இரும்பு முள்வேலி

16

அதே ஊரில் இருந்த மேலதிகாரியிடம் சென்று, ஒரு அமெரிக்கன், பிடிபட்டிருக்கிறான் என்றும், தன் வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறான் என்றும் கூறுகிறான்.

     அந்த அதிகாரி, அமெரிக்கனை இரவு இரண்டு ஆட்களை ஏவிக் கொன்றுவிடச் செய்வதாகக் கூறி அனுப்புகிறான்.

     எந்த அமெரிக்கன் உயிரைக் காப்பாற்றினானோ, அதே அமெரிக்கன் உயிரைப் போக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரி கூறுகிறார்; அதற்கு இந்த ஜப்பானிய மருத்துவர் உடந்தை!

     இது கொலை பாதகச் செயல்! ஆனால், இரக்கமற்றவனா இந்த ஜப்பானியன் என்றால், இல்லை! உயிர் காத்தவன்! மருத்துவன்! எனினும் இதற்கு இணங்குகிறான். ஏன்? தன்னை ஒரு ஜப்பானியன் என்று மெய்ப்பித்துக் கொள்ள வேண்டுமே, அதனால்.

     நாமாக அவனைக் கொல்லக்கூடாது; வேறு யாராவது கொன்றால் கொன்று கொள்ளட்டுமே என்று எண்ணுகிறான்.

     இதற்கிடையில் அவன் மனதில் எவ்வளவு கடுமையான போராட்டம் நடந்திருக்க வேண்டும்!

     ஜப்பானியனாக இருந்தாலும் தன் உயிரைக் காத்தானே இந்த உத்தமன் என்று எண்ணிக்கொண்டு படுத்துக் கிடக்கிறான் அந்த அமெரிக்கன்.

     அவன் கொல்லப்படுவதற்கான ஏற்பாட்டினுக்கு அதே ஜப்பானியன் உடந்தையாகிறான் என்பதை அறியவில்லை.

     சாகக் கிடந்தவனை நாம்தானே காப்பாற்றினோம்; இப்போது அவனைக் கொல்வதற்கு நாம்தானே காரணமாக இருக்கிறோம்; அவனைச் சாகடிக்கவா பிழைக்க வைத்தோம் என்று எண்ணாமலிருந்திருக்க முடியுமா!!

     ஓரிரவு, ஈரிரவு ஆகிறது; அமெரிக்கன் கொல்லப்படவில்லை.

     மேலதிகாரி, சொன்னபடி கொலை செய்யும் ஆட்கள் வரவில்லை.

     கடைசியில், ஜப்பானியன், அமெரிக்கனை ஒரு படகில் ஏற்றி, தப்பிச் சென்றுவிட ஏற்பாடு செய்துவிடுகிறான். வேறோர் தீவில் அமெரிக்க முகாம் இருக்கிறது; அங்கு போய்விடச் சொல்கிறான்.

     மனிதத் தன்மை எனும் உணர்ச்சியின் வெற்றி என்பதா இதனை!

     மேலதிகாரியிடம் சென்று, நீங்கள் சொன்னபடி ஆட்களை அனுப்பவில்லை; அவன் தப்பியோடிவிட்டான் என்று கூறுகிறான் ஜப்பானியன்.

     மேலதிகாரி பதறவில்லை! அவரும் உள்ளூற அந்தக் 'கொலை' கூடாது என்று எண்ணினார் போலும்! அவர் உள்ளத்திலும் மனிதத் தன்மை மேலோங்கி நின்றிருக்கும் போல் தெரிகிறது.

     'உன் கடமையை நீ செய்தாய்; அமெரிக்கன் பிடிபட்டிருக்கிறான் என்பதை அறிவித்துவிட்டாய்; நான் அனுப்பிய ஆட்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டார்கள். சரி! நடந்தது நடந்துவிட்டது! நடந்தது வெளியே தெரிய வேண்டாம்!' என்று மேலதிகாரி கூறிவிடுகிறார்.

     ஆக இரு ஜப்பானியர் தம்மிடம் சிக்கிய ஒரு அமெரிக்கனைக் கொன்றுபோட வாய்ப்பு இருந்தும் அவனைச் சாவின் பிடியிலிருந்து மீட்டதுடன், தப்பியோடிடவும் செய்துவிடுகின்றனர்.

     இது போன்ற உணர்ச்சிகளின் மோதுதல், பலரால் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

     வெறுப்புணர்ச்சி இயற்கையானது அல்ல; மூட்டிவிடப்படுவது; மனிதத் தன்மைதான் இயற்கையானது. அதனைப் போர் மாய்த்துவிடுகிறது என்பதை விளக்கிட.

 

முந்தைய அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அத்தியாய வரிசை