பழந் தமிழர் ஓவியம்

கி.வா.ஜகந்நாதன்

வாழ்வுக்கு இன்றியமையாத முதல் தேவை களாகிய உணவு உடை உறையுள் என்பவற்றை வேண்டிய அளவுக்குப் பெற்றுக்கொண்டால், மனிதன் அவற்றோடு நிற்பதில்லை. ஒவ்வொன்றிலும் பலவகை களை அமைத்துக்கொள்கிறான். இந்த மூன்றோடு சம்பந்தப்பட்ட பல அங்கங்களைப் பெருக்கிக் கொள் கிறான். நாகரிகம் ஓங்க ஓங்கத் தொழில்கள் பல்கு கின்றன.அந்தத் தொழில்கள் ஓங்க ஓங்கக் கலைகள் விரிகின்றன. கலைகளிலும் சித்திரம் சங்கீதம் முதலிய நுண்கலைகள்(Fine arts) நாகரிகத்தின் உச்சியை அடைந்த நாடுகளிலே மிகுதியாக வளர்ந்து வருவ தைக் காணலாம்.

உணவுக்கும் உடைக்கும் உறைவிடத்துக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்த பண்டைத் தமிழ்நாட்டிலே இத்தகைய நுண்கலைகள் மிகச் சிறப்பாக மேலோங்கி வளர்ந்தன, இன்றும் உலகம் புகழும் சிற்பச் செல் வங்களை அகத்தே உடைய திருக்கோயில்கள் பலவற் றைத் தமிழ்நாட்டிலேதான் காண்கிறோம். பெரும் போரின்றி மக்கள் அமைதியாக வாழ்ந்திருந்ததனால் கலைவளர்ச்சிகுத் தடை ஒன்றும் நேரவில்லை. தமிழன் அலங்காரப்பிரியன். சந்தனம் திமிர்ந்து பூச்சூடி அறுசுவை உண்டி நுகர்பவன் . அவனுடைய வீட்டிலும் அவன் உபயோகிகும் பண்டங்களிலும் சித்திரங்களைப் பொறித்தான். "மாடங்களுக்கு அழகு தருவன சித்திரங்கள்" என்பது தமிழன் அறிந்த செய்தி.

பழங்காலத்தில் நடனமாடும் மகளிர் பல கலைகளில் வல்லவராக இருந்தனர். அந்தக் கலைகளுள் ஒன்று சித்திரக்கலை. கோவலனுடைய காதலியாகிய மாதவி நுண்கலைத்தேர்ச்சி வாய்ந்தவள். கோவலன் இறந்தபிறகு அவள் தவ நிலையை மேற்கொண்டாள் அதைக்கண்டு வசந்தமாலையென்ற அவளுடைய தோழி மிகவும் வருத்தம் அடைந்தாள். மாதவியிடம் சென்று, "எல்லாவகையான கலைகளிலும் சிறந்த நீ இந்த உலகத்து மக்களை யெல்லாம் அக்கலைகளால் இன்புறுத்தாமல். இப்படித் தவத்தை மேற்கொண்டாயே!" என்று சொல்கிறாள். நடனம், பாட்டு, வீணை வாசித்தல் முதலிய பல கலைகளில் அவள் வன்மை யுடையவள் என்கிறாள். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, " நடனம் செய்யும் மகளிருக்கு அவசியம் இருக்க வேண்டுமென்று நன்றாக வகுக்கப்பெற்ற ஓவிய நூற்பொருள்களை யெல்லாம் கற்றுத்தேர்ந்த நங்கையாகிய நீ தவம்புரிவது நாணுவதற்குரிய தென்று ஊராரெல்லாம் சொல்கிறார்களே" என்று அங்கலாய்க்கிறாள்

 

நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த

ஓவியர் செந்நூல் உரைநூற் கிடக்கையும்

கற்றுத் துறையாகிய பொற்றொடி நங்கை

நற்றவம் புரிந்தது நாணுடைத்து. (மணிமேகலை. 2:30-33)

 

"ஓவியச்செந்நூல்"என்று குறித்தது சித்திரக் கலைக்குரிய இலக்கணநூலை. தமிழ்நாட்டில் அத்த கைய நூல்கள் பழங்காலத்தில் இருந்தன வென்றும் அழகுணர்ச்சியுடையவர்கள் அவற்றில் நல்ல பயிற்சி யைப் பெற்றிருந்தார்களென்றும்இதனால் விளங்கு கின்றது.

சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில் மாதவி யாழ் வாசிப் பதை அதன் ஆசிரியராகிய இளங்கோவடிகள் வருணிக்கிறார். பத்மாசனத்தில் இருந்து யாழைக் கையிலே வைத்துக் கொண்டு வாசிக்கும் அவள் கோலத்தைச் சொல்லப் புகுகையில்,

 

ஒன்பான விருத்தியுள் தலைக்கண் விருத்தி

தன்பால் அமைந்த இருக்கையள் ஆகி

 

என்று சொல்கிறார்.

ஒன்பது விருத்திகளுள் முதல் விருத்தி அமைந்த அமைப்பில் இருப்பாளாகி' என்பது இதன் பொருள். விருத்தி என்பது பரிபாஷை. உட்கார்ந்திருக்கும் முறையை ஓவிய நூலிலும் நாடக நூலிலும் அவ்வாறு வழங்குவார்கள் என்று தெரிகிறது. இந்தப் பகுதிக்கு உரை எழுத வந்த அடியார்க்கு நல்லார்,

 

'இதனுள் விருத்தியென்பது இருப்பு. ஓவிய நூலுள்,

நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குத லென்னும்

இவற்றின் விகற்பங்கள் பல உள.'

 

என்று எழுதுகிறார். அதனோடு உட்காரும் முறை களாகிய விருத்தி ஒன்பது என்பதற்கு ஆதாரமாக ஒரு சூத்திரத்தை மேற்கோளாகக் காட்டுகிறார். அந்தச் சூத்திரம் பழைய தமிழ் ஓவிய நூல் ஒன்றில் இருப்ப தென்று தோற்றுகிறது.

வீடுகளில் சுவர்களிலும் நிலைகளிலும் மேற் கட்டுகளிலும் சித்திரங்களை அமைத்தனர். படுக்கை விரிப்புகளிலும் ஆடைகளிலும் அழகிய ஓவியங்களைப் பொறித்தனர். கண்ணுக்கு இனிமை தரும் முறையில் அந்தச் சித்திரங்கள் அமைந்திருந்தன. அதனால் ஏதேனும் அழகான இடத்தைப் பாராட்ட வேண்டுமானால்," இந்த இடம் சித்திரத்தைப் போல அழகாக இருக்கிறது" என்று புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.

மதுரை மாநகரத்தில் இருவகை அங்காடி வீதிகள் இருந்தன. அங்கே கடைகளெல்லாம் ஒழுங்காகவும் அழகாகவும் இருந்தன,. பண்டங்களை அடுக்கி வைத்திருக்கும் அமைப்பும், கடைகளின் தோற்றமும் சித்தி ரத்திலே அழகாக எழுதி வைத்தவற்றைப் போல இருந்தனவாம்.

 

ஓவுக் கண் டன்ன இருபெரு நியமித்து

 

என்று சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர் அந்தக் கடை வீதிகளைப் பாராட்டுகிறார். இப்படியே,

 

ஓவத் தன்ன இடனுமை வரைப்பில்

 

என்று புறநானூற்றில் ஒரு வீட்டை ஒரு புலவர் சிறப்பிக்கிறார். அழகு மிக்க இடங்களுக்குச் சித்திரத்தை உவமானமாகப் பல புலவர்கள் இவ்வாறு எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள்.

மணீமேகலையில் காவிரிப்பூம்வ் பட்டினத்தில் இருந்த உபவனத்தைப் புலவர் வருணிகிறார். அடர்ந்த மரங்களில் பலநிற மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்கிறபோது "யாரோ மகா மேதாவியாகிய சித்திரக்கலை வல்லவன் எழுதிய வண்ணப் படாத்தை இங்கே போர்த்து வைத்திருக்கிறார்களோ!" என்று தோன்றுகிறதாம்.

 

குரவமும் மரவமும் குருத்தும் கொன்றையும்

திலகமும் வருளமும் செங்கால் வெட்சியும்

நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்

பிரவமும் தளவமும் முடமுள் தாழையும்

குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்

செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்

எரிமலர் இலவமும் விரிமலர்பரப்பி

வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்

சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே

ஒப்பத் தோன்றிய உவவனம்.

 

காவிரிப்பூம்பட்டினத்தில் பெரிய மாளிகைகள் இருகின்றன. அந்த மாளிகைகளில் வெவ்வேறு வகையான வண்ண ஓவியங்களைச் சித்தரித்திருக் கிறார்கள். வண்ணத்தாலும் பிறவகையினாலும் வெவ்வேறு விதமான எழிலோடு அவை விளங்குகின்றன. பட்டினப்பாலை என்ற சங்கநூல்

 

வேறுபட்ட வினையோவந்து

வெண்கோயில்

 

என்று அந்த மாளிகைகளை வருணிக்கின்றது.

 

மாளிகைகளின் புறத்தே இப்படிச் சித்திரங்களை அமைப்பதோடு உள்ளே சுவரில் ஓவியங்களைத் தீட்டு வதும் உண்டு. தெய்வத் திருக் கோயில்களில் இத்தகைய சித்திரங்கள் இருந்தன. சிற்றன்ன வாசல் கைலாசநாதர் கோயில் தஞ்சைப் பிருகதீசுவரர் கோயில் என்னும் இடங்களில் சுவர்களில் அருமையான வண்ண ஓவியங்கள் இருந்தன. அவற்றின் குறைப்பகுதிகள் இன்றும் ஓவியக்கலைஞருடைய உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் காணப் படுகின்றன.

பழங்காலத்திலும் கோயில்களில் சித்திரங்களைச் சுவரில் எழுதி வந்தார்கள் . திருப்பரங்குன்றம் முருக வேள் கோயில் கொண்டுள்ள தலம். மிகப் பழங்காலந் தொடங்கியே முருகனுடைய தலமாக அது போற்றப் பெற்று வருகிறது. அகடவுளுகுரிய ஆறு படை வீடுகளுள் முதலாவதென்ற சிறப்பு அதற்கு உண்டு. நக்கீரர் தாம் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் அதனை முதலில் வைத்துப் பாராட்டி யிருக்கிறார்.பரி பாடல் என்ற நூலில் அம்மலைக் கோயிலில் நிகழும் விழாவும் மதுரைமா நகரத்துள்ளார் கூட்டங்கூட்ட மாகச் சென்று முருகனை வழிபடும் காட்சிகளும் அழ காக வருணிக்கப்பட்டுள்ளன. மகளிரும் ஆடவரும் கூடி ஒன்றுபட்டு அங்குள்ள இயற்கைக்காட்சிகளையும் செயற்கைக்காட்சிகளையும் கண்டு மகிழ்ந்து தம் முள்ளே பேசிக்கொள்ளும் பேச்சையும் அந்நூற் பாடல்கள் தெரிவிகின்றன.

திருப்பரங்குன்றத்தில் மூங்கில்கள் ஒரு பால் அடர்ந்துள்ளன. பாரைகள் பரந்துள்ளன. அந்தப் பாறைகளுகிடையே ஓவியச்சாலை அமைந்திருக் கிறது. அந்தக் கோயிலுக்கே அந்தச் சித்திரமண்ட பம் சோபனத்தை அளிக்கிறது. காதல் மிக்க மடந்தை யரும் ஆடவரும் வந்து வந்து அந்தச் சித்திரச்சாலை யிலுள்ள சித்திரங்களைக் கண்டு இன்புறுகிறார்கள். எழுத்து நிலை மண்டபம்,எழுதெழில் அம்பலம் என்ற பெயரால் அந்தச் சித்திரச்சாலை வழங்குகிறது.

சித்திரசாலையில் ஒருமருங்கு துருவ சக்கரத்தை எழுதியிருக்கிறார்கள். சூரியனையும் வேறு கிரகங்களையும் எழுதியிருக்கிறார்கள். இருபத்தேழு நட்சத்திரங்களை யும், பிற விண்மீன்களையும் ஓவியமாகத் தீட்டியிருக் கிறார்கள். அவற்றையெல்லாம் பார்த்துப் பலர் மகிழ் கின்றனர்.

இதோ ஒரு மங்கை சித்திரசாலையில் வேறு ஒரு பகுதியிலே நிற்கிறாள். அவள் முன்னே அழகெலாந் திரண்ட பெண் உருவம் ஓவியமாக நிற்கிறது. "இவள் யார்?" என்று கேட்கிறாள் அவள். அருகே நின்ற கட்டிளங்காளையைத்தான் கேட்கிறாள். "இவளா! இவள்தான் ரதி" என்று விடை அளிக்கிறான். அப் படிக் கூறும் விடையில் அன்பு கொஞ்சுகிறது. அந்த உருவத்தை அடுத்துக் கையில் கரும்பு வில்லும் மலரம் பும் ஏந்திய அழகன் ஒருவனது சித்திரம் நிற்கிறது. "இவன் யார்?"என்று கேட்கிறாள் காதலி. காதலன் உடனே, " இந்த ரதிக்கு ஏற்ற மன்மதன்" என்று புன்னகையோடு சொல்கிறான். பிரியாமல் இணைந்து நிற்கும் அவ்விருவரையும் ஒருங்கு நோக்கிய அவ்விரு காதலரும் தம்மையும் பார்த்துக் கொள்கின்றனர். " இப்படியே பிரியாமல் இன்ப சாம்ராஜ்யத்து ராஜா வாகவும் ராணியாகவும் நாம் இருக்கவேண்டும்" என்று அந்த இரண்டு உள்ளங்களினூடே ஓர் எண்ணம் ஓடுகிறது.

இதோ மற்றொருபுறம் புராணக் கதைகளைச் சித் திரமாக எழுதியிருக்கிறார்கள். அகலிகையின் கதை ஓவியமாகத் தீட்டப் பெற்றிருக்கிறது.

 

" இவனைப்பார்; இவன்தான் இந்திரன்."

"இதோ, இந்திரன் பூனையாக ஓடுகிறான்."

"இந்த மங்கையைப்பார்; இவள்தான் அகலிகை."

"கண்ணிலே கோபம் சுடர நிற்கிறானே, இவன் கௌதம முனிவன்."

"அவனுடைய கோபத்தால் கல்லாகிக் கிடக்கிற அகலியைப் பார்."

 

இவ்வாறு ஓவியங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டிப் பேசிக்கொள்கின்றனர் மக்கள். இபமபடிப் பல பல ஓவியங்கள் அந்த எழுத்து நிலை மண்டபத்தில் இருந்தனவாம்.

 

என்றூழ் உறவரும் இருசுடர் தேமி

ஒன்றிய சுடர்நிலை உள்படு வோரும்

 

என்பது துருவச்சக்கரத்தைப் பார்த்து மகிழ்பவரைப் பற்றிச் சொல்லும் பகுதி. 'சூரியன் நடுவிலே உற அதனோடு பொருந்தவரும் பெரிய ஜோதிஸ் சக்கர மான துருவ சக்கரத்தோடு பொருந்திய பலவகைச் சுடர்களின் அமைப்பு முறையைக் கண்டு ஈடுபடுபவர் களும்' என்பது இதன் பொருள்.

 

இரதி காமன் இவள் இவன் எனா

விரகியர் வினவ வினாஇறுப் போரும்

 

என்பது இணைந்த காதலர்கள் ரதியையும் காமனையும் கண்டு களிப்பதைக் கூறும் பகுதி.

 

இந்திரன், பூசை, இவள்அக லிகை, இவன்

சென்ற கவுதமன், சினனுறக் கல்உரு

ஒன்றிய படிஇதென் றுரைசெய் வோரும்.

 

இது அகலிகையின் கதையை ஓவியத்திலே காண்போரைப் பற்றியது.

'இப்படி வந்தவர்கள் சுட்டிக் காட்டிக் கேட்கவும், தெரிந்தவர்கள் ஓவியத்தின் கருத்தைச் சொல்லவும் உயர்ந்த மலையில் விரிந்த பாறைகளில் விசாலமான இடத்தில் எழுந்து நிலை மண்டபத்தை அமைத்தமை யால், பரங்குன்றத்தில் முருகன் திருக்கோயிற் பக்கம் சோபன நிலையை உடையதாக இருக்கிறது' என்று புலவர் கூறுகிறார்.

 

இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்

துன்னுநர் சுட்டவும் கட்டறி வுறுத்தவும்

தேர்வரை விரியறை வியலிடத்து இழைக்கச்

சோபனநிலையது, துணிபரங் குன்றத்து

மாஅல் மருகன் மாட மருங்கு.

 

பரிபாடலில் வரும் இந்தப்பாடலைப் பாடினவர் நப்பண்ணனார் என்னும் புலவர்.

இவை யாவும் பழங்காலத்தில் ஓவியக் கலை எவ் வளவு சிறப்பான நிலையில் இருந்தது என்பதைத் தெரிவிக்கின்றன.

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)