இரும்பு முள்வேலி

9

 

உன் பெயர்?

     ஆஸ்க்கார்...

     ஆஸ்க்கார்...?

     ஆஸ்க்கார் ஹெயின்.

     மூன்றாம் நம்பர் சிறைக்கூடத்திலா இருக்கிறாய்?

     ஆமாம்.

     மோனா, எதுவும் பேசாமல் அவனை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு, 'அதுதான் நீ எடுத்துச் செல்ல வேண்டிய பாத்திரம்' என்று கூறுகிறாள்.

     'நன்றி!' என்று கூறுகிறான் ஜெர்மானியன். பதிலுக்கு நன்றி கூற நினைத்தாள் மோனா. முடியவில்லை. அவன் போகிறான்; அவள் பார்க்கிறாள்; அவன் போன பக்கமே பார்த்துக் கொண்டிருக்கிறாள்; வாசற்படியில் நின்று கொண்டு பார்க்கிறாள்; பிறகு பலகணி வழியாகவும் பார்க்கிறாள்.

     அன்று முழுவதும் மோனா சிடுசிடுவென்று இருக்கிறாள். ஏதோ குமுறல், மனதில்.

     வழக்கப்படி பிரார்த்தனைக்கு அழைக்கிறார் முதியவர்!

     "இன்றிரவு வேண்டாமப்பா, தலைவலி" என்று கூறி விடுகிறாள் மோனா. தலைவலியா!!

     அன்றிருந்த ஒரு மனப்போராட்டம், மோனா தன் உள்ளத்திலே இடம் பெறப் பார்க்கும் புதிய உணர்ச்சியை விரட்டும் முயற்சியில் மும்முரமாகிறாள்; முடியவில்லை. முதியவருடன் அதிகநேரம் அளவளாவுகிறாள், அவர் புதிதாகப் பெற்றுள்ள வெறுப்புணர்ச்சியைத் தனக்கு ஊட்டுவார், உள்ளத்தில் இடம் பெறப் பார்க்கும் புதிய உணர்ச்சியை விரட்டிடுவார் என்ற நம்பிக்கையுடன்.

     ஜெர்மானியர்களை அழித்தொழிக்கச் சொல்லி முதியவர் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறார். மோனா? பிரார்த்தனையில் கலந்து கொள்கிறாள்; ஆனால் வேறு ஏதோ ஒரு உணர்ச்சி அவளை வேறு எங்கோ அழைக்கிறது; இழுத்துச் செல்லப் பார்க்கிறது. அந்த ஆஸ்கார் கூடவா, ஜெர்மானியன். அத்தனைப் பணிவாக இருக்கிறான்; கனிவாகப் பேசுகிறான்; முகத்தைப் பார்த்தால் கொடியவனாகத் தெரியவில்லை. ஜெர்மானியனா இவன்; ஆஸ்க்கார் போன்றவர்கள்கூட இருக்கிறார்களா ஜெர்மன் இனத்தில் - என்றெல்லாம் எண்ணுகிறாள் மோனா.

     'நரகப் படுகுழியில், பகைவர்களைத் தள்ளு' என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறார் முதியவர்; மோனாவுக்குப் பிடித்தமான பிரார்த்தனை அது; முன்பு! இப்போது? அந்தப் பிரார்த்தனை அவளுக்கு என்னமோ போல இருக்கிறது. ஆண்டவனையா இவ்வளவு கொடுமைகளைச் செய்திடச் சொல்லிக் கேட்பது! ஆண்டவன் என்றால் தயாபரன் அல்லவா! அவரிடம் இப்படியா ஒரு பிரார்த்தனை செய்வது என்று கூட எண்ணி சிறிதளவு அருவருப்பு அடைகிறாள். கன்னியின் இதயத்திலே புதிய கருத்து கருவளவாகிறது!

     மோனா, சபலத்துக்கு இடமளிக்கக்கூடாது என்ற உறுதியுடன் போரிடுகிறாள். ஜெர்மன் கைதிகளைக் கண்டால் கடுகடுப்பைக் காட்டுவது; அவர்களிடம் ஒரு பேச்சும் பேசாதிருப்பது; அவர்களிடம் தனக்கு உள்ள வெறுப்பை வெளிப்படையாகத் தெரியச் செய்வது என்ற முறையில் நடந்து கொள்கிறாள். ஆனால் அந்த ஆஸ்க்கார்!

     லட்விக் இறந்துவிட்டான்?

     யாரவன் லட்விக்?

     முன்பெல்லாம் வருவானே, இருமிக்கொண்டு... அவன் தான் லட்விக். வயது 22! பரிதாபம்! செத்துவிட்டான்! கடிதம் எழுதவேண்டும் அவன் தாயாருக்கு.

     மோனாவுக்குத் துக்கம் நெஞ்சை அடைத்துக் கொள்கிறது; கண்களில் நீர் துளிர்க்கிறது; ஆனால் சமாளித்துக் கொண்டு கூறுகிறாள்.

     "மகனை இழந்த தாய் அவள் ஒருவள் தானா! போர் மூட்டி விடுபவர்கள், அதனால் விளையும் பொல்லாங்குகளை அனுபவிக்கத்தானே வேண்டும்."

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை