செவிலி கண்ட காட்சி

கி.வா.ஜகந்நாதன்

முயற்சியும் ஆற்றலும் அறிவும் கல்வியும் உடைய தமிழ் மகன் அவன். காதல் உள்ளம் சிறக்கும் காதலி ஒருத்தியைக் கண்டு மனம் ஒன்றிப் பின்பு உலகறிய மணம் செய்து கொண்டான். அழகும், அறிவும், காதலனது வருவாய்க்கு ஏற்ப இல்வாழ்க்கையை நடத்தும் திறமையும் உடையவள் அவள். சில காலம் பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்து செல்வான் தலைவன். முன்னோர் ஈட்டிவைத்த செல்வத்தைக் கொண்டு வாழ்வதை வாழ்வாக எண்ணாதவன் அவன். தானே முயன்று பெற்ற பொருளைக் கொண்டு அறம் செய்து இன்பம் துய்க்க வேண்டுமென்ற கொள்கையை உடையவன். இதுதான் பழங்காலத்தில் தமிழ்நாட்டு ஆடவனது கொள்கையாக இருந்தது.

ஆகவே அவன் காட்டைத் தாண்டியும் நாட்டைத் தாண்டியும் தன்மொழி பயிலாத பிறமொழி பயிலும் இடங்களுக்குச் சென்றும் பொருள் ஈட்டி வந்தான். சில சமயங்களில் திரைகடல் ஓடியும் திரவியம் கொணர்ந்தான்.

ஆள்வினையாகிய முயற்சி இல்லாதவனை ஆடவனென்று சொல்வது தக்கதன்று. இல்வாழ்வுக்கு இன்றியமையாதது பொருள், அந்தப் பொருள் முயற்சியினாலே பெறப்படுவது. முயற்சியில்லாதவர் பொருளை இழப்பரே அன்றி ஈட்டுதல் முடியாது. தன் காதலன் ஆள்வினையிற் சிறந்து பொருள் ஈட்டி வருவது காதலிக்குப் பெருமிதத்தை உண்டாக்கியது. அப்படி முயற்சியின்மேற் செல்லும் காலத்தில் அவனைப் பிரிந்து வாழவேண்டியிருப்பினும், அந்தப் பிரிவுத் துன்பத்தை ஒருவாறு ஆற்றியிருந்தாள். பிரிவின் முடிவில் பெரிய இன்பம் இருப்பதை நினைந்து அவள் ஆறுதல் பெற்றாள்.

கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய கணவனாகிய அவன் இல்வாழ்வுக்கு ஏற்ற வகையில் ஊரவர் புகழ ஊதியம்பெற்று வரும்போது அவளுக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்கு எல்லை உண்டா? மணம் செய்துகொள்வதற்கு முன்பு இன்பம் ஒன்றையே லட்சியமாகக் கருதி அவர்கள் பழகி வந்தார்கள். உலகியலையும் பிற கட்டுப்பாடுகளையும் மறந்து சுதந்தரமாக இன்பம் துய்த்தனர். மணம் செய்து கொண்ட பின்போ, இன்பம் துய்க்கும் பகுதி இருப்பினும், அறம் செய்தல் தலைமை நோக்கமாயிற்று. அதற்குப் பொருளீட்டுவது இன்றியமையாததாகி விட்டது. பொருள் நிரம்பினால் அறம் செய்து இன்பம் துய்த்து வீட்டு நெறியிலே படரும் முயற்சிகளையும் செய்யலாம். வாழ்வின் பயன் இந்த நான்கு உறுதிப் பொருளையும் அடைவதுதான் என்பது பாரத நாடு முழுவதும் ஊறிப்போன கொள்கை.

தலைவன் பொருள் ஈட்டி வந்தால் இல்வாழ்க்கை செவ்விதாக நிறைவேறிவிடுமா? ஈட்டி வந்த பொருளைத் தக்கவண்ணம் பாதுகாத்துச் செலவு செய்யவேண்டும். வரவுக்கு ஏற்றவகையில் செலவை அமைத்துக் கொள்ளவேண்டும். இந்தக் கடமையை

மேற்கொள்கிறாள் காதலி. மனைத் தலைவியாகிய அவளுடைய கையிலே இருக்கிறது இன்ப வாழ்வு. தன்னைக்கொண்டவனது செல்வ வருவாய்க்குத் தக்க வகையில் இல்வாழ்க்கையை நடத்தும் ஆற்றலை அவள் பெற்றிருக்கிறாள். ஏர் பிடித்த ஆடவன் எத்தனை ஈட்டினாலும் பானை பிடித்தவள் பங்கிட்டுச் செலவு செய்தால் ஒழிய, இல்லறத்தில் இன்பம் காண வகையில்லை. இதை நன்குணர்ந்த காதலி தலைவன் பெற்று வந்த பொருளை அருமை யறிந்து பேணுகிறாள்; செவ்வியறிந்து செலவு செய்கிறாள்.

இன்பம் நிரம்பியது; பொருளும் பொலிந்தது; அறமும் அமைந்தது. அந்தத் தமிழ் மனையின் குறை வேறு என்ன? குறை ஒன்றுமே இல்லையே!- இலையென்று சொல்வதற்கு இல்லை. வாழ்வின் மங்கலமான மனையாட்டியைப் பெற்றான் அந்தத் தமிழ் மகன். ஆனால் அதற்கு நன்கலமாக ஒரு புதல்வனைப் பெறவில்லை. அந்தக் குறை குறைதானே?

இறைவன் அருளால் அந்தக் குறையும் நிரம்பி விட்டது. அழகுப் புதல்வன் மனைக்கு ஆபரணமாகப் பிறந்துவிட்டான். இனி அவர்கள் வாழ்வு இன்ப வாழ்வுதான். இந்த இன்ப வாழ்வுக் காட்சியைப் பலவிதமாகப் பழம் புலவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். பேயனார் என்ற புலவர் ஐங்குறுநூறு என்ற சங்கநூலில் தமிழ் மகன் நடத்திய இன்பவாழ்வைப் பல பாடல்களிலே சித்தரித்திருக்கிறார். அதில் ஒன்றைச் சிறிது பார்க்கலாம்.

 

தலைவியைப் பார்ப்பதற்காக அவள் பிறந்தகத்திலிருந்து ஒருத்தி வந்திருக்கிறாள். 'ஒருவருக்கும் தெரியாமல் கள்ளக் காதல் செய்து இந்தக் காளையோடு பழகினாள். கல்யாணம் செய்துகொண்டு இப்போது குடித்தனம் செய்கிறார்களே; பழைய அன்பு அப்படியே இருகிறதா?' என்று பார்த்துப் போவதற்காக வந்திருக்கிறாள். அவள் வேறு யாரும் அல்ல. இப்போது மனைத் தலைவியாக விளங்கும் பெண்ணைக் குழந்தைப் பருவம் முதல் கண்மணியைப் போலப் பாதுகாத்து வந்த செவிலித் தாய்தான். பெற்ற தாயை நற்றாயென்றும், வளர்த்த தாயைச் செவிலித்தாயென்றும் சொல்வது தமிழர் வழக்கம்.

செவிலி வந்து பார்க்கிறாள். வீட்டின் அழகைப் பார்த்து மகிழ்ந்து போகிறாள். மிகவும் வசதியான வீடு. அழகான முற்றம் இருக்கிறது. மற்ற இடங்களும் இருக்கின்றன. வீட்டுக்குத் தலைவன் , தன் மகளுடைய காதலன், பகல் நேரத்தில் தன் கடமையை ஆற்றச் செல்கிறான். ஆனால் கதிரவன் மறைவதற்கு முன்னே வந்துவிடுகிறான்.

வீட்டில் பண்டங்களுக்குக் குறைவில்லை. கருவிகளுக்குக் குறைவில்லை. எல்லாம் நிரம்பியிருக்கின்றன. குழந்தையை எடுத்துக் கொஞ்சுகிறாள். தன் மகளைப் பார்த்து, "சந்தோஷமாக இருக்கிறாயா?" என்று கேட்கவெண்டிய அவசியமே இல்லை. முயற்சியுள்ள கணவனும் கடமை யறிந்த மனைவியும் சேர்ந்து நடத்தும் இல்வாழ்வு இப்படித்தான் இருக்கும் என்று எடுத்துக் காட்டுவதற்கு ஏற்றபடி இருந்தது அவர்கள் வாழ்க்கை.

முன்னிரவு நேரம் காதலனும் காதலியும் உணவு கொண்டனர். பாணன் ஒருவன் வந்தான். அவனுக்கும் உணவு அளித்தனர். குழந்தைக்கும் பாலூட்டினர். வானத்தில் சந்திரன் நிலாவைப் பால்போலச் சொரிந்து கொண்டிருந்தான். "பாணனாரை ஒரு பாட்டுப் பாடச் சொல்லட்டுமா?" என்று கேட்டான் தலைவன். தலைவி, "நல்லது" என்றாள். நிலா எறிக்கும் முற்றத்தில் சித்திர வேலைப்பாடு அமைந்த குறுகிய கால்களையுடைய கட்டிலைப் போட்டார்கள். காதல் தலைவன் அதில் அமர்ந்தான். தனித்து அமர்ந்தால் சுருதி இல்லாத சங்கீதம் போலல்லவா இருக்கும்? அவனுடைய மனைவி துணையாக வந்து அமர்ந்தாள். போதுமா? சுருதி இருந்தும் தாளம் வேண்டாமா? லயம் இல்லாத பாட்டுப் பூரணமான பாட்டு ஆகாதே. அவள் தனியே வரவில்லை. குழந்தையை எடுத்து வந்தாள். தலைவன் வாங்கிக் கொண்டான். கட்டி அணைத்தான். மடியின் மேல் அமர்த்திக்கொண்டான்.

பாணன் தன்னுடைய யாழை அவிழ்த்து இன்னிசையைஎழுப்பினான். இன்ப நிலவு, இனிமைத் தென்றல், அன்புக் காதலர், அருமைக் குழந்தை, இசையமுதம் எல்லாம் சேர்ந்து அவ்விடத்தைத் தேவலோகம் ஆகிவிட்டன.

பாணன் இனிய முல்லைப் பண்ணை வாசிக்கிறான். குழந்தை மார்பிலே பற்றித் தவழத் தலைவன் பாட்டிலே ஆழ்கிறான். தலைவியும் ஆழ்கிறாள். இசை வெள்ளமும் நிலா வெள்ளமும் அவர்களைத் தம்மையே மறந்துபோகச் செய்கின்றன.

 

இதைக் காட்டிலும் இன்பம் நிறைந்த வாழ்வை வேறு எங்கே காணமுடியும்? உள்ளே இருந்தபடியே இந்தக் காட்சியை ஊரிலிருந்து வந்திருக்கும் செவிலித்தாய் பார்க்கிறாள். அவள் காது உணர்ச்சி பெறவில்லை. யாழிசையிலே அவள் உள்ளம் ஈடுபடவில்லை. கண்தான் கூர்ந்து நோக்கியது. அங்கே இருந்த காட்சி அவள் உள்ளத்தில் நன்றாகப் பதிந்தது. அந்த முன்னிரவு நேரமாகிய மாலையைக் கண்டாள்; முற்றத்தைக்கண்டாள். அதன் நடுவிலே குறுங்காற் கட்டிலை அவள் கண்கள் கண்டன. தன் அருமை மகள் அந்தக் கட்டிலில் வீற்றிருத்தலைப் பார்த்தாள். சிங்காதனத்திலே அரசனோடு வீற்றிருக்கும் அரசியைப் போல அந்த மனையரசி அங்கே வீற்றிருந்தாள். அப்போது அவள் முகப் பொலிவைக் கண்டு கண்ணால் முகந்து பருகினாள். அருகில் அவள் காதலனையும் பார்த்தாள். ஊன்றிக் கவனிக்கவில்லை; நாணம் தமிழ்ப் பெண்கள் இயல்பு. ஆனால் அத் தலைவன் மார்பைப் பற்றிக்கொண்டு தவழும் குழந்தையைப்பார்த்தாள். அந்த நேரத்துக்கு ஏற்ற காட்சி அது. அந்த இன்பப் பொழுதுக்கு ஏற்றபடி யாழ் இசை அமைந்திருந்தது. எல்லாவற்றையும் கண்ணினால் அளவிட்ட பிறகு, காது கொடுத்துக் கேட்டாள். பாணன் சரியான பாட்டைத்தான் பாடினான். முல்லைப்பண் அமைந்த ஒரு பாட்டு; இன்ப வாழ்வைப் பாடும் பாட்டு. அவள் உள்ளத்தைக்கூட அந்தப் பாட்டு மெல்ல மெல்லப் பிணித்தது. நின்றபடியே கேட்டாள்.

செவிலி மீட்டும் தன் ஊருக்குப் போனாள். நற்றாய், போய் வந்த செய்தியை அறிய ஆவலோடிருந்தாள், செவிலி ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல **** அவர்கள் வாழ்க்கை பொருளால் நிரம்பியிருக்கிறதென்று தனியே சொல்லவில்லை. அவர்கள் அன்பு சிறந்து நிற்கிறதென்று பிரித்துப் பேசவில்லை.

அவர்கள் கலையின்பத்தில் இன்பங் காண்கின்றார்கள் என்று தனியே உரைக்கவில்லை. மாலையிலே தான் கண்ட காட்சியைத் தான் கண்டவாறே சொன்னாள். போதாதா? இன்ப வாழ்வின் அழகிய படந்தானே அந்தக் காட்சி?

மாலை முன்றிற் குறுங்காற் கட்டில்

மனையோள் துணைவி யாகப் புதல்வன்

மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்

பொழுதிற்கு ஒத்தன்று மன்னே

மென்பிணித் தம்ம பாணனது யாழே.

      [ஐங்குறு நூறு,410}

 

[மாலை வேளையில் வீட்டு முற்றத்தில் குட்டையான காலையுடைய கட்டிலில் தன் மனைவி அருகே இருக்க, புதல்வன் தன் மார்பில் ஊரும் மிக்க மகிழ்ச்சியோடுள்ள பொழுதுக்கு ஏற்றபடி மெல்ல உள்ளத்தைப் பிணிக்கும் பாணனது யாழ் இருக்கின்றது.

 

மகிழ்நகை-மிக்க மகிழ்ச்சி. ஒத்தன்று-பொருத்தமாக இருந்தது. மென்பிணித்து-மெல்லப் பிணிக்கின்ற தன்மையை உடையது]

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)