இரும்பு முள்வேலி

7

 "அப்பா! மோனாவிடம் சொல்லு, அவள் எனக்கு எழுதிய கடிதத்தின் சில பகுதிகளை, அதிகாரிகள் சிலரிடம் படித்துக் காட்டினேன். அவர்கள் மிகவும் மெச்சுகிறார்கள்; உன் தங்கை போன்ற உணர்ச்சியும் எழுச்சியும் கொண்ட வீரர் ஆயிரவர் இருந்தால் போதும்; இந்தப் போர் ஒரு திங்களில் வெற்றி தந்திடும் என்று கூறிப் பாராட்டுகின்றனர்." ராபியின் கடிதத்திலிருந்து இந்தப் பகுதியைப் படித்திட கேட்டபோது மோனாவுக்குப் புல்லரித்தது; பூரித்துப் போனாள்.

     பிரிட்டிஷ் படைகள் பலமாகத் தாக்குகின்றன.

     ஜெர்மன் படைகள் விரண்டோ டுகின்றன.

     ஜெர்மன் படைக்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்படுகிறது.

     இதழ்கள் தந்திடும் இந்தச் செய்தித் தலைப்புகள் மோனாவுக்குச் செந்தேனாக இனிக்கிறது.

     ராபி ஏன் இந்த வெற்றிச் செய்திகளைப் பற்றித் தெரிவிக்கவில்லை; கடிதம் காணோமே என்று எண்ணிக் கவலை கொள்கிறாள்.

     ஒருநாள் அஞ்சல் வருகிறது; அதை எடுத்துக் கொண்டு வருபவன் முகத்தில் ஈயாடவில்லை; குனிந்த தலையுடன் வருகிறான்; கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான்; நீளமான உறை; சர்க்கார் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. முதியவர் பிரித்துப் படிக்கிறார்; 'சர்க்கார் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளும் சேதி என்னவென்றால், படை வீரன் ராபி களத்தில்...' முழுவதும் படிப்பானேன்? விஷயம் புரிந்து விட்டது; ராபி இறந்துவிட்டான். வீரமரணம்; நாட்டைக் காத்திடும் முயற்சியில் உயிரை இழந்தான் - என்றெல்லாம் பாராட்டு இணைக்கப்பட்டிருக்கிறது கடிதத்தில்; ஆனால் தந்தையின் தத்தளிப்பை, வீர மரணம் என்ற பாராட்டுதல் குறைத்திட முடியுமா...

     "மகளே! படி அம்மா! பாரம்மா!"

     மோனா படிக்கிறாள்! அண்ணன் இறந்துபட்டான்! ராபி மறைந்துவிட்டான்! ராபியைக் கொன்றுவிட்டார்கள் - கொடியவர்கள் - ஜெர்மானியர்! அந்தக் கொடிய ஜெர்மானிய இனத்தவரிலே ஒரு பிரிவினர் கைதிகள் என்ற பெயருடன் இங்கே உள்ளனர்! என் அண்ணனைக் கொன்றுவிட்ட கொடியவர்கள், ஜெர்மானியர்! அவர்களிலே ஒரு பகுதியினர் இங்கே! அவர்கள் பருகிடப் பால் தமது பண்ணையிலிருந்து! என் அண்ணனின் குருதியைக் குடித்துவிட்டார்கள், அந்தக் கொடியவர்கள்; அந்த இனத்தார் இங்கு பருகிட நாங்கள் பால் அளிக்கிறோம்!

     இதுபோல என்னென்ன எண்ணிக் கொண்டிருந்திருப்பாள், பாவம்! ஏற்கனவே மூண்டு கிடந்த கொதிப்பு மேலும் எந்த அளவு கிளம்பிவிட்டிருக்கும்!

     பிதாவிடம் பிரார்த்திக்கச் சொன்னாரே, அப்பா! இப்பொழுது என்ன சொல்லுவார்!

     "அப்பா! பால் கொடுத்து வருகிறோமே பாதகர்களுக்கு அந்த ஜெர்மன் கொடியவர்கள் உன் மகனுடைய இரத்தத்தை - என் அண்ணன் உயிரைக் குடித்துவிட்டார்களப்பா! அண்ணனைக் கொன்றுவிட்டார்களப்பா! அந்த கொடிய இனத்தவர், இங்கேயும் உள்ளனர்; நமது பண்ணையில் பால் வாங்கிப் பருகிக் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பச்சாதாபம் காட்டச் சொன்னீர்களே! அவர்கள் ஜெர்மானியராக இருந்தால் என்ன, அவர்களும் மனிதர்கள் என்று வாதாடினீர்களே! அந்த மிருகங்கள் உன் மகனை - என் அண்ணனை - நாட்டுப் பற்று மிக்கவனை, நியாயத்தை நிலைநாட்டப் போரிட்ட மாவீரனைக் கொன்றுவிட்டனவே அப்பா! இப்போது என்ன சொல்கிறீர்? பிரார்த்தனை செய்ய வேண்டுமா, பிதாவிடம் சமாதானம் வழங்கும்படி? சமாதானமா அப்பா வேண்டும்!! அண்ணன் உயிரைக் குடித்த கொடியவர்கள் கொட்டமடித்துக் கொண்டிருப்பது; நாம் பிதாவிடம் சமாதானம் வேண்டி பூஜித்துக் கிடப்பதா? சொல்லுங்கள் அப்பா! சொல்லுங்கள்!! என்ன செய்யலாம் சொல்லுங்கள்" என்றெல்லாம் கேட்டிட அந்தக் கன்னி துடித்திருப்பாள்.

     முதியவரின் நிலை? மகன் இறந்துபட்டான் என்ற செய்தியை அறிந்ததும், அவருடைய மனதிலே சிறிதளவு தலை தூக்கியபடி இருந்ததே மனிதத் தன்மைக்கே உரிய பண்பு, அன்பு காட்டுதல், பகைவருக்கும் இரங்குதல், அது மடிந்து விட்டது; அடியோடு மடிந்தே போய்விட்டது. இதயத்தில் ஒரு பயங்கரமான சம்மட்டி அடி விழுகிறது; முதியவர் கீழே சாய்கிறார், நினைவு இழந்து. மருத்துவர் வருகிறார்; இதயத்திலே அடி! என்றாலும் இப்போதைக்கு ஆபத்து இல்லை. படுத்துறங்கட்டும்; முழு ஓய்வு வேண்டும் என்று கூறிச் செல்கிறார்.

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை