இரும்பு முள்வேலி

8

முதியவர் படுத்துக் கிடக்கிறார்; மோனாவின் உள்ளக் கொதிப்பு மேலும் ஓங்கி வளருகிறது.

     ஜெர்மானியர்களை ஆண்டவன் அழித்தொழிக்க வேண்டும்.

     எல்லா ஜெர்மானியரையும் ஜெர்மன் அதிபர்கள் - ஜெர்மன் கெய்சர் என்போரை மட்டுமல்ல, எல்லா ஜெர்மானியரையும் அழித்திடவேண்டும் - ஆண் - பெண் - குழந்தை குட்டி அவ்வளவு பேரும் - ஒருவர் பாக்கியில்லாமல் ஒழிந்து போக வேண்டும். ஆண்டவன் ஜெர்மன் மக்கள் அனைவரையும் அழித்தாக வேண்டும்; இல்லையென்றால் அவர் உண்மையான ஆண்டவன் அல்ல!

     மோனாவின் பிரார்த்தனை இதுபோல! வேதனை நிரம்பிய உள்ளத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பும் பிரார்த்தனை!

     முதியவர் நடத்தச் சொன்ன பிரார்த்தனை, பகைவனுக்கும் அருள்பாலிக்கும்படி. மோனா அதனை மறுத்தாள். கல் மனம் அம்மா உனக்கு என்று முதியவர் கூறினார். இப்போது?

     ஆண்டவனே எழுந்தருள்வீர்! உமது பகைவர்கள் சிதறி ஓடிடட்டும். கடவுள் நெறி மறந்தோர் கொட்டமடித்திட விடக்கூடாது. தேவதேவா! தழலென எரியும் கரித்துண்டுகள் அவர்கள் மீது பொழியட்டும்; நெருப்பிலே தள்ளிடுவீர் அந்த நாசகாலர்களை! நரகப் படுகுழியில் தள்ளிடுவீர்! மீண்டும் அவர்கள் தலைதூக்கிடாதபடி படுகுழியில் அந்தப் பாவிகளைத் தள்ளிடுவீர்!

     இது முதியவரின் பிரார்த்தனை. வேதப் புத்தகத்தில், பாவிகளை ஆண்டவன் அழித்தொழித்த படலத்தில் உள்ள பிரார்த்தனையைப் படிக்கிறார். பரிவு, பச்சாதாபம், பகைவனுக்கு இரங்கல் என்பதை இப்போது அவருடைய உள்ளத்தில் இடம் பெற மறுத்துவிடுகிறது. மகனைக் கொன்ற மாபாவிகள் என்று எண்ணும்போதே, ஜெர்மானியர் பூண்டோ டு அழிந்துபட வேண்டும் என்ற கொதிப்பு எழுகிறது. மோனா சொன்னதுதான் சரி; அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்கிறார் முதியவர். ஆண்டவனை அழைக்கிறார் சமாதானம் வழங்கச் சொல்லி அல்ல; ஜெர்மானியர்களை அடியோடு அழித்தொழிக்கும்படி.

     ஜெர்மன் கைதிகள் அடைபட்டுக் கிடந்ததால், மிருக உணர்ச்சி மேலிட்ட நிலையினராகின்றனர்.

     அடிக்கடி சச்சரவு, குழப்பம், அடிதடி, அமளி.

     கலகம் செய்த கைதிகள் சிலர் காவற்காரர்களால் சுட்டுத் தள்ளப்படுகின்றனர்.

     நிலைமையை அறிந்து போக வந்திருந்த மேலதிகாரி, 'இவர்களை நாய்களை அடைத்து வைப்பதுபோல அடைத்து வைத்தால், நாய்க் குணம் ஏற்பட்டுவிடத்தானே செய்யும். ஒரு வேலையுமின்றி அடைபட்டுக் கிடப்பதால் வெறிகொண்டு விடுகின்றனர். ஏதாவது வேலை கொடுக்க வேண்டும்" என்று கூறுகிறார்.

     இரும்பு முள்வேலி போடப்பட்ட இடங்களிலேயே, தொழில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன, கைதிகள் வேலை செய்ய.

     மிருகங்களை மனிதர்களாக்க முயற்சிக்கிறார்கள் என்று கேலி பேசினாள் மோனா, இந்தப் புதிய திட்டத்தைப் பார்த்து.

     வழக்கப்படி பால் வாங்கிக் கொண்டு போக வரும் இருமல்காரனுக்குப் பதிலாக வேறோர் ஜெர்மானியன் வந்தான், ஓர்நாள்.

     மோனா அதனைக் கவனிக்கக்கூட இல்லை. பால் பாத்திரத்தை அவன் பக்கம் வைத்தாள். 'இது நான் எடுத்துப் போக வேண்டிய பாத்திரமா?' என்று புதியவன் கேட்டபோது தான் திரும்பிப் பார்த்தாள். 'அவன் மருத்துவ மனைக்குச் சென்றுவிட்டான்; அவனுக்குப் பதிலாக நான் வந்திருக்கிறேன்' என்றான் புதியவன், இளைஞன்; சாந்தமான முகத்தினன்.

     குரலிலே கடுமை இல்லை, நடையிலே ஆணவம் காணோம். முகத்திலே வெறித்தனம் காணோம்; யார் இவன் ஜெர்மானியனாக இருக்க முடியுமா என்ற ஐயம் மோனாவுக்கு.

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை