், 'ஆண் மகனாகிய நீ இன்னும் மணம் செய்துகொண்டு குடும்பம் வைக்காமல் தனிவாழ்க்கையில் களவே சிறப்பென்று கருதி வாழலாமா? என்றும் இடித்துக் கூறினாள். கேவலம் கொல்லுதலையே தொழிலாகக் கொண்ட சுறாகூடத் தன் துணையுடன் வாழ்கிறதென்று எடுத்துக்காட்டுதலில் எவ்வளவு எள்ளல் குறிப்பைப் பெய்துவிடுகிறாள் அத்தோழி. 'எம் சுற்றத்தார்கள் கடலில் மீன் வேட்டைமேல் சென்றுள்ளார்கள்' என்பதால் வீட்டில் ஒருவரும் இல்லையென்பதைக் குறிப்பிட்டு விட்டு, 'நீர் இந்த நேரத்தில் செல்வது கூடத் தகாது' என்பதையும் 'எம் சுற்றத்தார் கடற்கரையில் இருப்பர்' என்னும் குறிப்பால் சுட்டுகிறான்.

 

மருதத் திணை

 

அகத்துறை இலக்கியத்தில் குறைந்த அளவு பாடல் களைப் பெற்றிருப்பது மருதத் திணையேயாம். வயலும் வயல் சார்ந்த இடமும் இதற்கு நிலைக்களம். விடியற்கால நேரம் இதற்குரிய பொழுதாகும்.

 

தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று, தவறான செயல்களில் ஈடுபட்டுவிட்டு, விடியற்காலம் மீள்கிறான். அந்நிலையில் தலைவி அவனுடன் பிணங்கிக் கொள் கிறாள். அவர்கள் ஊடலை (பிணக்கை) அடிப்படையாகக் கொண்டு தோன்றுவன இப்பாடல்கள்.

 

'பெயரன் பிறந்தான்'

 

தவறு செய்த தலைவன் வருந்துகிறதைச் சித்தரிக்கிறது இப்பாடல்.

 

மருதம் என்ற இத்திணையுள் தலைவன் தலைவி யரிடையே தோன்றும் சிறு பிணக்குகள் கூறப்படும். பிணக்குகள் எப்பொழுது தோன்றும்? ஒருவருக்கு விருப்பம் இல்லா ஒரு செயலை மற்றவர் செய்ய நேர்ந்தால்தானே வருத்தம் நேரிடமுடியும்? தலைவன் எது செய்யினும் தலைவிக்கு அது விருப்பத்தைத் தருதலின், குடும்பக் காரியங்களில் பிணக்கு ஏற்பட வழியில்லை. மேலும், தலைவனோ, தலைவியோ, தமக்கென்று தனிப் பட்ட ஒரு செயலையும் செய்வதில்லை யாதலானும், எது செய்யினும் அது குடும்ப நலன் கருதியே செய்யப்படுத லானும், பிணக்குத் தோன்ற வழியில்லை. எனவே, மருதமாகிய ஊடல் தோன்ற ஒரே ஒரு காரணந்தான் எஞ்சியது. தலைவன் தலைவியை ஏமாற்றிய வழியே ஊடல் தோன்றலாயிற்று. தலைவி தனக்கு என்ன கொடுமையைத் தலைவன் இழைத்தாலும் பொறுத்துக் கொள்வாள். ஆனால், அவன் வேறு ஒருத்தியை விரும்பினான் என்று கண்டால் பொறுக்கமாட்டாள். 'வட்டில் சோற்றைப் பங்கிட்டாலும் வாழ்க்கையைப் பங்கிட மாட்டாள்' என்பது இன்றும் தென்னாட்டில் வழங்கும் பழமொழி.

 

இத்துணைச் சிறந்த காதல்மணம் புரிந்துகொண்ட தலைவனா வேறு ஒரு பெண்ணை விரும்பினான்?' என்று கேட்கத் தோன்றுகிறதா? ஆம்! அவனேதான் இவ்வாறு செய்தான். அவன் இவ்வாறு செய்வதற்காகவே பெண் குலத்தின் ஒரு பகுதியைப் பிரித்துப் 'பரத்தையர்' என்று அவர்கட்குப் பட்டமும் சூட்டி, ஊரின் ஒதுக்கில் இடம் கொடுத்து வைத்திருந்தான். அவருள் 'காதற் பரத்தையர், இற்பரத்தையர், சேரிப் பரத்தையர், எனப் பல பிரிவினர் உண்டு.

ஒரு சில ஆடவர் இச்சேரிகட்கும் சென்று வந்தனர் போலும்! ஒரு நாட்டில் வாழும் மனிதர் அனைவரும் சிறந்த பண்புடையவராகவே இருத்தல் வேண்டும் என்று எதிர்பார்த்தலும் இயலாத காரியம். பல்வேறு பண்பாடு டைய மக்களும் கலந்ததுதான் சமுதாயம் என்று கூறப் படும். இத்தகைய மனப் பண்புடையவரும் பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். இவர்கள் வாழ்வு பற்றியும் ஒரோ வழிக்கவிஞன் பாடல்கள் பாடினான். அவற்றை மருதத் திணைப் பாடல்களாகப் பிற்காலத்தார் தொகுத்தனர்;. தலைவன் இவ்வாறு பரத்தையின் வீட்டுக்குச் சென்று வந்த பொழுது தலைவி அது பொறுக்கமாட்டாமல் அவனை வீட்டினுள் அனுமதிக்க மறுத்துவிடுவாள். தலைவன் பாடு திண்டாட்டமாய்ப் போய்விடும். இது மாதிரி சந்தருப்பங்களில் தலைவன் பிறருடைய உதவியை நாடி, அது சாக்காக வீட்டினுள் நுழைவதும் உண்டு. அவன் உதவி வேண்டுபவர்கள் தோழி, விருந்தினர், குழந்தை என்ற மூன்று இனத்தவராவர். தோழியை வேண்டிக்கொள்ள, அவள் தலைவியிடம் தூது நடந்து தலைவனை மன்னித்துவிடுமாறு கூறுதலும் உண்டு. தலை வனிடம் பேச்சு வார்த்தைகள் இல்லாமலே தலைவி குடும்பம் நடத்திக்கொண்டு வரும் வேளையில் தலைவ னுடைய நற்காலத்தின் அறிகுறியாக விருந்தினர்கள் வந்து சேர்தலும் உண்டு. விருந்தினரின் எதிரே தலைவி தன் கோபத்தைக்காட்டுதல் பண்பாட்டுக்கு விரோதமன்றோ? எனவே, விருந்தினரைக் கண்டவுடன் அவள் கோபம் தணிந்துவிடுவாள். இன்னும் சில சந்தருப்பங்களில் குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு அது சாக்காகத் தலைவன் உள்ளே வந்து விடுதலும் உண்டு. இவை அனைத்திற்கும் உதாரணமாக பல பாடல்கள் காணலாம்.

மனித வாழ்க்கையின் விரும்பத்தகாத ஒரு பகுதியை விளக்குவதுதான் மருதத்திணைப் பாடல். அந்தச் சமுதாயத்தில் வாழ்ந்த மக்களுள் ஒருசிலரே இந்தத் தவறான வாழ்க்கையைக் கைக்கொண்டிருக்கக்கூடும் என்று நினைப்பது பொருத்தந்தானே!

அதற்கேற்பவே அகத்துறைப் பாடல்களில் மருதத் திணைப் பாடல்கள் நூற்றுப் பத்து வீதமே உள்ளன. நூறு ஆண் மக்கள் வாழ்கின்ற ஓர் இடத்தில் பதின்மர் ஓரளவு பொருந்தா ஒழுக்கம் உடையவராய் வாழ்வதா னால் பெருந்தீங்கு எதுவும் விளைந்துவிடப் போவதில்லை.

 

சமுதாயத்தைப் பொறுத்தமட்டில் இவ்வகை வாழ்க்கை விரும்பத்தகாததாயினும் கவிதையுலகில் மருதம் பற்றிய பாடல்கள் மிக்க சுவையுடையனவாய் இருக்கின்றன. பரத்தையர் வீடு சென்று வந்த தலைவனைப் பற்றிக் கூறும் பாடல்கள் ஒருபுறமிருக்க, அப்பரத்தை யரைப் பற்றியும் அவர்களுடைய மனோதத்;துவம் பற்றியும் கூறுகிற பாடல்களும் சில உண்டு.

தங்களுடைய வாழ்க்கை இழிந்தது என்றோ, தவறானது என்றோ, அப்ரத்தையர்கள் கருதியதாகத் தெரியவில்லை. தம்மாட்டு வந்து செல்லுகின்ற தலைவன் மார் தம்முடைய வீட்டில் தலைவியரிடம் அஞ்சி நடுங்குகின்றதைக்கண்டு அவரை எள்ளி நகையாடுகின்ற அளவுக்கு அவர்கள் மனத்திடம் படைத்தவர்களாய் இருந்திருக்கின்றார்கள். தலைவியர்கமாட்டு அச்சமிருப் பினும் மீட்டும் மீட்டும் தம்பால் தலைவர்கள் வருகின்ற காரணத்தாலும் தமக்கு வேண்டிய உபசரணங்களைச் செய்து போற்றுகின்ற காரணத்தாலும், தாங்களும் சமுதாயத்தின் ஒரு சிறந்த உறுப்பெனவே அப்பரத்தையர் கருதிக்கொண்டனர். இந்நிலையில் உலகப் பெரியாருள் ஒருவரான 'டால்ஸ்டாய்' எழுதிய 'குரூட்டர் சொனட்டா' என்ற கதை நினைவு கூர்தற்கு உரியது. உணவுவிடுதி ஒன்றைக் காண டால்ஸ்டாய் உள்ளே செல்லுகிறார். அங்கே சில பெண்கள் கேளிக்கையில் பொழுது போக்கு வதைப்பார்த்து, "நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?" என்று கேட்கின்றார். அவர்கள் சிரித்துக்;கொண்டே, "நாங்கள் சும்மாதான் இருக்கிறோம்" என்று விடை பகரு கிறார்கள். அதை நம்ப முடியாத டால்ஸ்டாய் விடுதித் தலைவரைப் பார்க்கின்றார். உடனே அத்தலைவர் மிக்க சினத்துடன் அப்பெண்களைப் பார்த்துப் "பேதைகளே, நீங்களெல்லாம் பரத்தையர்கள் என்பதை அவருக்குத் தெரிவியுங்கள்" என்று கூறுகிறார். ஆனால், அப்பெண்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பதைப் பார்த்த டால்ஸ்டாய், விடுதித் தலைவரைப் பார்த்து, "ஐயா, நாமெல்லாம் (ஆண்களெல்லாம்) நல்லவர்களாய் இருந்து விட்டால் இப்படிப்பட்டவர்கள் சமுதாயத்தில் இருக்க வேண்டுவதில்லை அல்லவா?" என்று கூறினாராம்.

பரத்தையரின் மனோநிலையை விளக்க இந்த ஒரு உதாரணத்துடன் நற்றிணைப் பாடல் ஒன்றையும் பார்ப்போம்:

தலைவன் பரத்தை வீட்டில் வந்து பல நாட்களாய்த் தங்கிவிட்டான். இவன் வீட்டைவிட்டு வருகிற காலத்தே தலைவி சூல் முதிர்ந்திருந்தாள். எனவே பரத்தையின் இல்லம்புக்க தலைமகன், வீடு செல்லவேண்டும் என்னும் நினைவின்றி அங்கேயே தங்கிவிட்டான். இந்நிலையில் ஒரு நாள் அவனுக்கு மகன் பிறந்த செய்தியைச் சிலர் வந்து கூறினர். எவ்வளவுதான் தலைவியை மறந்தவன் போல அங்குத் தங்கிவிட்டாலும், மகன் பிறந்துவிட்டான் என்று கேள்விப்பட்டவுடன் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வராமலா இருந்துவிடும்? எனவே, தன் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்துவிட்டான். ஆனால் அம் முடிவைக் கொண்டுசெலுத்துவதில் இரண்டு பெரிய அல்லல்கள் உள்ளன. முதலாவது, இத்தனை நாட்கள் தங்கிய பரத்தை வீட்டைவிட்டு எவ்வாறு திடீரென்று புறப்படுவது என்பதாகும். இரண்டாவது, இத்தனை நாட்கள் எட்டிப்பாராத தன் வீட்டுக்குள் இப்பொழுது எப்படித் திடீரென்று நுழைவது என்பதாகும். இவ்விரண்டு தொல்லைகளையும் ஒரே வகையில் தீர்க்க முனைகிறான் தலைவன். இரவு நடுயாமத்திற்குமேல் புறப்பட்டால் இரண்டு வீட்டில் உள்ளவர்கள் நன்கு உறங்கிக் கொண் டிருப்பார்கள் எனவே, அந்த நேரத்தில் புறப்பட்டுத் தன் வீட்டுக்குள் புகுந்துவிடலாம் என அவன் முடிவு செய்து விட்டான். ஆனால், பரத்தையை இவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியுமா? எனவே, அவள் அவன் செய்தவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருந்தாள். தலைவ னுடைய சுற்றத்தார் அனைவருக்கும் பெருத்த மகிழ்ச்சி உண்டாயிற்று, எப்படியோ தலைவன் அப்பரத்தையை ஏமாற்றிவிட்டு இன்று தப்பித்துக்கொண்டு வந்து விட்டானே என்று மகிழ்ந்திருக்கின்றனர்.

ஆனால், பரத்தைக்கு மட்டும் உண்மை தெரியும். அவன் தான் விட்டதாலேதான் போக இயன்றதே தவிரத் தன்னை ஏமாற்றிவிட்டுச் செல்லவில்லை என்பதையும் அவனுடைய சுற்றத்தார்கள் காதில் விழும்படி கூறிச் சிரிக்கிறாள்.

"பெரிய காவலையுடைய தலைவனுடைய பெரிய மாளிகையில் நீண்ட நாவையுடைய ஒளி பொருந்திய மணியானது அடித்தது. ஒலி உண்டாக்குகின்ற தென்னங் கீற்றால் மிடைந்து அலங்கரிக்கப்பெற்ற முற்றத்தில் வெண்மையான மணல் பரப்பப் பட்டிருக்கிறது. முன்பு தலைவன் பரத்தை வீட்டுக்குச் செல்கையில் அவனைச் சுற்றிப் பாணர் கூட்டம் காவல் காத்துச் சென்றதைப் போல் இப்பொழுது தலைவி வீட்டில் ஆராய்ந்த ஆபரணத்தை அணிந்த மகளிர் நற்சொல் கேட்டுச் சூழ்ந்து முற்றத்தில் நிற்கின்றனர். நறுமணம் கமழும் விரிப்பு விரித்துள்ள நல்ல படுக்கையில் செவிலித் தாயுடன் சமீபத்தில் பிறந்த புதல்வன் உறங்கிக்கொண்டிருக்கிறான். பிணி அண்டாமல் இருக்க வெண்சிறு கடுகை அரைத்து எண்ணெயுடன் கலந்து, அதனால் தலைமுழுகிய ஈரத்துடன் அழகு விளங்கும் மேனியையுடைய தலைவி தன் இரண்டு இமைகளும் ஒன்றுடன் ஒன்று பொருந்த உறங்குகிறாள். அத்தகைய நடு இரவு நேரத்தில் அகன்ற நீர்த்துறையையுடைய தலைவனும் கள்ளனைப்போல அவனுடைய வீட்டினுள் நுழைந்தான். தலைவனின் தந்தை யின் பெயரை வைத்துக்கொள்ளக்கூடிய மகன் பிறந்த காரணத்தால்,"

 

நெடுநா ஒண்மணி கடிமனை இரட்டக்

குரைஇலைப் போகிய விரவுமணற் பந்தர்ப்

பெரும்பாண் காவல் பூண்டுஎன ஒருசார்த்

திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப

வெறிஉற விரிந்த அறுவை மெல்லணைப்

புனிறுநாறு செலிலியொடு புதல்வன் துஞ்ச

ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர்அணிப்

பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்

சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த

நள்என் கங்குல் கள்வன் போல

அகந்துறை ஊரனும் வந்தனன்

சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே. (நற்றிணை-40)

 

[நெடு நா ஒண்மணி-நீண்ட நாவையுடைய மணி கட்டி இருத்தலின் செல்வ மிகுதி கூறினார்; இரட்ட - ஒலிக்க; பெரும்பாண்-தலைவனைப் பரத்தை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் தொழிலுடையவன்; விரிச்சி - நல்ல சொல் (சகுனம்) கேட்டல்; வெறி - வாசனை; அறுவை - அறுக்கப்பட்டது, துணி; புனிறுநாறும் - ஈன்ற அணிமை தோன்றும்; ஐயவி - வெண் சிறு கடுகு (இதனைக் கலந்தால் பேய் முதலியன அண்டா எனப் பழந்தமிழர் நம்பினர்); நெய்யாட்டு - எண்ணெய் முழுக்கு; யாக்கை - உடம்பு; சிறந் தோன்பெயரன் - தலைவனுடைய தந்தை (சிறந்தோன்) க்குப் பெயரன்.

 

'வாரிரோ விருந்தினரே!'

 

தலைவன் தவற்றைத் தலைவி காணும் முறையைக் கூறும் பாடல் இது.

 

விடியற்காலை நேரம் - கதிரவன் உதயம் செய்ய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது என்றாலும் ஓரளவு வெளிச்சம் தோன்றிவிட்டது. இந்த நேரத்தில் ஒருவன் முக்காடு இட்டுத் தலையை மறைத்துக் கொண்டு, ஊரின் வெளிப்புறத்தே இருந்து வருகிறான்; ஏதேனும் ஒலி அண்மையில் கேட்டாலும் மிகுந்த அச்சத்துடன் திரும்பிப் பார்க்கிறான். அவ்வளவு கோழையா இவன். அரவத்தைக் கேட்டு அஞ்சுவதற்கு? இல்லை, தன்னை இந்த நிலையில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதே இவனுடைய நோக்கம் போலும்! ஏன் இவ்வாறு பிறரைக் கண்டு அஞ்சுகிறான்? ஒருவேளை பிறர் பொருளைத் திருடிவிட்டு வருகிறானா? அவ்வாறு தெரியவில்லை, இவன் முகத்தைப் பார்த்தால் உயர்ந்த இடத்தைச் சேர்ந்தவன் என்று கூறத் தோன்றுகிறதே தவிரத் திருடன் என்று கூற நா எழ வில்லை? அவ்வாறாயின் இவன் ஏன் இவ்வாறு அஞ்ச வேண்டும். ஆம்! ஏதோ செய்யத் தகாத செயல் ஒன்றைச் செய்துவிட்டு வருகிறான் போலும்! 'செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை', என்ற குறளை மறந்துவிட்டு ஏதோ தவறு செய்திருக்க வேண்டும்.

இவனுடைய இளமை இவன் என்ன தவற்றைச் செய்திருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்க இடம் தருகிறது. மனிதர்கள் தவறு என்று அறிந்திருந்தும் செய்யும் தவறுகள் பல. அவற்றுள்ளும் பெரிய தவறு ஒழுக்கக் கேடுதான். தன்னால் காதலித்து மணம் செய்து கொள்ளப்பெற்ற மனைவி வீட்டில் இருக்கிறாள். அவளையும் தானே தேடிப் பிடித்துக் காதலித்தான். கொடுப்பாரும் அடுப்பாரும் இல்லாமல் அவளுடன் நீண்ட நாட்கள் களவு வாழ்க்கை யில் ஈடுபட்டான். அத்தோழி இவனை எத்துணை முறை கண்டு கேட்டாள்! நேரடியாகவும் குறிப்பாகவும் தலைவி படும்பாட்டை எடுத்துக் கூறினாள்; மணம் செய்து கொண்டு வாழ வேண்டுவதன் இன்றியமையாமையை எடுத்துக் கூறினாள்; இவ்வாறு களவு நடைபெறுவது நீண்ட நாட்கள் நடைபெற முடியாது என்பதை எடுத்துக் காட்டினாள்; என்றாவது ஒரு நாள் தலைவியினுடைய தந்தை அல்லது அண்ணன்மார்களிடம் அகப்பட்டு கொள்ள நேரிடும் என்று அச்சுறுத்தினாள்; களவுக் காலத்தில் சில மணி நேரமே பெறக்கூடிய இன்பத்தை இடையீடுபடாமல் அனுபவித்துக் கொண்டிருக்கலாமே என இவனுடைய ஆசையைத் தூண்டிவிட்டுப் பார்த்தாள். இவ்வளவு தூரம் அவள் கூறியும் இவள் அதற்காக எல்லாம் அசைந்து கொடுத்தால்தானே! ஒன்றுமே நிகழாததுபோல இவன் தினம் பகலிலும், இரவிலுமாக வந்து போகிறான். இவனுக்கு மட்டும் தோழி கூறும் காரணங்கள் தெரியாதவைகளா? தெரிந்திருந்தும் பின்னர் ஏன் களவை நீட்டித்துக் கொண்டிருக்கிறான்? இத்தனை தொல்லைகளையும் மீறி இவன் களவை நீட்டிக்கிறான் என்றால், அதில் ஏதோ சிறப்பு இருக்கவேண்டும்.

பிறர் அறியாமல் செய்கிற ஒவ்வொரு செயலிலும் மனிதன் இன்பத்தை அடைகிறான் போலும்! ஆகையால், களவு வாழ்க்கையில் அதிக இன்பம் பெறுவதாக எண்ணி, தலைவன் களவை நீட்டித்தான் போலும்! இதே தலைவன் தான் இப்பொழுது குடும்பம் நடத்துகிறான், அதே தலைவி யுடன். ஆனால், திடீரென்று ஒரு நாள் இவனுக்குப் பழைய ஞாபகம் எங்கிருந்தோ வந்துவிட்டது போலும்! பிறர் அறிந்தால் எள்ளி நகையாடுவர் என்று அறிந் திருந்தும், இவன் பரத்தை வீட்டிற்குப் போய்வர முடிவு செய்துவிட்டான். இவன்மேல் அதிகத் தவறு கூறவும் காரணம் இல்லை. இவன் ஒரு கலைஞன். இவனுடைய கலை மனம் பிறருடைய அங்க நெளிவுகளிற்கூட ஓர் அழகைக் காண்கிறது. பாடலைக்கொண்டு இவன் எவ்வளவு கலையுள்ளம் படைத்தவன் என்பதை அறிதல் கூடும். எனவே, எங்கோ ஒருநாள் ஒரு பரத்தையின் ஆடல் பாடல்களைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தான். முதலில் அவளுடைய கலையிலேதான் இவன் ஈடுபட்டான்; கலை யுள்ளம் எத்துணைச் சிறந்ததாக இருப்பினும், அதனால் சில தீமைகளும் விளைதல் கண்கூடு.

கலை உள்ளம் என்றாலே அது எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியது என்பதை அறிந்து கொள்ளலாம். உணர்ச்சி எவ்வளவுக்கு எவ்வளவு மிகுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கலையில் ஈடுபட முடியும். எனவே, கலையும் உணர்ச்சியும் கைகோத்துச் செல்லும் இயல்புடையன என்பதையும் அறியலாம். உணர்ச்சி மிகுந்து விட்டபொழுது மனிதன் அறிவையும் நடுவு நிலையையும் இழக்க நேரிடுகிறது. அறிவை இழக்கும் பொழுது செய்யத் தகுவன இவை, தகாதன இவை என்று பாகுபாடு மறைந்துவிடுகிறது. உதாரணமாக, கோபம் என்ற உணர்ச்சியை எடுத்துக்கொள்வோம். எத்துணைச் சிறந்த பெரியவர்களும் கோபம் உற்ற பொழுது தவற்றைச் செய்து விடுகின்றார்கள். கோபம் தணிந்த பிறகு தாமே தம் செயலைக் கண்டு வெட்கித் தலை குனிகின்றனர். என்றாலும், மறுமுறை கோபம் வராமல் இருப்பதில்லை. எனவே, கோபம் முதலிய உணர்ச்சிகள் மிகும்பொழுது அறிவும், நடுவு நிலையும், ஆராய்ச்சியும், நன்மை தீமை முதலிய பாகுபாடும் விடைபெற்றுக்கொள்ளும் என்பது தெளிவு. இக் காரணத்தாலேதான் சிறந்த கலைஞர்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் தவறி விடுகிறார்கள்.

இறைவனிடம் செலுத்தப்படும் பக்தி உணர்ச்சி ஒன்று நீங்கலாக, ஏனைய உணர்ச்சிகள் அனைத்தும் இத்தீமையை ஓரளவு செய்யாமல் இருப்பதில்லை. பரத்தையின் ஆடல் பாடலைக் கண்டுகேட்டு மயங்கிய தலைவன், அவ்வாடல் பாடல்களிலேதான் முதலில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் உணர்ச்சியின் அடிப்படையில் தோன்றிய இந்த ஈடுபாடு மெள்ள அவன் அறிவை மயக்கிவிட்டது. நாட்கள் செல்லச் செல்ல, அக் கலையில் இருந்த ஈடுபாடு அக் கலைப் பொருளில் செல்லத் தொடங்கிவிட்டது. பரத்தை யின் ஆடலில் கொண்ட ஈடுபாடு மெள்ள அவளிடமே செல்லத் தொடங்கிவிட்டது. துணிந்து ஒருநாள் அவள் வீட்டிற்குச் சென்று விட்டான்.

இவ்வாறு இவன் பரத்தை இல்லம் சென்று மீண்டும் தன்னுடைய வீட்டில் புகுந்தான். தன் வீட்டில் தன் வரவைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதைப் பறை சாற்றுபவன் போல மிக்க இறுமாப்புடன் வீட்டினுள் நுழைந்து விட்டான். அங்கே தலைவிக்கு இவனுடைய செயல் தெரிந்துவிட்டது. அவள் ஒன்றுமே பேசவில்லை. இம் மாதிரி சந்தருப்பங்களில் இரண்டு வகையில் நடந்து கொள்ளும் இரண்டு வகையான தலைவியர்கள் உண்டு. ஒரு வகையார் உடனே தலைவனிடம் பெரு வாய்ச் சண்டை இடத் தொடங்கிவிடுவர். தலைவன் பாடு முதலில் வருந்தத் தக்கதாக இருப்பினும், உடனே தலைவியின் கோபம் ஆறிவிடும். அதிலும் வாய் திறந்து கூச்சலிட்டுச் சண்டை பிடிப்பவர் உடனே தம் கோபம் ஆறிவிடுவர். ஆனால், இரண்டாம் வகையைச் சேர்ந்தவரே அஞ்சத் தக்கவர். இவர்கள் வாய் திறந்து சண்டை செய்வதில்லை. ஏன்? தங்கட்குப் பிடிக்காத நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்துவிட்டால் வாய் திறவாமல் இருந்துவிடுவர்; சிலரைப் போலக் கூச்சல் இடுவதில்லை. தம் கடமை களுள் ஒன்றும் தவறுவதும் இல்லை. ஆனால், தமக்குத் தீங்கிழைத்த கணவரிடத்து முகந்தந்து பேச மாட்டார்கள். இவர்களுடைய இச்செயல் அக்கணவன்மார்களை வாள் கொண்டு பிளப்பதுபோல இருக்கும். இம்மாதிரி இனத்தைச் சேர்ந்த தலைவி ஒருத்தியுடன் வாழும் தலைவன்தான் பரத்தை வீடு சென்று மீண்டான். தலைவி வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. இவனுடைய வீட்டிலேயே இவன் புதியவன் போல இருக்க வேண்டிய தாய்விட்டது. தன்னுடைய நிலைமையைக் குறித்து இவன் வருந்துகிறான். எவ்வாறு இருந்தால் இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து நீங்க முடியும் என்பது இவனுக்கு நன்கு தெரியும். ஆம், விருந்தினர் இப்பொழுது வந்துவிட் டால் தலைவியின் கோபம் போய்விடும். எனவே, வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இத் தலைவன் உள்ளே நடமாடும் தலைவியைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறான். 'யாரேனும் விருந்தினர் வந்து நம்மை இப்பொழுது காப்பாற்ற மாட்டார்களா!' என்ற கவலையில் ஆழ்ந்து இருக்கிறான்.

'எருமைக் கன்றுகள் தூண்தோறும் கட்டி இருப்பதால் அழகு மிகுந்த வீட்டின்கண், வளைந்த குண்டலங்களை அணிந்த தலைவி, சிறிய மோதிரம் செறித்த மெல்லிய விரல் சிவக்கும்படி வாழை இலையின் அடிக்காம்பு பெரிதாய் இருக்கிறது என்பதால் அதனைக் கிழித்து விட்டுப் பரிகலம் அமைத்து விட்டுச் சமையல் அறையில் புகை படிந்த கண்களுடனும் நெற்றியில் வியர்வையுடனும் இருக்கும் இப்பொழுது நம்மிடம் பெருங்கோபம் கொண்டுள்ளாள்! இப்பொழுது யாராவது விருந்தினர்கள் வருவார்களாக. விருந்தினர் வந்துவிட்டால் இவள் கண் கோபத்தால் சிவப்பதில்லை; புன்சிரிப்புடன் கூடிய முகத்தினை உடையவளாய் இருப்பாள். ஆதலால், பிறகு நாம் இவளுடன் மகிழ்ந்து இருக்கலாம்" என நினைக்கிறான்.

 

தடமருப்பு எருமை மடநடைக் குழவி

தூண்தொறும் யாத்த காண்தகு நல்லில்

கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை

சிறுதாழ்செறித்த மெல்விரல் சேப்ப

வாழை ஈர்ந்துஅடி வல்லிதின் வகைஇப்

புகைஉண்டு அமர்த்த கண்ணன் தகைபெறப்

பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்

அந்துகில் தலையில் துடையினள் நப்புலந்து

அட்டி லோளே அம்மா அரிவை;

எமக்கே வருகதில் விருந்தே; சிவப்பாள் அன்று;

சிறியமுள் எயிறு தோன்ற

முறுவல் கொண்ட முகம்காண் கம்மே. (நற்றிணை- 120)

 

(தடமருப்பு-வளைந்த கொம்பு; மடநடைக்குழவி-தளர்ந்த நடையுடைய கன்று; காண்தகு-அழகிய;கொடுங்குழை- வளைந்த மகர குண்டலம்; செழுஞ்செய் பேதை- செழுமையான சிவந்த நிறமுடைய இவள்; தகைபெற- அழகுசெய்ய; பிறைநுதல்...துடையினள் - தனது பிறைச் சந்திரன் போன்ற நெற்றியில் தோன்றிய சின்ன வியர்வைத் துளிகளைப் புடைவையின் தலைப்பால் துடைத்துக் கொண்டு; நப்புலந்து-நம்மேல் கோபித்துக் கொண்டு; அட்டிலோளே-சமையல் கட்டில் உள்ளாள்; சிவப்பாள் அன்று - கோபத்தால் கண் சிவக்க மாட்டாள்; சிறிய முள்...கம்மே-சிறிய முள்ளைப்போலும் இவள் பற்களால் சிரிப்பதைப் பார்க்கலாம்.)

தலைவி கோபித்துக்கொண்டு சமையல் கட்டில் இருக்கின்ற இந்த நேரத்திற்கூட அவளுடைய குழையணிந் துள்ள முகத்தையும், வாழை இலையை அரிவதால் சிவந்து போன கையையும், சமையல் செய்வதால் உண்டாகும் வியர்வையைத் துடைத்துக்கொள்ளும் அழகையும் காண்கிற இத்தலைவன் ஒரு சிறந்த கலைஞனாகத்தான் இருத்தல் வேண்டும். எனவேதான் இவன் வாழ்க்கையில் இத்தவற்றைச் செய்துவிட்டான் போலும்!

 

'நான் இறந்தால் தொல்லை தீரும்'

 

இருவரும் விட்டுக்கொடாத பொழுது அவர்களைச் சேர்த்து வைக்கத் தோழி கையாண்ட தந்திரம் இது.

இரண்டு பேர் மனம் மாறுபட்டுப் பூசலிடும் பொழுது இடை நின்று நீங்கள் சமாதானம் செய்ய முற்பட்ட துண்டா? சண்டை வலிவாக நடைபெறும் பொழுது சமாதானத்திற்குப் போகிறவர் மிகவும் வன்மையுடைய வராய் இருத்தல் வேண்டும். பல சமயங்களில் சண்டை இடும் இருவருமே சேர்ந்து இடை நிற்பவரை அடித்து விடுதலும் உண்டு. எனவே, போரிடுபவர்களிடையே அமைதியை நிலை நாட்டப் போவது அவ்வளவு இனிய செயல் அன்று. ஆனால், எல்லா இடங்களிலும் இந்நிலை ஏற்படும் என்று கூறுவதற்கில்லை. பல சமயங்களில் பூசல் இடுகிறவர்களைப் பொறுத்தே இடை நிற்பவர் நிலையை முடிவு செய்ய முடியும். பூசலிடுபவர் பண்பும் நாகரிகமும் உடையவர்களாக இருப்பின், இடை நிற்பார் நிலை அவ்வளவு தீமையுடையதாகி விடாது. எவ்வளவு மாறு பாடும் சினமும் இருந்தாலும் எல்லை கடந்து போகாமல் காண்கின்றவர்களும் உண்டு அல்லவா? கணவன் மனைவி யர் போராட்டம் பெரும்பாலும் இந்த வகையையே சேரும். பண்புடைய தலைவனும் தலைவியும் கூடி வாழ்க்கை நடத்தும் பொழுதும் சில சந்தருப்பங்களில் கருத்து வேறுபாடு தோன்றிவிடுகிறது. அப்பொழுதும் பூசல் ஏற்படும். ஆனால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை காரணமாக உடனே அம் மாறுபாடு நீங்கிவிடுவர். இத்தகைய போராட்டங்களில் பெரும்பான்மை மனைவியும் சிறுபான்மை கணவனும் விட்டுக் கொடுத்தல் இயற்கை. பெரும்பாலும் போராட்டத் தின் காரணத்தை ஒட்டித்தான் இம்முடிவும் ஏற்படும்.

சில சந்தருப்பங்களில், போராட்டத்தின் காரணத்தை ஒட்டி இப்பூசல் நீண்ட நாட்கள் நடைபெறுவதும் உண்டு. கணவன் ஒழுக்கக்கேடு செய்கிறான் என்பதை எந்த மனைவியும் எளிதில் மன்னிக்க மாட்டாள். இன்றும் தென்தமிழ் நாட்டில் 'வட்டில் சோற்றைப் பங்கிட்டாலும் வாழ்க்கையைப் பங்கிட மாட்டாள்,' என்று வழங்கும் பழமொழி இக்கருத்தை வலியுறுத்தி நிற்கின்றது. கணவன் செய்த தவறு எதுவாயினும், அதனை முழு மனத்துடன் மன்னிக்காத மனைவியே இல்லை என்று கூடக் கூறி விடலாம். ஓயாமல் மனைவியை அடிக்கும் கணவன்மார்-- ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும் 'பீப்பாயில்' மிதக்கும் 'பெருங்குடி' மக்களான கணவன்மார்-- திருமங்கலியத்தையும் திருடிச்சென்று அஸ்வமேத யாகத் திற்குப் (குதிரைப்பந்தயம்) பலியிடும் கணவன்மார் என்னும் இத்தகைய கணவன்மார் அனைவரையும் மன்னித்து விடுகின்ற மனைவிமார் உண்டு. இன்னும் சில குடும்பங்களில் மேலே கூறிய அனைத்துப் பண்பாடுகளை யும் ஒருங்கே பெற்ற கணவன்மாரும் உண்டு. இவ்வளவு தீய பண்புகள் நிறைந்திருந்தும் அக் குடும்பஙகளில் நாம் சற்றும் எதிர்பாராத ஒற்றுமை நிலவுவதுண்டு; அம் மனைவிமார் தம் கணவர்களை நல்லவர்கள் என்றும், சேர்க்கை காரணமாகவே கெட்டு விடுகிறார்கள் என்றும் கூறுவதைக் கேட்டு வியவாமல் இருக்க முடியாது. இவ்வளவு குற்றங்களையும் பெருந்தன்மையோடு மன்னித்து விடும் ஒருமனைவிகூட மன்னிக்க முடியாததும் விரும்பாததுமான ஒரு குற்றம் உண்டு. அந்தக் குற்றத்தை ஒரு கணவன் செய்துவிட்டால், வேறு துறைகளில் அவன் எவ்வளவு சிறந்தவனாயினும்,அவன் மனைவி அதனைத் தாள மாட்டாள். இதன் அடிப்படை மனத்தத்துவம் யாதாக இருக்கலாம் என்று அறிதற்கில்லை. தன்னை ஒத்த வேறு ஒரு பெண்ணைத் தன்னுடைய கணவன் நாடினான் எந்று நினைக்கும் பொழுது அம் மனைவியினுடைய 'அகங்காரம்' தாக்கப்படுகிறது. தன்னிடம் இல்லாத எந்த அழகைத் தன் கணவன் அப்பிற பெண்ணிடத்துக் கண்டான் என்ற எண்ணம் முதலில் தோன்றும்போலும்! தன்பால் இல்லாத ஒன்றை அவள் பெற்றிருந்த காரணத் தாலேயே தலைவன் அவளை விரும்பினான் என்ற நினைவு தோன்றியவுடன் பொறாமைதான் முதலில் தோன்றுகிறது. தன்பால் அந்த ஒன்று இல்லையே என்ற நினைவு தோன்றுந்தோறும் அவளுடைய அகங்காரம் ஆயிரம் புண்ணைப்பெறுகிறது. எனவே, கணவன் தனக் கிழைத்த தீங்கை மிகப் பெரிதாக நினைக்கிறது மனைவி யின் மனம். ஏனைய குற்றங்களை அவன் புரிகையில் தலைவிக்கு நேரடியாக அதிக நஷ்டம் ஒன்றும் ஏற்படுவ தில்லை. ஒரோ வழிப் பொருள் நட்டம் முதலிய தோன்றி னாலும், தன் மாட்டு அவன் வைத்திருக்கும் அன்புடன் தலைவி இந்த நட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறாள். எனவே, இந்த நட்டம் பெரிதாகப் படுவதே இல்லை. பிறர் அவனுடைய செயலையும் அவன் அழிக்கும் பொருளை யும் கண்டு அஞ்சுகின்றனர்; அவளிடங்கூட முறையிடு கின்றனர். ஆனால், அவர்கள் அவனுடைய செயலில் ஒரு பகுதியைத்தான் காண்கின்றனர். அவர்கள் காணாததும் காண முடியாததுமான மற்றொரு பகுதியை அவள் ஒருத்தி மட்டுமே காண முடியும். அந்த மற்றொரு பகுதி தான் அவன் அவளிடம் காட்டும் அன்பு, அவன் காட்டுகின்ற கண்ணால் காணமுடியாத அன்பின் எதிரே அவனுடைய ஏனைய தவறுகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. ஆதலால், தான் அவளிடம் கொண்ட அன்பு குறையாமல் அவன் எத்தனைப் பிழைகள் செய்தாலும், அவள் அவற்றைப் பெரிதாக மதிப்பதே இல்லை. இன்றில்லையேனும் நாளை அவன் திருந்திவிடுவான் என்ற உறுதியான நம்பிக்கையில் அவள் மகிழ்ச்சியுடன் வாணாளைக் கழிக்கின்றாள்-நாகரிகம் மிகுந்துவிட்ட குடும்பங்களில் இந்தப் பண்பாட்டைக் காணமுடியாது. காரணம், நாகரிகம் (தற்கால ரகம்) மிகும் பொழுதே போலித்தன்மையும் உள்ளொன்று வெளியொன்றுமாக நடந்துகொள்ளும் இயல்பும் உடன் தோன்றிவிடுகின்றன. எனவே, ஒருவர் மாட்டு ஒருவர் காட்டும் அன்பு, வருத்தம், வெறுப்பு முதலிய அனைத்துமே ஓர் எல்லைக்கு உட் பட்டுப் பிறர் அறியாவாறு காட்டப்படுகின்றன. ஆதலாலே தான் போலி நாகரிகம் மிகுந்த குடும்பங்களில் மேலே கூறிய தலைவி இயல்பை நன்கு காண்டல் இயலாது. ஆனால், போலி நாகரிகம் முற்றாமல் உள்ளத்தே தோன்றும் உணர்ச்சியை மறைக்காமல் வாழ்ந்து வரும் கிராமத்துக் குடும்பங்களில் இன்றும் இந்தப் பண்பாட்டைக் காணலாம்.

மேலே கூறிய முறையில் உள்ளத்து உணர்ச்சியை ஓரளவு வெளிப்படையாகவே காட்டப் பழகிய தலைவி ஒருத்தி; அவள் இல்லறம் நடத்தத் தொடங்கியது கருத் தொத்த கணவனுடனேதான். அந்தக் கணவனும் அவளும் தமிழர் முறைப்படி முதலில் களவு வாழ்க்கையில் ஈடுபட்டுப் பின்னர்க் கற்புநெறி கடைப் பிடித்தவர்தாம். அந்த நாளில் அவன் அவள்மாட்டுக் கொண்டிருந்த காதலுக்கு எல்லையே இல்லை என்றும் கூறலாம். தன் காதலைப் பலபடியாக எடுத்து அவளிடம் அவன் கூறியது உண்டு. அந்த நாட்களில் அவளைத்தவிர அவன் வேறு பெண்களை கண் எடுத்துக்கூடக் கண்டதில்லை. அவனைப் பொறுத்த மடடில் உலகில் வேறு பெண்களே இல்லை என்றுகூடக் கூறிவிடும் நிலையில் இருந்தான். ஒரு நாள் அவன் இந்தத் தலைவியை உடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டான். இதனை 'உடன் போக்கு' (Elopement) என்று கூறும் இலக்கியங்கள். அவ்வாறு இத் தலைவன் இத்தலைவியைக் கூட்டி வரப் பேருதவி புரிந்தவள் இத்தலைவியினுடைய தோழிதான். எங்கோ சென்ற இவர்கள் இறுதியில் திருமணம் முடித்துக் கொண்டனர். திருமணம் முடிந்து குடும்பம் வைத்த பிறகு தலைவி தன்னுடைய உயிர்த் தோழியை வரவழைத்துத் துணையாக வைத்துக் கொண்டாள். இவர்களுடைய இல்லறம் நன்றாகத்தான் நடைபெற்று வந்தது.

 

நாட்கள் சென்றன; தலைவன் முன் போல இல்லை என்பதைத் தலைவி மெள்ள உணரலானாள். அவளை விட்டுச் சிறிது நேரம் பிரிந்திருக்கவும் விரும்பாத தலைவன் இப்பொழுது ஏதாவது ஒரு சிறு காரணத்திற்காகவும் பிரிந்து இருக்க முற்பட்டான். நாளாவட்டத்தில் இரவு நேரங்களிற்கூட வீட்டில் தங்காம,ல் விளியே இருக்க முற்பட்டாள். தலைவிக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக வும் வருத்தமாகவும் இருந்தது. யாரிடம் அவள் தன் வருத்தத்தைத் தெரிவிக்க முடியும்? தலைவன் எங்கோ பரத்தையர் வீட்டிற்குச் சென்று வருகிறான் என்று ஊரார் மெல்லப் பேசிக்கொண்டது தலைவியின் காதில் விழுந்தது. திடீரென்று மிகுதியும் கலவரமடைந்த அவள், தோழியிடம் குறிப்பாக இதைத் தெரிவித்தாள். தன்னைப் போல அவளும் இதைப் பெரிய துன்பமாகக் கருதி வருந்துவாள் என்று தலைவி எதிர்பார்த்தாள். ஆனால், என்ன ஏமாற்றம்! தோழி இது பற்றிக் கவலைப்படுவதாகவே தெரிய வில்லை. 'என்ன! இவள் என்னுடைய தோழிதானா! ' என்று அவள் மேல் பெரிய சீற்றங்கொண்டாள் தலைவி.

தோழிக்குத் தலைவியிடம் அன்பு இல்லையா? தலைவன் தவறு இழைக்கிறான் என்பது அவளுக்கு மட்டும் தெரியவில்லையா? நன்றாகத் தெரிகிறது! என்ன செய்ய வேண்டும் என்று அவள் ஆராய்ந்து பார்த்தாள்; தலைவனை நெருங்கிச் சண்டை போடலாமா என்றுகூடக் கருதினாள். ஆனால், அதனால் பயன் உண்டாகுமா? தலைவிதான் ஓயாமல் தலைவனுடன் பிணங்கிக்கொண்டு சண்டையிடுகிறாளே. தலைவனைச் சண்டையிட்டு நல்வழிக்குத் திருப்புவதாயின், எப்பொழுதோ தலைவியே திருப்பி இருக்கலாம். சண்டை இட்டு அவனை மாற்ற முடியாது என்பதற்குத் தலைவியே சான்றாகிவிட்டது. எனவே, தோழி மேலும் சிந்தித்தாள். எஞ்சியுள்ளது ஒரே வழிதான். அன்பு வழியால் அவனைத் திருத்தினால்; என்ன? அன்புக்குக் கட்டுப்படாதவர் எவரேனும் உண்டா? ஏன் உலகை வெல்லக்கூடிய அன்பு இத்தலை வனிடம் மட்டும் பயன் இல்லாமல் போக வேண்டும்? தலைவியிடம் நிறைந்த அன்புடையவன்தான் அவன்! ஆண்களுக்குரிய சில தவறுகளும் அவனிடம் இருக்கின் றன. தான் செய்யும் காரியத்தால் தலைவிக்கு ஒன்றும் தீங்கு நேராது என்று அவன் நினைத்துக்கொண்டு இருக்கிறான். அதனாலேதான் அவன் தவறான வழியில் சென்றுகொண்டே இருக்கிறான். இந்த நிலையில் அவனை இடித்துப் பேசிப் பயன் இல்லை. அன்பு வழியில் அவன் தவற்றை எடுத்துக்காட்ட வேண்டும். தலைவிக்கு- அவனால் பெரிதும் விரும்பப்படும் தலைவிக்கு-- அவன் எவ்வளவு பெரிய தீமையைச் செய்து கொண்டிருக்கிறான் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். அப்பொழுது அவன் தானாகத் திருந்திவிடுவான் என்பது தோழியின் எண்ணம். இவ் எண்ணத்தை மெள்ளத் தலைவிக்கு எடுத்துக் கூறினாள் தோழி. அவள் ஒரேயடியாகத் தோழியின்மேல் சினந்து கொண்டாள். தோழிக்குக்கூடத் தன்மேல் அன்பு இல்லை என்றும், அதனாலேதான் தனக்காகப் பரிந்து கொண்டு தலைவனிடம் சண்டை இடவில்லை என்றும் ஆத்திரத்துடன் கூறனாள். தோழியின்மேல் வந்த சினத்தை எல்லாம் தலைவி தலைவன்மேல் காட்டினாள். என்றோ ஒரு நாள் வீடு தேடி வருகிற அவனை இம் மாதிரிச் சினங் கொண்டு வெருட்டுதலினால் மேலும் தீமை ஏற்படுமே தவிர நன்மை விளையாது என்பதைத் தோழி மட்டுமே உணர்கிறாள் என்ன செய்வது? தலைவனுக்காகப் பரிந்து பேசினால் தலைவியின் சினத்துக்கு ஆளாக வேண்டும் தலைவியுடன் சேர்ந்து தலைவனைச் சினந்து கொண்டா லோ, தலைவன் ஒரேயடியாய்ச் சென்றுவிடும் பெரிய தொரு தொல்லை வந்துவிடும் என அஞ்சுகிறாள் தோழி பாவம்! அவளுடைய நிலைமை மிகக் கேவலமாகிவிட்டது.

ஒரு நாள் தலைவன் எதிர்பாராவிதமாக வந்தான். தோழி சென்று அவனுக்கு இன்முகங் காட்டு உள்ளே வருமாறு உபசரித்தாள். பிறகு தலைவியிடம் சென்று தலைவன் வந்துள்ள செய்தியை அறிவித்தாள். தலைவி தன்னை அலங்கரித்துக்கொண்டு தலைவனைச் சென்று வரவேற்க வேண்டும் என்று தோழி வற்புறுத்தினாள். தலைவி பெருஞ் சினங்கொண்டு தலைவனையும் தோழி யையும் வெறுத்துப் பேசினாள். இந்த நிலையில் மனம் நொந்து போன தோழி பேசுகிறாள். இருவர் சண்டை யிடும் பொழுது சமாதானம் செய்து வைக்கப்போன தோழியின் அனுபவம் இதோ பேசப்படுகிறது.

வயல் அருகில் பலா மரம் பெரிதாய் நிற்கிறது. அப் பலாமரத்தில் உள்ள இலைகளைக் கூடுபோலச் செய்து சிவந்த சுளுக்கி எறும்புகள் (முயிறு) முட்டை இட்டுள்ளன. அவ்விலைக் கூடுகளுள் சிவந்த எறும்புகளும் முட்டை களும் நெருங்கி வாழ்கின்றன. வயலில் மீன் உணவை நாடி வந்த நாரை பலா மரத்தில் உள்ள இக் கூட்டினுள் நீண்ட அலகை வைத்து உறிஞ்சுகிறது. நாரை உறிஞ்சியவுடன் உள்ளே உள்ள சிவந்த எறும்புகளும் அவற்றின் வெண்மை யான முட்டைகளும் வயலில் உதிர்ந்து விடுகின்றன. அவை உதிர்ந்து கிடப்பது செந்நெல்லும் வெள்ளை அரிசியும் கலந்துகொட்டிக் கிடப்பதுபோல இருக்கிறது. அத்தகைய மருத நிலங்களையுடைய தலைவன் பரத்தை மகளிர் பலரை முயங்கும் விருப்பத்தால் நம்முடைய வீட்டி னுள்ளே வாராமல் இருக்கிறான். ஒருவேளை அவன் வரினும் அந்த நேரத்தில் மாமை நிறத்தையுடைய தலைவி அவனுடைய பெருந்தன்மையை விரும்பி அவன்மேல் கொண்டுள்ள கோபத்தை விடவும் இல்லை. அன்னி என்பவனும் பெரிய மன்னனாகிய திதியன் என்பவனும் ஒரு புன்னை மரம் காரணமாகச் சண்டை இட்டனர். இறுதியில் புன்னை மரத்தை வெட்டி வீழ்த்திய பிறகே இருவரும் அமைதியடைந்தனர். அதுபோல் இத் தலைவ னும் தலைவியுமாகிய இருவரும் இடையில் நிற்கின்ற நான் இறந்தால்தான் தம்முடைய சண்டையை நிறுத்துவார்கள் போல இருக்கிறது!" என்ற கருத்தில் தோழி கூறுவதாக அமைந்துள்ளது பாடல்.

பழனப் பாகல் முயிறூமூசு குடம்பை கழனி நாரை உரைத்தலின் செந்நெல் விரவுவெள் ளரிசியில் தாஅம்ஊரன்

 

பலர்ப்பெறல் நசைஇநம் இல்வா ரலனே!

மாயோன், நலத்தை நம்பி விடல்ஒல் லாளே!

அன்னியும் பெரியன் அவனும் விழுமிய

இருபெரு வேந்தர் பொருகளத்து ஒழித்த

புன்னை விழுமம் போல

என்னோடு கழியும்இவ் விருவரது இகலே. (நற்றிணை-180)

 

(பழனம்-வயல்; பாகல்- பலா மரம்; முயிறு- சிவப்பு நிறமுடைய சுளுக்கி எறும்பு; மூசு-நெருங்கு; குடம்பை- கூடு; உரைத்தலின்- உறிஞ்சுதலால்; தாஅம்-பரந்து கிடக்கும்; நசைஇ- விரும்பி; நலம்- பெருந்தன்மை; அன்னி- ஒரு சிற்றரசன்; பெரியன்- திதியன் என்பான்)

'புன்னைமரம் வெட்டுண்ட பிறகே திதியனும் அன்னியும் பகைமை ஒழிந்ததுபோல, யான் ஒழிந்த பிறகே இவர்கள் பூசல் தீரும் போலும்!" என்று நொந்துகொள் கிறாள் தோழி.


பாகம் 2 - புறம்


4. இலக்கியத்தில் வரலாறு 

 

'இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தமிழ் நாட்டில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறிவது அவசியமா?' எனச் சிலர் கருதலாம். சரிதம் மீண்டும் மீண்டும் திரும்புகிறதென ஓர் ஆங்கிலப் பழமொழியுண்டு. உலகின் பல்வேறு இடங்களிலும் வாழும் மக்கள், எவ்வளவு சிறிய நாட்டினராயினும், தங்களது பழமையைப் போற்றிக் கலையையும் பண்பையும் வளர்க்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அங்ஙனம் விரும்புகிற நாட்டினர் பலருக்குப் பழமையான கலைச் செல்வமோ, பண்பாடோ இல்லை. எனினும், என்ன? அவர்கள் ஏதானும் ஒன்றைக் கற்பித்துக் கொண்டு அதனைப் போற்றுகின்றனர். தமிழ்நாட்டில் வாழும் நமக்கு ஒரு சிறந்த பழமை உண்டு. அதை எண்ணுந்தோறும் மனத்தில் ஒரு பெருமிதம் உண்டாகிறது; நாமும் தமிழரெனத் தருக்கித் திரியலாம் எனத் தோன்றுகிறது.

'பழங்கதைகள் பேசுவதிற் பயனில்லை' எனச் சிலர் கூறக் கேட்கிறோம். அதுவுண்மையே. ஆனால், பழமை பேசுவதால், ஓர் ஊக்கம் பிறக்குமேல், சோம்பர் ஒழியுமேல், ஆண்மை விளங்குமேல் புதிய வாழ்வு தோன்று மேல், பழமை பேசுவதால் இழுக்கொன்றுமில்லை. நாம் இருக்கும் நாடு நமதென்று அறியவும், இது நமக்கே உரிமையாம் என்பதுணரவும், பழங்கதைகள் வேண்டத்தான் வேண்டும். அதுவும் தமிழரைப் பொறுத்தவரை மிகுதியாக வேண்டும்.

 

தமிழ் இலக்கியப் பழமை.

 

கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னரும், தோன்றி ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் தோன்றிய நூல்களைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனப் பகுத்தனர். பதினெண் கீழக்கணக்கு என்னும் தொகுதியுள் குறள் நீங்கலாக ஏனைய அனைத்தும் கிறிஸ்துவுக்குப் பல நூற் றாண்டுகட்குப் பின்னர்த் தோன்றியவையே. இம்மூன்று தொகுப்புள்ளும் சில புறப்பொருள் பற்றியன; பல அகப் பொருள் பற்றியன. அகம் என்பது ஒத்த பண்பினராகிய தலைவனும் தலைவியும் தம்முள் மனமொத்து இல்லறம் நடத்தும் இயல்பினை இயம்புவது. இதனையொழிந்த வாழ்க்கையெல்லாம் புறத்தின் கண் இடம் பெறும். மனித வாழ்க்கையை முற்றுங்கண்ட தமிழன், வீட்டினுள் வாழும் வாழ்க்கை, வெளியே வாழும் வாழ்க்கை என இரண்டு பெரும் பிரிவுகளை வகுத்தான். வாழ்வு முழுதும் இவற்றில் அடங்கிவிடுதல் காண்க.

முதலாவதாக உள்ள வீட்டு வாழ்க்கை என்று கூறப்படும் 'அகத்திணை'யை ஏழு சிறுபிரிவுகளாகப் பிரித்தான் தமிழன். இனி, அவனது புற வாழ்க்கையில் அவன் எங்ஙனம் வாழ்ந்தான் என்பதை இப்பொழுது காண்போம்.

 

புறவாழ்வின் அடிப்படை.

 

மனிதனின் புற வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படுபவை, நாடு, ஊர், அரசன், சமுதாயம் என்பவையேயாம். பல ஊர்கள் சேர்ந்த ஒரு பெருநாட்டை அரசியல் பிழையாது ஓர் அரசன் ஆட்சி செய்வானேயாகில், அங்குச் செம்மையான ஒரு சமுதாயம் ஏற்பட வழியுண்டு. நாடு, ஊர் என்ற இரண்டும் மனிதன் உடல் உரம் பெற்று வாழவும், அரசன் சமுதாயம் என்ற இரண்டும் அவன் மனம் உரம் பிற்று வாழவும் பயன்படுகின்றன. இவை நான்கும் செம்மையாயிருப்பின், தனி மனிதன் வாழ்க்கை செம்மைப்படும். செம்மை தனித் தனியே ஏற்படின், சமுதாயம் செம்மையடையும். எனவே, இவை ஒன்றைப் பற்றி நிற்பவை என்பது தெள்ளிதின் விளங்கும்.

 

கவிஞன் தோன்றும் நாடு.

 

நாடு சிறந்ததென்று சொல்லும்பொழுது நாம் அதில் வாழும் மக்களையே குறிக்கிறோம். இக் கருத்தை ஔவையார் புறநானூற்றுப் பாட்டு ஒன்றில் பின்வருமாறு அழகாகக் குறி்க்கிறார்:

 

நாடா கொன்றோ, காடா கொன்றோ,

அவலா கொன்றோ, மிசையா கொன்றோ,

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை, வாழிய நிலனே!" (புறம்-187)

 

(நிலமே, நீ நாடாக இருப்பினும், காடாக இருப்பினும் சரி; பள்ளமாக இருப்பினும், மேடாக இருப்பினும் சரியே; எங்கே நல்லவர்கள் உண்டோ, அங்கேதான் நீயும் நல்லை.)

 

எனவே தமிழன் வாழ்க்கை அன்று நன்றாயிருந்த தென்றால், அதற்குப் பல காரணங்கள் இருந்தன. தமிழ் நாட்டில் தமிழ் மொழி அரசு வீற்றிருந்தது. நாட்டில் வேளாளரும், வணிகரும் செல்வங்கொழிக்கச் செய்தனர்.

வறுமை என்பதே தலை காட்டாத நாட்டில் அறிவு வளமும், ஏனைய வளங்களும் கொழித்தல் இயல்பு. எலிசபெத்து மகாராணியார் காலத்தில் இங்கிலாந்து செழிப் புற்றிருந்தமையின், பற்பல கவிஞர் தோன்றி வாழ்ந்தனர் எனச் சரிதங் கூறுகிறது. அதேபோலத் தமிழ்நாட்டில் அற்றை நாளில் பல புலவர் தோன்றி வாழ்ந்தனர். காரணமென்ன? புலவனுடைய உயிரும் மனமும் மிக நுண்மையானவை. அவை அடிமை நாட்டில் தோன்று வதில்லை. ஒரோ வழித் தோன்றினாலும்,நிலைத்து வாழ்வதில்லை. கலைஞன் மனம் பரந்தும் விரிந்தும் இருப்ப தாகும். அத்தகைய மனநிலையை அடிமையாக வாழ்பவர் கள் போற்றுவதில்லை. குறுகிய மனப்பான்மையும், பிளவுபட்ட மனமுமே அடிமை நாட்டின் அடிப்படை இதில் எவ்வாறு கவிஞன் தோன்ற முடியும்? இன்றைய நிலையில் தமிழனுடைய உயர்ந்த மனப்பான்மையும் குறிக்கோளும் காணப்படவில்லை. தமிழன் பழைய நிலைக்கு வரவேண்டுமானால் நாட்டில் அறிவு வறுமையும் பொருள் வறுமையும் ஒருங்கே தொலைய வேண்டும்.

 

தமிழ் நாகரிகத் தொன்மை.

 

உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்த மக்கள், கூடிவாழும் நாகரிகத்தைக்கூட அடையாத அந்தப் பழைய காலத்தி லேயே இத்தமிழர் நாகரிகத்தில் முதிர்ந்திருந்தனர். அப் பகுதிகளில் உள்ளவர்கள் தனித்து வாழ்ந்து வேட்டை யாடி உயிர் வாழும் சமுதாய வாழ்வின் அடிப்படையான மருத நாகரிகத்தை அடைந்துவிட்டனர். குறிஞ்சி நாகரிகத் திலிருந்து மருத நாகரிகத்திற்கு வர எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமோ, நாம் அறியோம். அவ்வளவு பழைய காலத்திலேயே இத்தமிழினம் நாடாளும் நாகரிகம் பெற்றுவிட்டது என்பதை உறுதியாகக் கூறலாம். பிற நாடுகளைப்போல எழுதி வைக்கப்பட்ட சரித்திரம் தமிழர்க்கு இல்லை என்பது மெய்ம்மையே. ஆனால், எத்தகைய சரித்திரம் தமிழரிடம் இல்லை? தேதிவாரியாக எழுதப்பட்ட அரசர்கள் கதைகள்தாமே இன்று சரித்திரம் என்ற பெயரால் வழங்கப்படுகின்றன. இக்கதைகளே சரித்திரம் என்று கூறினால், தமிழர் சரித்திரம் இல்லைதான். "சரித்திரம் என்பதற்குத் தேதிகளே கண்கள்", என்று கூறினால், தென்னாட்டுச் சரித்திரம் என்றுமே குருடாக இருக்க வேண்டுவதுதான். ஆனால், 'சரித்திரம் என்பது மக்கள் வாழ்க்கை, நாகரிகம், குறிக்கோள் என்பவைபற்றிக் கூறுவதுதான்,' என்று கூறினால், தென்னாட்டின் பழங்கால வரலாற்றை ஆயப் பல குறிப்புகள் பழந்தமிழ்ப் பாடல்களில் நிரம்ப உண்டு" என எழுதினார் சரித்திரப் பேராசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்கார். இவை எவ்வளவு உண்மையான சொற்கள்!

 

எது சரித்திரம்?

 

இன்று நாம் சரித்திரம் என்ற பெயரில் எதனைப் படிக்கிறோம்? எலிசபெத்துக் காலத்து இங்கிலாந்து தேச சரித்திரத்தை அறிய விரும்பி ஒருவன் சரித்திரத்தைக் கையிலெடுத்தால், அவன் அங்குக் காண்பது யாது? அந்த நாளைய ஆங்கிலர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், எவற்றை உண்டார்கள், எவற்றை நினைத்தார்கள், எவற்றைக் குறிக்கோள்கள் என மதித்தார்கள், ஸ்பானியர்களைத் தோற்கடித்தமையின் அவர்கள் வாழ்வில் என்ன மாறுதல் கள் ஏற்பட்டன என்பவை பற்றி அறிய முடியுமா? இவை பற்றி அறிய வேண்டும் என்ற கருத்துடன் ஒருவன் இங்கிலாந்து தேச சரித்திரத்தைத் திறந்து பார்த்தால் என்ன இருக்கும்? மேற்கண்ட வினா ஒன்றுக்காவது விடை கிடைக்குமா? உறுதியாகக்கிடையாது. அதன் மறுதலையாக எலிசபெத்தின் வாழ்நாளில் அவள் எத்தனை கையெழுத்துக்களிட்டாள், எத்தனை சூழ்ச்சிகள் நடை பெற்றன என்பன பற்றியே எழுதப்பட்டிருக்கும். இவற்றைப் படித்துவிட்டு இங்கிலாந்து சரித்திரத்தைக் கற்று விட்டதாக நாமும் இறுமாந்து நிற்கின்றோம்! என்னே அறியாமை! ஸ்பானியரை வெற்றி கொண்டதற்கு எலிச பெத்து அடைந்த மகிழ்ச்சி பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், இலண்டன் போன்ற நகரத்தில் வாழ்ந்த மனிதனும் கிராமத்தில் வாழ்ந்த மனிதனும், ஏழையும் பணக்காரனும், நிலச்சுவான்தாரும் அவன் பண்ணை யாளும் இவ்வெற்றி பற்றி யாது நினைத்தனர் என்பதை அறிய விரும்பினால், இச்சரித்திரப் புத்தகம் அதுபற்றி யாதொன்றும் கூறாது*. இப்படி 'ராஜா மந்திரி' கதையைத் தேதிவாரி கூறும் சரித்திரம் தமிழர்கட்கு இல்லை என்பது மெய்ம்மைதான். ஆனால், தமிழ் மக்களுடைய வாழ்வைப் படம் பிடிக்கும் சரித்திரம் நிரம்ப உண்டு. இச்சரித்திரம் ஏனைய சரித்திரங்கள்போல உரைநடையில் இல்லாமல், கவிதையில் இருப்பது ஒரு வேறுபாடு. அதிகமாக மன்னர்களைப்பற்றி மட்டும் கூறாமல், பொதுமக்களைப் பற்றியும் பேசுவது இரண்டாவது வேறுபாடு. யாரும் பிறந்த தேதியையோ இறந்த தேதியையோ பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருந்தது மூன்றாவது வேறுபாடு.

 

தனிப்பட்டவர் வரலாறு இல்லை

 

வருடம், மாதம், தேதி என்ற இம்மெய்ம்மை பற்றித் தமிழர் அதிகம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. தமிழர் தம்முடைய நாகரிகமும் பண்பாடும் ஒரு சங்கிலித் தொடர் போன்றவை என்று நினைத்தார்கள் போலும்! தனிப்பட்ட மனிதர் எத்துணைச் சிறப்புடையவராயினும், அவரைப்பற்றிக் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.

அவர்கள் செய்த நற்செயல்களைக்கொண்டே அவர்கள் பெருமையைக் கணக்கிட்டனர். திருக்குறள் என்ற நூல் தமிழன் வாழ்வு, நாகரிகம், பண்பாடு, சமுதாயம் என்பவற் றோடு தனி மனிதனும் சிறப்படைய உதவிற்று என்ற உண்மையை அவர்கள் மறக்கவுமில்லை; மறுக்கவும் இல்லை. ஆனால் திருக்குறளை இயற்றிய ஆசிரியர் இந்நூலை இற்றியருளியது தவிர வேறு சமுதாயத்திற்கு என்ன உதவியைச் செய்திருத்தல் கூடும்? எனவே திருவள்ளுவருடைய பிறப்பு வளர்ப்பு முதலியன பற்றி அப் பழந்தமிழன் ஒன்றுமே குறித்து வைக்கவில்லை. திருக்குறள் செய்த உதவிக்கு நன்றி பாராட்டிய தமிழர்கள் அதற்காக அதனைப் பெருமைப்படுத்திப் பேசிய தமிழர்கள், அதன் ஆசிரியருடைய இயற்பெயரைக்கூட அறிந்துகொள்ளா மலும், குறித்து வைக்காமலும் இருந்ததற்கு இதுவே காரணம் போலும்! நெடுஞ்செழியன் போன்ற வெற்றி வீரர்களையும், கரிகாலன் போன்ற பேரரசர்களையும் பற்றிப் பாடிய பாடல்களிற்கூட அவர்கள் வெற்றியைப் பாராட்டினார்கள். ஆனால், இக்காலச் சரித்திரம் போன்றவை அல்ல இப்பாடல்கள்.

 

உண்மைச் சரித்திரம்

 

இன்ன நாளில் இன்ன இடத்தில் இவ்விருவரின் இடையே போர் நடைபெற்றது என்று கவிஞர் குறிப்பதில்லை. அதன் மறுதலையாக, இப்போரினால் இப்பயன் ஏற்பட்டது என்பதை மறைமுகமாகவும், குறிப்பாகவும் வெளியிட்டனர். எனவே, தனிப்பட்ட வருடையவும், சமுதாயத்தினுடையவுமான வாழ்வு, தாழ்வு, போராட்டம், எண்ணம், குறிக்கோள் முதலியவை பற்றி அறியவேண்டுமானால், எண்ணற்ற சரித்திரக் குறிப்புகள் உண்டு. தமிழ்ப் பாடல்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற நூல்களில் இத்தகைய குறிப்புக்களைப் பரக்கக் காணலாம். இவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழருடைய சரித்திரத்தை எழுதுவது பெரிதும் பயனுடைய செயலாக இருக்கும்.

 

5. நாட்டு வளமும் மக்கள் வளமும்

 

தமிழன் கண்ட நாடு

தமிழன் வாழ்க்கையைப் பார்க்கப் புகுமுன், 'அவன் நாடு எத்தகையது? எதை அவன் நாடு எனநினைத்தான்?' என்பதைக் காணவேண்டும். தமிழனுக்கு ஒரு வேதம் தந்த திருவள்ளுவர், நாட்டைப்பற்றிக் கீழ்வருமாறு கூறுகிறார்:

 

'நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல

நாட வளந்தரு நாடு' (குறள்--739)

 

இதன் கருத்தென்ன? முயற்சி செய்யாமல் பலன் தரக் கூடியதே நாடு என்பது மட்டும் அன்று; பெருமுயற்சி செய்து சிறுபயன் தருவதும் நாடு அன்று.வளம் என்பன இயற்கையாகக் கிடைக்கும் நலன்களாம். இதனை வேறு பாடல்களாலும் அறியலாம். மதுரைக்காஞ்சி என்றொரு நூல் உண்டு. மாங்குடி மருதனார் என்ற புலவர் பெருமான், பாண்டியன் தலையாலங்காலத்துச் செருவென்ற நெடுஞ் செழியனைப் பாடிய பாடலாகும் அது. அதில் பாண்டி நாட்டைப்பற்றி அவர் கூறுவதாவது:

 

மழைதொழில் உதவ, மாதிரங் கொழிப்ப,

தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,

நிலனும் மரனும் பயனெதிர்பு நந்த

நோயிகந்து நோக்கு விளங்க, (மதுரைக்காஞ்சி,10-15)

 

என்பது.

 

[உழவுத் தொழில் நன்கு நடைபெறுமாறு வேண்டுங் காலத்தில் மழை உதவவும், ஒருமுறை விதைத்தது ஆயிரமாக விளையவும், நிலமும் மரமும் தம்முள் போட்டி இட்டுக்கொண்டு மக்களுக்கு வேண்டிய பயனைத் தரவும், விளைந்த பயனை நன்கு அனுபவித்தலால் நாட்டு மக்கள் நன்கு வாழவும்]

 

இப்பகுதியிலிருந்து நாம் அறியவேண்டிய செய்திகள் பல உண்டு. வளத்தைப் புலவர் எங்ஙனம் கூறுகிறார் என்பதைக் காணல் வேண்டும். 'மழை உதவ' என்று கூறியவர், பிறகு 'வித்தியது' என்று கூறலினால் இயற்கை யின் பயனாகிய மழையும், மனித முயற்சியாகிய விதைத் தலும் ஒன்று கூடலைக் கூறுகிறார், இவ் விரண்டினுள் ஒன்று குறையினும் பயனில்லை; நாடு நாடாய் இராது. அம்மட்டோ? இன்று அரசியலாரின் காட்டிலாக்கா செய்யும் வேலையை நாமறிவோம். ஆனால், அன்று தமிழர் காட்டைப் போற்றி வந்தனர் என்பதை, மரத்தின் செயலும் மேற்பாடலின் கூறப்படுதலால் அறியலாம். மனித முயற்சி நாட்டின் செம்மைக்கு இன்றியமையாதது.

 

நீர் வளம்

 

இயற்கையினால் உண்டாகும் மழைநீரை மட்டும் நம்பித் தமிழன் வாழவில்லை. அங்ஙனம் வாழ்ந்திருப்பின் நாடு செழிப்புடன் இருந்திருக்க முடியாது. ஆகவே, அவன் கால்வாய்கள் பலவற்றைத் தனது முயற்சியால் உண்டாக்கி னான். குளங்களும் ஏரிகளும் அவனது விடாமுயற்சியின் அடையாளங்களாக இன்றும் உள்ளன. இருநூறு வருட ஆங்கில ஆட்சியாற் பெற்ற பயன், நீரில்லாத ஆறுகளும் காய்ந்துபோன குளங்களுமேயாம்! ஆனால், காவிரியும் வைகையும், தாமிரவருணியும் தமிழன் முயற்சியின் சிகரங்கள். காவிரியைப் பற்றிப் பட்டினப்பாலை,

 

வான்பொய்ப்பினும் தான்பொய்யா

மலைத்தலைஇய கடற்காவிரி

புனல்பரந்து பொன்கொழிக்கும் (பட்டினப்பாலை, 5-8)

 

[மழை பெய்யாவிடினும் தான் தவறாமல் மலையிடத்துப் புறப்பட்டு நீரைப்பெருக்கிப் பொன் கொழிக்கும் காவிரி.]

என்று கூறுகிறது. அது மழைவளங் குறையினும் தான் நீர் குன்றாது பொன்னை வாரிக் கரையில் ஏற்றும் தன்மை யுடைய ஆறு.

 

வையை ஆற்றைப் பெண்ணாக உருவகப்படுத்துகிறார், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார ஆசிரியார்:

 

விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்

விரைமலர் நீங்கா அவிர்அறற் கூந்தல்

உலகுபுரந் தூட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்

புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி

வையை என்ற பொய்யாக் குலக்கொடி (சிலம்பு, 13: 166-170)

 

[குறுக்கும் நெடுக்கும் ஓடும் கயல் மீனாம் கண்களையும், மணம் பொருந்திய அறலாகிய கூந்தலையும், பொருந்தி உலகைக் காக்கப் பல பொருளையும் விளைவித்து ஊட்டுபவள் வையை என்ற பெண்]

 

இத்தகைய நீர் வளமுடைய நாடாய் இருப்பினும், தமிழ் மன்னர் சும்மா இருந்து விடவில்லை. ஆறுகள் செல்லாவிடங்களில் குளங்கள் வெட்டினர் எனப் பட்டினப்பாலை கூறுகிறது.

 

'குளந்தொட்டு வளம்பெருக்கி' (பட்டினப்பாலை-284)

 

'நிலனெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தொட்டோர்'

'நாட்டின் நீர்வளம் மிகும்படியாகக்

குளந் தோண்டியவரே சிறப்புடையர்' (புறம்- 28)

 

என மேற்காட்டிய புறப்பாடல் கூறுகிறது. எனவே இத்தகைய அருமைப்பாட்டோடு தமிழ் நாடு செழித்திருந்தது. இவ்வளவு வளம் பொருந்திய நாட்டில் வறுமை ஏற்படுவதே அரிது. ஒருவேளை இயற்கையின் கோளாறுகளால் மழைகெட்டுப் பஞ்சம் வந்தால், அதற்கும் அரசரே காரணம் என மக்களும் அரசருமே நினைத்தார்கள். இக்காலத்தில் வாழும் நமக்கு ஒருவாறு இது வியப்பாகவும் இருக்கும். ஆனால், பழந்தமிழ் மன்னன் மழை வளம் முதலியன குறையாதிருப்பது தன் செங்கோல் நலத்தால்தான், என்று நினைத்தான்.

 

மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்;

பிழையுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்;

குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி

மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்

துன்ப மல்லது தொழுதகவு இல். (சிலம்பு, காட்சி. 100-104)

 

(நாட்டில் மழை வளங்குறையினும், உயிர்களுக்கு வேறு எத்தகைய துன்பம் வரினும், செங்கோல் பிழையாமல் ஆட்சி செய்யும் மன்னர் குடியில் மகனாய்ப் பிறத்தல் பெருந்துன்பமே அல்லது, விரும்பத்தக்கது அன்று)

 

இவ்வடிகள் அரசன் தன் வாழ்க்கையை எவ்வாறு நினைத்தான் என்பதை அறிவிக்கும். மன்னர்களாகப் பிறந்தது பிறர் பொருளைச் சுரண்டிச் சுகமடைவதற் காகவே என்று நினைக்கும் இந்நாளில், இவ்வடிகள் சிறிது மன அமைதியை அளிக்கின்றன. மேலே கூறிய இவை நீங்க ஏனைய துன்பங்களும் வராமல் தமிழ் மன்னர் காத்து வந்தனர்.

 

வழிகளின் நிலை

 

நாகரிகம் மிருந்துள்ள இந்நாளில் கொலையும் கொள்ளையும் எல்லையற்று நடைபெறுகின்றன. ஆனால், அந்நாளில் அவ்வாறில்லை என அறிகிறோம். போக்கு வரவு சாதனம் குறைந்திருந்த அப்பொழுதுகூட மன்னர் ஆணை மூலை முடுக்குகளிலும் நடைபெற்று வந்தது. அரசன் எங்கிருப்பினும் அவன் ஆணை எங்கும் சென்று உலகைக் காப்பதாக இன்றும் ஏட்டில் எழுதியிருக்கக் காண்கிறோம். அரசனைத் தம் வாழ்நாளில் கண்டிராத பலரும், அவன் ஆணை நன்கு நடைபெறுமாறு உதவி செய்கின்றனர். இக்கருத்தைப் பிற்காலத்து வந்த சிந்தாமணி ஆசிரியர் நன்கு எடுத்துக் கூறுகிறார்:*

 

உறங்கு மாயினும் மன்னவன் தன்னொளி.

கறங்கு தெண்திரை வையகம் காக்குமால் (சிந்தாமணி. 248)

 

அரசன் உறங்கிக் கொண்டிருப்பினும் அரசநீதி வழுவாது நடைபெறும் என்பதே இதன் பொருள். இது போலவே பழந்தமிழ் நாட்டில் ஆட்சி நிலவியதெனச் சங்க நூல்கள் முழங்குகின்றன.

 

தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் ஆண்ட நாட்டைப்பற்றிப் பெரும்பாணாற்றுப்படையில் பின் வருமாறு கூறப்படுகிறது;

 

அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக்

கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக்

கொடியோ ரின்றுஅவன் கடியுடை வியன்புலம்;

உருவும் உரறாது; அரவுந் தப்பா

காட்டு மாவும் உறுகண் செய்யா (பெரும்பாணாற்றுப்படை 400-404)

 

[ வழியிடைச் செல்வோர் வருந்தப் புடைத்து அவர் கைப்பொருளைத் திருடும் மக்கள் அவன் நாட்டில் இல்லை. மேலும் வனவிலங்குகளும் பாம்புகளுங்கூட அவன் நாட்டில் துன்பஞ் செய்தலில்லை)

 

இம்மட்டோ? ஊர்க்காவல் செய்யும் பாதுகாப்புப் படைஞர், நீண்ட வழிகளிலும் கவர்த்த வழிகளிலும் நின்று வியாபாரப் பொருள்களின் போக்குவரத்துக்குத் துன்பம் ஏற்படா வண்ணம் காவல் புரிகின்றனர். அவர்கள் எத்தகையவர்கள்? ஆசிரியர் அவர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார்:

 

கடம்பமர் நெடுவேள் அன்னமீளி

உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்

உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்

வில்லுடை வைப்பின் வியன்காடு... (பெரும்பாணாற்றுப்படை 75-78)

 

(கடம்பப்பூமாலை அணிந்த முருகனைப் போன்ற எஃகுடனும், நீண்ட கைகளும் உடைய (போலீஸ்) வீரர்கள் சுங்கம் வசூலிக்கும் வழிகளிலும் நீண்ட பெருவழிகளிலும் நின்று காவல் புரிகின்றனர்)

 

அவர்களுட் பலர் அரசனைக் கண்டிராவிடினும், அவன் கொற்றம் நன்கு நடைபெற உதவுகின்றனர். இத்தகைய மாட்சிமையுடைய நாட்டில் ஒரு வேலி நிலம் ஆயிரங்கலம் விளைவதாயிருந்தது.

 

வாணிக எல்லை

 

இதுவரை கூறியவற்றைக் கொண்டு பழந்தமிழன் பயிர்த் தொழில் ஒன்றுமே கொண்டு வாழ்ந்தான் என்று நினைத்து விடுதலாகாது. அந்நாளில் தமிழ்நாடு வாணிகத் தில் சிறந்த நாடுகளில், தலையாய நாடாயிருந்தது. தமிழரின் வாணிகச் சிறப்பைக் குறிக்கத் தமிழ் நூல்களேயன்றி, ஏனைய நூல்களும் சான்று பகரும். பெரியபுளூஸ் (கி.பி. 75) என்ற நூலும், கிரேக்க சரித்திரமும், வேண்டும் அளவு தமிழ் நாட்டின் வாணிகத்தைப் பேசுகின்றன. இன்றும் கொற்கை, காயல்பட்டினம் போன்ற கீழ்க் கடற்கரைப் பட்டினங்களிலும், முசிரி போன்ற மேலைக் கடற்கரைப்பட்டினங்களிலும் பழைய உரோமநாட்டுக் காசுகள் அகப்படுகின்றன. தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி யான முக்கியப் பொருள்கள் - முத்து, பவளம், மிளகு, உணவுப் பொருள்கள், அரிசி, மயில் தோகை என்பவை. யாம். இன்றும் கிரேக்க மொழியில் காணப்படும் 'ருஷ்' (orydsa) என்ற சொல்லும் 'துஷ்' (taos) என்ற சொல்லும் முறையே அரிசியையும், தோகையையும் குறிக்கும் வடிவு மாறிய தமிழ்ச் சொற்களாம். கி.மு. 55ல் வாழ்ந்த உரோமாபுரிச் சக்கரவர்த்தியான மார்க்கஸ் அரேலியஸ் என்பார், 'உரோமர்கள் தங்கள் ஆடம்பர வாழ்க்கையைத் திருப்தி செய்துகொள்வதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து முத்துக்களை வரவழைக்கிறார்கள். அதற்காக அவர்கள் அனுப்பும் பொன் எண்ணிலடங்காதது" எனக் கூறியிருக் கிறார். சிறிது காலம் தமிழ் நாட்டிலிருந்து முத்து இறக்குமதி செய்யப்படக்கூடாதென்ற சட்டமும் உரோமா புரியில் அமலில் இருந்து வந்தது. இம்மட்டோடு அவர்கள் ஆடம்பர வாழ்க்கை நிற்கவில்லை. உயிர்ப் பொருள் களாகிய கிளி, குரங்கு, மயில் முதலியவற்றையும் தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்தனர். முத்துக் குளிப்பதி லும் சிறந்த முத்துகளைச் சேகரிப்பதிலும் பாண்டி நாட்டார் உலகப்புகழ் பெற்றவர். பிளினியின் வாக்கின்படி, மரக்காலால் அளந்து மூலைகளிற் குவிக்கும் படியான அவ்வளவு முத்துக்கள் பாண்டி மன்னனிடம் இருந்தன. எல்லா நாட்டினரோடும் தமிழர் வியாபாரஞ் செய்யினும், சிறப்பாக யவனர், கிரேக்கர் இவர்களுடன் தொடர்பு கொண்டு வியாபாரஞ் செய்தனர் என அறிகிறோம்.

 

(பெரிபுளூஸ்: சோமசுந்தரதேசிகர் மொழிபெயர்ப்பு, பக்கம் 62) காவிரிப்பூம்பட்டினம், மதுரை போன்ற தலை நகரங் களில் யவனர்களும் கிரேக்கர்களும் குடும்பங்களோடு வந்து தங்கி வாழ்ந்தார் என்பது அறிய முடிகிறது. தங்கி வாழ்ந்த அவர்கள் தங்கள் மொழியையே பேசிவந்தமை யின் இப்பட்டினங்கள் பலமொழி வழங்கும் ஊர்களாயின.

 

மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்

முட்டாச் சிறப்பிற் பட்டினம். (பட்டினப்பாலை 215-217)

 

(பல மொழிகளும் வழங்கும் குற்றம் இல்லாத பட்டினம். வேற்றுநாட்டார் கலந்து வாழும் காவிரிப் பூம்பட்டினம்)

 

என்ற பட்டினப்பாலை அடிகள் இக்கருத்தை வலியுறுத்து கின்றன. யவனர்கள் சிறப்பாகக் குதிரைகளையும், சாராயத்தையும், இங்கு இறக்குமதி செய்துவிட்டு, அவற்றிற்குப் பதிலாக அணிகலன்களையும் முத்துக்களை யும் ஏற்றுமதி செய்து சென்றார்களென்பது மதுரைக்காஞ்சி யால் தெரிகிறது.

 

நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்

புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்

வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப. (.காஞ்சி.822-824)

 

(இடம் அகன்ற யவனம் முதலிய தேசங்களுக்கு இந் நாட்டுப் பெரிய அணிகலன்களைக் கொண்டு போவான் வேண்டி அங்கிருந்து கொணர்ந்த குதிரைகள்)

 

உள்நாட்டு வாணிபம்

 

பழந்தமிழன் வாணிகம் கப்பல் மூலம் நடைபெற்றது ஒரு புறமிருக்க, அவனது உள்நாட்டு வாணிகமும் மிக்க பெருமை வாய்ந்திருந்தது. சங்கப் பாடல்களில் எங்கும் இதனைக் காணலாம். சகடம் என்று கூறப்படும் வண்டி களில் பொருள்களை ஏற்றிச் செல்லும் வணிகர், பல சௌகரியங்களை முன்னிட்டுக் கூட்டமாகவே எங்கும் செல்வர். அத்தகைய கூட்டத்திற்குச் சாத்து என்ற பெயரும் வழங்கி வந்துளது. பொருள்களை வைத்து வாணிகஞ் செய்யும் கடைத்தெருவிற்கு அங்காடி என்ற பெயர் காணப்படுகிறது. காவிரிப்பூம்பட்டினத்துத் கடைவீதியைப் பற்றிப் பட்டினப்பாலையிலும், மதுரை மாநகரின் கடைவீதிச் சிறப்பைப்பற்றி மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் என்ற நூல்களிலும் பரக்கக் காணலாம்.

 

இறக்குமதியும் ஏற்றுமதியும்

 

இவற்றுள் ஒன்றை விரிவாக ஆராய்வோம். மதுரை மாநகரத்து நாளங்காடியைப் பற்றி மதுரைக்காஞ்சி ஆசிரியர் கூறும் வகையால் பழந்தமிழ் நாட்டின் செல்வ நிலை நம்மால் ஒருவாறு அறிய முடிகிறது. ஒரு நாட்டில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருள்களைப் பொறுத்தே, அந்நாட்டின் பொருளாதார நிலை இருக்கும். எந்த நாட்டில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிக் கிறதோ, அந்நாடு வறுமையால் வாட நேரிடும். உதாரண மாக, நமது இந்தியாவையே எடுத்துக் கொள்வோம். இன்றைய நிலையில் நம்நாட்டின் இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகம்.

 

இங்கிலாந்தை எடுத்துக் கொள்வோம். உணவுப் பொருள்களை வேற்று நாடுகளிலிருந்து அந்நாடு வர வழைக்கிறது; ஆனால், அதற்குப் பதிலாக இயந்திரங்கள் முதலியவற்றை ஏற்றுமதி செய்கிறது. மேலும், எவ்வித மாகவேனும் தன் பொருள்களைப் பிறர் வாங்குவதற்காகப் பல வழிகளையும் அந்நாடு கையாளுகின்றது. அந்த நாட்டில் இயந்திரங்கள் உண்டு. ஆனால், வெற்று இயந்திரங்களை ஓடவிட்டால் அவை பொருள்களை உண்டாக்குமா? மூலப் பொருள்களாகிய பஞ்சும் எண்ணெய் விதைகளும் இருந்தால்தானே துணியும் சோப்பும் உண்டாக்க முடியும்? இந்நிலையில் நாம் என்ன செய்கிறோம்? நமது நாட்டில் உண்டாகிற பஞ்சையும் எண்ணெய் விதைகளையும் அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறோம்; அவற்றையே மீண்டும் துணியாகவும், சோப்பாகவும் பெறுகிறோம். (இது விடுதலைக்கு முந்தைய நிலை) இவ்வாறு நடைபெற்று வருமானால், நமது பொருளாதார நிலை கீழே போகாமல் வேறு எங்ஙனம் இருக்க முடியும்?

இஃதொரு புறமிருக்க, போர் நடைபெற்ற சென்ற சில ஆண்டுகளில் எண்ணற்ற பொருளை ஏற்றுமதி செய்தோம். பணத்தால் நிறைந்த பிரிட்டனைக்கூட நமக்குக் கடன்கார நாடாக்கி விட்டோம். ஆனால், இந்நிலை எங்ஙனம் முடிந்தது? நமது நாட்டிற்குத் தேவையான பொருள்களை நாமுபயோகிக்காமல் பிறருக்கு அனுப்பி வைத்ததனா லேயே இது முடிந்தது. அப்பொழுது நாம் அனுபவித்த வறுமை சொல்லிலடங்காது. இன்று நாமடைந்த பயனென்ன? நமது கடனை அத்தேசம் திருப்பித்தர இயலுகிறதா? சாதாரண மக்கள் ஒருவர்க்கொருவர் கடன்படுவதும் கொடுப்பதும் போலத் தேசங்கள் செய்ய முடியாது. சாமான்கள் மூலமாகவே கடனைத் தீர்க்க இயலும்.

 

இவற்றிலிருந்து நாம் அறிவதென்ன? சாதாரணமாக ஒரு நாட்டின் பொருளாதார நிலை கேடு அடையாமல் இருக்கவேண்டுமே யானால், அந்நாட்டின் இறக்குமதி ஏற்றுமதி என்ற இவ்விரண்டும் தம்முள் ஒத்த அளவுடை யனவாய் இருக்க வேண்டும். இன்றேல், தீங்கே விளையும். அமெரிக்காவைப் போன்ற தேசம் பணச் செல்வத்தோடு பொருள் வளத்தையும் பெற்றிருப்பதால், மேற்கூறிய இரண்டனுள் ஒன்று மிகினும் குறையினும் நாட்டின் செல்வநிலை இடர்ப்படுவதில்லை. எனவே, எந்த ஒரு நாடு பொருள் வளம் மிக்கு விளங்குகிறதோ, எந்த நாடு தன் தேவைக்குப் பிறர் கையை எதிர்பாராமல் இருக்கிறதோ, அந்த நாடே செல்வ நாடு என்று கூறப்படும். மேலே கூறிய கருத்துக்களை மனத்திலிருத்திக் கொண்டு பழைய தமிழ் மதுரையைக் காண்போம்.

 

மதுரையில் வணிக நிலவரம்

 

மதுரையம்பதியை

 

'மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்' (மதுரைக்காஞ்சி. 429)

 

என்று மதுரைக் காஞ்சி ஆசிரியர் கூறுகிறார். வானை முட்டுங் கட்டடங்கள் உலகின் பலவிடங்களிலும் தம் புகழைப் பரப்பி நிற்கின்றன. கடைத்தெரு மிகவும் அகன்றது. பணியாரம் விற்கும் பாட்டி முதல் மணியும் பொன்னும் விற்கும் பெருங்குடி வணிகர்வரை அனை வரும் நிறைந்துள்ளனர். இவர்கள் விற்கும் பொருள்களைப் பெரிதும் விரும்பி வாங்குகிறவர் வேற்று நாட்டினர் என்பதுந் தெரிகிறது. இங்ஙனம் வந்த வேற்று நாட்டவர் தங்கள் பொருள்களை இங்கு கொணர்ந்து விற்று, அவற்றிற்குப் பதிலாக இப்பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இற்றை நாளில் இங்ஙனம் பெருவாணிகம் நடைபெறுகிற இடங்களில் திடீரென மாறுதல்கள் ஏற்படுவது கண்கூடு. பொருள்களின் விலைகள் திடீரென ஏறியும் இறங்கியும் பலரைப் பெருஞ்செல்வராகவும், ஓட்டாண்டிகளாகவும் செய்தல் நாம் அறிந்ததொன்றே.

ஆனால், இவ்வளவு பெருவியாபாரம் நடந்தும் (வாணிக) நிலை மாறாது இருந்ததாம் மதுரை மாநகரில். இதனை ஆசிரியர் இக்காலப் பொருளாதார சாத்திரத்திற் குறிக்கப்படுஞ் சொற்களாற் குறிக்கவில்லை; ஆனால் அதனைவிடச் சிறந்த முறையிற் குறிக்கிறார். வியாபாரப் பெருக்கிற்கு ஓர் உவமை தருகிறார். அவ்வாறு உவமிக்கும் பொருள் கடல் ஆகும். அக்கடலுக்குக் கொடுக்கிற அடை மொழிகளால் முதல்பொருளையுஞ் சிறக்க வைக்கிறார். அதெங்ஙனம் என்பதுக் காண்போம். கடலுக்குப் பல இயல்புகள் உண்டு. அவற்றுள் சிறந்த ஒன்றை அவர் எடுத்தாளுகிறார். கடல் தன்பால் எவ்வளவு நீர் ஆவியாகப் போனாலும் தன்னளவில் ஓர் அங்குலமும் குறையவில்லை. இவ்வியல்பை ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். இவ்வியல்பை மதுரையின் வியாபாரத்திற்கு வைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும்

வேற்று நாட்டிலிருந்து எவ்வளவுதான் கப்பல் கப்பலாகப் பொருள்களைக் கொண்டுவந்து குவித்தாலும், அல்லது கப்பல் கப்பலாக இங்குள்ள பொருள்களை அள்ளிச் சென்றாலும், அவற்றால் மதுரை நகர நாளங்காடி (பகற்கடை) நிலவரம் மாறுபடவில்லையாம். அதாவது, நாட்டின் பொருளாதார நிலையில் வேற்றுமை காணப்படுவதில்லை. இது ஆச்சரியப்படத் தக்கது அன்றோ? ஓர் உவமானத்தால் ஆசிரியர் இந்தப் பொருளாதாரக் கருத்தை விளக்கிக் கூறிவிட்டார். இதோ பாடலைக் காணுங்கள்:

 

மழைகொளக் குறையாது புனல்புக மிகாது

கரைபொருது இரங்கு முந்நீர் போலக்

கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது

மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் நாளங்காடி.

(மதுரைக்காஞ்சி 425-450)

 

(கரை பொருதிரங்கு முந்நீர் - கரையை மோதி ஒலிக்குங் கடல், கொளக்கொள - வேற்று நாட்டவர் பலமுறை அள்ளிச் செல்ல, தரத்தர - அவரது பொருளைப் பல முறை கொண்டு வந்து சேர்க்க.)

 

பண்டமாற்று வாணிகம்

 

தமிழ்நாட்டு வாணிகம் சிறந்த முறையில் நடை பெற்றது. அவ்வாறு நடந்தும், நாட்டின் பொருளாதார நிலையைக் குலைக்கக்கூடிய அளவில் நடைபெறவில்லை என்பதும் சில பாடல்களால் அறிகிறோம். ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களும் வெவ்வேறானவை. ஆனால் அவற்றின் மதிப்பு ஒன்றாகவே இருந்தது என அறிகிறோம். இன்றும் அதே நிலையில்தான் வெளிநாட்டு வாணிகம் நடைபெற்று வருகிறது. இதனைப் பழங்காலத்தில் 'பண்டமாற்று' என்று கூறுவர். வெளி நாட்டிலிருந்து வருகிற பொருளுக்கு ஒரு விலையுண்டு. ஆனால், அவ்விலையை நேரடியாக நம் நாட்டில் வழங்குகிற பணத்தால் கொடுக்க முடியாது. ஏனென்றால், நம் நாட்டில் வழங்குகிற நாணயத்துக்கும் வேற்று நாட்டில் வழங்குகிற நாணயத்துக்கும் வேறுபாடு உண்டு. எனவே, வருகிற பொருள் எவ்வளவு விலை மதிப்புள்ளதோ, அவ்வளவு விலை மதிப்புள்ள மற்றொரு பொருளை அவர்கள் நாட்டுக்கு அனுப்புவதன் மூலம் வாணிகம் இன்றும் நடைபெறுகிறது; அன்றும் நடை பெற்றது. இம்முறையில் இரண்டும் ஒத்த மதிப்புள்ள பொருள்களாக இருக்க வேண்டும் என அறிகிறோம். இக் கருத்தைப் பட்டினப்பாலை ஆசிரியர் நன்கு விளக்குகிறார். அவரும் மழை நீரையே உவமையாகக் காட்டுகிறார். ஆனால், அவர் அவ்வுவமையைக் கையாளுகிற முறையே வேறு. மழையின் உற்பத்தி நாமறிந்ததே. கடலிலுள்ள நீரைச் சூரிய வெப்பம் ஆவியாக மாற்றிப் பிறகு மேக மாக்குகிறது. இம் மேகம் நிலப்பரப்பில் நெடுந்தூரம் செல்கிறது. மலைகள் நிறைந்த பிரதேசங்களில் மேகம் தன் பாலுள்ள நீரை மழையாகப் பொழிகிறது. அம்மழை நீர் மீண்டும் சிறு கால்களாகத் தொடங்கிப் பெரிய ஆறாக மாறி, இறுதியில் புறப்பட்ட கடலுக்கே வந்து சேருகிறது. வேறு வழியாகவும் இதனைக் கூறலாம். நீர் கடலிடத்திலிருந்து ஆவி வடிவாகச் சென்றது; நீர் வடிவாகத் திரும்பி வந்தது. இரண்டும் தன்மையால் மாறுபடினும் மதிப்பால் ஒத்தே உள்ளன அல்லவா? இம்மாதிரியே காவிரிப்பூம் பட்டினத்துத் துறைமுகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் நடைபெறுகின்றன. தன்மையால் இரண்டு சரக்குகளும் மாறுபடினும், மதிப்பால் அவை ஒத்தவையே. இதனை அவ்வாசிரியர் கூறும் முறை நோக்கற்பாலது.

 

வான்முகத்துநீர் மலைப்பொழியவும்

மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்

மாரிபெய்யும் பருவம்போல

நீரினின்று நிலத்தேற்றவும்

நிலத்தினின்று நீர்பரப்பவும்

அளந்தறியாப் பலபண்டம்

வரம்பறியாமை வந்தீண்டி (பட்டினப்பாலை 126-32)

 

[மேகம் முகந்த நீரை மலையில் பொழியவும், மலையில் பொழியப்பட்ட நீர் கடலில் சேரவும் உள்ள நிலை போல, நீரிலிருந்து மூட்டைகளைக் கரையிலேற்றவும் கரையில் இருந்து கப்பலில் ஏற்றவும் நிறைந்த பொருள்கள் உள்ளன]

 

கடல் நீர் ஆவியாகி மேலே செல்வதும் பிறகு மழை யாகப் பொழிந்து கடற்கு வருவதும் நீர் என்ற அளவில் ஒன்றே யாயினும் நீராவி வேறு. நீர் வேறு.

 

ஆழ்ந்து நோக்கினால் தமிழ்நாடு ஏற்றுமதி செய்த பொருள்கள் வேறு இறக்குமதி செய்யப்பெற்ற பொருள்கள் வேறு என்பன இவ்வுவமை வாயிலாகத் தெளிவாக எடுத்துக் காட்டப் பெறுகின்றன.

 

இவ்வாறு நாம் பொருள் கொள்வது சரியானதுதான் என்பதனை,

 

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,

காலின் வந்த கருங்கறி மூட்டையும்,

வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்,

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,

கங்கை வாரிதியும் காவிரிப் பயனும்

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்

அரியவும், பெரியவும் நெரிய ஈண்டி,

வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகு (பட்டினப்பாலை 185-193)

 

என்னும் தொடர்கள் விளக்குகின்றன.

 

(கடல் வழியாக - பாய்மரக்கப்பலில் கொண்டுவரப் பெற்ற நிமிர்ந்த செலவினையுடைய குதிரைகளும் மேலைக் கடற்புறத்திலிருந்து கொணரப்பெற்ற கரிய மிளகுப் பொதி களும், பொதிய மலையில் கிடைக்கும் சந்தன, அகிற் கட்டைகளும் கொற்கைத் துறையிலிருந்து வந்த முத்தும் கீழைக் கடல் பவழமும், கங்கையாற்றங்கரை வளமும் (யானை, மாணிக்கம், பொன்) கடாரத்திலிருந்து பெறப் பட்ட நுகர் பொருள்களும் சீனத்திலிருந்து தருவிக்கப் பெற்ற கருப்பூரம், பனிநீர், குங்குமம் முதல்வாய பல பொருள்களும் நிலத்தின் முதுகு நெளியும்படி இடப்பட் டிருந்தன்.)

 

இவற்றுள் புரவி முதலியன கடல்வழி (கலத்தில்) வந்தவை. மணி, பொன் முதலியன நிலத்து வழி (காலின்) வந்தவை, என்று அறிகிறோம்.

 

குணகடல் துகிர் என்னும் பொழுது இன்றைய ஆஸ்திரேலியப் பகுதியின் பவழத்தைக் குறிக்கின்றது என்று கொள்வதில் பிழையில்லை. இன்னும் சற்று ஆழமாக நோக்கினால் மேற்சொன்ன உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

 

கடலிலிருந்து ஆவியாகிச் செல்லும் நீரின் அளவும், மழையாகக் கடலுள் வந்து சேரும் அளவும் ஒத்து இரா.

 

கடலிலிருந்து ஆவியாவது மிகுதி.

வந்து சேரும் நீரின் அளவு குறைவு என்பது விஞ்ஞான ரீதியில் உண்மையே.

இத்தகைய ஓர் உவமை கூறுவதன் மூலம் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களின் அளவு மிகுதி; இறக்குமதி ஆகும் பொருள்களின் அளவைவிட மிகுதி.

மேற்காட்டிய அடிகளால் அரேபியா, பர்மா ஆஸ்திரேலியா, சீனம் முதலிய வெளிநாட்டவருடன் இத்தமிழர் வாணிகம் செய்ததுடன், கங்கைவெளி, இலங்கை முதலிய அண்டை நாடுகளுடன்கூட வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்று அறிகிறோம்.

இத்தகைய நிலையை இக்காலப் பொருளாதாரச் சொற்களால் கூறவேண்டுமானால், 'சமன் செய் வாணிகம்' (Balanced Trade) என்று கூறலாம்.

 

சுங்கவரியும் பயனும்

 

இதனைப் பார்க்கும்பொழுது, எல்லா நாட்டினரும் அவரவர் விருப்பம் போல வேண்டுவனவற்றைக் கொணர்ந்து தமிழ்நாட்டில் வாணிகம் செய்யலாம்போலும் என்று நினைத்துவிடுதல் ஆகாது. அவ்வாறு செய்கின்றதை இக் காலத்தார் 'கட்டுப்பாடற்ற வாணிகம்' (Free Trade) என்று கூறுவர். இத்தகைய ஒரு வாணிகமே நாட்டின் பொருளாதாரத் திட்டத்திற்கு ஏற்றது என்று வாதாடுகிறவர்களும் உண்டு. ஆனால், இத்தகைய ஒரு நிலை, நாட்டின் பொருளாதாரத்துக்கும் தொழில் வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கும் என்று நினைக்கிறவர்களும் உண்டு. இவ்விரு கட்சியாரும் இன்றுங்கூட ஒரு முடிவுக்கு வரவில்லை. ஆனால், பழந்தமிழர் இதனைப் பற்றி என்ன நினைத்தனர் என்பதைக் காணலாம்.

பழந்தமிழர் வேற்று நாட்டினருடன் செய்த வாணிகத்தை வரையறுத்தே செய்தனர் என்பதை அறிகிறோம். அதனை எவ்வாறு வரையறுத்தனர் என்பதை அறிவது மிக இன்றியமையாதது. இன்றும் வேற்று நாட்டிலிருந்து அதிகமான பொருள்கள் வரக்கூடாதெனக் கருதினால், அரசாங்கத்தார் அதனைத் தடுப்பதற்கு ஒரே முறையைத்தான் கையாளுகின்றனர். அப்பொருளின் மேல் சுங்கவரியை உயர்த்திவிடுவதே (Higher Tariff) அம்முறை அங்ஙனம் செய்வதால் பொருளுக்கு இயற்கையாக வைக்க வேண்டிய விலைக்குமேல் இந்தச் செலவையும் ஏற்றி வைத்து விற்க நேரிடுகிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்க அப்பொருள் தகுதியற்றதாகிவிடுமே யானால், அதனை யாரும் வாங்கமாட்டார். வாங்காத பொருளை யாரும் இறக்குமதி செய்யமாட்டார். எனவே, இம்முறை யினால் வேற்று நாட்டு வாணிகத்தைக் கட்டுப்படுத்தலாம். இம்முறையிலேயே அன்றைய தமிழ் நாட்டில் வாணிகம் நடைபெற்றதெனப் பட்டினப்பாலை குறிக்கிறது. பட்டினப் பாலை கரிகாற்பெருவளத்தான் என்ற சோழ அரசன் மேல் பாடப்பட்ட அரிய பாடல். அவன் இமயஞ் சென்று புலிக் கொடி நாட்டி மீண்டவன். எனவே, அவன் காலத்தில் தமிழ்நாடு செல்வம் கொழித்திருக்குமென்பதில் ஐய மில்லை. அவனுடைய முக்கியத் துறைமுகப் பட்டினம் காவிரிப்பூம்பட்டினம்.

காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் பொருள்கள் வந்து இறங்குகின்றன. அவற்றைச் சுங்க இலாக்காவைச் சேர்ந்த அலுவலர் வந்து பார்வையிடுகின்றனர்; அவற்றின் மதிப்பை அளவிடுகின்றனர். பொருளின் மதிப்பென்பது எப்பொழுதும் ஒரு நிலையாக இருப்பதில்லை. அங்ஙனம் இருக்கவும் இயலாது. அப்பொருளுக்கு இருக்கும் அவசியத்தைப் (Demand)பொறுத்து அதன் மதிப்பும் (Value) மாறுபடும் என்பது நாமறிந்ததொன்று. எனவே, அதன் அவசியத்தை, அப்பொழுதுள்ள நாட்டின் நிலையைச் சீர் தூக்கிப் பார்த்து அச்சுங்க அலுவலர் மதிப்பிடுகிறார்; ஏற்ற முறையில் சுங்கம் விதிக்கிறார்; இங்ஙனம் விதிக்கின்ற முகத்தாலேயே வெளிநாட்டு வாணிகத்தைக் கட்டுப்பாடு செய்கிறார். இதனை ஆசிரியர் நன்கு விளக்குகிறார். தினந் தோறும் இச்செயல் ஓய்ச்சல் ஒழிவின்றி நடைபெறுகிறது. இதனைச் செய்பவரும் மனத்தாலும் உடலாலும் வலிமை பெற்றவர். அங்ஙனம் சுங்கம் வசூலித்தமைக்கு அடையாள மாக மூட்டைகளின் மேல் சோழநாட்டு இலச்சினையாகிய புலிக் கொடியைப் பொறித்து, அவை மற்ற மூட்டைக ளோடு கலந்துவிடாதபடியும், கொடி பொறிக்கப்படாதவை நாட்டினுள் நுழையாமலும் கண்காணித்துக் கொடி பொறித்த மூட்டைகளை மிகவும் காவல் பொருந்திய பாதுகாவலான இடங்களிலும் அடுக்குகிறார்.

 

வைகல்தொறும் அசைவின்றி

உல்குசெயக் குறைபடாது

 

அருங்கடிப் பெருங்காப்பின்

வலியுடை வல்லணங்கினோன்

புலிபொறித்துப் புறம்போக்கி (பட்டினப்பாலை 124-135)

 

[வைகல்தொறும் - தினந்தோறும்; அசைவின்றி - சோம்பலில்லாமல்; உல்கு - சுங்கவரி]

 

சுங்க அலுவலர்

 

இவ்வடிகளிலிருந்து அறியவேண்டும் பொருள்கள் இரண்டுண்டு. அச்சுங்க அலுவலர் 'வலியுடைய வல்லணங் கினோன்' என்று கூறப்படுகிறார். ஏன்? சுங்கம் வசூலிப்ப் வருக்கு வலிமை எதற்காக? ஈண்டு வலிமை என்றது மனவலிமையை. அம் மனவலிமை இல்லாதவன் சுலப மாகக் கைக்கூலி வாங்கிக்கொண்டு அரசனை ஏமாற்று பவன் ஆகிவிடலாமல்லவா? இந்நாளில் வாழும் நமக்கு இது ஒன்றும் புதுமையன்று. ஆனால், பழந்தமிழ் நாட்டில் அரச நீதியை நடத்துபவர் எங்ஙனம் மனத்திட்பம் வாய்ந்த வராய் இருந்தனர் என்பதை இவ்வடிகள் அறிவுறுத்து கின்றன. மேலும், ஒன்று நோக்க வேண்டும். அவர் வெறுஞ் செம்மையுடையவராக மட்டும் இருத்தல் போதாது. பிறர் அவரை ஏமாற்றுவர். அவர் அங்ஙனம் செய்யாதிருக்க, அலுவலர் தமது அதிகாரத்தைச் செலுத்தக் கூடியவராய் இருக்க வேண்டும். இது கருதியே ஆசிரியர் அவர் படை வலியாலும், தம் அதிகாரத்தைச் செலுத்தக் கூடியவராய் இருந்தார் என்பதை அறிவிப்பதற்காக 'வல்லணங்கி னோன்' (பிறரை வருத்தக்கூடிய பலமுடையவன்) என்று கூறுகிறார். இம்மட்டோடு இல்லை. இவையெல்லாம் இன்றுங்கூட இருக்கக் காண்கிறோம். ஆனாலும், திருட்டுத் தனமாகச் சரக்கை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் 'கள்ளக் கடத்தல்'(Smuggling) இன்றும் நின்றபாடில்லை. அத்தகைய செயல் அந்நாளில் இல்லை என்பதை ஆசிரியர் 'அருங்கடிப் பெருங்காப்பின்' பொருள்கள் இருந்தன வெனக் கூறுமுகத்தால் கூறுகிறார்.

 

இவற்றால் அரேபியா, பர்மா முதலிய வெளிநாட்டு வாணிகத்தோடு கங்கை வெளி, இலங்கை முதலிய இடங் களுடன் உள் நாட்டு வாணிகமும் நன்கு நடந்தமை அறியப்படுகிறது.

 

உடையார் இல்லார் வேற்றுமை

 

ஒரு நாட்டை எடுத்துக்கொண்டால் அந்நாட்டில் சிலரே பொருள் படைத்தவராய் இருப்பர்; ஒரு சிலர் ஒன்றுமற்ற ஏழைகளாய் இருப்பர்; பெரும்பான்மையோர் நடுத்தர மக்கள் என்று வழங்கப்படும் நிலையிலிருப்பர். இவர்கள் வாழ்க்கைதான் நாட்டின் செல்வநிலைக்கு அறி குறியாகும். இத்தகைய மக்கள் பெரும்பாலும் உழைப்பையே நம்பி வாழ்கின்றவர்கள். உழைத்த உழைப்புக்கேற்ற பயன் கிடைக்கின்றபொழுது இவ்வகை மக்கள் நல்ல பண்பாடு உடையவர்களாய் இருப்பார்கள். மேலும், தம்மினும் மேம்பட்ட பொருளாளர் நிலைமையைத் தாமும் அடைவதற்கேற்ற வழிகளை முனைந்து தேடுவர். ஆனால், இத்தகைய எண்ணம் மக்களுக்கு எல்லாக்காலமும் இருந்து வந்ததென்று கூற முடியாது. செல்வமுடையார் செம்மையாக வாழ்ந்து, செல்வத்தின் பயன் ஈதலே தவிர இறுக்கிப் பிடித்தலன்று என்று நினைக்கின்ற வரை, இடையிலுள்ள மக்கள் அவர்கள்மேல் பொறாமையோ வெறுப்போ கொள்ள மாட்டார்கள். இந்நிலை இந்த நாளில் மாறிவிட்டமை யாலேதான் பெருந்துன்பங்கள் தோன்றுகின்றன. இந்த நடுத்தர மக்கள் மேலும் பொருள் சேர்த்து அப் பொருளாளர் கூட்டத்தில் சேர முனைகின்றார்கள். அப்பொருளாளர்களோ இவர்கள் உழைப்புக்கு ஏற்ற கூலியைக் கொடாமல் இவர்களை மேலும் வறுமை யடையச் செய்ய முயல்கிறார்கள். இதனால், ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமை பெரிதாகிப் பூசல் முற்றுகிறது.

 

பழந்தமிழ் நாட்டின் நிலை

 

இனி, பழந்தமிழ்நாட்டை நோக்குவோம். அந்நாட்டில் ஒரு சிலர் பணம் படைத்தவராய் இருந்தனர் என்பதும் பெரும்பான்மையினர் நடுத்தர மக்களாகவும் ஒரு சிலர் மிகவும் ஏழ்மை வாய்ந்த மக்களாகவும் இருந்தனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இன்றும் இத்தகைய நிலையே தமிழ்நாட்டில் நிலவுகிறது. ஆனாலும், இரண்டுக் கும் எவ்வளவு வேற்றுமை! அன்று இம்மூவகை மக்களுக் கும் இடையே இருந்த மனப்பான்மை இன்று மறைந் தொழிந்தது. மறைந்ததோடு மட்டும் அல்லாமல் வெறுப்பு முதலிய தவறான குணங்களும் நிரம்பிவிட்டன. இதன் காரணம் என்னவென்று ஆராயவேண்டும். நாளாவட்டத் தில் மக்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையில் திருப்தி அடையாமல் இருக்கப் பழகினார்கள். இயற்கையோடு வாழ்ந்து, எளிய வாழ்க்கையைக் கைக்கொள்ளுகிற வரையில் திருப்தி மனத்தில் குடிகொண்டிருக்கும்; மனத்தில் அமைதி நிலவும். திருப்தி அடைந்த ஒருவன் மனத்தில் பொறாமை, முதலிய தவறான எண்ணங்களுக்கு இடமில்லை. அதே போலப் பெருஞ்செல்வம் படைத்தவ னும், அச்செல்வத்தை வைத்துக் காப்பாற்றி வேண்டிய வர்க்கு வழங்கும் பொறுப்பை மேற்கொண்டவனாகத் தன்னைக் கருதினான்; அச் செல்வம் தான்மட்டும் அனுபவிப்பதற்காக ஏற்பட்டதன்று என்று நினைத்தான். எப்போதாவது ஒருவர் இருவர் தவறாக நினைக்க முற் பட்டாலும், அவ்வெண்ணம் தவறானது என்று எடுத்துக் காட்டப் பெரியோர் இருந்தனர். தகுந்த அறிவுரைகளால் இத்தகைய மனநிலைகளை அவர் அகற்றினர். உதாரண மாக நக்கீரர் கூறுவதைக் காண்க;

 

செல்வத்துப் பயனே ஈதல்,

துய்ப்போம் எனினே தப்புந பலவே (புறம்-189)

 

[செல்வத்தின் பயன் பிறருக்குத் தருதலேயாம். அவ் வாறல்லாமல் 'யாமே அனுபவிப்போம்' என்று நினைத்துச் சேர்த்து வைத்தால், அது அழிவது உறுதி.]

 

பாரியை ஒத்த வள்ளல்கள் தோன்றி வளர்ந்த நாடாகும் இது. இத்தகைய வள்ளல்கள் செல்வத்தின் பயன் எது என்பதை வாழ்ந்து காட்டினர். இரண்டு பிரிவாரும் மன அமைதியோடு வாழ்ந்தமையால் நாடு நல்ல நிலையில் இருந்தது. முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரிவினையும், அப்பிரிவினையால் ஏற்படும் துன்பங்களும் இருக்கவில்லை. செல்வர் வாழ்க்கைக்கு ஓர் உதாரணம் காண்போம். கோவலன் பெருஞ்செல்வர் குடும்பத்தில் பிறந்தவன்; மணம் ஆன பிறகு தனிக் குடும்பம் நடத்தி வந்தான்; தானே வாணிகமும் செய்தான்; மாதவியோடு சேர்ந்து "குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்தான்" மலையத்தனை செல்வத்தை அழிப் பினும், அவளை வெறுத்து வந்த பின்னர்த் தந்தையைக் கண்டிருப்பானேயாகில், மறுபடியும் மலையத்தனை செல்வத்தைப்பெற்று மீண்டும் வாணிகம் தொடங்கி யிருக்கலாம். ஆனால், மானமுடைய அவன் அவ்வழியை மேற்கொள்ளவில்லை. மீண்டும் தனது உழைப்பால் பொருள் தேடவேண்டும் என்று நினைத்தானே தவிர, எளிமையாக மானத்தை இழந்து பொருளைப் பெற வேண்டும் என்று எண்ணவில்லை. இன்று கள்ளச் சந்தையில் பொருள் தேடும் பெரியோர் நிறைந்த நம் நாட்டில் இத்தகைய உதாரணம் எங்ஙனம் வரவேற்கப் படுமோ அறியோம். ஏழையாயினும் நடுத்தர வகுப்பா ராயினும் உழைப்பையே அணிகலமாகக் கொண்டு வாழ்ந்தனர் பழந்தமிழர். உழைப்பு அல்லது முயற்சியைத் "தாள்" என்ற சொல்லால் குறித்தனர் பழந்தமிழர். முயற்சி யற்ற அரசரைக் கூடப் பழந்தமிழர் எள்ளி நகையாடினர்.

 

'மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடை நோன் தாள்' (புறம்- 75)

 

என வரும் அடி பழந்தமிழர் முயற்சிப் பெருக்கைக் காட்டும்.

 

நடுத்தர மக்கள் பொருளாதாரம்.

 

இனி, நடுத்தர வகுப்பில் உள்ள ஒரு குடும்பத்தைக் காண்போம். மாடுகள் வைத்துப் பால், மோர், நெய் முதலியவற்றை விற்று வாழ்க்கை நடத்தும் இடையர் குடும்பம் அது. குடும்பத்தை நடத்தும் பொறுப்புப் பெண்ணுக்கேயன்றி ஆண் மகனுக்கு இல்லை. இது கருதியே வீட்டை ஆளுகின்றவள் என்று பொருள் தரும் 'இல்லாள்' என்ற ஒரு சொல் தமிழில் இருக்கிறது. ஆனால், அதற்கு மறுதலையாக 'இல்லாளன்' என்ற சொல்லை உண்டாக்கவில்லை. இவ்வாறு குடும்பத்தை நடத்தும் பெண் ஒருத்தி மிகு விடியற் காலத்தில் எழுந்துவிடுகிறாள் பெரியதொரு பானையிலுள்ள தயிரைக் கடைகிறாள். கடையும் பொழுது புலி உறுமுவது போன்ற ஓசை உண்டாகிறது. மோரைக் கடைந்து எடுத்துக்கொண்டு சென்று வியாபாரம் செய்கிறாள். அங்ஙனம் மோர் விற்ப தோடு மட்டுமல்லாமல் தனியாக நெய்யையும் வியாபாரம் செய்கிறாள். நெய்யின் விலை மோரைவிட மிகுதியாக இருக்குமென்பதற்கு ஐயமில்லை. இவ்விரண்டினாலும் பெற்ற பொருளை என்ன செய்கிறாள் என்பதைக் காண்போம். மோர் விற்றுவந்த பொருளால் குடும்பத்தை உண்பிப்பதோடு சுற்றத்தாரையும் காப்பாற்றுகிறாள். பட்டினி கிடந்தாவது பொருளைச் சேகரிக்க வேண்டும் என்ற பேதைமை தமிழ் நாட்டில் இல்லை. ஆனால் வருமானம் முழுவதையும் செலவிட்டுக் கடனாளி யாகிற வழக்கமும் இல்லை. அறிவுடைய ஒருவன் அளவறிந்து செலவு செய்வான். இது கருதியே வள்ளுவப் பெருந்தகையார்,

 

ஆகாறு அளவுஇட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை. (குறள்-478)

 

என்று கூறினார். 'வருமானம் குறைவாயிருப்பினுங் கெடுத லில்லை. சிலவு அதனைவிட மேற்போகாத விடத்து' என்பதே இதன் பொருள். மோர் விற்ற பொருளால் குடும்பத்தைக் காப்பாற்றிய நம் ஆயர் குல மடந்தை, நெய் விற்ற பொருளை என்ன செய்கிறாள் என்பதை ஆசிரியர் கூறுகிறார்; இன்னது செய்யவில்லை என்றும், இன்னது செய்தாளென்றும் கூறுகிறார். அப்பொருளால் பொன்னை வாங்கவில்லையாம். அதற்குப் பதிலாகக் கறவை எருமை களையும், பசுக்களையும் வாங்கினாளாம். இங்ஙனம் கூறவேண்டிய இன்றியமையாமை யாது? கறவை மாடு களை வாங்கினாள் என்றுகூறினாலே வேறுஒன்றும் வாங்கவில்லை என்ற பொருள்தானே பெறப்படுமே! அங்ஙனமிருக்க, இவ்வாறு கூறவேண்டிய காரணமென்ன? இக்காலத் தமிழ்நாட்டில் வாழும் நம்மை இவ்வடிகள் கண் திறந்துவிடுதல் கூடும். எத்தனை கோடி ரூபாய் பெறுமான முள்ள தங்கம் நமது தமிழ்ச் சகோதரிகள் உடலை அலங்கரிக்கின்றன? 'தங்கமும் பொருள்தானே? அத் தங்கத்தை வாங்குவதால் நேரும் குறைவென்ன? என்று கேட்கலாம். ஆனால் தங்கத்துக்காகச் செலவிடும் முதல் பயனற்ற முதலாகும் (dead capital). முதல் என்றாலே அது மேலும் பொருளைச் சம்பாதிக்கக்கூடியதாகும் என்ற பொருளும் உண்டு. தங்கத்துக்காகச் செலவழிக்கப்படும் முதல் பயனற்றது என்றாலும் இன்று நம் நாட்டில் எத்தனை பெண்மணிகள் இதனை உணர்ந்திருக்கின்றனர்? ஆனால், பழந்தமிழ்ப் பெண்கள் இதனை அறிந்து அனுபவத்திலும் நடத்தினர். அதனாலேயே ஆசிரியர் அவள் பொன்னை வாங்கவில்லை என்று கூறினார். பொன்னை வாங்காமற்கூட இருக்கலாம். அதற்கு மறு தலையாக அப்பொருளைக் கலயத்தில் இட்டு மண்ணில் புதைத்து வைக்கும் வழக்கம் அதைவிடத் தீமையான தாகும். ஆகவே, அம்முதலை வைத்து அதனால் பயன் அடையும் பண்பாடே சிறந்ததாகும். தனது தொழிலுக்கு ஏற்ற முறையில் பயன்படக் கூடியவையான கறவை மாடுகளை வாங்கினாள்; வகையறிந்து, பயன்தரும் வழியில் பொருளை முதலீடு செய்து (Investing) பயன் அடைந்தாள்.

பெரும்பாணாற்றுப்படை என்ற பாடலில் இக் கருத்துக் கூறப்படுகிறது. 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற பழமொழிப்படி பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த நடுத்தர மக்களின் பொருளாதார நிலைக்கு இந்த உதாரதணம் ஒன்றே சாலும். இக்கருத்துள்ள அடிகளைக் காண்க:

 

நள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப்

புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி

.......................

குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்

அளைவிலை உணவின் கிளையுடன் அருத்தி

நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்

எருமை நல்லான் கருநாகு பெறுஉம்

மடிவாய்க் கோவலர், (பெரும்பாணாற்றுப்படை 155-66)

 

(குறுநெறிக் கொண்ட கூந்தல்- வளைந்துள்ள கூந்தல்; அளை- மோர்; நல்லான்- பசுக்கள்; கருநாகு- எருமைக் கன்றுக்குட்டி)

 

மேட்டுக்குடி மக்களைப் பற்றிச் சங்கப் பாடல்களில் மிகுதியாகக் காணப்பட்டாலும் மிக்க வறியவர் பற்றியும் இல்லாமல் இல்லை.

 

எனினும் நம்முடைய மனத்தில் ஓர் ஐயம் தோன்று கின்றது. உடையார் இல்லார் என்ற இருபிரிவினர்க்கு இடையே நடுத்தர மக்கள் என்ற ஓர் இனம் இருந்திருக்கத் தான் வேண்டும்.

 

அவர்களது வாழ்வுமுறை, பொருளாதார அடிப்படை என்பவை எவ்வாறு இருந்திருக்கும் என்ற நினைவும் தோன்றலாம்.

 

பெரும்பாணாற்றுப்படையில் மேலே குறிப்பிட்ட அனைத்துக்கும் விடை பெறலாம்.

இன்றும் கூடப் பொதுவாக இந்தியப் பெண்கள், சிறப் பாகத் தமிழகத்துப் பெண்கள் அணிகலன்கள் என்ற பெயரில் பொன்னுக்கு அடிமையாக இருத்தலைக் காண்கிறோம்.

மிகப்பெருஞ்செல்வர் வீட்டில் முதலீடு என்ற முறை யில் (Investment) பெண்கள் பொன்னும், பொருளும் சேர்த்து வைத்தனர்.

ஆனால் நடுத்தர மக்கள் வாழ்க்கையில் இவ்வாறு நடைபெறுவது கொடுமையானது. பொன்னுக்கென இடப் படும் தொகை வளர்ச்சி அடையாத மூலதனம்; அன்றாடம் பயன் தராததும் ஆகும்.

எனவே ஒரு வாணிபம் செய்து அதன் வாயிலாய்க் கிடைக்கின்ற சிறு பொருளை மேலும் வளர்த்தற்குரிய முறையில் முதலீடு செய்யாமல் பொன்னை வாங்கிச் சேமிப்பது அறியாமையின் கொடு முடியாகும்.

ஆனால் நம் முன்னோர் (பண்டைத் தமிழர்) இவ்வாறு செய்யவில்லை என்று அறிகிறோம்.

 

நம் இருள் விடியல் புன் எழப் போகி-

புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,

ஆம்பி வால் முகை அன்ன கூம்பு முகில்

உறை அமை தீம் தயிர் கலக்கி, நுரைதெரிந்து,

புகர் வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ-

நாள் மோர் மாறும் நல் மா மேனி

சிறு குழை துயல்வரும் காதின், பணைத்தோள்,

குறு நெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்-

அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி,

நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்,

எருமை, நல்ஆன் கருநாகு, பெறுஉம். (பெரும்பாணாற்றுப்படை 155-165)

 

[செறிந்த இருள் மெல்ல விலகும் காலத்து பறவைக் குலம் உறக்கம் நீத்து எழுகின்றன. புலியினது முழக்கம் போல தயிர் கடையும் ஓசை எழுகிறது. குடைக்காளான் போல குமிழியிட்டு, இறுகிய வெண்பாறை போல் கிடந்தன தயிர்க்குடங்கள். தயிர்க் கடைந்து, திரளும் வெண்ணெயைத் தனித்து எடுத்து வைத்து கடைந்த போது தெளித்த தயிர்ப் புள்ளிக் கோலம் கொண்ட மோர்ப் பானையை பூவால் செய்த சும்மாட்டின் மேல் வைத்து வீடு நீங்கி, வெளிச் சென்று, காலைப் பொழுதிலேயே மோர் விற்கிறாள் இவ்வாய்க்குல மடந்தை. மாந்தளிர் மேனி; தாளுருவி அசையும் காது, மூங்கில் போல் திரண்ட தோள், குறிய கூந்தல் உடைய இவள் மோர் விற்று, பண்டமாற்றாகப் பெற்ற நெல் முதலானவற்றால் சுற்றத்தினரை உண்பிக்கிறாள்.

ஆனால் காய்ச்சிய நெய்யை விற்றுப் பெற்ற தொகை கொண்டு, பசும்பொன் வாங்கவில்லை. மாறாக பால் எருமை, பசுங்கன்று, எருமைக்கன்று இவற்றில் முதலீடு செய்கின்றாள்.]

 

மேலே காட்டிய இடைக்குல மடந்தையின் வாழ்க்கை நடுத்தர மக்களின் வாழ்க்கைக்கு ஓர் உதாரணமாக அமைகின்றது.

அன்றைய பெண்கள், நிறைந்த உழைப்பினராக இருந்தனர் என்பதும், மிக்க விடியற்காலையிலேயே எழுந்து தம் அன்றாடக் கடமைகள் மேற்கொண்டனர் என்றும், நள் இருள் விடியல் புள் எழப் போகி என்ற தொடர் வழி விளக்குகின்றார். அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி என்றமையால் மோர் விற்ற தொகை கொண்டே சுற்றத்தவருக்கும் சேர்த்தே உணவு அளிக்கின்றாளாம்.

உறை அமை தீம் தயிர், புலிக்குரல் மத்தம் ஒலிப்பக் கடைந்து எடுத்த வெண்ணெயை நெய் ஆக்கி விலைக்கு விற்கின்றாள். மோர் வாணிபத்தில் கிடைக்கும் ஊதியத்தை விடநெய் வாணிபத்தில் மிகுதியாக ஊதியம் பெறலாம் என்றாலும் நெய் விற்ற பணத்தைப் பொன்னாக மாற்றியோ, ஆபரணங்களாக வாங்கியோ செலவிட வில்லையாம்.

நடுத்தரக் குடும்ப மகளிர் கைப்பொருளைப் பொன்னாக மாற்றவில்லை என்பதே வியப்புக்கு உரியதாகும்.

மிகத் தேர்ந்த பொருளியல் வல்லுநர் எதிர்கால நலன் நோக்கிக் கைப்பொருளை முதலீடு செய்வது போலவே இவளும் செய்கிறாள். நெய் விற்ற பணத்தைப் பசும்பொன் கட்டியாக மாற்றாமல், எருமை, நல் ஆன், கருநாகு (கன்று கள்) வாங்குகிறாளாம். கன்றுகளாக வாங்கினால் விலை குறைவு. அணிகலன்கள் வாங்குவதை விடப் பல மடங்கு அது பயன் தரும்.

மேலும் கன்றுகளாக வாங்குவதால் அன்றாடச் செலவு என்ற ஒன்று அமைவதில்லை. புல்வெளிகள் நிறைந்த நாட்டில், அவை படுபுல் ஆர்ந்து வளவிய, கொழுகொழு கன்றுகளாக ஆகும்.

இடைக்குல மடந்தையின் பசு, எருமைக் கன்றுகளில் இடப்பெறும் முதலீடு ஐந்து, ஆறு ஆண்டுகளில் முதலீட்டைப் போல் பலமடங்கு பெருகிவிடும். இதனை இன்றைய நடைமுறைப்படிச் சொல்ல வேண்டுமானால் Cumulative deposit எனலாம்.

பெருங்கல்வி அறிவில்லாத ஓர் இடைக்குல மடந்தை இத்துணைச் சிறந்த காரியத்தைச் செய்கிறாள் என்பதனால் அது அவர்களுடைய வாழ்க்கை முறையை மிக விளக்க மாக எடுத்துக் காட்டுகிறது என்று அறிய முடிகிறது.

 

6. தமிழர் கண்ட அரசன்

 

தனி வாழ்க்கையும் கூட்டு வாழ்க்கையும்

இப்பரந்த உலகில் எங்கு மக்கள் முதன்முதலில் தோன்றினார்கள்? இவ்வினாவிற்கு முடிவான விடை இது காறுங் கிடைத்திலது. நிலநூல் வல்லார் தமிழ் நாட்டுப் பாறைகளும், கல்லும் மிகப் பழமை வாய்ந்தவை என்று கூறுகின்றனர். எனவே, பழமை வாய்ந்த இந்நிலம் மிகப் பழங்காலத்தே மக்கள் தன்பால் தோன்ற இடமளித்தது என்றால், அதில் தவறு ஒன்றும் இல்லை. இப்பழைய சமூகம் நாளாவட்டத்தில் அனுபவம் பெற்று நாகரிகத் துடன் வாழக் கற்றுக்கொண்டது. கூட்டங்கூடி வாழக் கற்றுக்கொண்டதே இத்தமிழ் நாகரிகத்தின் முதற்படி என்னலாம். தனித்தனி மனிதராக வாழ்கின்ற நாகரீகம் குறிஞ்சித் திணையில் என்றால், கூட்டங்கூடி வாழத் தொடங்குகையில் மருதத்திணை தோன்றலாயிற்று. கூட்டங்கூடினவுடன் புதுமுறை வாழ்வு மிகுந்தது என்று கூறலாம். தனித் தனியாக வாழும்பொழுது தனக்கெனவே வாழ்ந்த மனிதன், கூட்டங் கூடினவுடன் இந்நிலை மாற வேண்டுவதன் இன்றியமையாமையை உணரத் தலைப் பட்டான். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டிய நிலை நிற்பட்டவுடன் ஓரளவு இடர்ப்பாடு களும் தோன்றலாயின. எவ்வளவு தூரம் தனி மனிதன் தன் உரிமையை இழக்கவேண்டும் என்ற வினாவிற்கு விடை காண்பதில் மனத்தாங்கல் நிகழ்வது இயற்கை தானே? இத்தகைய இக்கட்டான சந்தருப்பங்களில் மனத் தாங்கல் கொண்ட இருவரும் ஒரு பொது மனிதனிடம் தமது முறையீட்டைத் தெரிவிக்க வேண்டி நேரிட்டது. பலருஞ் சென்று முறையிடத் தகுந்த ஒருவனே தலைவன்.

 

யார் தலைவன்?

 

எத்தகைய காரணங்களால் இத்தலைமைப் பதவி ஒருவனுக்குக் கிட்டியது? செல்வம் மிக்குள்ளவனே இத் தலைமைப் பதவிக்கு உரியவன் ஆயினன். இந்நிலை தோன்றுவதன் முன்னர் உடல் வலிவுடையவன் இப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்திருப்பான். ஆனால், நாளடைவில் உடல் வன்மையுடைய பலரை வைத்து ஏவல் கொள்ளும் தகுதி வாயந்த ஒருவனே தலைவனாகத் தகுதி பெற்றிருப்பான். மக்கள் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படையில் இருப்பது 'வயிறு' ஒன்று அன்றோ? பசி தணிக்கும் செல்வம் உடையான் ஒருவன் பிறரை ஏவல் கொள்ளும் தன்மை பெற்றான் என்பதில் வியப்பென்ன? இன்றும் பணமுடையவர்களிடம் அறிவு நிரம்பியவர்கள் பலரும் ஏவல் செய்வது நாம் காணும் ஒன்றுதானே! ஆனால், அப்பழங்காலத்தில் எது செல்ஆ மாகக் கருதப் பெற்றது? ஆதிமனிதன் காட்டில் வாழும் விலங்குகளைப் பிடித்துப் பழக்கித் தனக்கு உதவி புரிய வைத்துக் கொண்டான். அவ்வாறு அவன் கொண்ட பல விலங்குகளுள் மாடு ஒன்றுதான் அவன் செல்வ நிலையைக் காட்டும் அறிகுறியாய் இருந்து வந்தது. மனிதனுக்கு உணவு தந்து அவனுக்குப் பொதி சுமக்கவும் பயன்படும் இவ் விலங்கு, வீட்டு விலங்குகளுள் முதலிடம் பெற்றது இயற்கைதானே? இத்தகைய மாடுகளை அதிகம் பெற்ற வான் செல்வமுடையவனாகக் கருதப்பெற்றான். 'மாடு' என்ற தமிழ்ச் சொல்லுக்குச் 'செல்வம்' என்றே ஒரு பொருள் இன்றளவும் இருந்து வருகிறது. தமிழருக்கு மட்டும் மாடு செல்வமாய் இருந்தது என்பதல்லாமல், கிரேக்கருக்கும் அதுவே செல்வமாய் இருந்தது எனச் சரித நூல் வல்லார் கூறுவார். அம்மட்டோடு அல்லாமல் கிரேக்க மொழியில் முதல் எழுத்தாகிய 'ஆல்*பா' என்பதன் வரி வடிவம் மாட்டுக் கொம்பைப் பார்த்து எழுதப்பெற்றது என்றுங் கூறுவர். பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் போர் முறையும் இக்கருத்தை வலியுறுத்துகிறது. ஒரு மன்னன மாற்றானின்மேல் படை எடுப்பதாயின், முதன் முதலில் மாற்றான் பசுக்கூட்டங்களைக் கவர்வதையே தொழிலாகக் கொண்டான். இது வெட்சித் திணை என்று கூறப்பெறும். இது இலக்கிய வழக்காய் நின்றுவிடினும், ஆதிகாலத்தில் மன்னனெனக் கருதப் பெற்றவன் மாடாகிய செல்வத்தையே பெரிதும் நம்பியிருந்தான் என்பது வெள்ளிடை மலை.

 

வழிவழி அரசன்

 

பழந்தமிழ் இனத்தில் மாடுகளை நிரப்பப் பெற்றவனே மன்னனெனக் கருதப்பெற்றான் என்று கூறுவதில் இழுக்கு ஒன்றுமில்லை. பசுவுக்குக் 'கோ' என்றதொரு பெயரும் உண்டு. எனவே, பசுக்களை மிகுதியாக உடைமையின் அரசனாகக் கருதப்பெற்ற ஒருவன் எவ்வாறு வழங்கப் பெறுவான்? கோக்களை உடைமையின் 'கோன்' என்று கூறப்பெற்றான் அரசன். 'கொற்றவர் தம் கோன் ஆகுவை' எனவரும் மதுரைக் காஞ்சிச் சொற்றொடர் இப்பொருளை வலியுறுத்தல் காண்க. இப் பசுக்கூட்டங்களை வைத்து வளர்க்கும் பொரறுப்புடையார் 'கோவலர்' என்றே பின்னர் வழங்கப் பெற்றனர். ஆதியில் கோக்களை நிரம்பப் பெற்றிருந்தமையின் அரசனெனக் கருதிப் போற்றப்பட்ட ஒருவன், நாளாவட்டத்தில் இவ்வரசச் செல்வத்தைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றான் என்பதை அறிகிறோம். உலக முழுவதிலும் அரசச் செல்வம் பரம்பரை வழி வந்த தாகவே அறிகிறோம். கரிகாற் பெருவளத்தான் பிறப்பதற்கு முன்னரே அவன் தந்தை இறந்துபட்டதால் அவன் 'தாய்' வயிற்றிலிருந்து தாயம் எய்தினான் என்று பொருநராற்றுப் படை குறிக்கிறது. இதுகாறுங் கூறியவற்றை அறுதியிட்டுச் சொல்லத்தக்க சான்றுகள் இல்லையாயினும் இவ்வாறுதான் அரசு முறை தமிழ்நாட்டில் தோன்றியிருக்கும் என்று உய்த்துக் கூறுவதால் இழுக்கொன்றுமில்லை.

 

மூவர் மன்னர்

 

தமிழர் கண்ட இளவரசனைப் பற்றி இனிச் சற்று விரிவாகக் காண்போம். பரம்பரையாக அரசச் செல்வம் இறங்கி வந்த காரணத்தால் தகுதியற்ற பலரும் அரசர் ஆயினரோ என்று நினைக்க வேண்டுவதில்லை. பெறும் பான்மையினர் அனைத்துத் தகுதிகளும் பெற்றவராகவே விளங்கினர். இங்ஙனம் அவர்கள் இருக்கத்தக்க ஒரு காரணமும் உண்டு. தமிழ் நாடு மிகச் சிறிய பரப்புடையது எனினும், இச்சிறிய நிலப்பரப்பிற் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை வேந்தர் மூவர் ஆட்சி செலுத்தி வந்தனர்.

 

'நளி இரு முந்நீர் ஏணியாக

வளி இடை வழங்கா வானம் சூடிய

மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்

முரசு முழங்கு தானை மூவருள்ளும்' (புறம்-35)

 

என்ற புறப்பாடல் இவ்வுண்மையைக் கூறுதல் காண்க. 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்'தை ஆண்டு வந்த மூவருந் தமிழரேயாயினும், இவர்களுள் ஒற்றுமை உணர்வு மருந்துக்கும் இல்லாத தொன்றாயிற்று. ஒற்றுமையற்ற காரணத்தால் இம் மூவருள் ளும் ஓயாது பூசலும் போரும் நிகழலாயின. பழந்தமிழ் இலக்கியங்கலாகிய பத்துப் பாட்டையும், எட்டுத் தொகை யையும் ஒருமுறை புரட்டினவ்ரும் இவ்வுண்மையை உணராமலிரார். பல சந்தருப்பங்களில் இவருள் ஒருவர் தம் கையோங்கி ஏனைய இருவரையும் அடிப்படுத்தியிருந் தனர். இதன் விளைவாக அடிமைப்பட்டவர் தக்க காலம் வந்தவுடன் பழிவாங்கத் தவறினதில்லை. இம் மூவரை அன்றியும் பல சிற்றரசர்களும் உடன் இருந்ததை இலக்கியம் மூலம் அறிகிறோம். இச் சிற்றரசரும் ஓயாது தமக்குள் போரிட்டனர்; சில சமயங்களில் பேரரசர்களு டன் சேர்ந்து கொண்டு ஏனையவருடன் போரிட்டுள்ள னர். இத்தகைய காரணங்களால் போர் புரிவதில் வல்ல ஓர் இனமாய் இருந்து வந்துள்ளது தமிழ் இனம். ஓயாது போரில் வாழ்ந்து வந்தமையின் இவர்கள் இயற்கையின் தள்ளவியலாத ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டனர். 'வாழ்க்கைப் போராட்டத்தில் வலியுடையவர் எஞ்சுவர்', என்ற 'டார்வின்' கொள்கைப்படி வலியுடையவர் எஞ்சினர். என்சுவதற்கு வலிமை ஒன்றே துணையாய் நின்றமையின், தமிழ் மன்னர் பெரும்பாலும் வலிமை மிக்கவராகவே இருந்தனர். யானையேற்றம், வில் வித்தை முதலியன அவர் நன்கு கற்றிருந்தனர்.

 

களிறு கடைஇய தாள்

கழல் உரீஇய திருந்து அடிக்

கணை பொருது கவி வண் கையால்

கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து

மா மறுத்த மலர் மார்பின்

தோல் பெயரிய எறுழ் முன்பின் (புறம்-7)

 

என வரும் புறப்பாட்டின் அடிகளை எல்லாத் தமிழ் மன்னர்கட்கும் பொதுவான இலக்கணமாகக் கொள்ள லாம். நாடு சிரிதாகலானும், போர் புரிந்து வெற்றிகண்டு எஞ்சுபவரே வாழத் தகுதியுடையராய் இருந்தமையானும் தமிழ் மன்னர் சிறந்த போர் வீரராகவே விளங்கினர். மிக்க பழங்காலத்தில் தத்தம் தகுதியாலும் பரம்பரை உரிமை யாலும் அரசுக கட்டில் பெற்றனர் தமிழ்மன்னர். எனினும், பிற்காலத்தில் இம்முறை தடுமாறித் தகுதி இல்லாதவருங் கூட உரிமை ஒன்றே பற்றி அரசர ஆயினர் எனவும் அறிகிறோம். சிலப்பதிகாரத்துக் காணும் 'அரசு வீற்றிருக் கும் திருப்பொறி உண்டு' என்ற அடி ஒரு காலத்து இந்த உரிமைத் தன்மை பெரிதாகப் பாராட்டப் பெற்றது என்பதையே குறிக்கிறது.

 

அரசன் சுவைஞன்

 

அரசைச் செல்வம் பெறும் வகை எவ்வாறாயினும், பெற்ற செல்வத்தை இவ்வரசர் நன்கு அனுபவத்தினர். இவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் கோயில் என்ற பெயராலும் வழங்கப்பெற்றன. கோன்வாழும் இடம் கோயில் என்று கூறப்பெற்றது பொருத்தம் உடையதே.

 

'சென்றாள் அரசன் செழுங் கோயில் வாயில்முன்' (ஊர்சூழ்வரி-75)

 

என இளங்கோ குறிப்பிடுதல் காண்க. இக்கோயிலை அமைக்கப் பெரும்பொருளும், பெருமுயற்சியும் செலவழித் தனர் என்பதை 'நெடுநல்வாடை' என்ற சங்கப் பாட்டால் அறிகிறோம். போரில் பெரும்பொழுதைக் கழித்தாலும் இம் மன்னர்கள் 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற பேருண்மை யை மறந்தாரல்லர். எனவே, அனுபவப்பொருள், போகப் பொருள் என்பனவற்றை வேண்டும் அளவு அனுபவித் தனர் என்றும் அறிகிறோம். பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரண்மனையில் அவன் மனைவி துயில் கொள்ளும் கட்டில் பற்றிய வருணனை, நக்கீரரால் 'நெடுநல்வாடை' என்ற நூலிற் கூறப்படுகிறது. இத்துணை முன்னேற்றம் உடைய காலத்திற் கூட அக்கட்டில் பற்றிய வருணனை நம்மைத் திகைக்க வைக்கிறது. பொருளைப் பெற்றிருக்கும் திரு வேறு; அனுபவிக்கும் திரு வேறு. இற்றை நாளில் பொருள் பெற்றிருப்பார் பலரைக் காண்கிரோமாயினும், அனுபவிப் பார் சிலரைக் காண்டலும் அரிதாகிறது. ஆனால், பழந் தமிழ் மன்னர் பொருளைப் பெறவும், அதனை நன்கு அனுபவிக்கவும் கற்றிருன்தனர் என அறிகிறோம். சிறந்த பொருளைப் பெறும் அவர்கள் 'முருகியற்சுவை' (aesthetic taste) வாழ்க!

 

முடியாட்சியும் உரிமையும்

 

பழந்தமிழ்நாட்டில் முடியாட்சியே நிலைபெற்றிருந்தது. குடியரசின் நினைவே இருந்ததாக நினைப்பதற்கில்லை. ஆனால் இற்றை நாளில் வாழும் நமக்கு முடியரசென்று கூறினவுடனே மனத்தில் ஒருவகை அச்சம் ஏற்படுகிறது. எத்தகைய முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாயிருப் பதே நமது நாட்டு முடிமன்னர் இயல்பாய் இருந்து வருகிறது. பெரும்பாலரான மன்னர், தம் கீழ் வாழும் மக்களின் பாதுகாப்புத் தம் கையிலுள்ளது என்பதைக்கூட மறந்து திரிகின்றனர். ஆனால், பழந்தமிழ் மன்னர் அவ்வாறில்லை.

இம்மன்னர்கள் பரம்பரைப் பாத்தியமாக அரசுக் கட்டில் ஏறினர். அம்முடியின் பொருட்டுச் சகோதரருள் பூசலோ பிணக்கோ ஏற்பட்டதாகவும் சான்றுகள் அதிகம் இல்லை. பிள்ளைகளுள் மூத்தவனே பட்டத்திற்கு உரியவன் என்ற நியதி இருந்து வந்தது. இளங்கோவடிகள் வரலாறே இம்முறைக்குச் சான்று பகரும். பேரரசர்கள் உயிரோடிருக்குங் காலத்திலேயே மைந்தர்களை அரசாட்சி யில் பழக்கும் முறையும் இருந்து வந்ததை அறிவோம். அரசர்கள் நல்ல கல்வி கற்றவர்களாய் இருந்தார்கள். நல்ல புலமை நிறைந்த அவர்கள் பெரும்புலவர்களை அரசவை யில் வைத்துப் போற்றினார்கள். இத்தகைய ஒரு வழக்கத் தாலேயே அவர்களைப் பற்றி அறியமுடிகிறது.

அரசுரிமையைப் பாத்தியமாக அடையினும் ஒவ்வொருவரும் தமது தோள் வலியாள் அவ்வரசைப் பெருக்கிக் கொள்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந் தனர். இடங் குறுகியுள்ள இந்தத் தமிழ்நாட்டில் சிற்சில பேரரசர்கள் காலம் தவிர, ஏனைய மன்னர்கள் காலத்தில் பல சிறு அரசுகள் நிலைபெற்றிருந்தன. இதுவே அடிக்கடி ஒருவரோடொருவர் சண்டை செய்யக் காரணமாயிருந்தது. குறுநில மன்னர்களும் பிறருக்கு அடங்கி வாழ்வதை இழிவானதெனக் கருதினர். இவர்களே இவ்வாறாயின் பெரும்மன்னர்களான சேர, சோழ, பாண்டியரைப் பற்றி கேட்க வேண்டுவதில்லை. ஒரு சில காலந்தவிர இவர்கள் மூவரும் ஒற்றுமையாய் இருந்ததே இல்லை. இவர்கள் மனப்பான்மையைச் சுருங்கக் கூறினால், அது கபிலர் என்ற புலவர் பெருமான் கூறிய ஐந்து அடிகளில் முடியும்.

 

வையங் காவலர் வழிமொழிந்து ஒழுக

போகம் வேண்டி பொதுசொற் பொறாஅது

இடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப,

ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்

கடந்தடு தானைச் சேரலாதன் (புறம்-8)

 

(இவ்வுலகம் தனக்கும் பிற மன்னர்க்கும் பொது என்ற சொற்களைப் பொறுக்காமல், இதனைத் தனக்கே உரிமை ஆக்கிகொள்வதற்காக, எல்லா இன்பங்களையும் வெறுத்து போரை மேற்கொள்ளும் சேரலாதன்)

 

இத்தகைய மனப்பான்மை கொண்டோர் அமைதி யாய் இருத்தல் என்பது இயலாத காரியம். அரசர்களாகப் பிறந்ததன் பயனே போர் செய்தலாகும் என்று கருதினர் அம்மன்னர். இத்தகைய எண்ணம் உயர்ந்தது என்று கூருவதற்கில்லையாயினும், தமிழர் இனவளர்ச்சியில் இது ஒரு படியைக் காட்டி நிற்கிறது. ஆதி மனிதனிலிருந்து தோன்றி வளரும் எந்த இனமும் இப் படியைத் தாண்டியே முன்னேறவேண்டும். ஏனைய வகைகளிலெல்லாம் உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்த தமிழர், கிரேக்கர்களைப் போல இதனையும் நாகரிகச் சின்னமாகக் கருதினர்.

 

உடலும் உள்ளமும்

 

தமிழ் மன்னன நல்ல உடற்கட்டு வாய்ந்தவனாய் இருந்தான். மிக்க இளமை தொட்டே படைக்கலப் பயிற்சி பெற்றமையானும், போர்க்களங்கட்குச் செல்லும் பழக்கம் உடைமையானும் அவனது உடல் வலிமை பெற்றிருந்தது. நல்ல உடலுறுதி பெற்றவன் உள்ளமும் பெரும்பாலும் செம்மையானதாய் இருக்கும்; அவன் அறிவும் விளக்கம் உடையதாய் இருக்கும்.

 

"அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும்" (புறம்-20)

 

"ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை" (புறம்-8)

 

"பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே

நீமெய் கண்ட தீமை காணின்

ஒப்ப நாடி அத்தக ஒருத்தி" (புறம்-10)

 

"வேண்டியது விளைக்கும் ஆற்றலை" (புறம்-38)

 

என்னும் இவ்வடிகள் அரசனது அறிவு மேம்பாட்டை விளக்குவனவாய் உள்ளன.

 

இத்தகைய அரசன் ஆட்சி முறையில் தன்னேரில்லாத வனாகவே விளங்கினான். அரசன் ஆணைக்கு எதிராக ஒன்றும் நடப்பதில்லை. டியூடர் மன்னர்கள் இங்கிலாந்தில் ஆட்சி செய்கையில், தாங்கள் கடவுளால் ஆட்சி செய்வதற் காகவே படைக்கப்பட்டவர்கள் என்று கருதினார்கள். இதனை மக்களும் நம்பி வந்தனர். ஒருவாறு பழந்தமிழ் நாட்டில் இத்தகைய வழக்கே நிலைபெற்றிருந்ததென நினைக்க வேண்டியிருக்கிறது. இறைவன் என்ற சொல்லைக் கடவுள், அரசன் என்ற இருவர்க்கும் வழங்கியமையின் இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது. பிற் காலத்து ஆழ்வார்,

 

"திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே" (திருவாய்மொழி)

 

என்று கூறியது பழந்தமிழ் வழக்குப் பற்றியதேயாகும். இத்தகைய நிலையில் அவர்கள் இருந்தமையால் ஒரோவழி ஓர் அரசன் தீயவனாக மாறித் தீச்செயலைச் செய்ய முற் படுதலும் உண்டு. ஆனால், அச்சமயங்களில் பெரும்புலவர் கள் அஞ்சாது அரசன் முன் சென்று, அவனுக்கு அறிவுரை கூறி, அவனை நல்வழிப் படுத்தியிருக்கின்றார் கள். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்ற அரசன், மலையமான் திருமுடிக்காரி என்ற அரசனொடு பொருது வென்றான்; வெற்றி வெறியில் மலையமான் குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு வந்தான்; அப்பிள்ளை களை யானைக் காலடியிலிட்டு மிதிக்கச் செய்ய முடிவு செய்துவிட்டான். அரசன் அங்ஙனம் நினைத்தால் அவனை எதிர்ப்பவர் யார்? யானையும் வந்தது. அந்நேரத் தில் கோவூர் கிழார் என்ற பெரும்புலவர் அங்கு வந்து சேர்ந்தார்; இக்கொடுமை நடைபெறப் போவதை அறிந்தார்; உடனே அரசன் முன் சென்றார்; கீழ்வரும் பாடலைக் கூறினார்.

 

நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்

இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;

இவரே புலனுழு துண்மார் புன்க ணஞ்சித்

தமதுபடுத்த துண்ணும் தண்ணிழல் வாழ்நர்;

களிறுகண் டழூஉம் அழாஅன் மறந்த

புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி

விருந்திற் புன்கணோ வுடையர்;

கேட்டனை யாயின்நீ வேட்டது செயம்மே." (புறம்-46)

 

(நீயோ, புறாவின் பொருட்டுத் தராசில் ஏறிய சிபியின் பரம் பரையில் வந்தவன். இப்பிள்ளைகளோ, அறிவுடையனும் வள்ளற்றன்மை யுடையனுமான மலையமான் குடியிற் பிறந்தோர். மேலும், தங்கட்கு நேரப்போகும் கதியறியாது யானையைக் கண்டவுடன் அழுகை மறந்து வேடிக்கை பார்க்கின்றனர்; இங்குள்ளார் அனைவரும் புதிராயிருத்த லின் மனவாட்டம் அடைந்துள்ளனர். இனி நீ உன் விருப்பம் போலச் செய்க.)

 

உடனே அரசன் அக்குழந்தைகளை விட்டுவிட்டான். அக்கால மன்னன் எவ்வளவு தன்னிச்சைப்படி நடக்கும் வன்மை பெற்றிருந்தான் என்பதைக் காட்டுவதற்காகவே இப்பாடல் காட்டப் பெற்றது. இத்தகைய அரசர் எங்கோ ஒருவர் இருவர் இருந்தனரேயன்றிப் பெரும்பான்மையோர் கடமை அறிந்து நடப்பவராகவே இருந்தனர்.

 

"பொலங் கழற் கால் புலர் சாந்தின்

விலங்கு அகன்ற வியல் மார்ப!" (புறம்-3)

 

"களிறு கடைஇய தாள்

கழல் உரீஇய திருந்தடி

....................

மா மறுத்த மலர் மார்பு." (புறம்-7)

 

(யானையைச் செலுத்தும் முயற்சியையும் வீரக் கழலணிந்த காலையும் திருமகள் பிறர் மார்பில் சென்று தங்க மறுக்கும் மார்பினையும் உடையவன்).

 

என்பன போன்ற பல புறப்பாடல்களில் மன்ன மார்பு விரிந்தும் கல்போன்றும் இருக்கிறது என்று கூறுவது அவனுடைய வீரத்தைக் காட்டப் பயன்படுகிறது. ஆனால், ஓயாமல் சந்தனம் பூசிக்கொண்டிருக்கிறான் என்றும், திருமகள் தங்கிய மார்பென்றும், மகளிர் தோள் தோயும் மார்பு என்றும் கூறுவது ஏன்? மன்னன் வெறும் உடல் வீரம் மட்டும் உடையவனல்லன்; நல்ல பண்பட்ட வாழ்வுடையவன் என்றும் குறிப்பிடுகிறார் புலவர். மனித வாழ்வு சிறக்க வேண்டுமாயின், உடல் வீரத்தோடு முருகியல் சுவையும் வேண்டும். அழகிய பொருள்களில் ஈடுபட்டுத் தன்னை மறந்து அனுபவிக்கும் பண்பே முருகியல் சுவை எனப்படும். அத்தமிழ் மன்னர்கள் இம் முருகியல் சுவையைப் பெற்றிருந்தனர் என்பதையும் இக் குறிப்புகள் அறிவிக்கின்றன.

தமிழ் மன்னர்கள் பொறுப்பு வாயந்த அலுவலைக் கவனிக்கின்ற காரணத்தால் அல்லும் பகலும் கவலைப் படுகின்ற மனத்தை உடையவர்களோ என்று யாரும் ஐயப் படவேண்டா. மனித வாழ்வில் கடமையும், கலையுணர் வும் கலந்து திகழ வேண்டும். அவ்வாறு இல்லை யாயின் வாழ்வு முழுத்தன்மை அடையாது. முழுவதும் கடமை யாகவே அமைந்துவிட்டால், அது இயந்திர வாழ்வாகி விடும்; முழுவதும் கலையாகிவிட்டால், பயனற்றவாழ்க்கை ஆகிவிடும். எனவே, தமிழ் மன்னர்களுடைய வாழ்வில் கடமை, கலை என்ற இரண்டும் அளவுடன் கலந்தே காணப்பட்டன என்கிறார் புலவர். இதனை இவ்வாறு விரிவாக உரைநடையிற் கூறவில்லை; கவிதையில் குறிப் பாகப் பெறவைக்கிறார். ஒரே அரசனுடைய காலில் வீரக் கழலும் மார்பில் சந்தனமும் விளங்குகின்றனவென்று கூறும் பொழுது கடமையும் கலை உணர்வும் வெளிப்படக் காண்கிறோம்.

 

அரசனுக்கு ஏற்ற வீடு

 

கலையுணர்வுடனும் கடமையுணர்வுடனும் வாழ்ந்த பழந்தமிழ் அரசர்கள் பொது வாழ்வின் கடமை நெருக்கடிக்கு எப்போதும் இரையானார்கள். இதனை ஈடுசெய்யப் போலும் தமிழ்ச்சமுதாயம் தமிழ் மன்னருக்கு வளப்பமான தனி வாழ்க்கை தந்து வந்தது. பத்துப் பாட்டுள் ஒன்றான 'நெடுநல் வாடை' என்ற பாடலில் இதுபற்றிப் பேசப்படுகிறது.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறந்த பழந்தமிழ் மன்னருள் ஒருவன். அவ்வளவு சீரும் சிறப்பும் உடைய ஒருவனுக்கு அரண்மனை கட்ட முடிவு செய்தனர். 'இடம்பட வீடு எடேல்', என்ற முதுமொழி அவனுக்கு அன்று; ஆதலால் பெர்ய முறையில் அரண்மனை அமைக்கப் பெறுகிறது. 'பெரும்பெயர் மன்னருக்கு ஒப்ப மனைவகுத்து' என்று நெடுநல்வாடை அதனைக் குறிக்கிறது. அவனுடைய அரண்மனை அமைப்பே பழந்தமிழ் மன்னர்களின் கோயில்கள் இருந்த நிலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

பாண்டியனின் அரண்மனைக்குக் கால்கோள் விழாச் செய்தனர். சித்திரை மாதத்தின் நடுவில் ஒரு நாளில் பகல் பதினைந்து நாழிகை அளவில் சிற்ப நூலை நன்கறிந்த தச்சர்கள் கூடினார்கள்; நூல் பிடித்து அளவிட்டுப் பல பகுதிகளையும் வரையறுத்துக் கூறுபடுத்தினார்கள்; பிறகு மிகப் பெரிய கற்களினால் மதில் முதலியவற்றை அமைத்தார்கள்; அடுத்து உள்ளிடம் கட்டி முடித்தார்கள்.

 

ஓங்கு நிலை வாயில்

 

அரண்மனைக்கு நுழையும் பொழுது தெரியும் இது வாயிலாகும். இது ஏன் இவ்வளவு பெரிதாகவும் உயரமாக வும் அமைந்திருக்கிறது? யானை போர்க்களத்திலிருந்து வெற்றிக் கொடியுடன் வருகிறது அன்றோ? அவ்யானை அப்படியே உள்ளே நுழைவதற்காக இவ்வாயிலின் உயரம அமைக்கப்பெற்றுள்ளது.

 

'வென்றெழு கொடியொடு வேழம் சென்றுபுக' (நெடுநல்வாடை-87)

 

என்ற அடியால் வாயிலின் உயரத்தைக் கூறுகிறார் ஆசிரியர் நக்கீரர். பார்வைக்கு மதிலும் வாயிலும் எவ்வாறு உள்ளன? மலையைக் குடைந்து வழிசெய்தது போல உள்ளது அவ்வாயில்.

 

'குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்' (நெடுநல்வாடை-88)

 

இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனபோதிலும், இன்றும் நாம் கற்பனைக் கண்முன் அதனைக் கொண்டுவர முடிகிறது. வாயிலே இவ்வளவு உயரமாய் உள்ளது; அதன்மேல் கோபுரமும் அமைந்துள்ளதாம். 'நெடுநிலை' என்பதற்குக் கோபுரம் என்பது பொருள். இவ்வாயிலை அடைத்து நிற்பன இரட்டைக் கதவுகள். வாயிலின்மேலே இலக்குமி யின் சித்திரம் அமைந்திருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் இரண்டு செங்கழுநீர்ப்பூவும் இரண்டு பெண் யானைகளும் செதுக்கப்பெற்றுள்ளன. இரட்டைக் கதவுகள் எவ்வாறு அமைந்துள்ளன? நன்கு செதுக்கப்பெற்று, இழைக்கப் பட்டு, ஒன்றற்கொன்று இடைவெளி இன்றிச் சேர்க்கப் பெற்று உள்ளன.

 

'கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து' (நெடுநல்வாடை- 85)

 

உள்ளன என்பதால் இதனை அறிகிறோம், ஒரோ வழிக் காய்ந்த மரமாய் இருப்பினும், வெயில் மழை முதலிய வற்றால் நாளாவட்டத்தில் இடைவெளி வருதல் கண்கூடு. இதனையும் நீக்க வாயிலிலும் கதவிலும் வெண் சிறுகடுகை அரைத்து அப்பியுள்ளனர் அக்காலத்தச்சர்

 

இதனைத் தாண்டி உட்சென்றால் மணல் பரப்பிய பெருமுற்றம் காணப்படுகிறது. ஒரு புறத்தே குதிரைப்பந்தி அமைந்திருக்கிறது. இதனை அடுத்துள்ளது அரண்மனை யின் முற்பகுதி. பெரிய கட்டடங்களின் மேற்றளத்தில் விழும் மழைநீர் கீழே வந்து விழச் சரியான வசதி இல்லை யானால் கட்டடம் பழுதுபடுமன்றோ? அரண்மனையின் முகப்பில் நிலா முற்றம் அமைந்துள்ளது. அதனையே இன்று நாம் (Portico) போர்ட்டிகோ என்று கூறுகிறோம். இத்திறந்த இடத்தில் விழும் மழைநீர் வந்து விழுவதற்கு ஒரு வாய் அமைத்துள்ளனர். அது மகர மீனின் வடிவம் பெற்று விளங்குகிறது. இன்னும் உள்ளே சென்றால், 'பல்வேறு பள்ளி' என்று கூறப்பெறும் பல பெரிய அறைகள் உள்ளன.

 

பூச்சு வேலையும் பூ வேலையும்

 

இந்த அறைகள் சூரிய ஒளி உள் வரும்படி அமைக்கப் பெற்றுள்ளன. இரவிலும் ஒளி நிறைய வரும்படி ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வோர் அறையிலும் ஒவ்வொரு பாவை இருக்கிறது. இந்தப் பாவை எவ்வளவு வேலைப்பாடும் அழகும் நிறைந்துள்ளது! நல்ல வார்ப்படத் தொழிலில் கைதேர்ந்த யவன நாட்டுக் (Greek) கொல்லன் அமைத்த அழகிய சிற்பமாகும் இது. இந்தப் பாவையின் கையில் இருக்கும் கிண்ணம் போன்ற பொருள்தான் அகல் விளக்காகும். இக்கையேந்து அகல்நிறைய நெய்யை விட்டுப் பருத்த திரிகளை நெய்யில் இட்டு எரிய விடுகின்றனர். விளக்கின் சுடர் குறையும்தோறும் ஆட்கள் இருந்து கொண்டு தூண்டிவிடுகின்றனர். இந்த விளக்குகள் ஏற்றின வுடன் சுற்றியுள்ள சுவர்தோறும் இவ்வொளியின் எதிர் ஒளி விளங்குகிறது. காரணம் என்ன? அரண்மனை ஆதாலால், மிகச் சிறந்த, 'வெள்ளி அன்ன விளக்கு கதை' (சுண்ணாம்பு) பூசியிருக்கிறார்கள்; ஆதலால், எதிர் ஒளி மிகுதியாய் இருக்கிறது. இந்த அழகிய சுவர்களும் வெறுஞ் சுவர்களாய் இல்லை. இவற்றில் எல்லாம் மிக அழகிய பூ கொடி முதலிய சித்திர வேலை செய்திருக்கிறார்கள்.

 

தூண்கள்

 

தூண்கள் எவ்வாறுள்ளன என்று காண்டல்வேண்டும். இன்றும் மதுரை சென்று திருமலை நாயக்கர் அமைத்த கட்டடங்களைக் கண்டவர்கள் பெருவியப்பை அடை கின்றனர். இதுவே இவ்வாறாயின், நெடுஞ்செழியனின் அரண்மனைத் தூண்கள் எவ்வாறு இருந்திருக்கும்? 'மாதிரள் திண்கால்' என்று கூறப் பெற்றமையின் பெரிய தூண்கள் என்பது அறியமுடிகிறது. ஆனால் நாயக்கர் காலத் தூண்கள் கல்லாலும் சுதையாலும் கட்டப் பெற்றவை. பாண்டியனின் தூண்களோ, 'மணிகண்டன்ன' என்று கூறப் பெறுதலின், கரிய நிறத்தையுடைய 'சலவைக் கற்கள்' என்று நினைய வேண்டி உளது.

 

மகளிர் உறைவிடம்

 

இவை அனைத்தையும் தாண்டி அப்பாற்சென்றால் இருக்கும் இடம் 'ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பு' எனப்படும் மகளிர் வாழும் இடமாகும். ஆடவர் குறுகாத இடம் என்று கூறினவுடன் அரசனுடைய உரிமை எவ்வளவோ என ஐயமெழுகிறதன்றோ? அதற்காகவே ஆசிரியர்.

 

"பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது

ஆடவர் குறுகா" (நெடுநல்வாடை - 106,107)

 

இடம் என்று கூறி உள்ளார். பெரும்பாலும் பல மனைவி யரை வைத்து வாழ்ந்த பண்பாடுடையவர்தாம் தமிழ் மன்னர். எனினும், அவருள்ளும் சிலர் ஒரு மனைவி பண்பாட்டைக் கைக்கொண்டு வாழ்ந்தனர் என அறிகிறோம்.

 

கட்டில் செய்தான்

 

மகளிர் வாழும் இப்பெரும்பகுதியில் ஒரு பெரிய அறை இருக்கிறது. இதுவே அரசன் உறங்கும் இடம். பெரியதொரு கட்டில், அறைக்கு அழகைச் செய்து கொண்டு இருக்கிறது. கட்டில் என்றால் இன்று நாம் காணும் வகையைச் சேர்ந்தது அன்று, நெடுஞ் செழியனுடைய கட்டில், 'பெரும் பெயர் மன்னர்க்கொப்ப மனை வகுத்தது' போலவே கட்டிலும் செய்துள்ளனர். கட்டில் செய்யுங்காலத்து அதனை உடன் இருந்து கண்டவராகிய நக்கீரர், அதன் இயல்பையும் அழகையும் எடுத்துப் பாடுகிறார். கட்டிலும் அதில் படுத்துப் புரண்ட மன்னனும், அக்கட்டில் இருந்த அரண்மனையும், ஏன் அந்தப் பண்பாடும் நாகரிகமுமே, இன்று பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய் மெல்லப் போய்விட்டன! என்றாலும் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தலைசிறந்த ஒரு தமிழ் மகன் எங்ஙனம் வீட்டை அமைத்தான் என்று அறிவதும், எங்ஙனம் வாழ்ந்தான் என்று ஆராய்வதும் பயனுடைய செயல் தாமே? நெடுஞ்செழியன் அமைத்த கட்டிலைப் பற்றிப் பார்ப்போம்.

 

தந்தக்கால் கட்டில்

 

கட்டிலின் கால்கள் யானைத் தந்தத்தால் செய்யப் பெற்றுள்ளனவாம். யானைத் தந்தத்திலும் பல வகை உண்டு. இக்கட்டில் செய்யப் பயன்பட்ட தந்தம் நாற்பது ஆண்டுகட்குமேல் வாழ்ந்த யானையினுடையதாம். அதுவும் அந்த யானை சண்டையில் இறத்திருத்தல் வேண்டும். அவ்வாறு போரில் யானை இறக்கும் பொழுது தந்தமும் தானே கழன்று விழுந்திருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட தந்தம் நான்கை எடுத்துக் கால்கள் அமைத்துள்ளனர். வெறுந்தந்தங்களை அப்படியே நிறுத்தி விடவில்லையாம். தந்தங்களைத் தொழில் வல்ல தச்ச னுடைய கூர் உளி புகுந்து அழகு பெறச் செய்தது. கடைசல் வேலை, வடிவம் உண்டாக்குமே தவிர, உருவம் உண்டாக்காது; ஆதலின் தச்சன் சிற்றுளி கொண்டு இலை பூ முதலிய வேலைப்பாடுகளைக் கட்டிலின் கால்களில் அமைத்தான் போலும்! மேலும், குடம் போன்றும், உள்ளிப் பூண்டு போன்றும் வடிவம் பெறும்படியாகவும் அமைத்தான்.

 

வேட்டை ஓவியம்

 

இவ்வகையான கால்களை நிறுவிக்கொண்டு தலை மாட்டிலும், கால்மாட்டிலும் ஓரடி உயரத்திற்குப் பலகை கள் அமைத்தான். இந்தப் பலகைகளில் வேட்டைக்குரியன வாய புலி முதலியவற்றின் உருவங்கள் பொறிக்கப் பெற்றனவாம். புலியின் உருவம் பொறிப்பதில் புலி மயிர் முதலியவற்றை வைத்து, அவற்றை அடுத்துச் சிங்கத்தின் தோல் முதலியவற்றைக் கொண்டு சிங்கத்தின் உருவத்தைப் பொறித்தான்; இவற்றை வேட்டை ஆடுவது போன்ற வேலைப்பாடுகளையும் அமைத்தான்.

 

இவ்விரு பலகைகளின் இவ்விரு முனையிலும் கால்கள் நட்டு முத்துக்கள் தொங்கவிடப் பட்டிருந்தன. இந்த நான்கு கால்களையும் சேர்த்து இவற்றின் நடுவே விதானம் அமைக்கப்பெற்றுள்ளது. அந்த விதானத்தில் சந்திரனுடைய உருவமும், உரோகிணியினுடைய உருவமும் தீட்டப் பெற்றுள்ளனவாம்.

 

மெத்தை

 

படுக்கையாக அமைந்த மெத்தை எத்தகையது? மெல்லிய பஞ்சால் இயன்ற மெத்தையின்மேல் துணை புணர் அன்னத்தின் தூவி விரிக்கப்பெற்றுள்ளது. இம் மட்டோடு இல்லையாம் படுக்கையின் சிறப்பு. மெத்தையினுள் வைக்கவேண்டிய சரக்கு எவை எவை என்பதைச் 'சிறு பூளை, செம்பஞ்சு, வெண்பஞ்சு, சேணம், உறுதூவி, சேக்கை' என்ற ஐந்தாகும் என்று ஒரு பழைய பாடல் அறிவிக்கிறது. இவ்வளவு சிறப்பமைந்த மெத்தை யின்மேல் ஒரு வெண்மையான துணி விரிக்கப் பெற்றுள்ள தாம். அத்துணி கஞ்சியிட்டுச் சலவை செய்யப் பெற்றதாம்.

 

'காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்

தோடமைத் தூமடி விரித்த சேக்கை' (நெடுநல்வாடை-134,135)

 

என்று மேல் விரிக்கும் துணியின் இயல்பும் சிறப்பும் கூறப் பெற்றுள்ளன.

 

படுக்கையையும் கட்டிலையும் பற்றி இவ்வளவு பெரிய வருணனை வேண்டுமா என்ற ஐயம் சிலர் மனத்திலாவது தோன்றத்தான் செய்யும். பழந்தமிழ் மன்னர் எப்பொழுதும் போரிட்டுக்கொண்டு திரியும் முரடர்கள் அல்லர்; வாழ்க்கையை நன்கு அனுபவிக்கவும் கற்றுக் கொண்டி ருந்தனர் என்பதை அறிவிக்கவே இதுகாறும் இது பற்றி விரிவாகப் பேசப்பெற்றது.

வாழ்க்கையின் குறிக்கோள் எவ்வளவு உயர்ந்ததாய் இருப்பினும் நாளை வரும் என்று எதிர்பார்க்கும் துறக்க இன்பத்திற்கு அண்ணாந்து கொண்டு இன்றைய உலகில் உள்ள இன்பத்தை வெறுத்துப் போலித் துறவு கொண்டவர் அல்லர் பழந்தமிழ் மன்னர். இத்துணை இன்பங்களின் இடையே வாழ்ந்தாலும் அவர்கள் உள்ளத் துறவுடையவர்; கடமை ஒன்று இருந்தால், அதை முடிக்க வேண்டி இத்தகைய இன்பத்தையும் துறந்து செல்லும் உறுதிப்பாடு உடையவர். இதுவன்றோ மனத்துறவு! எல்லையற்ற இன்பத்தின் இடையே வாழ்ந்தாலும் இத் தமிழ் மன்னர் உள்ளத்துறவு உடையவர்களாய்த் தாமரை இலைத் தண்ணீர் போலவே வாழ்க்கை நடத்தினர் என்பதையும் அறியமுடிகிறது. கட்டிலை இவ்வளவு சிறப்புடன் செய்து அதில் காதலியுடன் படுத்து மகிழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன் அனைத்தையும் துறந்து போர்க்களத்தில் வாடைக் காற்றில் வாடி மெலிவதையும் காண்கிறோம்.

 

ஓவியக்கருத்து

 

கட்டிலின் விதானத்தில் சந்திரனும் உரோகிணியும் எழுதப்பெற்றதன் காரணம், அவர்கள் காதலைத் தமக்கு நினைவூட்டுவதேயாகும். தலைமாட்டுக் கால்மாட்டுச் சட்டங்களில் புலி வேட்டை பொறித்திருப்பதிலும் ஓர் ஆழமான கருத்துண்டு. உறங்கச் செல்லு முன்னும், உறங்கி விழித்த உடனேயும் கண்ணிற்படுவன வேட்டையும் அதன் அடிப்படையான மறத்தன்மையும் ஆகும். அரசனுக்குரிய குழந்தை கருத்தரிக்கும்பொழுது அத்தாய் தந்தையரின் மனநிலை முறையே காதலிலும் மறத்திலும் ஈடுபட்டிருக்கு மாகலின் பிறக்கும் குழந்தையும் இவ்விரண்டு பண்பு களையும் பெற்று விளங்குமன்றோ?

 

கட்டில் செய்வதிலும் பழந்தமிழ் மக்களுடைய ஒப்பற்ற மனத்தத்துவ அறிவு நன்கு காணக்கிடக்கிறது.

 

மன்னன் வலிமை

 

இத்தகைய இன்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த தமிழ் மன்னன், தான் மன்னன் என்பதையும், பகை நீக்கி ஆள வேண்டுவது தன் கடமை என்பதையும் மறந்தானல்லன். பகை நீக்கம் என்றால் படை சேர்த்தல் என்பதுதானே கருத்து? இதோ அதனைச் செய்கிறான் தமிழ் மன்னன்.

 

தக்கதோர் மனை வகுத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழ் மன்னன், பரம்பரை உரிமையால் அத்தாயபாகத்தை எய்தினான் என்றே தமிழ் இலக்கியம் கூறுகிறது. கரிகாற்பெருவளத்தானுடைய தந்தை இளஞ் சேட்சென்னி, மைந்தன் பிறக்கச் சிறிது காலம் முன்னர் இறந்துவிட்டான் என்பதைக் குறிப்பிடவந்த முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர், கரிகாலன் தாயின் வயிற்றில் இருக்கையில் தாயபாகத்தைப் பெற்றுவிட்டான் என்று குறிப்பிடுகிறார்.

 

'தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி' (பொருநாராற்றுப்படை 132)

 

என்ற அடியும்,

 

'உருகெழு தாயம் ஊழின் எய்தி' (பட்டினப்பாலை 227)

 

என வரும் பட்டினப்பாலை அடியும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.

 

படையைப் போற்றல்

 

பரம்பரை உரிமையாற்பெற்ற இவ்வரசைத் தமிழ் மன்னர் தமது வீரம் ஒன்றையே துணையாகக் கொண்டு ஆண்டு வந்துள்ளனர். சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்னும் மன்னனுடைய வலிமையைப் பாட வந்த முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர், நல்ல உவமை ஒன்றைத் தந்து அவனுடைய வலிமையை விளக்குகிறார்.

 

'ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்

வலியும், தெறலும், அளியும் உடையோய்!' (புறம்-2)

 

எனக் குறிப்பிடுகிறார். இப்பூதங்கள் உலகம் நன்கு வாழ உதவுகின்றன. என்றாவது இவ்வுலகம் தனது நிலைமை மீறிச் செல்லுமாயின், இதனை அழிக்கின்றன. அதே போலத் தமிழ் மன்னர்கள் பிற அரசருக்கும் வாழ உரிமை தந்து தாமும் வாழ்ந்தனர்; என்றாவது அப்பிறர் உரிமை மீறி வாழத் தொடங்கினால், அவரை அழித்தனர். அழிப்பதற்கு உரிய மனவன்மை, உடல் வன்மை, படைவன்மை என்ற மூன்றையும் பெற்று வாழ்ந்தனர் என்றும் அறிகிறோம். காலன் கூடக் காலம் பார்த்தே கொல்லுவான். ஆனால், இவ்வரசர் காலங்கருதாதுகூட வெல்லும் ஆற்றல் உடையவர் என்றுங் கூறப் பெறுகின்ற னர். இத்தமிழ் வேந்தர் 'நால்வகைப் படையுடன் மாட்சிமைப்பட்ட' அரசை நடாத்தினர் என பாடல்கள் மிகுதியும் தெரிவிக்கின்றன. போர் என்றவுடன் தோள்கள் வீங்கும் மறக்குடி மக்களை வீரர்களாகப் பெற்றிருந்தனர். அரசன் படையைத் தன் கண்போல் மதித்து நடத்தினான் என்ற உண்மையை 'படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும்' என்று கூறும் வள்ளுவர் வாய்மொழி தெரிவிக் கிறது. படைகளால் தாம் பெறும் வெற்றியை நன்கு உணர்ந்தவர்களாதலின், அப்படைகட்குச் சிறு சோற்று விழா (Tea Party) பெருஞ்சோற்றுவிழா (Dinner) முதலியன நடத்தி அவர்கட்கு எழுச்சி ஊட்டி வந்தனர் என்றும் அறிய முடிகிறது. சாவைப் பெறற்கு அரிய பேறாகக் கருதிய தமிழ் வீரர்களைப் பெற்றிருந்த இம்மன்னர்கள் ஓயாது போர் இட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.

 

மனவலி

 

இத்தகைய படைவலி உடைய இம்மன்னர்களின் மன வலியும் கண்டு மகிழற்குரியது தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டியனை எழுவர் சேர்ந்து எதிர்த்தனர். அவனோ, சிறுவன். ஆனால், மனவலியால் அவ்வெழுவரினும் மேம்பட்டவன். போர் மூண்டுவிட்டது என்று அறிந்த அப்பெருந்தகை வஞ்சினம் கூறுகிறான். எவ்வாறு?

 

'எழுவரையும் அருஞ்சமம் சிதையத்தாக்கி

முரசமொடு ஒருங்கு அகப்படேன் ஆயின் (புறம்.72)

 

'யான் இவ்விவ்வாறு போவேனாக!' என்று அவன் கூறுவதால் அவனுடைய உறுதி வெளிப்படுகிறது. இத் தகைய மனவலி படைத்தவர்கள் அரசராயிருந்த காரணத் தாலேதான் வீரர்களும் அத்தகையவர்களாய் இருந்தார்கள். இவர்களின் நெஞ்சு உரத்தை நன்கு அறிந்த வள்ளுவர்.

 

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும் (குறள்-774)

 

என்பது போன்ற குறள்களால் இவ்வீரர்க்குச் சாவா வரந் தந்துவிட்டார்.

 

உடலழகு

 

ஓயாது போரிடுதலில் மிக்க விருப்பம் உடையவர் களாய் இருந்தார்கள் தமிழ் மன்னர்கள் என்று நினைக்க ஆதாரங்கள் பல உள.

 

'இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்பப்

போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாது' (புறம்.8)

 

என்பன போன்ற அடிகள் இவ்வரசர்களின் மனவெழுச்சி யை அறிவிக்கின்றன. நெடுஞ்செழியன் ஓயாது போர் புரிந்து வாணாளைக் கழிப்பதைத் தடுத்து அவனை வாழ்க்கையை அனுபவிக்கச் செய்யவே 'மதுரைக் காஞ்சி' என்னும் மாபெருங்கவிதை தோன்றிற்று. மார்பிலும் முகத்திலும் புண்படுவதை விழுப்புண் என்று கூறுவர். அரசரும் வீரரும் இவ்விழுப்புண்களைப் பெற ஒருங்கே விரும்பினர். விழுப்புண்படாத நாட்களை வீணாளாகக் கருதுபவர் வீரர் எனக் குறள் கூறுகிறது. ஏனாதித் திருக்கள்ளி என்பவனைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் என்ற புலவர் பாடிய பாடல் அந்நாள் அரசனின் உடல் அழகை எடுத்துக் காட்டுவதாய் உளது.

 

'நீயே, அமர்காணின் அமர்கடந்துஅவர்

படைவிலக்கி எதிர்நிற்றலின்

வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு

கேள்விக்கு இனியை கட்குஇன் னாயே.' (புறம்.167)

 

ஓயாமற் செய்த போர்களிற் பெற்ற விழுப்புண் காரணமாக இவனுடைய உடல் முழுதும் தழும்பு ஏறி யிருத்தலின், கண்ணுக்கு அழகு அற்றவனாய் உள்ளான். ஆனால், மிக்க புகழ் படைத்திருத்தலின், கேள்விக்கு இனியவனாகவும் உள்ளான் என்பதே இப்பாட்டின் கருத்தாகும்.

 

புலவர் பாடும் புகழ்

 

இத்துணைச் சிறந்த வீரர்களாக அரசர் இருப்பினும் பயனில்லை, அவர்களுடைய மனம் சிறந்து இல்லையா யின், இவ்வரசர்கள் என்றும் குடிகளுக்காகத் தாம் வாழ்வதை மறந்தார் அல்லர். உயர்ந்த குறிக்கோளைப் பெற்ற வாழ்க்கையையே வாழ்ந்தனர்.

 

'உள்ளுவ தெல்லாம் உயர்வுஉள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்ந்து' (குறள்-596)

 

என்ற பொய்யா மொழியை வாழ்க்கை விளக்கமாகக் கொண்டிருந்தனர் இன்றேல், இத்துணைப் பெரும்புலவர் பாடும் சிறப்பு இவர்கட்கு இருந்திராதன்றோ? கேவலம் உடல் வீரம் மட்டுமே உடையராய் இருந்திருப்பின், புலவர் கள் இவர்களை மதித்துப் பாடி இரார். அவ்வாறுள்ள அரசர்களைப் புலவர்கள் பாடுவதில்லை என்ற கருத்தை யும் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் கூறுகிறார்.

 

'வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து

வீற்றிருந் தோரை எண்ணுங் காலை

உரையும் பாட்டும் உடையோர் சிலரே

மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வல்லவன் ஏவா வான ஊர்தி எய்துப என்ப' (புறம். 27)

 

(ஏற்றத் தாழ்வு இல்லாத சிறந்த குடியின்கண் பிறந்த அரசரை எண்ணுங்காலத்து, புகழும் பாட்டும் உடையோர் சிலரே. தாமரையின் இலையைப் போலப் பயன்படாமல் இறந்தவர் பலர். புலவரால் பாடப்படும் தகுதியுடையோர் ஆகாயத்திற் செல்லும் மனிதனால் செலுத்தப்படாத விமானத்தில் செல்வர்)

 

இவ்வாறு கூறுவதால், ஆயிரக்கணக்கான தமிழ் மன்னருள் ஒரு சிலரே அவர்தம் சிறப்புக் காரணமாகப் புலவர் பாடும் புகழுடையோராய் விளங்கினர் என அறிய வேண்டும். என்ன சிறப்பைப் புலவர் பாராட்டினர் என்று அறிதல் வேண்டும். அடுத்து, உடல் வீரத்தை அவர்கள் மதிக்கவில்லை எனில், மனவலி அல்லது ஊக்கம் ஒன்றை யே போற்றி இருத்தல் வேண்டும். அரசருடைய மனநிலை எவ்வாறு இருந்தது என்று காணத் தமிழ் மன்னன் ஒருவன் பாடிய பாடலே நமக்குத் துணை செய்கிறது. சோழன் நல்லுருத்திரன் என்பவன் அரசனாய் இருந்தமையோடு பெரும் புலவனாயும் இருந்துள்ளான்.

 

மன்னன் மனநிலை

 

இத்தகைய உயர்ந்த நோக்கத்துடன் கூடிய மன்னர் வாழும் நாடும் எத்தகைய சிறப்புடன் விளங்கியிருக்கும் என கூறவும் வேண்டுமோ? நெடுஞ்செழியனைப்பற்றி மாங்குடி மருதனார் என்னும் புலவர் கூறிய சொற்கள் இன்றும் இக்கருத்தை விரிவுபடுத்தல் காணலாம், 'உலகத்தையே பெறுவதாயினும், பொய்கூறாத வாய்மை உடையன். மனிதரே அன்றித் தேவரேவரினும், பகைவர்க்கு அஞ்சிப் பணியமாட்டான். வாணனுடைய புகழ்பெற்ற செல்வத்தையே பெறுவதாயினும், பழியொடு வருவதாயின், விரும்பமாட்டான்!'

 

'உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்

பொய்சேண் நீங்கிய வாய் நட்பினையே

முழங்குகடல் ஏணி மலர்தலை உலகமொடு

உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்

பகைவர்க்கு அஞ்சிப் பணிந்துஒழு கலையே

தென்புல மருங்கின் விண்டு நிறைய

வாணன் வைத்த விழுநிதி பெறினும்

பழிநமக்கு எழுக என்னாய் விழுநிதி

ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே'

(மதுரைக்காஞ்சி, 197-205)

 

தமிழ் மன்னருடைய மனநிலைக்கு இதைவிடச் சிறந்த இலக்கணம் கூறல் இயலாது. தன்னலம் என்பதைக் கனவிலும் கருதாத அப் பெருமக்கள் பிறர் பொருட்டே வாழ்ந்தார்கள் என்பது இதிலிருந்து விளங்குகின்றதன்றோ? இன்னும்,

 

'அரிய எல்லாம் எளிதினின் கொண்டு

உரிய எல்லாம் ஓம்பாது வீசி' (மதுரைக்காஞ்சி 145-64)

 

என வரும் அடிகள் முற்கூறிய கருத்தை வலியுறுத்தல் காணலாம்.

 

அறப்போர்

 

போரிடுங் காலத்திலும் இவர்கள் தம்முடைய பண் பாட்டிலிருந்து தவறுவதில்லை. போர் புரியத் தொடங்கு முன்னரே பகைவருடைய நாட்டில் உள்ளவர்களைப் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடிவிடுமாறு எச்சரிக்கும் நற்பண்புடையவர். "பசுக்களும், பசுத்தன்மை பெற்ற அந்தணர்களும், பெண்டிரும், பிணியுடையவர்களும் பிதிர்க்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர் பெறாதவர் களும், யாம் போர் தொடுக்கப் போவதால் உடனே உமக்குப் பாதுகாவலான இடத்திற்கு ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்" (புறம்.9) என்று பறை அறிவிப்பர் இம் மன்னர் எனில், இவர் பண்பாட்டை அறிய இதுவும் ஓர் எடுத்துக்காட்டாகும்.

 

விதிவிலக்கு

 

அறநெறி பிழையாது போர் இட்ட இம்மன்னர் கூட்டத்தின் நடுவே ஒரு சிலர் இம்முறைக்கு மாறாகவும் நடந்து கொண்டார் என்பதும் உண்மையே. ஏனைய சமயங்களிற் செம்மையாக நடந்துகொள்ளும் நல்ல அரசர்கள்கூட ஒவ்வொரு சமயத்தில் இடித்துக் கூறுவார். இல்லாத காரணத்தாலோ, என்னவோ தவறு இழைத்து உள்ளனர். பகைவருடைய நாட்டையும் அரணையும் அழித்து அவர் நிலங்களில் கழுதை பூட்டிய ஏர்களைக் கொண்டு உழுவித்தலையும் (புறம். 15) ஒரு பாடலில் கேட்கத்தான் செய்கிறோம்.

 

கரும்பு அல்லது காடு அறியாப்

பெருந் தண் பணை பாழாக,

ஏம நன்னாடு ஒள் எரி ஊட்டினை (புறம். 16)

 

என்பது போன்ற பாடல்கள் மிக மிகச் சிலவே. தொகை யாகச் சேர்க்கப் பெற்ற புறம் போன்ற நூல்களில் இத்தகைய பாடல்கள் ஒன்றிரண்டு காணப்படுதலான் ஓர் உண்மை நன்கு விளங்கும். அற்றை நாளில் தமிழ் மன்னர் இருந்த நிலையை உள்ளவாறு விளக்கவேண்டும் என்ற காரணத்தால் பொய் அறியா நன்மாந்தர் வேண்டும் என்றே இத்தகைய பாடல்களைச் சேர்த்துள்ளனர். இதனால் பெரும்பான்மையான மன்னர் மிகச்சிறந்தவராய் இருந்தனர் என்பதும், ஒரு சிலர் தவறான வழியில் சென்றனர் என்பதும் அறிய முடிகிறது. மற்றொரு வகையில் நோக்குமிடத்து இதைப் பெருந்தவறு என்றும் கூறுவதற்கில்லை. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்கள் போரில் தோற்றாரைத் துன்புறுத்தலினும் அவர் நாட்டை எரி ஊட்டலினும் தவறு ஒன்றும் இல்லை என நினைத்திருக்கலாம் அல்லவா? எரியூட்டல் முதலிய செயல்கள் நாகரிகம் முதிர்ந்ததாகக் கருதப் பெறுகிற இற்றை நாளிலும் மிகப் பெரிய அளவில் நடைபெறும் ஒன்று தானே? இற்றை நாள் மேலை நாட்டார் நாகரிகத்துடன் ஒப்பிட்டால் இச்செயல் கள் தவறுடையன எனக் கூறுவதற்கில்லை. ஆனால், 'யாதும் ஊரே யாவருங் கேளிர்' என்ற பழந்தமிழன் பண்பாட்டோடு ஒப்பிட்டால், தவறுடையதுதான் என்பதில் ஐயமில்லை.

 

தூய படுக்கை

 

இத்தகைய அரசர்களுடைய புறச்செயல் முதலிய வற்றைக் கண்டோம். இனித் தனித்த முறையில் அரசனைப் பற்றிச் சிறிது காண்டல் வேண்டும். தமிழ் மன்னன் காட்சிக்கு எளியனாய் இருந்தமையோடு காட்சிக்கு அழகனாயும் இருந்தனன் என நினையவேண்டி யுளது. அவன் உடை முதலியவற்றால் பொலிவுற்றிருந்ததை இலக்கியத்தில் காணலாம். அவன் படுத்து உறங்கும் கட்டில் தூக்கு மாலைகளால் பொலிந்து விளங்கினது என்ற கருத்தில்,

 

'கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சி' (மதுரைக்காஞ்சி 7131)

 

என்ற 'மதுரைக் காஞ்சி' ஆசிரியர் குறிக்கிறார். 'சிந்தாமணி'யாரும்,

 

'ஐந்து மூன்று அடுத்து செல்வத்து அமளி இயற்றி' (சீவகசிந்தாமணி 888)

 

என்று கூறுகிறார். ஆதலின், இம்மன்னர்கள் தாம் உறங்கும் படுக்கையிடத்து எத்துணைக் கருத்துச் செலுத்தினர் என்பது ஆய்தற்குரியது. 'நெடுநல் வாடை' என்ற பாடல் அரசனுடைய கட்டிலைப் பற்றி வருணிக்கின்ற முறையை இன்றுங்கூட முழுவதும் அறிவது கடினமாய் உள்ளது.

இன்று நம்முடைய நாட்டில் செல்வர்கள் கூடப் படுக்கை எவ்வாறு இருந்தால் என்ன என்ற கருத்துடன் இருக்கக் காண்கிறோம். வீட்டின் பிற பகுதியை நன்கு வைத்துக் கொள்பவர்கள் கூடப் படுக்கையைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கக் காண்கிறோம். ஆனால் நடுத்தர வாழ்வு வாழும் ஆங்கிலேயர்கள் முதலிய பிற நாட்டார் படுக்கையை வைத்துக்கொள்ளும் சிறப்பையும், பழைய தமிழ் மன்னர்களின் படுக்கை பற்றிய வருணனைகளையும் காணும் பொழுது இதில் ஓர் உண்மை இருப்பதை அறிய முடிகிறது. படுக்கை இருக்கும் தூய்மை, சிறப்பு என்பவற்றிற்கேற்பப் படுப்பவனுடைய மனமும் தூய்மை உடையதாய் இருக்கும் போலும்! ஆடம்பரமற்ற முறையில் படுக்கை இருப்பினும், அது தூய்மையுடன் வைத்துக் கொள்ளப்பட வேண்டுவது என்ற கருத்தை வள்ளுவப் பெருந்தகையும் வலியுறுத்துகிறார்,

 

"கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றால்" (குறள் - 840)

 

என்ற குறளில்.

 

திருந்து துயில்

 

இத்தகைய படுக்கையில் உறங்கும் வாய்ப்பைப் பெற்றவர் அனைவரும் நன்கு உறங்குகின்றனர் என்று கூறல் இயலாது. மனிதனுடைய மனம் எவ்வளவுக் கெவ்வளவு கவலையுற்றிருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு ஆழ்ந்து இனிமையாகவும் உறங்க முடியும் என்பதை அவரவர் அனுபவத்திலும் மனோதத்துவர் கூற்றிலும் காண்டல் கூடும். பெரிய பொறுப்பு வாய்ந்த பதவியை நடாத்திய தமிழ் மன்னர்கள் மனநிலையில் எவ்வாறு இருந்தார்கள் என்பதையும் தமிழ்ப் பாடல்களிலிருந்து ஒருவாறு அறிய முடிகிறது. மதுரைக் காஞ்சியாசிரியர் மன்னன் ஒருவன் உறக்கத்தை நீத்து எழுந்தான் என்று கூறவரும் பொழுது,

 

'திருந்து துயில் எடுப்ப இனிதின்எழுந்து' (மதுரை. 714)

 

என்று கூறும் அடி அம்மன்னனைப் பற்றிய பல உண்மை களை நமக்கு அறிவிக்கிறது. சாதாரணமாகவே அதிகப் பொறுப்புள்ள வாழ்க்கை வாழ்கிறவர்கள் நன்கு உறங்கமுடியாது. அவருள்ளும் மன்னன் வாழ்க்கை பற்றிக் கேட்க வேண்டுமா?

 

மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்

பிழைஉயிர் எய்தின் பெரும்பே ரச்சம்

குடிபுரவு உண்டும் கொடுங்கோல் அஞ்சி

மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்

துன்பம் அல்லது தொழுதகவு இல். (சிலம்பு. 25: 100-104)

 

(மழை குறைந்தாலும், உயிர்கள் துன்புற்றாலும் மன்னன் கொடுங்கோலனென்று தூற்றப்படுகிறான். ஆதலின், மக்களைக்காக்கும் மன்னர் குடிப்பிறத்தலினும் துன்பம் வேறு இல்லை.)

 

என்று அரசர் குடியிற்பிறந்த இளங்கோவடிகளே குறிக்கின்றார். எனவே மன்னனாய்ப் பிறந்த ஒருவன் மன அமைதியோடு உறங்குகிறான் எனில், அதில் பெரியதோர் உண்மை இருத்தல் வேண்டும். இக்காலத்தில் அமெரிக்கா போன்ற நாகரிகமும் பணமும் நிறைந்த நாடுகளில் வாழ்ப வர்களில் பெரும்பாலோர் 'உறக்க மாத்திரைகள்' பயன் படுத்தினால் ஒழிய உறங்க முடிவதில்லை என்பதை அறிகிறோம்.

 

இவை அனைத்தையும் மனத்திற்கொண்டு மதுரைக் காஞ்சியார் கூறிய 'திருந்து துயில்' என்ற சொற்களைக் காண்போம். 'திருந்து' என்ற அடைமொழியைத் துயிலுக் கும் 'இனிதின்' என்ற அடைமொழியை 'எழுந்து என்ற சொல்லுக்கும் பெய்து பாடுகிறார் ஆசிரியர். இக்காலம் போன்று பயனின்றி அடைமொழி தந்து பாட மாட்டார் கள் சங்கப் புலவர்கள். அவ்வாறு மிகுதியான சொற்கள் காணப்பட்டால், அங்கு நின்று ஆய வேண்டும்.'திருந்து' என்றும் ' இனிதின்' என்றும் கூறும்பொழுது ஆசிரியர் ஏதோ ஒரு பெரிய கருத்தைத் தெரிவிக்கின்றார். துயிலைத் திருந்து துயில் என்று குறிப்பிடுவதால், மனக் கவலையின்றி ஆழ்ந்து உறங்கும் உறக்கத்தையே குறிக்கிறார் ஆசிரியர். இத்தகைய ஆழ்ந்த உறக்கத்தை யார் பெற முடியும்?

பச்சிளங் குழந்தைகளும் மெய்ஞ்ஞானிகளும் மட்டுமே படுக்கையிற் படுத்தவுடன் உறங்கிவிடுகிறார்கள். மேலும், உறங்கும்பொழுதும் அரைகுறையாய் உறங்காமல், கனவு முதலியவற்றால் அல்லற்படாமல், நன்கு உறங்குகிறார்கள். குழந்தைகளும் மன உறுதியுடையாரும் இவ்வாறு உறங்கக் காரணம் யாது? இவ்விருவரும் மனக் கவலை இன்றி இருப்பதால் உறங்க முடிகிறது. எனவே, ஒருவன் திருந்திய துயில் கொள்ளுகிறான் எனில், அவன் மனம் கவலை அற்றுள்ளது என்பதே பொருள். துறவியின் மனம் கவலை இன்றி இருத்தல் கூடும். ஆனால், மன்னன் ஒருவன் இவ்வாறு சிறிதும் கவலை இன்றி இருக்கிறான் எனில், அது வியப்பானதே. பழந்தமிழ் மன்னர்கள் கவலையின்றி இருந்தார்கள். கவலை இன்றி இருப்பதென்றால், அது இருவகையிற் கூடும். கல் மனம் உடையவனாய், பிறர் வாழ்வு தாழ்வில் கவலையற்றவனாய், பொறுப்பற்றவனாய் இருக்கும் ஒருவனும் கவலையற்றிருத்தல் கூடும்.

தமிழ் மன்னர்கள் பற்றிய பாடல்களைப் பார்த்தால், அவர்கள் இவ்வாறு பொறுப்பற்றிருந்தார்கள் என்று கூறல் இயலாது. எனவே, வேறு ஒரு காரணம் பற்றியே அவர்கள் திருந்திய துயில் கொண்டிருத்தல் கூடும். அக்காரணமாவது யாது? வாழ்வின் உட்பொருளை நன்கு உணர்ந்தும் அரச ராய்ப் பிறந்துள்ள தம் பொறுப்பை நன்குணர்ந்தும் வாழ்ந் தனர் அற்றை நாள் மன்னர்கள். மேலும், அக் கடமையை நன்கு நிறைவேற்றினமையின், கிடைத்தற்கரிய அமைதி என்ற பரிசைப் பெற்றனர். கடமையை நன்கு நிறைவேற்றிய தால் உண்டாகும் மன நிறைவில் பிறந்த உறக்கமே அவர்கள் உறங்கிய உறக்கமாகும். இதனையே ஆசிரியர் 'திருந்து துயில்' என்ற சொற்றொடரால் குறிப்பிடுகிறார்.

இதனையடுத்து, 'இனிதின் எழுந்து' என்று வரும் சொற்களும் ஆய்தற்குரியன. விடியற்காலை எழும்பொழுது நம்மில் எத்துணைப் பேர்கள் மன நிறைவுடனும் சிரித்த முகத்துடனும் எழுகின்றோம்? இவ்வாறு எழவேண்டு மாயின், இரவு நல்ல முறையில் உறங்கி இருத்தல் வேண்டும். எனவே, இனிய முகத்துடன் மன்னன் எழுந் தான் என்று ஆசிரியர் கூறும்பொழுது அம்மன்னனுடைய வாழ்வையும் பண்பாட்டையுமே நமக்குப் படம் பிடித்துக் காட்டி விடுகிறார். தெளிந்த மனத்துடன் எழும் அம் மன்னன் நன்கு கடமையாற்றத் தயாராகிவிடுகிறான்.

 

வழிபாடு

 

இவ்வாறு எழுந்தவுடன் அம் மன்னன் படுக்கையில் இருந்தபடியே அன்றாடம் ஆற்றிமுடிக்கவேண்டிய கடமை களைப் பற்றிச் சிந்திக்கிறான். பழந்தமிழர் போற்றிச் செய்து வந்த இச்செயலைப் பிற்காலத்தெழுந்த ஆசாரக் கோவை என்ற நூல் அனைவருக்கும் உரிய கடமையாக வகுக்கின்றது.

 

'வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும்

நல் அறனும் ஒண்பொருளும் சிந்தித்து' (ஆசாரக்கோவை)

 

என்று கூறும் அடிகளில். இக்கடமை முடிந்தவுடன் அரசன் நீராடிவிட்டு உடையுடுக்கிறான். அடுத்துக் கடவுட் பூசையில் ஈடுபடுகிறான்.

 

வல்லோன் தைஇய வரிப்புனை பாவை

முருகு இயன்று அன்ன உருவினை ஆகி. (மதுரைக்காஞ்சி-723-724)

 

என்ற மதுரைக்காஞ்சி அடிகள் அவன் செய்யும் இச் செயலையும் நமக்கறிவுறுத்துகின்றன. பின்னர் உணவுண்டு, நல்ல மணம் பொருந்திய சந்தனத்தைப் பூசி, பெரிய முத்து மாலையை அணிகின்றான். ஒளி பொருந்திய ஏனைய மணிமாலைகளுடன், மலர் மாலையையும் அணிகின்றா னாம்; கைவிரல்கள் நிறைய மணிகள் அழுத்தின மோதிரங் களையும் அணிகின்றானாம்; இத்தனைக்கும் மேலாக அன்றாடம் சலவை செய்யப்பெற்ற உடைகளை அணிகின் றானாம். துணிகட்குக் கஞ்சியிட்டுச் சலவை செய்தல் இக் கால வழக்கம் என்று யாரும் நினைத்துவிட வேண்டா. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் நாட்டில் மன்னர்கள் இதனையே அணிந்தனர் என்பதைச்

 

"சோறு அமைவு உற்ற நீருடைக் கலிங்கம்" (மதுரைக்காஞ்சி-721)

 

என்ற அடிகளால் அறியலாம்.

 

உடைச் சிறப்பு

 

இத்துணை அலங்காரங்களுடன் காலை நேரத்தில் மன்னன் காட்சி தருகின்றான். ஆங்கிலர் ஆட்சித் தொடக்கம் வரையில் நிலை பெற்றிருந்த இந்திய நாட்டின் உடைச் சிறப்புத் தமிழ் நாட்டில் தொடங்கியதெனக் கூறலாம். அற்றை நாளில் தமிழ் நாட்டில் நெய்யப்பெற்ற மெல்லிய துணிகட்கு என்ன பெயர்கள் தந்தார்கள் என்று கூற முடியாவிடினும், 'டாக்கா மஸ்லின்' போன்றிருந்தன அவை என்று மட்டும் கூற முடியும். பழந்தமிழ் மன்னர் களும் பிற செல்வர்களும் உடுத்த உடைகள் எவ்வாறிருந் தன என்பதை அவர்கள் பாடலில் தோன்றும் உவமை களால் மட்டுமே அறிய முடிகிறது. உடைகளைப் பற்றிய சில குறிப்புகள் அறியற்பாலன.

 

"புகைவிரிந் தன்ன பொங்குதுகில்" (புறம், 398)

"ஆவி நுண்துகில் யாப்புறுத்து" (பெருங்கதை 1:36-64)

"நிறங்கிளர் பூந்துகில்" (சிலம்பு. 6:88)

"நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்" (சிலம்பு. 1:207)

 

என வரும் இவ்வடிகள் தமிழ்நாட்டின் தொழில் வளத்தைக் காட்டுவதுடன் மன்னர் அணிந்த உடை வளத்தையும் காட்டி நிற்கின்றன. அடுத்து உணவுகொண்டு மன்னன் நாள் ஒலக்கத்திற்குச் சென்றமை அறியமுடிகிறது. அவ்வரசர்கள் அவைக்குச் செல்லு முன் அன்றைப் பொழுதுக்கு இவருக்கு ஏவலராக அமைந்துள்ளவர் பெயர்ப் பட்டியலை வாசிக்கும் பழக்கம் இருந்ததாகவும் அறிய முடிகிறது. அன்றாடம் அரசனுடைய மெய் காப்பாளர், உறங்கும் இடத்தைக் காவல் புரிபவர் என்ற இருவகை ஏவலாளருமாவர் இவர். பெருங்கதை என்ற நூலில்,

 

புரிதார் நெடுந்தகை பூவணை வைகிய,

திருவீழ் கட்டில் திறத்துளி காத்த

வல்வேல் சுற்றத்து மெய்ம் முறை கொண்ட

பெயர் வரி வாசனை கேட்ட பின் (பெருங்கதை-34:5-8)

 

என வரும் அடிகள் பழந்தமிழ் மன்னரின் வாழ்வில் ஒரு பகுதியை அறிவிக்கின்றன. இப்பழக்கம் ஹிட்லர் காலம் வரையில் இருந்ததைக் கண்டோம்.

 

உணவுச் சிறப்பு

 

அரசர்கள் உணவும் பல்வகைச் சுவையுடையதாய், சத்துள்ளதாய் இருந்துளது. அரிசி உணவையே பெரிதும் விரும்பியுண்டனரெனினும், இற்றை நாளில் யாண்டுங் கிடைக்காத செந்நெல் என்பதை அற்றை நாளில் மிகுதியும் பயன் படுத்தினர். சத்துப்பொருள் முறையில் இச்செந்நெல் அரிசி மிகுதியும் சத்துடையதாய் இருந்திருக்குமெனத் தெரிகின்றது. ஒரு மன்னன் பாடிச்சென்ற பரிசிலர்க்கு உணவு தருமுறை கூறப்படுகிறது சிறுபாணாற்றுப் படை என்ற நூலில். அதிலிருந்து மன்னன் உணவையும் அதனை உட்கொள்ளு முறையையும் ஒருவாறு ஊகிக்கலாம். வீமன் இயற்றிய சமையற்கலை நூலின் நெறியில் தப்பாமல் பல சுவையுடன் செய்யப்பெற்ற அடிசிலை விண்மீன்கள் சூழப் பட்ட இளஞாயிறு போலக் காட்சிதரும் பொன் பாத்திரத் திடத்தே தந்தனனாம். இக்கருத்துப்பட வரும் பாடற்பகுதி.

 

பனிவரை மார்பன் பயந்த நுண்பொருள்

பனுவளின் வழாப் பல்வேறு அடிசில்

வாள்நிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த

இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து

விளங்குபொன் கலத்தில் தான் நின்று உட்டி

(சிறுபாணாற்றுப்படை 240-244)

 

என்பதாகும். அரசன் பரிசிலர்க்குந் தரும் முறை இதுவா னால், அவன் உணவு முறை பற்றிக் கூறவும் வேண்டுமோ? தமிழ் மன்னன் பெருஞ்செல்வம் பெற்றிருந்ததுடன் அதனை நன்கு அனுபவிக்கவும் பழகி இருந்தான்.

 

அரசர் அவை

 

பழந்தமிழ் மன்னர்கள் உண்டு உடுத்து வாழ்வதையே தங்கள் குறிக்கோளாகக் கொள்ளவில்லை. அவர்களுடைய இடம் அரசவையாகும். பழந்தமிழ் மன்னர்கள் அலங் கரித்த அவைகள் பல பெயர்களால் வழங்கப் பெற்றன. ஒலக்கம், நாளோலக்கம், பெருநாளவை என்ற பெயர்களால் அவ்வவைகள்* குறிக்கப்பெற்றன. அரசர்கள், அமைச்சர், ஐம்பெருங்குழு, எண்பேராயம், பிற நாட்டுத் தூதுவர் முதலியவர்களால் சுழப்பட்டிருப்பார்கள். அவ்வவைகளில் பரிசிலர் இனம் மட்டுமே அவ்வோலக்கத்தின் கண் ஆணை இன்றியும் நுழைதல் கூடும்.

 

"நசையுநர்த் தடையாநன்பெரு வாயில்" (பொருநராற்றுப்படை 66,71)

 

என்றும்,

 

பொருநர்க்காயினும், புலவர்க்காயினும்,

கடவுள் மால்வரை கண்விடுத் தன்ன

அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி (சிறுபாணாற்றுப்படை 203-6)

 

என்றும் வரும் அடிகள் பெரு நாளவைகளின் சிறப்பை அறிவிக்கின்றன.

 

ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

 

அரசர்களைச் சுற்றியுள்ளவர்கள் 'உழைவர்' (பெருங் 4:13:23) என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றனர். ஐம்பெருங் குழுவும், எண்பேராயமும் இவ்வுழையர்கள் சேர்ந்தனவே. ஐம்பெருங்குழுவினுள் யார் யார் அமைவர் என்பது பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. 'ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்' (சிலம்பு. 5:157) எனவரும் இடத்தில் அரும்பத உரையாசிரியர் இவர்களை "சாந்து, பூ, கச்சு, ஆடை, பாக்கு, இலை, கஞ்சுகம், நெல் ஆய்ந்த இவர் எண்மர் ஆயத்தார்" என்றும், "வேந்தர்க்கு மாசனம், பார்ப்பார், மருத்தர், வாழ்நிமித்தரோடு அமைச்சர் ஆசில் அவைக்களத்தார் ஐந்து" (சிலம்பு 5:157 குறிப்புரை) என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் அடியார்க்கு நல்லார், 'அமைச்சர் புரோகிதர், சேனாபதியார், தவாத்தொழில் தூதுவர், சாரணர் என்றிவர், பார்த்திபர்க்கு ஐம்பெருங் குழுவெனப் படுமே' என்றும், கரணத்தியலவர், கருமகாரர், கனகச் சுற்றம், கடை காப்பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி (குதிரை) மறவர், இணையர் எண்பேர் ஆயம் என்ப,' (சிலம்பு. 5:157 உரைப் பகுதி) என்று கூறுகிறார்.

இவ்விரு உரையாசிரியர் கூற்றையும் நோக்குமிடத்து அரசரைச் சுற்றி இருப்போர் காலாந்தரத்தில் மாறினர் என்று நினைக்க இடமுண்டு என்றாலும், அடியார்க்கு நல்லார் கூறினவர்களே அரசவையில் உடனிருந்து பங்கு கொள்ளத்தக்கவர்கள் என்று கூறல் பொருந்தும். சாந்து கொடுப்போர். பூக்கொடுப்போர் முதலியவர்கள் அரசவை யில் இருக்கக்கூடிய தகுதியுடையவர்களா என்று ஆயு மிடத்து அடியார்க்கு நல்லார் கூறினவர்களே தகுதியுடை யார் என்பது நன்கு விளங்கும். அரசவையில் இருப்போர் அரசனுடன் மந்திர ஆலோசனையில் ஈடுபடத் தகுதி யுடையவராய் இருத்தல் வேண்டாவா? அமைச்சர் முதலானோருடன் பூத்தருவோரையும், உடை அணிவிப் போரையும் வைத்தெண்ணுதல் பொருத்தமுடையதாகப் படவில்லை. பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்யுமிடமும், பரிசிலர் முதல் வெளிநாட்டுத் தூதுவர் வரை அனைவரை யும் வரவேற்குமிடமும் இந்நாளோலக்கமேயாகும்.

பழந்தமிழ் மன்னர்களுடைய நாளோலக்கத்தை நாம் இன்றும் அறிய வாய்ப்பைத் தந்தது, அவர்கள் பரிசிலர் களையும் இவ்வோலக்கத்தில் அனுமதித்ததேயாகும். ஏனை யோர் பலநாள் காத்திருந்தும் அரசனுடைய செவ்வி கிடைக்கப் பெறாமல் மனம் மறுகி இருக்கவும், பரிசிலர் மட்டும் யாதொரு விதமான தடையும் இன்றி உட்புகுதல் எத்தகைய செயல்? தமிழ் மன்னர்களுடைய மனநிலையை எடுத்துக்காட்ட இதைவிடச் சிறந்த செயல் வேறு யாது வேண்டும்?

 

'செல்வத்துப் பயனே ஈதல்:

துய்ப்பேம் எனினே தப்புந பலவே,' (புறம்-189)

 

என்று நக்கீரர் புறநானூற்றில் (189) கூறியதை இம்மன்னர் கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டனர் போலும்! தமிழ் மன்னர்கள்,

 

'காட்சிக் கெளியராய்' (குறள். 396)

 

இருத்தல் வேண்டும் என்று பொது மறை வகுத்த சட்டத் திற்கும் இம்முறை ஏற்றதாய் உளது.

 

அரசன் எதிரில்

 

அரசனுடைய அவையில் உள் நுழைவோர் நடந்து கொள்ளும் வகையை அறியப் பல வாய்ப்புக்கள் உள்ளன. இன்று பெருங்கதை என்ற நூலும் சிலப்பதிகாரமும் அரசவையில் புகுவோர் நடந்து கொள்ள வேண்டிய முறையை அறியப் பயன்படுகின்றன. கணவனை இழந்த கண்ணகி இணையரிச்சிலம்பு ஒன்று ஏந்திய கையளாய்ப் பாண்டியன் அரண்மனை வாயிற்காவலனை உள்ளே சென்று அறிவிக்க வேண்டுகிறாள். அவள் தோற்றத்தைக் கண்டஞ்சிய காவலன் உள்ளே ஓடுகிறான். காணாத செயலைக் கண்டிருப்பினும், நடவாத செயல் நடந்துவிட்ட தென்பதை அறிந்துங்கூட, உள்ளே சென்று மன்னன் அவையில் நுழைந்த அவன் பேசுவது வியப்பையே தருகிறது.

 

பாண்டியன் அவையுள் நுழைந்த வாயிற்காவலன்,

 

'வாழியெங் கொற்கை வேந்தே வாழி

தென்னம் பொருப்பின் தலைவ வாழி!

செழிய வாழி! தென்னவ வாழி!

பழியொடு படராப் பஞ்சவ வாழி!' (சிலம்பு 20:30-34)

 

என்று கூறிவிட்டுப் பின்னரே தான் கூற வந்ததைக் கூறுகிறான். எனவே, இவ்வாறு அரசனைக் காண்போர் வாழ்த்திய பின்னரே வந்த காரியத்தை எடுத்தியம்ப வேண்டும் என்ற வரன்முறை அற்றை நாளில் இருந்திருக் கும் போலும்! இவ்வாறு வரன்முறை வைத்ததற்கும் ஒரு காரணம் இருத்தல் வேண்டும். அரசனைப் பார்க்க வருபவர் பல்வகையான செய்தியையும் கொணர்வர்.

அவ்வாறு நுழைபவர் தம்முடைய உணர்ச்சிகட்கு இடந் தந்து பேச முற்படுவாராயின், அரசனுக்கு அதனால் நடுவு நிலை நீங்க நேரிடும். எனவே, செய்தி கூற வருபவர், தாம் வந்த காரியத்தை உடனே கூறாமல், அவனைப் பல படியாக வாழ்த்திவிட்டுத்தான் கூறவேண்டுமெனில், வந்த உணர்ச்சி வேகத்தில் பாதியை இழந்துவிடுவர். இவ்வகை யான ஒரு நலத்தையும் இவ்வாழ்த்து முறை தருதலைக் காணலாம். பழந்தமிழ் மன்னர் அவைக்களம் முழு வதிலுமே இப்பழக்கம் இருந்துவந்ததென்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.

 

வணங்கிய தலையர்

 

அவையுள் அரசனைக் காண வருபவர் இவ்வாழ்த்தை வாயினாற் கூறுவதோடன்றிச் செய்யவேண்டிய செயல்கள் சிலவும் உண்டு. அவற்றை அறியப் பெருங்கதை உதவுகிறது. "பிரச்சோதன" மன்னன் கணக்கர்களையும், அரசன் கருவூலத்தைக் (பொக்கிஷம்) காப்பவரையும் அழைத்து வர ஏவுகின்றான். இவ்விரு கூட்டத்தாரும் அரசவையுள் நுழையும்பொழுது முழங்காலிவிட்டு, போர்வையாகிய மேலுடையை மடக்கிக்கொண்டு, வணக்கஞ் செலுத்திக் கொண்டு, அண்ணாந்து அரசனைக் காணாமல், குனிந்த படியே அவன் ஏவலைக் கேட்டனர்," என்று அந்நூல் கூறுகிறது.

 

கணக்கரை வியன்கரக் கலவரைக் காக்கும்

திணைத்தொழி லாளரைப் புகுத்துமின் ஈங்கெனப்

புறங்கால் தாழ்ந்து போர்வை முற்றி

நிலந்தோய்வு உடுத்த நெடுநுண் ஆடையர்

தானை மடக்கா மான மாந்தர்

அண்ணாந்து இயலா ஆன்றுபுரி அடக்கத்துக்

கண்ணி நெற்றியர் கைதொழுஉப் புகுதர (பெருங்கதை 1:62-67)

 

என்ற அடிகள் அரசவைப் புகுந்த அரசன் ஊழியர் யாவரேனும் நடந்து கொள்ளும் முறையை நன்கு அறிவிக்கின்றன. இவ்வித முறையில் மரியாதை காட்டுவ தால்தான் அரசன் பெருமையடைகிறானோ என்று ஐயுற வேண்டா. என்ன இருந்தாலும் மன்னனே நாட்டிற்கு உயிர் போன்றவன் என்று கருதப்பட்ட நாளில் இவ்வாறு ஏவலரும் பிறரும் அவனிடம் பணிவு காட்டியதே அவனுடைய பெருமையை அறியாதாருக்கு அறிவிப்பதா யிருந்தது. இவ்வாறு பெருமை தரும் இயல்பு மன்னன் என்னும் மனிதனுக்கு மற்றுமன்றி, அவனுடைய அதிகாரத்திற்கும் காட்டப்பட்டது என்று கருதுதலும் தவறன்று.

 

உறங்குமாயினும் மன்னவன் தன்ஒளி

கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால், (சிந்தாமணி-248)

 

என்று திருத்தக்க தேவர் கூறுவது இது கருதியேயாம். மன்னன் இல் வழியும் அவன் அமர்ந்து ஆட்சி செய்யும் இடத்திற்கும் இம்மரியாதை காட்டப்பட்டது.

 

தேவி உடனிருத்தல்

 

இத்துணைப் பெருமைவாய்ந்த அரசவையில் அரசன் வீற்றிருக்கும் பொழுது அரசியும் உடன் இருந்தாள் என்றும் அறிகிறோம்.

 

தேவியர்க்கு எல்லாம் தேவி யாகிக்

கோவீற்று இருப்புழிப் பூவீற்று இருந்த

திருமகள் போல ஒருமையின் ஒட்டி

உடன்முடி கவித்து கடன்அறி கற்பின்

இயற்பெருந் தேவி (பெருங்கதை 2:4:20)

 

என்ற அடிகள் அற்றை நாள் தமிழ் மன்னர் பெண் இனத்திற்குக் காட்டிய பெருமையை எடுத்தியம்புகின்றன.

ஆம்! ஔவையும், வெள்ளிவீதியும், ஒக்கூர் மாசாத்தியும் பிறந்த தமிழ் நாட்டில் பெண்கட்கு மதிப்புத் தருதலும், சமஉரிமை தருதலும் இயல்பே அன்றோ? இத்துணை உரிமைகளை மகளிர்க்கு அளித்திருந்தும், வருந்தத்தக்க ஒரு நிலையாதெனில், இம்மன்னர்களனைவரும் பல தார மணஞ்செய்து கொண்டவர்களாகவே இருந்தனர். பெருங்கதை போன்ற காப்பியங்கள் இவர்களை ஆயிரக் கணக்கில் கூறுவதைக் காணலாம்.

 

காணிக்கை

 

அரசனை அவையிற்சென்று காண்போர் காணிக்கை யாகச் சில பொருள்களைக் கொண்டு சென்று காண்டல் மரபாகும். இப்பொருளைப் பண்ணிகாரம் (3.18.24) என்ற சொல்லால் குறிக்கிறது பெருங்கதை. செல்பவர் தகுதிக் கேற்பவும், அவர் வேண்டும் குறைக்கு ஏற்பவும் உயர்ந்தன வும் சாதாரணமானவும் ஆன பொருள்களைக் கொண்டு செல்லல் மரபு. சேரன் செங்குட்டுவன் மலை வளங் காணச்சென்று தங்கியிருந்த பொழுது மலைவாணர் மலைபடு பொருள்களைக் கொணர்ந்து தந்து அவனை வழிபட்டமையைச் சிலப்பதிகாரம் விரிவாகப் பேசுகிறது. (சிலம்பு 25.36-55)

 

அவையே நீதி மன்றம்

 

பழந்தமிழ் மன்னனுடைய அவை நீதி மன்றமாகவும் இருந்தமையைக் கண்ணகி வழக்குரைத்தல் மூலம் கண்டோம். பாண்டியன் நெடுஞ்செழியன் கண்ணகியை நோக்கிப்,

 

பெண் அணங்கே,

கள்வனைக் கோறல் கடுங்கோலன்று!

வெள்வேல் கொற்றம் காண்! (சிலம்பு 20:63)

 

எனக்கூறியதும் அவனுடைய அவையிடத்தேதான். அற்றை நாளில் கொலையல்லாத பிற குற்றம் செய்தவர்கள் வேறு தண்டனை பெறாமல் தம் நிறையளவு பொன்னை அரசனுக்குத் தண்டமாகக் கொடுத்து விடுதலை பெறும் பழக்கமும் இருந்ததாக அறிய முடிகிறது. இக்கருத்தைப் பழைய குறுந்தொகைப் பாடல் விரிவாகப் பேசுகிறது.

 

மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை

புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு

ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்நிறை

பொன்செய் பாவை கொடுப்பவும் (குறுந்தொகை-292)

 

கொள்ளாத மன்னன் நன்னன் ஆவான். தமிழ் மன்னர் பல சந்தருப்பங்களில் அளவு மீறிய தண்டனையளித்தனர் என்பதையும் அறிவிக்கிறது. நீராடு துறையில் நீருடன் வந்த மாங்காயைத் தின்றுவிட்டாளாம் ஒரு பெண். அந்நாட்டு மன்னன் நன்னன் மாங்காய் தின்ற குற்றத்திற்கு அவள் தந்தை தருவதாகக் கூறிய பொருள்களையும் (81 யானை களும் அவள் நிறை பொன்னும்) பெற மறுத்து, அவளைக் கொன்றே விட்டானாம்! இத் தீச்செயலால் அவன் பெண் கொலை புரிந்த மன்னன், என்ற பழிச்சொல்லைப் பெற்றான்.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கரிகால்பெருவளத்தான், பாரி போன்ற நன்மன்னர்களே தமிழ்நாட்டை ஆண்டிருப்பார்கள் என்று கூறுவது பொருத்தம் ஆகாது.

 

ஒரோவழி நன்னன் போன்ற கொடுங்கோலர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

 

எனவே சங்கப் பாடல்களில் கொடுங்கோல் மன்னர்ப் பற்றிய குறிப்புகள் பொதுவாகவே உள்ளன.

 

அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்து

தொல்கவின் அழிந்த கண் அகன் வைப்பு (பதிற்றுப்பத்து 13)

 

அம்புடை ஆர்எயில்உள் அழித்து உண்ட

அடாஅ அடுபுகை அட்டு மலர் மார்பன் (பதிற்றுப்பத்து 20)

 

பின் பகலே அன்றி பேணார் அகநாட்டு

நண்பகலும் கூகை நகும்

 

அளவிற்கு நகர்கள் பாழாயின. 'அறத்தாறு நுவலும் பூட்கை' என்ற புறநானூறு போர் அறம் கூறுமேனும் அதற்கு மாறாக நிகழ்ந்த போர்வெறிச் செயல்களின் மிகுதியைப் பதிற்றுப் பத்தும், புறநானூறுமே கூறக் காண்கிறோம்.

 

வாழ்த்தியல் துறையினும், வாடுக, இறைவ! நின் கண்ணி-ஏனோர் நாடு சுடு கமழ் புகை எறித்தலானே என்றெல்லாம் அறம் வேட்கும் புலவர் பெருமக்களே பாடியுள்ளமையும் காணப்படுகிறது.

தமிழ் மன்னர் நாளோலாக்கம் மிக்க சிறப்புடைய தாயினும் அவருள்ளும் சில பேதையர் இல்லாமற் போக வில்லை. இளவிச்சிக்கோ என்பானுடைய அரசியலைப் பாட வந்த பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர்

 

வயங்குமொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின்

அணங்குசால் அடுக்கம்பொழியநும் ஆடுமழை,

மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே. (புறம். 151)

 

என்று பாடுவதால், பரிசிலரை வரவேற்காத அவைகளும் ஒரோ வழிச் சில இருந்தன என்பது அறியப்படுகிறது.

 

ஆட்சியாளர்க்கு

 

உலகின் பல்வேறு பகுதிகளிலும் மனிதஇனம் தோன்றி வளருமுன்பே இத்தமிழகத்தில் மனிதன் தோன்றிவிட்டான் என்பது இற்றை நாளில் நிலநூல் அறிஞர் பலரும் ஒப்புகின்ற முடிபாகும். மிகப் பழைய காலத்தில் தோன்றி விட்டகாரணத்தால் இத்தமிழனுடைய நாகரிகமும் பழமை யானதாகும். சரித்திரம் எட்டிப்பாராத அந்த நாளிலேயே இத்தமிழர் செம்மையான அரசியல் அமைப்பைப் பெற்று வாழ்ந்தனர் என்றும் அறிய முடிகிறது. இன்று நமக்குக் கிடைத்துள்ள பழமையான நூல், பல புலவர்கள் பாடிய பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். 'புறநானூறு' என்ற நூல், தொகுக்கப்பெற்றது. எக்காலம் என்பது இன்று உறுதியாக அறியக்கூடவில்லை. எனினும், கிறிஸ்து நாதர் தோன்றுவதற்கு ஒரு நூற்றாண்டாவது முற்பட்டிருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு. தொகுத்தது அந்த நாளில் என்றால், அதில் காணப்பெறும் பாடல்கள் பல அதற்குக் குறைந்த அளவு ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டு முற்பட்டாவது தோன்றி இருத்தல் கூடும். எனவே, புறநானூற்றில் வரும் கருத்துக்கள் கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரை இத்தமிழர் கொண்ட கருத்துக்கள் என்று கூறுவதில் அதிகம் பிழை இருக்க இயலாது.

இத்தகைய பெருநூலில் ஆட்சியாளர் இன்றும் கவனிக்க வேண்டிய குறிப்புக்கள் மிகப் பல உள.

 

பதவியால் மாற்றம்

 

ஒருவர் எத்துணைப் பெரிய பதவியில் இருப்பினும் தாமும் மற்றவரைப் போன்ற மனிதர்தாம் என்பதை அவர் உணரவேண்டும், இதை நாம் எடுத்துக் காட்டினால் பயன் விளையாது. எத்துணை நல்லவர்களாயினும், ஆட்சி கைக்கு வந்தவுடன், மனம் மாறிவிடுகின்றனர். இக்குறைபாடு உலகின் எந்தப் பகுதியிலும் காணப்படுகிற ஒன்று தான். எனினும், இத்தமிழர்கள் என்றுமே இதனை ஆட்சி யாளர்க்கு நினைவூட்ட மறந்ததில்லை. தான் பொது மக்களின் தொண்டன் என்ற நினைவு ஒருவனுக்கு இல்லையாயின், அவன் நல்ல ஆட்சியாளன் ஆதல் இயலாது. எனவே, இவர்களைப் பற்றிக் கூறவந்த பொதுமறை,

 

எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால்

வேறுஆகும் மாந்தர் பலர். (குறள்-514)

 

என்று கூறிற்று. 'எத்தனை முறைகளில் ஒருவரைச் சோதித்து முடிபு செய்தாலும் அதிகாரம் கைக்கு எட்டிய பின் அவர் எவ்வாறு ஆவார் என்பதைக் கூற முடியாது, என்பதே இக்குறளின் திரண்ட பொருளாகும். குறள் வகுத்த இந்த இலக்கணத்தை ஆட்சியாளருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ்ந்த கம்பநாடனும் தன் இராம காதையில் பேசுகிறான்:

 

அறம் நிரம்பிய அருள்உடை அருந்தவர்க் கேனும்

பெறல் அருந் திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம். (கம்பன்-1476)

 

பண்பாட்டால் நிறைந்தவர்கட்குக்கூட, பெறுதற்கரிய செல்வம் கிடைத்துவிட்டால், மனம்மாறிவிடும் என்கிறான் கவிஞன், மேனாட்டு ஆக்டன் பிரபு,'அதிகாரம் மனிதனைச் சீரழியச் செய்கிறது; எதேச்சாதிகாரம் முற்றிலும் அழிந்துவிடச் செய்கிறது' என்று கூறியதும் ஆய்தற்குரியது. ஆட்சியாளர் இவ்வாறு மாறிவிடாமல் இருக்க வழி யாது? இதற்குற்ற வழி யாது என்ற வினாவை மிகவும் பழங்காலத்தில் வாழ்ந்த 'நக்கீரர்' என்ற புலவரும் கேட்டார். பல நாள் சிந்தித்த பின் அவர் ஒரு முடிபுக்கு வந்து விட்டார். ஆட்சியாளர் சீர்திருந்த வேண்டுமாயின், அதனைப் பிறர் கட்டளை இட்டுச் செய்ய இயலாது. அவர்களாகவே திருந்த வேண்டும். எவ்வாறு திருந்துவது? இதோ புலவர் வழி கூறுகிறார். ஆட்சியாளர் ஒவ்வொருவரும் தவறாமலும் ஓயாமலும் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டிய கருத்து இது.

 

திருந்த வழி

 

தெளிந்த நீரால் சூழப்பெற்ற உலகம் முழுவதையும் பிறவேந்தருக்கும் பொது என்று இல்லாமல் தாமே ஆளும் வெண்கொற்றக் குடையை உடைய ஒப்பற்ற பேர் பெற்ற அரசருக்கும், நடு இரவிலும் பகலிலும் தூக்கம் இல்லாமல் விரைந்து ஓடும் விலங்குகளை வேட்டையாடும் கல்வியறி வில்லாத ஒருவனுக்கும் உண்பதற்குரியது ஒரு நாழி அரிசி; உடுக்கப்படுவன இரண்டே துணிகள்; பிற எல்லாம் ஒன்றே; என்ற பொருள்பட,

 

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோக்கும்

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி; உடுப்பன இரண்டே

பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே. (புறம். 189)

 

என்று பாடுகிறார் தமிழ்ப் புலவர். இற்றை நாள் ஆட்சி யாளர் அனைவரும் இதனை நினைவில் வைத்துக் கொண்டால் நாடு எத்துணைச் சிறப்படையும்! பொது மக்களினின்றும் தம்மை வேறாக நினைத்துக்கொண்டு, அவர்கள் விரும்பாதவற்றையும் அதிகாரபலத்தால் திணிக்க மனம்வருமா, இந்த எண்ணம் மனத்தில் நிறைந்திருந்தால்?

 

காட்சிக்கு எளியர்

 

தம்மைச் சாதாரண மனிதராக இவர்கள நினைத்துக் கொண்டால்தானே முறை வேண்டியவர்களும், குறைவேண்டியவர்களும் வந்து இவர்களைக் காண முடியும்? இதனை மனத்துட் கொண்ட வள்ளுவர்,

 

'காட்சிக்கு எளியனாய்க் கடுஞ்சொல்லன்

அல்லனாய்' (குறள்-386)

 

மன்னன் இருக்கவேண்டாம் என்று கூறுகிறார்.

 

ஆட்சியாளர் காட்சிக்கு எளியராய் இருக்க வேண்டும் என்று கூறுவதில் ஆழ்ந்த பல கருத்துக்கள் உள்ளன. இக் காலத் தேர்தல் முறையில் இக்குறைபாடு மிகுதியும் இருக்கக் காண்கிறோம். ஏதாவது ஒரு கட்சியின் சார்பிலே நின்றுதான் வாக்குரிமை பெறுகின்றனர் பலரும். தனிப் பட்டவர் என்று கூறிக் கொள்கிறவர்கட்கு இக்கால அரசியல் அமைப்பில் இடமில்லை. மேலும், தனிப்பட்ட ஒருவர் பிறர் உதவியை வேண்டாமல் தேர்தலுக்கு நின்று வெற்றி பெறுவது என்பதும் இயலாத காரியம். எனவே, பிறருடைய உதவி நாடப்படும் பொழுது அப்பிறர் எத்தகையவர் என்பதை ஆராய்தல் இயலாத காரியம்.

 

கூடா நட்பு

 

எவ்வாறாயினும் ஒருவருடைய உதவி தேவை என்று நினைக்கும் அந்த நேரத்தில் தம் கருத்தை முற்றிலும் ஏற்றுக்கொளபவர் உதவியை மட்டும் நாடுவதென்பதும் இயலாது. உதவ வருபவர் பண்புடையாளரா, அல்லரா என்று ஆராய்ந்துதான் அவருடைய உதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒருவர் முடிபு செய்தால், அவர் தேர்தலுக்கு நின்றும் பயன் இல்லை. எனவே, பலருடைய உதவியையும் நாடித்தான் தேர்தலில் வெற்றி பெற முடிகிறது. எனில், அந்தப் பலருள் பல்வேறு பண்புடையவரும் இருப்பர் அல்லவா? தன்னலவாதிகள், பிறருக்குத் தீங்கு இழைப்பதைக் கலையாக வளர்த்தவர்கள், பிறர் பொருளைத்தம் பொருளாகக் கருதுபவர், பொதுப் பணம் என்பது தம்முடைய நலத்துக்கெனவே கடவுளாற் படைக்கப்பட்டது என்று கருதி வாழும் பண்புடையாளர் ஆகிய பல திறப்பட்டவரும் அப்பலருள் இருக்கத்தானே செய்வர்? இவர்களுடைய உதவியால் தேர்தலில் வெற்றி பெறுபவர் பிறகு அதிகாரத்துக்கு வந்தவுடன் இவர்களை எளிதில் நீக்கிவிட முடியுமா? டாலர் பெருமான் முழு ஆட்சி நடத்தும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்களாட்சியில் இக்கூற்றை நன்கு காணலாம்.

எனவே, ஆட்சியாளர் தீயவர்கள் நெருக்கத்திலிருந்து மிக விரைவில் விடுபடவேண்டும். அத்தகையோருடைய உதவியை மேற்கொண்டு தேர்தல் முதலியவற்றில் வெற்றி பெறுவது அரசியல் நீதியாயினும், ஆட்சியில் அமர்ந்த வுடன் இத்தகையவர்களை நீக்கிவிட வேண்டுமென்பதே பழந்தமிழர் கண்ட அரசியல் நுணுக்கமாகும். 'வெள்ளைக் குடி நாகனார்' என்ற புலவரும் இந்தக் கருத்தையே வற்புறுத்துகிறார்.

 

அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து

முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் (புறம்.31)

 

என்ற அடிகளில் நடுவுநிலை பிறழாமலும், முறை வேண்டு பவர்கள் எளிதில் வந்து காணுமாறும் ஆட்சியாளர் இருக்க வேண்டும் என்பதையே குறுகிறார்.

 

சொல் செயல் வேறுபாடு

 

ஆளப்படும் பொதுமக்கள் பல்வகை நலன்களை ஆட்சியாளர் தமக்குச் செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்தல் இயல்பே. ஆனால், ஆட்சியிலிருப்பவர்கட்குத் தாம் எவற்றைச் செய்யமுடியும், எவற்றைச் செய்ய முடியாது என்பவை தெரியும். ஆட்சியில் அமர்வதற்கு முன்னர்ப் பலவற்றையும் செய்வதாக வாக்களித்தலும், அமர்ந்த பின்னர் இந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுதலும் இன்று நாம் காணும் காட்சி. இக்காலத்து மக்கள் அனைவருமே இதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றனர் போலும்! ஒரு கட்சியார் மட்டும் அல்லாமல் அனைவருமே இவ்வாறு சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாயிருத்தலின், ஒருவரும் இதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால், பொதுமக்களைப் பொறுத்த மட்டில் ஆட்சியாளரின் இந்தச் சொல், செயல் மாறுபாடு மன வருத்தத்தை உண்டாக்கத்தான் செய்யும்.

 

ஆழ்ந்த வருத்தம் உண்டாகுமாயின், நாளடைவில் அது ஆட்சியாளருக்குத் தீமையாய் முடியும். பொது மக்களிடம் தோன்றிய இந்த வெறுப்புச் சில சந்தருப்பங் களில் உடனே பயன் தருவதும் உண்டு. இன்னும் சில சந்தருப்பங்களில் உடனே பயன் தராது. இவ்வாறு பயன் தராதபோது மக்கள் வெறுப்புக் கொள்ளவில்லை என்று ஆட்சியாளர் நினைத்து விடக் கூடாது. ஆட்சியில் இருப்பவர்களைவிடச் சிறந்த பண்புடைய கட்சி வேறு இன்மையால் மக்கள் தம் வெறுப்பைக் காட்டாமலும் இருத்தல் கூடும். சந்தருப்பம் வந்தபொழுது தவறாமல் வெறுப்பைக் காட்டிவிடுவர். அமெரிக்காவில் நெடு நாட்களாய் ஆட்சியில் இருந்த 'டெமாகிராட்டிக்' கட்சியார் சென்ற தேர்தலில் தோல்வி யடைந்தமைக்குரிய காரணங்களுள் இதுவும் ஒன்று. எனவே, 'கூடுமான வரை செய்யக் கூடியவற்றைச் செய்கிறோம்' என்று கூறுலும், இயலாதவற்றை 'இயலாது' என்று கூறுதலும் நலத்தைத் தவறாமல் விளைக்கும், ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் இதோ இக்கருத்தைக் கூறுகிறார்.:

 

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவக்கும்

ஒல்லாது இல்என மறுத்தலும் இரண்டும்

ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;

ஒல்லாது ஒல்லுக என்றலும் ஒல்லுவது

இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே

இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்

புகழ்குறை படூ உம்வாயில் (புறம்.195)

 

[ஒல்லுவது-கொடுக்கக்கூடியதை; ஒல்லாது-தர இயலாத தை; ஆள்வினை மருங்கு - முயற்சி செய்வோரிடத்து உள்ள; கேண்மைப்பாலே - நட்பின் செயலாகும்; இரப்போர் வாட்டல் - எதிர்பார்க்கின்றவர்களை வீணாகத் துன்புறுத்த லும்; புரப்போர் புகழ் குறைபடூஉம்-ஈவோர் (ஆட்சி யாளர்) புகழைக் குறைக்கும்/]

 

இக்காலத்தே நாகரிகமும் அரசியல் முறையும் மிகுதி யும் வளர்ந்து விட்டன என்று கூறித் தருக்கடைகிறோம். எனினும், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இத் தமிழன் கண்ட அரசியல், அறம் இன்னும் தேவைப் படுதலைக் காணலாம்.

 

மன்னனுக்கு வேண்டுவது

 

நாட்டை ஆளும் அரசனுக்கு எத்தனையோ பண்பாடு கள் தேவை. என்றாலும், அவை அனைத்தையுங்காட்டிலும் மிகவும் இன்றியமையாதது அவன் வாழ்வில் கொண்ட குறிக்கோள் என்றே பழந்தமிழர் கருதினர்.

ஒரு நாட்டை ஆள்பவனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது யாது? இவ்வினாவிற்குப் பலரும் பலவாறு விடை கூறுவர். ஆனால், அவர்களுடைய விடைகள் அனைத்தையும் கூட்டி ஒரு சொல்லில் கூற வேண்டுமாயினும் கூறலாம். ஆட்சியாளனுக்கு இன்றியமை யாது வேண்டப்படுவது ஒரு குறிக்கோள். குறிக்கோள் இல்லாதவனுடைய வாழ்க்கை சிறப்படையாது. விலங்கு களும் பிறந்து, உண்டு, வாழ்ந்து, முடிவில் இறக்கின்றன. மனிதனும் இவ்வாறே இருந்துவிடுவானாகில், இருவருக்கும் வேறுபாடு இல்லையாய் விடும். விலங்கினத்திலிருந்து மனிதன் பிரிக்கப்படுவதற்கு ஒரு சிறந்த காரணம் அவன் வாழ்க்கையில் மேற்கொள்ளும் குறிக்கோள்தான். குறிக்கோள் இல்லாதவனுடைய வாழ்க்கை உப்புச் சப்பு இல்லாமல் ஏதோ நடைபெறுகிறது என்று கூறும் முறையிலேதான் இருக்கும். தனிப்பட்ட மனிதன் வாழ்வுக்கே குறிக்கோள் தேவை என்றால், பலருடைய வாழ்க்கையை வழிகாட்டி நடாத்தும் நாடாள்வானுக்கு இது தேவை என்று கூறினால் அதில் வியப்படையக் காரணம் இல்லை. இன்று நாட்டை ஆள்பவர்கள் எத்துணைப் பெருமுயற்சியுடன் ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்ற அரும்பாடுபடுகின்றனர்! இத் திட்டம் முடிந்து பயன்தரும் பொழுது, இன்று ஆட்சி செலுத்துபவர்களே அப்பொழுதும் இருப்பார்கள் என்று கூறுவதற்கில்லை. எனினும், இன்று ஆள்பவர்கள் அது பற்றிக் கவலை கொள்வதில்லை. தாங்கள் மீட்டும் ஆட்சியில் அமர முடியுமா என்பது பற்றிக் கவலை கொள்ளாமல், திட்டங்களை நிறைவேற்றவே முற்படுகிறார்கள். ஏன்? இதுதான் குறிக்கோள் என்று கூறப்படும் நாட்டுக்கும் பெரும்பாலான மக்கட்கும் நலந்தருவன எவை என்று ஓயாமல் நினைந்து, அவ்வாறு நலந்தருவனவற்றை நாடுதலே ஆட்சியாளனுடைய 'குறிக்கோள்' எனப்படும்.

 

குறிக்கோள் இன்மை

 

சிறந்த குறிக்கோள் இல்லாதவர்களும், இல்லாத கட்சியும் எத்துணை வண்மையும், கூட்டச் சிறப்பும் பெற்றிருப்பினும் சரி, அவை பயன் தாரா. இன்றைய சூழ்நிலையில் உலகம் முழுவதிலும் கட்சிகள் தாம் நாட்டை ஆள்கின்றன. மக்களாட்சி நடைபெறுவதாகப் பறை சாற்றப்படும் நாடுகளிலும், தனிப்பட்டவர் ஆட்சி என்று கூறப்பெறும் நாடுகளிலும் உண்மையில் நடை பெறுவது கட்சி ஆட்சியே! கட்சியாட்சியின் குறைவு நிறைவுகளை ஆய்வது நம்முடைய கருத்தன்று. என்றாலும், ஒரு கட்சி சிறப்படைவதும், சிறப்பை இழப்பதும் அதனுடைய குறிக்கோளைப் பொறுத்தனவே யாகும். குறிக்கோள் இல்லாதவர்கள் கட்சித் தலைவராகவோ நாட்டை ஆள்பவராகவோ இருந்துவிடின், நாட்டுக்குத் தீமை இதனைவிட வேறு தேவை இல்லை. எனவே, பலர் அடங்கிய நாட்டையோ கட்சியையோ தலைமை வகித்து நடத்துபவனுக்கு வேண்டிய உயர்ந்த குறிக்கோள்களைப் பற்றிப் பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் பாடிய பாடலை இங்குக் காணலாம்.

 

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (குறள்-596)

 

என்ற குறளில் வள்ளுவர் குறிக்கோளைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார். ஒருவனுடைய வாழ்க்கையில் கொள்ள வேண்டிய குறிக்கோள் எத்தகையதாய் இருத்தல் வேண்டும்? அது மிக உயர்ந்ததாய் இருத்தல் வேண்டுமாம். அவ்வாறாயின், அது கைகூடாததாகவும் இருக்கலாமோ எனில், இருந்தாலும் கவலை இல்லை என்கிறார் வள்ளுவர். இத்தகைய உயர்ந்த குறிக்கோளுடைய ஒருவன் தன்னால் ஆளப்படும் நாட்டிற்குப் பெருநன்மை செய்யவேண்டும் என்று விழைகிறான். நாட்டுக்கு நலன் விளைக்கவேண்டும் என்று நினைக்கும் அவனே ஆள்பவனாகவும் இருந்து விட்டால், அவனை யார் தடை செய்யமுடியும்? அவன் வேண்டுமானவரை நலம் புரியலாமே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆனாலும், ஆட்சி முறையில் பழகியவர்கட்குத்தான் அதிலுள்ள இடையூறு நன்கு தெரியும். ஆளும் தலைவன் எத்துணைச் சிறந்தவனாயினும், அவனுடைய குறிக்கோள் எத்துணைச் சிறந்ததாயினும், பயன் இல்லை, அதனைக் கொண்டு செலுத்துவோர் தக்கவராய் இல்லா விடத்து!

இன்று நம்முடைய அரசியலார் செய்யும் பல நன்மை களைப் பொதுமக்கள் அனுபவிக்க முடியாமற்போய் விடுகிறது. காரணம், இடை நிற்போர்! எனவே, ஆள்வோ ருடைய குறிக்கோள் சிறந்ததாகவும் இருந்து, அது பயன் படவும் வேண்டுமாயின், ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது, ஆள்வோர்கள் தக்கவர்களைத் தம்முடன் இருத்திக்கொள்ளுதல். உடன் இருக்கும் அத்தக்கவர் களாலேதான் ஆட்சியாளர் குறிக்கோள் நற்பயன் விளைத்தல் கூடும்.

 

அரசன் குறிக்கோள்

 

சோழன் நல்லுருத்திரன் என்பவன் நாடாளும் சோழர் குடியில் பிறந்த மன்னன் - அரசாட்சியின் இந்த நுணுக் கத்தை அனுபவத்தில் கண்டான் போலும்! இதோ குறிக்கோளைக் கொண்டு செலுத்த உதவும் நண்பர்களைப் பற்றிப் பேசுகிறான் அவன்;

 

"நன்கு விளைந்து முற்றி வளைந்த நெல் கதிராகிய உணவைச் சிறிய இடத்தையுடைய வளையில் நிறைய வைக்கும் எலி முயன்றாற்போலச் சிறிய முயற்சியை உடையவர்களாகி, இருக்கும் தம்முடைய செல்வத்தை அனுபவிக்காமல் இறுகப் பிடிக்கின்ற பரந்த மனப் பான்மை இல்லாதவர்களுடன் பொருந்திய நட்பு இல்லாமல் போவதாக! தறுகண்மையுடைய பன்றியைப் புலி அடித்த பொழுது அப்பன்றி இடப்பக்கம் வீழ்ந்து விட்டதாயின், அன்று அவ்விடத்தில் உணவு உட் கொள்ளாமல், மறு நாள் பெரிய மலையின்கண் உள்ள தனது குகை தனிமைப்பட உணவை விரும்பிப் புறப்பட்டு வந்து பெரிய ஆண் யானையை நல்ல வலப்பக்கத்தில் விழும்படியாக அடித்து உண்ணும் புலி பசித்தாற்போலக் குறை இல்லாத நெஞ்சுரம் உடையவர்களின் நட்புடன் பொருந்திய நாட்கள் உளவாக!" என்ற கருத்தில் பேசுகிறான் அவ்வரசப் புலவர்.

 

விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்

வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்

எலிமுயன்று அனைய ராகி உள்ளதம்

வளன்வலி யுறுக்கும் உளம்இ லாளரொடு

இயைந்த கேண்மை இல்லா கியரோ!

கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென

அன்று அவண் உண்ணாது ஆகி வழிநாள்

பெருமலை விடர் அகம் புலம்ப வேட்டுஎழுந்து

இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்

புலிபசித்து அன்ன மெலிவில் உள்ளத்து

உரன்உடை யாளர் கேண்மையொடு

இயைந்த வைகல் உளவா கியரோ! (புறம். 190)

 

[விளைபதம் - முற்றிய பருவம், வல்சி - உணவு, அளை - வளை, வளன் - செல்வம், வலியுறுக்கும் - இறுகப் பிடிக்கும், கேண்மை - நட்பு, கேழல் - பன்றி, வழிநாள் - மறு நாள், விடர் அகம் - குகையில், புலம்ப - தனித்துவிட; இருங் களிறு - பெரிய ஆண் யானை, உரன் உடையாளர் - நெஞ்சு வலிமை உடையார், வைகல் - நாட்கள்.]

 

எலி மனிதர்

 

உலகில் வாழும் மனிதர்கள் பல திறப்படுவார்கள். எனினும், இப்பாடல் பாடிய கவிஞன் அவர்களை இரண்டே பிரிவில் அடக்கி விடுகிறான். முதற் பிரிவினர் எலியைப் போன்றவர். மனிதனுக்கு வேண்டப்படும் குறிக்கோள் என்பது சிறிதும் இன்றி, எவ்வாறாயினும் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற இந்த எலி கூட்டத்தார், இன்றும் உலகிடை மிகுதியாகக் காணப்படுகின்றனர். இத்தகையவர்கள் வாழ்வில் தமக்காகவோ பிறருக்காகவோ முயற்சி சிறிதும் செய்ய மாட்டார்கள்; ஆனால், தமக்குரிய நலங்களையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எவ்வாறு முயற்சிகள் சிறிதும் இல்லாமல் இந்த நலங்களைப் பெறுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறதா? பிறர் முயற்சியில் ஏற்படும் பயனை இவர்கள் திருடுகிறவர்கள். யாரோ முயன்று பயிரிட்ட வயலில் கதிர் முற்றிய நிலையில் அதனைத் திருடித் தன் வளையில் வைத்துக் கொள்ளும் எலியைப் போன்ற மக்களும் உண்டு அல்லவா? அத்தகையவர் ஆட்சியாளரை அண்டி இருந்தால் நாடு கெட்டுப்போவதற்கு வேறு காரணமும் வேண்டுமா? இவர்களுடைய பொருள் தவறான வழியில் சேர்க்கப் பட்டிருப்பினும், அதனைக்கூட இவர்கள் பிறருக்குத் தரமாட்டார்கள். சில காலத்திற்கு முன்பு கள்ளச் சந்தையில் நிறையப் பொருளைச் சேகரித்துத் தாமும் உண்ணாமல் அரசியலாருக்குத் தரவேண்டிய வரிப் பணத்தையும் தாராமல் ஏமாற்றியவர் எத்தனை பேர்? அவர்கள் அனைவரும் இந்த எலிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே யாவர்.

 

புலி மனிதர்

 

இவரினும் வேறுபட்ட ஒரு கூட்டத்தாரும் உண்டு. இவர்கள் புலி போன்ற கோட்பாட்டினை உடையவர். புலி பசி தாளாமல் பன்றியை அடித்தாலும், அப்பன்றி இடப் பக்கம் வீழ்ந்துவிட்டமையின் அதனை உண்ணாமற் சென்றுவிட்டதாம். பசித்த காலத்து எது கிடைத்தாலும் சரி என்று நினையாமல் தன் கொள்கைக்கு முரணான விடத்துப் பசியையும் பொறுத்துக்கொள்ளுகின்ற புலி, மனிதனுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அன்று உண்ணாத புலி மறுநாள் புறப்பட்டு யானையை வலப்புறம் வீழுமாறு அடித்து அன்றுதான் உண்டதாம். எனவே, கொள்கையே பெரிதென்று வாழும் மனிதர்கள் புலியின் இனத்தைச் சேர்ந்தவர்கள். பிற விலங்குகள் அடித்துக் கொன்ற விலங்கைப் புலி உண்பதில்லை. அது போல இவர்களும் பிறருடைய முயற்சியால் வந்த பொருளைத் தாம் அனுபவிப்பதில்லை. தன்னால் அடிக்கப்பட்ட விலங்கு இடப்புறம் வீழ்ந்துவிடின் புலி அதனை உண்ணாதாம். அதே போல இவர்கள் செய்த முயற்சியில் வந்த ஊதியம் தவறானதாய் இருப்பின், இவர்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. புலி பசியைப் பொறுத்துக்கொள்வது போல இவர்களும் வாழ்க்கையில் உண்டாகும் எத்தகைய துன்பத்தையும் தங்கள் கொள்கைக்காகப் பொறுத்துக் கொள்வர். புலி முயற்சியால் கொன்ற விலங்கைத் தான் உண்டு விட்டு எஞ்சியதை நாளைக்கு வேண்டுமே என்று வைத்துக் கொள்ளுவதில்லை. அந்த எஞ்சிய உணவைப் பிற விலங்குகள் பல உண்டு உயிர் வாழும். அதே போல இந்தப் பெரியவர்கள் தாம் செய்த முயற்சியால் பெற்ற ஊதியத்தை தமக்கே வேண்டும் என்று வைத்துக் கொள்வதுமில்லை; தங்கள் தேவை தீர்ந்தவுடன் எஞ்சியதைப் பிறருக்கு வரையாமல் வழங்குவர். இத்தகைய புலிக்கூட்டத்தாருடன் நட்பு வேண்டும் என்று கூறுகிறான். வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் வேண்டும் என்று கருதுவான் அப்பழந்தமிழ் ஆட்சியாளன். ஐந்தாண்டுத் திட்டங்கள் வெகுவாக நடைபெறும் இக்காலத்தில் நமது அரசியலாருக்கு எலிக்கூட்டத்தார் நட்பினர் ஆகாமல், புலிக் கூட்டத்தார் நட்பினர் ஆனால் எவ்வளவு பெரிய நன்மை உண்டாகும்!

 

ஆட்சியாளர் கவனிக்க வேண்டுவன

 

ஆட்சியாளர் அன்றும், இன்றும் நாட்டுக்கு எவ்வாறு நன்மை புரிந்தனர், புரிகின்றனர்? பொது மக்கள் தருகின்ற இறைப்பணத்தை(வரி) வைத்துத்தானே ஆட்சி நடை பெறுகிறது? இன்றும் வரவு செலவுத் திட்டம் பாராளு மன்றத்தின் தலையாய கடமைகளுள் ஒன்று அன்றோ? எவ்வாறு புதிய வரிகளை விதித்துப் பணம் சேகரிக்கலாம் என ஆட்சியாளரும், எவ்வாறு வரிச்சுமையைக் குறைக்க லாம் எனப் பொது மக்களும் சிந்தித்தல் இயற்கை. புதிய வரிகளை விதித்தலில் எந்த அளவைக் கொள்வது என்பது பற்றி எந்த அரசினும் முடிந்த முடிபாக இதுவரை ஒன்றும் கூறப்படவில்லை. கொடுப்போருடைய வன்மை தான் வரி விதிப்போருக்கு அளவாக அமைதல் வேண்டுமே தவிர, அரசியலாருக்கு ஏற்படும் செலவு அளவாக அமைதல் கூடாது. இக்கருத்து இன்றும் சிறந்த அரசியல்வாதிகள் அனைவரும் ஒத்துக் கொள்கிற கொள்கையாகும். இக்கருத்தைப் பிசிராந்தையார் என்ற புலவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் அழகிய ஓர் உதாரணத்துடன் விளக்கினார்.

'யானை பெருந்தீனி தின்னும் பிராணி. ஆனாலும் சிறிய மா அளவுள்ள நிலத்தில் விளையும் நெல்லை அறுத்து அரிசியாக்கித் தந்தால், பெரிய யானைக்குக்கூட அது பல நாட்கட்கு ஆகும். அவ்வாறு செய்யாமல், யானை தானே சென்று தின்னட்டும் என்றி அவிழ்த்து விட்டுவிட்டால், நூறு ஏக்கர் நிலமாயினும் வாயில் புகுவதைக்காட்டிலும் காலில்பட்டு அழிவது மிகுதி. எனவே, அறிவுடை வேந்தன் முறைதெரிந்து இறைப் பணத்தை வசூலித்தால், பல காலம் அவனும் மக்களும் இன்பமாக வாழ முடியும். அரசன் அறிவற்றவனாகித் தீயவர்களை நட்புக்கொண்டு செலவை முன்னிட்டு வரியைப் பெற்றால், யானை புகுந்த வயலைப் போல நாட்டையுங் கெடுத்துத் தானும் கெடுவான்', என்ற கருத்தில் அவர் பாடுகிறார்:

 

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே

மாநிறைவு இல்லதும் பல்நாட்கு ஆகும்

நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே

வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்

அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே

கோடி யாத்து நாடுபெரிதும் நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்

வரிசை அறியாக் கல்என் கற்றமொடு

பரிவுதப எஉடுக்கும் பிண்டம் நச்சின்

யானை புக்க புலம்போலத்

தானும் உண்ணான்; உலகமும் கெடுமே. (புறம்-184)

 

(காய்நெல்- விளைந்த நெல்; கவளம்- யானைக்குத் தரும் சோற்று உருண்டை; மா-ஒரு சென்ட் போன்ற நில அளவு; செறு- ஏக்கர் போன்ற அளவு; நந்தும்- பெருகும்; வைகல்- தினந்தோறும்; கல்என் சுற்றம்- ஆரவாரக் கூட்டம்; பரிவு தப- அன்பு கெடும்படி, பிண்டம்- பொருள் தொகுதி; நச்சின்- விரும்பினால்)

 

தமிழ் நாட்டகலம்

 

'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும்'

 

இந்நல் உலகத்தைப் பண்டு தொட்டு ஆண்டவர் மூவேந்தர் எனப்படுவர். சேர, சோழ, பாண்டியர் என்று கூறப்பெறும் இவர்களைப் பற்றிப் பண்டை இலக்கியங்கள் பரக்கப் பேசுகின்றன. இம்மூவரும் சேர்ந்து ஆட்சிபுரிந்த இடத்தின் பரப்புத்தான் யாது என்று நினைக்கிறீர்கள்? வடக்கே வேங்கடமலை (இப்பொழுது திருப்பதி என்று கூறும் மலையே) தெற்கே கன்னியாகுமரி, மேற்கும் கிழக்கும் கடல்கள், வடக்கிலிருந்து தெற்கே ஏறக்குறைய 500 மைல்கள், கிழக்கிலிருந்து மேற்கே அகன்ற விடத்தில் 400 மைல், குறுகிய இடத்தில் சில அடிகள் (குமரி முனை யில்) இந்த அளவு குறுகிய நிலத்தை ஆட்சி செய்தவர் மூவர்.

 

'மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்

முரசு முழங்குதானை மூவர்' (புறம். 35)

 

என்ற புறப்பாடல் இதற்குச் சான்று. இந்த அளவுடைய நாட்டை மூவர் ஆட்சி செய்தாலும், அவர்கள் ஒவ்வொரு வரும் தந்தமைக் கூறிக்கொள்ளும் பொழுது பேரரசர் களாகவே (சக்கரவர்த்திகள்) கூறிக் கொண்டனர். அவ்வரசர்கள் ஒரோவழி அதை மறந்திருப்பினும், உழை இருப்போர் அவர்கட்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தனர். மேலே கூறப்பெற்ற பாடலின் அடுத்த அடியே போதுமானது. சோழன் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை 'வெள்ளனக்குடி நாகனார், என்ற புலவர் பாடிய பாடம் அது.

 

'முரசு முழங்கு தானை மூவருள்ளும்

அரசெனப் படுவது நினதே பெரும்!' (புறம்.-35)

 

என்று கூறிய புலவர் பெருமான் இன்னும் ஒரு படி மேலே சென்று,

 

'நாடு எனப்படுவது நினதே' (புறம்-35)

 

என்றும் கூறிவிடுகிறார். தமிழ்நாட்டை மூவர் ஆட்சி செய்தாலும், 'அரசன்' என்று கூறினால் சோழனைத்தான் குறிக்குமாம்! நாடு என்று கூறினால் சோழநாட்டைத்தான் குறிக்குமாம்.!

 

சக்கரவர்த்திகள்

 

இன்னுஞ் சில சந்தருப்பங்களில் அவர்கள் ஆளும் பகுதிகளை 'உலகம்' என்றுகூடக் குறிப்பிட்டனர். 'பிரமனார்' என்ற புலவர்.

 

'பொதுமை சுட்டிய மூவர் உலகமும்

பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும். (புறம்-357)

 

என்று கூறிய அடிகள் ஆழ்ந்து நோக்கற்குரியவை. உலகம் என்ற சொல்லால் நாட்டின் ஒரு பகுதியைச் சுட்டிக் கூறுதல் அக்கால மரபுதான்.

 

மாயோன் மேய காடுறை உலகமும் (அகத்திணை, 5)

 

என்று தொல்காப்பியம் கூறுகிறது. என்றாலும்மூவர் உலகம் என்று புறப்பாடல் புலவர் கூறும்பொழுது, அவர் இவர்களுடைய நாட்டின் பரப்பை ஓரளவு மிகுதிப் படுத்தியே கூறுகிறார் என்பது விளங்கும். ஒவ்வொரு சந்தருப்பத்தில் இம்மூவருள் வலிமை பெற்ற ஒருவன் ஏனைய இருவரையும் அடக்கி ஆளுதலும் உண்டு. இன்னும் கூறப்போனால் இவர்களுள் ஒவ்வொருவனும் ஏனையோரை அடிப்படுத்தலையே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தனன். புறநானூற்றில் 357--ஆம் பாடலில்பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும் என்று கூறுவது இவ்வாறு ஒரோவழி ஏனைய இருவரையும் வெற்றி கண்ட ஒருவனையே குறிக்கிறது.

 

தமிழருக்குள் அடிதடி

 

கரிகாற்பெருவளத்தான் போன்ற ஒரு சிலர் தமிழ் நாட்டின் எல்லையைத் தாண்டிச் சென்று, பிறநாடுகளிலும் வெற்றி கண்டார்களாயினும், பெரும்பான்மையான தமிழ் மன்னர்கள் வெற்றி கண்டது பிற தமிழ் மன்னர்களையேயாம். தமிழனை மற்றொரு தமிழன் போரிட்டுத் தொலைப்பதைப் பெரு வெற்றியாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் அந்நாளில் பெரும்பான்மையான தமிழர். சில சந்தருப்பங்களில் இவர்களுடைய போர் அவ்வளவில் நின்றுவிடாமல், யாதொரு தீங்கும் புரியாத மக்களையும் வருத்தத் தொடங்கிற்று. வெல்லப்பட்டவர் நாட்டை (தமிழ் நாட்டின் மற்றொரு பகுதிதான்) அழித்து, நெருப்பூட்டல் ஒரு வழக்கம்.

 

கரும்புஅல்லது காடு அறியாப்

பெருந்தண்பணை பாழாக

ஏம நல்நாடு ஒள்எரி ஊட்டினை. (புறம்-16)

 

[கரும்பு விளையும் விளைநிலங்களை எல்லாம் நெருப்பூட்டினாய்]

 

என வரும் அடிகள் நம் சிந்தனையைக் கிளறாமல் இருக்க முடியாது. இவ்வாறு இவர்கள் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடும் பொழுதுகூட தோற்ற வரைப்பற்றி நினைத்ததில்லையா? அவர்களும் தம்மைப் போன்ற மொழி பேசும் ஒரே நாகரிகம் உடையவர் என்ற எண்ணம் இவ்வெற்றி வீரர்கட்கும் தோன்றி இராதா? போரில்லாத நாட்கள் மிகவும் குறைவு என்று கூறத்தக்க முறையில் இவர்கள் வாழ்ந்துள்ளனர். இப்பெரு மன்னர் கள் ஒரோவழி வாளாவிருந்தாலும், இவர்கட்குக் கீழ் வாழ்ந்த சிற்றரசர்கள் வாளாவிருப்பதில்லை. இவ்வாறு போரிட்டு மடியக் காரணம் யாது? படை வைத்திருந்தமை யின் வாளாவிருக்க முடியாமல் ஓயாது போரிட்டனாரா?

 

போரிடக் காரணம்

 

புறப்பாடல்களை ஒரு முறை புரட்டினவருங்கூட ஓர் உண்மையை அறியாமல் இருத்தல் இயலாது. ஏனைய எத்துணைக் காரணங்கள் இருப்பினும், இவர்கள் ஓயாமல் பூசலிட்டதற்குத் தலையாய ஒரு காரணம் காணப்படுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் காணப்பெறும் இரண்டு உணர்ச்சிகளே இதன் காரணம் என்று நினைய வேண்டி உளது. இயற்கையாகத் தோன்றும் வெறுப்பு உணர்ச்சி ஒன்று; ஏனையது புகழ் ஈட்ட வேண்டும் என்று தோன்றும் உணர்ச்சி. இவை இரண்டும் கூடினவிடத்து விளைவது போரேயன்றி வேறு யாதாக இருத்தல் இயலும்?

 

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே (புறம். 165)

 

[நிலைபேறில்லாத இந்த உலகில் புகழை நிலை நாட்டிப் பலர் மாய்ந்தனர்]

 

புகழ்ப் பைத்தியம்

 

இத்தமிழருடைய புகழ்ப் பைத்தியம் மிகவும் ஆழமாய் இருந்ததென்பதைக் காட்ட நூற்றுக்கணக்கான உதாரணங்கள் தரவியலும்.

 

தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.” (குறள்-238)

 

என்று குறளாசிரியர் கட்டளை இடுமுன்பே இம்மக்கள் தம் வாணாளில் பெற வேண்டிய ஒரு குறிக்கோளாக இதனைக் கொண்டிருந்தனர் என்பதை நன்கு அறிய முடிகிறது. இலக்கணம் இதற்குப் பெரியதோர் இடந்தந்து, “பாடாண்திணை என்றதொரு திணையையே வகுத்து விட்டது.

 

புகழடைய வழி

 

மனிதனாய்ப் பிறந்தவன் புகழ் ஈட்டியே தீரவேண்டும் என்றால், அதற்குரிய வழிகள் யாவை என்று கேட்கத் தோன்றுகிறதன்றோ? வழிகள் பலவாக இருக்கலாம். எந்த வழியை மேற்கொண்டால் புகழ் பேசுகிறவர்கள் எளிமையாகப் புகழ்வார்கள்? அந்த வழியே சிறந்த வழி என்று நினைத்திருத்தல் கூடும் அக்கால மக்கள். மேலும், புகழ் ஈட்டும் வழி மூலமாகவே தம்முடைய மனக் கருத்தையும் முற்றுப் பெறச் செய்யக் கூடுமாயின், அது மிகவும் நலமானதாகப் பட்டிருக்கும். இயற்கையாக மனத்தில் தோன்றும் வெறுப்புணர்ச்சிக்கு வடிவு கொடுப்பதன் மூலம் இரண்டு பயன்கள் கிட்டுகின்றன. முதலாவது, யாரை வெறுக்கிறோமோ அவர் மேல் போர் தொடுத்து வெற்றி காணமுடிகிறது. இரண்டாவது, அவ்வாறு பெறும் வெற்றியே பிறர் புகழவும் காரணமாகிறது. இவ்வாறு இரண்டு வழிகளிற் பயன் பெறக் கூடுமாயின், வன்மை மிக்க அரசர்கள் போர், என்ற வழியை மேற்கொண்டதில் வியப்பிருத்தல் இயலாது. மேலும், அந்த அரசர்கள் புரியும் இந்தப் போர்களைத் தம்முடைய நாட்டு மக்களின் நலத்திற்காகவே செய்ததாகவும் கூறினர்; அம்மக்களும் இதனை நம்பினர்.

 

வெற்றி வெறி

 

பிறருடைய நாட்டின் மேல் போர் தொடுத்துச் செல்லுதல் அரசர்க்குரிய அறமாகவும் போற்றிக் கூறப் பெற்றது. தற்காப்புச் செய்யுமுறையில் போரிடுதல் அன்றியும், பிறர்மேல் படைகொண்டு வலுப் போருக்குப் போதலும் அறமெனவே கருதப்பெற்றது. புகழ் வேட்டையாடப் பிறருடைய நலத்தைப்பற்றிக் கவலை கொள்ளாமல் போரிடுதலை ஒரு வாய்ப்பாகக் கொண்டனர் அற்றை நாள் தமிழர். எவ்வளவு பெரிய அரசனும் இதற்கு விலக்காமாறு இல்லை. மேலும், ஓரிரண்டு போர்களில் வெற்றி கண்டு விட்டால், அது குடிப்பழக்கம் போல ஆகிவிடும். அவ்வெற்றி தந்த வெறி, மேலும் மேலும் போர்செய்யத் தூண்டும். தாம் இவ்வாறு போர் செய்து அதனால் பெறுவதாகக் கருதிய புகழ் உண்மையானதா என்று ஆராயக்கூட அவர்கள் முற்படவில்லை.

 

வாழ்வின் குறிக்கோள் போரன்று

 

அரசராய்த் தாம் பிறந்ததே போர்செய்யத்தான் என்று கூடப் பலர் கருதிவிட்டனர். இத்தகைய ஒரு நிலையில் அறிவுடைப் பெருமக்கள் சிலர் மனத்திலாதல் ஓர் ஐயம் தோன்றியிருத்தல் வேண்டும். கேவலம் போரிடுதல் ஒன்று தானா புகழை வளர்க்கும்? இது தவிர இவ்வரசர் பெருமக்கள் செய்யத்தக்க நற்செயல்கள் வேறு இல்லையா? இவ்வாறு சிலர் தம்மைத்தாமே கேட்டுக்கொண்டு பெற்ற விடைகளும் புறப்பாடல் முதலியவற்றில் காணக்கிடக் கின்றன. “மாங்குடி மருதனார் என்ற புலவர் தம்முடைய அரசனுக்குண்டான போர் வெறியைத் தணிக்கமதுரைக் காஞ்சி என்றதொரு நூலையே (எவ்வளவு பெரிய பாடல் அது!) இயற்றினார் என்றால், பழந்தமிழர் போர் வெறி என்ற பாலைவனத்தில் இது ஒரு நீர் ஊற்றுப் போன்று காணப்படுகிறது. 782 அடிகளையுடைய அப்பாடலில், அப் புலவர், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு நல்லதோர் அறிவுரை வழங்குகிறார்.

 

பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந்து ஏத்த

விலங்குஇழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய

மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்

மகிழ்ந்து இனிது உறைமதி பெரும!

வரைந்துநீ பெற்ற நல்ஊ ழியையே (மதுரைக்காஞ்சி, 778-82)

 

(உனக்கிருக்கும் வாழ்நாள் ஓரளவுடையதாதலின், நல்ல முறையில் உண்டு உடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக).

 

இப்புலவரே இம்மன்னனையே பாடும் புறப்பாட்டு ஒன்றில் இன்னும் ஒருபடி மேலே செல்கிறார்.

 

ஒண்தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய

தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து

ஆங்கினிது ஒழுகுமதி பெரும! ஆங்கது

வல்லுநர் வாழ்ந்தோர் என்ப...... (புறம்-24)

 

இவ்வாறு இன்புற்று வாழ்வதே வாழ்க்கை எனப்படும் என்று அவர் கூறும் பொழுதுதான், இவ்வாறு செய்யா தவர்களுடைய வாழ்வு எவ்வளவு பயனற்றது என்பதையும் அறிய முடிகிறது.

 

ஏனைய வழியால் பெரும் புகழ்

 

போர் செய்தலையே தம் வாணாளின் குறிக்கோளாகக் கொண்ட இம்மன்னர்கள் புகழடைவதற்கு மேற்கொண்ட வழி சற்று விந்தையானதே! இதனைக் காட்டிலும் வேறு வழியில் வாழ்வதால் நல்லதொரு புகழை அடைய முடியும் என இவர்கள் ஏனோ நினைக்க வில்லை! ஆனால், இப்பேரரசர்கள் வாழ்ந்த அதே காலத்தில் சில சிற்றரசர்களும் வாழ்ந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் மேற்கொண்ட குறிக்கோள் முற்றிலும் வேறானதாகக் காணப்படுகிறது. கடைஏழு வள்ளல்களைப் பற்றியும் இப்புறப்பாடல் முதலியன பேசுகின்றன. அவர்களும் புகழ் படைத்தவர்களாகவே உள்ளனர். என்றாலும் என்ன வேற்றுமை? புகழ் என்ற ஒன்றை அடைய முற்றிலும் வேறுபட்ட இரு வழிகளைக் கையாண்டுள்ளனர். யாருடைய வழி சிறந்தது? போர் வெறி கொண்டு, நாட்டிற்கு நன்மை என்ற பெயரால் தமிழர்களுடைய குருதியைத் தமிழ் மண்ணில் ஆறாகப் பெருகவிட்டுத் தம்முடைய மக்களும் தோற்ற மக்களும் ஒருசேர அவதிப் படச் செய்த இப்போர் வெறியர்களும் புகழடைந்து விட்டதாகச் செருக்குற்றிருந்தனர். இவர்கள் செருக்கை வளர்க்கத் தமிழ் புலவர்களும் காரணர்களாய் இருந்தனர். குறு நிலமன்னர்கள் எழுவரை ஒரே நாளில் வென்றுவிட்டான் என்பதற்காகத் தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியனை எத்தனை புலவர்கள் புகழ்ந்துள்ளனர்! அதுவும் அளவுமீறிப் புகழ்ந்துள்ளனர். நன்கு ஆராய்ந்து பார்த்தால், இதனை மிகப் பெரிய வெற்றிகளுள் ஒன்று என்றுகூடக் கூறவியலாது. தம்முடைய நாட்டைவிட்டுப் பன்னூறு மைல்கள் கடந்து சென்ரு வேற்று நாட்டில் போர்கள் புரிந்து வெற்றி பெற்ற செங்கிஸ்கான் அலெக்ஸாந்தர் முதலானோருடன் ஒப்பு நோக்கினால் நெடுஞ்செழியன், கரிகாலன் போன்றார்கள் வெற்றி மிகச் சிறியதாகிவிடக் காண்கிறோம். ஆனால், அலெக்ஸாந்தர் கிரேக்கர்களுடனும், செங்கிஸ்கான் மங்கோலியருடனும் போரிடவில்லை. நெடுஞ்செழியனோ என்னில், தமிழ ருடன் போரிட்டான். வென்றவனும் தமிழன்; தோற்றவ னும் தமிழன். இவ்வெற்றியை என்னவென்று பாராட்டு வது? இவ்வெற்றியால் புகழடைந்ததாகக் கருதிய மன்னரும் நம் இரக்கத்திற்கு உரியர். புகழுக்குரிய ஒரு செயலைச் செய்துவிட்டான் அம்மன்னன் என்று கருதி அவன்மேல் பாடாண்திணைப் பாடல்கள் பாடிய புலவர்களும் நம் இரக்கத்திற்கு உரியவரேயாவர்.

இவ்வெற்றிகளால் பெறுவது இன்பமாயினும், புகழாயினும் அவை விரும்பத்தக்கனவல்ல. இவ்வுண்மையை தமிழர் நன்கு அறிந்திருந்துங்கூடப் போரால், வெற்றியால் இன்பங்காண முயன்றனர். அதனால் பெற்ற புகழையும், அப்புகழ் நிலையற்றதாயினும், விரும்பினார்கள். போர் செய்தலாகிய முறையை மேற்கொண்டு புகழடைய முயன்ற இவர்களினும் வேறுபட்ட முறையைக் கையாண்டு புகழீட்டியவர்களும் உண்டு. பிறருக்குத் தீங்கு புரிவதைக் கனவிலும் கருதாதவர்களாய் வாழ்ந்த அவ் வள்ளல்களும் புகழ் பெற்றனர். அறிவின் துணைகொண்டு புகழ் தேட முயன்ற இப்போர் வெறியர்கள் எங்கே, உணர்வின் துணைகொண்டு கொடை என்ற சிறப்பால் புகழ் படைத்த வள்ளல்கள் எங்கே! இவ்விரு சாராரும் பெற்றது ஒரே புகழ்தான் என்றாலும், இருவர் கையாண்ட வழிகள் எவ்வளவு மாறானவை! அடையும் பயன் ஒன்றே யாயினும், மேற்கொள்ளும் வழி வேறுபாட்டால் இருவரும் இரு வேறு துருவங்கட்குச் சென்றுவிட்டனர்.

 

புகழடைய இருவழிகள்

 

அறிவு வழி மேற்கொண்ட இவர்கள் புகழ் சிறந்ததா, அன்றி, அந்பு வழி மேற்கொண்ட அவர்கள் புகழ் சிறந்ததா? அறிவு அறிவு என்று கூவி அறிவிற்கு வணக்கம் செலுத்தும் இக்காலத் தமிழ்நாடு, ஒருவேளை இப்போர் வெறியர்களைப் பாராட்ட முன் வரலாம். ஆனால், உண்மையில் இவர்கள் புகழ் நிலை நின்றதா? இது நன்கு ஆராயற்பாலது. அன்பு வழி மேற்கொண்டு புகழ் படைத்தார் பற்றி அடுத்துக் காண்போம்.

 

எவ்வழி சிறந்தது?

 

அறிவு வழியை மேற்கொண்டு படைதிரட்டித் 'தன் வலியும் துணைவலியும் மாற்றான் வலியும் இருள் தீர எண்ணிப்' போர் மேற்கொண்டு வெற்றி பெற்றுப் புகழடைந்தவர்கள் பற்றியும் கண்டோம், புகழ் தேட வேண்டும் என்ற தலையாய விருப்பும், உள்ளே தோன்றும் வெறுப்புணர்ச்சிக்கு வடிவு கொடுக்கும் முயற்சியும் சேர்ந்து போராக வெளிப்பட்டன என்றும் கண்டோம். இவ்வரசர் கள் வாழ்ந்து இன்று இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு கூட இவர்கள் செய்கை போற்றத்தக்கது என்று ஒரு தலையாகக் கூறக்கூடவில்லை.

 

அகங்காரமும் மமகாரமும் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் ஆணவமும் மமகாரமும் இயற்கையாக அமைந்துவிடுகின்றன,. பல சந்தர்ப்பங்களில் வேறு வழியாற் கூறினவிடத்தும் ஏற்றுக் கொள்ளாதவர்களை மடக்க இது பயன் படுகிகிறது. 'இத்துணைப் பெரியவனான நீ இந்தக் காரியம் செய்ய லாமா' என்று கேட்டால் சிலர் திருந்திவிடக் காண் கிறோம். எனவே, ஒவ்வொருவனும் தன்னைப் பற்றி ஒரு மதிப்பைத் தானே வகுத்துக்கொண்டுள்ளான் என்பது தெரிகிறது. தான் செய்யும் காரியம் தன் மதிப்புக்கு ஏலாதது என்பதை ஒருவர் எடுத்துக்காட்டியவுடன் அச் செயல் செய்வதிலிருந்து விலகி விடுகிறான். இதிலிருந்து ஒன்றை அறிய முடிகிறது. மனிதனிடத்து அமைந்து கிடக்கும் 'அகங்காரம்' எனப்படும் 'யான்' என்பதையோ 'மமகாரம்' எனப்படும் 'எனது' என்பதையோ தொட்டு விட்டால், அவன் துள்ளி எழுகிறான். உறங்கிக் கிடக்கும் ஒருவனைத் தொழிற்படுத்த வேண்டுமாயின், இவற்றைத் தூண்டி விடுவது சிறந்த வழி என்றே படுகிறது.

 

தூண்டிலில் இரை

 

'யான் எனது' என்பனவற்றைத் தூண்டுவதன் மூலம் ஒருவனை நல்லது செய்யவும் தூண்டலாம்; அல்லது தீயவை செய்யவும் செலுத்தலாம். இவை இரண்டும் தூண்டுபவன் மன நிலையைப் பொறுத்தவை. பழந்தமிழ் அரசர்களின் புகழ் விருப்பம் இவ்வகங்காரத்திலிருந்து அரும்பினதே யாகும். அவன் புகழைப் பாடினவர்கள் ஒரு வகையில் அம்மன்னனுடைய 'யானுக்கு' இரை இட்டனர். 'யான்' என்ற மீனுக்குப் 'புகழ்' என்னும் இரையைக் காட்டிலும் சிறந்தது ஒன்றில்லை. அதிலும் 'கவிதை' என்னும் தூண்டிலிற்கோத்த 'புகழ்' என்னும் இரையைக் கண்டு மயங்காத மனிதர்களே மிகமிகக் குறைவாவர். பழந்தமிழ் மன்னர்களில் பெரும்பான்மையானவர் 'மனிதர்'களே. எனவே அவர்கள் இத்தூண்டிலில் சிக்குண்டதில் வியப்பில்லை. இது கருதியே போலும் வள்ளுவப் பெருந்தகை 'புகழ்' என்ற அதிகாரத்தை இல்லறவியலின் இறுதி அதிகாரமாக வைத்துப் போனார்! மேலே கூறப்பட்ட முறையில் அறத்தைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்று கூறிய ஆசிரியர், மக்கள் இனத்தை மறுமுறையும் கூர்ந்து நோக்குகிறார். ஒரு சிலர் பயன் என்ற ஒன்றைக் கண்டால் ஒழிய நன்னெறி ஒழுக மாட்டார்கள். ஆனால், பயன் என்பது இம்மையில் அன்றி மறுமையில்தான் கிடைக்குமெனின், 'அது கிடக்கட்டும்' என்று கூறுகிறவர்களும் இம்மக்கள் தொகுப்பில் உளராகலின், அவர்கள் பொருட்டாகவே 'புகழை' இறுதி அதிகாரமாக வைத்தார் போலும்! இந்தத் தூண்டில் பொன் முள்ளாகலின் இல்லறத்தார்க்கே உரியது என்பார் போல இல்லறவியலின் இறுதி அதிகாரமாக வைத்து உள்ளார். துறவு நெறி செல்பவர் இப்புகழ் என்னும் வலையில் பட்டால் மீள்வது அரிதன்றோ?

 

'யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்

வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். (குறள்-346)

 

என்று கூறிய பிறகு துறவிக்குப் புகழ்மேல் ஆசை இருத்தல் முறையன்று. எனவே, துறவறத்தில் இவ்வதிகாரத்தை வள்ளுவர் வைக்கவில்லை.

 

புகழ் தேட வழி

 

இல்லறவியலில் 'புகழ்' அதிகாரத்தை வைக்கும் பொழுது ஆசிரியர் மிகுந்த கவனத்துடன் வைத்துள்ளார் என்பதை முன் பின் பார்த்தால் நன்கு விளங்கும். ஈகை என்ற அதிகாரத்தின் பின்னர் இவ்வதிகாரம் அமைந் துள்ளது நோக்கற்குரியது. அதனை ஒருவேளை மக்கள் கவனியாமல் விட்டு விடுவார்களோ என்று அஞ்சிப் போலும் ஆசிரியர் புகழ் அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களில் முதல் இரண்டு குறள்களிலும் ஈகை உடையா னுக்கே புகழ் உண்டு என நினைவூட்டுகிறார்! புகழ் தேடவேண்டும் எனினும் அதற்குப் போரைக் கருவியாகக் கொள்வதை வள்ளுவர் விரும்பியிருக்க மாட்டார். பிறர்க்குத் தீமை புரிந்து அதனால் புகழ் வருவதாயின் அதனைப் புகழ் என்றுகூற ஒருப்பட மாட்டார்.

 

'மறந்தும் பிறன்கேடு சூழற்க' (குறள்-204)

 

என்று கூறிய பெரியார்.

 

பிழை எங்கே

 

வள்ளுவர் கருத்து இதுவாயின் பிழை எங்கே நேர்ந் தது பழந்தமிழ் மன்னர்கள் ஏன் போரைக் கருவியாகக் கொண்டனர்? அறிவை அதிகம் நம்பியதால் ஏற்பட்ட பயன்தான் அது. ஓயாது பிறரைப் பற்றியும் அவருடைய வலிமை பற்றியும் எண்ணிக்கொண்டிருந்த அம்மன்னர் கள் இப்பிழை செய்வது எளிய காரியம். அதிலும் மன்ன ராய்ப் பிறந்த தாங்கள் செய்வன அனைத்தும் சிறந்தவை என்ற எண்ணமும் உடன் தோன்றி விட்டால் பிறகு கேட்கவும் வேண்டுமா? பெற்ற பயன் இதுதான்.

 

அறிவாராய்ச்சியும் பயனும்

 

இந்தப் பாலைவன வாழ்வில் வேறு கருத்துடையவர் களே இருந்ததில்லையா? இல்லாமல் இல்லை. ஆனால், அறிவும் உணர்வும் வளர்க்கப்பட வேண்டிய இவ்வுலகில் அறிவின் துணைகொண்ட இவ்வரசர்கள் கூட்டம் மிகுதி. ஆனால், உணர்வின் துணைகொண்ட மன்னர்கள் கூட்டம் சற்றுக் குறைவு. அறிவைத் துணைக்கொண்டு உலகை நோக்கும்பொழுது, உலகம் வழங்குகின்ற காட்சியே வேறு; உணர்ச்சியைத் துணைகொண்டு காணும் பொழுது கிடைக்கும் காட்சியே வேறு; அறிவால் ஆராய்ந்த மன்னன் முதலிற்கண்டது தன்னையும், தன் பெருமையை யும் ஆம். அடுத்துக் கண்டது தன்னைப் போன்ற மன்னர் களையும், குடிமக்களையும். ஆனால், அறிவுக்காட்சி அம்மட்டோடு நிற்கவில்லை. அந்த அரசர்களைத் தன்னுடன் ஒப்புமை செய்து பார்த்து அவர்களுடைய வன்மைக் குறைவை எடுத்துக்காட்டிற்று. தன் அதிகாரத் தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் கூறிற்று. வந்த வாய்ப்பை விடாமல் பயன்படுத்த வேண்டும் என்று சுட்டிக் காட்டிற்று. பிறருடன் தன்னை எடை போடத் தொடங்கியவுடன் எவ்வாறாயினும் அவர் களினும் தான் மேம்பட்டவன் என்று பிறர் கூற வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. தான் ஆளும் இந்த நிலம் 'பிறமன்னர்கட்கும் பொது' என்ற சொல்லைப் பொறுக்காத ஒரு நிலை வந்துற்றது.

 

"வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்

போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறா அது

இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்ப" (புறம்-8)

 

[பிற அரசர் புகழும்படி இன்பத்தை விரும்பிய வாழ்வை நடத்தாமல், இந்த உலகம் பிற மன்னருக்கும் பொது என்று பிறர் சொல்லும் சொல்லைப் பொறுக்காமல்.]

 

அறிவால் ஆராய்ந்த பொழுது பெற்ற பயன் இதுவாகும்.

 

உணர்வு வழி வாழ்வு

 

உணர்ச்சியால் ஆண்ட பெருமக்களுள் தலையாயவன் பாரி வள்ளல். அறிவை அடக்கிக்கூட உணர்ச்சிக்கு இடந் தந்த பெருமை அப்பெருமகனுக்கே உண்டு. 'இவ்வளவு தூரம் அறிவை இழந்து உணர்ச்சி வசப்படலாமா?' அதுவும் மன்னனாகிய அவன் இவ்வாறு செய்யலாமா? என்றுகூடக் கேட்கப்படலாம். உணர்வை இழந்து, அன்பை இழந்து, தம்மொடு பொருது மடிகிறவரும் தம்மைப் போன்ற தமிழர் என்பதை மறந்து, தமிழ் மண்ணில் தமிழ்க் குருதியைப் பரவவிட்ட நூற்றுக் கணக்கான தமிழ் மன்னர், உணர்ச்சியை விட்டு அறிவின் துணை கொண்டனர். அவர்கள் எதிரில் பாரியும் பாரி போன்ற ஒருசிலரும் அறிவைவிட்டு உணர்ச்சியைப் பெருக்கி வாழ்ந்தது தவறா? 'உடையுடுத்தாத ஊரில் உடையுடுத்தவன் பைத்தியக்காரன்' என்பது முதுமொழி. அவ்வாறு கூறுவது சரிதான் என்று கூறும், அறிவுவாதிகள் வேண்டுமானால் பாரியைத் தவறு கூறட்டும். மற்றவர் அனைவரும் பாரியைப் போற்றத்தான் செய்தனர்; செய்கின்றனர்; செய்வர்.

 

கொடைக்கு உவமை

 

பாரியின் கொடைத்திறத்திற்கு உவமை கூற வந்த புலவர், உலகம் முழுவதும் தேடியும் உவமையைக் காண முடியாமல், இறுதியில் 'மேகம்' ஒன்றைத்தான் கூறினார். 'என்ன அழகான உவமை! இதைவிடப் பாரியைத் திட்ட 'வேறு உவமை வேண்டுமா?' என்கிறார் அறிவுவாதியர்; மேகம் செய்யும் தொழிலைப்பற்றிப் பரணர் இதோ பாடுகிறார்; அதுவும் 'மேகம்' என்ற வள்ளலைப் பற்றித் தான் பாடுகிறார்.

 

அறுகுளத்து உகுத்தும் அகல் வயல் பொழிந்தும்

உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்

வரையா மரபின் மாரி போல (புறம்--142)

 

[வற்றிய குளத்திலும் விளை வயலிலும் பெய்து, அதனால் நாம் நினைக்கும்படியான பயனை உண்டாக்காமல், கார் நிலத்தில் பொழிந்து எவ்விடத்தும் வரையாத இயல்புடைய மேகம் போல]

 

இவ்வாறு கொடுப்பதை ஆராயாமல் தருவதை என்ன வென்று கூறுவது? இது முறையா? பெருமையா? அறந் தானா? இல்லை என்பார் என்க. ஆனால், இவ்வாறு தருவதன் அடிப்படையை உணர்ந்துகொண்டாலன்றிப் பாரியை அறியுமாறு இல்லை.

 

தனி இனம்

 

பாரி போன்றோர் ஒரு தனி இனமாவர். ஏனை யோருக்கு மனம் வேலை செய்வதைப் போல இவர்கட்குச் செய்வதில்லை. அறிவாளன் உலகைக் காணும்பொழுது முதலிற் காண்பது தன்னை (அகங்காரம்) என்றும் அடுத்துக் காண்பது தனதை (மமகாரம்) என்றும் கூறினோம். பாரி போன்றோர் முதலிற் காண்பது இவற்றை யன்று. கூறப்போனால் இறுதியிற்கூட இவற்றைக் காண்ப தில்லை அவர்கள். இதுவே வேற்றுமை. இதை உதாரணத் தால் நன்கு அறியலாம். யானும் எனதும் அவர்கள் பார்வையில் வராமையின், 'புகழ்' என்னும் தூண்டிலில் அவர்கள் சிக்குவதும் இல்லை. யான், எனதை உடைய மீன்கட்கே புகழ் என்னும் பொன் தூண்டில் உரியது. அவற்றிலிருந்து விடுதலைப் பெற்ற திமிங்கிலங்கள் போல்வர் இவ்வள்ளல்கள். 'யான் எனது' அற்றவன் பாரி என்பதைச் சற்று விளங்கக் காணலாம்.

 

அறிவால் ஆய்ந்தால்.?

 

காட்டில் தேரூர்ந்து சென்ற பாரி முல்லைக்கொடி ஒன்று கொழுகொம்பு இல்லாமல் வாடிய துயரைக் கண்டான். கண்டவன், 'ஆறு அறிவு படைத்த' மனிதனாய் பாரி காணப்பட்டது, 'ஓர் அறிவு' மட்டும் உடைய உரு கொடி, பாரியின் அறிவு வேலை செய்யத் தொடங்கியிருப் பின் யாது நிகழ்ந்திருக்கும் என்று காணலாம். முதலில் இக்கொடிக்கு ஒரு கொழுகொம்பு தேவை என்று நினைத் திருப்பான். 'எத்தகைய கொம்பு தேவை? சிறிய ஒரு கொம்பு போதுமா, அன்றிப் பெரியதொரு மரம் தேவைப் படுமா? வீட்டிற்குச் சென்றவுடன் ஏவலாளன் ஒருவனை ஏவி நல்லதொரு கொம்பை நடச்சொல்ல வேண்டும்' என்ற முறையில் நினைந்திருப்பான். இன்னுங் கொஞ்சம் அறிவு முதிர்ந்திருந்தால், கீழ்க்காணும் முறையில் அவன் நினைவு ஓடியிருப்பினும் வியப்படைவதற்கு ஒன்று இல்லை: "இது நாம் வளர்க்கும் கொடியன்று. காட்டில் இயற்கையாய் இந்த ஒரு கொடிதானா வளர்கிறது? எத்தனையோ ஆயிரக்கணக்கான கொடிகள் உள. முல்லை மட்டும் என்ன? எத்தைனையோ கொடிகள்! இவற்றிற் கெல்லாம் கொழு கொம்பு தேவையா என்று காண்பதுதானா நமது வேலை? அரசனாய் இருக்கும் நமக்கு எத்தனை தொல்லைகள்! முறை வேண்டியும் குறை இரந்தும் நம்மிடம் வருபவர்கட்கே தக்க வழிதேட முடியாத பொழுது இந்தக் கொடிக்காகக் கவலைப்படுவது அறிவீன மன்றோ? கிடக்கட்டும். இன்று நாம் இந்தக் கொடிக்கு ஒரு கொம்பு நட்டுவிட்டால் நாளை வரும் கொடிகளையெல்லாம் யார் காப்பாற்றப் போகிறார்கள்? அப்படியே இந்தக் கொடி அழிந்துவிட்டால்தான் என்ன? உலகமா முழுகிவிடும்? செலுத்துத் தேரை மேலே!" இவ்வாறு நினைக்க அறிவுவாதிக்கே முடியும். ஆனால், பாரி அறிவுவாதி அல்லனே!

 

பாரியின் மனநிலை

 

பாரி செய்தது யாது? தான் ஓர் அரசன் என்பதையும் எதிரே இருப்பது கேவலம் ஒரு கொடிதான் என்பதையும் அறவே மறந்துவிட்டான். அந்தப் பண்பட்ட உள்ளத்தில், கலை மனத்தில், உலகிலுள்ள உயிரெல்லாம் ஒன்று என்று கருதும் கருணை உள்ளத்தில், எதிரே முல்லைக் கொடி தெரியவேயில்லை. பின்னர் என்ன தெரிந்தது? கொழு கொம்பின்றி வாடும் ஓர் உயிர்தான் தெரிந்தது. பாரியின் உயிரே ஊசலாடிவிட்டது. கொடி கொம்பில்லாமல் ஆடினதைக் கண்ட கருணை மறவனின் உள்ளம் துடித்தது; உயிர் துடித்தது. ஓர் உயிர் மற்றோர் உயிரின் வாட்டத்தைக் கண்டுவிட்டது. தன்னுடைய இனமாகிய மற்றோர் உயிர் வருந்துவதைக் கண்டுவிட்டது. "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் என்னுள்ளம் வருந்திய வருத்தம் நீயே அறிவாய்!" என்று பிற்காலத்தில் ஒரு கருணை உள்ளம் (இராமலிங்க வள்ளலார்) பேசிற்று. பாரி இக்காட்சியில் தன்னை மறந்து, தன்னிலைமையை மறந்து, அறிவிழந்து, கூர்த்த, அறிவெல்லாம் கொள்ளை கொடுத்து, வருந்தும் கொடியுடன் உணர்வின் உதவியால் ஒன்றாகிவிட்டான். பாரியின் இந்த நிலைமையைக் கற்பனை செய்துகொண்டு தான் ஆசிரியர்,

 

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை? (குறள்-315)

 

என்று பாடினார் போலும்! அந்த ஓரறிவுயிர் தன்னுடைய துயரை நம் போன்றவர் காதாற் கேட்கும்படி வாய்விட்டுக் கூறவில்லை. முல்லைப் பூக்கள் பற்கள் போல் இருப்பினும், வாய்விட்டு ஒன்று வேண்டும் என்று கேட்பது உயிர் போகும் நேரத்திற்கூட இழிந்த செயலாகலின், கேட்க வில்லை போலும்! அது தமிழ்நாட்டு முல்லைக் கொடியன்றோ? ஆனால், எதிரில் நிற்பவனும் ஒரு தமிழ் மகன் அல்லனோ? எனவே, வாய் திறந்து கேட்பதன் முன்னரே தருவதுதான் முறை என்று கருதித் தந்து விட்டான். எதனைத் தந்தான்? தன் பெருமைக்கேற்பத் தன் தேரையே தந்துவிட்டான். வேறு ஆராய நேரம் ஏது? அறிவின் தூணைகொண்டு ஆராய்ந்திருப்பின், பாரியாக முடியாதன்றோ? உணர்ச்சி உலகத்தில் வாழும் அந்தக் கருணை வள்ளலுக்குத் தனக்கும், கொடிக்கும், தேருக்கும் உள்ள வேறுபாடு எங்கே தெரியப் போகிறது! தான் நடந்து செல்ல முடியும். ஆனால், அம் முல்லைக் கொடி பற்றிப்படரக் கொம்பு வேண்டும். கொம்பின் வேலையைத் தேரும் செய்யும், எனவே, தேரை நிறுத்தி விட்டான்.

 

மடவன் பாரி

 

விலையுயர்ந்த அந்தத் தேர் முல்லைக்கொடிக்குத் தேவை இல்லை; ஆனால் அரசனாகிய தனக்கு மிகவும் இன்றியமையாதது என்று கருதினானா? அரசனுக்குப் பயன்படும் தேரைத் தேவையற்ற முல்லைக்கொடிக்குப் பயன் படுத்தியது அறிவுடைய செயலா? அன்று. ஆகலாற்றான் அவனை அறியாமையுடையவன் என்று புலவர்கள் பாடினார்கள், 'மடவன் பாரி' என்று கூறி மகிழ்ந்தார்கள்.

 

இத்தகைய செயலால் பாரி புகழ் பெற்றானா இல்லையா? பெற்றான்; அழியாப் புகழைப் பெற்றான்.

 

பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை

நாத்தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்

கறங்குமணி நெடுந்தேர் கொள்கஎனக் கொடுத்த

பரந்தோங்கு சிறப்பிற் பாரி. (புறம்-200)

 

(நிறைந்த பூக்களையுடைய முல்லைக்கொடி பாரியைப் புகழ்ந்து பாடவில்லை எனினும் ஒலிக்கின்ற மணிகள் கட்டிய தேரைக்கொடுத்த பரந்த புகழையுடைய பாரி)

 

என்று கபிலராலும்,

 

கொடுக்கி லாதானைப் பாரி யேஎன்று கூறி

னும்கொடுப் பார்இலை (தேவாரம்-7,34-2)

 

என்று இறைவனையன்றி மக்களைப் பாடாத சுந்தரமூர்த்தி நாயனாராலும்.

 

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

தொல்லை அளித்தாரைக் கேட்டும் அறிதும். (பழமொழி-36)

 

என்று பழமொழியாசிரியராலும் போற்றப்பட்டான். போர் வெறியர்களின் புகழ் பரந்ததைக்காட்டிலும் இவனுடைய புகழ் ஓங்கி வளர்ந்தது உண்மை. அலெக்ஸாண்டர் செங்கிஸ்கான் என்பவர்களுடன் ஒப்புநோக்கக் கரிகாலன் நெடுஞ்செழியன் முதலானோர் வெற்றிப் புகழ் மங்கி விடுகிறது. ஆனால், யாருடன் ஒப்பு நோக்கினும், பாரியின் புகழ் மங்குமாறு இல்லை. காரணம், அவர்கள் புகழை வேட்டையாடிச் சென்றனர். ஆனால், புகழோ, அவர்களை விட்டுவிட்டுத் தன்னைப்பற்றிக் கவலை கொள்ளாமல் உள்ளத் துறவால் உயிர்கள் அனைத்தும் ஒன்று என்று கருதி வாழ்ந்த பாரியைத்தான் வேட்டையாடிச் சென்றது. புகழை வேட்டையாடிய அவர்களினும், புகழால் வேட்டை ஆடப்பெற்ற பாரி, அறிவைவிட உணர்வு வாழ்வே சிறந்த தென்பதை உலகுக்கு அறிவிக்கும் கலங்கரை விளக்கமாய் நிற்கிறான்!

 

7. தமிழர் கண்ட அமைச்சன்

 

இத்தாலியனுடைய நூல்

இற்றைக்கு ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர் இத்தாலி தேசத்தைச் சேர்ந்த 'மெக்காவிலி' என்ற பெருஞ்செல்வன் 'அரசன்' (The Prince) என்ற பெயரால் ஒரு நூலை எழுதினான். அரசனுக்குரிய இலக்கணம், ஆட்சி முறை என்பன அந்நூலில் ஓரளவு கூறப்பெற்றுள்ளது உண்மையே. ஆனால், அதைவிட மிகுதியாக, எத்தகைய சூழ்ச்சிகளிழைத்தால் ஒருவன் அரசனாக முடியும் என்பதையே அந்நூல் பேசிற்று. மிக சமீப காலம்வரை அந்நூல் ஈடு இணையற்றதாய் ஐரோப்பா தேசம் முழுவதிலும் விளங்கி வந்தது.

 

குறளும் கூறுகிறது.

 

ஆனால், மெக்காவிலி தோன்றுதற்கு ஆயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன்னரே இத்தமிழ்நாட்டில் ஒப்பற்ற அரசியல் நூல்கள் தோன்றின. அத்தகைய நூல்களுள் திருக்குறளும் ஒன்று என்று கூறத் தேவை அன்று. திருக்குறள் அல்லாத ஏனைய தமிழ் நூல்களிலும் அரசியல் பற்றிய பல கருத்துக்கள் மிகுதியாகப் பேசப் பட்டுள்ளன. அரசியல் கருத்துக்களை அறிவிப்பது அவற்றின் தலையாய நோக்கம் அன்றாகலின், இலை மறை காயாய் இவ்வுண்மைகள் அப்பாடல்களில் அமைந் துள்ளன.

 

அரசாட்சியில் அரசனுக்கு அடுத்தபடியில் நிற்பவன் அமைச்சனேயாவன். மிகு பழங்காலத்தில், அரசன் உலகின் உயிர் என்று கருதப்பெற்ற காலத்திற்கூட, அமைச்சனை அரசனுடைய கண்களாகவே கருதினர். உலகப் பொதுமறை தந்த பெரியார்,

 

"சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன்,

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்." (குறள்-445)

 

என்று விதித்துப் போனார்.

 

மெக்காவிலியின் கூற்று

 

மெக்காவிலி தன் நூலின் 22 ஆம் பிரிவில் அரசன் அமைச்சரைத் தேர்ந்தெடுப்பதுப் பற்றிப் பின்வருமாறு குறிக்கிறான். "அமைச்சரைத் தேர்ந்தெடுப்பது எத்துணைப் பெரிய காரியமென்பதைக் கூறத் தேவை இன்று. மன்னன் தன் அறிவு விளக்கத்திற்கேற்பவே அமைச்சரைத் தேர்ந் தெடுப்பான். அறிவுடை அமைச்சரைத் தேர்ந்தெடுப்பவன் அறிவுடை மன்னனாகக் கருதப்படுவான். அமைச்ச னுடைய தகுதியை மன்னன் அறியச் சிறந்த வழி ஒன்று உண்டு. எப்பொழுது ஓர் அமைச்சன் மன்னனைக் காட்டிலும் தன்னைப் பெரியவனாக மதிக்கிறானோ, அப்பொழுதே அவன் அத்தொழிலுக்குத் தகுதியற்றவ னாகிறான். எவன் ஒருவன் அனைத்திலும் தன்னுடைய ஊதியத்தைப் பெரிதென மதிக்கிறானோ, அவனும் அமைச்சனாகத் தகுதியற்றவன். ஒரு முறை அமைச்ச னுடைய தகுதி பற்றி மன்னன் ஆய்ந்து தெளிந்து அவனுடைய உண்மை அன்பை அறிந்துவிட்டால், பிறகு அவன் அன்பை நிலைபெறச் செய்யத்தக்கனவற்றை இயற்ற வேண்டும்; மேலும் பொறுப்புக்களையும் பதவியை யும் பயத்தையும் தருவதால் அமைச்சனுடைய அன்பு மாறாமல் இருக்கச் செய்ய வேண்டும். இத்தகைய முறையில் இருவரும் நடந்துகொண்டால், இருவரும் பெறாத நன்மையும் இல்லை; இம்முறை மாறினால், இருவரும் அடையும் தீமைக்கும் ஓரளவில்லை."

 

அடை மொழிகள்

 

இத்தாலி நாட்டு அரசியல் ஞானி கூறின இவற்றைக் காட்டிலும் சிறந்த பல உண்மைகளைத் தமிழர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கண்டுள்ள முறையைச் சற்று விரிவாகக் காணலாம். அமைச்சரையும் அவரது தொழிலையும் எத்துணைச் சிறப்பாகத் தமிழர் கருதினர் என்பதை இவ்வமைச்சரைக் குறிப்பிடும்பொழுது கொடுத்த அடைமொழிகளாலேயே ஒருவாறு அறியலாம்.

 

'நூல் அறிபுலவர்' (சிலம்பு, 25,116)

'நுணங்கு பொருள் அமைச்சர்' (பெருங்கதை 650)

'நுண்மதி யமைச்சர்' (பெருங்கதை 302)

'நுண்வினை அமைச்சர்' (பெருங்கதை 415)

'தெரிமதி யமைச்சர்' (பெருங்கதை 422)

'நூல் வல்லாளர்' (பெருங்கதை 489)

 

என்ற அமைச்சரைப்பற்றி நூல்கள் நுவல்கின்றன.

 

பண்புகள்

 

இவ்வடைமொழிகளிலிருந்து அறியப்படுவது ஒன்று உண்டு. பல்வகை மக்களொடும் பழகவேண்டிய கட்டுப் பாடுடைய அமைச்சன், கூரிய அறிவுடையவனாய் இருத்தல் வேண்டும். ஒருவர் பேசும் பேச்சுக்களிலிருந்து மட்டும் அவருடைய மனநிலையை அறிதலென்பது இயலாத காரியம். 'மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால் பொய் போலும்மே' என்ற முதுமொழியையும் அதன் எதிர் மொழியையும் அமைச்சன் கவனத்திற் கொள்ள வேண்டும். பேசுவோர் சொற்களை மட்டும் கொண்டு முடிவு செய்யாமல், அவர் முகக் குறிப்பு முதலியவற்றைக் கொண்டும் உண்மை காண முயல வேண்டும். இவற்றை எல்லாம் மனத்துட்கொண்ட ஆசிரியர்,

 

'தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும்; ஒன்னார்,

அழுத கண்ணீரும் அமைத்து.' (குறள்-828)

 

என்று கூறினார். எனவே, பிறருடைய அழுகையைக் கண்டு மயங்கிவிடக்கூடாது என்பதையும் அறிவித்தார் ஆசிரியர். இதன் மறுதலையாகக் கல் நெஞ்சுடையவனாய் அமைச்சன் இருப்பினும் பெருந்தீமையாகும். 'நடுவு நிலையினின்றும் நீங்கிய அமைச்சன் மனத்திற் கிடந்ததை வெளிப்படுத்த அதனைக் கேட்ட மன்னவன் கொடுந் தொழிலைச் செய்தது போலக் கதிரவன் கொதிக்கிறான்" என்ற கருத்தில்,

 

நடுவுஇகந்து ஒரீஇ நயன்இல்லான் வினைவாங்கக்

கொடிது ஒர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு

கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினம் தெறுதலின் (பாலைக்கலி 8)

 

என்ற பாலைக்கலிப் பாடல் ஒன்று கூறிச் செல்கிறது.

 

நூலறிவும் நுண்ணறிவும்

 

இப்பழம் பாடல்கள் அமைச்சனுடைய நுண்ணறிவுத் தேவையை இத்துணைப் பெரிதுப் படுத்திப் பேசுவதன் நோக்கம் ஒருவாறு விளங்கும். கடுகைத் துளைத்து எழு கடலைப் புகட்டவந்த பெருமகனாருங்கூட, 'அமைச்சு' என்றதோர் அதிகாரம் வகுத்து, அதனுள் இருக்கும் பத்துக் குறளிலும் அமைச்சனுக்கு நுட்பமான அறிவு வேண்டும் என்பதைக் குறிப்பாலுணர்த்திப் பின்னர்த் தனியே அதற்கென்றே ஒரு குறளூம் அமைக்கின்றார்.

 

மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்

யாவுள முன் நிற்பவை? (குறள்-636)

 

என்ற குறள் ஆய்தற்குரியது. நுண்மதி என்றும், நூலறிவு என்றும், இரண்டாகப் பகுத்து இயங்கு பேசப்படுவதைக் காணலாம். நூலறிவில்லாவிடத்தும் நுண்ணறிவு இருத்த லையும், பலரிடம் நுண்ணறிவில்லாவிடத்தும் நூலறிவு இருத்தலையும் காணலாம். எனினும், இவை இரண்டும் சேர்ந்தமைந்தாலொழிய, முழுப்பயனை விளைப்பதில்லை. எத்துணைச் சிறந்த நுண்ணறிவாயினும், நூலறிவு இல்வழி வகைதொகையற்றுச் சென்றுவிடும். நுண்ணறிவில் வழி, நூலறிவு செக்கிழுக்கும் மாடு போலச் சென்ற வழியே செல்லுமே தவிர புதியன காண முற்படாது.

 

புதுமையும் பழமையும்

 

ஒரு காலத்து ஓரிடத்து அனைவரும் நம்பின ஒன்றை நூல் வழக்குச் சிறந்ததெனப் பேசும். ஆனால் காலமும் இடனும் மாறியவிடத்து இந்நிலை முறை மாறிவிடும். அதனால், முன்னர் எழுதப்பெற்ற நூலில் இப்புதுவழக்கு இடம் பெற வாய்ப்பில்லை. எனவே, நுண்ணறிவுடன் உலகியலறிவும் இல்லாதான் இம்மாற்றங்கொண்டு மருட்சி அடைய நேரிடும். கால மாறுபட்டான் ஏற்படும் வழக்கு மாறுபாட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நூலறிவு, வளர்ச்சியை மறுக்கும் அறிவாகும். ஆதலால், வள்ளுவர் இவ்வளர்ச்சியைக் காணுமிடத்து உடன் அறிந்துகொள்ளும் நுண்ணுணர்வை முதலிற் கூறினார். 'அவ்வாறாயின், மதி நுட்பம் மட்டும் போதாதா? நூலறிவு எற்றுக்கு? என்ற வினாத் தோன்றுமன்றோ? வளர்ச்சி என்பது தனித்துத் தோன்றுவதொன்றன்று. பழமையிலிருந்துதானே புதுமை தோன்றுதல் கூடும்? விதையிலிருந்துதானே மரம் தோன்றல் கூடும்? மரத்தில் விதையின் தன்மை காணப்படுமாறு போலப் புதுமையிலும் பழமையின் இயல்பு காணப்படும். பழமையை அறவே ஒழித்த புதுமை வேண்டுவது, விதை இல்லாத மரம் வேண்டுவது போலாகும். எனவே, பழமையை நன்கு ஓதும் நூலறிவை அடுத்துக் கூறினார் ஆசிரியர்.

 

ஆழங்காணமுடியாத மனித மனத்தை ஆட்சி செய்யும் அமைச்சருக்கு நுண்ணறிவும் உலகியலறிவும் நூலறிவும் தேவை என்பது கூறவும் வேண்டுமோ?

 

நல்லமைச்சர்

 

நுண்ணறிவோடு நூலறிவும் உடையாரே அமைச்சரா யிருக்கத் தகுதியுடையார் என்பது கண்டோம். இதில் ஒரு சிறப்பென்னையெனில், நுண்ணறிவு பிறப்பிலேயே கிடைப்பது; நூலறிவு முயற்சியால் பெறுவது. முயற்சியால் ஒருவன் நுண்ணறிவைப்பெற முடியாது. இவை இரண்டையும் நன்கு பெற்றபொழுதும், மனிதப் பண்பாடு நிறைந்தவ னாய் இருத்தல் வேண்டும் அமைச்சுத் தொழிலுக்கு வருபவன் என்பதை நம் முன்னோர் நன்கு கண்டனர்.

 

'வடு நீங்கு அமைச்சர்' (பெருங்கதை 484)

'நற்புடை அமைச்சர்' (பெருங்கதை 487)

'நெஞ்சு புரை அமைச்சர்' (பெருங்கதை 487)

'அருமை அமைச்சர்' (பெருங்கதை 529)

 

என்று பெருங்கதை கூறிச் செல்கிறது. சிலப்பதிகாரமோ, இவ்வாறு இல்லாதவரை

 

அறைபோகு அமைச்சர் (சிலம்பு 5: 130)

 

என்று கூறுகிறது.

 

இவ்வடைமொழிகளனைத்தும் ஒரே கருத்தை உட் கொண்டுள்ளன. அரசனுக்கு அடுத்தபடியாக உள்ள அமைச்சன், அரசனிடத்தும் நாடடினிடத்தும் உண்மையான அன்பு பாராட்டாமல், தன்னுடைய நலத்தையே பெரிதென மதிப்பானாகில், அதனால் நாட்டிற்கு எத்துணைப் பெரிய தீமை ஏற்படும் என்பது கூறவும் வேண்டுமோ? அமைச்சன் இரண்டு பெருங்காரணங்கள் பற்றியும் தூய்மையும் அன்பும் உடையவனாய் திகழலாம். இயற்கையிலேயே அரசன்மாட்டுப் பற்றும் அன்பும் உடையவனாய் இருத்தல் ஒன்று; பழி நாணும் பண்பாட் டால் நல்லவனாய் இருத்தல் இரண்டாவது. தன் கடமையை உணர்ந்து நன்மையை நன்மைக்காகவே கடைப்பிடித்தல் முதல் முறையாகும். 'நற்புடை அமைச்சர்' என்று பெருங்கதை கூறும் பொழுது நன்மையை உடைய அமைச்சர் என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளது. இதனையடுத்து, 'நெஞ்சுபுரை அமைச்சர்' என்று கூறுவதும் இத்தகைய மன நிலையைக் கருதியேயாம்.

 

குடிப் பிறப்பு

 

இயற்கையாகவே தீமையிலிருந்து நீங்கின மனப் பான்மையுடன், தீமை புரிய அஞ்சுகிற மனப்பான்மைகள் சில உண்டு. நன்மை புரிவதால் ஏற்படும் நற்பயன்களைக் கருதி விரும்பியோ, தீமை புரிவதால் ஏற்படும் தீப்பயன் களைக் கண்டு அஞ்சியோ, இத்தகையோர் ஒன்றைச் செய்வதில்லை. நன்மை புரிதலும், நம்பிக்கையுடன் நடத்தலும், சொன்ன சொற்களைக் காத்தலும், பிறர்மாட்டு அன்பு கொள்ளுதலும் இவர்கள் உடன்பிறந்த பண்பாடு கள். நன்மையை நன்மைக்காகக் கடைப்பிடிக்கும் தலையாய பண்புடையார் இவர். இப்பண்பாடுகள் பெரும்பான்மை நற்குடிப் பிறப்பினால் உண்டாவன. மனிதனுடைய பண்பாடுகளுள் சில இயற்கையாய்ப் பிறப்பிலேயே உறுவன; ஏனைய சில, வாழும் பொழுது பெறுவன. இங்குக் கூறிய அனைத்தும் பிறப்பில் தோன்றுவனவாகலின், நற்குடிப்பிறப்பு என்று ஒரு சொல்லால் இவற்றைக் குறித்துவிடலாம். இக்கருத்தை மனத்துட்கொண்டே பொதுமறையாசிரியர்,

 

அன்புடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், வேந்து அவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. (குறள்-68)

 

என்று கூறுகிறார். இக்குறளில் தூது என்ற பெயர் தரப்படினும், அது அமைச்சரையே குறிக்கும் என்பதைச் சந்தருப்பத்தாலும் பரிமேலழகர் உரையாலுங் காணலாம்.

 

பழிக்கு நாணல்

 

இரண்டாம் முறையில் நல்லவனாய் இருத்தல் பழி நாணும் பண்புடைமையால் ஏற்படுதாகும். தாம் செய்யும் தவறு பற்றி வரும் பழிக்கு அஞ்சி நடத்தல் என்பது அனைவருக்கும் இயலுவதொன்றன்று. இயல்பாகவே சில மனங்கள் பழியைக் கண்டு நடுங்கும். இத்தகையவர்களைப் பற்றிக் கூற வந்த புறநானூற்றுப் பாடல் ஒன்று,

 

பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் (புறம்-182)

 

என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்றுவிடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த வழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது.

 

பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு

உறைபதி என்னும் உலகு. (குறள்-1015)

 

எனவே, அரசனே பழிக்குரியவற்றைச் செய்யினும் அரசன் செயலாதலின் தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்ததுபோலக் கருதி நாண மடையும் பண்பாடே பழியஞ்சி நடத்தலில் தலையாயவன் செய்வது. இதை மனத்துட்கொண்டே பெருங்கதை,

 

"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484)

 

என்ற அடைமொழியைத் தருகிறது. மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமை யாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது.

 

காவிதி மாக்கள்

 

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த மாங்குடிமருதனார் என்ற புலவர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் என்னும் பாண்டியனின் உற்ற துணைவராய் இருந்து கழித்தார். பாண்டியனோ, தமிழ்நாடு முழுவதை யும் ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்தவன். அத்தகைய மன்ன னுடனும் அவனுடைய அமைச்சர்களுடனும் நன்கு பழகிய காரணத்தாலும், தம் கூர்ந்த அறிவால் பலவற்றைக் கண்ட காரணத்தாலும் மாங்குடிமருதனார் அமைச்சருக்கு வேண்டிய பண்பாட்டைக் குறித்துப் பாடினார். 'அரச னிடம் காணப்படும் நலம் தீங்கு என்ற இரண்டையும் கண்டு, அவற்றுள் படாமல் அவனை அடக்கி, அன்பை யும் அறத்தையும் தவறாமல் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து, பரந்த புகழ் நிறைந்த காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்' என்ற கருத்தில்,

 

மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல

நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி

அன்பும் அறனும் ஒழியாது காத்துப்

பழி ஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த

செம்மை சான்ற காவிதி மாக்களும். (மதுரைக்காஞ்சி 495 :499)

 

என்று அவர் பாடியுள்ளார்.

 

ஆயும் அமைச்சர்

 

இவ்வைந்து அடிகளில் அமைச்சருக்குக் கூறிய இலக்கணமும் பண்பாடும் மெக்காவிலி போன்றவர்களால் இரண்டு அச்சுப் பக்கங்களிற்கூடக் கூறப்படவில்லை. 'நன்றும் தீதும் கண்டு' என்ற சொற்களால் அமைச்சரின் அறிவுத்திறம் பேசப்படுகிறது. மேலும் 'கண்டு' என்று மட்டும் கூறி நிறுத்திவிடாமல்,'ஆய்ந்து' என்றுங் கூறப் பெற்றதால், நுண்மாண் நுழைபுலமும் பேசப்படுகிறது. நடைபெறுகின்ற நிகழ்ச்சியை அப்படியே பொருள் செய்வ தானதால், உண்மை காண்டல் இயலாது. தீயது போன்று காணப்படும் நிகழ்ச்சியின் உட்கோள் நலமாகவும், நலம் போன்று காணப்படும் நிகழ்ச்சியின் உட்கோள் தீமையாக வும் இருக்கலாமன்றோ? எனவே புறத் தோற்றத்தையும் நிகழ்ச்சியையும் கண்டு அவற்றின் பயனைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், தன் நுண்ணிய அறிவால் நிகழ்ச்சியின் அப்பாலுள்ள பொருளை அறிதல் வேண்டும். இதனை ஆசிரியர், 'ஆய்ந்து' என்ற சொல்லால் கூறிவிட்டார்.

 

இருவகைத் தீமை

 

நலம் கண்டவிடத்து அதனிடத்து அன்பும், தீமை கண்டவிடத்து வெறுப்பும் கொள்வானேயாகில் அது அமைச்சனுக்கு ஏலாது. எனவே, அன்பையும் அறத்தையும் ஒருசேரக் கூறினார் ஆசிரியர். 'இக்காலத் தீமை, நிலை பெற்ற தீமை' எனத் தீமை இருவகைப்படும். நிலைபெற்ற தீமையைத் தடுக்க இக்காலத் தீமை பயன்படும். உயிரை மாய்க்கும் கழலையை அறுத்துவிடுதல்போல, அமைச்சனா வான் இவை இரண்டின் தராதரத்தையும் ஆய்ந்து தீமை யைத் தடுக்கும் இடத்திலும் அன்பிலிருந்தும் அறத்திலிருந் தும் வழுவாமல் காத்தல் வேண்டும். மேலும் அன்புள்ள விடத்து அறம் மாறிவிடுமாகலானும் இவை இரண்டையும் உடன்சேர்த்துக் கூறுகிறார். அரசியல் நுணுக்கத்தையும் மனத்தத்துவத்தையும் நன்குணர்ந்த கவிஞர்.

 

பழந்தமிழ் அமைச்சர்

 

மூன்றாவது அடி நன்கு ஆய்தற்குரியது. 'பழி ஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த' என்ற அடியில் கவிஞர் தம் வன்மை முழுவதையும் கொட்டித் தீர்த்துவிடுகிறார். மனிதன் பல்வேறு வகையில் உயரக்கூடும். உயரவேண்டும் என்ற எண்ணத்தால் தூண்டப்பெற்றும் பலவகை செயல் களைச் செய்பவர் உண்டு. இவர்கள் செயல் செய்வதன் நோக்கம் உயர வேண்டுமென்பதே. அச்செயல்களின் பயனாகத் தாம் உயர்வதை மட்டும் கவனிப்பாரே தவிர, அச்செயலால் பிறருக்கு நன்மையா தீமையா என்பது பற்றி இவர்கள் கவல்வதில்லை. பழியுடைய செயலைச் செய்தால்தான் உயரமுடியுமென்றும் அஞ்சாமற் செய்வர். அரசனுக்கு விருப்பம் என்பதற்காகத் தீயனவற்றைப் புரிந்து அவனுடைய மதிப்பில் உயர்ந்துவிட வேண்டும் என்று நினைக்கும் அமைச்சர் எத்துணைப் பேர்! மதுரைக் காஞ்சி கண்ட மாண்புடை அமைச்சர் இவ்வினத்தைச் சேர்ந்தவரல்லர். உயரவேண்டும் என்ற குறிக்கோளுடைய வரேயாவர். ஆனால் பழியிலிருந்து நீங்கின உயர்ச்சியையே விரும்புகிறார்களாம் இவர்கள். 'ஒரீஇ' என்று அளபெடுத்த மையின் 'நீக்கி' என்ற பொருளைப் பெறவைக்கிறார் ஆசிரியர். 'நான் என் போக்கில் செயல் செய்தேன். பழி வந்தால் யான் என்ன செய்ய முடியும்?' எனப் பேசுபவர் உண்டு. அவ்வினத்திலுஞ் சேராமல் இவர்கள் கவனத் துடன் பழியை விலக்குகிறார்களாம். எளிதாக உயர்ந்துவிட வேண்டும் என்று கருதாமல் பழியை நீக்கின செயல்கள் புரிந்தே உயரவேண்டும் என்றமையின், உயருவதைவிடப் பழி நீங்கின செயல் புரிவதே தலைமையுடையதாயிற்று. அடையும் பயனையே பெரிதாகக் கொண்டு, அதனை அடைய மேற்கொள்ளும்வழி பற்றிக் கவலை கொள்ளாமல் தொழிலாற்றுபவர் பலர் உண்டு. கருதிய பயனை அடைய எவ்வழியாயினும் சரியே என்று கருதும் கயவர்கள் அல்லர் இப்பழந்தமிழ் மக்கள். பயன் எத்துணைச் சிறப்புடையதோ, அத்துணைச் சிறப்பு வழியிலும் அமையவேண்டும் என்றே கருதினர். புகழ் என்பது இறுதியில் பெறும் பயனாகும். அதற்கு அடைமொழி கூறவந்த ஆசிரியர் 'பழி ஒரீஇ' என்று கூறுவாரேயாயின், அதனுடைய கருத்து யாது? புகழாகிய பயனை அடைய மேற்கொண்ட வழியும் பழி யற்றது என்பதேயன்றோ?

 

பாய் புகழ்

 

இதனையடுத்துப் 'பாய்புகழ் நிறைய' வேண்டுமாம். புகழிற் சிறந்தது பாய்புகழ். பாய்புகழ் என்பதற்குப் பரந்த புகழ், விரிந்த புகழ் என்பதே பொருளாம். என்றோ ஒரு காலத்தில் புகழுடன் இருப்பவர் உண்டு. மேலும் சிறந்த செயல்கள் ஆற்றாமையின், அப்புகழும் அத்துடன் நின்று விடும். ஆனால், பரந்த புகழ் என்றமையின், மேலும் மேலும் நற்செயல்கள் புரிவதால் மேலும் விரிந்துகொண்டு செல்கிறதென்பதையும் புலவர் குறித்தாராயிற்று. பாய்புகழ் விரியுந் தன்மையுடையதாகலின் ஆழமின்றி அகலத்தில் மட்டும் பரந்துவிட்டதோ என்று எண்ணிவிட வேண்டா! பலராலும் அறிந்திருக்கப்படும் நிலை பாய்புகழ் எனப் பட்டால், மறவாமல் பல காலம் நினைக்கப்படுவதை நிறைதல் என்று கூறலாம். 'பாய் புகழ் நிறைய' என்று கவிஞர் கூறும்பொழுது பரந்தும் ஆழ்ந்தும் உள்ள புகழையே குறிக்கிறார்.

 

கடமை புரிபவன்

 

இவ்வாறு புகழ்பெற வேண்டுமாயின், எத்தகைய செயல்கள் நிகழ்த்தவேண்டும் என்று கூறத்தேவை அன்று. நல்லன தீயனவற்றைக் கண்டு, ஆய்ந்து, இவை மன்ன னிடத்துக் காணப்பெறினும் மாவிசும்பு வழங்கும் பெரியோர்போல அடக்க வேண்டுமாம் அவனை. பாம்புப் புற்றுள் கை விடுவதும் தவறு செய்கின்ற மன்னனைத் திருத்தப் புகுவதும் ஒன்றுதான். எனினும் அதனால் வரும் ஏதம் பற்றிக் கவலைகொள்ளாமல் தன் கடமையைச் செய்பவனே அமைச்சன் என்று கூறப்படத் தகுதி உடையான். மன்னனை முழு வல்லமை படைத்த இறைவன் என்று கருதிய அந்நாளிற்கூட அமைச்சனுக்கு இத்துணைப் பெருமை தந்தனர் தமிழர். இப்பெருமை காரணமாகவே அவனுடைய கடமைகளும் மிகுந்து விடுகின்றன. ஏனைய நாட்டில் அமைச்சனைப்பற்றி எழுதியவர்கள் அவன் தனித் தூய்மைபற்றிக் கூறினார்கள். ஆனால், அவனுடைய தலையாய கடமைகளுள் ஒன்றாக மன்னனைத் திருத்துவதையும், அத்திருத்தம் செய்யும் முயற்சியில் தனக்கு ஊறு நேர்வதாயினும் அதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இத்தமிழர் கருதினர்.

 

அறிகொன்ரு அறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன் (குறள்-538)

 

என்று குறளாசிரியர் குறிப்பிடுவது இதே கருத்தைத்தான்.

 

'அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.' (குறள்-691)

 

என்று மற்றவர்களை நோக்கிக் கட்டளையிட்ட வள்ளுவர் 'உழையிருந்தான்' என்ற அடைமொழியால் அமைச்சர்கள் அரசனுடன் சேர்ந்தும் சேராமலும் இருத்தல்கூடாது என்பதையும் குறிப்பிடுகிறார். தனக்கு ஏற்படப்போகும் சில தீங்கினைப் பற்றிக் கவலையுறாத அமைச்சனைப் பற்றியே பழந்தமிழர் பெருமைப்பட்டனர். இத்துணைச் சிறப்புடையவனை வறிதே அமைச்சன் என்று மட்டும் வழங்காமல், காவிதி என்ற பட்டம் தந்து, தலைமை அமைச்சன் ஆக்கினர். அத்தகைய காவிதியமைச்சனைப் பற்றியே மதுரைக்காஞ்சி பேசுகிறது.

 

பழந்தமிழன் கண்ட இவ்வமைச்சன் எங்கே, 'மெக்காவிலி' கண்ட அமைச்சன் எங்கே! தமிழன் பண்பாடு எத்துணை உயர்ந்ததென்பதற்கு இதனினும் சான்று வேறு வேண்டுமா?

 

8. தமிழர் கண்ட உண்மைகள்

 

விடை காணா வினா

நம்முள் எத்தனை பேர் 'வாழ்க்கை' என்றால் என்ன? என்னும் வினாவிற்குச் சரியான விடைகூற முடியும்? நாம் நமது விருப்பம் இருந்தோ இல்லாமலோ பிறந்துவிட்டோம்; விருப்பம் இல்லாமலிருந்தும் இறக்கத்தான் போகிறோம். இடை நடுவே இவ்வுலகில் தங்கி இருப்பதே வாழ்க்கை என்ற கருத்துடன் பலரும் அமைந்துவிடுகிறோம். இதற்கு முன்னர் வாழ்க்கை இருந்ததுண்டா? இனி வாழ்க்கை இருக்கப்போகிறதா? இவ்வினாக்களைக் கேட்டும் பயன் இல்லை. காரணம் இவற்றிற்கு விடையை நாம் அறிதல் இயலாது. என்றாலும், 'இடையில் உள்ள இல்வாழ்க்கை யின் உட்கருத்தென்ன?' என்று ஆய்வது நமது கடமை யாகும்.

 

மாந்தர் பல வகையினர்

 

மிகப் பெரியவரான தாயுமான அடிகள், நம் போன்ற வர்கள் வாழ்க்கையை அலசிப் பார்த்து ஒரு முடிவு கூறுகிறார். 'யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்கு வதுமாக முடியும்' என்ற அவருடைய சொற்கள் நம்முள் பெரும்பாலோர் வாழ்க்கையில் நடைபெறுவ தொன்றாகும். ஆனாலும், இதிலும் ஒரு சிறப்புளது. நம்முள் எத்தனை பேர் பசிதீர உண்பவர்கள்? பசிக்காக உண்பவர் கள் மிகப் பெரியவர்களும், யோகிகளும், மிக வறியவர் களுமேயாவார்கள். ஏனையோர் உண்பது பசிக்காக அன்று. உருசிக்காகவே. உண்பதற்காகவே உயிர்வாழ வேண்டும் என்று நினைப்போர் எத்தனை பேர்? சோம்பித் திரிவதற்காகவே வாணாளை வீணாக்குபவர் எத்தனை பேர்? கண்டதே காட்சி. கொண்டதே கோலம் என வாழ்பவர் எத்தனை பேர்? இவர்கட்கெல்லாம் வாழ்க்கை நடைபெறாமலா இருக்கிறது? நடைபெறத்தான் செய்கிறது. ஆனால் இவர்கள் வாழ்கிறார்கள் என்று கூறுவதைக் காட்டிலும், வாழ்க்கை இவர்களை ஆட்கொண்டுளது என்று கூறுவதே பொருத்தமுடையது. இன்றைய நாளில் இத்தொகுப்பைச் சேர்ந்தோர் பலராவர்.

 

நிலைபெற வழி

 

ஆனால் பழந்தமிழன் இவ்வாறு நினைக்கவுமில்லை; வாழவுமில்லை. அவன் கண்ட பேருண்மை, 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்றதாம். அஃதென்ன என்பதைக் காண்போம். வாழ்க்கை நடைபெறுவது இவ்வுலகிலாகும். எனவே இவ்வுலகைப் பற்றிப் பழந்தமிழன் என்ன நினைத் தான்? வாழத் தகுந்த இடமாக இதனை நினைத்தானா, அன்றி இதனை பயனற்ற ஓர் இடமாகக் கருதினானா? இடைக்காலத்தில் உலகைப்பற்றிப் பல கருத்து வேறுபாடு கள் தோன்றின. ஒருவாறு மனிதன் வாழ்வைக் கெடுக்கும் சூழல் நிறைந்த ஓர் இடமாகவும் இது கருதப்பெற்றது. ஆனால் பழந்தமிழன் உலகின் இயல்பை நன்கு அறிந்திருந் தான். 'உலகம் நிலையில்லாதது' என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். ஆனால், இது நிலையில்லாதது என்பத னால், தானும் இதனோடு சேர்ந்து நிலையில்லாமல் அழிவதை அவன் விரும்பவில்லை. நிலையில்லாததாகக் கருதப்பெறும் இவ்வுலகிடை வாழ்து தான் மட்டும் நிலை பெறும் வழியை அவன் தேடினான்; தேடிக் கண்டறியவும் அறிந்தான். அவன் கண்ட முடிவு,

 

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே. (புறம்-165)

 

என்பதாகும். எனவே, நிலையற்ற உலகிடை நாம் நிலை பெற வேண்டுமாயின், செய்யத் தகுவது நம் புகழை நிலை நிறுத்துவதேயாகும். நிலையாமையின் நடுவே நிலைபேற்றுக் குரிய வழிகண்ட தமிழன் வாழ்க! உலகம் நிலையற்றது என்பது உலகிடை வாழ்ந்த அனைவருங் கண்ட உண்மை யாகும். உலகம் போற்றும் ஷேக்ஸ்பியர்,

 

"The Cloud-capp'd towers the gorgeous palaces,

The solemn temples, the great globe itself,

Yea, all which it inherit, shall dissolve,

And, like this insubstantial pageant faded,

Leave not a rack behind."

-THE TEMPEST: Act IV, SCENE 1.

 

என்று தாம் எழுதிய 'புயல்' என்னும் நாடகத்தில் குறிப்பிடுதல் அறிதற்குரியது.

 

இத்தகைய நிலையாமை பொருந்திய உலகத்தில் வாழ்ந்த மனிதன் தான்மட்டும் நிலைபெற வேண்டிச் செய்த செயல் புகழைத் தேடுதலேயாம் என்பதைக் கண்டோம். 'அப்புகழை எவ்வாறு தேடவேண்டும்?' என்பதே அறியவேண்டுவதொன்றாகும். இதற்குரிய விடை தெளியப்படுமானால், அதுவே, வாழ்க்கை வாழ்வதற்கு, என்னும் உண்மையை நன்கு புலப்படுத்தும். புகழ் என்பது எல்லாரும் விரும்பப்படும் ஒன்றாகும். புகழ் விரும்பாத மனிதனே உலகிடை இல்லை எனலாம். ஆனால், எல்லா ராலும் போற்றி விரும்பப்படும் இதனையடைய இவ்வனை வரும் முயற்சி எடுத்துக்கொள்கின்றனரா என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றே கூறிவிடலாம். இதுவே உலகியற்கை. புகழை அனைவரும் விரும்புகின்றனர்;

 

ஆனால், அதற்குரிய வழியை மட்டும் மேற்கொள்வதில்லை பெரியோர்.

 

'புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்.' (புறம்-182)

 

என்று புறநானூறு பறை சாற்றுகிறது.

 

ஆனாலும், ஏன் அனைவரும் அதற்குரிய வழியை மேற்கொள்வதில்லை என்பதை அறிய வேண்டுமன்றோ? காரணம் இருவகைப்படும். ஒன்று, வழி இன்னது என்றே அறியாமல் இருப்பது; இன்னொன்று வழி இது என்று அறிந்திருந்தும், வேறு காரணங்களால் முயற்சியை மேற் கொள்ளாமல் இருப்பது. இவ்வினத்தைச் சேர்ந்திருப்போர் மிகச் சிலரே. பெரும்பாலோரைப் பொறுத்தமட்டில் வழி இன்னதென்று அறியாமல் இருப்பதே உண்மை. அதிலும், ஒரு விந்தை என்ன என்றால், தவறான வழிகளை உண்மை வழி என்று நினைத்திருக்கும் திரிபுணர்ச்சியே யாம். ஏதோ ஒரு செயலைச் செய்துவிட்டு அதனால் புகழ் தம்மிடம் வந்து சேர வேண்டும் என்று நினைப்பவர் பெரும்பாலும் ஏமாற்றமே அடைவர். ஒருவேளை புகழ் வருவது போலத் தோன்றினும், அது நிலைத்து இருப்ப தில்லை. காரணம், வருவது புகழன்று. அது 'இசை' என்று கூறப்படும். அவன் உயிருடன் இருக்கும்வரை அதுவும் இருந்து, அவனுடன் கூடவே அதுவும் அழிந்துவிடும். போர்களால் தம்புகழ் பரப்ப நினைத்த பழந்தமிழ் மன்னர் இவ்வினத்தைச் சேர்ந்தவரேயாவர். புகழ் பின்னரும் நிலைத்திருப்பதாகலின் அதனை அடையும் வழியும் வேறாய் உளது. அதனை விரும்பி வேட்டையாடுபவர் களை அது விட்டு ஓடும் இயல்புடையது. தன்னைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாதவர்களிடம், தானே வலியச் சென்று அடையும் இயல்புடையது.

 

வாழ்வில் பல வகை அனுபவம்

 

இனி, இப்புகழ் யாரைத்தேடிச் சென்று அடைகிறது என்பதை அறிய வேண்டும். 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற உண்மையை அறிந்து தங்கள் கடமையைச் சரிவரச் செய்துகொண்டு வாழ்க்கையையும் நன்கு அனுபவித்துக் கொண்டு இருக்கும் பெரியோர்களையே புகழ் தேடிச் சென்று அடைகிறது. வாழ்க்கை வேண்டும்பொழுது நமது விருப்பம் போலக் கிடைக்கும் ஒரு கருவியன்று. அது உள்ளபொழுதே அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதோ ஒன்றின் மேற்கொண்ட பற்றுக் காரண மாக அதனையே செய்துகொண்டு வாணாளைக் கழித்து விடின், அதுவும் பயனற்ற வாழ்க்கையேயாம். எல்லா வகை அனுபவங்களும் வாழ்க்கையில் வேண்டுவனவே. எனவே, போரே பெரிது எனக்கருதி வாழும் மன்னன் ஒருவனை விளித்துப் பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் அறவுரை பகர்கின்றார். போர் செய்வது அரசனுக்குரிய கடமையா யினும், அதையே வாழ்க்கையின் பயன் என்று மன்னன் கருதி வாழ்வானாயின், அது மடமையன்றோ? எனவே, புலவர், 'வாழ்க்கை வாழ்வதற்கே,' என்று மன்னனுக்கு நினைவூட்டுகிறார்.

 

ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய

தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து

ஆங்கினிது ஒழுகுமதி பெரும! ஆங்கது

வல்லுநர் வாழ்ந்தோர் என்ப. (புறம்-24)

 

என்று மாங்குடி கிழார் என்ற புலவர் கூறுகிறார்; போரே செய்யும் ஒருவனை நோக்கி, "தேறல் மடுத்து மகிழ் சிறந்து வாழ்வாயாக! அதுவே வாழ்க்கை வாழ்வதாகும்; அதுவே புகழுடன் வாழ்வதற்கு வழியாகும்" என்று கூறுகிறார். இவ்வொரு கவிதை நமக்கு ஒரு பேருண்மையை அறிவுறுத்துகிறது. வாழ்க்கை, கேவலம் ஒரே வகையில் மூடியணியப் பெற்ற குதிரை போலச் செலுத்தப் பெறுதல் தவறு. அவ்வொரு வகை, எத்துணை சிறந்த தாயினும், அதற்கே வாழ்க்கையைச் செலவழித்தல் போற்றற்குரிய தன்று. அங்ஙனம் வாழ்வோர், 'வாழ்க்கை வாழ்வதற்கே,' என்ற பேருண்மையை மறந்தவரேயாவர். அவ்வாறல்லாமல், வாழ்க்கையில் பலதிறப்பட்ட சுவைகளையும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற உண்மையைத் தமிழர் அனுபவத்தில் கண்டு கூறினர்.

 

மனிதன் யார்?

 

மனித வாழ்க்கையை ஏனைய விலங்குகளின் வாழ்க்கையிலிருந்து பிரித்துக்காட்டப் பல சிறப்பியல்புகள் உள்ளன. பகுத்தறிவு வாழ்க்கைச் சீர்திருத்தம் முதலியன அவற்றுட் சில. எனினும், இவை எல்லாவற்றினும் மேம் பட்ட ஒன்றும் உண்டு. அதுவே குறிக்கோள் அல்லது இலட்சியம் எனப்படும். குறிக்கோள் என்பது என்ன? தனது வாழ்வு இன்னவாறு இருத்தல் வேண்டும் என்று மனிதன் செய்து கொண்டுள்ள கற்பனையே குறிக்கோள் எனப் படும். கண்டதை உண்டு, வாழ்வில் வேறுவித அலுவல் ஏதும் இன்றித் திரியும் விலங்கினங்களிலிருந்து தோன்றிய மனிதனுக்கு, விலங்கினங்களிற் காணப்படும் சில பண்புகள் மறைந்தும், பல புதிய பண்புகள் தோன்றி வளர்ந்தும் வரலாயின. அங்ஙனம் வளர்ந்தவற்றுள் ஒன்றே குறிக்கோள் என்பதாம்.

 

வாழ்வோருக்கு வினா

 

உலகிடைப் பிறந்த எல்லா மனிதரும் வாழ்ந்து, காலம் வந்தவுடன் மாய்ந்து போகின்றனர். பெரும்பாலார்க்கு, 'ஏன் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்? இவ்வாழ்க்கையின் தத்துவமும் காரணமும் என்ன? வாழ்வின் முடிவு எதுவாய் இருக்கும்?' என்பன போன்ற வினாக்கள் தோன்றுவதே இல்லை. இங்ஙனம் கூறினவுடன் எல்லோ ரும் வேதாந்த விசாரணையில் இறங்கவேண்டும் என்று கூறுவதாக நினைத்துவிட வேண்டா. இத்தகைய கேள்வி களைக் கேட்டுக்கொண்டு, ஒருவாறு இவற்றிற்கு விடையுங் கண்டவர்களே பெரியோர்களாய்த் திகழ்ந்தமையை அறிகிறோம். எனவே, இவ்வினாக்கள் வாழும் ஒவ்வொரு வருக்கும் இன்றியமையாதவை என்பது பெறப்படும்.

 

மேலே கூறிய வினாக்களின் விடைகள் அனைத்தை யும் சேர்த்துப் பார்த்தால், வாழ்வில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும் என்பது தெற்றென விளங்கும். ஒருவன் மனித உடலோடு பிறந்துவிட்டால் மட்டும், மனிதன் என்ற பெயருக்குத் தகுதியுடையவன் ஆகிவிட முடியாது. தனித் தனி மக்கள் தனித்தனியான குறிக்கோள்களைக் கொண்டு இலங்குவதைக் காண்கிறோம். இனி இக்குறிக்கோள்கள் எல்லோருக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமா என்றால், வேண்டா என்று கூறிவிடலாம். தனித்தனி மனிதர் தத்தம் வாழ்க்கையின் நிலைமைக்கு ஏற்பக் குறிக்கோளைப் பெற்றிருக்கலாம். குறிக்கோள் இல்லையாயின், வாழ்க்கை சுவையற்றதாகிவிடும்.

 

கண்டதே கண்டும், உண்டதே உண்டும், உடுத்ததே உடுத்தும் வாழும் இவ்வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படுதல் இயல்பு. ஒரு சிலர் 'பொழுதே போவதில்லை!' என்று குறை கூறுவதையும் கேட்கிறோம்.

 

நாள் என ஒன்றுபோற்காட்டி, உயிர் ஈரும்

வாள் அஃது உணர்வார்ப் பெறின் (குறள்-334)

 

என்று வள்ளுவப் பெருந்தகையார் கூறி இருப்பவும், பொழுது போவதில்லை என்று கூறும் இவ்வகை மனிதர் களை என்னென்று கூறுவது! இவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தால் இவ்வாறு இவர்கள் கூறுவதன் காரணத்தை அறியலாம். இவர்கள் பசி தீர உண்பதையும் உறங்குவதை யும் தவிர, வேறு வாழ்க்கையில் ஒன்றையும் அறியாதவர் கள் ஆகலின், இவர்கட்குப் பொழுது போவதில்லை.

 

வாழ்வில் வெறுப்பு

 

இங்ஙனம் தோன்றிய இவ்வெண்ணம் இம்மட்டோடு நிற்பதில்லை. ஒரு சிலர், 'வாழ்க்கையில் வெறுப்படைந் தேன்!' என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வதையும் காண்கிறோம். வாழ்க்கைப் போரில் ஓயாது சண்டை செய்து, இன்றியமையாத பொருள்களைக் கூடப் பெறமுடியாது வறுமையில் ஆழ்ந்து, அதன் பயனாக உயிரை மாய்த்துக்கொள்பவர்களும் உண்டு. இத்தகையோர் சாவிற்கு நமது இரக்கம் உரியதாகும்! குறை இவர்களிடம் இல்லை. இவர்கள் சாவிற்குக் காரணம், இவர்கள் தோன்றி வளர்ந்த சமுதாயமே ஆகும். இனி, ஒருசார் மக்கள், வாழ்க்கையில் பெற வேண்டுவன அனைத்தையும் பெற்று இருந்தும் வாழ்க்கையில் வெறுப்புத் தட்டித் தற்கொலை செய்துகொள்வதைக் காண்கிறோம். செல்வங்கொழிக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில், பணத்தில் புரளும் பெரும் பொருளாளர்களுட் சிலரும் இக்கதிக்கு ஆளான மையை அறிகிறோம். ஏன் இவர்கள் வாழ்க்கை இந் நிலைக்கு வந்தது? வாழ்க்கைக்கு, அதுவும் சுகமான வாழ்க்கைக்கு, எவை எவை தேவை என நினைப்போமோ, அவை அனைத்தும் இவர்களிடம் ஒன்றுக்கு நூறாய் இருப்பவும், வாழ்க்கையில் வெறுப்புத்தட்டக் காரணம் என்ன? இவற்றிலிருந்து நாம் அறிய வேண்டுவது ஒன்றுளது. வாழ்க்கையில் ஏற்படும் விருப்பும் வெறுப்பும் வாழும் மனிதனுடைய மனநிலையைப் பொறுத்தனவே தவிர, ஏனைய உலகப் பொருள்களைப் பொறுத்தவை அல்ல.

 

அழுகிய வெறுப்பு

 

வாழ்க்கையின் விருப்பு வெறுப்புகள் மனநிலையைப் பொறுத்தவை என்பதன் பொருள் என்ன? உடலை வளர்க்க உணவு தேவைப்படுவது போல, மனத்தை வளர்க்கச் சிறந்த எண்ணங்களும் குறிக்கோள்களும் தேவை. இவை இல்லையேல் மனம் உடலோடு சேர்ந்து வளர்ச்சியடையாமல், உரம் குன்றிப்போம். அம்மட்டோடு இல்லை. வாழ்க்கையிலும் வெறுப்படையுமாறு செய்யவுஞ் செய்யும். அழுகிப்போன ஓர் உறுப்பு உடலில் இருக்கு மானால் உடல் முழுமைக்கும் தீங்கு விளைத்தல் கண்கூடு அன்றோ? எனவே, மனமும் உடலோடு சேர்ந்து வளர்ச்சி யடையச் செய்ய வேண்டுவது அறிவுடையார் கடமை யாகும்.

 

இன்பம் எங்கே?

 

இம்மன வளர்ச்சிக்கு ஏதுவானவை எவை எவை என்று ஆராய்ந்து தக்க முடிவிற்கு வரவேண்டும். சாதாரண ஆசைகளைக் குறிக்கோள்கள் என்று தவறுத லாக நினைத்துவிட்டால், அவற்றால் உண்டாகும் துன்பம் ஏட்டில் அடங்காதது. இந்நிலையில் மனத்தின் இயல்பையும் நன்கு அறிதல் வேண்டும். எத்தகைய ஆசையாயினும் அது நிறைவேறியவுடன் அமைதியடைகிற இயல்பு மனத்திற்கு இல்லை. மேலும் புதிய பொருள் களின்மேல் ஆசை செலுத்துவதே மனத்தின் இயல்பாகும். இது கருதியே சாந்தலிங்க அடிகளார், "அரிதுபெற் றிடினும் பெற்றதில் விருப்பம் அறப்பெறா தனவிகும்பு உயிர்கள்" என்று கூறிப்போந்தார். ஆகவே, மட்டமான பொருள்கள் மேல் பற்றுவைத்து, அதையே வாழ்க்கையின் குறிக்கோளாகவும் கொண்டுவிட்டால், அவ்வாசை நிறைவேறியவுடன் வாழ்க்கையில் அலுப்புத் தட்டிவிடும். அமெரிக்காவில் தற்கொலை செய்துகொள்ளும் கோடீசுவரர்கள் இந்த இனத்தையே சேர்ந்தவர்கள். கேவலம் சில கோடிப் பொருளைச் சேகரிப்பதே வாழ்க்கையின் குறிக்கோள் என்று தவறாக உணர்ந்த இவர்கள், அப்பொருளைச் சேகரித்தவுடன் வேறு வாழ்க்கையிள் சுவையுண்டு என்பதை அறிய முடிவதில்லை. காரணம் மிக இன்றியமையாதது. மனம் எப்பொழுது இன்பத்தைக் காண்கிறது. ஒரு குறிக்கோளை நாடி அடைய முற்படும் பொழுது மனத்திற்கு இன்பம் பிறக்கிறது. ஆனால், எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வின்பம் என்று ஆய்தல் வேண்டும். குறிக்கோளை யடையச் செய்யும் முயற்சியில் இன்பமே தவிர, அடைந்து விட்ட பிறகு அங்கு இன்பம் என்ற ஒன்றும் இல்லை. எனவே, முயற்சியிலேதான் இன்பம் என்றால், அம்முயற்சி வாழ்நாள் முழுதும் நீடித்ததாக இருத்தல் வேண்டுமே தவிர, இடையே பயந்தரக் கூடியதாய் அமைந்துவிடின் முற்கூறியபடி வெறுப்பே மிஞ்சும். இது வாழ்க்கையின் எல்லா முயற்சிகட்கும் பொதுவான நீதியாகும்.

 

உயர்ந்த குறிக்கோள்

 

இந்த முடிபை மனத்துள் இருத்திக்கொண்டுதான் எத்தகைய குறிக்கோள் சிறந்தது என்னும் ஆராய்ச்சியைத் தொடங்க வேண்டும். ஒருவன் வாழ்நாளில் எளிதாக அடைந்துவிடக் கூடியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டால், நேரும் இழுக்கைக் கண்டோம். அவ்வாறாயின், அடையம்டியாத குறிக்கோளை மேற்கொள்வதால் என்ன பயன் என்று கேட்கப்படலாம். 'குறிக்கோள்' என்பதற்குப் பொருளே, 'எளிதில் அடைய முடியாதது' என்பதாகும். பொதுமறை தந்த பெரியாரின் கட்டளையை உற்று நோக்குவோம்.

 

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்; மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (குறள்-596)

 

என்றல்லவோ அவர் கூறிச் சென்றார்? வாழ்க்கையில் கொள்ளவேண்டிய குறிக்கோளைப்பற்றிக் கூறவந்த ஆசிரியர், 'உயர்வு உள்ளல்' என்று கூறினார். 'உயர்வு' என்ற சொல் ஓர் ஒப்புநோக்குச் சொல்லேயாகும். ஒன்றை நோக்க ஒன்று உயர்வு என்றுதான் கூறவேண்டும். எனவே இங்கு உயர்வு என்று கூறினதற்கு எவ்வாறு பொருள் கூற வேண்டும் என்று ஐயுறுவார்க்கு விளக்கம் தருவார் போன்று பின் அடியைக் கூறினார். 'மற்றது தள்ளினும்' என்ற கூற்றால், அக்குறிக்கோள் அடைய முடியாததாகும் என்ற குறிப்பையும் பெறவைத்தார். 'அடைய முடியாத குறிக்கோளை வைத்துக் கொள்வதாற் பயன் என்ன?' என்று வினவினால், அதற்கு விடை 'தள்ளாமை நீர்த்து' என்பதன்கண் அடங்கி விடுகிறது. அடைய முடியாவிடினும், அக்குறிக்கோளும், அதனை அடையச் செய்யும் முயற்சியும் ஏற்றுக்கோடற்பாலன என்பதே வள்ளுவர் வகுத்த நெறியாகும்.

 

தாழ்ந்த குறிக்கோள்

 

மேலும், மட்டமான குறிக்கோளைக் கொண்டிருந்து, அதனை அடைந்துவிடுவதைக் காட்டிலும், உயர்ந்த குறிக் கோளைக் கொண்டிருந்து, அதற்கெனத் தளரா முயற்சி செய்து அம்முயற்சியில் தோல்வியுறுதலே சிறந்தது என்பதும் தமிழர் கண்ட கொள்கையாம். இதனையே பெரியார்,

 

கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (குறள்-772)

 

என்று குறிப்பிட்டார்.

 

தமிழ்நாட்டுப் பெருநூல்களிற் காணப்படும் பெரு மக்கள் கருத்துக்களும் அவர்கள் செய்த செய்கைகளும் இத்தகைய கருத்தையே அடிப்படையாகக் கொண்டவை. அவர்கள் கொண்ட குறிக்கோளை அடையாமற்போயினும் அக்குறிக்கோள் மிக உயர்ந்ததாய் இருந்தது என்பதில் ஐய மில்லை. அவர்கள் பெற்ற உயர்வையும் அவர்கள் கொண்ட வெற்றியையும் கொண்டு கணக்கிடாமல், குறிக் கோளையும் அதற்குச் செய்யப்பெற்ற முயற்சியையும் கொண்டே தமிழர் கணக்கிட்டனர். இதனாலேயே வள்ளுவப் பெருந்தகையார்,

 

வெள்ளத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு. (குறள்-595)

 

என்று முழங்கினார். மனிதனின் உயர்வு அவன் உள்ளத்துட்கொண்ட குறிக்கோள் அளவாகுமே தவிர, அதனை அவன் அடைந்தானா இல்லையா என்பதைப் பொறுத்தன்று.

 

உலகம் ஏன் நிலைபெறுகிறது?

 

இவ்வுலகம் ஏன் நிலை பெற்றிருக்கிறது? எவ்வாறு நிலைபெற்றிருக்கிறது? இவ்வினாக்கட்குப் பலர் பல்வாறு விடை கூறுவர். விஞ்ஞானிகள் பெருவெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் கோளங்கள் ஒன்றை ஒன்று இழுத்துக் கொண்டு நிற்றலின், அந்த ஈர்ப்புச் சக்திக்குக் கட்டுப் பட்டே இவ்வுலகம் நிலைபெற்றிருக்கிறது என்பார்கள். எவ்வாறு என்ற வினாவிற்கு, உலகம் தன்னில்தானே சுழன்று கொண்டும், சூரியனைச் சுற்றிக் கொண்டும் இருத்தலினால் என்றும் விடை கூறுவர். இறைவனை நம்பி யிருக்கும் அன்பர்கள் இவ்வுலகம் நிலைபெற்றிருப்பது இறைவனுடைய கருணையால் என்பர். எதனையுமே நம்பு வதில்லை என்ற கொள்கையுடையார் சிலர், இத்தகைய வினாக்களுக்கு நாம் ஏன் விடை தேடி அலையவேண்டும்? உலகந்தான் இருக்கிறது. அது எதனால் நிலை பெற்றால் என்ன? என்பர். பழைய புராணம் முதலியவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள் உலகம் ஆதிசேடன் தாங்கிக்கொண்டிருத்தலினாலேதான் நிலைபெற்றிருக்கிறது என்பர்.

எது உலகம்? மேலே கூறிய விடைகள் அனைத்திலும் ஓரள்வு மெய்ம்மை இருக்கிறது. ஆனாலும் முழு மெய்ம்மையா என்றால், இல்லையென்றுதான் கூறவேண்டும். மேலும், உலகமாகிய சடப்பொருள் நிலைபெறும் காரணத்தைத் தான் இவ்விடைகள் ஒருவாறு விளங்கின் ஆனால் உலகத்தை ம்ண்ணும், நீரும், நெருப்பும், காற்றும் கலந்த ஒரு ஜடப் பொருளாக மட்டும் தமிழர்கள் கருதவில்லை. உலகம் என்ற சொல்லால் உலகில் உள்ள மக்களையே இவர்கள் குறித்தார்கள். இது பற்றியே பொலும், 'உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று,' என்பது பொன்ற முதுமொழிகள் தோன்றலாயின! எனவே , உலகம் என்பது மக்களைத்தான் சுட்டும் என்ற கருத்துடன் மேலே கூறிய வினாக்களை எழுப்பினால், கூறப்பட்ட விடைகள் பொருத்தமற்றவை என்பது நன்கு விளங்கும். தமிழர் கண்ட இந்த உண்மை இன்றும் ஒத்துக் கொள்ளப் பெறுகின்றது என்பதற்குச் சான்றாக 'உலகம் வரவரக் கெட்டுப்பொய் விட்டது!' என்று கூறப்படும் வாக்கியத்தைக் கூறலாம். உலகம் என்பது அதில் வாழும் மக்களைக் குறிக்கிறது என்பது வெளிப்படை அவ்வாறா யின், இந்த உலகம் ஏன் வாழ்கிறது?

 

நாகரிகம் வளர்ந்த வரலாறு உலகம் தோன்றிய நாளில் அதில் மனிதன் தோன்ற வில்லை. பல நூறாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பே மனிதன் தோன்றி வளரத் தலைப்பட்டான் என்று நிலநூல் வல்லுநர் கூறுகின்றனர். ஆதியில் தனித்தனியாய் வாழ்ந்த மனிதர் பல நூறு ஆண்டுகளின் பின்னர்க் கூட்டமாகக் கூடி வாழத் தலைப்பட்டனர். தனித்தனியாய் வாழ்ந்து வந்த பொழுது அவர் அநுபவித்துப் பழகிய உரிமைகள் முதலியன, கூட்டமாக வாழும்பொழுது பயன்படவில்லை. தனி மனிதனுடைய உரிமைகள் பலவற்றைக் கூட்டத் துடன் வாழும்பொழுது விட்டுக் கொடுக்க வேண்டி நேரிட்டது. காலம் செல்லச் செல்ல இப் புதுமுறை வாழ்க்கையைப் பழகிக் கொண்டான் மனிதன். அதிகக் கூட்டம் கூடி ஓரிடத்தில் வாழத் தலைப்பட்ட இடம் நகரம் எனப் பெயர் பெறலாயிற்று. கிராமங்களில் வாழும் மக்கள் ஓரளவு பிறருடைய கையை எதிர்பாராமல் வாழ்க்கை நடத்த முடிந்தது. ஆனால், நகரத்தில் வாழ்க்கை நடத்துபவர் பல்வேறு துறைகளில் முயற்சி செய்யத் தொடங்கினர்; ஆதலின் பிறர் கையை எதிர்பார்த்தே அன்றாட வாழ்க்கை நடத்தும் நிலைக்கு வந்தனர். பிறர் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலையில், அப்பிறருக் காகத் தம்முடைய உரிமைகள் சிலவற்றை விட்டுவிட வேண்டிய நிலைமையும் வருமன்றோ? இவ்வாறு விட்டுக் கொடுத்து வாழ்வதே நகர வாழ்க்கையின் அடிப்படை யாகும். எனவே இந்நகர மக்களின் வாழ்க்கை 'நாகரிக வாழ்க்கை' என்று பெயர் பெறலாயிற்று. 'நகரம்' என்ற சொல்லிலிருந்தே 'நாகரிகம்' என்ற சொல் பிறந்தது. நாளாவட்டத்தில் தன் நலத்தைக் குறைத்துக் கொண்டு பிறர் நலம் பேணும் வாழ்வையே 'நாகரிக வாழ்வு' என்று கூறத் தலைப்பட்டனர். இத்தகைய பண்பாடுடையவர்களை 'நாகரிகர்' என்றும், 'நாகரிகம் அறிந்தவர்' என்றுங்கூடக் கூறினர்.

 

எது நாகரிகம்?

 

நாகரிகம் உடையவராலேதான் உலகம் நடை பெறுகிறது என்று கூறினால், இன்றும் அதனை மறுப்பார் யாரும் இல்லை. நாகரிகம் என்பது யாது என்று கேட்டால்தான் விடை நன்கு கூறமுடியாது விழிக்க நேரிடும். சென்னப் பட்டினத்தில் வாழும் அனைவரும் தம்மை மிக்க நாகரிகம் உடையவர் என்றே கருதிக் கொள்கின்றனர்; தருக்கோடு பேசவும் செய்கின்றனர். ஆனால் இவர்கள் எதனால் இவ்வாறு கூறிக்கொள்கின்ற னர் என்பதை அறிய அதிக நேரம் செல்லாது. எளிய உடை அணிந்து கோணல் எழுத்துக்களை அறியாத ஒருவர் இந் நகரப் பெருமக்கள் ஏறிச்செல்லும் பஸ் முதலியவற்றில் வந்து ஏறிவிட்டால் அவர் படும்பாட்டைப் பார்க்க பல கண்கள் வேண்டும். சென்னையில் வாழும் நாகரிகர்கள் அப்புதியவரை மனிதராகக்கூட மதிக்க மாட்டார்கள். ஏன்? பஸ் கண்டக்டர்கூடச் சென்னை யில் வாழும் ஒரே காரணத்தால் தம்மை மிக்க நாகரிக முடையவராகவே கருதிக்கொள்வதால், அப்புதியவரை நாட்டுப்புறத்தார் என்று ஏளனமாகப் பேசுதலைக் கேட்கிறோம்.

 

எனவே, இக்கால முறைப்படி பார்த்தால், வேட்டி உடுக்காமல் கடுங்கோடைக் காலமாயினும் கம்பளியால் நெய்யப்பட்ட சட்டை மாட்டிக்கொண்டு கழுத்தில் ஒரு சுருக்குத் துணியும் அணிந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு வாழ்வதே நாகரிகம் என்பது விளங்கும். இதுதான் நாகரிகம் எனில், இன்று வாழும் தமிழர் பலர், அவருள்ளும் இளந்தமிழர் பலர் நாகரிகம் மிகுந்தவர்களே! இத்தகைய நாகரிகம் மிகுந்துவிட்டதால், தமிழ்நாடு என்ன கதியடையும் என்று கூறத்தேவையில்லை. ஆனால், இவர்கள் நாகரிகரும் அல்லர்; இவர்கள் பண்பாடு நாகரிகமும் அன்று என்பது நன்கு அறியப்பட வேண்டும்.

 

உலகம் வாழக் காரணம்

 

உலகம் வாழ்வதற்கு உரிய காரணத்தைக்கூற வந்த வள்ளுவப்பெருந்தகையார்,

 

'பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அஃதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்' (குறள்-996)

 

என்று கூறினார்.

 

பண்புடையவர் இருத்தலினாலேதான் உலகம் நடை பெறுகிறது என்று அவர் கூறும்பொழுது, நாகரிகம் உடையவர்களையே குறிப்பிடுகிறார். 'பண்பெனப்படுவது பாடறிந்த ஒழுகல்.' என்று கலித்தொகை கூறுவது இக் கருத்தையேயாம். பிறருடைய இயல்பறிந்து அதற்கேற்ப நடத்தலையே 'பாடறிந்து' என்று கூறுகிறார் அந்த ஆசிரியர். தனக்கு என வாழாமல் பிறர்பொருட்டு வாழ்வதே நாகரிகம் எனப்படும் என்பது தெளிவு. எந்த அளவு வரை ஒருவன் தன்னலத்தைப் பேணிக் கொள்ள வேண்டும் என்ற வினாவிற்கு விடை கூறுவது சற்றுக் கடினந்தான். வேறு வகையாகக் கூறுமிடத்து ஒருவனுடைய நாகரிகம் எவ்வளவு என்பதை எவ்வாறு அளவிட்டுரைப் பது என்பதே இவ்வினாவாகும். பெரிய படிப்புப் படித்துவிட்டு வேற்று நாடுகட்குச் சென்றுவிட்டு மீட்டும் இந்த நாட்டையும் இதில் வாழும் மக்களையும் ஏற இறங்கப் பார்க்கும் பெரியோர்தாம் இன்று நாகரிகத்தில் மேம்பட்டவராகக் கருதப்படுகின்றனர். பிறருக்காகத் தம்மையே தியாகம் செய்வதுதான் நாகரிகம் என்றால் இவர்களுடைய நாகரிகத்தை எவ்வாறு மதிப்பிடுவது? தமிழன் நாகரிகம் பற்றிக்கொண்ட கருத்தை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணை இதோ கூறுகிறது.

 

'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்.' (நற்றிணை - 355)

 

'நட்புக் கொண்டவர்கள் எதிரே இருந்து கொண்டு நஞ்சை ஊற்றி 'உண்க' எனத் தந்தவிடத்தும், சிறிதும் மனங்கோணாமல், முகத்தைச் சுளிக்காமல் உண்பதே நாகரிகம்,' என்பது கருத்து. இதே கருத்தைத்தான் வள்ளுவப் பெருந்தகையாரும்,

 

'பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர்

நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.' (குறள் - 580)

 

என்று கூறுகிறார். 'மகாத்மா காந்தி', 'ஸாக்ரட்டிஸ்' போன்றவர்களே 'நாகரிகம் உடையவர்கள்' என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. எனவே, மீட்டும் பழைய வினாவைக் கேட்போம். உலகம் எதனால் வாழ்கிறது என்றால், இத்தகைய நாகரிகம் உடையவர்கள் இருப்பதனாலேதான் என்று எளிதாக விடை கூறிவிடலாம்.

 

வழுதி கூறுகிறான்

 

'கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி' என்பவன் கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்தவன். வழுதி என்பதால் பாண்டியன் என்பதும், 'இளம்பெரு' என்ற அடைமொழியால் ஆட்சி செய்யும் அரசனுக்கு அடுத்த உரிமையில் இருந்தான் என்பதும் அறியப்படும். அரசனாக மட்டும் இல்லாமல், பெரும் புலமை வாய்ந்தவனாகவும் இருந்துள்ளான் அப்பெருமகன். அவன் பாடிய ஒரே ஒரு பாடல்தான் இன்று நமக்குக் கிடைத்து உள்ளது. 'கடலுள் மாய்ந்த' என்ற அடைமொழியால் அவன் எதிர்பாராதவிதமாகக் 'கடலுக்கு இரையாகி விட்டான்' என்பதும் தெரிகிறது. மிகவும் இளமையிலேயே அவன் இறந்து விட்டாலும், தமிழ்மொழி உள்ள அளவும் இறவாத சிறப்புடைய ஒரு பாடலை நமக்குத் தந்து விட்டான். அந்தப் பாடலிலேதான் இந்தப் பழைய வினாவை எழுபபி, அதற்கு விடையும் அவனே கூறுகிறான்.

"இவ்வுலகம் இருக்கிறது. (யாரால் எனில்) இந்திர னுக்கே உரிமையான அமிர்தம் கிடைப்பதாயினும், அதை இனிது என்று கொண்டு (பிறருக்குத் தாராமல்) தனித்து உண்ணமாட்டார்; யாரோடும் வெறுப்புக்கொள்ள மாட்டார்; பிறர் கண்டு அஞ்சுகிற துன்பத்தைக் கண்டு தாமும் அதற்கு அஞ்சி அத்துன்பம் தீருகிற வரையில் (முயற்சி இல்லாமல்) மடியுடன் (சோம்பலுடன்) இருக்க மாட்டார்; புகழ் கிடைப்பதாயின், தம் உயிரையும் கொடுப்பார்; பழி வருவதானால் உலகு முழுவதும் கிடைப்பதாயினும் கொள்ளமாட்டார்; அத்தகைய மாட்சிமைப்பட்ட பண்பாட்டை உடையவராகித் தமக்கு என்று (தன்னல) முயற்சியில் ஈடுபடாதவர், பிறர் பொருட்டே முயற்சி செய்பவர். இவ்வுலகத்தில் இருத்த லான் (இவ்வுலகம் இருக்கிறது)" என்ற பொருள்பட அப் பெருமகன் பாடுகிறான்.

 

உண்டால் அம்ம! இவ் வுலகம்

இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதுஒனத்

தமியர் உண்டலும் இவரே; முனிவிலர்

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சீப்

புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்வுஇலர்

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்குஎன முயலா நோன்தாள்

பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே. (புறம்-182)

 

[முனிவு--வெறுப்பு; துஞ்சல்--சோம்பல்; நோன்தாள்-- வலியமுயற்சி.]

 

நாகரிகத்தின் சிகரம் என விளங்குபவன் யார் என்பதை இப்பாடலில் அவ்வரசப் புலவன் மிகவும் விரிவாகப் பேசுகிறான். இந்திரனுடைய அமிழ்தத்தை நிரம்பப்பெற்ற தேவர்கள்கூட அசுரர்கட்குத் தாராமல் தாமே அதனை உண்ண விரும்பினர். ஆனால், நாகரிக மனிதர் யார் எனில், இந்த அமிழ்தத்தைக்கூடத் தனக்கே என்று எண்ணாமல் பங்கிட்டுண்பவனாவான். பிற உயிர்களிடத்து இத்துணை அன்பு காட்டும் ஒருவனுக்கு அவற்றின்மேல் எவ்வாறு வெறுப்பு உண்டாக முடியும்? பிறர்மாட்டு வெறுப்புக் கொள்ளக் காரணம் தன்னலத்தில் கொண்ட பற்றுத்தானே! எனவே, தன்னலத்தைத் துறந்த பெரியவனுக்கு வெறுப்பு என்பது இருக்க இயலாது. தன்னை அடித்துப் பல்லை உடைத்தவனையும் சோதர னாகக் கருதி, அவனை விடுதலை செய்தால் ஒழிய உணவு உண்ணமாட்டேன் என்று கூறும் ஒருவனுக்கு (மகாத்மா காந்தி) எவ்வாறு வெறுப்புத் தோன்ற முடியும்? இனி அந்த நாகரிக மனிதன் துன்பத்தைக் கண்டு அஞ்சிச் சோம்பி இருத்தலும் இல்லை. பிறர் துயரம் துடைப்பதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டவனுக்குச் சோம்பி இருக்க நேரம் ஏது? துன்பத்தைக் கண்டு அஞ்சுபவன் எவ்வாறு பிறருக்கு உதவ முடியும்? அவன் வாழ்வின் குறிக்கோள் 'புகழ்' ஈட்டுதல் ஒன்றுதான். பிறருக்குத் துன்பந்தாராத நன்முறையில் கடமையைச் செய்து நிறைவேற்றினால்தான் புகழ் உண்டு. கடமை நிறைவேற்றத்தில் உயிர் போவதாயினும் அதனை மகிழ் வுடன் ஏற்பவன் அவன் கடமையைச் செய்யாமலோ, தவறான வழியில் நடந்தாலோ, அதனால் பெருலாபம் வருவதாயினும் அதனைச் செய்யமாட்டான். பழி வருகின்ற செயலைப் பெரியோர்கள் செய்யமாட்டார்கள். இனி அவன் இவ்வுலகில் செய்யும் பெரிய முயற்சிகள் அனைத்தும் தனக்கு என்றில்லாமல், பிறர் பொருட்டே அமையுமாம். அத்தகையவர்கள் உள்ளமையினாலேதான் இவ்வுலகம் வாழ்கிறது என்கிறான் புலவன்.

உலகம் ஏன் வாழ்கிறது என்ற வினாவிற்கு இப்பொழுது விடை கிடைக்கிறதன்றோ?

 

பொய் கூறார்

 

சரித்திரம் எட்டிப் பார்ப்பதற்கு உரிய வாய்ப்புகள் இல்லாத காலத்தில் இத்தமிழர் யாது நினைந்தனர்? எவ் வாறு வாழ்ந்தனர்? எதனைச் சிறந்தது என்று கருதினர்? எதனை இழிந்தது என்று கருதினர்? இவற்றை நாம் அறிவது இன்றும் பயன் தரக் கூடிய ஒன்றாகும். அவ்வாறாயின், இத்தமிழ்ப் பாடல்களைப் பாடிய புலவர் அனைவரும் பொய் கூறாமல் மெய்யே கூறினரா என்று எண்ணத் தோன்றுகிறதா? இதோ பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் விடை கூறுகிறார். வன்பரணர் என்ற தமிழ்க் கவிஞர் சங்கப் புலவர் வரிசையில் சேர்ந்தவர். அவர் தமக்கு மட்டும் அல்லாமல் தம் இனத்தவராய தமிழ்ப் புலவர் அனைவருக்குமே சேர்த்து ஓர் உண்மையை வெளி யிடுகிறார். தமிழ்ப் புலவர்கள் பொய் கூறமாட்டார்களாம்! பெரிய அரசர்களிடத்து அவர்கள் தரும் பரிசிலைக் கருதியை அப்புலவர்கள் சென்றாலும், அவ்வரசர்கள் செய்யாதவற்றைக் கூறிப் புகழுதல் அப்புலவர்கட்கு மரபு அன்றாம்!

 

பீடுஇல் மன்னர் புகழ்ச்சி வேண்டிச்

செய்யா கூறிக் கிளத்தல்

எய்யாது ஆகின்றுஎம் சிறுசெந் நாவே (புறம்-148)

 

(பிறருக்கு வாரி வழங்கும் பெருமை (பீடு) இல்லாத அரசரைப் புகழ வேண்டி அவர் செய்யாதனவற்றைச் செய்ததாகக்கூறி அவர் குணங்களைக் கூறுதலை (கிளத்தல்) அறியாது (எய்யாது) எம்முடைய சிறிய செம்மையான நாக்கு]

 

புலவருடைய நா ஏனையோருடைய நாவைப் போலத் துணிந்து பொய் கூறாமையின், செம்மையான நா என்றார் வன்பரணர். ஆனால், தாமும் ஒரு புலவராதலின் புலவர்களுடைய நாவின் பெருமையை எடுத்துக் கூறும் 'சிறு' என்ற அடைமொழி தந்து 'சிறு நா' என்று மிக்க அடக்கத்துடன் கூறிக்கொள்கிறார். வன்பரணர் போன்ற பெறும் புலவர்களும் தற்பெருமை கொள்ளாமல் இவ்வளவு அடக்கத்துடன் தம்மைப்பற்றிக் கூறிக் கொள்வதனால், அத்தகைய புலவர்களை வாழ்ந்த இனத்தின் பெருமையை எவ்வாறு கூறுவது!

 

தாழ்ந்தது எது?

 

இத்துணைச் சிறப்புடைய புலவர்கள் தங்களுடைய இனத்தவர் எதனை உயர்ந்தது என்றும், எதனைத் தாழ்ந்தது என்றும் கருதினார்கள் என்பதைக் கூறினால் அது அந்த இனத்தார் அனைவரும் ஒப்புக் கொண்ட உண்மையாக் இருக்கும் என்பதில் ஐயமில்லை அல்லவா? இன்று வாழும் நாம் மிகவும் தாழ்ந்தது என்று எதனைக் கருதுகிறோம்? பலரும் பலவாறு நினைப்பதற்கு ஏற்ற வினாவாகும் இது. ஆனால், நாம் எதை இழிந்தது என்று நினைத்தாலும், ஒன்றை மட்டும் நினைக்கமாட்டோம் என்பது உறுதி. பிறரிடம் ஒன்றைத் தா என்று கேட்டல் இழிவு என்று கூறினாள் நம்மில் பலரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவோம். காரணம், இன்று நம்முடைய அன்றாட வாழ்வில் பலருடைய கையை எதிர்ப்பார்த்தே வாழ வேண்டியுள்ளது. நம்மால் எதிர் பார்க்கப்படும் அப்பலருள் சிலர், தாமே நாம் வேண்டியவற்றைத் தருவர்; இன்னுஞ் சிலர், நாம் கெட்ட காலத்தும் கொடுக்க மறுப்பர். அத்தகையவர்களிடத்தும் வாய் கூசாமல் கேட்டால்தான் நாம் விரும்பியது கிடைக்கும். எனவே, நம் காலத்தில் ஒருவரை ஒன்று கொடு என்று கேட்பது தவறு அன்று என்று கருதப்பட்டாலும், அந்நாளைய தமிழன் இதனை மிக இழிந்ததாகவே கருதினான்.

 

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;

கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று (புறம்-204)

 

என்று இந்நான்கு அடிகளில் இற்றைநாள் தமிழ்ச் சமுதாயம் இழந்துவிட்ட ஒரு நாகரிகம் பேசப்படுகிறது. உலகத்தில் எவ்வாறேனும் வாழ்ந்துவிட வேண்டும் என்ற கருத்தால் தனக்கு மிகவும் வேண்டப்படுவதாக ஒன்றைக் கருதிக்கொள்கிறான் ஒருவன். அது இல்லாவிடின் உயிர் வாழ முடியாது என்ற நிலை வந்துவிடுகிறது. உயிரைப் பெரிது என்று மதிக்கும் ஒரு காரணத்தால் எப்படியாவது வாழ வேண்டும் என்று நினைக்கிறான். இத்தகையவன் தனக்கு மிகவும் தேவை என்று கருதப்படும் பொருளை அது உடையான் ஒருவனிடமிருந்து வேண்டிப் பெற முயல் கிறான். அப்பொருளை உடையானும், இந்த இல்லானும் சமமாக இருப்பின் அவனை நோக்கி இவன், 'தா' என்று கேட்கலாம். ஆனால், உடையான் உயர்ந்தவனாய் இருப்பின், அவனிடம் சென்று 'ஈவாயாக!' என்றுதானே கேட்க வேண்டும்? மானத்தைவிட்டு ஒரு பொருளை என்று கேட்டலினும் இழிந்தது வேறு இல்லை என்கிறார். மானம் என்ற ஒன்றை மிகப் பெரிதாக மதிக்கும் அற்றை நாள் தமிழ்ப் புலவர். பசுமாடு ஒன்று உயிர் நீங்கும் நிலையில் இருக்கிறது. சிறிது தண்ணீர் இருந்தால் அது உயிர் பிழைத்துவிடும். பசுவைக் காப்பது அறமாகும். வேண்டப்படும் பொருளோ, எங்கும் எப்பொழுதும் கிடைக்ககூடிய தண்ணீர்தான். என்றாலும், அந்தத் தண்ணீரை ஒருவனிடம் சென்று 'தருக' என்று கேட்பதில் மானம் போய்விடுவதாகக் கருதினர் அற்றை நாள் தமிழர்.

 

ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளிவந்தது இல். (குறள்-1066)

 

இரத்தலின் இழிவு இத்தகையது என்று பேசிய தமிழ்ப் புலவர், இதனுடன் நிற்கவில்லை; இதனினும் இழிந்த ஒன்றும் உண்டு என்கிறார். இவ்வாறு மானத்தை இழந்தும் ஒருவன் ஒரு பொருளைத் 'தா' என்று கேட்டு விடுகின் றான். அவ்வாறு கேட்பவன் எதிரே அக்கேட்கப்பட்ட பொருளை இல்லை என்று கூறுதல், கேட்டலினும் மிகவும் இழிந்ததாம். கேட்பதே இழிவு எனில், கேட்டதை இல்லை என்று உரைத்தல் அதனினும் இழிந்ததாம். இழிந்தது பற்றி ஆராய்ந்த தமிழர் உயர்ந்தது பற்றியும் அடுத்துப் பேசுகிறார்.

 

உயர்ந்தது எது?

 

ஒருவன் எதிரே நின்று ஒன்றைத் தருக என்று கேட்பதன் முன்னர், நிற்போன் குறிப்பை அறிந்து, இதனைப் பெற்றுக் கொள்க என்று தருதல் உயர்ந்ததாம்; அவ்வாறு கேளாமலும் தரப்படுகின்ற ஒன்றை வேண்டா என்று மருத்துவிடுதல் தருதலைக்காட்டிலும் உயர்ந்ததாம். ஒருவருக்கு ஒன்றைத் தருதல் என்பது அவ்வளவு எளிதான செயல் அன்று. அவ்வாறு தருவதிலும், அதனைப் பெறுபவர் மனம் நோவாமலும் இதனைப் பெற வேண்டி யுளதே என்று வருந்தாமலும் இருக்கும்படிச் செய்து ஒன்றைத் தருதல் ஒரு கலையாகும். இவ்வாறு தருபவர் மூன்றாம் அடியில் குறிக்கப்படுகின்றனர். இவரினும் மேம்பட்டவர், தானே வருகிற ஒன்றை வேண்டா என்று மறுப்பவர். உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்பதற்கு இந்த முறையில் இலக்கணம் கூறிய பெருமை, இந்த உலகில் வாழும் பல்வேறு சமுதாயங்களுள்ளும் தமிழன் ஒருவனுக்கே உரியது என்று கூறுதல் தவறு ஆகாது என்றே தோன்றுகிறது.

 

பழைய தத்துவம்

 

உலகில் வாழும் பல்வேறு மக்களும் ஏன் ஒன்றாக வாழ முடியாது? எல்லோரும் சோதர ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று கூறாத பெரியவர்கள் இல்லை. ஆனாலும் இன்று வரை உலகம் அவ்வாறு வாழவில்லை. உலகம் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு நாட்டில் வாழும் ஒரு மொழி பேசுபவருள்ளாது இந்த ஒற்றுமை நிலைத்திருக் கிறதா? இல்லையே! ஏன்? அனைவரும் சமம் என்று கூறும் கொள்கை ஏனைய நாடுகளைப் பொறுத்த மாட்டில் பிற்காலத்தில் தோன்றியிருக்கலாம். ஆனால் இத் தமிழர் மிகப் பழங்காலத்திலேயே இக்கருத்தைக் கூறியுள்ள னர். 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற கருத்தைப் பலரும் கூறியிருப்பினும், தமிழர் கூறிய முறையே ஒரு தனிச் சிறப்புடையது.

ஒருவன் எல்லாம் தன்னுடைய ஊராகும், அனைவரும் தன்னுடைய சுற்றத்தார் என்று நினைத்து வாழ முற்படுகிறான் என்றே வைத்துக்கொள்வோம். எவ்வளவு வரையில் இது முடியும்? பிறர் அவனுக்குத் தீங்கு இழைக்கும் பொழுது இவ்வாறு நினைக்க முடியுமா? அதிலும் காரணம் இல்லாமல் வேண்டுமென்றே தீமை செய்யும் பொழுதும் சும்மா இருக்க முடியுமா? சிறு துன்பம் செய்தால் ஒருவேளை பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், உயிர்போகிற பெருந்துன்பம் இழைத்தால் என்ன செய்வது? அப்பொழுதும் துன்பம் இழைப்பவரைப் பகைவர் என்று கருதாமல் கேளிர் என்று கருத முடியுமா? முடியாதுதான். என்றால், பிறர் அனைவரையும் சோதரர் என்றே கருதவேண்டும் என்று கூறுவது பொருளற்ற சொல்லாயந் முடிந்துவிடும். இன்று நம்மைச் சுற்றி நிகழ்வது யாது? கறுப்பனை வெள்ளையன் தோலின்நிற வேறுபாட் டால் வெறுக்கின்றான். பணக்காரனை ஏழை வெறுக்கிறான். பொருள்களை உற்பத்தி செய்பவன் அதனை வாங்காத வனை வெறுக்கிறான். ஒரு வகை அரசியல் முறை உள்ள வன் பிறிதோர் ஆட்சி முறையுடையவனை முழுப்பகைவ னாகக் கருதுகிறான். இன்னமும் கூறப்போனால், தம்மைப் போல் எல்லா வகையிலும், நினைக்காமல் வேறு வகையில் நினைக்கிறவர்களைக்கூட பகைவர்கள் என்றே சில நாட்டார் கருதுகின்றனர். இத்தனை வெறுப்புக்களிடையே 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கூறுதல் பொருந்துமா? அல்லது எடுபடுமா? இவற்றை எல்லாம் மனத்தில் நினைத்த 'கணியன் பூங்குன்றனார்' என்ற அந்தத் தமிழ்ப் புலவர் இவற்றிற்குச் சமாதானம் கூறுகிறார்.

ஒருவன் மற்றொருவன்மேல் எப்பொழுது வெறுப்புக் கொள்கிறான்? தனக்குத் தீங்கு இழைத்துவிட்டான் என்று நினைத்தால்தானே வெறுப்புத் தோன்றும்? அவ்வாறு நினையாமல் மற்றொருவன் தன்க்குத் தீமையோ நன்மையோ செய்ய முடியாது என்று நினைத்தால், வெறுப்புக்கொள்ள வாய்ப்பே இல்லையன்றோ?

இதனாலேதான் அந்தப் புலவர் பாடலின் இரண்டாம் அடியில் 'தீதும் நன்றும் பிறர் தர வருவன அல்ல என்கிறார். 'ஒருவன் நேரே நம்மைத் தாக்கும்பொழுது கண் எதிரே ஊறு விளைப்ப வனைக் காண்கிறோமே! அப்பொழுதும் அவனை வெறுக்கக் கூடாதா?' என்பாருக்கு விடை கூறுமுகமாக மூன்றாம் அடியில், 'உடலில் படும் துன்பம் நீடித்து நிற்ப தில்லை. எனவே, அதனால் வெறுப்புக்கொள்ள வேண்டா' என்கிறான். 'ஒரு வேளை பிறன் ஒருவன் நம்மைக் கொல்லவே வந்தால் அப்பொழுது யாது செய்ய வேண்டும்?' என்பாரை நோக்கி, 'இறத்தல் என்பது புதுமையன்றோ? ஏன் மனம் வெறுக்க வேண்டும்?' என்கிறார். 'வாழ்வு இனிமையுடையது, சாவு துன்பந் தருவது.' என்று நினைத்ததால்தானே கொல்லவரும் பிறர் மேல் வெறுப்புக் கொள்ள நேரிடும்? ஆதலால், அவற்றை யும் மறுத்து விடுகிறார். இவ்வாறு பல வழியிலும் காரணங் காட்டி ஒருவர் மேல் வெறுப்போ பகையோ கொள்வது தவறு என்று எடுத்துக்காட்டி விட்டார்.

 

நீரில் அகப்பட்ட கட்டை

 

இனி வேறு ஒரு வகையிலும் வெறுப்புத் தோன்றக் கூடும். நாம் பிறருக்குச் செய்யும் நன்மைகளை அவர்கள் உணர்ந்து கொள்ளாதவிடத்தும், நாம் செய்யும் உபகாரத் திற்கு நன்றி பாராட்டாதவிடத்தும் வெறுப்புத் தோன்றுதல் இயற்கை. இதோ புலவர் அதனையும் மறுக்கிறார். 'வானம் இடியுடன் மழை பெய்கிறது. அதனால், ஆற்றில் வெள்ளம பெருகுகிறது. அந்த வெள்ளத்தில் ஒரு கட்டை அகப்பட்டு விடுமாயின், யாது செய்யும்? வெள்ளம் போகும் வழி கட்டையும் செல்லுமன்றோ? அதேபோல, ஒவ்வொருவ னுடைய ஆன்மாவும் அதனுடைய ஊழின்வழி நடைபெறு கிறதாதலின் நன்மை செய்யும் ஒருவனைப் புகழவும் வேண்டா. அவன் அற்பனாய் இருக்கும் பொழுது வாய் தவறியும் இகழவும் வேண்டா,' என்கிறார் புலவர். ஒருவனைப் புகழ்வதாலும் மற்றவனை இகழ்வதாலுந்தானே உலகில் வேறுபாட்டுணர்ச்சியும், வெறுப்பும் தோன்று கின்றன? எனவே, அடிப்படையில் அவ்வாறு கூறவே வேண்டா என்கிறார் கவிஞர், 'தப்பித் தவறிப் பெரியோ ரைப் புகழந்துவிட்டாலும் தவறு இல்லை; சிறியவர்களை வாய் தவறியும் இகழ்ந்துவிட வேண்டா,' என்று கூற வந்தவர் 'சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே,' என்கிறார். உலகம் உள்ள அளவும் மறவாமல் போற்ற வேண்டிய இந்த அருமையான பாடலை ஒரு தமிழர் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர்க் கிறிஸ்து பிறக்கு முன்னரே பாடினார் என்பதை நினைத்து வியப் படியாமல் இருக்க இயலாது.

 

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்

இன்னாது என்றாலும் இலமே; மின்னொடு

வானம் தண்துணி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியில்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்-192)

 

[முனிவு-வெறுப்பு; வானம்-மழை; கல்பொருது- கல்லை உருட்டி; இரங்கும்-ஒலிக்கும்; மல்லல்-வளப்பம் பொருந்திய; புணை-தெப்பக் கட்டை; முறை-ஊழ்; திறவோர்-மெய்ஞ்ஞானிகள்; காட்சி-நூல்.]

 

கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே தோன்றினர் தமிழர்; பிற நாட்டார் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றி னர் இம்மண்ணில். அந்நாட்டார்கள் சாதாரண நாகரிகம் அடையுமுன்னரே தமிழர் மிக உயர்ந்த நாகரிகத்தைப் பெற்றுவிட்டனர். இவர் பேசும் மொழியும் இவரைப் போல் தொன்மை வாய்ந்தது; எனவே, இவருடைய வாழ்வும் பண்பாடும், எண்ணமும், கருத்தும் மிகு பழமையானவை. அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய பயன் கலைகளிலும், நுண்கலைகள் அனைத்திலும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இவர் சிறப்புற்று இருந்தனர்.

 

புற உலக வாழ்க்கைக்குத் தேவையான அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர் அகஉலக வாழ்க்கையிலும் (சமய வாழ்க்கை) சிறந்து விளங்கினர் என்பது சொல்லா மலே விளங்கும்.

சங்கப் பாடல்களில் வரும் தெய்வம், சமயம் பற்றிய குறிப்புகள் அளவிறந்தனவேயாகும்.

ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் தாம் அன்றாடம் வழிபடும் தெய்வங்களுக்கென உருவு அமைத்து நிறுவினர்; வழிபட்டனர் என்பதனைத்

 

தெய்வம், உணாவே மாமரம் புள் பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

(தோள்-பொருள். அகத்திணையியல்)

 

என்ற சூத்திரத்தால் உணரலாம்.

 

இதனோடு நில்லாமல் தெய்வத்திலும் உயர்ந்த ஒன்றாக முழு முதற்பொருள் ஒன்றனைச் சிந்தித்து வழி பட்டனர் என்பது தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது.

தெய்வம், கடவுள் என்னும் இரண்டனையும் இன்று ஒரு பொருளனவாக வழங்குகின்றோம். எனினும் தொல் காப்பியர் காலத்தில் இவை வெவ்வேறு பொருளன என்று நினைக்கத் தோன்றுகிறது.

கொடிநிலை, கந்தழி என்ற சூத்திரத்தில் பற்றுக் கோடில்லாத பரம்பொருளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

அத்தகைய இடங்களில் 'கடவுள்' என்ற சொல்லை வேண்டுமென்றே பெய்கின்றார்.

 

ஆள் அமர் கடவுள் கடவுள் ஆலம் (புறநானூறு)

 

கடவுள் காந்தள் அருந்திறல் கடவுள் (அகநானூறு)

 

மலை உறை கடவுள் குன்றக் குறவன் கடவுள் பேணி (ஐங்குறு நூறு)

 

கடவுள் கல்சுனை கடவுள் ஓங்கு வரை (நற்றிணை)

 

நிலை உயர் கடவுள் நீ பூப்பலி இட்ட கடவுள் (கலித்தொகை)

 

உருகெழு மரபின் கடவுள் கடவுள் அஞ்சி (பதிற்றுப் பத்து)

 

கடவுள் கற்பின் பேஎம் முதிர் கடவுள் (குறுந்தொகை)

 

இவ்வாறு அமைவன எண்ணிறந்தன.

 

மேலும் திருக்கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் ஏதோ பல்லவர் காலத்தில்தான் தமிழகத்தில் இருந்தது என்ற தவறான கருத்து இக்கால ஆராய்ச்சியாளரிடை தோன்றியுள்ளது.

 

ஆனால் இத்திருக்கோயில்கள் முன்னர் கோட்டம், தேவகுலம் என்ற பெயரினவாக இருந்தன (சிலம்பு-கனாத் திறம் உரைத்த காதை).

 

ஊரானோர் தேவகுலம்

புத்தேளிர் கோட்டம் வலம் செய்து (கலி)

 

அணங்குகுடை முருகன் கோட்டம் (புறம்)

 

கேரளக் கோயில்கள் போலவே மரத்தால் அமைக்கப் பெற்ற கோயில்களும் இருந்தன.

 

மணிப் புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து

எழுது அணி கடவுள் போகலின் (அகம)

 

போற்றுவார் இன்றி, வழிபடுநர் இன்றி சில கோயில்கள் பாழாயின என்றும் அறிகிறோம்.

 

இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென

........கடவுள் போகலின் (அகம்)

 

'கருவொடு பெயரிய காண்பின் நல்லில்' (நெடுநல்வாடை)

 

கர்ப்பக் கிரகம்-சிலை-அமைத்து வழிபடும் வழக்கமும் இருந்தது.

 

நீடு குலைக்

காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு

பாம்பு அணைப் பள்ளி அமர்ந்தோன்...

அருந்திறல் கடவுள் வாழ்த்தி (பெரும்பாணாற்றுப்படை)

 

முருங்கை மேய்ந்த பெருங்கை யானை

வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ்ச ஒல்கி

இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென (அகம்-167)

 

இப்பாடல் தொடர்வழி மிக உயர்ந்த, கர்ப்பக் கிரகத் தோடு கூடிய திருக்கோயில்களே சங்க காலத் தமிழர் சமைத்து வாழ்ந்தனர் என்று அறிய முடிகிறது.

கோயில் வழிபாட்டு முறையில் ஏதோ சில சடங்கு கலைச் செய்து சமயம் என்ற பெயரிட்டு வாழ்ந்தனர் என்று நினைப்பது பெருந்தவறாகும்.

சமய வாழ்க்கையின் உயிர்நாடியாக உள்ள பக்தி என்பது இத்தமிழர்கள் அனைத்து உலகத்திற்கும் அளித்த பெருங்கொடை ஆகும்.

வேதத்தில் பக்தி என்ற சொல்லுக்கே இடமில்லை என்று அறிய முடிகிறது.

உபநிடதங்கள் அறிவின் துணைகொண்டு உண்மைப் பொருளை ஆராயத் தொடங்கின. வேதங்களை அடுத்து வந்த பௌத்தம் சமணம் என்ற இரண்டிலும் பரம் பொருட் கொள்கை இன்மையால் அங்கு பக்திக்கே இடம் இல்லை.

இந்நிலையில் வேத காலத்துக்கு முன்னும், வேத காலத்திலும், பின்னும் வீறுபெற்றிழந்த தமிழர், தம்சமய வாழ்க்கையில் பக்தி என்பதனை நன்கு உணர்ந்திருந்தனர்.

பக்தியின் அடிப்படையே தன்னை மறத்தலும், தன்னைத் தியாகம் செய்தலும் ஆகும். ஒரு குறிப்பிட்ட பயனைக் கருதிச் செய்யப்படுகின்ற யாகம் முதலியவற்றுள் உயர்ந்த குறிக்கோள் இருப்பதாகச் சொல்ல முடியாது.

ஆனால் சமய வாழ்க்கையர் இன்று ஆண்டவனை வேண்டி "பல்வேறு நலன்களை அடைய வேண்டும்; பொன், பொருள், புகழ் முதலாயின அருள்க" எனக் கோரக் காண்கிறோம்.

பக்தியின் உண்மைத் தத்துவத்தை அறிந்தவர் இவ் வாறான வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வதில்லை.

எனவேதான் பரம்பொருளிடம் முறையிடும் பொழுது.

 

யாஅம் இரப்பவை

பொருளும், பொன்னும் போகமும் அல்ல; நின்பால்

அருளும், அன்பும், அறனும மூன்றும்

உருளிணர்க் கடம்பின் ஒலி தாரோயே! (பரிபாடல் 5-80)

 

என்று வேண்டியதாகத் தெரிகிறது.

இப்பரிபாடலின் நான்கு அடிகள் இத்தமிழ்ச் சாதியின் அன்றைய வாழ்க்கைக் கொள்கை, பண்பாட்டு வளர்ச்சி, என்பனவற்றைத் தெளிவாக எடுத்துக் காட்டுவ தாக அமைந்திருக்கிறது.

சிவ விஷ்ணு வழிபாட்டில் இப்பண்டைத் தமிழர் மூழ்கி இருப்பினும், இந்நாட்டில் வாழ்வதற்கென வந்த பிற புலத்தவரான சமணர், பௌத்தர் என்பவர்களோடு, மாறுபாடு கொள்ளவோ, மனக் காழ்ப்பு கொள்ளவோ செய்கிலர்.

தனி மனிதனுடைய சமய நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை, சமய வாழ்வு என்பவை அம்மனிதன் சமுதாயத்துடன் உறவாடும்போழுது உலக வாழ்க்கையில் குறுக்கிடவில்லை என்று அறிகிறோம்.

எனவேதான் இவ்வியல்பினரான தமிழருடன் வந்த வடபுலத்தாரும் பூசலற்று காழ்ப்பு அற்று வாழ்ந்தனர் என்று அறிகிறோம்.

இங்குள்ளார் தாமும் தம்முள் சைவ, வைணவ, சமண சாக்த, பௌத்தச் சார்பினரேனும் கூட்டாக வாழ்ந்தனர். தமக்குள்ள எவ்வித மனவேருபாடும், சகிப்புத்தன்மை இன்மையும் கொள்ளவில்லை.

 

சங்க காலத்துக்கு அணியரான இளங்கோ அடிகள்,

 

"பிறவா யாக்கைப் பெரியோன்"

 

"திருமால் சீர்கேளாதசெவி என்ன செய்வியே"

 

என்றும் பாடுவான, நம் சிந்தனைக்குரியன.

சமயப் பொறை, சகிப்புத்தன்மை முழுவதாக நிறைந் திருந்தாலன்றி இவ்வாறு பாடமாட்டார் என்பதைக் கருத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்.

 

அகமும் புறமும் முற்றிற்று

 

  

 

  பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் படைப்புக்கள் சிலவற்றை பார்வையிட

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)