இரும்பு முள்வேலி

20

போர் முடிந்துவிட்டது என்றால் புது நேசம் பிறந்து விட்டது, பகை அழிந்துவிட்டது, பாசம் பிறந்துவிட்டது என்பதல்ல பொருள் பீரங்கி ஓசை இல்லை, படை கொண்டு தாக்குதல் இல்லை. ஆனால் ஜெர்மானியர் ஜெர்மானியர்தான்! பிரிட்டிஷார் பிரிட்டிஷார்தான் - வெவ்வேறு இனம்! என்ற கருத்து பீடித்துக் கொண்டிருக்கிறது என்பதனை இருவரும் உணர்ந்தனர். வெறுப்புணர்ச்சியற்ற ஒரு நாடே கிடையாதா! இனத்தை மறந்து இதயங்கள் ஒன்று பட்டதால் கடிமணம் புரிந்து கொண்டு வாழ்ந்திட இடமளிக்கும் நாடே கிடையாதா என்று எண்ணி ஏங்கிக் கிடந்தாள்.

     'ஒன்று இருக்கிறது! போரும் பகையும் அற்ற இடம்; விரோதமும் குரோதமும் அற்ற இடம்; மனிதர்களாக வாழக்கூடிய இடம்; வெறுப்புணர்ச்சி நுழைய முடியாத இடம் ஒன்று இருக்கிறது மோனா!' அவன் கூறுகிறான்; அவள் திடுக்கிட்டுப் போகிறாள்; மறுகணம் உறுதி பெறுகிறாள்; 'உண்மைதான் ஆஸ்க்கார்! அந்த இடமே பகைப்புயல் வீசாத இடம்; நிம்மதியாக வாழ்ந்திட ஏற்ற இடம். அதனால் அங்கு நீ மட்டுமா செல்வது; எனக்கும் அதே இடம்தான்; இருவருமே செல்வோம். நமக்கு ஏற்ற அந்த இடத்துக்கு' என்கிறாள் மோனா. அவர்கள் தேர்ந்தெடுத்த இடம், கொந்தளிக்கும் கடல்! மரணபுரியில் மட்டுமே நாம் வாழ்ந்திட முடியும்; மக்களை மாக்களாக்கிடும் வெறுப்புணர்ச்சி தீண்டாத இடம் அதுவே. வேறு எந்த இடமும் நம்மை ஏற்றுக்கொள்ளாது! உன் இனம் என்ன? என்று கேட்கும்! உன் மரபு என்ன? என்று கேட்கும். மரணபுரியில் மட்டுமே அந்தக் கேள்விகள் எழுவதில்லை. மான் தீவிலே இடம் இல்லை! பிரிட்டன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அமெரிக்காவிலே தங்கிட அனுமதி இல்லை. ஜெர்மனி துரத்துகிறது, 'உள்ளே நுழையாதே; இடம் கிடையாது' என்று. அதோ ஆழ்கடல்! கொந்தளித்தபடி இருக்கிறது. அலைக்கரம் நீட்டி வா! வா! என்று அழைக்கிறது; காதலால் கட்டுண்ட என் மக்களே! நாடு பலவும் உங்களை வாட்டுகின்றனவா, இனபேதம் கிளறிவிடும் வெறுப்புணர்ச்சியால். கவலைப்படாதீர்கள்! இதோ நான் இருக்கிறேன், உங்களை ஆரத்தழுவி வரவேற்றிட! இங்கு இனபேதம், கிளறிவிடும் பகை உணர்ச்சி கிடையாது. வந்திடுவீர்! என்று கூவி அழைக்கிறது. பல நாடுகள் இடமளிக்க மறுத்து விட்டன இந்தக் காதலருக்கு; காதலின் மேன்மையினை அறிந்திடும் திறனற்று. இதோ இந்த இடமே நமக்கு ஏற்ற இடம் என்று வருகின்றனர்! என் பெருமை உணர்ந்து வருகின்றனர்! - என்ற மகிழ்ச்சிப் பெருக்கில்தான் கொந்தளிக்கிறதோ!

     உறுதி பிறந்துவிட்டது; புது உற்சாகமே வந்துவிட்டது; இருவரும் புறப்படுகின்றனர், தமக்கு ஏற்ற நாடு நோக்கி.

     குன்றேறுகிறார்கள்! மேலே செல்கின்றனர்! பகை உணர்வும் வெறுப்புணர்ச்சியும் நெளியும் இடம், அதோ கீழே, காலடியில்! அவர்கள் உயரச் சென்றுவிட்டனர்! குன்றேறிப் பார்க்கின்றனர்; கீழே ஆழ்கடல்! அலைக்கரங்கள் அழைக்கின்றன.

     ஆரத் தழுவிக் கொள்கின்றனர். மேலே வானம்! கீழே கடல்! மணமேடையோ சிறு குன்று!! இயற்கையோ எழிலளிக்கிறது மணவீட்டுக்கு! எதிர்ப்பார் இல்லை! ஏளனம் பேசுவார் இல்லை! இனம் வேறு வேறு அல்லவோ என்று குளறுவார் இல்லை. காதலரிருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம்! அந்த இன்பத்தில் திளைத்திருந்தனர், புது வாழ்வு பெற்ற இருவரும்.

     ஆஸ்க்கார், தனது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை எடுத்து, மோனாவையும் சேர்த்துத் தன்னுடன் பிணைத்துக் கொண்டான். ஈருடல் ஓர் உயிர்! அந்த ஈருடலும் கூட ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கட்டும் என்று எண்ணினான் போலும்.

     கண்களைக் கண்கள் கவ்விக் கொண்டன.

     அந்த கண்கள் என்னென்ன பேசிக் கொண்டனவோ! ஒரு புன்னகை பூத்திருக்கும்! இதழமுது சுவைத்திருப்பர்! நம் காலடியில் கிடக்கிறது குள்ள மனம் படைத்தோர் இருக்கும் இடம்! அவர்கள் தொட முடியாத உயரத்தில் நாம் நிற்கிறோம்; காதலின் சிகரத்தில்! இனி... சென்று சேர்ந்தனர் கடலடி. மரணபுரி அவர்களை வரவேற்றுக் கொண்டது. மாதாகோயிலில் மணி ஓசை கிளம்புகிறது. போர் முடிந்தது; பகை ஒழிந்தது; சமாதானம் மலர்ந்தது என்று அந்த ஓசை கூறுகிறது என்பர்!

     இல்லை! போய்ச் சேர்ந்தனர்; போரற்ற, பகையற்ற, பேதமற்ற, வெறுப்பற்ற இடம் போய்ச் சேர்ந்தனர் என்றல்லவா ஒலி அறிவிக்கிறது!

     காதற் பயணம் முடிந்தது. போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர்! வாழ்க காதல் என்று ஒலிக்கிறதோ!!

 

முந்தைய அத்தியாயம்

அத்தியாய வரிசை